Monday, September 20, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்







அண்மையில் கொங்குமண் கோவையில் நடந்து முடிந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டு மலரை முழுமையாக வாசித்துவிட்டு அது பற்றிய என் கருத்துகளை
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சமீராமீரான்
பரிமாறிக்கொண்டதுண்டு. அதனாலேயோ என்னவோ இந்த மாநாட்டு மலர் குறித்த ஆய்வுரையை
நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.


மலர் ஆய்வுக்கு முன் மலர் வெளியீடுகளைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மலர் என்ற சொல் தமிழில் எந்தப் பொருளைக் குறிக்க பயன்படுத்தி வந்தோமோ அந்தப் ச்பொருளில்
இந்த மலர்கள் அடங்காது. ஆங்கிலத்தில் சொவேனியர் என்று சொல்வதை நாம் மலர் என்று சொல்கிறொம்.
சொவேனியர் என்ற சொல் பிரஞ்சிலிருந்து வந்தது. பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் இதன் பொருள்
நினைவூட்டல், நினைவுச்சின்னம், டு ரிமம்பர், மொமெண்டோ என்று சொல்வார்கள்.
ஒரு நிகழ்வை நினைவூட்டும் வகையில் தமிழில் மலர் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழக அரசு நடத்திய கோவை செம்மொழி மாநாட்டு நிகழ்வின் ஒரு நினைவூட்டலாக
இந்த மலரை அணுக வேண்டும்.

மலர் 16 த்லைப்புகளில் பரந்து விரிந்து மிகவும் நேர்த்தியாகாவும் கட்டுக்கோப்பாகவும்
இருப்பதுடம் இயன்றவரை தமிழ் தமிழர் சார்ந்த அனைத்து தளங்களின் ஊடாகவும் பயணிக்க
முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

எந்த தலைப்புக்குள்ளும் அடங்காமல் எல்லா தலைப்புகளுக்கு முன்னோடியாக
நுழைவாயிலாக் பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார் என்ற தலைப்பில்
1968ல் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்தப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்
ஆற்றிய பேருரையிலிருந்து சிலப் பகுதிகளை நம் வாசிப்புக்குக் கொடுத்து வாசிப்பவர்
நெஞ்சைத் தொடுவது ஒரு தலைமுறைக்கு பசுமை நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.

செம்மொழி மாநாட்டில் பெரும்பங்காற்றியவரும் சிந்துவெளி எழுத்துகளை தமிழ் எழுத்துகளாக
அடையாளம் கண்டவருமான ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை சில முக்கியமான
கருத்துகளை முன்வைக்கிறது. செம்மொழித் தகுதிக்கு அகச்சான்றுகள் மட்டுமல்ல, புறச்சான்றுகள்
ஆன கல்வெட்டுகள், நாணயங்கள், இலச்சினைகள், சில்லுகள் ஆகியவற்றிலிருந்து
ஆதாரங்களைத் திரட்டித் தந்திருக்கிறது.

கரூரில் கிமு 1ஆன் அச் சார்ந்த வெள்ளி இலச்சினையில் குறவன் என்ற எழுத்துப்
பொறிக்கப்பட்டுள்ளது.குறவன் என்ற குறிஞ்சி நில மைந்தன் அன்று வெள்ளி இலச்சினைகளில்
வாழ்ந்து கொண்டிருந்தான் என்றசெய்தி இன்று நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

தமிழகம் எங்கும் சில்லுகள் கிடைக்கின்றன. சில்லுகள் என்றால் உடைந்த மண் பானைச்சட்டிகளின்
துண்டுகள் தான். அப்படிக் கிடைத்திருக்கும் சில்லுகளில் கொடுமணலில் கிடைத்திருக்கும் சில்லு
கிமு 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் ஒரு துண்டில் கண்ணன் ஆதன் என்ற பெயர்
பொறிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் சில்லுகள் பற்றிய செய்திகளும் எனக்கு
இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தச் சில்லுகள் நமக்கு இன்னொரு செய்தியையும்
ஆழமாக உணர்த்துகின்றன. அதாவது தமிழகம் எங்கும் மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்த
சமுதாயமாக இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது.

