Monday, July 11, 2016

தூய்மை இந்தியா ஊழல்.. நல்லவா இருக்கு!



தூய்மை இந்தியாவின் கதாநாயகன் சாட்சாத் நம் பாரதப் பிரதமர்
நரேந்திர மோதி அவர்கள் தான். தன்னுடைய முதல் செங்கோட்டை
மேடையில் தன் கனவுத்திட்டத்தை அவர் அறிவித்தவுடன்
மகாத்மா காந்தியுடன் நரேந்திர மோதி கைகோர்த்த காட்சி
எல்லோரையும் வியக்க வைத்தது. அரசியல் தலைவர்களும்
திரையுலக பிரபலங்களும் கொஞ்ச நாட்கள் தெருத்தெருவாக
துடைப்பத்துடன் போஸ் கொடுத்து போட்டோ போட்டிப்
போட்டுக்கொண்டு போட்டுத்தொலைத்தார்கள்,
நம் தலைவிதி அதை எல்லாம் பார்த்து ரசித்து தொலைத்தோம்.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.
ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனுஷனைக்கடித்தக் கதையா
இருக்கேனு சொல்ற மாதிரி ஆகிவிட்டது மோடியின்
SWATCH BHARAT.  பிறகென்ன.. .. இந்த தூய்மை இந்தியா எங்கள்
வெற்றி, எங்கள் கனவு , மோடி ஆட்சியின் பொற்காலத்திட்டம்..
என்றெல்லாம் சொல்லிவிட்டு இதற்குத் தேவையான பணத்தை
மட்டும் நம்மைப் போன்ற சாதாரண் மனிதர்களிடமிருந்து
வசூலிக்கிறார்கள் சேவை வரியாக.(service Tax)
முடி வெட்டினால் சலூனில் சேவை வரி.
ஹொட்டல் பில்லில் சேவை வரி
தொலைபேசி பில்லில் சேவை வரி
வீடு வாங்கினால் அதிலும் உண்டு சேவை வரி..
பயணச்சீட்டில் உண்டு சேவை வரி..
15 நவம்பர் 2015 முதல் சேவை வரி 14 விழுக்காட்டிலிருந்து
14.5% கூடுதல் வசூலிக்கப்படுகிறது. அதாவது கூடுதலாக
வசூலிக்கப்படும் 0.5% சேவை வரி அப்படியே தூய்மை இந்தியா
திட்டத்திற்கு போகிறது.
அதனாலென்ன... 0.5% தானே ... இந்தியாவின் வளர்ச்சியில்
ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்குண்டு .. இத்திட்டம
அரசின் திட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும்
முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் திட்டம்
என்ற விளக்கவுரைகள் சொல்லபப்ட்டன. இந்த விளக்கவுரை
பொழிப்புரைகளை எதிர்த்து கேட்டால், எங்கே.., நம்மீது தேசத்துரோகி
பட்டம் சுமத்தி விடுவார்களோ என்ற அச்சம் வேறு வந்து தொலைத்தது!.
( இந்த திகில்  கதை .. இப்போது வேண்டாம் , )
இத்திட்டம் அறிவித்தவுடன் ஒன்றரை மாதத்தில் அதாவது
15 நவ 2015 முதல் 31 டிச 2015 வரை சேவை வரியாக இத்திட்டத்தில்
வசூலிக்கப்பட்ட தொகை 329 கோடி.
மார்ச் 2016 வரை வசூலிக்கப்பட்ட வரித்தொகை 3750 கோடி.
ஓராண்டில் இத்திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் தொகை
10,000 கோடி..
இவ்வளவு வசூலிக்கிறார்களே... என்ன செய்திருக்கிறார்கள்
தூய்மை இந்தியா தேசியவாதிக்ள்?
பஞ்சாபில் மட்டும் 33 லட்சம் கழிவறைகளை 937 கோடி செலவில்
இத்திட்டத்தின் மூலம் கட்டிக்கொடுத்திருக்கிறார்களாம்.
ஆனால் கள ஆய்வு நடத்தியதில் பல கழிப்பறைகள்
வெறும் காகிதத்தில மட்டுமே இருக்கின்றன.
கிணறு களவுப்போன வடிவேலு கதை எல்லாம்
நகைச்சுவை கதையல்ல.
குடிக்கிற தண்ணீருக்கே அல்லாடும் ஊரில் கழிவறைக்கட்டி
என்ன செயவது? என்றும் சிலர் கேட்பதை மன்னித்துவிடுவோம்.

இத்திட்டத்திற்கான நிதியை நம்மிடமிருந்து நேரடியாக் வசூலிப்பதால்
இதன் வரவு செலவு கணக்கை தகவல் அறியும் உரிமைச்
சட்டத்தின் கீழ்  கேட்கலாம் என்றால் அதற்கும்
வழியில்லை... இத்திட்டம் எந்த துறையின் கீழ் வ்ருகிறது என்பதில்யே
இன்னும் குழப்பம் தான்.

இத்திட்டம் வருவதற்கு முன்... கழிவறைகளை யார் கட்டிக் கொடுத்தார்கள்?
அதற்கான நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டது?
இத்திட்டம் வந்தப் பின் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
என்ன தூய்மை இங்கே வந்திருக்கிறது....
குறிப்பிட்டு சொல்லும் படியாக ஏதாவது ஒரு சின்ன மாற்றம்
ஏற்பட்டிருக்கிறதா,,?
அரசு தன்னுடைய திட்டங்களுக்காக இம்மாதிரி வரிகளை
தொடர்ந்து மக்களிடமிருந்து வசூலித்துக்கொண்டே இருந்தால்
நாளை சுவாசிக்கும் காற்றுக்கு கூட வரி வசூலிப்பார்களோ
என்று அச்சமாக இருக்கிறது..!

எல்லா ஊழலையும் பார்த்துவிட்டோம்..
பீரங்க்கி ஊழல், 2 ஜி ஊழல், இப்படியாக.. பற்பல ஊழல்கள்.
ஆனால் இத்திட்டத்தின் வரவு செலவு எதுவும் கேட்பாரின்றி
போனால்... நாளை தூய்மை இந்தியா ஊழல்.. என்றல்லவா
சொல்ல வேண்டி வரும்...
ச்சே சே.. அப்படி சொன்னால் நல்லவா இருக்கும்.?
தூய்மை இந்தியா ஊழல்...!!
ப்ளீஸ் மோதிஜீ... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment