Monday, February 16, 2009

இது அரசியல் கோஷமல்ல




வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது..

இது-
அரசியல் கோஷமல்ல.

வடக்கில் வங்கத்துப் போர்முனையில்
வடக்கில் பஞ்சாபின் படுகொலையில்
பாய்ப்போட்டு
படுத்து உறங்கிய
இந்திய இறையாண்மை
தெற்கே
இந்துமாக்கடலில் மட்டும்
இரவெல்லாம் விழித்திருந்து
காத்திருந்து
காவல் காக்கிறதாம்!
யாருக்காக?
எதற்காக?
இப்போதும் வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத்தேய்கிறது

பக்கத்துவீட்டு பாகிஸ்தானின்
பங்காளிச்சண்டையில்
வங்கதேசம் வந்துதித்த வரலாற்றை
எழுதி எழுதி
பூரித்துப்போன பாரதமாதாவுக்கு
தெற்கே
இலங்கைத் தேசத்தில்
ஈழம் மட்டும்
கசக்கிறதா..?

வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

இந்திய தேசத்தில்
இவர்தான் "தேசப்பிதா" என்று
பாடப்புத்தகத்தில்
எங்களைப் படிக்க வைத்தீர்கள்
அந்த தேசப்பிதாவைக்
கொன்றவனின் கூட்டத்தைக் கூட
உங்கள் அரசியல் வானத்தில்
தலைவர்களாக
அடையாளம் கண்டீர்கள்.
ஒரு பாரதப் பிரதமரைக்
கொன்றவர் என்பதற்காய்
தலைப்பாகைக் கூட்டத்தை
ஒதுக்கவில்லையே..!
ஏ.. பாரதமாதா..
இதெல்லாம் உனக்கு
மறந்துப் போயிருக்கலாம்
மன்மோகன்சிங்கே ..
உங்களுக்கு எப்படி
மறந்துப் போனது?

இப்போதும்
வடக்குத்தான் வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது

சரித்திர உண்மைகளை
மாற்றி எழுதிய
உங்கள் பொய்முகத்தை
அண்ணாவின் ஆரியமாயை
கிழித்து எரிந்ததை
அவாள்கள் மறக்கலாம்
அண்ணாவின் தம்பியர் மறந்தது ஏன்?

ஆரியமாயையின் புதியநாமம்
இந்தியமாயை.
ஆங்கிலேயன்
அடிமைகள் கழுத்தில் தொங்கவிட்ட
அந்த அடையாள அட்டையுடன்
உலாவருகிறீர்கள்
வரலாற்றில் கறைப்படிந்த
உங்கள் கரங்களால்
ராஜீவின் கதையைச் சொல்லிச்சொல்லி
எங்கள் வரலாற்றைக்
களங்கப்படுத்தாதீர்கள்!
முடிந்தால்-
ஒரு கணமேனும்
உங்கள் முகமூடியைக்
கழட்டி வைத்துவிட்டு
உங்கள் முகத்தைப் பாருங்கள்

பஞ்சாபி என்றும்
வங்காளி என்றும்.
மராட்டியன் என்றும்
அசாமி என்றும்
பீகாரி என்றும்
காஷ்மீரி என்றும்
உங்கள் முகங்கள்
உங்கள் முகங்களாக
ஒப்பனைகளின்றி தெரியும்.
அந்தப் பிம்பங்களுக்கு நடுவில்தான்
உங்களால் பார்க்கமுடியும்
எங்களை-
எங்கள் தமிழ் முகத்தை
எங்கள் ஈழ தமிழ் நிலத்தை.

வடக்கு வாழ்கிறது
தெற்குத் தேய்கிறது
இது இனி அரசியல் கோஷமல்ல.

உலகச்சந்தையில்
இந்திய முகங்களைப்
பட்டா போட்டு
விற்றுத் திரியும்
பாரதமாதாவே..
உன் புதல்வர்களிடன் சொல்லிவை.

வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இது அன்று பாடிய மரபுக்கவிதையல்ல.
இது போராளிகள் எழுதும் புதுக்கவிதை.
இதில் மரபுச் சட்டங்கள் உடையும்
பயமுறுத்தும் சீர்-தளை சிதையும்
";நவீனக்கவிதை";
இங்கேதான் விதைக்கப்பட்டது என்று
நாளைய வரலாறு
எங்கள் கல்லறைகளில் எழுதும்.
இது எங்கள்
உயிர் எழுத்துகளின்
போர்ப்படை அணிவகுப்பு.
மெய்யெழுத்துகளில்
புதைத்து வைத்திருக்கும்
புதிய கண்ணிவெடிகள்.
இது வெடிக்கும்.
வெடிப்போம்..
எங்கள் களத்திலிருந்து
அக்னிக்குஞ்சாய்
புறப்படும்
அமைதிப் புறா.
எங்கள் பிள்ளைகளுக்கு
கற்றுக்கொடுக்கும்
கூடுகள் கட்டும் வித்தையை.
குஞ்சுகளைப் பறக்க வைக்கும்
வாழ்க்கையை.
----------------------------------

Thursday, February 5, 2009

போராட்டத்தின் திசைகள்- நயனம்

நண்பர் நாக.இளங்கோவின் நயனம் வலைத்தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கருத்துகள்
அனைத்தையும் அப்படியே நானும் வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டின் இச்சூழலில்தான் ஒரு நிஜமான தலைமை உருவாகும் என்று இதுவரை அறிந்த உலக சரித்திரத்தின் வழி
நம்புகிறேன்.



Monday, February 02, 2009 தமிழ்நாட்டின் போராட்ட திசைகள் எப்படி
அமையவேண்டும்?
தமிழக அரசியல் கட்சிகள் பலவற்றின்
முகத்திரை இன்று கிழிபட்டுக் கிடக்கிறது.
அவற்றின் நாணயமும் வஞ்சகமும்
தமிழினத்தின் முன் நகைக்கப் பட்டுவிட்டது.
வரலாற்றில் இக்கட்சிகள் கறையாகிப் போய்
விட்டன. தமிழினத்திற்கு எதிரான
இந்திய வஞ்சகமோ எக்காளமிடுகிறது.

முத்துக்குமாரும் இரவியும் பற்றிக்கொண்ட தீ
பற்ற வைத்திருக்கும் தன்மான உணர்வு
தமிழனுக்கெதிராக செயல்படும் அகில
உலகத்தையும் அடக்கி வைக்க வேண்டாமா? -
என்ற எண்ணம் எழாத தமிழன் இல்லை.

கிளர்ந்தெழும் தமிழ்நாட்டுக் குமுகம்
தனது போராட்டத் திசைகளை எப்படி
வகுத்துக் கொள்ளும் - என்னவெல்லாம்
அதன் திசைகளாக இருக்கக் கூடும்
என்பதே தமிழ் மக்களின் சிந்தனையாக
உள்ளது.

தமிழினம் என்ற போதெல்லாம் அப்பழுக்கின்றி
உறுதியான குரல் கொடுத்து
நிற்கும் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன்,
பெரியார் தி.க இராமகிருட்டிணன் இவர்களுடன்
தா.பா, நல்லகண்ணு, இராமதாசு
மற்றும் பல தமிழர்கள்
இணைந்து ஏற்படுத்தியிருக்கும்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்
ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகள் அளப்பரியன.

தமிழ்நாட்டின் போராட்ட திசைகளை இவர்கள்
சிறப்புடன் அமைக்கவேண்டும்.

*திசை-1:* தமிழினத்தின் எதிரி யார்,
துரோகி யார் என்பது தெளிவாகிவிட்ட பின்னர்,
அவர்களை நேரடியாக மக்கள் முன் நிறுத்துதல்
வேண்டும். நெடுமாறனும் வைகோவும் திருமாவளவனும்
"இந்திய அரசு இப்படிச் செய்கிறது" என்று
சொல்லாமல் நேரடியாக ஒன்றும் தெரியாதவர்
போல் இவ்வளவுக்கும்
காரணமாக இருக்கும் சோனியா காந்தியை
நேரடியாகக் கண்டிக்க வேண்டும்.

திருமாவளவன் இதனைச் சரியாக
உண்ணாநோன்பின் போது செய்தார்.
ஆனால் கருணாநிதி குறுக்கே புகுந்து
"காங்கிரசைக் குறை சொல்லி
திசை திருப்புவதா?" என்று எகிறவும்
திருமா குறைத்துக் கொண்டார்.

இது தவறு. நேரடியாக சோனியாவையும்
காங்கிரசையும் கண்டிக்க வேண்டும்.
காங்கிரசின் தமிழகத் தலைவர்களை
எதிர்த்து கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

அதேபோல, கருணாநிதியும் அன்பழகனும்
செயலலிதாவும் தமிழகத்தில்
செல்லும் இடங்களில் எல்லாம்
கறுப்புக் கொடி காட்டவேண்டும்.