எகிப்து நாட்டின் பெரோனிக துறைமுகத்தில் கொற்றபூமான் என்ற பெயர் பொறித்த சில்லு
கிடைத்திருக்கிறது. கிபி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.


செம்மொழித் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் ரா..போ.குருசாமி
அவர்களின் கட்டுரை இன்னொரு புதிய பார்வைஈர்கயை முன்வைக்கிறது.
நாம் எல்லோருமே அறிவோம். உயர்திணை அஃறிணை என்று தமிழன் கண்ட திணை வகைத்தான்
அறிவியலுடன் ஒத்துப்போகக்கூடியது.
இனி, உய்ர்திணை என்று சொல்லிவிட்டு அதன் எதிர்ப்பதமாக தாழ்திணை என்றுதானே
சொல்லியிருக்க வேண்டும்? அதைவிடுத்து அஃறிணை. அதாவது அல்+திணை
என்று ஏன் சொன்னார்கள்?
கட்டுரையாளர் குருசாமி சொல்லுகிறார். தமிழ் மொழியின் செவ்வியல் சுட்டும்
பண்பாடு இது என்று. படைக்கப்பட்ட எதையும் தாழ்ந்தது என்று சொல்வதில்
தமிழ் மொழிக்கு உகந்ததல்ல. தமிழன் ஏற்றுக்கொண்டதுமல்ல.
அதனால் தான் திணையை உயர்திணை என்றும் அதுவல்லாத மற்றவை எல்லாம்
அல்திணை அதாவது அஃறினை என்றானாம்.
ஒரு புதிய பார்வையை இக்கட்டுரை முன்வைப்பதன் மூலம்
தாழ்திணை என்று சொல்வதைக் கூட தன் திணைப் பாகுபாடாக ஏற்க மறுத்த தமிழ்ச்சமூகம்
எங்கே எப்போது எப்படி ஏன் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்தது.
தாழ்ந்தச் சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, ஒடுக்கப்பட்ட சாதி , பிற்படுத்தப்பட்ட சாதி
என்றெல்லாம் தமிழ்ச்சாதியை இன்றுவரை ஒன்றாக சேர்க்க முடியாமல் பிரித்து
வைத்திருக்கிறது என்ற இன்னொரு சிந்தனைத் தளத்திற்கு இக்கட்டுரை வாசகனை
இழுத்துச் செல்கிறது.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இந்தியா சீனாவின் முன்னால்
த்லைகுனியத்தான் செய்கிறது. அதற்கான காரணங்களும் அரசியலும் தனியாக பேசப்பட
வேண்டிய விசயம். இந்த ஒலிம்பிக் ஆரம்பித்தது கிரேக் நாட்டில் கிமு 776ல். அப்போது 4
வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். இப்போதும் அந்த முறையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
கிரேக்கில் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவுக்குப்பின் அதாவது கிமு 393ல் ஒலிம்பிக் நடத்துவது
தடைப்பட்டுப் போனது. அதன் பின் இன்றைக்கு நாம் காணும் ஒலிம்பிக் 1896ல் ஆரம்பிக்கப்பட்டது.
கிரேக்க நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டில் அப்போது
விளையாட்டுகள் இருந்ததா? என்ற கேள்வி எழும்.
அதைத்தான் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் செங்கைப்பொதுவன் - சங்க இலக்கியத்தில்
விளையாட்டுக்கலை என்ற தலைப்பில்.
சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்ற சொல் மட்டும் 50 இடங்களில் வருகிறது.
96 விளையாட்டுகளை அன்றைக்கு விளையாண்டிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

அதில் சில விளையாட்டுகள் குறித்தச் சுவையான செய்திகளை இக்கட்டுரைப் பதிவு
செய்திருக்கிறது.

