Wednesday, April 30, 2014

ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளும் லூசிலி க்ளிஃப்டனும்











பெண்ணுடலை ஆணிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சம் எது?
இரு முலைகளா?
ஜீவன் ததும்பும் கருமுட்டைகளா?
இவற்றின் செயல்பாடுகள் மூலம் நிகழும் பூப்பு, மாதவிலக்கு, சூல், மகப்பேறு,
தாய் -சேய் உறவுகளா?
இவை மட்டும் தானா?
இவை குறித்தப் பதிவுகள் மனிதன் கல்லில் கிறுக்கத் தொடங்கிய நாள் முதல்
இன்றைய கணினி யுகம் வரை தொடர்கின்றன.

பெண்ணுடலை அவள் பாலியல் உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
அது பெண்ணிய படைப்பாகிவிடுமா?

அன்று முதலே பெண்ணுடல் குறித்தும் உறுப்புகளின் செயல்பாடுகள்
குறித்தும் பதிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஆணின் பார்வையில்
அவன் வாரிசுகளைப் பெற்றெடுக்கும் அன்னையாக , அவன் காமத்தை
நிறைவு செய்யும் உடலாக , அவன் தன் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள
உருவாக்கி இருக்கும் சமூகக் கோட்டைகளின் அறைகளாக, எப்போதாவது
அவனே உருவாக்கி வைத்திருக்கும் சாளரங்களின் வழி எட்டிப்பார்க்க
அனுமதிக்கப்பட்ட பச்சைக்கிளியாக...இப்படியாக ஆணின் பார்வையில் அவன்
சொல்லாடல்களில், தொன்மம், படிமம், குறியீடு, மொழி, இலக்கியம் , வரலாறுகளின் ஊடாக பெண்ணும் பெண்ணுடலும் பதிவு செய்யப்பட்டன.
ஆணின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும் எந்த ஒரு செயல்பாடும்
இழிவானதாகவும் செவ்வியலுக்கு அப்பாற்பட்டதாகவும் வரையறுக்கப்பட்டது.
இந்தப் பதிவுகளில் பெண்ணுடல் சார்ந்த அனுபவங்களின் மொழிக்கு இடமில்லை. ஆனால் பெண்கள் தங்கள் உணர்வுகளைத் தாங்களே
எழுத வந்தப் போது அவள் உடலும் அவள் உடல் சார்ந்த அவள்
அனுபவமும் பெண்ணிய எழுத்தின் முதல் நிலையாக இடம் பெற்றன.
பெண்ணுடலை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கும் சில சூட்சம
விதிகளை இந்த அனுபவங்கள் கேள்விக்குட்படுத்தி இருக்கின்றனவா? என்றால்
அப்படியான ஒரு கலகக்குரல் எழவில்லை எனலாம்.
பெண்ணுடல் சார்ந்த அனுபவங்கள் அவளுக்கே அவளுக்கான சுய அனுபவங்களையும் தாண்டி சமூகவெளியில் இரண்டாம் பால்நிலையை
கேள்விக்குட்படுத்தவோ மறுதலிக்கவோ இல்லை.

எனக்கு முகம் இல்லை 
இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை
ஆண்களின் பார்வையில் இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல், சிறிய இடை,பருத்ததொடை
கதைக்கு அவர்கள் எப்போதும் எனது உடலையே
நோக்குவர் கணவன் தொடக்கம் கடைக்காரன்வரைக்கும்
இதுவே வழக்கம்.
                (அ,சங்கரி, சொல்லாத சேதிகள் பக் 9, 10)

என்று சமூகத்தில் ஆணின் பார்வையில் பெண்ணுடல் ஆத்மா இல்லாமல் வெறும் உறுப்புகளுடன் அலையும் ஆணின் நுகர்ப்பொருளாக இருப்பதை சங்கரி தன் கவிதைகளில் பதிவு செய்தார்.

யூதர் சமூகத்தில் பெண்ணின் மாதவிலக்கை தீட்டாக எண்ணி
அவளை விலக்கி வைத்து தனித்து வைத்திருப்பார்கள். இப்பழக்கமே
இந்திய சமூகத்திலும் இருக்கிறது.

"பெண்ணே உனக்கென்று
தனியிடம் உருவானது இங்கே
நீ புதிதாய் வயதிற்கு வந்ததற்கு
அல்லது
குழந்தை பெற்றதற்கு
.......
என்று பெண் , இயற்கையான கரு உற்பத்தியின் செயல்பாடுகளால்
விலக்கி வைக்கப்படுகிறாள். அந்த நாட்களில் அவள் சிரிப்பது கூட
மிகவும் போலியான விளம்பரங்களாக இருக்கிறது

விளம்பரத்திற்காய்  stayfree யுடன்
நடக்கும் சிரிக்கும் இளம்பெண்

என்று எழுதினார் கவிஞர் சுகந்தி சுப்பிரமணியம். (புதையுண்ட வாழ்வு)

ஈரப்பிசுப்போடு ஒரு நிமிடம்
உட்கார்ந்து இருப்பீர்களா
ரத்தப் பெருக்கோடும்
உறங்க வேண்டியிருக்கு
......
தொடாதே தள்ளிநில்
என்கிறாள் அம்மாவும்
எறும்புக்கும் நாய்க்கும்
எப்படியோ இந்த அவஸ்தை?

