Sunday, September 11, 2016

செல்லம்மா பாரதிக்கு...




இன்று மகாகவி பாரதியின் 95வது நினைவுநாள்.
இந்தாளில்

பாரதியை மகாகவியாக வாழவிட்ட செல்லம்மா பாரதியின் பாதம்
பணிகிறேன்.
1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.யிலிருந்து
சில பகுதிகள்.

மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்த்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்....

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

Saturday, September 10, 2016

இப்படிக்கு காவிரி...


தற்கொலை தடுப்பு நாள் -செப் 10

World Suicide Prevention Day on September 10, 2016.
இந்த நாளில் என்னைப் பேசவிடுங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.



என் தற்கொலைக்கு யாரும் காரணமல்ல்
என்றெல்லாம் எழுதி வைக்கப்போவதில்லை.
அப்படியே யார் யார் காரணம் என்று நான்
எழுதி வைத்தாலும் உச்சநீதிமன்றமே
என் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்க
வேண்டும் என்று ஆணையிட்டாலும்..
என்ன பெரிதாக நடந்துவிடப் போகிறது.??
எனக்கு உங்கள் நீதிமன்றங்கள் மீதிருந்த
நம்பிக்கை பொய்த்துவிட்டது.
எனக்கு உங்கள் போராட்டங்கள் மீதிருந்த
அபிப்பிராயங்கள் செத்துவிட்டன.
திருமணமானவுடன் என்னிடம் வந்து மலர்த்தூவி
வழிபட்டு வணங்கி செல்லும் உங்களுக்கு
கொடுப்பதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை.
என்னை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம்
நான் கெஞ்சப்போவதில்லை.
உங்கள் மன்னிப்பு எனக்கு எதற்கு?
என்னில் கலந்து தன்னை மறந்தக் காதல் உறவுகளை
நஞ்சூட்டி கொலை செய்த பாதகர்கள் நீங்கள்.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
இனி ... நான் கடந்த காலமாக..
உங்கள் இலக்கியதில் முகநூலில் மட்டுமே
பேசப்பட்ட பாடுபொருளாக ...
என் தற்கோலைக்கு காரணமானவர்கள்
நீங்கள் உருவாக்கிய உங்கள் தலைவர்கள் என்பதால்
உங்களையும் நான் மன்னிக்கப்போவதில்லை.
தற்கொலைக்கு தயாராக இருக்கும் இத்தருணத்தில்
உங்கள் தொட்டிலில் அழும் குழந்தைகளின் அழுகுரல்
என்னை ஸ்தம்பிக்க வைக்கிறது.
பாலூட்டிய மார்பகங்கள் புற்றுநோயால் சிதையுண்டு
இனி.. காலம் கடந்துவிட்டது.
நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.
என்னைத் த்டுக்கும் உரிமையை
நீங்கள் இழந்துவிட்டீர்கள்.
இப்படிக்கு ..... காவிரி.

Wednesday, September 7, 2016

JIO JIO MODI JI


ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில்
ஜியோ ஜியோ என்று நம் பிரதமர் சந்தோஷத்தில் குதிக்கிறார்.
TRAI விதிகளில் இருக்கும் ஓட்டைகளை மிகவும் தந்திரமாக
 கையாண்டு வெற்றி பெற்றுவிட்டது ரிலையன்ஸ் 
அதாவது கட்டணம் இல்லாத அழைப்புகள் 
(free trial calls) எவ்வளவு காலத்திற்கு என்பதைப் பற்றி 
காலவரையறை இல்லை.
இந்த free trial calls காலத்தில் அரசுக்கு ரிலையன்ஸ் 
சேவை வரியோ கட்டண வரியோ செலுத்த
 வேண்டியதில்லை. 
அந்த தொகை மட்டும் ரிலையன்ஸின் ஜியோ வரவில்
 25% முதல் 28% வரை இருக்கும்.
அதாவது அவ்வளவு தொகை அரசுக்கு இழப்பு
. தனியார் நிறுவனத்திற்கு கொள்ளை லாபம். 

BSNL 4 டவர்களில் அனுப்பும் அலைவரிசையை 
தனியார் நிறுவனங்கள் ஒரே ஒரு டவரில் அதிகமான
 மின்சாரத்தைக் கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தி 
அனுப்பி வருகின்றன. இதைப் பற்றி கருத்து தெரிவித்த
 BSNL தோழர் பால்கி அவர்கள்
"தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் அதிகமாக 
அழைப்பு வரக்கூடிய இடத்தை சர்வே செய்து, டவர் 
அமைத்து, 18 சதுர கிலோமீட்டர்
பரப்பளவுக்கு கொடுக்கக்கூடியதை 36 கிலோமீட்டர்
 பரப்பளவுக்கு பூஸ்ட் செய்வார்கள். இதனால் பயனாளர்களின் ந்ரம்பு மண்டலம் பாதிக்கபப்ட்டு உடல்நலம் கெடுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவுக்கு சேவைசெய்ய டவர்கள் இல்லை. நஷ்டத்தில் ஓடக்கூடிய டவர்களை வாடகைக்குக் கேட்டு வருகிறது.
திட்டமிட்டே, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நஷ்டத்தில்
ஓடக்கூடிய டவர்களை தனியாருக்கு ஷேர் செய்யலாம்
என்ற சட்டமும் போட்டது. " என்று சொல்லி இருக்கிறார்.
எனவே, BSNL நஷ்டத்தில் இருக்கும் டவர்களை
ரிலையன்ஸ் பயன்படுத்தும்.
இப்படித்தான் அரசாங்கத்தின் பணம், 
அதாவது நம்முடைய பணம் தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுக்கப்படுகிறது.
எல்லாம் இலவசம் எல்லாம் இலவசம் என்ற
இலவச வியாதியில் நமக்கு கணக்குப்போடக் கூட
மறந்துவிடுகிறது.
(நேரம் இருப்பவர்கள் see JIO vs BSNL tariff )
இப்படியாக பொதுஜனம் இலவச மயக்கத்தில் கொள்ளை அடிக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில் சட்சாத் நம் பாரதப்பிரதமர் ,
120 கோடி மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்
ஜியோ அறிமுகத்தை முன்னிட்டு வெளியான 
டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் 
போன்ற தேசிய ஆங்கில நாளிதழ்களின் முழுப்பக்க-முதல்பக்க விளம்பரத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். .
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கும், 120 கோடி நாட்டு மக்களுக்கும், ஜியோவை அர்ப்பணிக்கிறோம் என்று விளம்பரத்தில் வாசகமும் இடம் பெற்றிருந்தது. மும்பையில் நடந்த ஜியோ அறிமுக விழாவிலும்,
முகேஷ் அம்பானி, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை குறிப்பிட்டு பேசி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
பிரதமர் & முகேஷ் அம்பானி அறிவித்திருக்கும் 
இந்த 120 கோடி மக்களில் நானும் இருக்கிறேனா... ?!!
இந்த அர்ப்பணிப்பு எனக்கு வேண்டாம் என்று அறிவிப்பது
எப்படி என்ற குழப்பத்தில் நான்.

Sunday, August 21, 2016

வாழ்க்கை சக்கரம்




வாழ்க்கையை சுழலும் சக்கரம் என்று சொன்னவன்
எதை நினைத்து சொன்னான்?
செக்குமாடு போல சுழலும் வாழ்க்கையை
அசைப்போட்டுக்கொண்டிருக்கிறது
எங்கள் திண்ணை.
நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும்
பூமிக்கு பரிசாக கிடைத்த்து
வசந்தமும் தென்றலும்
கார்மழையும் வெயில்நதியும்.
வட்டப்பாதையைவிட்டு விலகி
பிரபஞ்சத்தில் பால்வீதியில்
சுழன்று சுழன்று...
பிரபஞ்சங்கள் கடந்து .
அடடா.. எல்லாமே ..
பிரமாண்டமாக இருக்கிறது.
காலடியில் சின்ன நீல பந்து
பூமி உருண்டியயைப் புரட்டிப்போட
சொல்கிறது அந்த வானம்பாடி
எங்கிருந்தோ
வநத உன் நினைவுகள்
மீண்டும் மீண்டும் சூரியமண்டலத்திற்கே
இழுத்துவருகின்றன.
இதை நீ புவியீர்ப்பு சக்தி என்று சொல்லி

பாடம் நடத்தாதே.

Wednesday, August 17, 2016

தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...




தமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...

அதாகப்பட்டது..
அவைக்குறிப்பில் என்ன இருந்தால் என்ன?
என்ற முடிவுக்கு பொதுஜனங்கள் வந்துவிட்டோம்.

எதிர்காலத்தில் அவைக் குறிப்பை வைத்துக்கொண்டு
இன்னார் இதைப் பேசினார், அன்னார் அதைப் பேசினார்,
இவருக்கு இவர் பதில் சொன்னார்
இவர் இந்தக் கட்சியில் இருந்தார்  இப்படியான
பல்வேறு செயுதிகள் பதிவாகிவிடும்.
பதிவானவை வரலாறாகிவிடும்.