குறிப்பாக கோல்ஃ என்று இன்று நாம் விளையாடும் விளையாட்டை அன்று வட்டுநா
என்றார்களாம். வட்டு என்றால் உருளும் குண்டான் பந்து. வட்டுநா என்பது
அந்தப் பந்தை அடிக்கும் நாக்குப்போல வளைந்த மட்டை. கோல்ஃ விளையாட்டைப்
பார்த்தவ்ர்களுக்கு இப்போது வட்டுநா என்பது எவ்வளவு பொருத்தமான காரணப்பெயர்
என்பது புரிந்திருக்கும். என்ன இன்று நம் கனவான்கள் கோல்ஃ விளையாடுவது
பச்சைப்புல்வெளியில். அன்றைக்கு 2000 வருடங்களுக்கு நம் வட்டுநா விளையாட்டை
பாறைமீதிருந்து அடித்து விளையாண்டிருக்கிறார்கள்.

'உருள்கின்ற மணிவட்டைக் குணில்க்கொண்டு துரந்தாற்போல' -
-செங்குட்டுவன் கண்ணகிச் சிலை எடுக்க இமயம் நோக்கிப்
புறப்பட்டான் என்கிற வரியில் வருகிற மணிவட்டு என்பது
பந்துதான். குணில் என்பது அந்தப் பந்தை அடிக்கும் மட்டை.
இந்த விளையாட்டுதான் இன்று நாம் விளையாடும் ஹாக்கி விளையாட்டின்
முன்னோடி எனலாம்.

1933-34களில் சிக்காகோவில் உலகநாடுகளின் கண்காட்சியில் தான் synchronized swimming
என்ற புதிய நீச்சல் நடனத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த நடனத்தை அன்றைக்கு கரிகாலன்
காவிரிக்கரையில் அட்டனத்தி நீச்சல்நடனத்தில் கண்டு களித்திருக்கிறான் என்கிறார்
கட்டுரையாளர்.
அட்டனத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தியின் காதலன், அட்டனத்தியுடன் நீச்சல் ந்டனமாடிய
காவிரி என்ற பெண் அட்டனத்தியின் நீச்சல் நடனத்தில் மயங்கி அவனைக் கட்டித்தழ்வ வருகிறாள்.
காவிரியின் பெருவெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அவள் வெள்ளத்தில் சிக்கி
இறந்துவிடுகிறாள். அட்டனத்தி காவிரிக்கரை ஓரத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்குறான்.
மருதி என்ற பெண் அட்டனத்தியைக் காப்பாற்றி அழைத்து வர இருவரும் சேர்ந்துவாழ்கிறார்கள்.
அப்போது தான் கரிகாலனின் மகள் ஆதிமந்தி காவிரிக் கரையெங்கும் தேடி அலைகிறாள்.
தன் காதலன் இறந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன்.

அட்டனத்தியைக் கண்டீரோ
கடல் கொண்டன்று, புனல் ஒளித்தன்று...
அவள் கதறலும் கண்ணீரும் மருதியை
மனம் உருகச் செய்கிறது. ஆதிமந்தியையும் அட்டனத்தியையும் அவள் சேர்த்து
வைக்கிறாள். ஆனால் அட்டனத்தியின் பிரிவால் அவள் கடலில் வீழ்ந்து தற்கொலைச்
செய்துகொள்கிறாள். இது தான் கதை. இந்தக் கதையில் வரும் அட்டனத்தி ஆடிய
நீச்சல் நடனம், கால்களையும் இடுப்பையும் தண்ணீருக்கு மேலே தூக்கி ஆடுவது.


இன்னொரு முக்கியமான கட்டுரை உலகம் போற்றும் தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும்.
-ந. சண்முகம்.

இன்று அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று உடம்பின் முடிச்சுகளை அறிந்து அதில் எழுச்சி ஏற்படுத்துவதன்
மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையைப் பற்றி பேசாத நாளிதழ்கள் மருத்துவக்குறிப்புகள் கிடையாது.
ஆனால் இதற்கெல்லாம் தாயாக இருக்கும் நம் சித்தர்களின் வர்மக்கலை நமக்கெல்லாம் ஒரு பொருட்டாகவே
படுவதில்லை. சித்தர்களின் வர்மக்கலை 8000 வர்மப்புள்ளிகளைப் பற்றிப் பேசுகிறது.
அதில் 108 வர்மப்புள்ளிகள் அடிப்படை வர்மப்புள்ளிகளாம். இன்று இந்த வர்மக்கலை தெந்தமிழகத்தில் மட்டுமே
அறியப்பட்ட ஒரு மருத்துவம். அதிலும் குறிப்பாக எங்கள் நெல்லையிலும் குமரியிலும் மட்டுமே
குருகுல முறையில் 12 வருசம் படித்து அறியும் சித்த மருத்துவமாக இருக்கிறது.

இன்று நம் வழக்கில் இருக்கும் நீதிமன்றம் என்ற சொல்லில் இருக்கும் மன்றம் எனறு சொல்லும்போதே
நீதிமன்றம் என்றுதான் பொருள். என்ன செய்வது... சினிமா நடிகர்களுக்கு மன்றங்கள் ஆரம்பித்து
தான் பிறந்த பலனைக் கண்டடையும் இன்றைய தமிழனுக்குப் புரிந்து கொள்வதற்க்கு வசதியாக
இது அந்த மன்றம் இந்த மன்றம் மாதிரி நீ நினைத்துக்கொள்கிற மாதிரி மன்றம் இல்லைப்பா,
இது நீதி வழங்கும் மன்றம் என்று பிரித்துக் காட்டீனார்களொ என்னவோ..!
எப்படியும் இருக்கட்டும்.
எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்று தொல்காப்பியம் நீதிபதிக்கு இருக்க வேண்டிய
எட்டு இயல்புகளைப் பட்டியலிடுகிறது.
மன்றம், அவை, பொதியில், அம்பளம் இச்சொற்கள் எல்லாம் அன்றைக்கு நீதி வழங்கும்
நீதிமன்றத்தைக்குறிக்கப் பயன்பாட்டிலிருந்தச சொற்கள் என்று சுட்டிக்காட்டி,
எழுதப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் இலலாமலேயே தமிழ் மண்ணில்
நிதீ வழுவாது அறம் காத்த தமிழ்ச்சமூகத்தை நமக்கு காட்டுகிறார் கட்டுரையாளர்.

தமிழர் மெய்யியல் -இன்மை என்ற தலைப்பில் முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள்
எழுதியிருக்கும் கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானக் கட்டுரை.
அதற்கு இரு காரணங்கள். அண்மையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
வெளியிட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலரில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அறிஞர் அண்ணாவின் மெய்யியல் என்ற தலைப்பில். அக்கட்டுரையில் நான் கையாளும் மெய்யியல்
தத்துவம் முனைவர் க.நெடுஞ்செழியன் இக்கட்டுரையில் முன்வைக்கும் தமிழர் மெய்யியல் - இன்மை
என்ற தத்துவத்திலிருந்து எடுத்துக்கொண்டது தான்.
எனவே இக்கட்டுரையை அதன் சாரத்தை நான் புரிந்து கொண்ட வகையில் உங்கள் முன் சொல்வதற்க்கு
எனக்கு எழுத்தாளர் மன்றம் ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி.

அது என்ன? மெய்யியல், அதிலும் மெய்யியல் இன்மை?
மெய்யியல் என்றாலே இந்தியாவைப் பொறுத்தவரை இந்துமதம், இந்துமதத்தில் வேதங்களும் உபநிஷத்துகளும்
என்றுதான் எல்லோருமே இன்றுவரை ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்துமதத்திலிருந்தது
மாறான ஒரு மெய்யியல் இருந்தது என்பதும் அந்த மெய்யியலை வகுத்தவன் தமிழன் என்பதும் இன்றுவரை
மறைக்கப்பட்டிருக்கும் உண்மை. தமிழனின் மெய்யியல் தான் அணுக்கோட்பாடும், இன்மைக்கோட்பாடும்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டது ஜீவராசிகளைக் கடவுள் படைத்தார் என்பதுதான் உலகின் அனைத்து
மதங்களும் உருவாக்கியிருக்கும் கோட்பாடு. ஆனால் தமிழன் அப்படிச் சொல்லவில்லை. ஒன்றிலிருந்து
ஒன்று பரிணாமவளர்ச்சி பெற்றதும் ஒன்று பிறிதொன்றாக மாறியதும் அந்த ஒன்று இல்லாமல் போனதும்
தமிழன் கண்ட மெய்யியல்.
எல்லாவற்றுக்கும் இப்படியான பரிணாம வளர்ச்சி இருப்பது போலவே இல்லாமல் போய்விடும் முடிவும் உண்டு.
இந்தப் பூமியும் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறான்.
தமிழன் கண்ட இந்த மெய்யியல் இன்மைக்கு கிரேக்கத்திலும் தனி இடம் உண்டு. கிரேக்க ஞானிகள் மெய்யியல் இன்மை
கோட்பாடை அறிந்து கொள்ள இந்தியா வந்ததை காரல்மார்க்ஸ் தன்னுடைய ஆய்வில் பதிவு செய்திருக்கிறார்.
சங்கப் புறப்பாடலில் பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் ஒரே ஒரு பாடல் தான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
"ஓரில் நெய்தல் கறங்க...." என்று ஆரம்பிக்கும்
அந்தப் பாடல் அப்படியே கடவுள் மறுப்புக் கொள்கையின் பிழிவு என்கிறார் கட்டுரையாளர்.

கணினி கலைச்சொல்லாக்க கட்டுரையின் மணவை முஸ்தபா அவர்கள் இன்னொரு வரலாற்று செய்தியை
முன்வைக்கிறார். தமிழில் எல்லாம் உண்டு என்று பகுத்தறிவு கொண்டவன் சொல்ல மாட்டான்.
தமிழ்மொழ்யிலும் சில உச்சரிப்புகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லை. பிறமொழியாக்கத்தின் போதும்
அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும் சில போதாமைகளைத் தமிழன் உணர்ந்தான்.
எனவேதான் ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷி என்ற எழுத்துருக்களைப் பல்லவர் காலத்தில் தமிழறிஞர்கள்
உருவாக்கினார்கள் என்கிறார் மணவை முஸ்தபா.
என்னதான் தனித்தமிழ் பேசினாலும் சில நேரங்களில் நாம் மாட்டிக்கொள்வோம்.
எனக்கு அடிக்கடித் தோன்றும்... துணைமுதலவர் ஸ்டாலின் பெயரை ஸ் என்ற வடமொழி
உச்சரிப்புக்கான எழுத்துருவைப் பயன்படுத்தாமல் எப்படி எழுத முடியும்?


பேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள் இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்.
classical language என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழாக்கம் செய்யும் போது செம்மொழி
என்று சொல்கிறோமே... classical என்ற ஆங்கிலச் சொல்லின் முழு அர்த்தத்தையும் செம்மொழி
என்ற சொல தருகிறாதா ? என்று கேட்கிறார். மேலும் classical language ஒரு classical civilization
society யிலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பதையும் முன்வைக்கிறார். காளிதாசனின்
சமஸ்கிருத நாடகங்கள் க்ளாசிக்கல் சன்ஸ்கிரிட்டில் எழுதப்பட்டவை. எனினும் சமஸ்கிருத நாடகங்களில்
உயர் சமூகத்தைச் சார்ந்த பாத்திரம் க்ளாசிக்கல் சமஸ்கிருதத்தில் பேச மற்ற பாத்திரங்கள் பிராகிருத மொழியில்
பேசினார்கள் என்ற செய்தியையும் தமிழ் இலக்கியம் வடமொழி என்று சுட்டும் போதெல்லாம் இந்த இருமொழிகளையும்
சேர்த்தே சுட்டியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இறுதியாக சிவத்தம்பி அவர்கள் செம்மொழி என்று சொல்வதற்குப் பதிலாக தொல்சீர்மொழி என்றழைக்கப்பட
வேண்டும் என்ற கருத்தை தீர்வாக வைக்கிறார். அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடு தான் எனினும்
செம்மொழி வரலாற்றில் வெகுதூரம் வந்தாகிவிட்டது. எனவே இனிமேல் சொல்லை மாற்றுவதை விட
நம் சொல்லகராதிகளில் திருத்தம் செய்வதுதான் ஏற்புடையதாக இருக்கும்.
தமிழன் காலப்போக்கில் இப்படியான மாற்றங்களைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.
அதிலும் திராவிட இயக்க வரலாறு இந்த மாற்றங்களை ஓசையின்று செய்துவிட்டது.
இராமசாமிகள் ஸ்ரீஇராமனின் பக்தர்களாக அறியப்படாமல் கடவுள் மறுப்பாளர்களின் அடையாளமாக
இன்று அறியப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள்.
த்மிழக முதல்வர் கலைஞரின் பெயரான கருணாநிதி என்று சொன்னால் அந்தக் கருணையே உருவான
ஈஸ்வரனைக் குறிக்கும். அந்தப் பொருளில் தான் அவருக்கு அவருடைய பெற்றோர்கள் கருணாநிதி
என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றும் இனிவரும் காலத்திலும் கருணாநிதி என்று
சொன்னால் அச்சொல் ஒரு கடவுள் மறுப்பாளனின் அடையாளப்பெயராக மட்டுமே நிலைத்து நிற்கும்.
இப்படியாக திராவிட இயக்கம் தமிழ்ச்சொல் வரலாற்றில் சொல்லகராதியில் எழுதாமலேயே எழுதிவிட்ட
பொருள்மாற்றங்கள் நம்மை வியப்படைய வைக்கிறது.

