Thursday, September 14, 2023

அறிஞர் அண்ணாவின் வேண்டுகோள்.




 "என்னைப் பின்பற்றுகிறவர்களும்

நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "

அறிஞர் அண்ணா.
**
உங்களை நாத்திகர் என்கிறார்கள், நீங்கள் நிஜமாகவே
நாத்திகர்தானா?
"இல்லை"
அறிஞர் அண்ணாவின் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி நேர்காணல்
மிகவும் முக்கியமானது. பத்திரிகையாளர் ஏ. எஸ். ராமன் அவர்களுடன், அண்ணாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்ற
இந்த நேர்காணல் அண்ணாவின் மறைவுக்குப் பின்
13/04/1969 இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் வெளியாகிறது.
இந்திய தேசத்தின் அறிவுஜீவிகள் வாசித்த,
கொண்டாடிய பத்திரிகை இ.வீ.
ஏ. எஸ். ராமனின் இக்கேள்விக்கு அறிஞர் அண்ணாவின்
தெளிவான பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.
"மதத்தைப் பற்றிய கேள்விக்கு வருவோம், உங்களை
நாத்திகர் என்கிறார்கள். நீங்கள் நிஜமாகவே நாத்திகர்தானா?
"இல்லை.
நிறுவனமயமாகும் மதங்களின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை
. மதம் இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது
என்னுடைய முடிவு. நான் உருவ வழிபாட்டுக்கு எதிரானவன்
. விக்கிரகங்களை வழிபடவும் மாட்டேன்.
விக்கிரகங்களை உடைப்பதை ஆதரிக்கவும் மாட்டேன்."👌
மும்பையிலிருந்து, அதாவது அன்றைய பம்பாயிலிருந்து
வெளிவந்த "சங்கர்ஸ் வீக்லி' இதழில் இந்த வார ஆளுமை
என்ற தலைப்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த
அறிஞர் அண்ணாவின் பேட்டி 5/3/1967
தேசிய இதழில் வெளிவந்திருக்கிறது.
அதிலும் இதே கேள்வி வேறொரு விதமாக.
"உங்களை நாத்திகர் என்கிறார்கள்.
இதற்கு உங்கள் பதில் என்ன?"
அப்படியில்லை. எனக்கு 'உண்மையான நம்பிக்கை' உண்டு.
எனது சேவையையும் பணிகளையுமே வழிபாடாகக் கருதுகிறேன்.
எம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதே
\ எனது நோக்கம். அதே சமயம், அவர்கள் ஆத்திகர்கள்
என்ற போர்வையில் போலி வேடதாரிகளாகிவிடக் கூடாது
என்ற கவலையும் உண்டு.
அடுத்தக் கேள்வியில் தன் கருத்தை தெளிவாக
தன் "சொர்க்கவாசல்' திரைப்படத்தில் முன்வைத்திருப்பதாக
அண்ணா விளக்கம் அளிக்கிறார்.
அறிஞர் அண்ணா தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்களாக
இப்பேட்டியில் சொல்வது ,

சாமர்செட் மாம், பெர்னாட்ஷா, பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்,
ஹெச். சி. வேல்ஸ், ஆல்பிரட் மார்ஷல்.
அண்ணாவின் வேண்டுகோள் இதுதான்.
"என்னைப் பின்பற்றுகிறவர்களும்
நேர்மையாளர்களாக இருக்க வேண்டும் "
அறிஞர் அண்ணாவைப் போற்றுகிறேன்.
ஒரு தலைமுறை அவரைப் பின்பற்றியது.
ஒரு தலைமுறை அவர் பெயரை மட்டும்
பிடித்துக் கொண்டது.
இன்று அவர் சிலையாகவும்
அரசியலில் பெயராகவும் மட்டுமே
இருக்கிறார்.
. ****
எனக்கும் என் அரசியலுக்கும்
என்றும் அவரே என் வழிகாட்டி.
என் ஆசான்.
அதனால்தான்
அண்ணாவைப் போற்றுகிறேன்,
இன்று அண்ணாவின் பிறந்த நாள். 15 செப்.