என்று தன் அவஸ்தையை மட்டுமே பதிவு செய்திருக்கும் அ.வெண்ணிலா (அ.வெண்ணிலா கவிதைகள். பக் 74)
மற்றும், இந்த உடற்கூறு பெண்ணுக்கு இயற்கை விதித்திருக்கும்
சாபமாகவே பார்க்கிறது சல்மாவின் மனமும்.

உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
       (சல்மா, ஒரு மாலையும் இன்னொரு மாலையும் பக்74)

மேற்கண்ட கவிதைகள் அனைத்தும் பெண்ணுடலின் இயற்கையான
மாதவிலக்கை ஓர் அவஸ்தையாக வேதனையான அனுபவமாக
பதிவு செய்வதுடன் நின்றுவிட்டன.  மாதவிலக்கின் இரத்தப்போக்கை "இரத்த உறவுகள்" என்ற பார்வையில் நான் எழுதியிருந்த கவிதையும் என் நினைவுக்கு வருகிறது.

அடிபட்டபோது வலிக்கவில்லை
பொங்கிவந்த ரத்தம்
கட்டுகளை உடைத்துக் கசிந்து உடைந்ததில்
வலித்தது.
கட்டுகளின் அடியில்
கீறிப் பிளக்கும் காயம்.

மீண்டும் ஒரு நாள்
காயம் இன்றியே
சொட்டுச் சொட்டாக
ரத்தம்
தசைத்துணி பிழிந்து
சிந்தியது தரையில், சோபாவில்,
பள்ளிக்கூடத்து பெஞ்சில்
பார்க்கில் தியேட்டரில்

எங்கிருந்து 
பொங்கித்துடித்துச் சிதறி வழிகிறது
ரத்தம்?
என் சிறகுகள் அறுத்து
என் கால்களின் ஓடையில்
என் கைகளுக்கு விலங்காய்.
என் பிறப்பின் காயத்திலிருந்து
கசிகின்றதா? எங்கிருந்து?

ரத்தம்... ரத்தம் உறவாமே
உறவுகளின் கதவு
பூட்டாத சிறை
வாசலில்லாத வீடு
சிவப்பு ரத்தம் வெள்ளை ரத்தமாகி
வீங்கிப் பெருத்த முலையிலிருந்து
படைப்பின் சிருஷ்டியாய்.
(புதியமாதவி, நிழல்களைத் தேடி)

மாதவிலக்கு ஆண் பெண் உறவு, பாலூட்டும் பெண்
என்று படைப்பின் அடையாளமாய் கண்ட உணர்வுநிலையைத் தாண்டவில்லை என் கவிதையும்!

ஆனால் பெண்ணிய தளத்தில் இந்தப் படிகளைத் தாண்டி பெண்ணுடலை அவள் மாதவிலக்கை கொண்டாடுவதில் தனித்து நிற்கிறார்கள் இருவர்.
ஒருவர் என் இனிய தோழி கவிஞர் ஆழியாள்.
இன்னொருவர் நான் கொண்டாடும் கவிஞர் லூசிலி க்ளிஃப்டன். லூசிலி ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கவிஞர். (ஜூன் 27, 1936 - பிப் 13, 2010)




லூசிலி கவிதையில் பெண்ணுடலின் மாதவிடாயைக் கொண்டாடுகிறார்.

ரத்தச்சிவப்புடன் பிரகாசமாய் நிலவுத்துண்டாய்
பாயும் நதி
இதைவிட அழகான நதி வேறு இருக்கிறதா?

ஒவ்வொரு மாதமும் 
தவறாமல்
இதே ஆற்றுப்படுகையில் பாயும் நதி
இதை விட கடமை தவறாத நதி வேறு இருக்கிறதா?

பேரார்வத்துடனும் எழுச்சியுடனும் 
வலியுடனும் 
வருகிறது வருகிறது இந்த நதி.
இதைவிட தீரமிக்க நதி இருக்கிறதா?

ஏவாளின் மகளாக
கெய்ன் ஏபளின் தாயாக **
தொன்மையான நதி
இதைவிட வேறு நதி இருக்கிறதா?

பயங்கரமான நதியின் பிரவாகம்
இந்தப் பிரபஞ்சத்தில்
'இதைவிட சக்திமிக்க தண்ணீர் 
எந்த நதியிலும் இருக்கிறதா?

இந்த நதி அழகானது
நன்றியுள்ளது
பழமையானது பெண்மையானது
தீரமிக்கது
வணங்குகிறேன் இந்த நதியை - இது 
விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும்.

என்று முடிகிறது லூசிலியின் கவிதை.

