Tuesday, December 23, 2014

விறலியின் சபதம்

(ஓவியம் எம். எஃப் ஹூசைன்)


சிவப்பு மையால் எழுத முடியாத
விறலியின் சபதத்தை
கறுப்பு வானத்தில் எழுத வந்த சூரியனும்
தோற்றுப்போனது.

அலைகள் எல்லாம் சந்திரனைக் கண்டு
ஆர்ப்பரிக்கின்றன
எங்கிறார்கள் கடற்கரைவாசிகள்.
அலைகள் அற்ற நடுக்கடலின்
அமைதியை மறந்தப்படி...


பவுர்ணமி மட்டுமல்ல்
அமாவாசையும் சந்திரனுக்குத்தான்
உண்மையைச் சொன்ன
பாய்மரக்கப்பல்கள்
உடைந்துப் போயின.
இது நட்சத்திரங்கள் மட்டுமே அறிந்த
பரம் ரகசியம் அல்ல.
விறலியின் விளக்கவுரை தேவையில்லை.

முல்லைக்கொடிக்காக தேர்க்கொடுத்த பாரியைப்
பாடிப் பாடியே பரிசில்கள் பெற
பாணர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த விறலியை விட்டுவிடுங்கள்.
அவர்கள் பாடல்களுக்கு ஆடி ஆடியே
களை இழந்துவிட்டது விறலியின்  கலை.

காட்டில் காய்ந்து கிடக்கும்
கம்புகளை வெட்டி
முல்லைக்கொடிக்கு
பந்தல் போடத் தெரியாதவன அவன்
தேரில் படர்ந்த முல்லைக்கொடியை
பத்திரமாக எடுத்து
பந்தலில் விடத் தெரியாதவன அவன்.
ஓடுவதற்காகவே தச்சர்கள் உருவாக்கிய
தேர்ச்சக்கரத்தை
முடக்கிப்போட்டவன அவன்.

எதை எதற்கு எப்படி கொடுக்கவேண்டுமோ
அதை அதற்கு அப்படி கொடுக்கும்
கொடை கூட பாராட்டப்படலாம்
கொடைமடம் ?

இரண்டு கைகள் கொடுத்தால்
இரண்டாயிரம கைகள் பிச்சைப்பாத்திரமாகிவிடும்.
அமுதசுரபியைத் தூக்கி எறிந்த
மணிமேகலைக்குத் தெரியும்
கொடுப்பதில் இருக்கும் சுகத்தைவிடக் கொடியது
வாங்குபவன் மனக்கண்ணின் வாட்டம்.

விறலியின் சபதமிது
வள்ளல்களைப் பாடி
பரிசுகள் குவிக்கும்
பாணர்களின்  பாடலுக்கு
இனி விறலி ஆடப்போவதில்லை.



Friday, December 19, 2014

சாதிகளற்ற அந்தமான்

அந்தமானில் ஒரு தீவு நீல் தீவு. அங்கு லக்ஷ்மண்பூர் பீச்சில் நான் சந்தித்த அழகுமலையும் அவர் சொன்ன செய்திகளும் என் வாழ்வில் மறக்க முடியாதது. இந்தப் புகைப்படத்தில் என்னுடன் இருப்பவர் தான் அழகுமலை. உல்லாசப் பயணிகள் வரும்போது இளநீர் விற்பனை,மற்ற நாட்களில் தென்னைமரம் சார்ந்த பிற தொழில்கள். இந்திய அரசு அந்தமான் வாசிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்கி இருக்கிறது. அவர்கள் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு முன்னுரிமையும் கட்டணச்சலுகையும் உண்டு.
அழகுமலையின் சொந்தவூர் மதுரை அருகே குக்கிராமம். அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் அந்தமானுக்கு வந்தவர் இங்கேயே தங்கிவிட்டார். வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. "மேடம், இங்க நிம்மதியா இருக்கோம், சாதிச்சண்டைகள் கிடையாது. ஏன், சாதி வேறுபாடுகள் கிடையாது. வங்காளிகளும் அதிகமாக வாழும் அந்தமான் தீவுகளில் மொழி இன வேறுபாடுகள் இல்லை. தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கருமாரி அம்மன், சிறுதெய்வங்கள் மற்றும் முருகன் கோவில்கள்.. இசுலாமியர்கள், கிறித்தவார்களும் வாழ்கிறார்கள். அவர்களுக்குள் மதச் சண்டைகள் இல்லை... "
அவர் தன் கதையைச் சொல்ல சொல்ல என் கனவு உலகம் கண்முன்னே விரிந்தது. அந்தமானில் போர்ட் ப்ளேயரில் மட்டும் தான் தமிழ்ப் படிக்க வசதி.. அதனால் என்ன...? இந்தியும் ஆங்கிலமும் தான் பிற தீவுகளில் கல்விக்கூடங்களில்.. அதனால் தான் என்ன?
கவிதாசரண் அய்யா அவ்ர்கள் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகிறது."தமிழ்ச்சமூகத்தின் சாதி இழிவைப் போக்க ஆகச்சிறந்த என் செம்மொழியையும் காவு கொடுத்துதான் பெற முடியும் என்றால்...!"
அழகுமலையின் அடுத்த தலைமுறைக்கு சென்னைக்குப் போக வேண்டும் என்பதே நோக்கமாக இருக்கிறது. காரணம், தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளின் தாக்கம்...
Like ·  · 

Wednesday, December 10, 2014

மோதியின் குழப்பமான பொருளாதரம்


மோதி BRICS (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா & சவுத் அமெரிக்கா)
நாடுகளுடன் இணைந்து இந்திய பொருளாதரத்தை வள்ர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வோம் என்றார். அத்திட்டத்தின்
ஒரு பகுதியாக தான் திடீரென ஒருநாள் கோவிலகளை விட கழிவறைகளே வேண்டும் என்று அவர் பேசியது. பிரிக்சு நாடுகள் development bank ஒன்றை உருவாக்கி இருக்கின்றன. தலைமையகம் சீனாவில். இந்தியா தான் இந்த வங்கியின் தலைமைப் பொறுப்பை
ஏற்கும் என்று அறிவித்தாகிவிட்டது.
சீனாநாடு பெருமளவில் அந்நிய முதலீட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவைவிட சீன அரசின் உள்நாட்டுச் சட்டங்கள் கடுமையானவை.
அப்படி இருந்தும் சீன அரசினை ஏமாற்றிவிட்டார்கள் அந்நிய
முதலீட்டாளர்கள். இப்படியாக சூடு வாங்கிய சீனா "இனிமேல் அந்நிய முதலீட்டை அதிகமாக எதிர்ப்பார்த்து பொருளாதரத்தை மேம்படுத்தாது" என்று சொல்கிறத் சீன பத்திரிகை. (பீஜிங் ரிவியு. செப்
2014)..இந்த நிலையில் தான் மோதியின் அரசு அந்நிய முதலீட்டை
சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது
இது ஒரு பக்கம் என்றால் அமெரிக்காவில் வளர்ந்த நாடுகள் கடந்த 50 வருடங்களாக இயற்கையை அழித்து சுற்றுப்புற சுழலைக் கெடுத்து
தடுமாறி நிற்கின்றன. சந்தை பொருளாதர முறையை மாற்றி அமைக்காவிட்டால் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கும் ஆபத்து
என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் 2001ல் நோபல் பரிசு பெற்ற
ஜோசப் ஸ்டிக்லிசு. இவர் உலக வங்கியின் தலைமைப் பொருளாதர அறிஞராக இருந்தவர். முன்னாள் அதிபர் க்ளிண்டனின் ஆலோசகர்.
இதுபோன்ற உண்மைக்கருத்துகளை வெளியிட்டதற்காக அமெரிக்க அரசு ஸ்டிக்லிசின் பல்கலை கழக ஆய்வு பேராசிரியர் பதவியைப் பறித்துவிட்டது. இந்த எச்சரிக்கைகளை மோதி அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. உணவு, மருந்துப் பொருட்கள் துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்ற்ன.
அதைத் தடுக்க முடியவில்லை.
ஒரு பக்கம் அமெரிக்க ஆதரவு நிலை, இன்னொரு பக்கம் ப்ரிக்சு நாடுகளுடன் இணைந்து பொருளாதரத்தை வள்ர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வோம் என்று மோதி தானும் குழம்பிப் போய்
மக்களையும் குழப்புகிறார்.திட்டமிடலோ தொலைநோக்குப் பார்வையோ இல்லாத கற்பனைப் பொருளாதரக் கொள்கை..
....
காகித ஓடம் கடல் அலை மீது...
Like ·  · 

Sunday, December 7, 2014

உலகின் குப்பைத்தொட்டியா இந்தியா?



2019க்குள் தூய்மை இந்தியா  திட்டம் நிறைவேறிவிடும். நிறைவேற வேண்டும்,
தூயமை இந்தியா வெறும் அரசியல் ஸ்டண்ட் அல்ல, அது ஒரு மக்கள்
இயக்கம் என்றெல்லாம் தொடர்ந்து இக்கருத்து விவாதப் பொருளாகிக்கொண்டிருப்பது
வரவேற்கதக்கது தான். இக்கருத்து குறித்து பேசுபவர்கள் நம் வீட்டில் சேரும்
குப்பைகள் குறித்தும் அதையும் தாண்டினால் தெருவில் குவியும் குப்பை,
அல்லது கழிவறை என்பதற்கு மேல் பேசுவதில்லை. ஏன்?

இந்த நவீன காலனி ஆதிக்கத்தில் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு
அனுப்பும் குப்பைகளே நம் உள்ளூர் குப்பைகளை விட அபாயகரமானவை.
சுத்திகரிப்பு என்ற பெயரில் இறக்குமதி செய்யப்படு கின்றன. இதற்குக் காரணம்
, இந்தச் சுத்திகரிப்புத் தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு
இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குறைந்த கூலி வழங்கப்படுகிறது
சான் றாக, ஒரு டன் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய இலண்டன் மாநகரில்
இந்திய ரூபாய் மதிப்பில் 12000 செலவாகிறது.
 ஆனால், இந்தியாவில் 2800 ரூபாயில் சுத்திகரிப்பு செய்யலாம்
5 விழுக்காடு மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்கா 30 விழுக்காடு
 குப்பைகளைக் கொட்டு கிறது
இரண்டாவதாக, பிரேசில் 210 மில்லியன் டன்,
 ஜப்பான் 53 மில்லியன் டன், ஜெர்மனி 49 மில்லி யன் டன்
, இங்கிலாந்து 35 மில்லியன் டன், மெக்சிகோ 32 மில்லியன் டன்,
 பிரான்சு 32 மில்லியன் டன், இத்தாலி 30 மில்லியன் டன்,
ஸ்பெயின் 26 மில்லி யன் டன், துருக்கி 25 மில்லியன் டன்

நோய்களைப் பரப்புகின்ற, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைக்கும்
பல இலட்சம் டன் கழிவுகள் இந்தியாவின் பல துறை முகங்களில்
 மறைமுகமாக வந்த வண்ணமே உள்ளன.
2009 அக்டோபர் 24ஆம் நாள் தெகல்கா ஏடு - தூத்துக்குடி அருகே உள்ள போல்பேட்டை  என்ற ஊரில் மறுசூழற்சிக்காகவும், இரப்பரைப் பயன்படுத்தி பிவிசி (PVC) கதவுகள்  செய்வதற்காகவும் சில இரசாயனக் கழிவுகளை எக்ஸல் (Excel) என்ற தனியார் நிறுவனம்
 இறக்குமதி செய்தது. ஆனால் உண்மையில் மறு சுழற்சி முறையில்
எவ்வித துணைப் பொருட்களை யும் உருவாக்காமல், இந்தக் கழிவுகளை
எரித்து இலாபம் அடைந்தது. இதேபோன்று தூத்துக்குடி அருகே பெட்ரோலிய
 இரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு இத்தொழிலுக்கு
 தேவை யானப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம் என்ற பெயரில்
 உலோக, எண்ணெய் கழிவுகளைத் தூத்துக் குடி துறைமுகம் வழியாக
 இறக்குமதி செய்து எரித்து விடுகிறார்கள். சுற்றுச்சூழலைப் பற்றி கவலைப்படாமல்  பணக்கொள்ளை அடிக்கிறார்கள் என்று அந்த ஏடு குறிப்பிட்டுள்ளது
இந்தியாவில் உள்ள எந்தத் துறைமுகத்திலும் இறக்குமதி செய்யப் படும்
 பொருட்களைத் துல்லியமாகக் கண்டறியும் ஸ்கேனர் கருவிகள் இல்லை
 என்பதையும் இந்த ஏடு சுட்டியது.
2010 ஏப்ரல் 24ஆம் நாளிட்ட ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு,
தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஸ்பெயின், சவூதி அரேபியா, மலேசியா
 ஆகிய நாடுகளில் இருந்து கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன
 என்று குறிப்பிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு தில்லியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆய் வாளர்  தூத்துக்குடி துறைமுகம் சிறிய துறைமுகமாக இருப்பதால் எளிதாக இந்தக் கழிவுப்  பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்கிறார். இங்கிலாந்தின் லீட்சு நகரிலிருந்து  மருத்துவக் கழிவுகள், இரத்தக்கறை படிந்த கழிவுப் பொருட்கள் தூத்துக்குடி வழியாக,
 கோவை மாவட்டத்தின் குமாரபாளையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு
 விளைநிலங்களில் எரிக்கப்பட்டது என்று பிபிசி தொலைக்காட்சி நிறுவனம்
 வழியாக இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பல மாக்கியது.

தூயமை இந்தியா திட்டத்தை விமர்சிக்கும் அரசியல்வாதிகள்
ஆதரிக்கும் ஆளும்கட்சி/ கேலி செய்யும் எதிர்க்கட்சி
எவரும்  இந்தியாவே உலகின் குப்பைத் தொட்டியாக
மாறிவரும் அவலம் குறித்து மட்டும்
வாயைத் திறப்பதில்லையே! ஏன்?

Saturday, December 6, 2014

இன்று டிசம்பர் 6

இன்று டிசம்பர் 6.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.
இந்திய மண்ணில் தீவிர வாதத்திற்கு
அடிக்கல் நாட்டிய நாள்.
எங்கள் மும்பையில் வெடித்த
எல்லா வெடிகுண்டுகளுக்கும்
முகவரி எழுதப்பட்ட நாள்.
இந்த நாளில் எந்த அசாம்பிவதமும்
நடந்துவிடக்கூடாது என்று
சென்னை செண்டிரல் ஸ்டேஷனில் கூட
இன்று ஆயுதம் ஏந்திய காவல்படையின் கண்காணிப்பு.
அயோத்தியே இந்தியா
இந்தியா தான் அயோத்தி
என்று மதச்சார்பற்ற இந்தியாவுக்கு
நினைவூட்டும் நாள்.
இன்று டிசம்பர் 6..







நன்றி இந்திய தேசத்துக்கும்
இந்திய தேசத்தின் பிதாமகன்களுக்கும்.
இந்த நாளில் ஒவ்வொரு இந்தியனும்
இந்த நினைவுகளை மட்டும்தான் சுமந்தாகவேண்டும்
இந்த விதியை  எழுததானே
நீங்கள் தேர்வு செய்தீர்கள் இந்த நாளை..
டிசம்பர் 6.  ஐ
நன்றி இந்திய தேசமே
உனக்கும் உன் மதச்சார்பற்ற முகத்துக்கும்.
நன்றி உனக்கும்
நீ எப்போதும் காப்பாற்றிக் கொண்டிருக்கும்
உன் சாதீய முகத்துக்கும்.
-------

இன்று டிசம்பர் 6.
இந்திய அறிவாயுதத்தின் 58 ஆவது நினைவுநாள்

கங்கையின் புனிதம்
இந்த மகாநதியின் முனனால்
மண்டியிட்ட நாள்.
இமயத்தின் மகாபுருஷர்கள்
இந்த மனிதனிடம் சரிந்த நாள்.
இந்த மனிதச்சங்கிலியை
இந்தியாவே
உன் சாதிச்சங்கிலிகள் தொடும் போதெல்லாம்
தராசு தடம் புரள்கிறது.
உங்கள் நீதிதேவன் குற்றவாளிக்கூண்டில்.

இந்த நாட்டில் தான்
ஆண்டவனில் கூட சாதிப்பிரிவுகள்
பாலாஜி, பழநி, மாசானம், மாடசாமி,
காமாட்சி, மீனாட்சி, காளியாத்தா, மூவுடையா..

புத்தம் சரணம் கச்சாமி.
மன்னித்துவிடு சித்தார்த்தா
உன் சித்தாந்தங்களை விலக்கிய
என்னையும் என் எழுத்துகளையும்.
இனி,
அஹிம்சை கோவிலில்
ஆடுகள் அடிமைகள் அல்ல.

புத்தம் சரணம் கச்சாமி.

Monday, December 1, 2014

திராவிட அரசியலும் சாதி ஒழிப்பும்

தோழி நிறம் அவர்கள் தன் முகநூலில் 29/11/14 இந்தியன் எக்ஸ்பிரஸ்
வெளியிட்டிருக்கும் இந்திய சாதியம் பற்றிய கருத்துக்கணிப்பை
முன்னிறுத்தி . சாதி ஒழிப்பில்
கேரளாவும் வங்கமும் முன்னிலை வைத்திருப்பதால்

மார்க்சியம் மட்டும் தான் மனிதத்தைப் போற்றுகிறது என்று மீண்டும் உறுதி செய்யப்படுகிறது!!! அப்போ பெரியாரிசம் ?

என்ற கேள்வியை முன்வைக்கிறார். அந்தப் புள்ளியிலிருந்து இக்கட்டுரை .... சில விவரங்களுடனும் நிராசைகளுடனும்...

--------





திராவிட அரசியலும்  சாதி ஒழிப்பும்
---------------------------------

காங்கிரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் "சுதந்திர இந்தியா"  அல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஒத்திசைவான சமூகத்தைக் கட்டமைத்து ஆங்கிலேய 

அரசு அதிகார வரம்புக்குள் தங்கள் உரிமைகளைக் கோருவதாக மட்டுமே
இருந்தது. அதுபோலவே தான் திராவிட இயக்கத்தின் தோற்றமும்.
பிராமணர் அல்லாதோரின் - தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டதன்
நோக்கமும் திராவிட தேசமோ சாதி ஒழிப்போ அல்ல.

சாதிச்சமூகமாகவே இருந்த தமிழ்ச்சமூக கட்டமைப்பில் 

பார்ப்பனர்களும் நிலவுடமைக்காரர்களாக இருந்த வெள்ளாளர், ரெட்டி, கம்மாளர் சாதிகளுமே தமிழ்ச் சமூகத்தின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர்களாக ஒரு விதமான ஒத்திசைவு வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள் என்று பதிவு செய்கிறார் இதைப் பற்றி ஆய்வு
செய்திருக்கும் பர்டன் ஸ்டெயின் 
(CLOSE COOPERATION BETWEEN BRAHMINS AND THE RESPECTABLE CULTIVATING GROUPS).


1610ல் தத்துவபோதகர் என்றழைக்கப்படும் ராபர்ட் டி நோபிளி எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியில்>>

" மதுரையில் மட்டும் 10000 க்கும் அதிகமான மாணவர்கள். அவர்கள் அனைவரும் பிராமணர்களே.இதர சாதியினர் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இக்கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்பாடு செய்யப்படிருந்தது. பிற வைசியர் சூத்திரர்கள் செல்வர் வீட்டு திண்ணையிலாவது அல்லது ஆசிரியர் வீட்டு திண்ணையிலாவது உட்கார்ந்து எழுத்துக்கூட்டவும்
கணக்குப் போடவும் போனால் போகிறது என்று தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதிகாரம் என்பது நிலவுடமையுடன் நேரடி தொடர்புடைய
காலக்கட்டம் அது. கல்வி சார்ந்த தளத்தில் பிராமணர் அல்லாதோருக்கு
உரிமைகள் மறுக்கப்பட்டதை நிலவுடமை சமூகம் பொருட்படுத்தாமல்
இருந்தது. ஏனேனில் அது அவர்களின் அதிகார வரம்பை மட்டுப்படுத்தவில்லை.

இந்த 9 நூற்றாண்டிலிருந்து 18 நூற்றாண்டுவரையான 
சமூக சூழலின் விளைவுதான் 
ஆங்கில நிர்வாக இயந்திரம் இங்கே இயங்கத் துவங்கிய போது அவர்களது  உத்தியோகங்களை ஏற்பதற்கு அப்போது கல்வியில்
முன்னேறி இருந்த  பிராமண சமுதாயம் மட்டுமே தயார் நிலையிலும் முன்னணியிலும் இருந்தது.

இதனால் தான் மக்கள் தொகையில் 3 சதவீதமாக இருந்தப்  பிராமணர்கள் சென்னைப் பல்கலை கழக பட்டாதாரிகளில் 72 சதவீதமாக இருப்பது சாத்தியப்பட்டது.
அப்படி 1854ல் வருவாய் துறை வாரியத்தின் மாதக் குறிப்பில் நெல்லூர் மாவட்டம் ஜி.வெங்கட்ரமணையா
என்ற உயர் பதவி வகித்த பிராமணரின் உறவினர்கள் 49 பேர் பிற பதவிகளிலும் இருந்தார்கள் என்ற குறிப்பு
காணப்படுகிறது. இதைப் போலவே வெம்பாக்கம் அய்யங்கார் குடும்பம், வட ஆற்காடு சர்.சி.பி இராமசாமி அய்யர் குடும்பம் இவர்கள் எல்லாம் சென்னை மாகாணத்தை ஆண்டு கொண்டிருந்த காலக்கட்டம்.