இதனை கிளர்ந்தெழும் தமிழினம்
முக்கியமாகச் செய்யவேண்டும். அப்படிச்
செய்தால்தான் வாக்கு வங்கிப் பயம் வரும்.
அதுதான் அரசியல் கட்சிகளின்
அடிமடி. அதில் அடிக்க வேண்டும்
தயவு தாட்சனை இன்றி.

*திசை-2:* தமிழக ஆதிக்க சக்திகளான
தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு
ஆகிய மூன்று கட்சிகளின் ஆதரவுடைய
தொலைக்காட்சிகள், காங்கிரசு
சார்ந்தவரின் தொலைக்காட்சிகள்,
இந்து நாளேடு, துக்ளக் நாளேடு,
தினமலர் நாளேடு ஆகியவை தமிழினத்திற்குத்
தொடர்ந்து மொழிவகையானும் இனவகையானும்
நலிவை ஏற்படுத்துகின்றன.

இவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று
பேசிக் கொண்டிருந்த போது
எனது அருமை நண்பர் ஒருவர் இதுவே
அமெரிக்கா போன்ற நாடுகளானால்
இப்படிச் செய்யாமல், இம்மிடையங்களில்
விளம்பரம் கொடுக்கிறார்களே
அந்தப் பொருள்களையெல்லாம் புறக்கணிப்பார்கள்.
அப்பொழுதுதான்
இம்மிடையங்களின் அடிவயிற்றில் அடிவிழும்
என்று சொன்ன கருத்து சிறப்பெனப் பட்டது.

ஆகவே, கிளர்ந்தெழும் தமிழினத்திற்குத்
திசைகாட்டும் தலைவர்கள் இதனை
முன்னெடுக்க வேண்டும். சிங்கள இரத்தினம்
இந்து இராமுக்கும், தினமலர்,
துக்ளக்கிற்கும், சன், கலைஞர்,
செயா தொ.காகளுக்கும் பதில் எழுதியோ,
அவர்களின் கொடுமைகளை எண்ணிப்
புலம்பியோ இருப்பது பேதைமை.

தமிழ் மக்களிடம் இதனைச் சரியாக
சென்று சேர்த்து விட்டால் தமிழ் மக்கள்
சொன்னபடி மிடையங்கள் கேட்கும்.
இன்றைக்கு இது தலைகீழாக இருக்கிறது.

ஆகவே, *"தமிழினத்திற்கு துரோகம்
செய்யும் ஆதிக்க சக்திகளின் மிடையங்களிலும்
தமிழினத்திற்கு எதிராக செயல்படும் மிடையங்களிலும்
எந்தப் பொருள்கள் விளம்பரப் படுத்தப் பட்டாலும் *
*அதனைத் தமிழர்கள் வாங்க மாட்டார்கள்!"*
என்பது தமிழர்களின் கிளர்வின் ஒரு திசையாக
ஆக வேண்டும்.

*திசை-3:* தமிழ் இணையம் என்ற மிடையம்
மேற்கண்ட திசைக்கு முன்னோட்டமாக
அமைய, இணையத்திற்கு வரும் எந்தத்
தமிழரும் தமிழினத்திற்கு எதிராக
எழுதும் எந்தத் தமிழ் இதழையும்
தொடக் கூடாது. இந்தக் கட்டுரையை
வரைவதற்கு முன்னர் நான்
இதனைக் கடைப்பிடிக்கத் துவங்கி விட்டேன்.

இதனைச் செய்ய எந்தத் தலைவரும்
வழி காட்ட வேண்டியதில்லை. இணையம்
என்ற இந்த தமிழ் உணர்வுள்ள குமுகம்
எளிதில் செய்ய முடிந்தது.

அப்படியான இதழ்களும் நாளேடுகளும்
என்னதான் தமிழர்க்கெதிராக
எழுதினாலும் அதை நாம் படிக்க வேண்டிய
பகிர்ந்து கொள்ள வேண்டிய
அவசியம் நமக்கு என்ன?

ஆகவே இணையக் குமுகம் உடனடியாகச்
செய்ய வேண்டியது, தமிழினத்திற்கு
எதிரான இந்த மிடையங்களைப் படிப்பதில்லை
என்று முடிவு கட்டி விடவேண்டும்.

*திசை-4:* அடுத்ததாக தமிழினத்திற்கு
எதிராக இருக்கும் நாடுகளைப்
புறக்கணிக்க வேண்டும்.

1) சீனாவும் சப்பானும் சிங்கள
பவுத்த வெறியர்களுக்குத்
துணை போவதற்கு அவர்களின்
தன்னலமே காரணமல்லவா?
ஆகவே, தமிழினம் சீனாவிலும்
சப்பானிலும் தயாரிக்கப் பட்ட எந்தப்
பொருளையும் வாங்கக் கூடாது.

வணிகர்கள் அந்நாடுகளில் தயாரிக்கப் பட்டுத்
தமிழகச் சந்தைக்குள் வரும்
பொருள்களை விற்கக் கூடாது.
வணிகர்கள் *"சப்பான் சீனா நாட்டுப்
பொருள்கள் இங்கே விற்கப் படாது"*
என்று கடைகளில் எழுதிப் போடவேண்டும்.
வெள்ளையன் போன்றோர் வணிகர்
சங்கத் தலைவர்களாக இருக்கையில்
இது நடக்கக் கூடியதே.
இப்படிச் செய்தால் தமிழ் மக்கள் மனமார்ந்த
ஆதரவினைத் தருவார்கள்.

அதே நேரத்தில் சோனி, தோசிபா போன்ற
நிறுவனங்களின் பொருள்களை
மக்கள் விடுவார்களா என்ற ஒரு கேள்வி
எழத்தான் செய்கிறது. ஆனால் இது
ஒரு இயக்கமாகக் கிளம்பினால்
தமிழ் மக்கள் தவமாக ஏற்றுக் கொள்வர்.
வெள்ளையர்களை வெளியேற்ற
தமிழ் மக்களும் அவர்களின் பொருள்களைப்
புறக்கணித்தார்கள்தானே!
அந்த அமைதிப் போர்
தற்போது நிகழ வேண்டும்.

நானும் இந்தத் தவறைச் சின்னாள்களுக்கு
முன்னர் செய்தேன். இனிச் செய்யேன்.

2) இத்தாலிப் பொருள்களை புறக்கணிக்க வேண்டும்.
இத்தாலி நாட்டு ஆடைகள், கண்ணாடிகள்
போன்ற பொருள்கள் புறக்கணிக்கப் பட
வேண்டும். ஏனென்றால் இத்தாலியைச்
சேர்ந்த சோனியா காந்தி தமிழர்களை அழிக்கிறார்
என்ற செய்தியை இந்தியாவிற்கும் உலகிற்கும்
அறிவித்து தமிழினத்தின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.

ஒவ்வொரு கடையிலும்
*"இங்கே இத்தாலி நாட்டுப் பொருள்கள் *
*விற்கப்படாது*"
என்று எழுதிப் போட்டால் தமிழகம் என்ன,
இந்தியாவின் பெரும்பகுதியும்
மகிழ்ச்சிதான் அடையும்.

3) பாக்கித்தான், வங்கதேசம், மாலத்தீவுகள்
ஆகிய நாடுகளை நம்மால் பெரிதும் எதுவும்
செய்து விட முடியாது. ஏனென்றால் அங்கிருந்து ஏதும்
நமக்கு வருவதில்லை. ஆனால், வங்கதேசத்தில்
இருந்து அகதிகளாகவும்,பிழைப்பு தேடியும்
தமிழகத்தில் நிறைய வங்கர்கள் இருக்கின்றனர்.
இவர்களைத் தமிழ்நாட்டை விட்டு
வெளியேற்ற வேண்டும். வங்கதேச நாட்டில்
இருந்து பல ஆயிரம் பேர் பிழைப்பு
தேடி தமிழ் நாட்டில் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் அவர்கள் கடைநிலை
ஊழியம் செய்கிறார்கள். அவர்களை
எல்லாம் தமிழ்நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்.
அப்பொழுதுதான் வங்கதேசத்திற்கும்
இந்தியாவிற்கும் நமது எதிர்ப்பைச் சொல்ல முடியும்.

4) சிங்களத்தில் இருந்து என்ன பொருள்கள்
வந்தாலும் - குறிப்பாக தேயிலை - அவற்றைப் புறக்கணிக்க
வேண்டும். ஒவ்வொரு தமிழனும் இதனைத்
துண்டுச் சுற்றுகள் மூலமும் வணிகர்கள்
மூலமும் செயல் படுத்த வேண்டும்.

இந்த நாடுகளின் பொருள்களைப் புறக்கணிக்கும்
போது அந்நாடுகளோடு பல்வேறு வணிகத்
தொடர்புகள் கொண்ட அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும்
புரிபட வைத்தால் போதும்.

*திசை-5:* வைகோ, இராமதாசு,
திருமாவளவன் ஆகிய மூவருக்கு மட்டும்
தமிழ்மக்கள் ஒரு நெஞ்சார்ந்த அன்பு
வேண்டுகோளை வைக்க வேண்டும்.