(** கெய்ன், ஏபல் இருவரும் ஆதாம் ஏவாளின் மகன்கள்)

எறும்புக்கும்  நாய்க்கும் எப்படியோ இந்த அவஸ்தை?
என்று கேள்வி கேட்ட பெண்ணிய தளத்தை தாண்டி
இந்த நதி விலங்குகளின் ஊடாகவும் பாயட்டும் என்று
வேண்டுகின்ற பெண் உள்ளத்தைப் பார்க்கிறோம்.
ஏனேனில் இந்த நதியை பிரபஞ்சத்தின் ஜீவநதியாய்
கொண்டாடுகிறது பெண்ணுடல்.

இதே பாதையில் ஆழியாளின் கவிதைகளும் தமிழ்
இலக்கிய வட்டத்தில் இக்கருப்பொருள் குறித்து இதுவரை எழுதப்பட்ட கவிதைகள் தொடாத உச்சத்தை
தொட்டிருக்கின்றன. அண்மையில் (டிசம் 2013)ல்
வெளிவந்திருக்கும் கருநாவு தொகுதியிலிருந்து
இக்கவிதை.


(கருநாவு புத்தகவெளியீடு : சுகிர்தராணி, ஆழியாள், றஞ்சி & தெ.மதுசூதனன்)


ஃப்ரண்ட் வந்திட்டா என்பது தான் கவிதையின் தலைப்பே. மாதவிடாயை தன் தோழமை உறவாகக் கொண்டாடும் பெண்ணுடல்.

மிளகும் கிராம்பும் கூடின
கவிச்சை வயற்காடாய்
என்னைக் கமிழ்ந்தெழச் செய்த வண்ணம்
வருகிறாய் நீ மாதந்தோறும்.

மார்பு இரண்டின் கனம் ஏற
அடிவயிறு அலைந்துளைகிறது.
துளித்துளியஅய்ப்
பரவும் ஈரலிப்பின் வெதுவெதுப்பில்
நகக்கண்கள் இருபதும் பளபளக்கின்றன.
இடுப்போ இளகிக் கிடக்கிறது

கவிதையின் இவ்வரிகள் மாதவிடாய் காலத்து உடல்
மாற்றங்களை எல்லா கவிஞர்களையும் போலவே
சொல்கிறது. அடுத்த வரிகளில் தோழமைப் புகுந்து
கதைகள் பேச ஆரம்பிக்கிறது.
வந்திருப்பவள் வேறு யாருமல்ல, பெண்ணின் இணைப்பிரியாத தோழியாம்.

"உடன் பகிர 
இருபத்தியெட்டு நெடுநாட் கதைகள் உண்டு
(இருப்பதோ மூன்றே நாள்)
சொல்லி முடிப்பதற்குள் 
நெஞ்சு வெம்பித் தொண்டையும் கம்முகிறது
தொடர்ச்சியாய் என்னுள் எழும் வட்ட
வட்டக் கோபத்தை
ஏனேன்றே தெரியாத எதற்கோவான சலிப்பை
தூக்கிப் போட்டு உடைக்கிறேன்
சலீர் சலீரென அவை சிதறி நம்முன்
கிடக்கின்றன.

இந்த வரிகளில் தோழமையுடன் சேர்ந்து மாதவிடாய் காலத்து பெண்ணின் மனநிலையில் ஏற்படும் சலிப்பும் கோபமும் தோழியிடம் பகிர்ந்து கொள்ளும் கற்பனையாய் விரிகிறது.

"கதவடியில் அண்ணர் முறைத்துக் கொண்டு
நிற்கிறதையிட்டு நமக்கென்ன கவலை?
இப்போது நம்
குதித்தாடும் அசைவுகளொடான உடலின்
கூத்தாட்டம் தொடங்கிவிட்டது.
சிரிப்பும் எம்மை அப்பிக் கொண்டாயிற்று.

எம் சிரிப்பின் களி கூடக் கூட
முழுதாய் ஜொலித்துப் பெருவெளியில்
பிரகாசிக்கிறது சந்திரன்.
இதோ கால்களுகிடையே
சந்தோஷத்தின் புதிர்பாதைகளெல்லாம்
மடைதிறக்க
ஒரே அள்ளாய் அள்ளுப்பட்டுப் போகிறது
ஒரு துண்டுச் செங்கபிலப் பசுமை.

இந்நாளில் எந்நாட்களிலுமற்ற நிம்மதியுடன்
கழிமுகத்து வண்டற் படிவாய் - உன்
அடிவயிறு கட்டி உறங்குகிறேன் வெது
வெதுப்பாய் -அது
பிறப்புக்கு முன்னதாயும் சாவை மிக
அண்மித்ததாயும் இருந்தது.