எனவே இதுவரை, அறிவுசார்ந்த பின்புலத்தில் உருவாகும் அதிகாரத்தை அறியாத பிராமணரல்லாத
சமூகம் தாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழந்துவிட்டதை உணர்ந்து கொள்கிறார்கள்.
அதை அடைவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகவே
பிராமணரல்லாத அமைப்பின் அடிப்படை நோக்கமாக இருந்தது. 


நீதிக்கட்சியின் சமூக சீர்திருத்தச்சட்டங்கள்:

ஒப்பீட்டளவில் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த
இரு திராவிட அரசியல் கட்சிகள், திமுக மற்றும் அதிமுக
கொண்டு வந்த அரசியல் சட்டதிட்டங்களும் அதைக்
கடைப்பிடித்து சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களையும்
கணக்கில் கொண்டால் நீதிக்கட்சி அக்காலத்தில் தன் ஆட்சி
அதிகாரத்தின் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்
புரட்சிகரமானவை. போற்றுதலுக்குரியவை.

பேருந்துகளில் குறிப்பிட்ட சாதியை ஏற்றமாட்டோம் என்பதைக் கடைப்பிடிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு அவர்கள் லைசன்ஸ் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவந்தார்கள்.
உள்ளாட்சி துறையிலோ தனியார் நிறுவனங்களாலோ நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனத்திலும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் சேர்க்க மறுக்கப்பட்டால் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தொகை உடனே நிறுத்தப்படும் என்று கூறி மான்யம் பெறுவதற்கான முன்நிபந்தனையாக இதை மாற்றியது ஒரு பெரும்சாதனை. அப்படி மாற்றப்பட்ட பள்ளிகள் 1936ல் (9614 )ஒன்பதாயிரத்து 614 பள்ளிக்கூடங்கள் என்பதை மறப்பதற்கில்லை. 

சூத்திரர்களின் சமத்துவம் எதுவரை?

மேனாட்டு கல்வியும் பிரஞ்சு புரட்சியின் தாக்கமும்
கொண்ட நீதிக்கட்சியும் அதன் தலைவர்களும் பேசிய
கடைப்பிடித்த சமத்துக்கோட்பாடு எதுவரை ?
அவர்களாகவே கொடுக்கின்ற உரிமைகளைப் பெறும்
சாதியாக பஞ்சமர்கள் இருக்க வேண்டுமே தவிர
பஞ்சமர்களும் சூத்திரர்களும் சமத்துவமாக இருக்க
வேண்டும் என்ற சமத்துவக்கோட்பாட்டு ரீதியாக
இருந்ததா? 

தமிழ்ச்சமூகத்தை பிராமணர் , பிராமணர் அல்லாதோர் என்று இருவகைப் படுத்தியவர்கள் பிராமணர் அல்லாதோரில் இருக்கும்
இரு நிலையைப் பற்றி வெளிப்படையாக இன்றுவரை
பேசிக்கொள்வதில்லையே!
. அவர்களே இன்றுவரைச் சொல்லிக்கொள்ளும் அந்த சூத்திரநிலைக்கும் கீழே இருக்கும் பஞ்சமர்களுக்கு பிராமணர் அல்லாத தமிழ்ச்சமூக
அடையாளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இடம் எது?
நீதிக்கட்சிக்கு பஞ்சமர்களோடு 
ஏற்படும் முதல் கூட்டு ஒரு அரசியல்
கட்டாயத்தால் ஏற்படும் கூட்டணியாக இருக்கிறதே தவிர இவர்களே முழங்கும் சமத்துவம் என்ற சமூகப்புரட்சியின் காரணமாக அமையவில்லை என்பது தானே வரலாற்று உண்மை.

அவர்களாகவே முன்வந்து ஆதிதிராவிடர்களும் திராவிடர்கள் தான் என்றோ
பிராமணர் அல்லாதோர் என்று தாங்கள் ஏற்படுத்தி இருக்கும் அமைப்பின்
உள்வட்டத்தில் வருவதற்கு உரிமை உள்ளவர்கள் என்றோ உணர்ந்த காரணத்தால் கூட்டணி அமைத்ததாக தெரியவில்லை. அன்றைக்கு
ஒட்டுமொத்த பிராமணர் அல்லாதாரின் பிரதிநிதியாக தங்களை மட்டுமே அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அதுதான் -

1909ல் முஸ்லீம்களுக்கு மிண்டோ மார்லி சட்டப்படி தனித்தொகுதி வழங்கப்படது. 
பிராமணர் அல்லாதோருக்கும் அப்படியான
தனித்தொகுதி கேட்க விரும்பியது நீதிக்கட்சி. 
 நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயர் "நீதிக்கட்சி தான் சென்னை மாகாணத்தில் உள்ள 4 கோடி பிராமணர் அல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது " என்று மாண்டேகுவிற்குத்  தந்தி அனுப்பினார்.
அதை உறுதிப் படுத்த வேண்டுமானால் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக இருந்த ஆதிதிராவிடர்களின் ஒருமித்த ஆதரவையும் பெற வேண்டிய கட்டாயம் நீதிக்கட்சிக்கு ஏற்பட்டது. இந்த அரசியல் காரணம் மட்டுமே நீதிக்கட்சி ஆதிதிராவிட இனத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய இக்கட்டான சூழலை ஏற்படுத்தியது. 

பெரியாரின் தலைமை 

தந்தை பெரியார் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வரை இதுதான்
திராவிட இயக்க வரலாறு.

நம் கடவுள் சாதிக் காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
நம் மொழி சாதிக் காப்பாற்றும் மொழி
நம் அரசாங்கம் சாதிக் காப்பாற்றும் அரசாங்கம் (1950ல்
ராபின்சன் பூங்காவில் பெரியார் பேசியது)
என்றார். அவருடைய கருத்துகளில் அவர் உறுதியாக இருந்தார்.
மேனாட்டில் நாத்திகம் என்பது முழுக்கவும் அறிவியல் பார்வை.
ஆனால் பெரியார் பேசிய நாத்திகம் என்பது முழுக்க முழுக்க
சமூகநேயத்தை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டது. 
அதற்கு உதவியாகத்தான் அறிவியல் ஆயுதத்தைக் கையில்  எடுத்துக் கொண்டார்.  பெரியாரின் அயராத தொண்டும் அவர்
எதை எல்லாம் எதிர்த்தாரோ அதற்கெல்லாம் காரணமாக
இருந்தது சாதி, சாதி, சாதி மட்டும் தான் ..
பெரியாரின் காலக்கட்டத்தில் தான் ஆதிதிராவிடர்கள்
திராவிட இயக்கத்துடன் இணைந்து கலந்து  செயல்பட
ஆரம்பித்தார்கள். 

