Tuesday, February 23, 2010

KHANS vs GANDHIS




MY NAME IS KHAN திரைப்படம் உள்ளூர் அரசியல் தாதாகிரி தனங்களால்
மிகுந்த பரபரப்புகளுக்கு நடுவில் திரையிடப்பட்டது மும்பையில்.
அதனாலேயே நிறைய ஸ்டார் அந்தஸ்த்தை திரைவிமர்சன ஊடகத்தில்
மிகவும் எளிதாகவும் பெற்றது. My name is khan, iam not a terrorist
இதுதான் கதையின் மையம். வழக்கம் போல கரண் ஜோகரின் காட்சி
அமைப்புகள் வெளிநாட்டு கதை தளம் ,. கதாநாயகன் பெஞ்சில்
உட்கார்ந்திருக்கும் காட்சி , இத்தியாதி நிறைய சொல்லிக்கொண்டே
போகலாம்.

பம்பாய் , ரோஜா, நாயகன் என்று இந்தியாவின் வெவ்வேறு இடங்களை
கதைத்தளமாக்கி இந்திய முகத்துக்கு ஏற்ற மாதிரி நடிகைகளைத் தேர்வு
செய்து இந்தியாவின் பெருநகரங்களில் வசூலை அள்ளும் வித்தையில்
மணிரத்னம் எப்படி கெட்டிக்காரரோ அது போலவே பாலிவுட்டில்
வெளிநாட்டு இந்தியர்களை முன்வைத்து அதற்கு ஏற்றது மாதிரி கதைக்கரு,
கதை நிகழ்வுகள், கதை நிகழ்விடங்களை அமைத்து இந்திய பாலிவுட்
சினிமாவை உலக அரங்கில் ஜெர்மன், சீனா, ஜப்பான், அமெரிக்கா, நார்வே,
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் அரபு நாடுகளுக்கு எடுத்துச் சென்று
டாலர்களிலும் யூரோக்களிலும் குளிர்காயும்
வித்தையை நடத்திக் கொண்டிருப்பவர் கரன் ஜோகர். போலந்து, ஜெர்மனி, ரஷ்யாவில் எந்த பாலிவுட் படங்களுக்கும் கிடைக்காத சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது என்பதும் உண்மை.


அதற்கான மிகச்சிறந்த கதைக்கருவாக கிடைத்திருப்பது அமெரிக்காவில்
11/9 க்கு முன்பும் அந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னும் .
கதைக்கரு, தளம் இவற்றில் கரண் கள ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என்று
குறைபட்டுக் கொள்கிறார் நியுயார்கிலிருந்து திரைவிமர்சனம் எழுதும் அஸீம் சாப்ரா. (Aseem Chhabra). இந்த விமர்சனங்கள் எப்படி இருந்தாலும்
MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்கு , மற்ற KHAN நடிகர்களிடம் இல்லாத துணிச்சல் ஷாருகானிடம் இருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டுவதில் தவறில்லை.


கதையில் அவருக்கிருக்கும் உளவியல் சிக்கலும் அதன் காரணமான
உடல் அமைப்பு, எண்ணம், செயல்பாடுகளில் காட்டும் வித்தியாசம்
கதைக்கு வலு சேர்க்கிறதா என்பதை கரண் ஜோகரிடம் தான் கேட்க வேண்டும்.
கதை நாயகன் இப்படிப்பட்டவனாக காட்டப்பட்டால் தான்
MY Name is khan, iam not a terrorist என்று அவன் அமெரிக்க ஜனாதிபதியிடம்
சொல்ல நினைப்பதை மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று
கற்பனை செய்து ஒரு மிகப்பெரிய விசயத்தைச் சொல்வதற்கு ஒரு நொண்டிக்
குதிரையில் பயணித்திருக்கும் கோமாளித்தனத்தைக் கண்டு காமெடி
காட்சி இல்லாத குறையை இப்படி நிவர்த்தி செய்து கொண்டார்களோ என்று
சமாதானம் சொல்லிக்கொண்டாலும் .. சரி விட்டு தள்ளுங்கள்.

இனி விசயத்திற்கு வருவோம். நடிகர் ஷாருகானுக்கு அமெரிக்கா போயிருந்தப் போது அவருடைய KHAN என்ற பெயர் அடையாளம் காரணமாக தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பல மணிநேரம் காத்திருக்க வைத்தார்கள். மம்முட்டிக்கும் இதே நிலமை ஏற்பட்டது. ஏன் இந்தியாவின் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே இந்த அனுபவம் ஏற்பட்டதை எல்லோரும் அறிவோம்.

மத அடையாளத்தை தீவிரவாதியின் அடையாளமாகக் காட்டியதில் வல்லரசுகள்
மட்டுமல்ல, உலகளாவிய அனைத்து ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு
இருக்கத்தான் செய்கிறது.

அதனால் தான் MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதில்
இருக்கும் புரிதல், MY name is Rahul, iam not a terrorist என்று சொல்வதில்
கிடைப்பதில்லை.


அமெரிக்காவின் இச்செயல் என்னவோ 11/9 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றம் என்றோ உளவியல் சிக்கல் என்றோ கரண்ஜோகர் காட்டியிருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையல்ல. ஏனேனில், ஈரானிய திரைப்படம் - வட்டம் (2000) படத்தின் இயக்குநர் (Jafer Panahi) ஜாஃபர் பனாஹி டிரான்ஸிட் விசா வைத்திருக்கவில்லை என்ற காரணத்திற்காக நியுயார்க்
விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு ஹாங்காங்குக்கே திருப்பி அனுப்ப பட்டார்.
ஹாங்காங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்து புவனோஸ் அய்ரஸில் நடக்கும் திரைப்பட விழாவுக்கு செல்லும் வழியில் 15.4.2001ல் இது நடந்தது. அப்போது அமெரிக்காவில் அவரது வட்டம் திரைப்படம் திரையிடப் பட்டிருந்தது. அப்படத்திற்காக அவருக்கு "கருத்துச் சுதந்திரத்திற்கான" பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை திருப்பி அனுப்பி தனக்குப் பட்டம் வழங்கிய திரைப்பட சங்கத்திற்கு அவர் எழுதிய கடிதத்தில் அவர் கைது செய்யப்பட்டு கேவலமாக நடத்தப்பட்டதைப் பதிவு செய்திருக்கிறார்.