என்று முடியும் இக்கவிதையின் கடைசி இரு வரிகள்
தத்துவார்தமானவை. ஒவ்வொரு மாதமும் பெண்ணுடல்
மாதவிடாய் ஊடாக கருமுட்டையின் பிறப்பையும் இறப்பையும் தொடர்ந்து நடத்தும் களமாக இருக்கிறது.
பிறப்பும் இறப்புமே உயிரியக்கத்தின் அடையாளம்.
பிறப்பும் இறப்பும் ஆக்கலும் அழித்தலுமான பிரம்மனும்
சிவனுமாய் இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களாய்
இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்த இயக்கதைப் பெண்ணுடலில் அதுவும் பெண்ணுடலை தீண்டாமைக்குட்படுத்திய மாதவிலக்கின் அடையாளத்தில் இருத்திக் கொண்டாடுவது என்பது
பெண்ணுடலைக் கொண்டாடும் பெண்ணியத்தின் உச்சம்.
ஆழியாள் பெண்ணிய தளத்தில் தனித்து நிற்கும் தளம் இது. 

உரத்துப் பேச கவிதை தொகுப்பில் ஆழியாள் ஒரு கவிதையில் சொல்லியிருப்பார், பெண் என்ற அடையாளத்தை உணரும் போதெல்லாம் ஏற்படும் வலியை. அதன் ரத்த வடுக்கள் வெடித்து சிதறி கிரகங்களாக உருபெறும். அப்போது உயிர்பெறும் என்மொழி, என் ஆதித்தாயின் பெண்மொழி என்பார்.
பெண்ணுடலைக் கொண்டாடிய ஆதித்தாயின் பெண்மொழியாய் ஆழியாளின் இக்கவிதை

Tuesday, April 29, 2014

தொட்டிச்செடி






வீடுகளை விட்டு வெளியில் வந்தாக வேண்டும்
அலங்கார வளைவுகளுடன்
எப்போதும் பளிச்சென இருக்கும்
வீடுகளின் அடையாளங்களைத் தொலைத்து
வெளியில் வந்தாக வேண்டும்.


குளிரூட்டப்பட்ட அறைகள்
மெத்தென்ற படுக்கை
தரை எங்கும் காஷ்மீரின் கார்பெட் விரிப்பு
சுவர்களில் தொங்கும் பெருமுலைக்காரிகள்
கண்ணாடியில் நிர்வாணத்தை ரசிக்கும் குளியலறை
இந்த அலங்காரங்கள் களையாத 
வீட்டின் கதவுகளைத் தாண்டி
வந்தாக வேண்டும்.
ஒப்பனைகளைக் கழற்றிவைத்துவிட்டு
நானும் என் கவிதையும்.


வனங்களை எரித்து மாளிகைக் கட்டியவர்கள்
எப்போதும் அறிந்ததில்லை
அவர்கள் இல்லங்களை அலங்கரிக்கும்
தொட்டிச்செடிகளின்  துயரங்களை.
கொஞ்சம் கொஞ்சமாக பச்சையம் இழந்து
செத்துக் கொண்டிருக்கின்றன
தொட்டிச்செடியின் இலைகள்
என்னைப் போலவே.


Saturday, April 19, 2014

மோதியின் வெற்றியில் ராகுலின் எதிர்காலம்?


தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்து நானும் என் மும்பை முனியம்மாவும்
பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எந்த ஓர் ஊடகமும் சொல்லாத
ஒரு கருத்தை என் முனியம்மா சொன்னாள் பாருங்கள்,


மோதி வெற்றி பெறுவாரா?
மோதி அலை வீசுகிறதா?
மோதி பிரதமரானால்..
விலைவாசி குறைந்துவிடும்,
வேலை வாய்ப்புகள் பெருகிவிடும்
தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
நமக்கெல்லாம் பவர்கட் கிடையாது.
ரூபாயின் மதிப்பு கூடும்.
மொத்தத்தில் இந்தியா ஒளிரும்...

இப்படி எல்லாம்  நடக்குமா என்று கேட்டேன்.
அவள் சொன்னாள்...

இதெல்லாம் நடக்குமா எனக்குத் தெரியாதும்மா...ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

மோதி ஜெயிச்சா தான் ராகுல்காந்திக்கும் காங்கிரசுக்கும்
எதிர்காலம் இருக்கு! .

இல்லாட்டி, பாவம் அந்தப் புள்ள.. எப்படி அரசியல் பண்ணும் சொல்லுங்க,

இந்த மோதியும் சொல்றதெல்லாம் உண்மையா பொய்யானு
தெரிஞ்சுடும்ல,
அவரு பிரதமரானா அவரு சாயம் வெளுத்துப்போகும்
இல்லாட்டி இப்படித்தான் மோதி மோதி னு டிவியிலே ஒரே கூப்பாடா
இருக்கும்.

"நீ யாரு வரனும்ங்க, மோதியா காங்கிரசா ?"

"நீங்க சொல்லுங்க, உங்களுக்கு யாரு வரணும்?"

" எனக்கு ரெண்டு பேரும் வரக்கூடாது.."

"இதே பொழைப்பா போச்சும்மா உங்களுக்கு,
நடக்கிற காரியத்தைப் பத்தி எப்பவும் பேச மாட்டீங்க!'