இந்த மாற்றங்களை மிகச்சரியாக அறுவடை செய்தது
திமுக. அறிஞர் அண்ணாவின் நாவன்மையும் தமிழ் மொழி
சங்ககால பொற்கால நினைவுகளும் தமிழ்ப்படித்த
அன்றைய கிராமத்து இளைஞர்களிடம் மிகப்பெரிய
உளவியல் மாற்றங்களைக் கொண்டுவந்தது.
இக்கிராமப்புற இளைஞர்களை  சொந்த ஊரில் நிலவுடமை சமூகமாக இருக்கும் ஆதிக்கச்சாதியினர் 
மதித்ததில்லை. பணிபுரியும் இடத்திலும் இவர்களுக்கு மரியாதை இல்லை. இப்படியாக தமிழ்மொழிக் கற்ற இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் பேசப்பட்ட தமிழின் பெருமையும் தமிழரின் பொற்காலமும் இவர்களை அந்த பெருமையின் அடையாளமாக உணரச் செய்தது.
கனவிலும் கிராமப்புறத்தில் தலைமைத்துவ இடத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் இருந்த இவ்விளைஞர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம்
கிராமத்தில் தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள். 

இக்காலக்கட்டத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் ஜேக்கப் பாண்டியன் அவர்கள் கிராமங்களில் 60க்குப்பின் ஏற்பட்ட இம்மாற்றத்தில் தலைமைத்துவ இடத்திற்கு 
ஆதிக்கச்சாதியைச் சார்ந்த இளைஞரும் அவருக்கு ஆதரவாக பிற சாதி இளைஞர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார். 


திராவிட அரசியல் கட்சிகள்

நாடகத்துறையில் சமூக சீர்திருத்தக்கருத்துகளைக் கொண்டுவருவதில்
பெரும்பணி ஆற்றி வெற்றி பெற்ற திராவிட இயக்கம், திராவிட
அரசியலும் வெளி. ரங்கராஜன் அவர்கள் சொன்னது போல
"எதிர்காலச் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய ஒரு இயக்கம் கடந்த காலப் பெருமைகளில் தன்னை இழக்க ஆரம்பித்தது. நம்முடைய வரலாற்றையும் இலக்கியங்களையும் பற்றிய அறிவு நிகழ்காலம் பற்றிய புதிய மதிப்பீடகளுக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமர்சனமற்று வெறும் கடந்த காலத்தைப் பூஜிப்பது மட்டுமே நிகழ்ந்தது.

திராவிட அரசியல் அதிகார மையம்

ஆட்சி அதிகாரம் வந்தப் பின் கட்சிகள் கார்ப்பரேட்
மையங்களாகிப் போயின.
 அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள  எதையும் செய்யும்
நாற்காலி மனிதர்களாக மாறிப்போனார்கள். 
இக்காலக்கட்டத்தின் முதன்மைப் பாத்திரம் என்னவோ 
மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள்தான்.

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தந்தை பெரியார்
இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை . ”நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ”குடி அரசை” வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை” என பிரகடனப்படுத்தியவர் 

ஆனால் கலைஞர் என்ன செய்தார்?.
கலைஞரும் முரசொலி மாறனும் இணைந்து தமிழ்ச்சமூகத்திற்கு
குங்குமம் வைத்தார்கள்.
சாவி குங்குமத்தின் ஆசிரியராக இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ள பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது. 

அப்போது திராவிட இயக்கத்தின் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு தலைமுறை
கேட்டது...

சூரியனே , உனக்குச் சூடில்லையா?
உனக்கு மட்டும் சாவி,
எங்களுக்குப் பூட்டா? என்று.

ஆனால் இக்கேள்விகள் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஏனேனில் திமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தப் பின்
திமுகாவில் சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக 1971ல் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று கலைஞரின் தலைமையில் இரண்டாவது முறை  ஆட்சிக்கு வந்தப்பின் நகர்ப்புறத்து முதலாளிகளும் கிராமப்புறத்து ஆதிக்கச்சாதியினரும் வெற்றி பெற்ற அரசியல் கட்சியில் சுயலாபத்திற்காக இணைகிறார்கள். இவர்கள் எவருக்கும் பெரியாரைப் பற்றிய புரிதலோ இயக்க வரலாறோ தெரியவில்லை என்பதுடன் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு திமுக தன் ஆரம்ப கால பாதையிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டது
என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

மத்தியில் கூட்டாச்சி
மாநிலத்தில் சுயாட்சி என்ற இன்னொரு துப்பாக்கியை
விளையாட்டுப் பிள்ளைகள் பயன்படுத்துவது போல திமுக பயன்படுத்திக்கொண்டதை , பயன்படுத்திக்கொண்டிருப்பதைக் காணும் பகுத்தறிவு உள்ள எவரும் இவர்கள் மீது மட்டுமல்ல, இவர்கள்
பேசிக்கொண்டிருக்கும் இக்கருத்துருவாக்கங்கள் மீதும்
நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்கள்

அதிமுக, மதிமுக, தேதிமுக என்று திமுக வரிசையில் வரும் எந்த ஒரு திராவிட அரசியல் கட்சிக்கும் திராவிட இயக்க பெரியாரிய
கொள்கைகளுக்கும்  எவ்விதமான தொடர்புகளும் கிடையாது.

திமுக எப்போதாவது பகுத்தறிவு பேசிக்கொள்வார்கள்
ஆனால் செயல்பாடுகளில் பூஜ்யமாகிப்போனார்கள்.
அதிமுகாவிலோ பகுத்தறிவு பேசினால் பதவி பறிபோகும்.
திராவிடர் கழகமோ அரசாங்கத்தின் அனுமதியோடு 
பேரணிகளும் கூட்டங்களும் நடத்துவதையே பெரும்சாதனையாக
சொல்லிக்கொள்கிறது.


தணிக்கை இல்லாமல் எங்கள் நாடகங்களை அரங்கேற்ற முடியும் என்றால் சமூகத்தில் புரட்சியை ஏற்படுத்திவிடுவோம் என்ற
குரலுக்குச் சொந்தக்காரர்களின் கைவசம் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் சாம்ராஜ்யமே இருக்கிறது!. ஆனால்
நடந்ததும் நடப்பதும் என்ன?

பகுத்தறிவு பேசிய அன்னை பராசக்தி
அண்ணாமலையாகி
ஆருடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

பகுத்தறிவு, சாதி ஒழிப்பு  கருத்துகளுக்கு அரைமணி நேரம் கூட
இவர்களால் ஒதுக்க முடியவில்லை. 
இவர்களின் தொலைக்காட்சிகள் வந்தப்பிறகுதான் 
இதுவரை மக்கள் கடைப்பிடிக்காத அறியாத
இந்து மதச் சடங்குகள் மிகவும் துல்லியமாக
மக்களிடம் காட்சிப்படுத்தப்பட்டன. 

பிற இயக்கங்கள்:

தமிழக   அரசியலில் தோன்றிய  தமிழ்த்தேசியம் : திராவிட இயக்கம்  வளர்த்த தமிழ்மொழிப்பற்றாளர்களுக்கும் இன உணர்வாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது , எனினும்
மொழிப்பற்றும் இனப்பற்றும் சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கி தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த்தேசத்தையும் உருவாக்கிவிடுமா?

தேசிய இன கருத்துருவாக்கத்திற்கு மொழி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது "பொதுவான வாழ்விட உணர்வு" இது இன்றுவரை தமிழ் மண்ணில் சாத்தியப்பட்டிருக்கிறதா? தமிழ் மண் சேரியாகவும் ஊராகவும்
பிரிந்து தானே இருக்கிறது. இது தமிழ்த்தேசியத்தின் தோல்வி.