KHAN என்ற பெயர் அடையாளம் அமெரிக்கர்களுக்கு
மட்டுமல்ல நம் மகாத்மாக்களுக்கும் அலர்ஜியாகத்தான் இருந்திருக்கிறது.


இல்லை என்றால் இந்திய ஜனநாயகத்தின் அரச பரம்பரைக்கு காந்தி என்ற
அடையாளம் ஏன் வலிந்து கொடுக்கப்பட்டது?
Khans எல்லோரும் காந்தி என்று மாற்றம் பெற்றது ஏன்?
இந்திராகாந்தி கான். ராஜீவ்கான், சோனியாகான், ராகுல்கான்..
இப்படியாக ஒரிஜினலாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
இந்திராகாந்தியின் பெயரில் இருக்கும் காந்தி யார்?
இப்படி நிறைய கேள்விகள் அண்மைக்கால வரலாற்றிலிருந்து
மிகவும் சாதுரியமாக கள்ள மவுனத்தின் மூலம் மறைக்கப்பட்டு
மறக்கப்பட்டு விட்டது.









இந்திரா மணந்து கொண்ட ஃப்ரோஸ்கான் எப்படி, ஏன் ஃப்ரோஸ்காந்தி
ஆனார்? யார் காரணம்?
இந்திராவின் கணவர் பெயர் feroze khan. இவர் நவாப் கானின் மகன். நவாப்கான்
பார்ஸி பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இசுலாமிய தந்தைக்கும்
பார்ஸி தாய்க்கும் பிறந்தவர் ஃப்ரோஸ்கான். ப்ரோஸ்கானின் தாய் இசுலாமிய
மார்க்கத்திற்கு மாறி நவாப்கானைத் நிக்காக் செய்து கொண்டார்.
ஃப்ரோஸ்கானின் தாய் வழி குடும்ப பெயர் காந்தி என்று சிலர் சொல்கிறார்கள்.
அவருடைய தாய் பார்ஸி என்பதும் பார்சிகளில் காந்தி என்ற குடும்பபெயர்
இருப்பதும் மறுப்பதற்கில்லை. இலண்டனில் மசூதியில் இந்திராவும்
ஃப்ரோஸ்கானும் நிக்காக் செய்து கொண்டதை இலண்டன் பத்திரிகைகள் செய்தியாக்கின.

அதன் பின் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டவர்
மகாத்மா என்று போற்றப்படும் கரம்சந்த் மோகன் தாஸ் காந்தி அவர்கள்.
காந்தி தன்னுடைய குடும்ப பெயரை ஃப்ரோஸ்கானுக்கு கொடுத்தார்
என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எல்லாம் யாரும் நினைத்தால்
சம்பந்தமில்லாமல் யாருடைய குடும்ப பெயரையும் யாருக்கும் கொடுக்க முடியுமா என்ன? இதெல்லாம் மகாத்மாவுக்குத் தான் வெளிச்சம்.

சத்தியம் தவிர வேறு எதையுமே பேசாத எழுதாத நம் மகாத்மாவின்
சத்திய சோதனையில் இந்த பெயர் மாற்ற கதை மட்டும் மிஸ்ஸிங்.!!

இந்திரா , ஃப்ரோஸ்கான் திருமணத்தை எதிர்த்த நேருவுக்கு காந்தி
வழங்கிய இந்த அதி அற்புதமான மந்திரவிளக்கு khan களை காந்தியாக்கியது தான்..
இலண்டனில் ஃப்ரோஸ்கான் என்ற பெயர் ஃப்ரோஸ்காந்தி என்று ஒரு
அஃபிடவிட் (affidavit) மூலம் மாற்றம் பெற்றது. இதில் ரொம்பவும்
புத்திசாலித்தனமாக இது பெயர் மாற்றம் மட்டும்தான், மத மாற்றம் அல்ல
என்பதும் குறிக்கப்பட்டது. அதன் பின் இந்தியா திரும்பியவுடன் இந்திராவுக்கும்
கானாக இருந்த காந்தியாக மாற்றப்பட்ட ஃப்ரோஸ்காந்திக்கும் இந்திய இந்து
வைதீக முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

ஃப்ரோஸ்காந்தி இறந்தப் பின் இசுலாமிய முறைப்படி புதைக்கப்படவோ இல்லை
பார்சிகள் முறைப்படி வல்லூறுகளுக்கு இரையாக மரணக்கிணற்றில் வீசப்படவோ இல்லை. இந்து முறைப்படி சிதைக்கு எரியூட்டினார்கள்.
சாம்பலை எடுத்து வந்து அலகாபாத்தில் கல்லறை கட்டப்பட்டது.
ஃப்ரோஸ்காந்தியின் கல்லறையை காந்தி அரச பரம்பரையில் வந்த யாரும் கண்டு கொள்ளவில்லை. ஏனேனில் உண்மையில் அது காந்தியின் கல்லறை அல்ல கானின் கல்லறை என்ற மண்ணுக்குள் புதைக்கப்பட்ட உண்மைதான்.

தாய்வழி குடும்ப பெயரைப் பயன்படுத்துவது தவறு என்று சொல்லவரவில்லை..
இந்திய அரசியலில் இந்தப் பெயர் மாற்றம் எவ்வளவு சாதுரியமாக,
திட்டமிடப்பட்டு எதிர்கால அரசியல் அதிகாரப்பகிர்வுக்கு துணை செய்யும்
வகையில் ஆளும் வர்க்கத்தால் சாதிக்க முடிந்தது என்பதை நினைத்துப்
பார்க்க வைத்தது ஏதொ ஒரு வகையில் இந்தப் படம் .

