Thursday, April 26, 2012

ஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும்





ஆவணப்படங்கள் வரிசையில் தனக்கென தனி இடத்தை ஜெய்பீம் காம்ரேட் ஆவணப்படம் மூலம் மீண்டும் நிரூபித்து இருக்கிறார் ஆனந்த் பட்வர்த்தன். அவருடைய ஆவணப்படங்கள் அனைத்துமே சமூகப்பிரச்சனைகளை அதுவும் சமகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது என்பது தனிச்சிறப்பு. (பார்க்க: அவருடைய ஆவணப்படங்களின் பட்டியலை)

தணிக்கைகள், மத நிறுவனங்கள், அரசு இந்த மூன்றும் பிரிக்க முடியாத கண்ணிகள். ஒழுக்கத்தின் பெயராலும் பண்பாடு கலாச்சாரத்தின் பெயராலும் மத நிறுவனங்கள் தூக்கிப் பிடிக்கும் பதாகைகளை எப்போதும் தணிக்கை வழி காப்பாற்றுவதில் அரசே கவனமாக இருக்கிறது. அரசியல், பாலுறவு, வன்முறை என்ற வட்டத்தில் தணிக்கை இருந்தாலும் பாலுறவு, வன்முறை ஆகியவற்றில் காட்டும் தளர்வை அரசியல் சார்ந்த பாலுறவு, வனுமுறைக் காட்சிகளை எப்போதும் தடை செய்வதில் தணிக்கைக்குழுக்கள் மிகவும் கவனமாக இருக்கின்றன.

பாலுறவு வன்முறை சார்ந்த திரைப்படங்கள் தமிழிலும் எத்தனையோ வந்தாகிவிட்டது. ஆனால் அதே அந்த பாலுறவு/வன்முறை சமகால அரசியல் சார்ந்ததாக இருப்பதை தணிக்கையின் கரங்களால் ஆரம்பத்திலேயே அரசுகள் வெட்டி எறிவதில் கவனமாக இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

தான் வாழும் காலத்தில் தன் கண்முன்னால நிகழும் பாசிசம், மதவெறுப்பு, இனவெறுப்பு, சாதியம், பெண் இழிவு என்று தொடரும் நிகழ்வுகளை வெறும் சாட்சியாக மட்டுமே இருந்து பார்த்துக் கொண்டிருக்காமல் அப்படியே ஆவணப்படுத்தும் போது ஆவணப்படுத்தும் அக்கலைஞன் சந்திக்கும் தடைகளும் போராட்டங்களும் பெருங்கதை. புனுவல், ஆந்த்ரே வாட்ஜா, கென் லோச், விண்டர்பாட்டம், லார்ஸ் வான் டிரையர் வரிசையில் ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்களும் அடங்கும். தணிக்கை, அரசு அதிகாரம், கோர்ட் வாசல் என்று பல்வேறு தடைகளைத் தாண்டி - வழக்கம்போல - சில எடிட்டிங் நடந்து தற்போது நமக்குப் பார்க்க கிடைத்திருக்கிறது ஜெய்பீம் காம்ரேட்.

மூன்று மணிநேரம் + 20 நிமிடங்கள், 14 வருடங்கள் தயாரிப்பு என்று பார்வையாளர்கள் கண்முன்னே விரிகின்றது இந்த ஆவணப்படம். ஜூலை 11, 1997ல் மும்பை, காட்கோபர் பகுதியில் ரமாபாய் காலணி குடியிருப்பில், காவல்துறையின் கண்மூடித்தனமான மிருகத்தனமான துப்பாக்கிச் சூட்டில் , பாபாசாகிப் அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து இழிவுப்படுத்திய நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்

வகையில் கூடிய மக்களில் 10 பேர் அந்த துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகி விடுகிறார்கள். மும்பையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்திலும் தலித்துகள் ஒன்றுகூடி அரசாங்கத்தின் அராஜகத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்களும் மனித உரிமை ஆர்வலர்களின் உரத்தக் குரலும் பல்வேறு ஊடகத்தளங்களில் இன்று நமக்கு வாசிக்க கிடைக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான தம் மக்களின் சோகம் நெஞ்சை அழுத்த அந்த மன அழுத்தம் காரணமாக அந்த நிகழ்வு நடந்து ஆறு நாட்களுக்குப் பின் தலித் களப்பணியாளரும் பாடகரும் இடதுசாரி கவிஞருமான விலாஸ் கோக்ரே தன்னை மாய்த்துக் கொள்கிறார். இந்தக் காட்சியுடன் தன் காமிராவை பேச வைக்கிறது இந்த ஆவணப்படம். இடதுசாரி மராட்டியக் கவிஞரான விலாஸ் ஆனந்த பட்வர்த்தனின் "பம்பாய் எங்கள் நகரம்" (Bombay our city) என்ற ஆவணப்படத்திற்கு பின்னணி இசை அமைத்தவர். தனக்குத் தெரிந்தவரான விலாஸின் தற்கொலையும் அதற்கான சமூகக் காரணிகளையும் ஆவணப்படுத்தும் முயற்சியில் 1974ல் சிவசேனாவுக்கு எதிராக நடந்தப் பேரணியில் கொலை செய்யப்பட்ட தலித் பைந்தரின் பகவத் ஜாதவ், அத்துடன் கயர்லாஞ்சியில் நடந்த சாதியக் கொடுமை, அதை நியாயப்படுத்திப் பேசும் ஆதிக்கச்சாதியின் குரலாக "அந்தப் பெண்கள் ஒரு மாதிரி.. அவர்களுக்குப் பாடம் கற்பிக்க மக்கள் நினைத்தார்கள்” என்று ஒலிக்கும் குரல்... 330 மில்லியன் இந்துக் கடவுள்களாலும் காப்பாற்ற முடியாத

தலித் இந்துக்களின் வாழ்க்கை அவலம், இவை அனைத்தையும் தன் உரத்தப் பாடல்களின் மூலம் ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடகி சீத்தள் சாத்தேவின் ஜீவன் ததும்பும் குரல்... சுதந்திர இந்தியாவின் சமூக அவலத்தையும் சாதி முகத்தையும் தோலுரித்துக் காட்டியதில் பட்வர்த்தனின் முயற்சி பெரும் பாராட்டுதலுக்குரியது.