அப்படி எல்லாமா நம்ம தமிழ்ச் சமூகம் உண்மை வரலாற்றைத்
தோண்டி எடுத்து மண்டையைப் பிளக்கப்போகிறார்கள்??
நேற்று நடந்த தேர்தலில் சொன்னதை இன்று மறந்து 
உங்களை எல்லாம் தலைவ்ர்களாக
தங்கள் தொகுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்து
அனுப்பி இருக்கும் எங்களை எல்லாம் பார்த்தா
இன்னும் அப்படியா தோனுது..?!!!
சரி,... விட்டுத்தள்ளுங்கள்..
இந்தப் பிரச்சனைக்ள் அனைத்துக்கும் ஒரே ஒரு முடிவுதான்
உண்டு.
இதனால் அற்விப்பது என்னவென்றால்...
டும் டும் டும்..

இனிமேல் தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி
உதிரிக்கட்சி, மைனாரிட்டி கட்சி, இப்படியாக யார் என்ன பேசினாலும்
அவர்கள் பேசியது எல்லாமே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.!
டும் டும் டும்.

அப்பாடா...
ஒரு வழியா பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு..

Monday, August 15, 2016

மன்னிக்க வேண்டும் பிரதமர்ஜி

 

SMS from DZ-PMMODI

iNDEPENDENCE DAY GREETINGS TO YOU. WE SALUTE
OUR FREEDOM FIGHTERS. JAI HIND! YOU CAN HEAR MY
RED FORT ADDRESS HERE:


http://pmapp.nic.in/pmapp?300SMQFFEA

இப்படி எல்லாம் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியும் கூட நான்
உங்கள் செங்கோட்டை உரையைக் கேட்கவில்லை!,,
எனக்கு அச்சமாக இருக்கிறது... ஓர் இந்தியக்குடிமகனாக (ளாக)
இது தேசத்துரோகமாக ஆகிவிடக்கூடாதோ என்று.

நான் ஏன் உங்கள் உரையைக் கேட்கவில்லை என்பதை
வெளிப்படையாக இவ்விடத்து சொல்லிவிடுவது நல்லது
எனக்கு எதுவும் ஆபத்து வந்தால் என் முகநூல் நண்பர்கள்
என் உண்மை நிலையை எடுத்துக்காட்ட இதுவே ஆதரமாக
இருக்கும் என்பதால் இதை இவ்விடத்து
பதிவு செய்கிறேன்.

>இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி கணம்  T S THAKUR
 அவர்கள் பிரதமரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது
என்று சொன்னதற்கும் நான் கேட்காமல் இருப்பதற்கும்
எவ்வித தொடர்பும் சத்தியமாக இல்லை..

> POK  பிரச்சனையை பேசிய நீங்கள் அத்துடன் சேர்ந்து
பலுசிஸ்தான் பிரச்சனையையும் பேசினீர்களாமே.
ஏற்கனவே  நம்ப தோஸ்த் பாகிஸ்தான் காரர்கள்
பலுசிஸ்தான் பிரச்சனையை உருவாக்கியது
நம்பள் தான் , இந்தியா தான் என்று சொல்லிக்கொண்டிருக்க
நீங்கள் செங்கோட்டையின் நின்று கொண்டு பலுசீஸ்தான்
பற்றி பேசி இருக்கிறீர்கள்! இது குறித்து முன்னாள் அயலுறவு
அமைச்சர் சல்மான் குருஷித் கருத்துடன் எனக்கு
உடன்பாடு என்றெல்லாம் நீங்கள் என்னை நினைத்துவிடக்கூடாது.!
சல்மான் குருஷித் கருத்துக்கு காங்கிரசே முழு ஆதரவு
தராத நிலையில் எங்களைப் போன்றவர்களின்
கருத்து உருவாக முடியாது. இடியாப்ப சிக்கல் போல
இருக்கும் இந்தியாவின் அயலுறவுக்கொள்கையுடன்
ஒரு சாதாரண இந்திய பிரஜைக்கு என்ன புரிதல்
இருக்க முடியும்? யெஸ் பிரதம்ர்ஜி..
எனக்கு இதெல்லாம் காரணமே அல்ல.

> உங்கள் உரையில் சில சொற்கள் எத்தனை முறை
நீங்கள் ப்யன்படுத்தினீர்கள் என்பதையும் சிலர்
கணக்கு வைத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது,
COUNTRY - 73,
SISTERS 60,
GOVERNMENT 58,
INDIA 56
என்று. இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக்
காட்டி உங்கள் உரையை நான் நிராகரிக்கவில்லை
பிரதமர் ஜி. பாரதமாதா மீது சத்தியமாக இதைச் சொல்கிறேன்
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

> இந்தப் பாருங்கள் மோடி ஜி...
2014ல் உங்கள் முதல் செங்கோட்டை முழக்கம் 65 நிமிடங்கள்.,
கேட்டேன். அதில் நீங்கள் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி
விட்டீகளா என்று எதிர்க்கட்சி மாதிரி நான் கேட்கப்போவதில்லை.
2015, ஆக 15ல் 88 நிமிடம் பேசினார்கள்.
சமையல் செய்துக்கொண்டே கேட்டேன். கொஞ்சம் விட்டுவிட்டு
................ விட்டு.-------
இந்த ஆண்டு 2016ல் 94 நிமிடம் பேசி இருக்கிறீர்களாமே
பிரதமர் ஜி... அடேங்க்கப்பா....
இப்போதைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
சப்பாத்திக்கு மாவு பிசைவதிலிருந்து கழிவறை கழுவதுவது
வரை ... தலைக்கு மேலே வேலை...
டிஜிட்டல் இந்தியாவில் இதற்கெல்லாம் இன்னும்
விடிவு பிறக்கவில்லை.  என்னை மன்னிக்க வேண்டும்
பிரதம்ர் ஜி...
இந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உங்கள்
உரையை இந்த ஆண்டு கேட்கமுடியாத நிலை...

மற்றபடி உங்கள் டிரெஸ்... உங்கள் போஸ்.. எல்லாம்
சூப்பர்,..
ஜெய் ஹிந்த்!1



Tuesday, August 2, 2016

உண்மையின் இன்னொரு முகம்




உண்மையை எப்போதும் ஓர் ஆயுதமாக
பயன்படுத்துகிறோம். அதுவும் எதிராளியைக் காயப்படுத்தும்
ஆயுதமாக , தாக்குதல் நடத்தும் கருவியாக,
தன்னைத் தற்காத்துக் கொள்ளும் கவசமாக
உண்மையை கையில் எடுக்கிறோம். அத்தருணங்களில்
எல்லாம் பொய்யை விட உண்மை ரொம்பவும்
கொடுமையானதாக மாறிவிடுகிறது.
பொய்யை விற்பனை செய்யும் உலகத்தில்
உண்மை எப்போதும் கசப்பானது என்ற
பொய்யான முடிவுக்கு தள்ளபப்டுகிறோம்.
சிவ சிவா..
நான் இப்போது சொல்ல வருவது
உண்மையா பொய்யா..?
சிவ சிவா..

Friday, July 29, 2016

தலவிருட்சம்




அந்த விதை முளைத்துவிட்டது
ஆகாயத்தைப் பார்த்து கொழுந்து இலைகளை
அசைத்து அசைத்து நடனமாடியது.
அதைப் பார்த்த மரங்களும் செடிகளும்
இனம்புரியாத ஏக்கத்தில்.
இன்னும் சில செடிகளுக்கு
அதன் உச்சத்தைக் கண்டு பொறாமை.

எல்லோரும் கூடினார்கள்
கோபுரத்தில் செடி முளைப்பது
கோபுரத்திற்கு நல்லதல்ல என்றார்கள்
வேர்கள் கருவறையை ஆக்கிரமிப்பதற்குள்
அகற்றிவிடுவதுதான்
தர்மம் என்றார்கள்
கோபுரச்செடிக்கும் இவர்களின் படையெடுப்பு
ஆத்திரமூட்டியது.
மூடப்பட்ட கருவறையின் கதவுகளை
தட்டி தட்டி 
சோர்ந்துப்போன நள்ளிரவில்
மின்னலுடன் இடி இடித்தது.
பெருமழையில் சரிந்தது கோபுரக்கலசம்.

அவர்கள் மீண்டும் கூடினார்கள்.
குலத்திற்கு கேடுவரும் என்றார் நிமித்திகர்.
தெய்வக்குற்றம் என்றார் பூசாரி.
கோவில் வாசலின் தலவிருட்சங்கள்
தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டன.
செடி மரமாகி கோவிலாகி தெய்வமாகி..
வரமாகி ... சிவ சிவா..

Thursday, July 28, 2016

கபாலி டா..




தேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள்
வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள்
கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன் இவ்வளவு
அதீத அக்கறையைக் காட்டுகிறார்கள்? என்ற கேள்விக்கு
பல முகங்கள் உண்டு.
கபாலி படம் தலித் அரசியலைப் பேசுவதாக சொல்கிறார்கள்.
திரைப்படம் பார்க்கவில்லை நான். அப்படியே பேசினாலும்
கூட கபாலி திரைப்படம் தலித் அரசியலுக்கு எவ்விதத்திலும்
உதவிடாது. ரஜினிகாந்த் என்ற திரைப்பட நடிகரின் ஸ்டார்
அந்தஸ்த்தை வைத்துக்கொண்டு தலித் பிரச்சனையை
இயக்குநர் ரஞ்சித் பேசிவிட்டதாக சொல்வது திரையலகைப்
பற்றி எவ்வித புரிதலும் இன்றி சொல்லப்படும் கற்பனை.