#புதியமாதவி_மும்பை20230915

Tuesday, September 12, 2023

முமபையில் ஒரு பனைமரம்

 


மும்பையில்

உங்களோடுதான் இருக்கிறேன்.

ஆனால் உங்களில் ஒருத்தியாக இல்லை.
இது மும்பையின்
புறக்கணிப்பு அல்ல.
என்மீதும் என் எழுத்தின் மீதுமான
உங்கள் தீண்டாமையும் அல்ல.
என்னை என் தனித்துவத்தை
வேறு எப்படித்தான் காட்டுவீர்கள்?!
நன்றி.
எனக்கே என் அடையாளத்தை
நானே மறந்துப்போனாலும்
அடிக்கடி நினைவூட்டும்
உங்கள் அன்பில்
நனைகிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் மாடித்தோட்டத்தில்
ரோஜாக்கள் பூக்கலாம்.
துளசியைக் கூட வளர்க்கலாம்.
ஆனால் பனைமரங்கள்
முளைப்பதில்லை.
நானும்தான்.
மீண்டும் மீண்டும் நன்றி.

Thursday, September 7, 2023

அண்ணாவின் திராவிடமாடல் 1

 அண்ணாவின் திராவிட மாடல்..



திமுக வின் தலைமையகம் 2/12/1951ல் திறக்கப்பட்டது.
சென்னையில் சொந்தமாக ஓரிடம் வாங்கி அதில் தன்
அரசியல் கட்சியின் தலைமையகம் செயல்பட
வேண்டுமென்பது அண்ணாவின் அன்றைய
கனவாக இருந்த து. கனவு கண்டவுடன் அதை நனவாக்கும்
சூழல் அன்றில்லை. அன்றைய திமுக என்பது வேவேவேறு ..
. திமுக.
    தங்கசாலை தெருவிலிருந்த அண்ணாவின் உறவினர் இல்லத்தில்தான்
திமுக கட்சி அலுவலகம் நடந்து கொண்டிருந்தது.
கட்சியின் ஏடான திராவிட நாடு பணிகளும்
அந்த அறையில் தான் நடந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக அவர் சேமிப்பும் தம்பிகளின் நிதியுமாக
சேர்த்த ரூ. 13000/ ல் ராயம்புரம், சூரிய நாராயணசெட்டி தெருவிலிருந்த கட்டிடத்தை வாங்கினார்.
திமுகவின் அறிவகம், தலைமைச்செயலகமாக உருவெடுத்தது.
அந்த அறிவகம் திறப்புவிழாவில் திமுகவின் தலைமைச்செயலகத்தை திறந்துவைத்தவர் அண்ணாவின் தம்பி
குமரி மாவட்ட வி.எம்.ஜாண் அவர்கள்.
அன்று குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு பெரிய
செல்வாக்கெல்லாம் கிடையாது..!
ஜாண் அவர்களைக் கொண்டு திறந்து வைப்பதன் மூலம்
திமுகவின் தேர்தல் வெற்றிக்கு அது எந்த வகையிலும்
தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை.
ஆனாலும் அறிஞர் அண்ணா தேர்ந்தெடுத்தவர் வி. எம் ஜாண்
என்பதில் இருக்கிறது அண்ணாவின் திராவிடமாடல்.
வி. எம் ஜாண் அவர்கள் இந்திய சாதி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட
சமூகத்தைச் சார்ந்தவர். ( நன்றி இந்துதமிழ்)
அண்ணாவின் திராவிட மாடல் இங்கிருந்து ஆரம்பமாகிறது.
எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும்
எந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்
என்பதை தன் கட்சிக்கும்
தம் தமிழ்ச் சமூகத்திற்கும்
இப்படித்தான் உணர்த்தினார் அண்ணா.