அடுத்து திராவிட இயகக்த்துடன் இணையாகவும் இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்பே வளர்ந்த ஆதிதிராவிட இயக்கம். இவர்களில் பலர் திராவிட இயக்கத்தில் சங்கமித்து காணாமல் போனார்கள். மீதி இருப்பவர்களும் ஒடுக்கப்பட்ட
சாதியின் உள்சாதி அமைப்புகளாக சிதறிப்போனார்கள்.
அத்துடன் எப்போதும் திராவிட அரசியல் கட்சிகளின்
வீசி எறியப்படும் எலும்புத்துண்டுகளுக்கு காத்திருக்கும்
அவலமான நிலையில் இருக்கிறார்கள். சேரிகளும் கூட
இந்த நாட்டில் தனித்தனியாக அவரவருக்கான உள்சாதி
அடையாளங்களைத் தக்கவைத்துக்கொண்டு தான் இருக்கின்றன.
இங்கேயும் நம்பிக்கை கானல்நீராகிவிட்டது.

பொதுவுடமை இயக்கம் வளர வேண்டிய காலக்கட்டத்தில்
தமிழகத்தில் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம்.
திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சிக்குப் பின்
எதிர்காலம் இதை தமிழினத்தின் சாபக்கேடு என்று
விமர்சிக்கலாம். 
அரசியல் தளத்தில் 
திராவிட அரசியல் குதிரைகளின் மீதேறி சவாரி
செய்வதையை வழக்கமாக்கிக்கொண்டிருக்கும் இடது வலதுசாரிகளிடமிருந்து நாம் என்ன எதிர்ப்பார்க்கமுடியும்?

அரசியல் அதிகாரம் பதவி விருதுகள் எளிதில் கிடைக்கும் ஊடக
அங்கீகாரம் என்ற விஷக்கிருமிகள் தமிழ்நாடெங்கும் பரவிவிட்டன. அரசியலை மட்டுமல்ல, கலை இலக்கிய உலகத்தையும் கரையானைப் போல அரித்து தின்று கொண்டிருக்கின்றன. இச்சூழலில் எழுகின்ற இயக்கங்களும் அமைப்புகளும் கலைவடிவங்களும் காலூன்றி நிற்பதற்கு
முன்னரே காணாமல் போய்விடுகின்றன.

அம்பேத்கரின் அறிவாயுதம் சாதி ஒழிப்புக்கான ஆயுதம்
என்பதை கூர் மழுங்க வைத்ததில் இந்திய சாதிச் சமூகம்
பெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஏனேனில் அம்பேத்கர் இந்தியாவின் அறிஞரல்ல.
இந்தியாவைப் பொறுத்தவரை அவர் வெறும்
சாதித்தலைவர் மட்டும் தான். 
எவரெல்லாம் அம்பேத்கரைப் பற்றிப் பேசுகிறார்களோ
எழுதுகிறார்களோ அவர்கள் அனைவரும்
ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக மட்டுமே
இருக்க முடியும் என்பது தான் இன்று பொதுப்புத்தியில்
இருக்கும் கருத்து. (அதுதான் உண்மையாகவும் இருக்கிறது
என்பது அதைவிட கேவலம். அவலம்.)

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கருத்துக்கணிப்பு
ரொம்பவும் மேலோட்டமானது. 
http://indianexpress.com/…/one-in-four-indians-admit-to-pr…/
சாதி ஒழிப்பு என்பது
சாதிகளின் சமபந்தியால் ஒழியாது. சாதிகளின்
சம்பந்தி உறவுகளால் மட்டுமே ஒழியும். ஒழிக்க
முடியும்.

இதை முன்னெடுக்காத எந்த ஒரியக்கமும் சாதி
ஒழிப்பை எழுத்துக்கூட்டி மட்டுமே வாசிக்க முடியும்.
சாதித் திமிரின் மயிரைக் கூட அசைக்க முடியாது.








Sunday, November 30, 2014

நெல்லிக்கனி

என் நண்பனே...
எங்கே நீ ஒளிந்துகொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.
சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம் - என்றாய்.
பூமி உருண்டை என்பது உண்மைதான்.
ஆனால்
நம் சந்திப்பு மட்டும் எப்படி பொய்யானது?.

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள்
பெரியவர்கள் சிறியவர்கள்
எல்லோருடனும் பேசி சிரித்து
உண்டு உறங்கி
ஏறி இறங்கி
பயணம் செய்து
களைத்துப்போய் கண்மூடிக்கிடக்கிறேன்.
கனவில் என்னுடன் நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.
.
"ராக்கி"கட்டி
நம் நட்பை சகோதரப்பாசமாக
பரிணாமம் செய்து தொடர நினைத்தேன்.
நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.
நட்பு மேலானது என்பதால் தான்
எட்டாத உயரத்தில் நீ.
உன்னை எட்டிவிடும் கனவுகளில் நான்.
....
நான் அவ்வை
நீ என் அதியமான் என்றேன்.
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.
தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்...
("ஹேராம்" கவிதை தொகுப்பில் நெல்லிக்கனி என்ற நீண்ட கவிதையின் சில வரிகள்....)

Saturday, November 29, 2014

சிவாஜிகணேசனும் லதா மங்கேஷ்கரும்






நடிகர்திலகம் சிவாஜிகணேசனையும் பாடகி லதா மங்கேஷ்கரையும்
நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
அவ்ர்கள் இருவருக்குமான அந்த உறவு ஒரு கவிதையைப் போல
இனிமையானது. அர்த்தமுள்ளது. போற்றுதலுக்குரியது.

சிவாஜிக்கு லதாவுடன் தொடர்ந்து பேசும் அளவுக்கு இந்தி மொழி
தெரியாது. லதாவுக்கோ தமிழ் மொழி தெரியாது. அதனால் என்ன?
அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
சிரித்தார்கள். ஒருவர் கலைத்திறமையை ஒருவர் மதித்தார்கள்.
கொண்டாடினார்கள். தங்கள்  தந்தையின் சாயலை சிவாஜியிடம்
கண்டார்கள் அந்த சகோதரிகள், லதா மங்கேஷ்கரும்
ஆஷா போஸ்லேயும்,
அதனால் தானோ என்னவோ சிவாஜிக்கு "ராக்கி" கட்டி
தங்கள் அண்ணன் என்று உறவு  கொண்டாடினார்கள்.

அந்த உறவு இன்றுவரை சிவாஜியின் மறைவுக்குப் பின்னரும்
தொடர்கிறது. எதையெல்லாமோ இந்த சினிமாக்காரர்கள்
டாகுமெண்ரி எடுக்கிறார்களே.. லதா மங்கேஷ்கரிடம்
யாராவது இதைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்தால்
என்ன? 

ஏழைகளின் தாஜ்மஹால்



கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்...

