Monday, July 31, 2017

இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ 1402,680,000,000/

இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கான விலை ரூ. 1402,680,000,000/
The Indian rupees 1.4 trillion plan to destroy india's agriculture
அடேங்கப்பா.. எவ்வளவு பெரிய தொகை..
அதாவது இந்திய அரசு  தன் ஓராண்டு பட்ஜெட்டில் விவசாயத்திற்காக ஒதுக்கும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து நம் விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ள தூண்டுகிறது.
என்ன மாதிரியான மாஸ்டர் கில்லர் பளான்.. .
. ஹாலிவுட் படங்களில் தான் இம்மாதிரியான கற்பனைகளைக்
காட்டுவார்கள் என்றால் நம்ம ராஜாங்கத்தின்
மந்திரிமார்களும் அவர்களின் திட்டங்களும் ..
 எப்படி எல்லாம் வினையாற்றிக் கொண்டிருக்கின்றன
என்பதை அறிய வரும் போது அருவருப்பாக இருக்கிறது .
. இவ்வளவு கீழ்த்தரமாக... ச்சே..
இப்படியும் ஒரு மக்கள் நல அரசு  செயல்படுமா ? என்ன!


இந்தப் புள்ளிவிவரங்களை ஏன் எந்த ஓர் எதிர்க்கட்சியும்
 நாடாளுமன்றம், மேல்சபைகளில் பேசுவதே இல்லை!
 ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நம் ஊடகத்துறையில்
  கமலஹாசன் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதே நம்
 தலையாய பிரச்சனையாக பேசப்படுகிறது.
இதெல்லாம் ஏன்? ஏன்? விவாதத்திற்கே வருவதில்லை!
அறியாமை என்று சொல்லாதீர்கள்.
ஏற்க மறுக்கிறது என் மனம்.
பொதுமக்களின் பார்வைக்கும் இக்காட்சிகளும்
உண்மை நிலவரங்களும் வந்துவிடக் கூடாது என்பதில் எல்லோருமே
 கூட்டுக் களவாணிகளாக செயல்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன்.
இனி, சில விவரங்கள்.. (நீண்ட பதிவு என்றாலும் வாசிக்கவும் பகிரவும். )
1) கடந்த 2015-16 நிதிநிலை ஆண்டில் இந்தியா உணவு பொருட்கள் (தானியங்கள், பழங்கள், எண்ணெய்) இறக்குமதி தொகை தான் மேலே குறிப்பிட்ட ரூ  1.4 டிரில்லியன் . இந்த இறக்குமதி
தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடாகாவோ உதவித்தொகையாகவோ வழங்கப்பட்டிருந்தால் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்திருக்கமாட்டான்.
2) வெள்ளைக்காரன் எதை எல்லாம் செய்து இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தானோ அதையே தான் இந்திய அரசு தன் வெளியுறவுக் கொள்கை, இறக்குமதி சட்டங்கள் மூலம் தன் சொந்த நாட்டின் மக்களிடமும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது
இந்திய அரசு இந்திய விவசாயத்தை அவுட்சோர்ஸ்  கொடுக்க முன்வந்துவிட்டது.
இனி விவசாயிகள் இந்தியாவுக்குத் தேவையில்லை! என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் தான் அண்மைக்காலங்களில் நடுவண் அரசும் மாநில அரசுகளும் விவசாயிகளின் போராட்டங்களையும்
பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.
3) கடந்த  இரு ஆண்டுகளில் (2014-15 முதல் 2016-17 வரை) இந்தியா இறக்குமதி செய்திருக்கும் கோதுமை, மைதா, பாசுமதி அரிசி தவிர்த்த பிற அரிசிகள் மட்டும் 6600 % விழுக்காடு அதிகம்!
ஆனால் இந்த இறக்குமதிக்கான தேவை இருந்ததா என்றால் இல்லை,
 இது ஒரு திட்டமிட்ட விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமை, வன்கொலை.. என்றுதான் சொல்ல வேண்டும்.