சித்த மருத்துவங்கள் குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் குறித்தும் தரமானக் கட்டுரைகள் இடம்
பெற்றிருக்கின்றன. துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ் மருத்துவத்தின் தொன்மையும்
தனித்தன்மையும் என்று எழுதியிருக்கும் கட்டுரை இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டில்
சித்த மருத்துவத்துக்கு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

குறிஞ்சி புறப்பாடலில் 99 மலர்கள் குறிக்கப்படுகின்றன. அந்த 99 மலர்களையும் அப்படியே
புகைப்படமாக்கி வண்ணத்தில் தந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி காலம் காலத்துக்கும் நம்
எதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.
ஏனேனில் என் கொள்ளுப்பாட்டிக்கு அந்த 99 மல்ர்களும் தெரியும் .
என் பூட்டிக்கு எல்லா மலர்களின் பெயர் தெரியும். 80 மலர்களை மட்டுமே அவள் அறிந்திருக்க கூடும்.
என் பாட்டிக்கு 80 மலர்களின் பெயர்கள் தெரிந்தாலும் அவள் அறிந்திருந்தது 50 மலர்கள் தான்.
என் தாய்க்கு 30 மலர்கள் தான் தெரியும். எனக்கு 20 மலர்களுக்கு மேல் தெரியாது.
என் குழந்தைகளுக்கு பூவரசம் பூ பூத்தாச்சு என்று காட்ட நான் தமிழ்நாட்டில் எங்கள் ஊருக்கு
அழைத்துச் சென்றாலும் பூவரசு மரம் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை.
என் பேரன் பேத்திகளுக்கு எத்தனை மலர்கள் தெரிந்திருக்க கூடும் என்று கற்பனையாக
ஊகிக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த மலரில் இடம் பெற்றிருக்கும்
மலர்க்கண்காட்சி நமக்குப் பொக்கிஷம்தான்.



என்னடா கட்டுரைகளாக அறிமுகப்படுத்திவிட்டு கவிதைகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறாரே
என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும்! கவிதைகள் என்ற தலைப்பில் அதிகப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதனாலேயே நான் கவிதைகள் குறித்து பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை,
அதிகமாக இருப்பாதாலேயே நாம் காக்கைகளைத் தேசியப்பறவையாக தேர்ந்தெடுக்கவில்லையே!
குறைவாக இருக்கும் மயில்களைத் தானே தேசியப்பறவையாக அறிவித்தோம் என்று அறிஞர் அண்ணா
சொன்னதுதான் நினவுக்கு வருகிறது. கவிதையில் காக்காப்பிடிப்பதும் காக்கா வளர்ப்பதும்
எப்படி என்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இக்கவிதைகள் வழிகாட்டக்கூடும்.
மற்றபடி கபிலநிலா என்ற தலைப்பில்
பழனிபாரதி எழுதிய கவிதையை மட்டுமே நான் குறிப்பிட விரும்புவது.