இவர்கள் இன்றே வருகின்ற பாராளுமன்றத்
தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும்
சொல்லலாம்தான் - ஆனால் அதன்
தலைமை என்ன செய்யும் என்று
நமக்குத் தெரியாது. ஆனால், வைகோவிடமும்
இராமதாசிடமும் திருமாவிடமும்
உரிமையாகவும் எதிர்கால சூக்குமமாகவும்
இதனை நாம் கேட்டுக் கொள்ளவேண்டும்.

பாராளுமன்றத்தில் உறுப்பினராகி என்ன
செய்தோம் - இந்தியப் பாராளுமன்றம்
நமது குரலுக்கு மதிப்பளித்ததா?

பா.ச.க ஆட்சி செய்தபோது வைகோ
பொடாவில் போடப்பட்டார்.

அவர் பாராளு உறுப்பினராக இருந்தும் யாராலும்
எதுவும் செய்யப்படவில்லை. கேலிக்கு உள்ளானார்.
காங்கிரசு ஆட்சியில் கூட்டணியாக இருந்தும்
4 உறுப்பினர்கள் இருந்தும் இவர்கள்
குரல் ஏற்கப் படவில்லை.
ஆகையால் அந்தப் பாராளுமன்றமே
தமிழினத்திற்குத் தேவை இல்லை என்று
சொல்லி தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு ஆகிய
மூன்றனுக்கும் பெரும் இடரைத் தேர்தல்
களத்தில் கொடுக்க வேண்டும்.
இவர்களின் தமிழினத் துரோகத்தைக் கிழிக்க வேண்டும்.

இதன் மூலம் தேர்தல் உணர்வு குறைந்து,
தமிழ் உணர்வு மலரும்.

மாற்றாக இந்தத் தமிழின உணர்வாளர்கள்
மட்டும் தனியே கூட்டணி கண்டு
பாராளுமன்றத் தேர்தலில் துரோகிகளை
அடையாளம் காட்டி, வருகின்ற சட்டமன்றத்
தேர்தலில் தமிழ் உணர்வாளர்களாக
ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் எக்கேடு
கெட்டுப் போயினும் வருகின்ற சட்டமன்றத்
தேர்தலுக்குள் தி.மு.க, அதிமுக,
காங்கிரசு ஆன மூன்றனையும்
செல்லாக்காசாக தமிழகத்தில் ஆக்கிவிடவேண்டும்.

இந்தப் பாராளுமன்றத் தேர்தல் கணக்குகளை
விட்டு விட்டு,தமிழ்க்கணக்குகளை மட்டும்
பார்க்க வேண்டும்.

இவர்களுக்கு மக்கள் விடும் கோரிக்கையாக
*"நீங்கள் முன்னே நின்றால் நாங்கள் *
*பின்னே வருவோம் - நீங்கள் *
*திமுக அதிமுக காங்கிரசு
பின்னால் நிற்காவிட்டால்"* என்ற
செய்தியைச் சொல்ல வேண்டும்,

இந்த ஐந்து திசைகளிலும், சான்றோர்களும்
பெரியோர்களும் சரியெனக் காட்டும் திசைகளிலும்
செயற்பட்டால், தமிழினத்தைப் படுகொலை செய்யும்
சிங்களம், இந்தியம், சீன சப்பானியம்
மற்றும் இன்ன பிற நாசகாரச் சக்திகளை
எதிர்த்துத் தோளோடு தோள் நின்று போராட
*"தமிழ்நாட்டில் இருந்து தமிழன் ஈழத்திற்குப் போவான்".
*
இது நடக்கும்; நடக்க வேண்டும்.
அந்தப் படை பெருகும்; பெருக வேண்டும்;

*"அடைய வேண்டிய முக்கிய எல்லை இதுதான்"
*
முத்துக்குமார் சாவு சென்னையில் நடந்ததல்ல.
அது கிளிநொச்சி, வன்னி, யாழ், திருமலை,
முல்லைக் கள முனையில நிகழ்ந்த வீரச்சாவாகவே
தமிழருக்குப் படுகிறது.

இதனைத் தமிழினப் பெரியோர்கள்
குறிக்கொள்ள வேண்டும்.

தமிழ்ப்படை பெருக உழைக்க வேண்டும்.

அப்பொழுது உலகமே திரண்டு வந்தாலும்
தமிழினத்திற்கு அழிவு இருக்காது.

அன்புடன்
நாக.இளங்கோவன்