இடதுசாரி பிரச்சனைகளைப் பற்றி பேசிய திரைப்பட
கதாநாயகர்கள் முதல் விவசாயிகள் பிரச்சனை, மணல் கொள்ளை
வரை பேசிய நாயகர்களுக்கெல்லாம் அப்பிரச்சனைகள்
அக்காலத்திற்கான விற்பனைப்பொருள். எதை எதை எப்போது
விற்றால் விறபனை அமோகமாக நடக்குமோ அதை அதை
அப்போது விற்று பிழைத்துக்கொண்டிருக்கிறது திரையுலகம்.

இவை அனைத்தையும் விட என் போன்றவர்கள் அச்சப்படுவது
ஏற்கனவே  அதீத நாயக வழிபாட்டில் சிக்கித்தவிக்கும்
இளைஞர்கள்... அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின்
இளைஞர்களுக்கு அவர்களின் எந்தப் பிரச்சனையிலும்
சம்பந்தமில்லாத சூப்பர்ஸ்டாரின் பிம்பம் வெறும் கபாலியின்
பிம்பமாக இல்லாமல் ரஜினிகாந்தின் பிம்பமாக மட்டுமே
கட்டமைக்கப்படும். திரைக்கதை நாயக பிம்பங்களுக்கும்
நிஜக்கதை பிம்பங்களுக்கும் இடையிலிருக்கும் வேறுபாடுகளை
பகுத்தறிய முடியாத சினிமா ரசிகர் கூட்டங்களுக்கு
கபாலி வேறு ரஜினிகாந்த வேறு என்ற புரிதல் இருக்குமா?
இதிலும் இலாபம் என்னவோ கபாலியாக நடித்த நடிகருக்குத்தான்.
சம்பந்தமே இல்லாத இன்னொரு கீரிடமும் அவர் தலையில்.!

தலித் அரசியலைப் பற்றி பேசுவதற்கு ரஜினிகாந்த் தேவையில்லை
என்ற புரிதலுடன் தலித் அரசியல் பேச வேண்டிய காலமிது.


Tuesday, July 26, 2016

தனிநபர் ?


தனிநபர்கள் அனைவரையும் தனிநபர்கள் என்ற
ஒற்றை அடையாளத்திற்குள் அடக்கிவிடமுடியாது.
அரசனும் போர்விரனும் நிற்கும் போர்க்களம்
ஒன்றாக இருப்பினும்,
எதிரிகள் கூட மாறுபடாமல் இருப்பினும்,
கையில் ஏந்தி இருக்கும் ஆயுதங்களில் கூட
வேறுபாடுகள் இலலாமல் இருப்பினும்...
இப்படியாக எத்தனை இருப்பினும்
அரசன் என்ற தனிநபரும் போர்வீரன் என்ற
தனிநபரும் ஒன்றல்ல.
அரசன் சமூகத்தின் ஒட்டுமொத்த குறியீடு.
போர்வீரன் அச்சமூகம் என்ற சமுத்திரத்தின் ஒரு துளி.
போர்வீரனின் செயல்பாடுகள் அரசனைப் பாதிக்கலாம்/
பாதிக்காமலும் இருக்கலாம். பாதிப்பு இருந்தாலும்
அதன் வீரியம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது.
ஆனால் அரசனின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த
சமூகத்தையும் பாதிக்கும்.
இப்போது அரசர்கள் இல்லை. அரசர்களை விட
அதிகாரமிக்க அதிகாரபீடங்கள் இருக்கின்றன.
அந்த அதிகார பீடங்களை எதிர்ப்பதும் விமர்சிப்பதும்
தனிநபர் விமர்சனமோ தாக்குதலோ அல்ல.
பல தருணங்களில் பொதுஜனக் கருத்துகளுக்கு
எதிராக எழுத்தாளன் பயணிக்க வேண்டி இருக்கிறது.
அத்தருணங்கள் எழுத்தாளனுக்கும் வேதனைத்தரும்
சுமையான பொழுதுகள்.
முரண்வெளியை எழுத்தாளனின் எழுத்துகள்
விரும்பி தேர்ந்தெடுப்பதில்லை.

Monday, July 25, 2016

கம்யூட்டர் கவிதை

பத்து  வார்த்தைகளை எடுத்துக்கொள்.
அவை இடக்கரடக்கலாக இருப்பது உத்தமம்.
அந்த வார்த்தைகளைக் குலுக்கல் முறையில்
கவிதையில் போட்டு வை.
அனுபவம், உணர்வு, உணர்வு நிலையின் பரிணாமம்
நிஜமும் புனைவும் கனவில் கலந்த ரசாயணவித்தை
இதெல்லாம் எதுவும் தேவையில்லை.
குலுக்கலில்  வந்துவிழும் கம்ப்யூட்டர் கவிதையை
கொஞ்சம் மவுஸின் உதவியுடன்
கடித்துக் குதறி வாந்தி எடுத்து
கலர் கலராக துப்பு.
க்டைசியில் கவிதைக்கு காசநோயோ புற்றுநோயோ
எதோ ஒன்று வந்து தொலைக்கட்டும்
எப்படியோ ..
தமிழ்த்தாய்.. செத்துப் பிழைத்தாள்
என்று செய்தி வாசிப்பில் வராமலா போய்விடும்?. 

Monday, July 18, 2016

அம்மாவின் நினைவுகள்


வாசிக்காமல் நான் தொலைத்துவிட்ட
புத்தகம்
என் அம்மா.

இன்று என் அம்மாவின் நினைவுநாள். (19/07/2007)

மருத்துவமனையில் அம்மா இருக்கும்போதெல்லாம் இரவு
பொழுதில் அம்மாவுடன் தங்குவேன். கையுடன் தடிமனான
புத்தகம் எதாவது கையில் இருக்கும். அம்மாவுக்கு சாப்பாடு
கொடுத்தப்பின்... நான் புத்தகத்துடன் உட்கார்ந்துவிடுவேன்.
சில நேரங்களில் எதாவது வேணுமாம்மா... என்று கேட்பேன்.
வேண்டாம் என்று தலையசைப்பார். மீண்டும் புத்தகத்திற்குள்
நான்..
நள்ளிரவு மணி 12 ஐ தாண்டி இருக்கும்...
அம்மா என்ன செய்கிறார் என்று திரும்பி பார்த்தால்
நான் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதை பார்த்துக்
கொண்டு இருப்பது தெரியும்....
"என்னம்மா... பாத்ரூம் போணுமா.."
"ஒன்னுமில்ல.. நீ படிம்மா.." என்பார்.
பொதுவாக ஒரு தலையசைப்பில் பேசுவார்.

இப்போதும் நள்ளிரவில் புத்தகம் வாசிக்கும் போது..
அம்மாவின் வாசனை.. என்னைச் சுற்றி..
அம்மாவின் கண்கள் என்னைப் பார்த்துக்கொண்டே இருப்பது
போல இருக்கும்.
இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம்.
அதனாலென்ன... கொஞ்சம் கொஞ்சம் இம்மாதிரி
பைத்தியக்காரத்தனங்கள் இல்லை என்றால்
வாழ்க்கையில் தான் என்ன இருக்கிறது..?
வாசித்த புத்தகங்களை விட
வாசிக்காமல் நான் தொலைத்த இப்புத்தகம்..
இத்தருணத்தை கனமானதாக்கி
என்னை அழுத்துகிறது.

அம்மா ...
ரொம்ப ரொம்ப அழகா இருப்பா..
அவள் எந்தப்புடவைக் கட்டிக்கொண்டாலும்
அந்தப் புடவைக்கு ஒரு அழகு வந்துவிடும்....
எப்போது யார் வந்தாலும் பசியாற்றும் அவள் குணம்..
வீட்டில் வேலை செய்பவர்களின் முகம் பார்த்து
தேவை அறிந்து கொடுக்கும் அவள் கைகள்
மன்னிக்கும் அவள் சுபாவம்.
பொறாமை என்றால் என்ன என்று அறியாத
அவள் வெகுளித்தனம்
ஏழு மொழிகள் தெரிந்த என் அப்பாவை விட
அம்மா தான் இப்போதெல்லாம் எனக்கு
பிரமிப்பூட்டுகிறாள்.
ஆகாயமாக அவள் விரிந்து என்னை ஆட்கொள்கிறாள்...

ஆடைகளின்றி அலங்காரமின்றி
உயிர்த்துடிப்பை பிடித்து இழுத்து அணைத்து
வாழ்க்கையைப் பிரசவிக்கும் மரணம் அழகானது.



என் உள்ளங்கைப் பிடித்து
உன் உயிர்ப்பிரிந்த தருணங்களில்
என் நரம்பு மண்டலங்களைச் சிலிர்க்க வைத்தது
காற்றில் கலந்த உன் உயிர்மூச்சு.
அம்மா.. உன்னைப் போலவே
உன் மரணமும் அழகானது.

(புகைப்படம்  அப்பாவுடன் அம்மா ... திருமண ஆல்பம்)
Add caption
அம்

Monday, July 11, 2016

தூய்மை இந்தியா ஊழல்.. நல்லவா இருக்கு!



தூய்மை இந்தியாவின் கதாநாயகன் சாட்சாத் நம் பாரதப் பிரதமர்
நரேந்திர மோதி அவர்கள் தான். தன்னுடைய முதல் செங்கோட்டை
மேடையில் தன் கனவுத்திட்டத்தை அவர் அறிவித்தவுடன்
மகாத்மா காந்தியுடன் நரேந்திர மோதி கைகோர்த்த காட்சி
எல்லோரையும் வியக்க வைத்தது. அரசியல் தலைவர்களும்
திரையுலக பிரபலங்களும் கொஞ்ச நாட்கள் தெருத்தெருவாக
துடைப்பத்துடன் போஸ் கொடுத்து போட்டோ போட்டிப்
போட்டுக்கொண்டு போட்டுத்தொலைத்தார்கள்,
நம் தலைவிதி அதை எல்லாம் பார்த்து ரசித்து தொலைத்தோம்.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுஷனைக்கடித்தக் கதையா
இருக்கேனு சொல்ற மாதிரி ஆகிவிட்டது மோடியின்
SWATCH BHARAT.  பிறகென்ன.. .. இந்த தூய்மை இந்தியா எங்கள்
வெற்றி, எங்கள் கனவு , மோடி ஆட்சியின் பொற்காலத்திட்டம்..
என்றெல்லாம் சொல்லிவிட்டு இதற்குத் தேவையான பணத்தை
மட்டும் நம்மைப் போன்ற சாதாரண் மனிதர்களிடமிருந்து
வசூலிக்கிறார்கள் சேவை வரியாக.(service Tax)
முடி வெட்டினால் சலூனில் சேவை வரி.
ஹொட்டல் பில்லில் சேவை வரி
தொலைபேசி பில்லில் சேவை வரி
வீடு வாங்கினால் அதிலும் உண்டு சேவை வரி..
பயணச்சீட்டில் உண்டு சேவை வரி..
15 நவம்பர் 2015 முதல் சேவை வரி 14 விழுக்காட்டிலிருந்து
14.5% கூடுதல் வசூலிக்கப்படுகிறது. அதாவது கூடுதலாக
வசூலிக்கப்படும் 0.5% சேவை வரி அப்படியே தூய்மை இந்தியா
திட்டத்திற்கு போகிறது.
அதனாலென்ன... 0.5% தானே ... இந்தியாவின் வளர்ச்சியில்
ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்குண்டு .. இத்திட்டம
அரசின் திட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும்
முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திட்டம்
என்ற விளக்கவுரைகள் சொல்லபப்ட்டன. இந்த விளக்கவுரை
பொழிப்புரைகளை எதிர்த்து கேட்டால், எங்கே.., நம்மீது தேசத்துரோகி
பட்டம் சுமத்தி விடுவார்களோ என்ற அச்சம் வேறு வந்து தொலைத்தது!.
( இந்த திகில்  கதை .. இப்போது வேண்டாம் , )
இத்திட்டம் அறிவித்தவுடன் ஒன்றரை மாதத்தில் அதாவது
15 நவ 2015 முதல் 31 டிச 2015 வரை சேவை வரியாக இத்திட்டத்தில்
வசூலிக்கப்பட்ட தொகை 329 கோடி.
மார்ச் 2016 வரை வசூலிக்கப்பட்ட வரித்தொகை 3750 கோடி.
ஓராண்டில் இத்திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் தொகை
10,000 கோடி..
இவ்வளவு வசூலிக்கிறார்களே... என்ன செய்திருக்கிறார்கள்
தூய்மை இந்தியா தேசியவாதிக்ள்?
பஞ்சாபில் மட்டும் 33 லட்சம் கழிவறைகளை 937 கோடி செலவில்
இத்திட்டத்தின் மூலம் கட்டிக்கொடுத்திருக்கிறார்களாம்.
ஆனால் கள ஆய்வு நடத்தியதில் பல கழிப்பறைகள்
வெறும் காகிதத்தில மட்டுமே இருக்கின்றன.
கிணறு களவுப்போன வடிவேலு கதை எல்லாம்
நகைச்சுவை கதையல்ல.
குடிக்கிற தண்ணீருக்கே அல்லாடும் ஊரில் கழிவறைக்கட்டி
என்ன செயவது? என்றும் சிலர் கேட்பதை மன்னித்துவிடுவோம்.

இத்திட்டத்திற்கான நிதியை நம்மிடமிருந்து நேரடியாக் வசூலிப்பதால்
இதன் வரவு செலவு கணக்கை தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ்  கேட்கலாம் என்றால் அதற்கும்
வழியில்லை... இத்திட்டம் எந்த துறையின் கீழ் வ்ருகிறது என்பதில்யே
இன்னும் குழப்பம் தான்.

இத்திட்டம் வருவதற்கு முன்... கழிவறைகளை யார் கட்டிக் கொடுத்தார்கள்?
அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டது?
இத்திட்டம் வந்தப் பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
என்ன தூய்மை இங்கே வந்திருக்கிறது....
குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதாவது ஒரு சின்ன மாற்றம்
ஏற்பட்டிருக்கிறதா,,?
அரசு தன்னுடைய திட்டங்களுக்காக இம்மாதிரி வரிகளை
தொடர்ந்து மக்களிடமிருந்து வசூலித்துக்கொண்டே இருந்தால்
நாளை சுவாசிக்கும் காற்றுக்கு கூட வரி வசூலிப்பார்களோ
என்று அச்சமாக இருக்கிறது..!

எல்லா ஊழலையும் பார்த்துவிட்டோம்..
பீரங்க்கி ஊழல், 2 ஜி ஊழல், இப்படியாக.. பற்பல ஊழல்கள்.
ஆனால் இத்திட்டத்தின் வரவு செலவு எதுவும் கேட்பாரின்றி
போனால்... நாளை தூய்மை இந்தியா ஊழல்.. என்றல்லவா
சொல்ல வேண்டி வரும்...
ச்சே சே.. அப்படி சொன்னால் நல்லவா இருக்கும்.?
தூய்மை இந்தியா ஊழல்...!!
ப்ளீஸ் மோதிஜீ... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

Wednesday, July 6, 2016

காட்சிப் படிமங்களின் அலைவரிசை


முகநூலில் 3 மணிநேரம்
கூகுளில் 1 மணீநேரம்
வாட்ஸ-அப் 1 மணிநேரம்
கைபேசியில் குறுஞ்செய்திகள் மற்றும்
அழைப்புகளில் 2 மணிநேரம்
இதெல்லாம் காணாது என்று நடுவீட்டில் உட்கார்ந்திருக்கும்
டிவி திரையில் எதையோ பார்த்துக்கொண்டு
மதிய இரவு உணவு நேரமும் சேர்த்து 3 மணிநேரம்
ரொம்ப சோர்வாகிவிட்டால் பாட்டுகேட்கிறேன்
என்று யு ட்யூப்பில் 2 மணிநேரம்..
சராசரியாக இன்றைய மனிதனுக்கு ஒருநாளில் பாதி பொழுது
அதாவது 24 மணிநேரத்தில் 12 மணிநெரம்
காட்சிகளை காண்பதில் கழிகிறது.
(அதுவும் இப்போதெல்லாம் கணிப்பொறியாளர்களால்
நிரம்பி வழியும் தமிழ்ச்சமூகத்தில்
அவர்கள் ஆபிஸில் கணினியின் முன்னால்
உட்கார்ந்து மாரடிக்கும் 10 மணிநேரமும் ! கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படவில்லை)
இப்படியாக..
மூளையில் காட்சிகள் படிந்து படிந்து
படிந்து படிந்து பாசிப்பிடித்து
அதே காட்சிகள் வெவ்வேறு வண்ணத்தில்
அடிமனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

பாட்டைக் கேட்டுக்கொண்டு கண்மூடி ரசித்தக் காலம்
ஒன்றுண்டு.
அப்போதெல்லாம் பாட்டுகளும் வாழ்க்கையுடன்
ஒட்டியதாக இருக்கும்.
வெறும் சப்தங்களின் அலறல்களாக இருப்பதில்லை.
வாசிப்புக்கு என்று சராசரி மனிதர்கள் ஒதுக்கும்
நேரமும் கணிசமாக இப்போது குறைந்துவிட்டது.
பயணங்களில் வாசித்துவிட்டு இருக்கைக்கு அடியில்
தூரவீசிவிட்டு நகரும் பக்கங்களாக ...
இந்த புழுக்கமான இருட்டறையில்
சிக்கி மூச்சுமுட்டி செத்துக்கொண்டிருக்கிறான்
கொஞ்சம் வித்தியாசமாக யோசிப்பவனும் எழுதுபவனும்.
கிட்டத்தட்ட ஒரு யோகியைப் போல
அவன் வாழ வேண்டி இருக்கிறது.
அதுவும் சாத்தியபடாத சூழலில் யோகியைப் போல
தன்னைப் பாவித்துக்கொண்டு
(கொஞ்சம் சரக்கு ஏற்றிக்கொண்டு!!)
தன்னை ஏமாற்றிக்கொண்டாக வேண்டும்.
தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதை
அவன் உணர்ந்து கொள்ளும் தருணம்
அவனைப் பொறுத்தவரையில்
மரணத்திற்கு முன்னான மரணம்.