பாரதிதாசனின் கவிதை வரிகள் வெறும் கற்பனை அல்ல.
நிஜமாகி இருக்கிறது. இதைச் செய்து காட்டியவன் உங்களையும்
என்னையும் போல ரொமபவும் சாதாரணமான மனிதன்,
எந்த ஆளபலமோ அரசியல் பலமோ பணபலமோ அதிகார பலமோ
இன்றி ஒற்றை மனிதனாக 22 வருடங்கள்  உழைத்து
ஒரு தனிமனிதன் தன் மனைவிக்காக கட்டிய தாஜ்மகால் இது!
அவன் பெயர் தசரத் மஞ்சிகி.
மனைவி பஃகுனிதேவிக்கு காயம் ஏற்பட்டவுடன் மருத்துவரிடம்
கொண்டு செல்லும் வசதி அவன் வாழ்ந்த சிற்றூரில் இல்லை. அவன்
கிராமத்திற்கும் மருத்துவமனை இருக்கும் தூரத்திற்கும் உள்ள தூரம்
என்னவோ 15கி.மீட்டருக்கும் குறைவானதுதான். ஆனால் இடையில்
இருப்பதோ ஒரு மலை. (gehlour hills) எனவே அந்த ஊரில் வாழும்
அனைவரும் மலையைச் சுற்றி 80 கி.மீ பயணித்து தான்
மருத்துவமனைக்குச் செல்ல முடியும். (atri and wazirganj of gaya town,
in bihar state)

காயமடைந்த தன் காதல்
மனைவியை எடுத்துக்கொண்டு 80 கி.மீ பயணித்து மருத்துவமனையைச்
சென்றடைவதற்குள் "யூ ஆர் டூ லேட்" என்று சொல்லி விடுகிறார் டாக்டர்.
அன்றைக்கு அவன் ஒரு முடிவு எடுக்கிறான். இம்மாதிரி ஒரு காரணத்தால்
எனக்கு ஏற்பட்ட இழப்பு இனி எவருக்கும் ஏற்படக்கூடாது என்று.

கையில் கடப்பாறை, கூடை, மண்வெட்டி சகிதம் மலையடிவாரம் சென்று
இரவு பகலாக மலையை உடைக்கிறான். ஊரும் உறவும் அவ்னைப் பார்த்து
எள்ளி நகையாடுகிறது. " சரியான லூசுப்பய" என்று தானே நம் சமூகம்
சொல்லி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மலை உடைகிறது.
அவன் உழைப்பைக் கண்டு ஒரு சிலர் அவனுக்கு உணவும் இன்னும்
சிலர் அவனுக்கு போனால் போகிறது என்று மலையை உடைத்தெடுக்க
கடப்பாறையும் கொடுத்து உதவுகிறார்கள். நாட்கள் மாதங்களாகி
மாதங்கள் வருடங்களாகி வருடங்கள் உருண்டோடி... 22 ஆண்டுகள்..
.. மலையைக் குடைந்து அவன் பாதையை போட்டுவிட்டான்.
80 கி.மீ பயணிக்க வேண்டிய அவசியமில்லை இனி, அவன்
கிராமத்து மக்களுக்கு. 13 கி.மீ தூரம் பயணித்தால் போதும்.

360 அடி நீளம், 25 அடி ஆழம், 30 அடி அகலம் .. கொண்ட இந்த
மலையைக் குடைந்து தனிமனிதன் உருவாக்கிய தாஜ்மஹால்.....
பளிங்கு கற்களால் மன்னன் ஷாஜஹான் தன் மனைவி மும்தாஜுக்கு
கட்டி எழுப்பி இருக்கும் தாஜ்மஹாலை விட எந்த வகையிலும்
குறைந்ததில்லை. என்னளவில் இதுவே எனக்கும் என் வருங்கால
தலைமுறைக்கும் என்றும் நம்பிக்கை கொடுக்கும் தாஜ்மஹால்.


Monday, November 24, 2014

புத்தகம் வெளியிட இருக்கும் தோழிக்கு



என் தோழியைப் பற்றி நானே பெருமையாக சொல்லிக்கொள்ளக்கூடாது..
இந்த ஆகாயத்தின் கீழிருக்கும் எதைப்பற்றியும் அவளுடன் என்னால்
உரையாட , விவாதிக்க  முடியும். முரண்படும் கருத்துகளும் உண்டு.
எங்கள் நட்புக்கு அவை எதுவும் தடையாக இருந்ததில்லை.
 தோழியைப் பற்றிய இவ்வளவு அறிமுகம் ஏன்?
என்று நினைக்கின்றீர்களா?
நான் எழுதப்போகும் விஷயத்தை நீங்கள் வழக்கம் போல புனைவு
என்று கருதிவிடக் கூடாதல்லவா... அதனால்தான்!

உண்மைகளை புனைவுகளாகவும் புனைவுகளை அபுனைவுகளாகவும்
கருதிக்கொள்வதில் நிறைய வசதிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது
நான் சொல்லப் போவதெல்லாம் ரொம்பவும் தீவிரமாக யோசித்து
உதிர்க்கும் கருத்துகள் தான்.

அவளுக்குப் புத்தகம் வெளியிட வேண்டுமாம். அதுவும் கவிதைப்
புத்தகம். சரி.. பேஷா வெளியிடலாம்.. என்று நான் வேறு ஒருநாள்
சொல்லி வைத்ததால் தினமும் நச்சரிக்கிறாள்.

அவளுக்குச் சொன்ன டிப்ஸ்:

1)"உன் கவிதைப் புத்தகங்களை தமிழ்நாட்டில் இருக்கும் இரு
உலகப் பெயர் பெற்ற பதிப்பகங்க்கள் வெளியிட்டால் தான்
நீ கவிஞர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவாய். அதிலும்
குறிப்பாக "பெண்ணியக்கவிஞர்" என்று.

2) புத்தகவெளியீட்டையும் ஜாம் ஜாம்னு நடத்த வேண்டும்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடத்தினால் தான் கவனிக்கப்படுவாய்.

3) புத்தக வெளியீட்டிற்கு கட்டாயம் ஸ்டார் அந்தஸ்த்து கவிதாயினி/
ஸ்டார் அந்தஸ்த்து வெகுஜன பத்திரிகையில் எழுதும் எழுத்தாளர் அவருடன்
ஒரு வலது/இடதுசாரி எழுத்தாளர் கட்டாயம் இருக்கிற மாதிரி பார்த்துக்
கொள்ள வேண்டும். அப்போதுதான் மீடியா கவனிக்கும். புரட்சி எழுத்தாளர்
என்ற அடையாளமும் வந்துவிடும்.

4) மாடலிங் துறையில் profile  தயாரிக்கிற மாதிரி நீயும்
ஒரு profile தயாரிக்க வேண்டும். உனக்கு என்று
ஒரு தனி காமிரமேன்/காமிரவுமனை வைத்துக் கொண்டால்
நல்லது.

5) இன்னொரு ரொம்ப முக்கியமான விஷயம். என் தோழி என்பதால்
வெளிப்படையாக சொல்கிறேன்.
நீ கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.
இத்தனை வருட என் எழுத்து அனுபவத்திலிருந்து
சில கசப்பான உண்மைகள்..
சொன்னா புரிஞ்சிக்கோ..
எழுத்து, திறமை, சுய சிந்தனை, சுயமரியாதை, வாசிப்பனுபவம்,
புரட்சி கருத்துகள்.. எல்லாம் வெறும் புண்ணாக்கு தான்
இத்தியாதி சகல்த்தையும் விட வலிமையானது ஜாதி.
அதனால் தான் சொல்றேன்..
 எழுத்து மற்றும் ஊடகத் துறையிலிருக்கும்
 உன் ஜாதி ஆட்களைக் கொஞ்சம்
கவனிச்சிக்கோ. என்னை மாதிரி "சாதியற்றவள்" என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு குட்டிச்சுவராகிவிடாதே!