படம் முழுக்க ஒலித்த கபீர் கலா மஞ்சின் பாடல்களும் இறுதியில் கபீர் கலா மஞ்ச் அமைப்பு தடை செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தலைமறைவான நிலையில் அவர்களுக்கு தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் என்ற முத்திரை குத்தப்பட்ட தருணத்தில் இப்படம் இப்போது வெளிவர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்ததாக ஆனந்த பட்வர்த்தன் கூறுவதும் நினைவு கூரத்தக்கது.

இப்படம் பார்த்தவுடன் சில கேள்விகள் எழுந்தன. என் சந்தேகங்களை உறுதிப்படுத்தியது மும்பையில் கலினா பகுதியில் பல்கலை கழக வளாகத்தில் அரசியல்/சமூகவியல் கல்வித் துறை  ஏற்பாடு செய்திருந்த ஆவணப்படத் திரையிடல் நிகழ்வும் அதன் பின் நடந்தக் கலந்துரையாடலும்.

தற்கொலை செய்துக் கொண்ட விலாஸ் ஓர் இடதுசாரிக் கவிஞன். பாடகன். இசை நிகழ்ச்சி நடத்தும் கலைஞன். அவன் தற்கொலைக்குக்கு முன் இடதுசாரி அமைப்பிலிருந்து அதன் சட்ட ஒழுங்கு நடவடிக்கை காரணமாக விலக்கி வைக்கப்படுகிறான் விலாஸ். தன் வாழ்நாளில் நம்பிக்கையுடன் சார்ந்திருந்த ஓர் அமைப்பிலிருந்து ஒரு களப்பணியாளன் விலக்கி வைக்கப்படும் போது அவன் எதிர்கொள்ளும் மன உளைச்சலும் ஏமாற்றமும் நம்பிக்கை இன்மையும் கொண்ட வறண்ட நேரத்தில் தான் அவன் சார்ந்த அவன் சமுதாய தலித் மக்களின் தலைவரான அம்பேத்கரின் சிலைக்கு நடந்த அவமதிப்பும் அதற்காக நடந்தப் பேரணியில் ரமாபாய் காலனி மக்கள், அவனுடன் வாழ்ந்தவர்கள் அநியாயமாய் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வும் நடக்கிறது. அவன் தற்கொலை செய்துக் கொண்ட போது அவன் தலையில் ஊதா நிற ரிப்பன் காட்சி அளிக்கிறது. படத்திலும் இக்காட்சியின் ஊடாக சிவப்பு ரிப்பன் /ஊதா நிற ரிப்பன் என்ற நிறங்கள் பேசப்படுகின்றன. விலாஸ் எதனால் இடதுசாரி அமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டான் என்பதோ அது குறித்த விவாதங்களோ எவராலும் பேசப்படுவதில்லை.

இந்தப்படத்தை ஆவணப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்துப் பேசும்போது பட்வர்த்தன் மிகவும் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார், அதாவது தான் பட்வர்த்தனாக - உயர்ந்த சாதிப் பட்டியலில் இருக்கும் சாதிக்குடும்பத்தில் பிறந்த பட்வர்த்தன் என்ற அடையாளம் காரணமாகவே இந்த ஆவணப்படம் எடுப்பது எனக்கு ஓரளவு சாத்தியமானது என்கிறார். அதாவது தலித்துகளுக்கு நடந்த வன்கொடுமைகளை ஆவணப்படுத்துவது பட்வர்த்தன்களுக்கு மட்டுமே சாத்தியமான செயல். ஒரு கோக்ரேவோ ஜாடவோ தலித் ஓருவரால் ஆவணப்படுத்துவது மிகவும் கடினமானது தான் என்பதை ஒத்துக் கொள்கிறார். இதுதான் இந்திய சமூகத்தில், சுதந்திர இந்தியாவில் யதார்த்தம் என்பதை தலித்துகளும் ஏற்றுக்கொள்ளவே வேண்டியதாக இருக்கிறது.

ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு காட்சிகள் பட்வர்த்தனின் அரசியல், மேல்சாதி மேட்டிமைத்தனத்தால் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

2010ல், தலித்துகள் கொலை செய்யப்பட்ட அதே காட்கோபர் ராமாபாய் காலனிக்கு 14 வருடங்கள் கழித்து மீண்டும் வருகிறார் பட்வர்த்தன். பிஜேபி, சிவசோனா கூட்டணி அரசு ஆட்சியில் தான் ரமபாய் துப்பாக்கிச்சூடு நடந்தது. ஆனால் அதே கட்சிகளுக்கு 14 வருடங்கள் கழித்து தலித்திய அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கை கோர்த்து அவர்களின் தேர்தல் வெற்றிக்காக பேசும் காட்சியும் சுவரொட்டிகளும் பதாகைகளும்! இந்தக் காட்சிகளின் மூலம் தலித் அரசியலையும் தலித் அரசியல் தலைவர்களும் அற ஒழுக்கத்திலிருந்து தவறியவர்களாகவும் தம் மக்களுக்குத் துரோகம் இழைத்தவர்களாகவும்... காட்டப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு மிகவும் எளிதாக சட்டென இந்த எண்ணங்கள் மேலோங்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. ஆனால்... அரசியல் அரங்கில் நிகழும் இம்மாதிரியான சோரம் போன, வெட்கங்கெட்ட கூட்டணி அவலங்களுக்கு காரணமானவர்கள் யார்? தலித்திய அமைப்புகள், அரசியல் கட்சிகள், தலித்திய தலைவர்கள் மட்டும் தானா காரணம்?