Monday, July 4, 2016

நினைவுக்கூட்டல்





நினைவுக்கூட்டலில் பூஜயமாய் எண்களாய்
மாறி மாறி ..
எதைக் கழித்தால் எது மிஞ்சும்
உன்னைக் கழித்துவிட்டால்
என் அனுபவத்தொட்டில் அம்மணமாகிவிடுமோ?
சுயம் தள்ளாடுகிறது.
எதையாவது போர்த்திக்கொள்வதில்
காலம் கழிகிறது.
இருளின் மணம் பகலில் விரட்டுகிறது.
பூக்கள் செடியில் மட்டும் மணப்பதில்லை.
செடியிலிருந்து பிய்த்து எடுத்தப்பிறகும்
அதே மணம்..
இலைகளின் உராய்வுகள் பூக்களின்
இதழ்களில் தெரிவதில்லை.
அதனாலேயே பூக்கள் காயப்படவில்லை
என்பதை உண்மையாக்கிவிட்டார்கள்..
மழைக்காக ஒதுங்க்கிய மைனாவின்
அழுகுரல்
துணை அருகில் அமர்ந்தவுடன்
மவுனத்தில் உறைந்து போகிறது.
கொட்டும் மழையில்
இருள் மேகலை....விலகி
இன்னொரு நாட்டியம்

Wednesday, June 29, 2016

அரிவாள் கலாச்சாரம்





ஒரு பெண் கொலை செய்யப்பட்டு துடித்துக்கொண்டிருப்பதை
வேடிக்கைப் பார்த்த சமூகம்.
அவள் உடலில் ஒரு துண்டு கைக்குட்டையைக் கூட
போடாமல் கடந்து சென்ற கூட்டம்.
இறந்துப்போனவளின் சாதி என்ன?
கொலை செய்தவனின் ம்தம்/ சாதி என்ன?
என்று ஆராய்ச்சியில் நாட்டம் கொண்ட சமூகம்.
இதை அரசியலாக்குவதில் சுயலாபம் தேடும்
மானங்க்கெட்ட தலைவர்கள்
இம்மாதிரி சம்பவம் தன்னுடையை பெண்ணுக்கும்
எப்போதும் வேண்டுமானாலும் நடக்கலாம்
என்பதை இன்னும் உணர்ந்து கொள்ளாத பெற்றோர்
யாதர்த்தம் என்ற பெயரில் அரிவாள்
கலாச்சாரத்தை பரப்பி இருக்கும் திரைப்படங்களும்
தொலைக்காட்சி தொடர்களும்.....
கூலிப்படைகளை ஏவிவிட்டு திரைமறைவில்
மறைந்திருக்கும் சமூகம்..
.....
ஒரு கொலையைப் பார்த்து அச்சத்திம் மவுனமாக
இருந்ததாகச் சொல்கிறார்களே..
இந்த அச்சத்தை ஊட்டியது யார்?
காவல்துறையின் கெடுபிடிகள் இவ்வளவு கேவலமான
அச்சம் தருபவையாக இருப்பதற்கு என்ன காரணம்?
கொலை செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற
எண்ணத்தை ஏற்படுத்தியதில் நம் அரசியல் தலைவர்களின்
ப்ங்கு என்ன?
ஆண் பெண் உறவில் ஒரு பெண்ணுக்கு ஆணை நிராகரிக்கும்
சகல உரிமையும் உண்டு என்ற அடிப்படை தர்மத்தைக்கூட
நம் இளைஞ்ர்கள் ஏன் அறிந்து கொள்ளவில்லை?

நம் கல்வி நிறுவனங்கள் , சமூக ஆர்வலர்கள்..
தொடர்ந்து நடக்கும் இச்சம்பவங்கள் குறித்து இதுவரை
என்ன் செய்திருக்கிறார்கள்.?

பணத்தை எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே
சொல்லிக்கொடுக்கும் நம் வியாபரக்கல்வி நிறுவனங்கள்
இளைஞர்களின் வாழ்வியலை படுகுழியில் தள்ளி இருக்கின்றன.

அரிவாள் கலாச்சாரத்தை யதார்த்தம் என்ற பெயரில்
கொடி கட்டி பறக்கவிட்ட திரைப்படங்களின் கொடூரமுகமிது.

கேள்விகள் மட்டுமே என் வசம்.
இதற்கான பதிலகளை எவரிடமும் கேட்கவில்லை.

முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை
அனைத்து மாணவர்களுக்கும் யோகா பயிற்சி கட்டாயப்பாடமாக்கப்பட
வேண்டும்.
உடல்வலிமையும் ஒழுக்க கட்டுப்பாட்டையும் தரும் இராணுவக்கல்வியும்
அவசியம் அவசியம் அவசியம்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியப்பின் ஒவ்வொரு மாணவன் மாணவியும்
கட்டாய இராணுவக்கல்வி ஓராண்டு பயிற்சி பெற்ற பிறகுதான்
மேற்படிப்பைத் தொடர முடியும் என்ற ஒரு சட்ட்த்தைக் கொண்டுவர
வேண்டும்.
இது மட்டும் தீர்வல்ல என்றாலும் மாற்றத்திற்கான ஒரு
ஆரம்பமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Sunday, June 26, 2016

சோமேஸ்வரா



கடலடியில் இன்னும் ஆறாமல் இருக்கிறது
சோமேஸ்வ்ரியின் பெருமூச்சு.
தோட்டத்தின் சிதறிய பன்னீர்ப்பூக்கள்
கடலில் மிதக்கின்றன.
பேரிரைச்சலுடன் இடியும் மின்னலுமாய்
கோட்டையின் மதில்கள் உடையும்
அகால வேளையில்
சென்னி மல்லிகார்ஜூனா
என்னை அழைக்கிறாய்.
விரிந்திருக்கும் உன் வெண்கொற்றகுடைக்குள்
ஒதுங்கும் காலம் கடந்துவிட்டது.
முழுவதுமாக மழையில்
நனைந்துவிட்டேன்.
சிதலமாகிப்போன கடற்கோபுரத்தில்
தீட்டிய ஓவியங்கள்
செதுக்கிய கல்வெட்டுகள்
எதிலும் எனக்கான சாட்சியம் இருக்கப்போவதில்லை.
எப்போதாவது வழிப்போக்கர்கள்
இவ்வழியாக வரக்கூடும்.
அவர்கள் விருப்பப்படி எதையும் எழுதட்டும்.
வாழும்போது எழுதமுடியாத ரகசியங்களை
வழிப்போக்கனாக வந்தவன் எழுதிவிடவா போகிறான்?
சோமேஸ்வரா... ஈஸ்வரா..

Wednesday, June 22, 2016

அண்டர்கிரவுண்ட் கூட்டணி



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக
இந்த இரு பெரும்கட்சிகளின் எதேச்சதிகாரத்திற்கு
சாமரம் வீசி அரியணையில் ஏற்றி இருக்கிறது.
இந்த இரு பெரும்கட்சிகளும் திராவிட அரசியல் கட்சிகள்
என்று கொண்டாட முடியவில்லை.
இவர்களிடம் திராவிடமும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பது கானல்நீர்தானா?
என்ற கேள்வி இப்போது விசவரூபமெடுக்கிறது.
நீ இருக்கனும்
இல்ல நான் இருக்கனும்
கொடுக்கல் வாங்கல் சண்டை சச்சரவு
கோர்ட் வாய்தா அடிதடி கொலை கொள்ளை
நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம்
ஆனா .. நம்மள விட்டா ஒரு பய இனி உள்ளே
வந்திடப்பிடாது... ஆமா சொல்லிப்பிட்டேன்.

அடடா... எனக்கென்னவோ .. இப்படி ஒரு அண்டர்கிரவுண்ட் கூட்டணி
செமையா வேலை பார்த்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறது.
எம்ஜியார் ஆட்சியில் இருந்தப்போது...
சூட்கேஸ் வந்தா .. கொண்டுவந்தவரிடம் கேட்பாராம்..
கோபாலபுரத்திற்கு போயிடுச்சா னு.
ஆளும்கட்சிக்கு இத்தனை விழுக்காடு பங்கு
எதிர்க்கட்சிக்கு இத்தனை விழுககாடு பங்கு என்று
உடன்படிக்கை இருக்கிறது .
இந்த தேர்தல் முடிவுகளை ஆழ்ந்து கவனித்தால்
அச்சம் ஏற்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் தமிழக அரசியலில்
ஜனநாயகத்தை கொலை செய்து புதைத்துவிட்டன.

தமிழ்த்தேசியம் கேள்விக்குரியதாகிவிட்டது மட்டுமல்ல
கேலிக்குரியதாகவும் ஆகிவிட்டது.
இது ஏன்? என்று யோசித்தாக வேண்டும்.
அதுவும் ஈழ அரசியலுடன் இணைத்து தமிழ்த்தேசிய அரசியலை
பார்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
தலித் அரசியல் நீர்த்துப் போய்விட்டதா..?
என்ற கனமான கேள்வி எழுகிறது.
தொல். திருமா, சிவகாமி, டாக்டர்  கிருஷணசுவாமி மூவருமே
இத்தேர்தலில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்
வெற்றியை இழந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
களத்தில் நின்றவர்கள் இவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு
அதே தொகுதிகளில் (ரிசர்வ் தொகுதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று பார்த்தால்
இந்த அரசியல் களத்தில் தனக்கென தனி அடையாளம் இல்லாத
முழுக்கவும் சார்பு நிலை கொண்டவர்களை ம்ட்டுமே
தனித்தொகுதிக்கான தவப்புதல்வர்களாக முடியும் என்று
காட்டி இருக்கிறது. இதுவும் ஒருவகையில் தனித்தொகுதி
என்ற சலுகையை கேலிக்குரியதாக்கிவிட்டது.
தலித் அரசியல் பேசினால் இடமில்லை.
இரு பெரும் கட்சிகளின் எடுபிடிகளாக இருந்தால் மட்டுமே
அரசியல் களத்தில் தலித் அரசியல் சாத்தியப்படும் என்பதை
இம்முடிவுகள் மூலம் உணர்த்தி இருக்கிறது இந்த இருபெரும்
கட்சிகள். தலித்திய அரசியல் களத்தில் இருப்பவர்கள்
இது குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள்?
நாலு எருதுகளும் இரண்டு ஓநாய்களும் கதை எழுதவேண்டும்.