ஆங்கிலக்கட்டுரைகள் மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளன. மேற்சொன்ன தமிழனின் தொல் சீரும் சிறப்பும்
குடத்தில் இட்ட விளக்காக இருப்பதற்கு இம்மாதிரியான அலட்சியப்போக்குத்தான் காரணம்.
மெதுவாக நமக்குள்ளெ நம்மொழியில் நம் பழம் பெருமைகளைப் பேசிப் பேசி கூடிக் கலைவது
இனி தமிழின் ஆக்கத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் எந்த வகையிலும் உதவிச்செய்யாது
என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் இன்று உலகத்தரம் வாய்ந்த புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிறுகதைகள்
குறித்தும், சரித்திர நாவல்கள் குறித்தும் எழுதிவிட்டு காலத்தின் தேவைக்கருதி எழுதப்படும் குறுநாவல்கள்,
நாவல்கள் குறித்து மலர் மவுனம் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

திராவிட இயக்க வரலாற்றில் 85 சிற்றிதழ்கள் நடத்தப்பட்டதாக அறிகிறேன். அந்த வரலாற்றைப்
பதிவுச் செய்யும் வாய்ப்பினை இம்மலர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

திராவிட இயக்கம் இலக்கியத்திற்கு என்ன செய்தது? என்ற கேள்வியை இன்றுவரை இலக்கிய
பிதாமகன்கள் கேட்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். திராவிட இயக்கம் தன் 50 ஆண்டுகால சிற்றிதழ்
மூலமும் நாடகங்கள் சினிமா வசனங்கள் மூலமும் என்ன செய்தது என்பதும்
கருத்தியல் தளத்தில் திராவிட இயக்கத்தின் தண்ணீர்ப் பாய்ந்துதான் எல்லா வயல்களும் விளைந்தது
என்பதையும் இம்மாதிரியான மலர்கள் கட்டாயம் பேசி இருக்க வேண்டும், என்பதையும்
இங்கே பதிவு செய்கிறேன்.
என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டும் பேசு, என்ன எழுதியிருக்க வேண்டும்
என்பதை நீ எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று யாராவது நினைத்தால்
அவர்களுக்கும் சரி, என் தமிழ்ச்சமூகத்திற்கும் சரி நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்
இதுதான். நான் தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கம். தமிழக அரசு நாளைய ஆவணமாக வெளியிடும்
பதிவுகளில் என் சமூகத்தைப் பற்றிய விட்டுப்போன நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும்
நினவூட்ட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை.
இன்னொரு முக்கியமான கசக்கின்ற உண்மை...
காக்கா பிடிப்பவர்களால் தமிழும் வளராது தமிழனும் வளரமாட்டான். திராவிட இயக்கத்திற்கு
அதுப் பெருமையும் சேர்க்காது, எங்களைப் போன்றவர்களின் குரல் கலகக்குரலாக
தனித்து ஒலித்தாலும் இந்த இயக்கத்தின் மீதும் தமிழ்ச்சமூகத்தின் மீதும் கொண்ட
அக்கறையின் காரணமாகவே எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் எதிர்நீச்சல் போடுகின்றொம்
என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

சிறப்பான சில பகுதிகள் விடுபட்டிருக்கலாம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்
முழுமையாக அனைத்தையும் பேசிவிட முடியாது என்பதைத் தவிர
வேறு எந்தக் காரணங்களும் கிடையாது.

இந்த மாநாட்டு மலரை முழுமையாக வாசிக்கவும் உங்களுடன் என் பார்வையப் பகிர்ந்து'
கொள்ளவும் வாய்ப்பளித்த எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளுக்கும்
இந்த மாலைப்பொழுதில் மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து
இந்நிகழ்வைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்
என் நன்றியும் வணக்கமும்.


(இடமும் பொழுதும்:
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் 19/9/2010 மாலை 7 மணியளவில் நடைபெற்ற
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆய்வரங்க நிகழ்வில்....)















.