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசியல் கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதைக் கூட அரசியல் சாணக்கியமாகவே பேசும் அறிவுஜீவிகள் அதே சாணக்கியத்தனத்தை தலித்திய அரசியலில் மட்டும் ஏன் காணத் தவறிவிடுகிறார்கள்? தலித்துகளுக்கான வன்கொடுமைகளை நிகழ்த்துவதில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒரே மாதிரியானவை. அவைகளுக்குள் ரொம்ப பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை.

அதிக வாக்குரிமை பெற்றவரே வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கப்படும் மெஜாரிட்டேரியன் எலக்டோரம் சிஸ்டத்தில் தலித்துகளுக்கான தேர்தல் வெற்றி என்பது மற்ற அரசியல் கட்சிகளின் தோள்களில் ஏறி சவாரி செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதே உண்மை. எந்த மாநிலமும் இதற்கு விதிவிலக்கல்ல. தலித் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பி.ஜே.பி , சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்ததை நியாயப்படுத்துவது நம் நோக்கமல்ல. ஆனால் இந்த நியாயங்கள் தலித்திய அரசியலில் கடைப்பிடிக்க முடியாமல் இருப்பதற்கு தலித்திய அரசியல் தலைவர்கள் மட்டுமா காரணம்? பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கூட திமுக, அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைப்பதைப் பற்றி கேட்டபோது கொள்கை கூட்டணி, முற்போக்கு கூட்டணி என்றெல்லாம் பம்மாத்துப் பேசாமல் ‘யார் அதிகம் சீட் கொடுக்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி’ என்று சொன்னதைக் கூட எவ்வளவு வெளிப்படையாக, உண்மையாக இருக்கிறார் என்றல்லவா பாட்டாளிகள் பரசவப்பட்டார்கள்! எனவே இந்திய அரசியலில் தலித் அரசியலுக்கு மட்டும் இந்த நியாய, அநியாய சட்டங்களும் அளவுகோள்களும் வைத்துக் கொள்வது எப்படி நியாயமாகும்?

திமுக குடும்பச் சண்டையில் தினகரன் பத்திரிகை ஊழியர்கள் அநியாயமாக உயிர்ப்பலி ஆனார்கள்! தினகரன் பத்திரிகையில் வேலைப் பார்ப்பவர்கள் எல்லோரும் நியாயமா? அடுக்குமா? என்று கேள்வி கேட்டார்களா? பட்வர்த்தனுக்கு இதெல்லாம் தெரியம்தான்! ஆனால் தலித்துகள் யாரும் இப்படி எல்லாம் கேள்விகள் கேட்க கூடாது. ஏனென்றால் பட்வர்த்தன்கள் தலித்துகளுக்காக இவ்வளவு போராடி கஷ்டப்பட்டு இதெல்லாம் ஆவணப்படுத்துவதுகிறார்கள் என்பதற்காக நன்றியுடன் இருக்க வேண்டும். பட்டவர்த்தன்களை விட்டுவிட்டால் இதை எல்லாம் வெளி உலகத்திற்கு கொண்டு வர பாவம், தலித்துகளுக்கு வேறு யார் தான் இருக்கிறார்கள்?

ஆனந்த் பட்வர்த்தனின் ஆவணப்படங்கள்:

Ø    1971 - புரட்சியின் அலைகள் - பீகார் இயக்கத்தைப் பற்றியது

Ø    1978 - அரசியல் சிறைக்கைதிகள்

Ø    1981 - எழுவதற்கான நேரம்

Ø    1985 - பம்பாய் எங்கள் நகரம்

Ø    1990 - நண்பர்களின் நினைவாக

Ø    1992 - ராமனின் பெயரால்

Ø    1995 - பிதா, மகன், தர்மயுத்தம்

Ø    1996 - நர்மதா டைரி

Ø    1996 - மில் தொழிலாளர்கள்

Ø    2002 - போரும் சமாதானமும்

Ø    2011 - ஜெய்பீம் காம்ரேட்


நன்றி: கீற்று டாட் காம்

Friday, April 20, 2012

பாம்பாட்டி



கனவுகளிலும் என்னைத் துரத்துகிறது
பாம்புகளின் கூட்டம்.
மகுடி எடுத்து வாசித்து
மயக்க வேண்டும்
கடிப்பதற்குள் எப்படியாவது
கட்டிப்போட வேண்டும்
கனவுகளில் தேவதைகள்
வரப்போகிறார்கள்
நட்சத்திரங்களுடன்
நடனமாடிக்கொண்டே வரக்கூடும்
அவர்கள்.
பாம்புகள் பயமுறுத்தினால்
என்னையும் என் கனவுகளையும்
அவர்கள் விலக்கி வைக்கலாம்.
பாம்புகளைப்  பிடிக்கும்
பாம்பாட்டி
என் படுக்கை அறையில்
பாம்புகளுக்காகக் காத்திருக்கிறான்.