4) இந்திய விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை வாங்குவதை விட ஆஸ்திரேலியாவிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்வது பெருமுதலாளிகளுக்கு கொள்ளை இலாபம் தருவதாக இருக்கிறது.
 காரணம் இறக்குமதி வரிச் சலுகைகளும்
இந்திய அரசின் இறக்குமதி கொள்கைகளும்.
5) கறுப்பு பண ஒழிப்பு என்ற பெயரில் 500 ரூபாய் 1000 ரூபாய் செல்லாது
 என்று அதிரடியாக அறிவித்த மோதி  அரசு தன் அதிரடி நடவடிக்கையால் பெருமுதலாளிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று காரணம் சொல்லி புறவாசல் வழியே இறக்குமதி வரியை  ரத்து செய்தும் குறைத்தும்
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உணவுதானியங்களை இந்திய சந்தையில் பரப்பியது.
6) இம்மாதிரியான அத்துமீறிய இறக்குமதி சலுகைகளால் இந்திய விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள் . ஒவ்வொரு விளை பொருளுக்கும் அரசாங்கம் ஒரு குறைந்த பட்ச
கொள்முதல் விலையை நிர்ணயித்திருக்கிறது .
( MSP - MINIMUM SUPPORT PRICE)
இப்படி நிர்ணயித்திருக்கும் விலையை விட
இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருளின்
விலை குறைவாக இருந்தால் உணவுதானியங்களை
விளைவித்த விவசாயி என்ன செய்வான்?
7) இது கற்பனையோ அரசுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரமோ அல்ல.
 இதுதான் உண்மை நிலவரம்.
எ.கா. மராட்டிய மண்ணில் பருத்தி, கரும்பு விவசாயிகள் மிக அதிகமாக தற்கொலை செய்து கொண்டார்கள். ஏன்? பருத்தியோ கரும்போ விளைச்சலில்லை என்பதா காரணம்?
இந்திய அரசின் ஒழுங்கற்ற இறக்குமதி சட்டங்கள் தான் காரணம்
என்கிறார்  இந்திய சுகர் மில் அசோஷியன் டைரக்டர் ஜெனரல்  அபினாஷ் வர்மா. கடந்த 6 ஆண்டுகள் இந்தியாவில் உற்பத்தி ஆகும் சர்க்கரையின் அளவு இந்திய தேவைக்கும் அதிகமாகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஆனால் இந்திய அரசு சர்க்கரையை இறக்குமதி செய்தது. ! அப்படி இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை உள்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விட விலை குறைவாக இருந்தது.
அதை இறக்குமதி செய்யும் கார்ப்பரேட்டுகள் மால்களில் கடை விரித்தார்கள்.
இனிப்பு  தரமில்லாத பார்க்க பள பளப்பாய் இருக்கும் அந்த சர்க்கரையை நாமும் வாங்க ஆரம்பித்தோம். விளைவு..? கரும்பு விளைவித்த விவசாயிகளின் கடன் தொகை 22000 கோடியாக
பயமுறுத்தியது. தற்கொலைகள் அரங்கேறின.
8) இதே நிலைதான் 2015--16ல் சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விதைகள் , சிறுதானியங்கள் விவசாயத்திலும் நடந்தது. 2015-16 ஆண்டில் எண்ணெய் விதைகளின் விளைச்சல் அபரிதமாக இருந்தது. ஆனால் இந்திய அரசு தந்திரமாக ( கேவலமாக) அறுவடைக்கு முன் சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை மிகவும் குறைத்தது.
சர்க்கரையின் அதே விளைவு தான்
எண்ணெயிலும் வந்துவிடிந்தது. பாமாயில், சோயா ஆயில், அரிசி ஆயில் என்று பல்வேறு எண்ணெய் பாக்கெட் பாக்கெட்டாக மிகக்குறைந்த விலையில் நம் சந்தைகளில் விலைக்கு வந்தன. நாமும் அதை எல்லாம் வாங்க ஆரம்பித்தோம். இலவசம், குறைந்த விலை இவைகளுக்குப் பின்னாலிருக்கும் அரசியலோ நம் கழுத்துக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் தற்கொலை கயிறோ நம் கண்களுக்குத் தெரிவதில்லை!
சிறுதானியங்களின் விளைச்சல் இருந்த போதும் 2016-17ல் 5.9 மில்லியன் டண் தானியங்களை 25,600 கோடிக்கு இந்திய அரசு இறக்குமதி செய்தது ஏன்?
9) இன்னும் 5 ஆண்டுகளுக்கு இறக்குமதி ஜோராக நடக்கப்போகிறது. மொசம்பியா, பிரேசில், மியான்மார் நாடுகளிலிருந்து உணவுதானியங்கள், பழங்கள், சமையல் எண்ணெய் இத்தியாதிகளை
டண் கணக்கில் இந்தியா இறக்குமதி செய்யப்போகிறது. விளைவுகள் இன்னும் மோசமாகும்.
10) நீர்மேலாண்மை அறியாத மாநில அரசுகள், மழை இன்மை, நதிநீர்ப்பங்கீடு இத்தியாதி இன்னும் சில பிரச்சனைகளால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.
விளைந்தாலும் சரி, விளையாவிட்டாலும் சரி..
 இனி இந்திய அரசுக்கு விவசாயம் தேவையில்லை
விவசாயிகளும் தேவையில்லை. 

T Haque , former head of the commission for Agricultural Costs and Prices , says
India's agrarian policies over the years have lacked coherence. Despite domestic production, we inexplicably keep promoting import. To get our agriculture out of this vicious cycle,
first we need to set our foreign trade policies in order.
 ref : July 1- 15 , 2017, edition of Down to earth


Sunday, July 30, 2017

லா.ச.ரா அலைகள்

Image result for south indian women hairstyles pattu kunjamலா.ச.ராவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே வாசித்த கதைகள் தான் என்றாலும்
 எப்போது வாசித்தாலும் என்னை வசீகரிக்கும் மொழிநடை ..
 லா.ச.ரா ஒரே கதையைத்தான் வெவ்வேறு விதமாக
 சொல்லிக்கொண்டே இருக்கிறாரோ என்று தோன்றும். ஆனாலும் அலுப்புத்தட்டாது.
அந்த நதிக்கரை, நுரைப்பொங்கி  ஓடும் ஆற்றுவெள்ளம், ,
குளத்தங்கரை , கிணற்றங்கரை, துணி துவைக்கும் கல், வீட்டு கொல்லைப்புறத்தில்  வாழை மரம், மணக்கும் காஃபியும்
 வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்..
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
லா.ச.ராவின் படைப்புலத்தை.
அந்த கதைக்களம் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கையுடன்
பயணித்த தருணங்கள் உண்டு.
 கதை மாந்தர்கள் மட்டுமின்றி இப்படியாக கதை நமக்குள்
 இன்னொரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டே இருக்கும்.
இம்முறை இந்த மீள்வாசிப்பில் எனக்குத் திடீரென
இன்னொரு பெரிய்ய்ய்ய்ய கவலை வந்து விட்டது.
. லா.ச.ரா சிருஷ்டித்திருக்கும் படைப்புலகின் களம் பற்றி
எதுவுமே அறியாத எம் பிள்ளைகள் லா.ச.ராவை எப்படி அணுகுவார்கள்?
வெறும் கதையும் கதைமாந்தர்களின் உரையாடலும்
மட்டுமா லா.ச.ரா??
அதிலும் லா.ச.ரா அடிக்கடி பட்டுக்குஞ்சம் பற்றிப் பேசுவார்,
 மென்மைக்கும் பளபளப்புக்கும் பட்டுக்குஞ்சம் வந்துவிடும்
அவர் கதைகளில். பட்டுக்குஞ்சம்
சடையில் கட்டி ... ம்ம்ம்.. இதெல்லாம் எம் பொண்ணுக்கோ அவள் பொண்ணுக்கோ தெரியாதே..
லா.ச.ரா  இம்முறை எனக்குள் இம்மாதிரி ஓர் இனம்புரியாத
 கவலையின் அலைகளை எழுப்பிவிட்டார்.
மழைக்காலத்தின் அலைகள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக
தனக்குள் இழுத்துக் கொண்டிருக்கின்றன.
என்னை மன்னித்துவிடுங்கள் லா.ச.ரா.



Monday, July 24, 2017

அத்வானியின் அரசியல் குற்றம்


modi-advani-kovind-1.jpg (660×440)
அத்வானி ஏன் பிஜேபியால் ஓரங்கட்டப்பட்டார்?
அவருக்கு திறமை இல்லையா?
அவருக்கு அரசியல் அனுபவம் இல்லையா?
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு கலவரம் மட்டும்தான்
அத்வானியின் அரசியல் தகுதிக்கு களங்கம் கற்பித்ததா?
அத்வானிக்கு ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை?
அத்வானி செய்த தவறுகள் என்ன?
1) அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை.

2) அத்வானி தன் குஜராத் ரதயாத்திரையில் இனம் கண்ட
     நரேந்திரமோதி என்ற தேரோட்டி கிருஷ்ண பரமாத்மா

3) தேரோட்டி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு வரக்கூடும்
    என்பதை யும்
     மகாபாரதக் கதையில் இம்மாதிரி திருப்பங்கள் ஏற்படலாம்
   என்பதையும்     அறியத்தவறிய அத்வானி.

4) குஜராத் கோத்ரா மதக்க்கலவரத்திற்குப் பின் ராஜதர்மப்படி
     அன்றைய பிரதமர் வாஜ்பாய் தண்டனை கொடுக்க முன்வந்ததையும்
     நரேந்திரமோதியை கட்சியை விட்டு விலக்கி வைக்க முன்வந்ததையும்
   ஆதரிக்காமல் மவுனம் சாதித்து மோதிக்கு ஆதரவாக இருந்த  அத்வானியின்
   ராஜதர்ம குற்றம்.

5) அரசியலுக்கு அவருடைய வாரிசுகள் வருவதற்கு விருப்பம்
 தெரிவித்தப்பின்    " நான் உயிருடம் இருக்கும் வரை அது நடக்காது, நான்  வாரிசு அரசியலுக்கு     எதிரானவன் " என்று அவர்களைத் தடை செய்தது.

6) இவை எல்லாவற்ரையும் விட அவர் செய்த மன்னிக்க முடியாத குற்றம்
     (பிஜேபி & சங்பரிவார் பார்வையில் )
     தான் பிறந்த மண்ணைப் பார்க்க பாகிஸ்தான் பயணித்தப்போது
    'முகமதுஅலி ஜின்னா - மதசார்பற்றவர் " என்று சொன்னது.


Saturday, July 22, 2017

அப்பாவின் புதல்வர்கள்

அப்பாவைப் போலவே பிள்ளைகளும் இருப்பது நல்லதா ?
அதிலும் அப்பா பிரபலமான தலைவராகவோ நடிகராகவோ
இருந்துவிட்டால் பிரச்சனைதான்.
எப்போதும் பிரபலமான அப்பாவுடன் மகனை ஒப்பிடும்போது
மகனின் ரேட்டிங் என்னவாக இருக்கும்?!!
மகன் அப்பாவை அப்படியே காப்பி ரைட் எடுத்துக்கொண்டு
காரியத்தில் இறங்கினால் தோற்றுத்தான் போவான்.
நான் இன்னாரின் மகன் தான்.
ஆனால் எனக்கு என்று தனிவழி ஒன்றுண்டு, அதுதான் நான்.
. என்று ஒரு தனித்துவத்தைக் காட்டியாக வேண்டும்.
அப்படிக் காட்டத்தவறினால் அந்த மகன் எப்போதுமே
அப்பா நிலைக்கு உயரவும் முடியாது என்பதுடன்
 தன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது
 என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.
இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட உறவு
அப்பா- மகன் தான்.
அப்பா - மகள் உறவு ஒப்பீட்டளவில் அதிகமாகப்
 பாதிப்புக்குள்ளாவதில்லை. (இதுவும் ஒருவகையில் ஆணாதிக்க
வாரிசு, சொத்துடமை சமூக சிந்தனைதான்)