MY Name is khan, iam not a terrorist என்று சொல்வதற்குப் பதிலாக
MY Name is Gandhi, iam not a terrorist என்று சொல்லிப்பாருங்களேன்.
கேட்பவர்கள் நமக்கு எதோ ஆகிவிட்டது என்கிற மாதிரி பார்ப்பார்கள்.
நமக்கே கூட சத்தமாக அதைச் சொன்னால் ஏதொ கருத்துப்பிழை
உள்ள சொல் தொடரைச் சொன்னது போலிருக்கும்!!

பால் பச்சையாக இருக்க முடியுமா?
ரோசா செடியில் மல்லிகைப் பூக்குமா?
காந்தி தீவிரவாதியாக இருக்க முடியுமா?
என்று நம் மூளையே நம் கட்டுப்பாட்டை மீறி நம்மிடம் பேச ஆரம்பிக்கும்!

காந்தி, எங்கள் தேசப்பிதாவே.. உங்களின் எளிமைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அரசியல் ஞானம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அதிலும் குறிப்பாக தன்னுடைய அடையாளப் பெயரான காந்தி என்ற
குடும்ப பெயரையே ஃப்ரோஸ்கானுக்கு வழங்கிய உங்கள் அரசியல் அறிவு
யாருக்கு வரும்? ஜவஹர்லால் நேரு குடும்பம் இதற்காக உங்களுக்கு
நன்றி சொல்கிறார்களோ என்னவோ... இந்திய மக்கள் நாங்கள் நன்றி
சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்!.

ஷாருக்கானுக்கு ஒரு குட்டி அட்வைஸ். ரொம்பவும் மெனக்கெட வேண்டாம்.
MY Name is khan, iam not a terrorist என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிய
வேண்டாம். ஒரு அஃபிடவிட் வாங்கி உங்கள் khan பெயரை காந்தி என்று
மாற்றிக் கொள்ளுங்கள். ஷாருக்காந்தி ..... சொல்வதற்கு இனிமையாகத்தான்
இருக்கிறது.