இப்போதெல்லாம் 
பாம்புகள் வருவதில்லை
ஏனேனில் எனக்கு
கனவுகளும் வருவதில்லை.
பாம்பாட்டி பொட்டிக்குள்
பத்திரமாக 
படுத்திருக்கிறேன்
படம் எடுத்து ஆடுகிறேன்
நானே பாம்பாகிப் போனதறியாமல்.



Sunday, April 15, 2012

என் சுற்றுப்பயணங்கள்




மரத்தின் இலைகள்
மஞ்சளும் சிவப்புமாய்
நிறம்மாறிக் காத்திருக்கின்றன
இலையுதிர்க்காலத்திற்காய்
என்னைப் போலவே.

வெள்ளை மனிதர்களுக்கு நடுவில்
கருங்காக்கைகள் கத்துவதும் கூட
காதுகளுக்கு சங்கீதமாய்.

எவரும் துணையில்லாத
பயணத்தில்
செக்குமாடுகளாய்
பூமியைச் சுற்றியே
வலம் வருகின்றன
என் பால்வீதிகள்.

எப்போதாவது
என் வட்டத்தைத் தாண்டி
எட்டிப்பார்க்கும் கண்களை
எரித்துவிடுகின்றன
எரிநட்சத்திரங்கள்.

கழுத்தில் கட்டியிருக்கும்
கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே
தீர்மானிக்கப்படுகின்றன
எனக்கான
என் சுற்றுப்பயணங்கள்.


Thursday, April 12, 2012

தோழர் சங்கமித்ராவின் மறைவு

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தோழர், சங்கமித்ராவின் மறைவு செய்தியை
தமிழ் உலகம் மின்னஞ்சல் மூலம் அறிந்துக் கொண்டேன். என் ஹேராம் கவிதை நூலை
வாசித்துவிட்டு அவர் எனக்கு எழுதிய கடிதத் தொடர்பு மூலம் எனக்கும் அவருக்குமான
தோழமை உறவு கடைசி நாட்கள் வரைத் தொடர்தது. அவருடைய இதழின் ஆசிரியர் குழுவில்
என் பெயரையும் சேர்க்க அவர் விரும்பிய அளவுக்கு எங்களுக்குள் கடிதப் போக்குவரத்தும்
தொலைபேசி உரையாடல்களுமாக நீடித்தது. அண்மையில் ஓரிரு மாதங்கள் அவருடன்
பேசவில்லை. எனக்கான என் கடமைகளின் ஓட்டத்தில் இன்று, நாளை என்று நாட்கள் ஓடி,
இப்போது ..... என்னுடைய இந்த வலைப்பூவில் கூட எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் வரிசையில்
அவருடைய தன் முன்னேற்ற சிறுகதைகளையும் 99% அவருடைய அனுபவங்களாய் வெளிவந்த
படைப்புகளையும் விரும்பி வாசித்த ஒரு வாசகராய் விமர்சகராய்.. நான்.

தலைவலி காய்ச்சல் வந்தால் கூட அதற்கும் பார்ப்பனர்கள் தான் காரணம் என்று நெத்தி அடியாக
பேசுவார், எழுதுவார். பல சமயங்களில் அதுவே எங்களின் விவாதக்களமாக அமையும்.
அவர் எனக்கு அனுப்பும் அஞ்சல் அட்டைகள் ரொம்பவும் பிரசித்தமானவை. அஞ்சல் அட்டை
நண்பர் என்று கூட என் பிள்ளைகள் அவரை அடையாளப்படுத்துவார்கள். அதைச் சொன்ன போது
அதற்கும் அவர் கொடுத்த விளக்கமும் சிக்கனம் குறித்த அவர் கருத்துகளும் இப்போதும் பசுமையாக
நினைவில் இருக்கிறது.







தோழர் சங்கமித்ரா குறித்து என் ஆசான் கவிதாசரண் அவர்கள் மே 2008ல் எழுதியிருந்தக் கட்டுரையை
மீள்பிரசுரம் செய்கிறேன்.


சங்கமித்ரா 65 என்ற தலைப்பில் சங்கமித்ராவாக அடையாளப்படும் பெரியாரியவாதியான நண்பர் பா. இராமமூர்த்தியின் 65 ஆண்டுகால வாழ்வியல் சித்தரிப்புகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுக்கடங்காமல் பீறிட்டுப் பொங்கும் பாதாள ஊற்றுப் போன்ற இவரின் விடாப்பிடியான வினையூக்கங்களும் அடித்துப் பேசுவதான எழுத்தாக்கங்களும் ஒரு சராசரி நபரை வியர்க்கவைக்கக் கூடியவை என்பதற்கு இத்தொகுப்பில் உள்ள விவரங்கள் அழுத்தமான சான்றாதாரங்களாகின்றன. இத்தனைக்கும் இத்தொகுப்பு எவ்வித நெறிப்படுத்தலோ தணிக்கை முறையோ இன்றி, கைக்குக் கிடைத்தவற்றைப் பொறுக்கிப் பிணைத்ததாகவே தோற்றமளிக்கிறது. உண்மையில் இந்த எளிமையே தொகுப்பின் நம்பகத்தன்மையை அழுத்தமாக மேம்படுகிறது.

அசுரப் பனைமரத்தை ஒரு மின்னணுச் சித்திரமாக்கினாற் போல - மின்னணு சித்திரத்திற்கு ஒரு அபூர்வத்தன்மை உண்டு. சித்திரம் நுணுங்க நுணுங்க அதன் துல்லியம் தூக்கலாய் வெளிப்படும் - சங்கமித்ராவின் சலிப்பற்ற எழுத்துகளும் செயல்பாடுகளும் தொகுப்பின் நெசவிழைகளாகிக் கனம் சேர்க்கின்றன.