முனியம்மா அலுத்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரை நான் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதவை
என்ற எண்ணம்.
வர வர எனக்கும் அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது!
என்ன செய்வது, சொல்லுங்கள்!


Tuesday, April 15, 2014

காஞ்சி காமாட்சியும் ஜசோதா பென் நரேந்திர மோதியும்





காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 14-ம் தேதி உலக நன்மை வேண்டி தச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பராசக்தி 10தேவியரின் உருவங்களில்

தரிசனம் தந்திருக்கிறாளாம்.

 மாதங்கி, புவனேஸ்வரி, பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சின்னமஸ்தா, தூமாவதி, பைரவி  என்பது தான் அந்த 10 தேவியரின் திருநாமங்கள்.இவர்களுக்கான சிறப்பு வழிபாடுதான் தச மஹா வித்யா ஹோமம்.


இந்தப் பத்து தேவியரும் சேர்ந்து ஜசோதா பென் நரேந்திர மோதிக்கு
தங்கள் ஆசிர்வாதத்துடன் ஒரு புடவையை அனுப்பி வைத்துவிட்டார்கள்.
யாகம் முடிந்தப் பி ன் அந்தப் புடவையை எடுத்துக் கொண்டு பிரதான அட்சகர்
நடராஜ சாஸ்திரி மார்ச் 26ல் டில்லி போய் நரேந்திர மோதியை சந்தித்து
பிரசாதம் கொடுத்து அப்படியே அம்மன் அனுப்பிய புடவையையும்
கொடுத்து உங்கள் மனைவியிடம் கொடுங்கள் என்று சொல்லிவிட்டாராம்!
நம் மோதி அவர்கள் தேவி பக்தராமே! சாஸ்திரி சொன்னதை அப்படியே
செய்திருப்பார்... அதன் பிறகு தான் நரேந்திர மோதிக்கு மனமாற்றம் ஏற்பட்டு
தன் தேர்தல் விண்ணப்ப படிவத்தில் மனைவியின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்கிறார் சாஸ்திரி.

உண்மை இப்படி தச மஹா வித்யா அவதாரமாக இருக்க
நம்   அம் ஆத்மி ஆட்கள்
அவர்களின் மிரட்டலுக்குப் பய்ந்து போய்த்தான் மோதி தன் மனைவியின்
பெயரைக் குறிப்பிட்டார் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள்.
சரி அவர்களை விடுங்கள், நான் கூட என்னவோ என் வலைத்தளத்தில்
எழுதியதால் தான் மோதி உண்மையை ஒத்துக் கொண்டிருக்கிறார்
என்று இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு இருந்தேன். எல்லாம் போச்சு..
(http://puthiyamaadhavi.blogspot.in/2013/12/blog-post.html)


எப்படியோ... சகோதரி ஜசோதா பென் அவர்களுக்கு நல்லதாக ஒரு புடவை
கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷமாக இருக்கிறது.

(செய்தி ஆதாரம் :தமிழ் ஒன் இண்டியா டாட் காம்)

Sunday, April 13, 2014

காந்தி , மகாத்மா அல்ல, ஓர் அரசியல்வாதி..






ஏப்ரல் 14. புரட்சியாளர் அம்பேத்கரின் 124 வது பிறந்தநாள்.

அம்பேத்கர் வெறும் பெயரல்ல;

கங்கையின் புனிதம் இந்த மகாநதியின் முன்னால் மண்டியிட்டது

கற்பனை அல்ல. நிஜம். கற்பனைகளை மட்டுமே நினைவில்  வைத்திருக்கும்

சமூகத்திற்கு நிஜங்களை அடிக்கடி நினைவூட்ட வேண்டி இருக்கிறது.

இந்த நாளில், அண்ணல் அம்பேத்கர் பி பி சி க்கு 1955ல்  கொடுத்த

நேர்காணலின் தொகுப்பிலிருந்து சில பகுதிகளை...  



நான் எப்போதும் சொல்வேன், காந்தியை நான் சந்திக்கும் போதெல்லாம்
ஒரு எதிரி நிலையில் தான் எங்கள் சந்திப்பு. மற்றவர்களை விட காந்தியை நான் நன்றாக அறிவேன். ஏனேனில் என்னிடம் தான் காந்தி என்ற மனிதன்
தனக்குள் புதைந்திருக்கும் கோர முகத்தைக் காட்டினார்.
தொண்டர்களாக காந்தியை அணுகியவர்களுக்கு அவரைப் பற்றி எதுவும்
அறிந்திருக்கவில்லை. மகாத்மா என்ற பொய்த்தோற்றத்தை மட்டும் பார்த்தவர்கள் அவர்கள்.