Wednesday, February 10, 2010

பெண்வழிபாடு

*வளர்ச்சி கூடவும் தளர்ச்சி நீங்கவும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளவும். துர்க்கையை வழிபட்டால் துயரங்கள் நீங்கும்* அவளுக்கு வயது 13 அவள் பேதை. * வளர்ந்த ஆண் மூட்டைப் பூச்சி பாலுறவு கொள்ள முயலும் போதுதான் பெண் மூட்டைப் பூச்சிக்கு பெண் குறி இல்லை என்பதை அறியும். ஆனாலும் அது மனம் தளராமல் தன் ஆண் குறி மூலம் பெண் மூட்டைப் பூச்சியின் உடலில் துளையிட்டு ஒரு பெண்ணுறுப்பை உருவாக்கி அதன் மூலம் பாலுறவுக் கொள்ளும். * பேதையின் மலரும் மொட்டுகள் காற்றில் அசைந்தாடியது. டாப் ஸ்லிப் அதற்குள் அணியும் டைட் ப்ரா அவள் இன்னும் அணிய ஆரம்பிக்கவில்லை. அதனோலேயே எப்போதும் புத்தகக்கட்டை பையிலிருந்து எடுத்து மார்பில் சேர்த்து அணைத்துக் கொண்டு நடப்பது அவளுக்கு வழக்கமாகிவிட்டது. எப்பொதும் கணக்கில் தப்பு செய்தால் 'ணங்'குனு தலையில் கொட்டும் டியூசன் சார் இப்போது அப்படிக் கொட்டுவதில்லை. பக்கத்தில் வந்து முதுகுப் பக்கமாக தட்டுவதும் அப்படியே கைகள் முன்பக்கம் நகர்த்துவதும் யாரும் பார்க்காத போது அப்படியே விரல்களால் கிள்ளிவிடுவதுமாக.. கத்தவும் முடியவில்லை . யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. டியூசனுக்குப் போகமாட்டேன்னு அழுது அடம்பிடித்து எல்லா ரகளையும் செய்து பார்த்துவிட்டாள். " நீ வாங்கற மார்க்குக்கு டியூசன் வேண்டாம்னு வேற சொல்றியா?" வீட்டில் ஆள் ஆளுக்கு திட்டியது தான் மிச்சம். 'அந்த சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. அதுதான் போகமாட்டேனு சொல்றா" 'இவ சேட்டை எல்லாம் அவருக்கிட்ட நடக்காதில்லே.. அதுதான்.." 'ஏண்டா.. அவதான் ஒரே ப்டிவாதமா போகமாட்டேன்கிறாளே பொம்பளைக் குட்டி படிப்புக்கோசரம் ஏண்டா இப்படி அலட்டிக்கிறே...' 'சும்மா இரும்மா.. இவ படிச்சா தான் இவளுக்கு லைஃப். என்ன பண்றது மூத்தவா அவுங்க அம்மா மாதிரி சிவப்பா பிறந்திருக்கா பிரச்சனை இல்லை.. இவ என்ன மாதிரி கருப்பால்லே இருக்கா. எதோ ஒரு எஞ்ஜினியரிங் அது இதுனு படிச்சி நல்ல சம்பளம் வாங்கினா அவ படிப்பையும் சம்பளத்தையும் பார்த்து நல்ல இடமா அமையும்னு நான கணக்குப் போடறேன்.. இவ என்னடானா என் கணக்கை தப்பாக்கிடுவா போலிருக்கே.. மகன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்று பெரிசு மவுனமாக முந்தானையை எடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் மார்பகங்களை போர்த்து இழுத்துச் சொருகிக்கொண்டது. அப்பா மட்டுமில்லை சித்திமார் மாமா என்று சொந்த பந்தங்கள் எல்லோரும் அவள் அவளுடைய அப்பா மாதிரி கருப்பா பிறந்ததுக்காக ரொம்பவும் தான் வருத்தப்பட்டுக்கொண்டார்கள். அவளுக்கு அப்படி எல்லாம் வருத்தமே வருவதில்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்து அடிக்கடி ரசித்துக் கொள்வாள். அதுவும் குளித்துவிட்டு வந்தவுடன் டவலைச் சுத்திக்கொண்டு இடுப்பு சுளித்துக் கொள்கிற மாதிரி தனக்குத் தெரிந்த ஒவ்வொரு நடிகையின் குளிக்கிற காட்சிகளையும் நடித்து நடித்து தன்னைத் தானே ரசித்துக் கொண்டிருப்பாள். எப்படியோ ஒருவழியாக டியுசன் முடிந்தது. என்னவானாலும் சரி இனிமேல் இந்த மாதிரி டியுசன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடாது என்று தீர்மானித்துவிட்டாள். +2வில் எல்லோரும் டீச்சர் xy யிடம் தனிக்கோச்சிங் அதாவது பிரைவேட் டியூசன் எடுத்துக் கொண்டார்கள். சும்மா சொல்லக்கூடாது டீச்சரின் கோச்சிங் மாணவர்கள் தான் இதுவரை கணக்கில் 100/100 எடுத்துக்கொண்டிருந்தார்கள் என்ற ரிகார்டு வேறு இருந்தது. அதிலும் லேடி டீச்சர் என்பதால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றொர்கள் பயமில்லாமல் போட்டார்கள். மற்றவர்கள் கோச்சிங் பீஃஸை விட 5000 ரூபாய் அதிகம் என்றாலும் லேடி டீச்சர் என்பதால் பெற்றோர்கள் விரும்பி பணத்தைப் பற்றி அதிகம் பொருட்படுத்தாமல் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து சேர்த்தார்கள். 10 மாணவர்களுக்கு மேல் சேர்ப்பதில்லை என்பதால் ரொம்பவும் டிமாண்ட் இருந்தது. அவளுக்கு இடம் கிடைத்தது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். *அவளுக்கு வயது 15. அவள் பெதும்பை * * கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சுமந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடுகிறது. ஆண் கருமுட்டை மீது விந்து பொழிந்து அதை வளர்க்கிறது. பின்பு குட்டிகளை ஈன்று கடலில் விடுகிறது. * பெதும்பைக்கு டீச்சர் நன்றாகவே கணக்கு சொல்லிக்கொடுத்தாள். ரொம்பவும் கண்டிப்பாகவும் இருந்தாள். எப்போதும் சிடு சிடு வென இருப்பதாக அவளுக்கு தோன்றியது. கொஞ்சம் இந்த டீச்சர் சிரித்தால் நல்லா இருக்குமோனு நினைத்தாள். அதை எப்படியும் டியூசன் முடிவதற்குள் டீச்சரிடம் சொல்லிவிட வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள். இதற்குள் வீட்டில் அவள் அக்காவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அக்கா நல்ல கலர். இருந்தாலும் அவள் அழகாக இருக்கிறாள் என்பதாலேயே