அபிஷேக்பச்சன், பிரபு .. ஏன் தமிழ்நாட்டில் திமுக வின் செயல்தலைவர்
திரு. மு.க .ஸ்டாலின் வரை இது பிரச்சனை தான்.
இதை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள்,
 கையாண்டு கொண்டிருக்கிறார்கள்
என்பதைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால்
சில நேரங்களில் சிரிப்பு வருகிறது.
 பல நேரங்களில் எரிச்சலும் வருகிறது.
இன்னும் சில நேரங்களில் பார்க்க ரொம்ப
 "ப்பாவமா" இருக்கு!


Wednesday, July 19, 2017

தேனருவி தொகுத்து வழங்கும் கமலஹாசன்

மும்பைவாசி கேட்கிறார்  ,
 எப்படிங்க பிக்பாஸ் கூட அரசியல் களமா மாறியிருக்குனு!
அமிதாப்பச்சன், சஞ்சீவ் தத், சல்மான்கான் போன்ற பாலிவுட்
 சூப்பர் ஸ்டார்கள் கூடத்தான் பிக்பாஸ் ஹோஸ்டாக
இருந்திருக்கிறார்கள். ஏன் கன்னடத்தில் சந்தீப்பும் தெலுங்கில்
ஜூனியர் என் டி ஆரும் ஒலிபரப்பில் இருக்கும் பிக்பாஸ் ஹோஸ்ட்.. அங்கெல்லாம் இத்துணை பரபரப்பு, ஆர்ப்பாட்டம், அரசியல் இல்லை
. உங்க தமிழ்நாட்டில் மட்டும் எப்படி , இப்படி னு கேட்கிறாக.
..அவுகளுக்கு என்னத்த சொல்லிப் புரிய வைக்கிறதுனு
தெரியல.
எங்க ஊரில தேனருவி பாடல்களை கமலஹாசன் 
தொகுத்து வழங்கினால் கூட
இப்படி எல்லாம் ஆகத்தான் செய்யும்னு!

ஓட்டப்பந்தயத்தில் இப்போ என்னவோ
 ரஜினியை முந்திக்கிட்டு உலகநாயகன் ஓடற
மாதிரி இருக்கு..
ரஜினிக்கு அடித்தட்டு மக்களின் ஆதரவு இருப்பதாகவும்
கமலுக்கு இன்டலெக்சுவல் ஆதரவு இருப்பதாகவும்
 சிலர் சொல்கிறார்கள்.
அப்போ அடித்தட்டு மக்கள் இன்டலெக்சுவல் இல்லையானு
 கேட்கப்பிடாது.
எனக்கு இந்தப் பகுப்பாய்வு தெரியல.
ஆனால் இதன் பின்னால் இருக்கும்
இன்னொரு அரசியல் தெரிகிறது.
கமலு எப்படி பார்த்தாலும் பார்க்க சிவப்பா அழகாதான்  இருக்காரு.
ஊறுகாய் மாதிரி நாயக்கரைத் தொட்டுப்பாரு. நாத்திகம் கூட பேசுவாரு.
அப்படியே ஆப்கானிஸ்தான் போயி தீவிரவாதிகளைச்
 சுட்டுத்தள்ளுவாரு.
நல்லா பரதநாட்டியம் வேறு ஆடுவாரு.
வெளிநாட்டு பல்கலை கழகத்திற்கெல்லாம் போயி
பேசிட்டு வந்திருக்கார்னா
அவரு பெரிய்யா ஆளா தானே இருக்கனும்!

பாவம் ரஜினி.. மொட்டையும் சொட்டையுமா.. !
வரப்போறேன் வரப்போறேன்னு சொல்லிக்கிட்டே நாளையும் பொழுதையும்
கடத்திட்டா இப்படித்தான் ஆகிடும்..
சரி .. சரி.. போகிற  போக்கில் வெளியில் இருந்து கமலுக்கு ஆதரவுனு சொல்வாரோ என்னவோ.!!

வடிவேலு மைண்ட் வாய்ஸ் இப்போ பார்த்து ..
சிவப்பா அழகா இருக்கிறவங்க என்ன சொன்னாலும்
எது செய்தாலும்
அது அறிவாளித்தனமாத்தான் இருக்கும்..

சிவ சிவா.. தாங்க முடியலடா சாமீ..