எனக்கு வியப்பாக இருக்கிறது, வெளிநாடுகளில், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் காந்தியைப் பார்க்கும் விதம். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, என் பார்வையில்
காந்தி இந்திய வரலாற்றின் ஒரு அத்தியாயம், அவ்வளவு தான்.
அவர் ஒரு சகாப்தம் அல்ல. காந்தி ஏற்கனவே மக்கள் நினைவிலிருந்து
மறைந்து கொண்டிருக்கிறார். காங்கிரசு கட்சி அவர் பிறந்தநாளுக்கோ
அவர் சம்பந்தப்பட்ட பிற நிகழ்வுக்கோ கொடுக்கும் விடுமுறை காரணமாகத்தான் அவர் நினைவு கூரப்படுகிறார். இவை இல்லை என்றால்
அவர் எப்போதோ மக்கள் நினைவிலிருந்து மறைந்திருப்பார்!

காந்தி எந்த அடிப்படை மாற்றங்களையும் செய்தவரில்லை. அவர் ஒரு
இரட்டை வேடதாரி. இரு மொழிகளில் அவர்  எழுதினார். ஹரிஜன் பத்திரிகையில் ஆங்கிலத்திலும் தீன் பந்து பத்திரிகையில் குஜராத்தியிலும்.
ஆங்கிலப் பத்திரிகையில் சாதிக்கு எதிராக தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக
எழுதிய சமதர்மவாதி. குஜராத்தி பத்திரிகையில் அவர் ஒரு ஆசாரபுருஷர்.
சாதியை, வர்ணாசிரமத்தை ஆதரிப்பவர். யாராவது அவர் இரண்டு மொழிகளிலும் எழுதியிருப்பதை ஒப்பாய்வு செய்ய வேண்டும்! ஆனால்
மேற்கத்திய நாடுகளின் மக்கள் அவர் ஆங்கிலத்தில் எழுதியதை மட்டுமே
அறிவார்கள். குஜராத்தியில் எழுதியதை எவரும் கண்டு கொள்ளவில்லை.
அவருடைய வாழ்க்கை குறிப்புகள் அவர் ஆங்கிலத்தில்
ஹரிஜன், யங் இந்தியா பத்திரிகைகளில் எழுதியதன் அடிப்படையில் வந்தவைத்தான்.

காந்தி ஒரு சீர்திருத்தவாதி அல்ல. அவர் ஒரு சானாதன இந்து.
அவர் தீண்டாமைப் பற்றி பேசியதெல்லாம் தீண்டத்தகாத மக்கள் காங்கிரசில்
இருக்க வேண்டும் என்பதால் தான். அவருடைய சுயராஜ்ய இயக்கத்தை க தீண்டத்தகாத மக்கள் எதிர்க்க கூடாது என்பதால் தான். அவர்களை முன்னேற்றும் எந்த நோக்கமும் அவருக்கு கிடையாது. நீக்ரோக்களுக்காக
அமெரிக்காவில் போராடிய கர்ரிசன் (வில்லியம் கர்ரிசன்) போன்றவர் அல்ல
காந்தி.


காந்தி இல்லை என்றாலும் இந்தியாவுக்கு அரசியல் விடுதலை கிடைத்திருக்கும், சற்று தாமதமாக. அதுவும் மக்களுக்கு நன்மையாகவே முடிந்திருக்கும். . அரசியல் அதிகாரம் பிரிட்டனிடமிருந்து கைமாறும் போது
அதற்கான தகுதியுடன் இந்திய மக்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது
ஒரு வெள்ளத்தைப் போல வந்தது.(விடுதலை). மக்கள் அதற்குத் தயாராக இல்லை. நான் நினைக்கிறேன், இங்கிலாந்தின் லேபர் கட்சி ஒரு முட்டாள் கட்சி என்று.

(புனா ஒப்பந்தம் குறித்துப் பேசும்போது...)

காந்தி பேசினார், பேரம் பேசினார். நான் அவரிடம் நீங்கள் கடுமையான நிபந்தனைகளை விதிக்காவிட்டால், 'நான் உங்கள் உயிரைக் காப்பாற்ற .
தயாராக இருக்கிறேன். என் மக்களைப் பலி கொண்டு உங்கள் உயிரை நான்
காப்பாற்ற போவதில்லை. உங்கள் விருப்பத்திற்காக, (பைத்தியக்காரத்தனத்திற்காக) நான் என் மக்களின் நலனைத் தியாகம் செய்யப்போவதில்லை. ஒரு பொதுவான தேர்தல் எப்படி ஒரு சமூக நிலையை மாற்றும்? அது நடக்காது.