யாரும் சீர் செனத்தி இல்லாமல் அக்காவைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. அக்காவுக்கு நகைச் செய்யும் போதும் சரி வெள்ளிப் பாத்திரங்கள் வாங்கும் போதும் சரி இவளுக்கே இப்ப்டினா இந்தா நிக்காளே இவளுக்கு என்ன பாடு படப்போறேனோ என்று அப்பா பெதும்பையைப் பார்த்து அடிக்கடி சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். வழக்கம் போல அதை எல்லாம் கேட்டும் கேட்காதது மாதிரி அக்காவின் திருமணத்தில் தான் என்ன மாதிரி உடை அணிந்து கொள்ள வேண்டும், அதை உடுத்துக்கொண்டு எப்படி அங்கேயும் இங்கேயும் நடக்க வேண்டும் என்று ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெதும்பை. அக்காவைப் போலவே மாப்பிள்ளையும் நல்ல கலரா உசரமா இந்த டி,வி விளம்பரத்தில் வர்றவன் மாதிரி எப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் சிரிப்பு பெதும்பைக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அக்கா திருமணத்தால் டியுசனுக்கு ஒருவாரம் போகமுடியவில்லை. டீச்சர் அதற்குள் ஒரு சேப்டர் நடத்தி அடுத்த சேப்டருக்கு போய்விட்டாள். அவளுக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருந்தது. வேனும்னா இரவில் 9 மணிக்குப் பின் வந்து ஒரு மணி நேரம் தனியாக பாடம் கேட்கலாம் என்று டீச்சரே சொன்னவுடன் பெதும்பைக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எவ்வளவு நல்ல டீச்சர்.. வீட்டில் சொன்னவுடன் யாரும் எதுவும் எதிர்ப்பு சொல்லவில்லை. அதுவும் லேடி டீச்சர் என்பதால் 'லேட் ஆனா நீ வரவேண்டாம், டீச்சர் வீட்டிலேயே தங்கிக்கோ விடிஞ்சப்புறம் வந்தா போதும். தெரு நாய்கள் ராத்திரி 10 மணிக்கப்பறம் சைக்கிள் முன்னாலே ஓடிவந்து குரைச்சி ரகளைப் பண்ணுதுக,.. நேத்து இப்படித்தான் அடுத்த தெரு மயிலு மவன் 10 மணிக்கு பஸ் டாப்பிலிருந்து சைக்கில்ல வந்திருக்கான் தெருநாய் கூத்திலே பையன் சைகிளை அங்கங்கே திருப்பி கீழே விழுந்து முட்டியைப் பேத்துக்கிட்டான். சைக்கிளை எடுத்துக் கொண்டு பெதும்பை சிட்டாக டீச்சர் வீட்டுக்குப் பறந்தாள். டீச்சர் இவள் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டு இவளுக்காக காத்திருந்தாள். ஒவ்வொன்றாக இவளுக்கு புரிகிற மாதிரி சொல்லிக்கொடுத்துக் கொண்டு வந்தாள். இரவில் டீச்சர் வீட்டில் விடிய விடிய மெல்லிய நைட் லேம்ப் வெளிச்சம் இருந்ததால் அவளுக்குப் பயமாகவே இல்லை, வீட்டில் அக்காவுக்கு திருமணம் ஆனபின் அவளுக்குத் தனியாகப் படுக்க பயமாக இருந்தது. பாட்டியின் பக்கத்தில் போய் படுத்துக் கொள்ளலாம். ஆனால் இவளுக்கு தூங்கும் போது பேஃன் வேணும். பாட்டிக்கு பேஃன் காத்தே ஆகாது. அம்மா பக்கத்தில் போய் படுத்துக் கொண்டால் பாதி நாள் நடுச்சாமத்தில் அம்மா அருகிலிருக்க மாட்டாள். கேட்டால் அப்பாவுக்கு கால்ப்டித்துவிட போயிருந்ததாகச் சொல்வாள். அப்பாவுக்கு கால்பிடித்துவிட்டால்தான் தூக்கம் வரும்.. அதுக்காக இப்படியா.. நடுச்சாமத்தில் அம்மாவைக் கால்பிடித்துவிட சொல்வது!..என்று அப்பாவின் மீது தான் அவளுக்கு கோபம் வரும். அம்மாவைப் பார்த்தால் பாவமாக இருக்கும். டீச்சர் வீட்டில் தூங்கினால் இந்தப் ப்ரச்சனை எதுவுமே இல்லை. நிம்மதியாக தூங்கி எந்த்ரிச்சி டாண்னு அம்மா காபி போடும் போது வீட்டுக்குள் நுழைவது வழக்கமாகிவிட்டது. அன்றைக்கு அவளுக்குச் சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது. டீச்சரும் சரி தூங்கலாம் என்று சொல்ல்விட்டாள். தூக்கத்தில்... அவள் கால்களை அகட்டி வைத்து மெத்தென்று .. உடல்.. கதகதப்பாக வெட்ப பெருமூச்சுடன். அவள் உதடுகளைக் கவ்விக்கடித்து.. அவள் தொடைகளைத்தடவி உதடுகளால் முத்தமிட்டு அவள் கூந்தலைத்தடவி உடலை இழுத்து அணைத்து காற்றுகூட நடுவில் புகுந்துவிட இடமின்றி இரு பெரும்மலைகளுக்கு நடுவில் இருக்கும் இரண்டு சிறிய குன்றுகளாய் பெதும்பையின் மார்புகளைத் தடவி நீருற்றின் குளிர்ச்சியாய் ஈரமாக்கி.. இதுகனவா நனவா.. என்ன நடக்கிறது? சட்டென்று போர்வையை விலக்கிக்கொண்டு வெளியில் வந்துவிட முடியாதபடி ஆகாயமே காவல் காத்த நிலவில்லாத வானத்தில் ... கதகதப்பான அணைப்புக்குள் பெதும்பை தூங்கிப் போனாள். * அவளுக்கு வயது 19. அவள் மங்கை. * பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம். * எஞ்சினியரிங் சீட் கிடைத்து விட்டது. சென்னையில் அண்ணா கல்லூரியில். விடுதி வாழ்க்கை. எப்போதாவது லீவில் அக்கா வீட்டுக்குப் போகலாம். ஆரம்பத்தில் அடிக்கடி போனாள். ஆனால் என்னவொ அவளுடைய அக்கா அவளுக்குத் தெரிந்த அக்கா மாதிரியே இல்லை. டோட்டலா அக்கா மாறிப் போயிருந்தாள். எல்லாம் அத்தானுக்குப் பிடித்த மாதிரி தான். சாப்பாட்டிலிருந்து கட்டிக்கொள்ளும் புடவை கலர் வரை.. எப்படி ஒரு மனுஷியால் இவ்வளவு தூரம் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என்று அவளுக்கு அதிசயமாக இருந்தது.. அத்தான் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் ரொம்பவும் விலை உயர்ந்தாகவும் ரொம்பவும் அழகானதாகவும் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செலக்ட் செய்து அது அது இடத்தில் வைத்திருந்தார்கள். எதையாவது அவள் தொட்டுப் பார்த்தால் கூட அக்கா சத்தம் போடுவாள். 