இந்த நண்பரைக் கடந்த 14 ஆண்டுகளாக என் நினைவில் தங்கிய பெயராகவும் நபராகவும் எனக்குத் தெரியும். ஆயினும் இந்த நூல் மூலமாகவே இவரது பரந்துபட்ட அறிவியக்கச் செயல்பாடுகளை முழுமையாகவும் முதன்மையாகவும் அறிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது. இவரைக் கவனப்படுத்தத் தொடங்கியதிலிருந்து எனக்கொரு காட்சி விரிவதுண்டு. தண்டி யாத்திரை பற்றிய பழைய செய்திப் படச்சுருளில் வேகுவேகென்று நடந்து செல்லும் காந்தியாரைத் தொடர்ந்து அவரது தொண்டர்கள் அரக்கப்பரக்க ஓடுவார்களே - அதுபோல இவரும் தன் வாசகர்களை ஓடவிட்டு உவக்கிறவர் என்பதாக. தவளைப் பாய்ச்சலாய் எம்பித்தாவும் இவரது மொழிக்குள் பூக்கும் உருவெளிக் காட்சி அது.

இவரது "ஒரு எருதும் சில ஓநாய்களும்” என்னும் தன்வரலாற்று நாவல்தான் இவரைப் பற்றி நான் படித்த முதல் நூல். அதைப் படித்தபோது என்னில் முகிழ்த்த இரண்டு படிம உணர்வுகளை இங்கே இப்போது பதிவு செய்வது தவறாகாது என்று கருதுகிறேன். அலகு குத்திக் கொண்டவனைப் பார்த்த மாத்திரத்தில் சிலீர் என்று என் மயிர்க்கால்கள் பொடித்துக் கொள்ளும். இவரது செயல் தீவிரம் அப்படியோர் அலகு குத்தலாக என்னைச் சிலுப்பியது முதல் உணர்வு. மற்றொன்று நான் சென்னைக்கு வந்த புதிதில் கண்ட ஒரு காட்சியோடு தொடர்புடையது. நட்டநடுப் பகலில் சாலையின் நடுவே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் கணத்தில் தன்னை அம்மணமாக்கிக் கொண்டு, "ஐயோ என்னைப் பாருடா, என் துணியை எடுத்துத் தாடா” என்று கத்தினாள். நான் அப்போது எதிர்ப்புறத்தில் பேருந்துக்காக நின்றிருந்தேன். மனம் திக்கென்றதற்கு மேல் ஒன்றும் தோன்றவில்லை. குப்பென்று தீப்பற்றிக்கொள்ளும்முன் மனப்புலம் சுருண்டொடுங்கும் கண நேர மரத்தனம் அது.

ஜிவ்வென்று கவனங்கள் குவியத் தொடங்கும்போதே சட்டென்று ஒரு போலீஸ்காரர் குறுக்கே பாய்ந்து, அவள் மேல் துணியை அள்ளிப்போட்டு, தரதரவென்று இழுத்து வந்து சாலையோரத்தில் தள்ளிவிட்டு, காலைத் தூக்கி மிதிக்கப் போகிறவரைப்போலப் போக்குகாட்டி "அடி ஞொம்மாள” என்று அச்சுறுத்திவிட்டுப் போனார். அவர் தலை மறைந்ததும் "போடா தூம. ராத்திரி வா” என்றாள் அந்தப் பெண். சங்கமித்ரா ஒளிவு மறைவின்றி வெகு அம்மணமாக உண்மைகளைப் போட்டு உடைக்கிறார் என்பதால் இந்தக் காட்சி அப்போது என் நினைவுக்கு வந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய்ப் புரிந்தது. நாகரிகம் என்னும் பெயரில் நான் பேணிய பூஞ்சைத்தனமும் நியாயம் என்னும் பெயரில் அவர் நிகழ்த்திய அதிரவெடியும் இதைவிடச் சிறப்பாய் உருவகப்பட்டிருக்க முடியாது. இந்தக் கணம் வரை அப்படிம உணர்வுகள் என்னைவிட்டுக் கலைந்துவிட்டதாகச் சொல்வதற்கில்லை. மாறாக அது என்பக்கத்து நியாயமாய் ஒரு கோட்பாட்டுக் கவசம் பூண்டு கொண்டுவிட்டது.

நட்பற்ற சூழலை எதிர்கொள்ளும் ஒரு நிராதரவானவன் தன் எதிராளிக்கு மனிதார்த்தத்தைத் தொட்டுக் காட்டுவதன் மூலம் தனது இருத்தலை எதார்த்த தளத்தில் உறுதிசெய்துகொள்ள முடியும் என்பதான கோட்பாடு அது. அடங்க மறுப்பதும் திருப்பியடிப்பதுமான எதிர்த்தாக்குதலின்றி சமத்துவமே சாத்தியமில்லை என்னும் நடைமுறை புலப்பாட்டுக்குப் பின்னும் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்பதைக் காட்டுமிராண்டித்தனமாகவே பாவித்தொதுக்கும் மீட்சியற்ற கோழைத்தனமாகக்கூட இதைக் கொள்ளலாம். ஆனால் மனித மனத்தின் ஞாபக மடிப்புகள் இப்படியாகத்தான் அர்த்தங்களைச் சேமிக்கின்றன, மனிதர்களைத் தகவமைக்கின்றன என்பது என் சிக்கலுக்கு சிறப்பு சேர்க்கும் சாட்சியங்களாகின்றன.

இவரது எழுத்துகள் ஒன்றைத் தெளிவாகச் சொல்வன: வெகு நாசுக்காக நவீன இலக்கியம் படைப்பதாகப் பாசாங்கு செய்யும் பம்மாத்து வேலையெல்லாம் இவருக்கு வேண்டாத பொழுதுபோக்குகள். எதிராளியை மட்டை யடியாகச் சாத்தும் எழுத்து வல்லாண்மையே இவருடைய ஒற்றைத் திரள் வெளிப்பாடு. "என் இலக்கு சரியாக இருக்கும்போது சுட்டுத்தள்ள வேண்டியதுதானே. இடையே பேச்செதற்கு?” என்பது இவரது கறார்த்தனம். இக்கவனங்களூடாக, இவரது எழுத்துகளின் அபூர்வ இலக்கியப் போதவிழ்ப்புகள் சரியாகவம் நிறைவாகவும் உள்வாங்கிக் கொள்ளப் படுகினறனவா என்பது அதிர்ச்சி தரக்கூடிய கேள்வியாகிவிடுகிறது. இவரிடம் உள்ள கதைகள் இவரது வங்கிப் பணி நாட்களை விடவும் அதிகமாக இருக்கக் கூடும். அந்தக் கதைகளும் "நிசத்தைப் போலொரு கற்பனை உண்டுமா!” என்னும்படியாகத் துடிக்கத் துடிக்க வாழ்வைப் பேசுபவை. மொழியின் சாகசக் கலையாக மனதை நெகிழ்விப்பவை.

கணிக்கவும் மதிக்கவும் தெரியும்போது மட்டுமே வைரப் பொடிகள் அரியவையாகின்றன. அல்லாதுபோனால் அவை விடியல் முற்றத்தில் மிதிபட்டழியும் கோலத்துகள்தான் அல்லவா. இவருக்கும் இவரைப் போன்ற சீற்றம் பயிலும் சூத்திர முத்திரையாளர் பலருக்கும் இதுபோன்றதொரு மலிப்படுத்தல்தான் நேர்ந்துகொண்டிருக்கிறது.

இவரைப் பொறுத்தவரை எதிர் அரசியலுக்கான எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மொழிக்காகவும் தர்க்க ஒருங்கிணைவுக்காகவும் சுணங்கி நிற்பவரல்லர். இதில் கவனத்துக்குரிய ஓர் அம்சம், இவரது மொழியில் பெரியார் காலத்தில் நேர்த்தி செய்யப்பட்ட தர்க்க ஒருங்கிணைவு வெகு இயல்பாகப் பொருந்திக் கொள்கிறது என்பதுதான். இந்தப் பின்புலத்தில் இவர் தன்னைத் தனித்துவமாக நிறுவிக் கொள்ளவேனும் எதிராளியுடன் ஓர் உரையாடலை பேணக் கூடியவராக இருக்கிறாரா என்றால் இல்லை. இடம் பொருள் ஏவல் தாக்கங்களுக்கேற்ப மொழிப்படவும் செயல்படவும் அவரவர்க்கும் ஒரு வழி துலங்கும். இது அவருக்குத் துலங்கும் வழி என்பதில் எனக்குக் கொஞ்சம் ஆதங்கம் உண்டு - அதுதான் அந்தப் பழைய நாகரிகப் பூஞ்சைத்தனத்தில் நுரைத்த ஆதங்கம். நம்மைக் காதுகொடுத்துக் கேட்க வைப்பதில் எதிராளியுடன் நமக்கு இணக்கம் வேண்டாம் எனில், ஒன்று நாம் அவனைப் பொருட்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், மற்றொன்று அவனை நம் கட்டைவிரலுக்குக் கீழே அழுத்தி வைக்க வேண்டும். இரண்டுமே காலச்சுழற்சியில் நம்மைத் திருப்பித் தாக்கும் பழி தீர்க்கும் ஆயுதங்கள். ஆகவே, வெல்வதற்காகவேனும் எதிராளியை நாம் அரவணைத்தாக வேண்டும். இல்லையெனில் காற்றில்லாமலும் உயிர் வாழக் கற்றிருக்கும் பார்ப்பனக் கற்றாழைக் குணத்தால் நாம் முழங்கும் நியாயங்கள் யாவும் சூழலை மாசுபடுத்தும் சத்தங்களாகவே மலினப்பட்டுப்போகும். இவரை வாசிக்கும்போது தன்னூற்றாக ஏற்படும் பதற்றத்தில் எனக்கு இந்த எண்ணம் தீவிரப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. வெள்ளம் எவ்வளவு வேகமாயிருந்தாலும் மீன்கள் எதிர்நீச்சலைத் தவிர்ப்பதில்லை.