Sunday, November 23, 2014

வங்கிகளைக் கொள்ளையடிக்கும் முகமூடி இல்லாத திருடர்கள்


(amount in crores)






பிள்ளைங்க மேற்படிப்பு படிப்பதற்கு கடன் வாங்கும் நம்மிடம்,
இடிந்து கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க கடன் வாங்கும் நம்மிடம்,
ஏதோ நாமும் காரில் போனால் என்ன? என்று ஒரு பழைய காரை
வாங்க ஆசைப்பட்ட காரணத்திற்காக அலைக்கழிக்கப்பட்ட நம்மிடம்,
குமரு கரையேத்த கடன் வாங்கும் நம்மிடம்,
கிணறு தூரு வாரினால் ஏதோ தக்காளியும் மிளகாயும் பயிர் வச்சிடலாமா,
அதனாலே நாலு காசு சேர்ந்திடாதா என்ற கனவில் கடன் வாங்கும்
நம்மிடம்... கடன் வாங்கும் முன் தன் பொண்டாட்டியைத் தவிர
பிற அசையும் அசையா , உயிருள்ள உயிரற்ற அனைத்தையும்
அடமானமாக எழுதி வாங்கி கடன் கொடுக்கும் வங்கிகள்
கீழக்கண்ட பெரிய மனிதர்களுக்கு எப்படி கடன் கொடுத்தன?
எதை அடமானமாக வைத்து கடன் கொடுத்தன?

வங்கிகளின் வருமானம் பெரும்பாலும் அவர்கள் கொடுத்திருக்கும்
கடனுக்கான வட்டியிலிருந்து வருவது தான். இன்று பல வங்கிகளில்
வட்டி மட்டுமல்ல, முதலுக்கே மோசம் செய்திருக்க்கிறார்கள்
சில முகமூடி அணியாத பகற் கொள்ளைக்காரர்கள்.
இந்தப் பகற்கொள்ளைக்கு காரணம் அந்தக் குறிப்பிட்ட
வங்கியில் பணி புரிபவர்களோ அல்லது ஏன் அந்தக் குறிப்பிட்ட
வங்கியின் மேனேஜரா அல்ல என்பது தான் இன்னும் கூடுதலான
அதிர்ச்சி தரும் உண்மை

தாஜ், ஒபேரா நட்சத்திர ஹோட்டல்களில்
கான்பரன்ஸ் என்ற பெயரில் நடக்கும் விருந்துகளில்
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் டைரக்கடர்கள்
ஒப்புதலுடன்(வற்புறுத்தலுடன்) வங்கியின் சேர்மன்
முன்னிலையில் இப்பகற்கொள்ளை நடக்கிறது.


கடந்த நிதி ஆண்டு முடிவுடன் ஒப்பிடும் போது
 மொத்த வாராக்கடன் 63,386 கோடி ரூபாய்
அதிகரித்திருக்கிறது.
 இந்த தகவலை என்.பி.ஏ.சோர்ஸ் டாட் காம் தெரிவித்திருக்கிறது.

SBI - march 2014. INR. 51,189 crores. 3RD QTR 2014. INR  67,799. CRORES.

UBI - march2014   INR    2,963. crores 3RD QTR 2014  INR   8,546. CRORES.

IDBI- march2014   INR    6,450  crores 3RD QTR 2014  INR 10,012. CRORES.

BOB-march 2014  INR   7,983   crors   3RD QTR 2014  INR 11,926  CRORES

மொத்த வாராக்கடன் இந்த 9 மாதங்களில் மொத்தம் 49 விழுக்காடு
அதிகரித்திருக்கிறது. 4வது காலண்டில் இது இன்னும் மோசமடையும்!

வங்கிகளின் வாராக்கடனில் இரும்பு–உருக்கு, உள்கட்டமைப்பு,
விமானச் சேவை, ஜவுளி மற்றும் சுரங்கம் ஆகிய ஐந்து துறைகளின்
 பங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இந்த ஐந்து துறைகளும்
மிக முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன என்றும் நாட்டின்
பொருளாதர வளர்ச்சிக்கு ஏற்ப இத்துறைகளின் வளர்ச்சியும்
இருக்கும் . இதை  அடிக்கடி நம் நிதித்துறை அமைச்சர்கள்
நமக்குப் புரியாத கணக்குகளைச் சொல்லி விளக்கம்
சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இதில் உள்கட்டமைப்பு,
சுரங்க தொழில் துறைகளில் இருக்கும் ஊழல்களை
நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

இந்த வாரக்கடனில் முக்கியமானவை மொத்தத்தில் 30க்குள்
இருக்கும். வாராக்கடனில் 80 விழுக்காடு இந்த குறிப்பிட்ட
30 பெரும்புள்ளிகளின் கடனுக்குள் அடக்கம்.
மாதிரிக்கு சிலரின் பெயர்களும் கடன் விவரமும்.
அட்டவனையில் உள்ளது.

இந்தப்பட்டியல் தவிர நம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள்,
அவர்களின் உறவினர் என்று இருக்கும் பட்டியல் தனிப்பட்டியல்.

வாராக்கடன் வசூலிக்கும் முறை, சட்டதிட்டங்கள், ரிசர்வ் வங்கியின்
நடவடிக்கை, இதை எல்லாம் கண்காணிக்கும் குழு... இப்படி
இந்த வாராக்கடனுக்கு பல்வேறு செலவினங்கள் வேறு
தொடர்ந்து கொண்டிருக்கிறது.





குறிப்பு:

http://www.arcil.co.in/data/news/DNA_MUM_20_11_14.png

http://firstbiz.firstpost.com/corporate/bank-union-puts-out-npa-list-kingfisher-top-defaulter-47383.html

Wednesday, November 19, 2014

புனிதவதி தொலைத்த மாங்கனி





மாங்கனியில் சித்துகள் காட்டிய சிவன்
அறிந்திருக்க நியாயமில்லை.
புனிதவதியின் பெருமூச்சுகளை.

அவன் சுவைத்த மாங்கனிகள்
கசக்கட்டும்
அவன் ரசித்த மாவிலைகள்
உதிர்ந்து போகட்டும்
அவன் தூங்கிய மரக்கிளைகள்
ஒடிந்து விழட்டும்.
அவனுடன் வாழ்ந்த உடல்
அவனை அவன் முத்தத்தின் ஈரத்தை
எப்போதும் சும்ந்து கொண்டே
இருப்பதால்..
மருதம் திரிந்து பாலையாகட்டும். 

பாலையின் பேயுருவில்
யெளவனம் தொலைத்த புனிதவதி
இமயம் வரை அலைந்து திரிந்தாள்.

தென்னாடுடைய சிவனே 
போற்றி போற்றி
உன் நெற்றிக்கண் அறிந்திருக்க
நியாயமில்லை
இமைகளை தொலைத்த 
விழிகளின் கனவுகளை.

புனிதவதியின் பெருமூச்சில்
இமயத்தின் பனிப்பாறைகள் உருகி
கங்கையாக யமுனையாக
பெருக்கெடுத்து ஓடுகிறது.
பரமதத்தன் நினைவுகளைச் சுமக்கும்
அந்த மேகங்கள்
இன்னும் இளைப்பாறவில்லை.