'கையை வச்சிக்கிட்டு சும்மா இரேண்டி.. அத்தான் சத்தம் போடுவாரு.. ரொம்ப காஸ்ட்லி ஐட்டம்.. 'என்பாள். வீடுனா அப்படி இப்படி பொருட்கள் அங்கேயும் இங்கேயுமா கிடக்கனும். அதுதானே மனிதர்கள்.. உயிருள்ள மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளம். அதை விட்டுட்டு இப்படியா மியுசியம் மாதிரி பைஃவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி.. ஒரு செட்டப்பில் .. அவளுக்கு என்னவொ அக்கா வீட்டைப் பார்க்கும் போதெல்லாம் பெரிய பெரிய ஹோட்டல் ரிசப்ஷன் ஹால் தான் நினைவுக்கு வரும். சொல்வதில்லை. * ஆண் சிங்கம் 55 மணி நேரத்தில் வெவ்வேறு பெண் சிங்கங்களுடன் 157 முறை பாலுறவு கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகமுறை பாலுறவில் ஈடுபடும் விலங்கு ஷாஜிர்ட் என்ற பாலைவன எலியாகும். இரண்டு மணி நேரத்தில் 244 முறை பாலுறவில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * அக்கா உண்டாகி இருக்கிறாள் என்று அம்மா பட்சணமெல்லாம் செய்து கொண்டு பார்க்க வந்திருந்தாள். அம்மாவும் அக்காவும் டாக்டரிடம் போயிருந்தார்கள். அத்தான் ஆபிஸிலிருந்து சீக்கரமே வந்துவிட்டார். வழக்கம்போல அத்தானும் அவளும் ஹாலில் உட்கார்ந்து டி.வி, பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தான் ரொம்பவும் நெருக்கமாக அவள் தொடையைத் தொட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்தார். சட்டென்று அவள் எதிர்பார்க்காமல் அவள் மடியில் தலைவைத்து படுத்துக் கொண்டார். 'என்ன இது.. ப்பிளிஸ் எந்த்ரிங்க திஸ் இஸ் நாட் கரெக்ட்..ப்பிளீஸ்ஸ்ஸ்ஸ்' அவள் குரல் உடைந்தது. அழகையை அடக்கிக் கொண்டாள். அவள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அத்தானின் கைகள் அவள் துப்பட்டாவை விலக்கி அவள் கழுத்துப் பகுதியை தடவி கீழிறங்கியது. அவளுக்கு ஆத்திரம் வந்தது. அவனைத் தள்ளிக்கொண்டு எழுந்தாள். 'ரஸ்கல்.. நீ நடந்துக்கிட்டதை என் அக்கா கிட்டேயும் அம்மா கிட்டேயும் சொல்றேன் பாரு.. ' ஆத்திரத்துடன் சேர்ந்து அழகையும் வந்தது. அவன் அவள் அருகில் வந்தான். 'ஏய் இந்தப்பாரு..., உன் அக்கா அழகுக்கு முன்னோலே நீ தூசி.. யாரும் உங்க அக்காவை விட்டுவிட்டு நான் உங்கிட்டே வந்தேன்னு நீ சொன்னாகூட நம்ப மாட்டாங்கடீ.. சும்மா கிடந்து அலட்டாதே.. எம் மேலே உனக்குத்தான் கண்ணு.. நீ தான் உன் அக்கா இல்லாத நேரம் பார்த்து எம்மேலே விழுந்தேன்னு நான் சொன்னா அதைத்தாண்டீ நம்புவாங்க.. போடி போ.. சொல்லு.. சொல்லுடி..' அவன் சொல்ல சொல்ல அவன் மீது அருவெருப்பு வந்தது. அதன் பின் அவள் தன் அக்கா வீட்டுக்குப் போவதை தவிர்த்தாள். அப்படியே போனாலும் அக்கா இருக்கும்போது போய்ட்டு உடனடியாக வந்துவிடுவாள். அம்மாவிடம் மட்டும் அத்தான் நடந்துக் கொண்டதை ஊருக்குப் போயிருக்கும் போது சொன்னாள். 'எங்கிட்டே சொன்னமாதிரி இதை வெளியில் யாருக்கிட்டேயும் சொல்லிடாதேடி. அக்கா வாழ்க்கையே வீணாக்கிடுவானுக. பொண்ணா பொறந்திட்டா இப்படி ஆயிரம் வரும் போகும்.. மனசுக்குள்ளேயே போட்டுக்கனும் புரியுதாம்மா..' சொல்லிவிட்டு அம்மாவும் சேர்ந்து அழுதாள். அம்மாவின் அழுகையில் அவள் இதுவரை யாரிடமும் சொல்லாத சொல்ல முடியாத எல்லாமும் கலந்திருந்தது. அவளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக் கிடைத்துவிட்டது. வேலைக்குப் போவதில் அவளுக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பெங்களூர், மும்பை, ஹைதராபாத், டில்லி என்று எங்கே கிடைத்தாலும் போயிடலாம் சென்னை மட்டும் வேண்டாம் .. சொந்தக்காரங்க இல்லாத இடத்தில் சுதந்திரமாக தனியாக இருக்க வேண்டும் .. அந்த நினைப்பே அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.. ஆனால் வேலைக்குப் போவதற்குள் நல்ல இடத்திலிருந்து அவளுக்கு வரன் வந்துவிட்டது. நல்ல வாட்டச் சாட்டமான பையன். எம்.டெக் படிச்சிருக்கான். ஒரே பையன். எந்தப் பிக்கல் பிடுங்கலும் கிடையாது. சீர் எதுவும் டிமாண்ட் பண்ணலை. போடரதைப் போடுங்கனு சொல்லிட்டாங்க. வீட்டில் எல்லோரும் இவளுக்கு வந்திட்ட அதிர்ஷ்டத்தைப் பற்றித்தான் வாய்க்கு வாய் பேசிக்கொண்டார்கள். அம்மா தான் எல்லார் வாயும் ஒன்னுபோலிருக்காது என்று இவளுக்கு கண்ணேறு கழித்தாள். அவளுக்கு நினைவு தெரிந்ததலிருந்து அவளுக்கு கண்ணேறு கழித்ததாக நினைவில்லை. அதுவும் அவளுக்கில்லை. அவளுக்கு கிடைக்குப்போகும் கணவனால் கிடைத்திருக்கும் போனஸாகவே இருந்தது. * ராணித் தேனீக்கு உடலுறவு என்பது வாழ்வில் ஒரு முறைதான். ஒரு முறை பாலுறவு கொண்டவுடன் அந்த ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இடுகிறது. ஓர் ஆண் தேனீ மட்டும் வீர சாகசங்கள் புரிந்து மற்ற ஆண் தேனீக்களை வென்று ராணித் தேனீயுடன் பாலுறவு கொள்ளும். பாலுறவு முடிந்தவுடன் ஆண் குறி உடைந்து பெண்ணுறுப்பிலேயே தங்கிவிடுவதால் இரத்த இழப்பு ஏற்பட்டு இறந்து விடும். இதனால் ராணித் தேனீ வாழ்நாள் முழுவதும் முட்டைகளை இட்டுக் கொண்டே இருக்கும். * அவளுக்கு வயது 27. அவள் அரிவை. எல்லா பெண்களுக்கும் மனசுக்குள் இருக்கும் ஆவல் அவளுக்கும். ஏன் தன்னை மனைவியாக தன் கணவன் ஏற்றுக்கொண்டான் என்பதை அறிந்து கொள்ள துடிப்பது. அந்த நேரத்தில் அவள் கணவன் சொல்லும் காரணங்கள் பெரும்பாலும் பொய்யாக இருக்கும். அது நிஜமல்ல என்றாலும் அவன் சொல்லும் பொய்யை உண்மை என்று அந்தக் கணத்தில் நினைப்பதில் ஒரு தனிசுகம். இந்த விசயத்தில் எல்லா பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். அவளும் கேட்டாள். ஆனால் அவன் பொய் சொல்லவில்லை. உண்மையை எந்த ஆடைகளும் அணிந்து போர்த்தாமல் நிர்வாணமாக சொன்னான். நான் பார்த்ததில் நீ தான் ரொம்பவும் சாதரணமா இருந்தே. ரொம்ப சிம்பிளா இருந்தே. படிச்சிருக்கே.. இதெல்லாம் காரணங்கள் என்றாலும் இது எல்லாவற்றையும் விட நிதர்சனமான காரணம்.. சாதாரணமான லுக் இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற ஆம்பிளை பயப்பட வேண்டாம்.. நிம்மதியா இருக்கலாம்.. னு சொல்லிட்டு அவளைத் தன்பக்கம் இழுத்தான். அவன் இழுத்தவுடன் தன்னிடம் அவனை இழுத்து அணைக்கும் அவள் கைகள் ஒடிந்து போனது. அவள் கைகள் தனியாக கால்கள் தனியாக முண்டம் தனியாக முலைகள் தனியாக அங்கங்கே சிதறிக்கிடக்கும் படுக்கையில் சுருக்குப்பையைக் கிழித்து நுழையும் கத்தியின் காயத்தில் ஒவ்வொரு நாளிரவும் கழிந்தது. அவனுடைய இரு குழந்தைகளையும் பெற்று வளர்த்தாகிவிட்டது. அவளுக்கு நேரம் போவதற்காக டிடிபி வேலை செய்தாள். வீட்டில் இருந்து கொண்டே செய்வதால் கணவன் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் அவனுடைய கணினியையோ லேப்டாப்பையோ பயன்படுத்தக் கூடாது. என்ன காரணம் கொண்டும் அவனுக்கு விடுமுறை நாட்களில் அவள் அந்த வேலைகளைச் செய்யக் கூடாது. தொழில்துறை கணினித் துறை சம்பந்தப்பட்ட புத்தகங்களை டிடிபி செய்வதில் அவளுக்கு நல்ல பெயர் கிடைத்தது. எல்லா புத்தகங்களிலும் எழுதியவர்கள் தன்னுரையில் அவளுக்கு நன்றி சொன்னார்கள். பக்கத்திற்கு 50 முதல் 100 வரை கூட அவளுக்கு வருவாய் வந்தது. இந்தப் பணம் அவளுடையது. அவள் விரும்பியபடி அதைச் செலவு செய்யலாம். அப்படி நினைத்து தான் அவ்வை முதியோர் இல்லத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தாள். அந்த ரசீதை அப்படியே ஹாலில் இருந்தது, அதைப் பார்த்துவிட்ட அவள் கணவன் அதை விரும்பவில்லை என்பது அவன் கடுகடுப்பான முகத்தைப் பார்த்தே அவளுக்குத் தெரிந்தது. இதைப் பற்றி பேசினால் தானே வம்பு.. அமைதியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். * சில முதலையினங்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றன. பாம்பு மற்றும் பூனை வகைகள் துணையைத் துன்புறுத்தி இன்பமடைகின்றன. தவளைகள் கூட்டுக் கலவியில் ஈடுபடுகின்றன. * அவளுக்கு வயது 29 அவள் தெரிவை. வீட்டுக்கு வேலையை எடுத்துக் கொண்டு வரும் நண்பர் vx டம் பொறுக்க முடியாமல் சொல்லி அழுதிருக்கிறாள். அவர் தான் அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறார். எப்போதாவது அந்த நண்பருடன் வெளியில் போய்வருவாள். நிறைய புத்தகம் படிப்பவர். நல்ல பதிப்பாசிரியர். அவருக்கு நிறைய எழுத்தாளர்களை பேராசிரியர்களைத் தெரிந்திருந்தது. அடிக்கடி அவளிடம் சொல்லுவார். 'நீயும் உன்கதையை எழுதேன்' என்று. Men are taught to apologize for their weaknesses, women for their strengths.(Lois Wyse) என்று அவர் சொல்லியதைப் பல நாட்கள் நினைத்து பார்த்திருக்கிறாள். எவ்வளவு சரியான வார்த்தைகள். Men define intelligence, men define usefulness, men tell us what is beautiful, men even tell us what is womanly. என்று ~Sally Kempton சொன்னதைச் சொல்லி ஆக்ஸ்போர்ட் அகராதி முதல் ஹாலிவுட் படங்கள் வரை பெண் எப்படி சித்தரிக்க்பட்டிருக்கிறாள், அவளுக்கான இடம் என்ன, இதை எல்லாம் சொல்வதும் எழுதுவதும் தீர்மானிப்பதும் யார் என்றெல்லாம் நிறைய பேசிக்கொண்டு வந்தார். அவர் பேச பேச அவளுக்கு அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அடிக்கடி நண்பரின் நினைப்பு வந்தது. இதைச் சொன்னால் நண்பர் அதற்கு என்ன பதில் சொல்வார் என்பதை நினைப்பதும் தான் நினைத்தது சரிதானா என்று அவரிடம் அதைக் கேட்டு அவர் சொல்வதை வைத்து டிக் அடித்துக் கொள்வதும்.. எல்லா நேரங்களிலும் அவர் நினைவு தன்னை ஆக்கிரமித்திருந்ததை அவள் உணர்ந்து கொண்டாள். அப்படித்தான் ஒரு நாளிரவு.. கணவன் அருகில் வரவும் அவளுக்கு அப்போதும் அவர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்துவிட்டது. "பாலுறவில் ஈடுபடும் கழுதையைத் தடுத்தால், அதற்கு வெறி வந்துவிடும். வெறி பிடிதத ஆண் கழுதை கடித்து உயிரிழந்தவர்கள் ஏராளம்." மங்கிய வெளிச்சத்தில் அவளைச் சுற்றி அவர் பேசிய சொற்களின் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தீண்டியது. அந்த அணைப்பில் அந்தக் கைகளில் அந்த முகத்தில் அந்தப் பெருமூச்சில் அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் வந்து உட்கார்ந்து கொண்டன. அவள் கண்களை மூடிக் கொண்டாள். திறந்து