Monday, July 17, 2017

நாளும் கிழமையும்

காலநிர்ணய் என்ற தமிழ் நாட்காட்டி எம்மைப் போன்று
வெளிமாநிலத்தில் வசிக்கும் பலருக்கும் தமிழ் மாதத்தின் சிறப்பு நிகழ்வுகளையும் நம் பண்டிகைகளையும் அறிந்து
கொள்வதற்கு பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டி/காலண்டர்.
பெரிதாக அதைப் பார்த்து தான் எதையும் செய்கிறோம்
என்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட
ஆங்கில மாதத்தின் நாட்களுக்கு இணையான தமிழ்
மாத நாட்களை அறிந்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக
 இருந்து வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டு  ஐப்பசி மாதம் 6 ஆம் தேதி என்று என் காலநிர்ணய் அந்த நாள் 22/10/2017 ஞாயிறு கிழமை என்று காட்ட நானும் ஒப்புதல் கொடுத்துவிட்டேன். ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்.
ஆனால் இப்போது ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் திங்கட்கிழமை
அதாவது 23/10/2017 என்பதே சரியானது என்று அறிகிறேன்.
காரணம் தமிழ் காலநிர்ணய்
ஆனி மாதத்திற்கு 32 நாட்கள் என்று கணக்கிடாமல் 31 நாட்கள்
 என்று ஒரு நாளைக் குறைத்து கணக்கிட்டிருப்பதால்
ஆனி மாதத்திற்குப் பின் வரும் தமிழ் மாதங்களின் நாட்களும்
ஆங்கில மாத நாள் கிழமைகளும் குளறுபடி ஆகின்றன.
காலநிர்ணய் என்ற நாட்காட்டி சற்றொப்ப 200,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் நாட்காட்டி. என்பதும்  தமிழில் மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகும்நாட்காட்டி என்பதும்
இதன் தனிச்சிறப்பு.
தமிழ் மாத நாட்காட்டியின் ஆசிரியராக இருப்பவர் என் இனிய
நண்பர் மும்பை சரவணன் என்பதும் நினைவில் வருகிறது.
எப்படியோ ... சரவணா.. இந்த 30 நாள், 31 நாள், 32 நாள், 28 நாள் , 29 நாள் கணக்கெல்லாம் கொஞ்சம் பார்த்து போடுங்கப்பா..

எல்லா நாட்களும் நல்ல நாட்களே.
24 மணி நேரமும் நல்ல நேரமே..
 என்று வாழும் என்னைப் போன்றவர்களுக்கு பரவாயில்லை.. !
ஆனால் நீங்கள் நாட்காட்டியில் காட்டும்  இந்த
நாளும் பொழுதும் கிழமையும்
பார்த்து பார்த்து காரியமாற்றும் பொதுஜனங்களின்
 நிலையை எண்ணிப் பாருங்கள்.

Sunday, July 16, 2017

யாதும் ஊரே!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அட போங்கப்பா
பொறந்த ஊரில் பொழக்க முடியாமல்
ஊர் ஊரா அலைஞ்சவனின் உளவியல் பேசி
என்னை மயக்காதீர்.
அது என்ன அடுத்த வரி..
ஆங்... தீதும் நன்றும் பிறர்தர வாரா வா..
ஆமாண்டா.. 
ஈழத்தில் விதைச்ச விதையும்
ஈராக்கில்  வெடிச்ச விதையும்
அவனவன் தலைவிதியாடா..?
போங்கடா போங்க
பெரியோரை வியக்காமல்
சிறியோரை இகழாமல்...
ச்சீ ச்சீ ..ரெளத்திரம் பழகாத மானங்கெட்ட பொழப்பு
நாய்கள் குரைப்பதில்லை. ஜாக்கிரதை.




Friday, July 14, 2017

பனிலிங்கம்


பனிலிங்கம்
-----------------
இரவும் பகலுமற்ற நீண்ட பொழுதுகள்
சக்கரங்களின் ஓசைகள் மவுனித்த சாலை
காற்று சயனித்திருக்கும் காலம்
அலைகளின்ஆராவாரத்தை அடக்கிய நிலவின் தீட்டு
பனிமலைச் சிகரத்தின் வழி எங்கும்
ஏகே 47 துப்பாக்கி கண்கள் துரத்துகின்றன.
ஹே.. புனிதவதி..
உன் புத்திரன் கொடுத்த கருவைச் சுமந்து பயணிக்கிறேன்.
அவன் சந்நிதானத்தில் பிரசவிப்பேன்
என் புதல்வியை.
ஹே.. லிங்கேஷ்வரா.. சென்னிமல்லிகார்ஜூனா
பனிலிங்கம் உருகி உருகி..
என் சமவெளி எங்கும்.
ஓம் நமசிவாய..

Monday, July 10, 2017

சூல் நாவல் முன்வைக்கும் சமூக அரசியல்

சூல் நாவலின் கதை நிகழும்   காலம், களம் சார்ந்த அரசியல் பார்வை
---------------------------------------------------------------------------------------
30p9.jpg (400×505)
"நீர்ப்பாய்ச்சியின் நீர்மேலாண்மை அறிவைக் கொண்டாடுவது என்பது வேறு.
அந்த அறிவு அவனுக்கு தலைமுறை தலைமுறையாக வருகிறது என்று குலத்தொழிலாக்குவது ஆபத்து"
"சூல் கொண்ட கண்மாய் காணாமல் போனதற்கும் திராவிட அரசியலுக்கும்
என்ன தொடர்பு? "
"அதிகாரக் கட்டிலில் இருந்தவர்களின் அடையாளம்  மறைக்கப்பட்டும்
மறக்கப்பட்டும் இருப்பது வெறும் கற்பனை மட்டுமா?"
... சூல் நாவலை முன்வைத்து ...
....