களப்பணியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பொதுவுடமை
இயக்கத் தோழர்கள் இத்தேர்தல் முடிவுகளை
"பண நாயகம் வெற்றி பெற்றது"
என்று மட்டுமே சொல்லி நகர்ந்துவிடும் கொடுமை..
சிறுதுளி நம்பிக்கையையும் நீர்த்துப்போகச்செய்கிறது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது ஒரு பாடம்.
அதைப் பாடமாக கற்று தேர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு
யார் நகரப்போகிறார்கள்?

.

Monday, June 20, 2016

கூத்துக்காரனின் கவிதைமொழி



"தாண்டுகால்" கவிதை தொகுப்பு என் வாசிப்புக்கு வந்து சில
மாதங்கள் கடந்துவிட்டன. கவிதை எழுதிய தவசிக்கருப்பசாமி தான்
நான் அறிந்த தம்பி ஹரி கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொள்ள
என் மரமண்டைக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
இரு நாட்களுக்கு முன் ஹரி என்னுடன் பேசினார்.
அவருடைய கவிதைகளை வாசித்தவர்கள் " நீ இனிமேல்
கவிதை எழதவேண்டாம்" என்று சொன்னார்களாம்!! ஆம்
சொன்னார்களாம்.!!
நீங்க வாசித்தீர்களா , எதுவுமே சொல்லவில்லையே! என்று இரு
தினங்களுக்கு முன் அவர் என்னிடம் கேட்டார். அறிந்தப்பெயரும்
அறியாத பெயரும் ஏற்படுத்திய குழப்பத்தை அவரிடம் சொல்லி
ரசித்தேன். எவரெல்லாம் அவரை கவிதை எழுதவேண்டாம் என்று
சொன்னார்கள் என்று அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகவும்
அருவெறுப்பாகவும் இருந்தது.

"கவிதை என்ன இவனுகளுக்கு பட்டா போட்டு எழுதிக்கொடுத்த
சொத்தா?"
இவனுகளின் மொழி தான் வசீகரமானதா?
கவிதையை ஒளிவட்டமாக தலையில் தூக்கி சுமந்துக்கொண்டு
அலையும் இந்த விருது சிகாமணிகளுக்கு
தாண்டுகால் மொழி நிச்சயமாக மிரள வைத்திருக்கும்.
அந்த மிரட்சியில் அரண்டு போய் அந்தக் கவிதா
சிகாமணிகள் அலறுகிறார்கள் ..
கூத்துக்காரனின் மொழி தமிழ்மொழி இல்லையா?
இவனுகளைப் போல கொஞ்சம் கொஞ்சும் சமஸ்கிருத
வார்த்தையைக் க்லந்து கவிதை எழுதிவிட்டால்
தமிழின் செம்மொழி அந்தஸ்த்து பாதுகாக்கப்படுமா என்ன?
சற்றொப்ப் (1500 ஆண்டுகள்) சில நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழ் மண்ணை தமிழன் ஆளவில்லை.
தமிழ்க்கவிதையின் ஆணிவேரை தன் கூத்துகளில்
மறையாது பறை அடித்து முழங்கிக்கொண்டிருந்தவன்
இவர்கள் விமர்சிக்கும் இந்தக் கூத்துக்கவிதைககாரன் தான்.
என்னடா நியாயம் இது?
கவிதை நீதிமன்றத்தில் இவனுகளை எவண்டா நீதியரசர்களாக
நியமித்தது? !!

ஹரி.. உனக்குத் தெரியுமா.. மராத்தி மொழியில்
நாம்தேவ் தாசல் என்ற புகழ்பெற்ற கவிஞ்ருக்கும்
இதே நிலை ஏற்பட்டது.
"மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்."
என்ற அவன் வரிகளில் அதிர்ந்துப்போனது மராத்தி இலக்கிய உலகம்.
இன்றுவரை அந்த அதிர்ச்சி அலைகள் ஓயவில்லை.
ஆனால் நாம்தேவ் தாசலின் மொழி ஆளூமையை
எவராலும் எட்டமுடியவில்லை.

தாண்டுகால் தொகுப்பிலிருந்து..

"ஓடிப்போன பதினேழு வயசுக்கரியைத்
தேடி மீட்டுக்கொண்டு வந்தாயிற்று.
அடி அதிரசம் குத்து கொளுக்கட்டை
வாலிபத்திற் கிட்டாத வாய்ப்பையெண்ணி
உடனமர் காதலனை காரில் வைத்துப்போர்த்தியதில்
நிபந்தனையற்ற கெட்டியன்பு நீர்த்துப்பின் விட்டோடி நீங்கியது.
பரம்பரை மானம் சொல்லி கயிறுப்பிடித்துக் கூத்தாட்டும்
மசிர்பொசுங்க சாம்பலைத் தேய்த்தோ
உசிர் கருக உறுப்பில் சூடிழுத்தோ
பிறந்த ஒழுக்கமற்ற அரும்பாவியை உய்விக்காதா
மனுஷஞ் செத்தாலும் நாயம் சாகப்பிடாது.

----

பெண்ணியம் பேசும் ஆண்களை விட ஆண் பெண் உறவில்
ஆணின் அவஸ்தைகளை வெளிப்படையாக சொல்லவரும்
ஆண்கள் நம்பிக்கையானவர்கள். உண்மையானவர்கள் என்பதால்.!
சிலர் அந்த உண்மைகளை வெளிப்படையாக
பேசினாலும் எழுத்தில் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதை
அறிவேன்.. காரணம் தங்களை முற்போக்காளர்
பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்களொ என்ற அச்சம்தான்!
ஆனால் ஹரி எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
தொலைபேசியில் பேசும்போது இப்படியும் கூட பெண்கள்
இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுவார்,.

என்றைக்கு  நம் வீட்டு படுக்கை அறையில்
தொலைக்காட்சி பெட்டி ஓரிடத்தைப் பெற்றுவிட்டதோ
அன்றே வாழ்க்கை நுகர் கலாச்சாரமாகிவிட்டது.
பெண்கள் நுகர்ப்பொருட்கள் அல்ல என்ற விழிப்புணர்வு
இருக்கும் பெண்களிடமும் கூட உலகச்சந்தையும்
விளம்பர உலகமும் மயக்கத்தை ஏற்படுத்திவிடும்
உண்மையை இனியும் நாம் மறைக்க வேண்டியதில்லை.
இந்தப் பின்புலத்தில் தான் கீழ்க்கண்ட இக்கவிதை என் கவனத்தை
ஈர்த்திருக்கிறது

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும்
வாழை நாரேங்கிறவாள் வாய்த்தாளெனக்கு.
காதல் கடிமணம் கரைந்தது பணம்
மகன் பிறந்து அப்பாவென விளித்ததொன்றுதான் சாக்கு
வரதட்சணை புகார் கொடுத்து ஓடிப்போனவள் மீண்டுத் திரும்ப
புருஷன் நான் கூடிக்கொண்டேன்.
ரத்தினப்பிரகாசத்துடன் பத்துவிரற் மோதிரம் தரித்தேன்
உடமை மேலுடமை சேர்த்து உபரியை பதுக்கியும் வைத்தேன்.
லாரியை நான் பார்த்துக்கொள்கிறேன்
அவளை யோனர் பராமரிக்கிறார்
மண்ணு திங்கற பண்டத்த மனுஷன் தின்னாலென்ன.

(தாண்டுகால் கவிதை தொகுப்பு வெளியீடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்.)

Wednesday, June 8, 2016

தமிழினத்துரோகி


நீங்கள் திமுக குடும்ப ஆட்சியை ஆதரிக்கவில்லையா?
நீங்கள் திமுகவின் நிரந்தர தலைவர் திருவாரூர் மு. கருணாநிதியை தமிழினத்தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?
அப்படியானால் -
நீங்கள் தமிழ் அறியாதவர்.
தமிழகம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.
தமிழ் இலக்கியம் பற்றி பேசும் தகுதி உங்களுக்கில்லை.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
இதற்கும் ஒரு படி மேலே போய் நீங்கள் அதிமுக தலைவர்
செல்வி ஜெயலலிதாவை ஏதாவது காரணங்களால் ஆதரிப்பவரா..?
போச்சு.. !போச்சு..!! எல்லாம் போச்சு.!!!
அப்படியானால்-
நீங்கள் மிகவும் பிற்போக்கானவர்.
முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிரானவர்.
இன்னும் சிலரின் பார்வையில் நீங்கள் பார்ப்பன அடிவருடி.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
அடடா.. என் தமிழினமே
உன் இன அடையாளம் இப்படியா சுருங்கிப்போகவேண்டும்?!!..
(இம்மாதிரியான விமர்சனங்களை முன்வைக்கும்
 பிரபலமான எழுத்தாளர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்)