பொது வாழ்வில் பங்கேற்கிற பலருக்கு சங்கமித்ரா ஒரு விஷயத்தில் முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்பதை நாம் மறக்காமல் நினைவு கூரவேண்டும். இவர் எதை நம்புகிறாரோ அதுவாகவே இருக்கிறார், அல்லது இருக்க முயல்கிறார். ஒப்புக்காகவும் மெப்புக்காகவும் வாழும் இன்றைய தமிழ்ச் சமூகத்தில் இது ஓர் அரிய அம்சம். சில மாதங்களுக்கு முன் ஒரு பேராசிரியர் வீட்டுத் திருமணத்துக்குப் போயிருந்தேன். பேராசிரியர் இலட்சியப் பிடிப்புள்ள இயக்கவாதி. அங்கே வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்களும் பள்ளி ஆசிரியர்களுமாக இருந்தனர். அவர்களுள் நான் அறிந்தவர்களும் என்னைத் தெரிந்தவர்களும் வெகு சிலரே. ஆனால் அவர்களில் மிகப் பலரும் தமிழ்க் காவலர்களாகத் தங்களை பொதுக்களத்தில் முன்னிறுத்திக் கொள்கிறவர்கள். அவர்களூடாக நான் தொட்டுச் சென்ற ஒரு முக்கால் மணி நேரத்தில் ஒரு விஷயம் வெகு தூக்கலாக என்னை அந்நியப்படுத்தியது. அதாவது அவர்களில் 80 சதவீதம்பேர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் - பலர் பச்சை அட்டைக்காரர்களாக அல்லது அதற்காகக் காத்திருப்பவர்களாக. பிள்ளைகளை மட்டுமல்லாமல் தங்கள் பெண்களையும்கூட அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கே பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் பலர். இது ஒன்றும் தற்செயலாய் நேர்ந்துவிடக்கூடியதில்லை.

தங்கள் மக்களை மொழி ரீதியாகவும் குழந்தைப்பருவத்திலிருந்தே அதற்காக நேர்த்தி செய்தவர்கள் அவர்கள். இம்மை அறங்களில் தங்கள் இலட்சியங்களையெல்லாம் ஊறப்போட்டுக் கொண்டிராத விளாம்பழங்களாயிருந்து வென்றெடுத்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல, மதவாத தேசபக்தர்கள், மார்க்சியவாதக் கட்சிக்காரர்களென்று யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எல்லாருமே ஒருவகையில் அமெரிக்காவுக்காக இங்கே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அ. மார்க்ஸ் ஒருமுறை எனக்கெழுதிய கடிதத்தில் "கல்வி விஷயத்தில் என் குழந்தைகள் என்னைக் குற்றம் சொல்லக்கூடும்” என்று எழுதியிருந்தபோது அவர் தன்னளவில் உண்மையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே அப்போது எனக்கு முக்கியமாகப்பட்டது. ஆனால் நடைமுறையில் பொய்யர்களோடுதான் லட்சியவாதிகள் குற்றவாளிகளாய் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது என்பதை அந்தத் திருமண விழாப்போதில் கண்டு நசுங்கும்படியாயிருந்தது.

நான் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது இன்னொருவர் குறுக்கிட்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைத்த உதடுகளோடு தங்கள் அமெரிக்கப் பிள்ளைகளைப் பற்றிப் பேசத் தொடங்குவதும், மேலும் மேலும் அது போன்ற குறுக்கீடுகள் தொடர்வதுமாக அந்த இடத்தில் என் இருப்பு வெகு அற்பமாகவும் அந்நியமாகவும் விலக்கப்படுவதாயிருந்தது. இந்த அமெரிக்கப் பிள்ளைகளின் தந்தையர்களுக்குத் தமிழ்தான் மூச்சு. ஓய்வுகால மூச்சு. பென்ஷனர்கள் எந்த இசமும் பேசக்கூடாது. எந்த இயக்கத்திலும் பங்கேற்கக்கூடாது. மீறினால் பென்ஷனை இழக்க நேரிடும் என்று ஒரு விதி போட்டால் இவங்கள் தங்கள் தமிழ்ப் பாதுகாப்புணர்வைக் கழிவறைக் கருவூலமாக்கிக் கொள்வார்களாயிருக்கும். சொல்ல மறந்துவிட்டேன் - அவர்களில் பெரும்பாலோர் ஓய்வூதியக்காரர்கள் - என்னைப்போல.

இத்தகைய பின்புலங்களில்தான் சங்கமித்ரா போன்றவர்கள் கண்கூசும்படி வெயிலாடிக் கொண்டிருக்கிறார்கள். நாமோ நிழல்களைப் போல நிச்சயமற்றவர்களாயிருக்கிறோம். வெட்கப்படுவதுகூட நமக்கு வேண்டாத வியர்க்குறு போலாகிக் கொண்டிருக்கிறது. சங்கமித்ராவின் எழுத்துகளையெல்லாம் தொகுத்தால் பெரியார் பேசியதற்கும் எழுதியதற்கும் சமமாகக்கூட வரலாம். ஆனாலும் பெரியார் என்னும் குருவுக்கு சங்கமித்ரா ஒரு மெய்யான சீடர் மட்டும்தான். இந்த சீடத்தனம்தான் பெரியாருக்கு இணையாக வினையாற்றிய குத்தூசி குருசாமி போன்றவர்களையெல்லாம் காணாமல் போக்கிவிட்டது. சீடனுக்குள்ள உறவு குருவின் கருத்துகளோடுதான் என்றாலும் குருவின் மரணமே சீடன் நிற்பதற்கான ஆதார இடம்; அதாவது விளையாட்டுக் களம். மனிதர்கள் சமூகமாகத் திரண்டதன்பின் பல்கும் குறைகளினூடாக, வழிகாட்ட வந்தவர்களை அவர்களது பௌதிக மரணத்தோடு முற்றுப்பெற்றவர்களாகத் தீர்த்துக் கட்டுவதிலிருந்துதான் அவர்கள் மதங்களாக வடிவமைக்கப்படுவதும் சீடர்கள் போதகர்களாகப் பரிணாமம் கொள்வதும் நேர்கிறது.