நாவல்கள் கற்பனையானவை. நாவல்களின் கதைப் பாத்திரங்கள் கற்பனையானவை. எல்லாம் லாஜிக்கலா ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அந்த நாவலை எழுதுகிற எழுத்தாளனும்
அந்த நாவலில் எழுத்தாளன் காட்டும் மனிதர்களும் எழுதுபவனைப் பொறுத்தவரை கற்பனை அல்ல. அதனால் தான் வாசிக்கிறவனும் எழுதுகிறவனும் கற்பனை உலகில் ஒரே வேகத்தில் சஞ்சரிக்க முடிகிறது. கற்பனைகள் நிஜங்களாகவும் நிஜங்கள் கற்பனைகளாகவும்
நிகழும் ஒரு ரசவாத வித்தையை நிகழ்த்துவதில் தேர்ந்த எழுத்தாளன் வெற்றி பெறுகிறான்.
சில நாவல்களில் கதை நிகழும் களம் கதை மாந்தர்களையும் அக்கதை ஓட்டத்தையும் வாசகனுக்கு மிகவும் நெருக்கமாக்கி விடுகிறது. இன்னும் சில நாவல்களில் கதை நிகழும் களமும் கதை நிகழும் காலமும் ஒன்றுடன் ஒன்றிணைந்து கதை ஓட்டத்தில் பிரிக்கமுடியாத சரடாக பிணைக்கப்பட்டிருக்கிறது. இம்மாதிரி நாவல்களில் கதைக் களம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதும் கதையின் காலம் ஏன் கவனத்திற்குள்ளாகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
 கதைக்களமும் காலமும் கதையைத் தீர்மானிக்கின்றன.

இம்மாதிரி எழுதப்படும் நாவல்களின் ஊடாக வெளிப்படுத்தப்படும் நுண்ணிய அரசியல் என்ன? அதை எப்படி எடுத்துக்கொள்வது?என்ற புள்ளியில் குவிகிறது இப்பார்வை.

கடந்தகால மனிதர்களின் வாழ்வியலும் இயற்கையுடன் ஒட்டிய அவர்களின்
வாழ்க்கை, நம்பிக்கை , சடங்குகள் ஆகியவையும்  கதை ஓட்டத்தில் முக்கியமான  பங்களிப்பை வழங்கும் போது திறமையான எழுத்தாளன்  கடந்தகாலத்தைப் பொற்காலமாக்கிவிடுகிறான். சாதிய சமூகத்தில் அவன் படைத்துக்காட்டும்பொ ற்காலம் (?) சமூகநீதி என்ற ஆகச்சிறந்த சமூக அறத்தின் முன் புறக்கணிக்கப்பட்டிருப்பதை
வாசகன் வெளிப்படையாகத் தெரிந்து கொள்வதற்கும் அப்படியே தெரிந்து கொண்டாலும் அதை வெளிப்படுத்துவதற்கும் தயக்கம் காட்டுகி சூழல் நிலவுகிறது.
காரணம் .. குறிப்பிட்ட எழுத்தாளனின் அக்குறிப்பிட்ட படைப்பு பலராலும் கொண்டாடப்பட்டும் பல விருதுகள் பெற்றும் ஆகச்சிறந்த படைப்பு என்ற
அடையாளத்தை பெற்றபின் அப்படைப்பில் நுண்ணரசியலைக் காண்பது
சாதிய மனோபாவமாகி விடும் என்று அச்சம் கொள்கிறான் அதைக் கண்டுணரும் வாசகன். 
கல்யாண வீட்டிலிருந்து கருமாதி வரைக்கும் சாதிய சமூகமாகவே வாழும் சமூகத்தில் அவனுக்கு படைப்பாளன் முன்வைக்கும் சாதி அரசியலைப் பேசுவதற்கு மட்டும் தயக்கமாக இருக்கிறது!  இது என்ன மாதிரியான புரட்சிகரமான மனநிலை என்பதை விட இம்மாதிரியான ஒரு மனநிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதில் நம் தமிழ்ச் சமூகத்தின்
சாதிமுகம் அசைக்க முடியாத ஒரு  தூணாக நின்று கொண்டிருக்கிறது..

அண்மையில் வாசித்த சோ. தர்மனின் சூல் நாவல் மிகவும் உன்னதமான படைப்பு. ஆனால்
சூல் முன்வைக்கும் அரசியல் ?
சூல் முன்வைக்கும் சமூக நீதி?
சூல் முன்வைகும் சாதி சமூகம்?
சூல் முன்வைக்கும் சமூகப்படிநிலை?
இதெல்லாம் என்னவாக இருக்கிறது.?