Tuesday, June 7, 2016

அம்ரிதா ப்ரிதம்






வாரத்தில் ஒரு முறையாவது அம்ரிதா ப்ரிதம் வாசிக்கவிட்டால்
என்னவோ பித்துப்பிடித்த மாதிரி இருக்கும்.
என்னை வசீகரித்த அந்த எழுத்துகள்.. 
இதோ இந்த நிமிடத்திலும் என்னால் அவளுடைய
ஒரு வரியைக் கூட எழுதிவிட முடியாது.
என் மீள் மீள் வாசிப்புகளில் அவள்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு சிகிரெட் துண்டுகளை விட்டுச்சென்ற ஷாகிர்
எனக்கு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறான்.
ஜீவராசிகள் வாழ்வதற்கு காற்று இருக்கும்வரை
பூமியில் எதுவும் வெற்றிடமில்லை என்பது மட்டும்தான்
இத்தருணத்தில் ஆறுதல் தரும் உண்மையாக
அணைத்துக்கொள்கிறது.
அந்தக் கடைசிக்க்டிதத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
அதை வாசிக்கப்போகிறேனா
எழுதப்போகிறேனா
காலம் இன்னும் முடிவுசெய்யவில்லை.
------
Amrita Pritam
i
There was a pain
That like cigarettes
I inhaled quietly
Just a few poems remain
That I flicked along
With ash from the
Cigarettes

Monday, June 6, 2016

மழைக்கவிதை




குடைகள் விரிவதற்கு தயாராகிவிட்டன..
மழைக்கால காலணிகள் வாங்கியாகிவிட்டது.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி
வேகமாக நடக்கிறது.
தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை
அவசரமாக அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பளமும் வடகமும்
டப்பாக்களில் பொரிவதற்கு காத்திருக்கின்றன.
கோபுரத்தில் விழுந்த காக்கையின் எச்சத்திலிருந்து
ஆலமரத்தின் விதை முளைவிட விழித்திருக்கிறது...
புழுக்கம் தாளாமல் புறாக்கள்
தனித்தனியாக பெருமூச்சில்.
இன்றொ நாளையோ
இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில்
மழை வந்துவிடும்.
அறிவித்துவிட்டார்கள் அவர்கள்.
படபடப்புடன் கண்ணாடி சன்னலைத் திறக்கிறேன்.
சூல்கொண்ட கருமேகங்கள் மெல்ல அசைகின்றன.
தொட்டில் அழுகிறது
அணுகுண்டுகள் துளைத்த என் பூமியில்
பூக்கள் பூக்காவிட்டாலும் பரவாயில்லை.
புல் முளைக்குமா .,,?.
காத்திருக்கின்றன  என் கவிதைகள்

Tuesday, May 31, 2016

கவிதை கொலை







கூப்பிடு தூரத்தில் இனப்படுகொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் பாரட்டினீர்கள்
பக்கத்து ஊரில் கவுரவக்கொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் கொண்டாடினீர்கள்
ஊரெல்லாம் வெள்ளக்காடு
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் லைக் போட்டீர்கள்
தலைவர் அகாலமரணம்
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் ஆஹா என்றீர்கள்
நேற்று அவன் கொலை செய்யப்பட்டான்
துப்பு துலக்கியதில் 
கவிதை அவனைச் சிறுக சிறுக
விஷம் கொடுத்து கொலை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
நீங்கள் வேறோரு கவிஞனைப் பாராட்டுவதற்கு
புறப்பட்டுவிட்டீர்கள்.

Sunday, May 29, 2016

ஹிரோசிமாவில் ஓபாமா






அமெரிக்க அதிபர் ஓபாமாவின் ஜப்பான்  ஹிரோசிமா பயணம்
உலக அரங்கில் அதிர்ச்சி கலந்த ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.
71 வருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் எந்த மண்ணில்
அமெரிக்க போர்விமானம் அணுகுண்டு போட்டு (ஆக 6, 1945 காலை 8.30
மணியளவில்) இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததோ
அந்த மண்ணில் அதே நினைவிடத்தில் ஓபாமா பேசினார்.
அதிலும் குறிப்பாக அணுகுண்டு வீசியதில் தப்பித்து இன்று
உயிருடன் வாழும் ஜப்பானியர்களையும் (மே, 27)சந்தித்தார்.
நெகிழ்வாக  இருந்தது அக்காட்சிகள்.
வருத்தப்பட்டாரே தவிர தங்கள் போர்விமான தாக்குதலுக்காக
ஒபாமா மன்னிப்பு கேட்கவில்லை! அதை ஜப்பானியர்கள் எதிர்பார்க்கவும்
இல்லை என்பது கூடுதல் தகவல்.

At Hiroshima Memorial, Obama Says Nuclear Arms Require ‘Moral Revolution’

Obama in Hiroshima calls for 'world without nuclear weapons'

ஓபாமா  ஜப்பான் மண்ணில் "அணு ஆயுதங்களில்லாத
உலகம் " பற்றி பேசியது கேட்க நன்றாக இருந்தாலும்
பெரிய அண்ணன் , ஆயுத விற்பனை அதிகாரி,
அமெரிக்க அதிபர் அதைப் பற்றி பேசும்போது
நெருடலாக இருக்கிறது.

Monday, May 23, 2016

புரட்சிதலைவி முதல் "அம்மா" வரை

 
புரட்சிதலைவி , "அம்மா" ஆனது தற்செயலானதா?
அல்லது திட்டமிடப்பட்டதா..?

எம் ஜி ஆர் அவர்களை புரட்சிதலைவர் என்று கொண்டாடியவர்கள்
செல்வி ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்று கொண்டாடினார்கள்.
புரட்சிதலைவர் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் சொல்
புரட்சிதலைவி.
புரட்சிதலைவி இன்று "அமமா" என்றழைக்கப்படுகிறார்.
அம்மா என்று கொண்டாடப்படுகிறார்.


எம் ஜி ஆரால் அரசியலுக்கு அறிமுகமானவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக எம் ஜி ஆருக்குப் பின்
அதிமுக தொண்டர்கள் ஜெ வை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று எம் ஜி ஆர் என்ற பிரம்மாண்டத்தையும் தாண்டி
ஜெ என்ற "அம்மா" தன் தடம் பதித்திருக்கிறார்.
ஓர் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சி அமைத்திருக்கிறது தமிழகத்தில்.
எவ்விதமான அனுதாப அலையோ அதிர்ச்சி அலையோ
இல்லாமல் தமிழக அரசியலில் இதை சாதித்துக்காட்டி
இருக்கிறார் ஜெ.
அவர் கடந்து வந்தப் பாதை..
ஒரு பெண்ணின் அரசியல் வெற்றி..
அவ்வளவு எளிதானதாக அவருக்கு வாய்க்கவில்லை.

அதிகம் படித்தப் பெண்கள், வாசந்தி போன்ற எழுத்தாளர்கள் கூட
ஜெ பற்றி சொல்லும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனையின்
வெளிப்படாகவே இருக்கின்றன.

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த
ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண்
நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள்
கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும்
 என்ற ஆணாதிக்க மரபு சிந்தனைதான் வாசந்தி அவர்கள் ஜெ குறித்த சொன்ன
அந்த விமர்சன வரிகள்..
(She , (ஜெ)  wants to project herself as the Immaculate Virgin. She is Amma.)
(இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்)


மக்கள் திலகம் எம்ஜியாரின் அரசியல் வாரிசு, எம்ஜியார்
விரும்பிய பெண், ஏம் அவருடைய காதலி.. , சின்னவீடு..
.. இப்படி ஏதோ ஒன்றாகத்தான் ஜெ ஆரம்பகாலங்களில்
பெண்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும்
விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது,
அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த
ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது.
அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக
ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட
எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது
கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக
இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட
மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில்
யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு
 கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த
மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம்,
ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
 மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான
உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை
என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா?
 என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது.
 இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில்
 எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள்,
 குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட
அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்
நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ.
மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.


புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட
 புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன்
ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில்
 அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில்
ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன.
அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி.
இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன்
 ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத
ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.
அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.!

இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக
வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.

புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன்
 உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும்
வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின்
தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார்.
ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு
 வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும்
அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய
இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார்.

 என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே
இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட
 தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில்
 ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல்
அவருக்கு ஒரு கவசமாக இருந்தது.
அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள
 அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.


தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி,
திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி,
தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள்
என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில்
திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது.
இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின்
அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட
 பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள்.
அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள்.
அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு
வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார்.
அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார்.
அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின்
இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார்
இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும்
மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு
நீண்ட நெடிய வரலாறு, மரியாதைக்குரிய இடம் உண்டு.

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.
தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும்
 அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி,
 குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா…
இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை.
தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை,
அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை
ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது,
இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே
மறைந்துவிடுகின்றன.
ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.

அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக
மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில்
காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த
உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும்
திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்
“அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது.
 நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில்
 நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார்.
ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான
ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.
இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும்
 இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது
என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ
என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று
ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும்
 இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில்
 பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள்.
தமிழக உணர்ச்சி அரசியலில் "அம்மா" என்ற ஆயுதம்
அதை மிக வலுவாக செய்து காட்டி இருக்கிறது.
ஜெ வின் ஓட்டுவங்கியில் பெரும்பான்மையாக இருக்கும்
பெண்களுக்கு "ஜெ" வின் கடந்தகாலமோ அல்லது
ஜெ குறித்த கதைகளோ பேசப்படுவது கண்டு அவர்மீது
வெறுப்பு வருவதில்லை. மாறாக அவர்மீது அனுதாபம்
ஏற்படுகிறது. ஜெ மீது அவதூறுகள் சுமத்தப்படும் போதெல்லாம்
அப்பெண்கள் "அம்மா" என்ற பிம்பத்தின் மீது விழும்
எச்சிலாகவே அதைப் பார்க்கிறார்கள். துப்பியவனைக் கண்டிக்கவும்
தண்டிக்கவும் தங்களுக்கு தெரிந்த ஏதொ ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.

ஜெ என்ற பெண்ணை ஒரு பெண் என்ற பால் அடையாளம் தவிர்த்து
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, தமிழத்தின் முதல்வராக மட்டுமே
விமர்சிக்க வேண்டும். அப்படியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை
மட்டுமே இனி எதிர்காலத்தில் சிலரின் அரசியல் வாழ்வுக்கு
துணை நிற்கும்.

ஓர் அரசியல் சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "அம்மா"விடமிருந்து
ஆக்கப்பூர்வமான மக்கள் ந்லத்திட்டங்களை, செயல்பாடுகளை
எதிர்பார்க்கிறார்கள் அவ்ருக்கு ஓட்டுப்போட்டவர்களும் ,
என்னைப் போன்றவர்களும்.

Thursday, May 12, 2016

மின்பற்றாக்குறையா அல்லது மின் ஊழலா..?




காற்றில் ஊழல், தண்ணீரில் ஊழல், மின்சாரத்தில் ஊழல்.
இந்த ஊழல்களிலும பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்.
சந்தைப்பொருட்கள் அனைத்திற்கும் சந்தை விலை உண்டு. அந்த விலையை நிர்ணயித்துவிட்டு அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்குவது அரசு தான்.
இப்படி செய்கிற அரசாங்கம் வாய்க்கூசாமல் சொல்லுகிறது அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்று. ! இது எப்படி இருக்கு?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கும் திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இருவரும் இந்த ஊழலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
மின்துறை இன்று அரசின் நஷ்ட கணக்கில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மின்சார பற்றாக்குறை என்பதை விட
>அரசின் மெத்தனப்போக்கு.
.>அறிவித்த பொதுத்துறை மின் நிலைய திட்டங்களை கிடப்பில் போட்டிருப்பது.
>மின்சார உற்பத்தியில் தனியாரை வளர்த்துவிட்டதுடன்
சந்தைவிலையை விட அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை அரசே வாங்கி விநியோகிப்பது....
இதனால் இன்று தமிழ்நாடு மின்சார துறைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ரூ. 97000 கோடி ....
.
இந்த லட்சணத்தில் நம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையிலேயே மின்சாரம் தயாரித்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்..
(நேற்று மாலை ஊழல் மின்சாரம் ஆவணப்படம் பார்த்தேன்.நன்றி விழித்தெழு இயக்கம். மும்பை)

Monday, May 9, 2016

ஜனநாயகத்தில் நாய்கள்



நாய்கள் ஆபத்தானவை.
ஆதிகாலம் தொட்டு மனிதன் காலடியில் வாலாட்டும்
நாய்களை வெறுப்பது உசிதமல்ல
என்கிறார்கள் நாய்க்காவலர்கள்.
நன்றியுள்ள ஜிவன் நாய்கள் தான்
என்கிறார்கள் நாய்ப்பிரியர்கள்.
ஆமாம்.. இந்த நாய்கள்
யாருக்கு காவல் இருக்கின்றன?
இந்த நாய்கள்
யாருக்கு நன்றி காட்டுகின்றன.?
எதற்கு நன்றி காட்டுகின்றன.?

வாலை ஆட்டும் நாயகள்
சில மானுடப்பிறவிகளின் அடையாளம்.
எச்சில் எலும்பு கடிக்க
ஏங்கும் பரிதாபம்.
குரைக்கும் நாய்கள்
அரசியல்வாதிகளின் வாத்தியார்கள்.
கூட்டம் கூட்டமாக
பிச்சைக்காரனைத் துரத்தும் நாய்கள்
காவல்துறையில் .
வேட்டை நாய்களும் உண்டு
நம் நாட்டில்.
அதுகளை நினைத்தால் தான்
என் உடல் நடுங்குகிறது.
உடம்பெல்லாம் கண்ணாக
இந்திரனின் வெறிப்பிடித்த கண்கள்
எம்மை வெருட்டுகின்றன.

வாயில்லாத ஜீவன் நாய்கள் என்று
வக்காலத்து வாங்காதீர்கள்.
ஊரெங்க்கும் வீதியெங்க்கும்
நாய்கள் விரட்டுகின்றன..
நாய்க்கடித்தால் தொப்புளைச்சுற்றி நாற்பது ஊசி
பயமுறுத்துகிறதா உங்கள் அறிவு...
நாய்களைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்துவிட்டு
நாய்கள் ஜாக்கிரதை யை
கழுத்தில் தொங்க்விட்டு
காலம் தள்ள முடிவு செய்துவிட்டீர்களா..?
ச்சே.. நாயும் பொழைக்கும் இந்தப் பொழைப்பு!
நாய்கள் ஆபத்தானவை.
நாய்களை வளர்ப்பவன் எஜமான்
நாய்கள் என்றும் அடிமைகள்.
ஜனநாயகத்தில்  நாய்களும் அடிமைகளும்
ஆபத்தானவர்கள்.

Saturday, May 7, 2016

ஓசுரில் மோடி




தமிழகத்தில் பா.ஜ.க. 3வது சக்தியா வளர்வதாக மோடி
சொல்கிறார். அது அவர் விருப்பம். எத்தானாவது சக்தியாகவும்
இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன..?
ஆனா கடைசியில் மோடி வைத்த வேண்டுகோள் தான்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கெ வேட்டு வைக்கிறமாதிரி
இருக்கு.. இந்திய ஒருமைப்பாட்டை இப்படி எல்லாம் ஒரு
பிரதமர்.. கேள்விக்குறி ஆக்கினால்..

(தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் போது டெல்லியில் நான் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தி, உங்களுக்காக உழைக்கத் தயாராக உள்ளேன்”)
அப்போ... பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி
தலைமையில் இயங்கும் நடுவண் அரசின் திட்டங்கள்  அமுல்படுத்த
மாட்டீர்களா.. இந்தியாவின் பிரதமர் என்றால் அவர் குமரி முதல்
இமயம் வரை பரந்திருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் பிரதமர்
அல்லவா.. நடுவண் அரசு அனைத்து மாநில மக்களின் நலனுக்காகவும்
செயல்படும் அரசு அல்லவா..
என்ன இது... இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒழுங்கு நாடாளுமன்ற
திட்டங்கள் மாநில அரசும் மைய அரசு உறவுகள் பற்றி எலலாம்
ஒன்றும் தெரியாத 3 ஆம் தர பேச்சாளர் மாதிரி ... ஓர் அகில
இந்திய கட்சியின் தலைவர் பேசலாமா.. பாரதப்பிரதமர் பேசலாமா..

பாரதமாதா கி ஜெ.

Thursday, May 5, 2016

விஜயகாந்த்




சினிமா நடிகர் என்பதால் அவர் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.
அவர் நடித்துக்கொண்டிருந்தக் காலத்திலும்
மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தார் என்று சொல்வதற்கில்லை.
அவருக்கு என்று தல. தளபதி க்கு இருக்கும் அளவுக்கு கூட
ரசிகர்கள் இருந்ததாக தெரியவில்லை.
வரும்போது வருவேன் ... என்று பஞ்ச் டயலாக் பேசியே
தன் ரசிகர்களை ரஜினிகாந்த் ஏமாற்றிக்கொண்டிருந்த காலக்கட்டம்..
ரஜினிகாந்த அரசியலுக்கெல்லாம் வர வேண்டாம்..
அவர் யாருக்கு ஆதரவு? என்று டில்லி முதல் மெரினா வரை
காத்துக்கிடந்த காலத்தில் இவர் அரசியலுக்கு வருவார் என்று
எவரும் சொல்லவில்லை. அவரும் சொன்னாரா தெரியவில்லை.
அதனால் தான் இக்கேள்வி எழுகிறது....
விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டது தற்செயலானது தானா?

Wednesday, May 4, 2016

கூட்டணி




கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள். காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை. காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.

இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா

போய்ட்டான்.

செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது. அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக் கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா.. தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு. அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம். சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப் பார்த்தாள்.

'ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா ?

'இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சிக் கூட்டம். நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம். '

'யாரு அந்த மவராசனா.. ?நல்லாயிருக்கட்டும். ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.. '

'யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது '

'போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா ? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே '

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.

கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார் ? வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.

'ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.. '

'ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க '

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.

'அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா இருக்குமா ? '

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள். வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.

ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ ' வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும் இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யிிலிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள் ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.

'தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

தலைவரைக் கொலை செய்ய சதியா ?

இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .. '

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

***

( April  2003ல் எழுதி திண்ணையில் வெளிவந்த கதை. மீள்வாசிப்புக்காக)