சீக்கியர்களைப் போல இசுலாமியர்களைப் போல தாழ்த்தப்பட்ட மக்களும்
தனிப்பிரிவாக மாறிவிடுவார்களோ என்று அவர் அச்சப்பட்டார். இந்த எண்ணம் தான் அவர் உள்ளத்தில் இருந்தது. அவர் ஓர் அரசியல்வாதி, மகாத்மா அல்ல.
நான் அவர் மகாத்மா என்பதை மறுக்கிறேன். அவரை மகாத்மா என்று நான்
அழைத்ததே இல்லை. நியாயப்படி பார்த்தால் 'மகாத்மா' என்ற அழைக்க
அவருக்கு எந்த தகுதியும் இல்லை.





the Interview can be heard at http://www.youtube.com/watch?v=ZJs-BJoSzbo

Thursday, April 3, 2014

சிரியா பெண்கவிஞர் மரம் அல்-மஷ்ரி கவிதை





சிரியாவின் சிறைக்கூடத்தில்
பிறந்த மகன்
கற்பழிக்கப்பட்ட தன் தாயிடம்
கேட்கிறான்
"அம்மா, ஒரு கதை சொல்லு'

(அவள் சொல்ல ஆரம்பிக்கிறாள்)
ஒரு விருந்தினர்...(சரி வேண்டாம்)
முன்பொரு காலத்தில்
ஒரே ஒரு ஊர்ல ஒரு குட்டிப்பையனும் அவன் அம்மாவும்.
அவர்கள் வீட்டில் ஒரு சன்னல்.
அவர்கள் இருவரும் அமைதியாக
அந்தச் சாலையைப் 
பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!"

பையன் குறுக்கிட்டான்.
"அம்மா, அது என்ன சன்னல்?'
- சன்னல் என்பது சுவரில் ஒரு சின்ன திறப்பு.
அது வழியாக சூரிய வெளிச்சம் வரும்
அந்தச் சன்னல் கம்பிகளில்
பறவைகள் கூட உட்காரும்!"

பையன் மீண்டும் குறுக்கிட்டான்.
'அம்மா, அது என்ன பறவைகள்?"
கதை சொன்ன அம்மா இப்போது
கைகளில் பென்சிலை எடுத்தாள்
சுவரில் ஒரு சன்னலையும் குட்டிப்பையனையும்
வரைந்தாள்.
குட்டிப்பையனுக்கு இரு சிறகுகளுடன்.


Tuesday, April 1, 2014

சல்மாவின் ஆவணப்படம்






சல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்.
sparrow வின் அம்பை என்ற லஷ்மி நான் மதிக்கும் , பெருமை கொள்ளும் ஒரு எழுத்தாளர்,  இனிய தோழி, வழிகாட்டி.சில்வர் ஜூப்ளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது
sparrow. ஒவ்வொரு மாதமும் கலை இலக்கிய சமூக தளத்தில் தொடர்ந்து
செயல்பட்டுக் கொண்டிருக்கும்  பெண்களுடன் நடத்தும் உரையாடல் நிகழ்வு
கடைசி சனி/ஞாயிற்றுக்கிழமையில்  நடக்கிறது. அம்பையின் இந்த முயற்சி போற்றுதலுக்குரியது.

கடந்த சனிக்கிழமை, 29/3/14ல் அந்தேரி (மேற்கு)
நான் நிகழ்வுக்குப் போவதற்கு சிறிது  தாமதமாகிவிட்டது. சல்மாவின்
ஆவணப்படம் ஆரம்பித்து ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான் ஆரம்பித்தது என்றார்கள். படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதமாக இருக்கிறது.
சேனல் 4ன் நிதி உதவியுடன் இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படம் பார்த்தப் பின் சில கேள்விகள் எழுகின்றன.

1)ராசாத்தி சல்மாவைப் பற்றி டில்லி சென்றிருந்தப் போது யாரோ சொல்ல
இவரும் இருக்க அந்த அறிமுகத்தில் இந்தப் படம் எடுத்தவர்
இவர் வீட்டுக்கே வந்து இவர்களுடன் 3 மாதங்கள் தங்கி இருந்ததாகச்
சொல்கிறார்.. அவர் சொல்லும் தகவல்கள் அனைத்தையும் நாம் நம்பத்தான் வேண்டும். சல்மா ரொம்பவும் பிரபலமானவர் என்பதால்.

2) எப்போது வேண்டுமானாலும் தன் கணவர் தன் முகத்தில் ஆசிட் வீசிவிடலாம் என்ற அச்சத்தில் தன் குழந்தையை முகத்தோடு அணைத்துக் கொண்டே  தூங்கியதாகச் சொல்கிறார் சல்மா.
அதே கணவருடன் இன்று வரை தொடர்கிறது அவர் வாழ்க்கை???
இதைக் கேள்விக்குட்படுத்துவது அவருடைய தனிப்பட்ட வாழ்வை கேள்விக்குட்படுத்தியதாக என்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடும்
என்பதை நானறிவேன். என்றைக்கு இதை எல்லாம் அவர் படம் எடுத்து
ஊர் ஊராக தேசம் தேசமாகச் சென்று காட்ட ஆரம்பித்துவிட்டாரோ அன்றைக்கு இது அவர் சார்ந்த தனிமனித விஷயம் என்பதைத் தாண்டி விடுகிறது. இவ்வளவும் அவர் கணவரைப் பற்றிய உண்மைகளாக கூட இருக்கலாம்.
ஆனால் என் இனிய சகோதரி சல்மா அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இப்படி எல்லாம் அவரைப் பற்றி நீங்கள் வெளி உலகத்திற்குக் காட்டியப்பின்னரும் அவர் உங்களுடன் வாழ்கிறார். வாழ அனுமதித்திருக்கிறது உங்கள் சாதியும் மதமும் உங்கள் குடும்பமும்
அவர் குடும்பமும். உங்களுக்குத் தெரியுமா சல்மா... எங்கள் சாதியில்
எங்கள் குடும்பத்தில் எங்கள் வீட்டில் மட்டுமல்ல, எந்தச் சாதியிலும் எந்தக் குடும்பத்திலும் எந்த வீட்டிலும் இம்மாதிரி வெளிப்படையாக பேசப்பட்டு விட்டால் அவள் வாழ்வது சாத்தியமில்லை! உங்களுக்கு அபரிதமான
சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை.
.

3) பெண் வீட்டில் அடைப்பட்டிருப்பது என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,
இந்திய தேசத்தில் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதையே
உங்கள் ஆவணப்படத்தில் " சல்மா சிறைவைக்கப்பட்டிருந்ததாக, பூட்டி
வைக்கப்பட்டிருந்ததாக, அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக..." சொல்லப்படும் வாசகம் 

ஒரு இருண்ட அறையின் பின்புலக் காட்சியில்

FROM THE AGE OF 13 HER FAMILY KEPT HER LOCKED UP IN THIS ROOM,

அதன் பின் சல்மா ஜன்னலருகில் வந்து நிற்பார்.


THAT WAS THE ONLY WINDOW OUTSIDE WORLD

உண்மையில் சல்மாவை இந்த அறையில் அவர்கள் குடும்பம் பூட்டி
வைத்திருந்ததா அல்லது வயதுக்கு வந்தப் பின் பெண்கள் வீட்டுக்குள்
மட்டுமே அடைபட்டிருக்கும் நிலையை இப்படி சொல்லுகின்றார்களா?
சல்மா...

நீங்கள் இந்த ஆவணப்படத்தைச் சுமந்து கொண்டு பயணிக்கும் தேசங்கள் எங்கும் எம்மாதிரியான அர்த்தத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை அறிவீர்கள் தானே? 

4) இந்தியா ஆப்கானிஸ்தான் அல்ல, அரபு நாடும் அல்ல.
நம் சல்மா அவர்கள் "மலாலா " அல்ல. ஆனால் இந்த ஆவணப்படம்
ஏதோ ஒரு வகையில் இந்திய இசுலாமிய சமூகத்தை சரியாகப் புரிந்து
கொள்ளாதவர்கள் மத்தியில் இசுலாமிய குடும்பங்களில் பெண்கள்
அறையில் பூட்டி வைக்கபப்டிருந்தார்கள் என்ற பிம்பத்தைக் கொடுக்கிறது. 
தவறுதலாக. 


5) இசுலாமியப் பெண்களின் திருமணச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்கிறார் சல்மா. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல் வாதியும் கூட.
திமுக வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தோ பெண்களுக்கான
இடம் குறித்தோ திமுக சல்மா எதுவும் வாய்திறப்பதில்லை.
அப்படியே அவர் பேசினாலும் அது திமுக வின் தலைவருக்கும் தளபதிக்குமான துதிப்பாடலாக இருக்கிறது.

6) சல்மாவின் கவிதைகளை அவர் மகன்கள் கேட்பதில்லை,என்கிறது ஆவணப்படம்.
ஆமாம் எந்தப் பெண் எழுத்தாளரின் எழுத்துகளை அவர்களின் பிள்ளைகள்
கொண்டாடுகிறாரார்களாம்?

7) சல்மா தன் தோழியிடம் பேசும் காட்சி வரும். அக்காட்சியில் சல்மா
புர்கா அணிந்து முகம் மறைத்து அடுப்பறையில் நின்று கொண்டு  பேசுவார். அந்தப் பெண்ணோ புடவையில் எல்லோரையும் போல.
முகத்திலிருந்து திரை விலகாமல் அடுக்களையில் தன் பால்யகால
சிநேகிதியுடன் பேசும் காட்சியில் என்ன சொல்ல வருகிறார்கள்?



8)இசுலாமிய மதம் பெண்களுக்கு எந்த உரிமைகளையும் கொடுக்கவில்லை
என்ற ஒரு பொதுக்கருத்தை தனக்குச் சாதகமாக
மிக புத்திசாலித்தனமாக இந்த ஆவணப்படம் கையாண்டிருக்கிறது.
அதே மதத்தைச் சார்ந்த சல்மாவை வைத்து.


9) பிரபலமானதும் அரசியல் அதிகார வட்டத்திற்குள் வந்தப் பின்னரும்
கணவர், குடும்பம் பற்றிய சல்மாவின் விமர்சனங்களை சம்மந்தப்பட்ட அவர்கள்  ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் சல்மாவுக்கு
நாம் உண்மையிலேயே பாராட்டு சொல்லத்தான் வேண்டும்.