அந்த நிலையில் குருவின் கருத்துகளும் கருத்தேற்புகளும் பின்தள்ளப்பட்டு குருவின் முற்றுப்பெற்ற பௌதிக பிம்பமே போற்றுதலுக்குரியதாகிவிடுகிறது. இந்த பிம்பம் குருவின் பௌதிகச் சொந்தங்களோடு வரலாற்றுறவு பேசுகிறது. குரு விமர்சிக்கப்படும்போது, அவர் கருத்தின் மேல் அக்கறைகொள்ளாத - ஆனால் பௌதிகச் சொந்தங் கொண்டாடும் சீடனுக்கு விமர்சகன்மேல் ஆத்திரம் வருகிறது. குருவின் கருத்தைப் புறக்கணித்ததற் காகத் தன்மேல் கழிவிரக்கம்கூடத் தோன்றுவதில்லை. அண்மைக்காலங்களில் பெரியார் விமர்சிக்கப்பட்டபோது பெரியாரியவாதிகள் வெளிப்படுத்திய நியாயமான கோபத்தினூடே பெரியார் மதமாகச் சுருங்கும் ஆபத்தான கூறுகளும் பின்புலத்தில் வெளிப்பட்டன. இன்றைய பெரியாரியர்களில் பெரும்பாலோர் அமெரிக்கப் பிள்ளைகளின் தமிழ்ப் பெற்றோர்களைவிடத் தரத்திலும் குணத்திலும் பெரிதாக வேறுபட்டவர்களல்லர். தன்னளவில் சரியாய் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் ஒப்புக்கு வாழ்கிறவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காகக்கூட பொறுப்பேற்க விரும்பாதவர்கள்.

பெரியார் போன்றவர்களுக்கு நாம் ஏன் சீடர்களாயிருக்க வேண்டும்? ஏன் நாம் அவர்களின் தொடர்ச்சியாய் இருக்கக்கூடாது? பெரியார்களின் பௌதிக எல்லை அறுவடை செய்யப்பட்ட கருப்பங்கழிகள்போல. இதில் எளிமைப்பட்டுப்போகும் சீடத்தனம் என்பது காடு கொள்ளாமல் கழிக்கப்பட்டுக் கிடக்கும் தோகைகள்போல. ஒரு தீப்பொறியில் பொசுங்கி அடங்குபவை. அங்கே மிகுந்திருப்பவை அடித்தூர்கள். சரசரவென்று முளைப்பெடுத்து கருப்பங்காட்டை இன்னொரு மகசூலுக்கான பச்சைவனமாகப் போர்த்துக்கொள்ளும் கருத்துத் தூர்கள். நாம் ஏன் அந்த மறு மகசூலாய் இருக்கக்கூடாது? இந்த மறு மகசூல்கள் ஒவ்வொரு விளைச்சலிலும் நிலம் நீர் காற்று வெளிகளால் புதுப்பரிமாணங்களைப் பொதிந்து கொள்ளக்கூடியவை. இந்தச் சுழற்சி சாகுபடி எங்கேயும் முற்றுப் பெறுவதில்லை. இதில் பெரியார்கள் புத்துயிர்க்கப்படுகிறார்கள். காலத்தால் நேர்த்தி செய்யப்படுகிறார்கள். தொடர் உரையாடலாய் செழுமைப்படுத்தப்படுகிறார்கள். சங்கமித்ராக்கள் அந்த நேர்த்தியின் பரிமாணங்களாக வேண்டியவர்கள்.

Monday, April 2, 2012

தெரிந்த முகங்கள்.. தெரியாத செய்திகள்

* மோனலிசா ஓவியத்தை வரைந்த லியோனர்டோ டா வின்சிக்கு மோனலிசாவின் உதடுகளை
வரைவதற்கு மட்டும் 12 வருடங்கள் ஆனதாம்.

டா வின்சி ஒரு கையால் ஓவியம் வரைந்துக் கொண்டே இன்னொரு கையால் எதையாவது
எழுதும் ஆற்றலும் உள்ளவராம்.

மோனலிசா ஓவியம் 1503ல் முடிக்கப்பட்டது.


* ஜான் கென்னடி 20 நிமிடங்களில் 4 தினசரி செய்திதாள்களை வாசித்துவிடுவாராம்.

* பில் கிளிண்டன் இடது கை பழக்கம் உள்ளவராம்.

*ஹிட்லர் பெர்லின் நகரத்தின் பெயரை ஜெர்மானியா என்று பெயர் மாற்றம் செய்ய
நினைத்திருந்தாராம்.
(நல்லவேளை.. பெர்லின் தப்பியது.!!)

*ஹிட்லர் 1936ல் ஒலிம்பிக்கின் போது ஜெஸ்ஸி ஓவனிடம் கை குலுக்க மறுத்துவிட்டார்,
காரணம் ஓவன் ஒரு கறுப்பர் என்பதால்.


*மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டு பயம்.!


* சார்லி சாப்ளின் தன் 4ஆம் வயதிலேயே மேடையில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
1920-30 களில் அவர் புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் நிகழ்ச்சி நடத்த
வந்தாராம். அப்போது மட்டும் அவருக்கு ரசிகர்களிடமிருந்து வந்திருந்தக் கடிதங்களின்
எண்ணிக்கை சற்றொப்ப 73,000.

*சார்லி சாப்ளின் போல வேடமிட்டு வரும் மாறுவேடப் போட்டியில் ஒரு முறை
அவரே கலந்து கொண்டார். ஆனால் பாவம்... அவருக்கு கிடைத்தது 3 ஆம் பரிசு தான்.


*உங்கள் பிறந்தநாளை இந்த உலகத்தில் இருக்கும் 9 மில்லியன் பேர் கொண்டாடுவார்கள்.
ஏனேன்றால் அன்றுதான் அவர்களுக்கும் பிறந்த நாளாக இருக்கும்.