நிசத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அவளுக்கு இந்த நினைப்பு பிடித்திருந்தது. சுகமான அனுபவமாக இருந்தது. எனோ எந்தக் குற்ற உணர்வுமில்லை. மனசுக்கு நிறைவாக இருந்தது. தான் ரசிக்கும் ஒருவரிடம் தான் விரும்பும் ஒருவரிடம் தன்னை ரசிக்கும் ஒருவரிடம் தன்னை விரும்பும் ஒருவரிடம் தன் உடலை மட்டும் விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது யார்? அன்று புதிதாகப் பிறந்தது போலிருந்தது. மீண்டும் தன்னைக் கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டாள். *அவளுக்கு வயது 45 அவள் பேரிளம்பெண். * தேள் மற்றும் சிலந்தி இனங்களில் ஆணும் பெண்ணும் மிகுந்த நேரம் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும். பாலுறவில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டவுடன் கர்ப்பம் தரித்த பெண் தேளும், சிலந்தியும் செய்யும் முதல் வேலை, தன்னுடன் காதலில் ஈடுபட்ட ஆணைக் கொன்று சாப்பிடுவதுதான். * குழுந்தைகள் வளர்ந்து விட்டார்கள். அவளுக்கு அவள் நண்பர் மூலம் நிறைய நிறைய ஆர்டர் கிடைத்தது. நண்பருடன் இருக்கும் நாட்களும் பொழுதும் அதிகமாக இருந்தது. இரு குடும்பங்களும் அடிக்கடி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் வரப் போக இருந்தார்கள். அன்று நண்பருடன் அவள் டாக்ஸியில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். என்னவோ தெரியவில்லை. அவர் அவளுக்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்திருந்த மாதிரி இருந்தது. சரி அதனால் என்ன.. கண்ணை மூடிக் கொண்டு அவரைக் கட்டி அணைத்துவிட்டு இப்போ எதற்கு இப்படிப் பாசாங்கு செய்ய வேண்டும் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். அவர் சாதாரணமாக அவள் தொடையில் கை வைத்துக் கொண்டார். காற்றில் பறந்த அவள் தலைமுடியை அவர் பின்பக்கமாக ஒதுக்கினார், அவர் கைகள் அவள் கழுத்தைத் தடவியது. கழுத்துப் பகுதியில் தான் உணர்வு நரம்புகளின் முடிச்சுகள் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் உடல் சிலிர்த்துக் கொண்டது. அவள் கண்களை மூடிக் கொண்டாள். அவர் தன் கைகளை பின்பக்கமாக நீட்டி அவள் தோள்களை அணைத்துக் கொண்டார். அவளுக்கு இப்பொது அழுகை வரும்போலிருந்தது. அப்படியே அவர் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போலிருந்தது. தனக்கு என்னவாகிவிட்டது? தொண்டை வறண்டு போனது. அவள் இருப்பிடம் வந்துவிட்டது. டாக்ஸிக்காரன் மீட்டருக்கு அதிகமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சரிதான் போயிட்டுப் போறான்.. "ஆஜ் தோ பூரா வசூல் கியா" என்று சொல்லிக்கொண்டே அவர் அவள் பின்னால் வந்தார். அவளுக்கு நடைத் தள்ளாடியது. எட்டாவது மாடி. லிப்டுக்குள் நுழைந்தவுடன் இரும்புக்கதவு பூட்டிக் கொண்டது. அவர் சொன்ன வார்த்தைகள் அவளைச் சுற்றி சுற்றி வந்தன. அன்று வீட்டில் யாருமில்லை. அவருடன் தனியாக கழிக்கப்போகும் இந்த நாளுக்காக அவள் வெட்கமின்றி காத்திருந்தது உண்மை. அவள் மீதே அவளுக்கு வெறுப்பு வந்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்தாள். அவரும் வழக்கம் போல ஹாலில் வந்து உட்கார்ந்தார். இருவருக்கும் சேர்த்து சூடாக டீ போட்டாள். கிச்சனில் நுழைந்தவரிடம் என்ன அப்படி புதிதாகப் பார்க்கிறீர்கள்? என்று கேட்டு வைத்தாள். வாருங்களேன் காற்றாட திறந்த பால்கனியில் உட்கார்ந்து டீ சாப்பிடலாம் என்று அழைத்தாள். அவரும் முகத்தைக் கழுவிவிட்டு அவளுடன் சேர்ந்து திறந்துவெளி பால்கனியில் உட்கார்ந்தார். யு வடிவத்தில் உட்காருவதற்கு ஏற்ற மாதிரி கட்டிவிடப்பட்டிருக்கும் பால்கனி சுவர்.. இழுத்து பூட்டிக் கொள்ள வசதியாக இரும்பு கம்பிகள். செடிகள். இரும்புக் கம்பிகளை விலக்கி வைத்து வசதியாக இருவரும் பால்கனி சுவரில் உட்கார்ந்து கொண்டார்கள். அவள் மெதுவாக அவர் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அவள் பிடி இறுகியது. மறுநாள்.. இது தற்கொலை அல்ல, கொலை முயற்சியுமல்ல.. கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து.. பால்கனியிலிருந்து தவறி விழுந்துவிட்டார்கள் என்று அவர்கள் இருவரின் முடிவைப் பற்றி பத்திரிகைகளும் டிவிக்காரார்களும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். * பிரத்தியங்கரா தேவியை வழிபட்டால் பிரச்சனைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைக்கும்.* --------------------------------------------------------------------- .... நன்றி: விலங்குகளின் பாலுறவு குறித்து மருத்துவர் டி.காமராஜ் குறிப்புகள் & வயது அடிப்படையில் பெண்களை ஏழு வகைப் படுத்தும் பெருங்கதை யுகமாயினி பிப்.2010 இதழில் வெளிவந்திருக்கும் கதை

Wednesday, February 3, 2010

முள்வேலி





காதல் புனிதம்
கற்பு தெய்வீகம்
தாய்மை பெண்மை என
கூர்மழுங்காத ஆயுதங்களால்
கைப்பற்றப்பட்ட
விளைநிலத்தில்
புதைந்து கிடக்கிறது
காலத்தின் கண்ணிவெடி.
வெடித்தால்
விளைநிலம் தரிசாகலாம்
பயமுறுத்துகிறது
வெள்ளை உடையில் வரும்
தேவைதைகள் கூட்டம்.
தேவதைகள் அறிந்ததில்லை
முள்வேலிகளின் பசியை.