நீர்ப்பாய்ச்சி என்ற கதாப்பாத்திரம் கதை ஓட்டத்தில்
 "சூல்" என்ற கருவுடன் மிகவும் நெருக்கமான கதைப்பாத்திரம்
. நீர்ப்பாய்ச்சி சாதி சமூகத்தில் பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவன்
என்பதும்  அவர்களின் நீர்மேலாண்மை குறித்தும் சிலாகித்து பக் 482ல் பேசப்படுகிறது.
"நம்ம ஜமீன்கள்ள உள்ள அத்தன கண்மாய்களையும் ஒங்க ஜாதிக ஆட்கள் கிட்டத்தான் ஒப்படைக்கனும்னு வெள்ளக்காரன் உத்தரவு. ஏம்னா வெள்ளாம செய்யறதுலயும், நீர்ப் பாய்ச்சுறதலயும் பள்ளர்கள மிஞ்ச இங்க ஆட்களே இல்லனு சொல்றான், சும்மா சொல்லல லண்டன்லருந்து இங்க வந்து பல வருஷன் ஆராய்ச்சி பண்ணி சொல்றான்.........
நீர்ப்பாய்சுற உரிமை பள்ளர்களுக்குத்தாம்னு பட்டயமே குடுத்திட்டான். அதனாலதான் ஒனக்கு இந்த உரிமையை ஜமீன் குடுக்குது.."
மேலும் பக் 480 ல் இதே கருத்து குப்பாண்டிசாமியின் சொற்களிலும் வெளிப்படுகிறது.
"அடேய் சாவிய ஒப்படைக்கிறது லேசுதாண்டா. ஆனா கண்மா வம்பாப் போகுமடா.வேற ஆருக்குடா அந்த நெளிவு சுளிவு தெரியும்? ........
மூச்சடக்கற சூட்சமம் ஒங்க பரம்பரைக்கு மட்டும் தான் தெரியும். அதப்படிக்க
எம்புட்டு பாடுபடணும்? ஊரு சீரழியப் போறது நிச்சயம்டா............கண்மா சீரழிஞ்சா இந்த ஊரே காலி, ஏம்னா ஊரெல்லாம் புள்ளத்தாச்சிய இருக்கணும், கண்மா எப்பவுமே நெற சூலியாகவே இருக்கணும். நெற சூலியும் தெய்வமும் வேற வேறல்ல.."
கதை ஓட்டத்தில் கண்மாயும் நீர்ப்பாய்ச்சியும் குப்பாண்டி சாமி எதிர்காலத்தை
குறித்து வைக்கும் கருத்துகளும் நிகழ்கால அரசியலுடன் சேர்த்து வாசிக்கப்படுகின்றன.
வாசகனுக்கு நீர்ப்பாய்ச்சி என்ற கதைப்பாத்திரத்தின் குணாதிசயங்களும்
நீர்மேலாண்மையும் பேசப்படும் போதும் கொண்டாடப்படும் போதும்
நீர்ப்பாய்ச்சி என்ற சாதி சமூகத்தின் குலதொழிலும் சேர்த்தே கொண்டாடப்படுகிறது.
நீர்ப்பாய்ச்சிகள் நீர்ப்பாய்ச்சிகளாக இல்லாமல் போய்விட்டதால் கண்மாய்கள்
காணாமல் போய்விட்டன.ஊரே காலியாகிவிட்டது.. என்ற இன்னொரு தளத்திற்கு கொண்டுவந்து நிறுத்துகிறது.
புதினம் முன்வைக்கும் இன்னொரு முகம் என்ன சொல்ல வருகிறது?
நீர்ப்பாய்ச்சியின் மகன் நீர்ப்பாய்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைத்தவிர
நீர்ப்பாய்ச்சியின் குலதொழிலைக் கொண்டாடுவதிலும் நீர்நிறைந்த கண்மாய்
சூல் கதையின் முகமாக இருப்பதும் நம் கவனத்திற்குரியதாகிறது.

நீர்ப்பாய்ச்சியின் மகனுக்கு நீர்மேலாண்மை அறிவு குலத்தொழிலாய் வாரிசு வழி அவன் அறிவு மேலாண்மை என்று ஏற்றுக்கொண்டால்
ஆடுமாடுகள் மேய்ப்பவன், துணிகள் வெளுப்பவன், சுடுகாட்டில் பிணம் எரிப்பவன், கழிவறை சுத்தம் செய்பவன், களை எடுப்பவன், இத்தியாதி .. எல்லா தொழிலும் கூட வாரிசு வழி குலத்தொழிலாகி அனுபவமே அறிவின் மேலாண்மையாக அந்தந்த தொழிலையும்
அத்தொழில் வாரிசு வழி வருவதையும் ஏற்றுக்கொள்வதுடன் கொண்டாடவும் வேன்டிய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். !

இந்த  நாவல் முன்வைக்கும் வெளிப்படையான இன்னொரு அரசியல்
எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டிருக்கும் திராவிட இயக்கம்...
கதையின் பிற்பகுதியில் திராவிட இயக்கமும் திராவிட இயக்கத்தின்
சமூக  நீதி கருத்துகளும் பெண்ணிய விடுதலை கருத்துகளும் கிராமத்து
கதைப் பாத்திரங்களின் உரையாடல்களின் ஊடாக கேலிக்குரியதாக
சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தான்.
 கதை ஓட்டத்தில் இப்பகுதியின் காலக்கட்டம்
இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு பிற்பட்ட காலக்கட்டம்.
அதாவது 1947க்குப் பின். இந்திய சுதந்திரத்திற்கு பின் நிகழும் சமூக
மாற்றங்கள். தேர்தல், நாவல் பக் 419, அத்தியாயம் 20ல் சுதந்திரதினக்
கொண்டாட்டமும் கொடி ஏற்றி மிட்டாய் வழங்குவதும் விவரிக்கப்படுகின்றன.

சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும்
அம்மாற்றங்களுக்கு காரணமாக இருந்தது அனைத்துமே திராவிட கட்சிகள் என்ற ஒரு பிம்பத்தை கதை மாந்தர்களின் உரையாடல்கள் தீர்மானிக்கின்றன. கவனிக்கவும்... இந்த உரையாடல்களில்
எங்கும் வெள்ளைக்காரன் ஆட்சியோ வெள்ளைக்காரன்
விட்டுச்சென்ற சமூக மாற்றங்களோ  ஆட்சியின்
மாற்றங்களோ பேசப்படவில்லை. மேலும் சுதந்திரத்திற்கு சற்று முன்பும் பின்னரும்  தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள்
 காங்கிரசுக்காரர்கள் தானே தவிர
திராவிட இயக்கம் அல்ல. கதைக்களமும் காலமும் இவ்வாறு இருக்க
கதை ஓட்டத்தில் சமூகத்தில் நிகழும் மாற்றங்களை திராவிட இயக்கத்துடனும் நாயக்கர் கட்சியுடனும் மட்டுமே
 தொடர்பு படுத்தி பேசுவது ஏன்?
அதிலும் அரசியல் ஆதாயம் பெறும் நபர்களாகவும் நாயக்கர் கட்சி ஆட்களைக்
காட்டுவது எதனால்? கதை 1967 க்குப் பின் நடப்பதல்ல. ஆனால் வாசிக்கும் வாசகன் சமகால அரசியலுடன் கதை நிகழ்வுகளை  இணைத்து வாசித்து " ஆஹா ஓஹோ" என்று புகழ்கிறான்.
திராவிட இயக்கமோ திராவிய இயக்கத்தின் பெரியாரோ நாவலாசிரியரின் கதைமாந்தர்கள் மொழியில் சொல்வதானால்  நாயக்கரோ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நிலைநிறுத்துவது எம் நோக்கமல்ல.
ஆனால் எதற்காக எதை முன்வைத்து ஏன் விமர்சிக்கிறோம்
என்பதையும் கட்டாயம் கவனிக்க வேண்டி இருக்கிறது.

தமிழக திராவிட இயக்க வரலாற்ற்றில்
1930 முதல் தந்தை பெரியார் கர்ப்ப ஆட்சி என்ற கருத்து பற்றி பேசி வந்தார். 1930ல் கர்ப்ப ஆட்சி அல்லது கர்ப்பத்தடை என்ற தொகுப்பு நூலை வெளியிட்டார். 1943ல் ஒரு திருமண நிகழ்வில் தான் தந்தை பெரியார்  "பிள்ளைப்பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பதுங்கூட நீக்கப்படலாம்.
நல்ல திரேகத்துடனும் புத்தி நுட்பமும் அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை 'இன்செக்‌ஷன்' மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண்-பெண் சேர்க்கைக்கும் குழந்தை
பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும் " (திராவிட நாடு 21, 28-2-1943. இக்கருத்துகள் தொகுக்கப்பட்ட நூல் "இனிவரும் உலகம்" )
கதை ஓட்டத்தில் திராவிய இயக்கத்தாரின் இப்பெண்ணிய சிந்தனையை
 சூல் கதை மாந்தர்கள் எவ்வாறு அணுகினார்கள் என்பதையும் ஆசிரியர் விவரிக்கிறார். பலநூறு ஆண்டுகள் ஆண் ஆதிக்க சமூகத்தில் வாழ்ந்தவர்களுக்கு பெரியாரின் இப்பரப்புரைகள் அதிர்ச்சியாகவும்
அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகவும் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் குழந்தைப் பெறமுடியும் என்ற பெரியாரின் கருத்தை கதையின் வயதான கதைப்பாத்திரம் கேலியும் கிண்டலுமாக பேசுவதில் நியாயமும் இருக்கிறது.
முதியவரான சின்னையாவுக்கும் வாலிப பருவத்தின் சின்னாவுக்கு நடக்கும் உரையாடல்.
சின்னையாவை கோழிப்பண்ணையைப் பார்த்துக்கொள்ள சொல்லி கோழிப்பண்ணை வேலைக்கு
அழைக்கிறான் சின்னா. பக் 459
"தாயோளி.. என்னயப் போயி கோழி மேய்க்க வாராயனு கேக்கயே, ஒனக்கு கல்யாணம் முடிஞ்சு
இத்தனை வருஷமாச்சு ஒரு புள்ள பூச்சி இல்ல. உங்க தலைவரு கச்சி நாயக்கருக்கும் புள்ள கொல்லி இல்ல. நீங்க ரெண்டு பேரும் ஒங்க பொண்டாட்டி மாருகள கூட்டிட்டுப் போயி
ஊசிப் போடுங்க. புள்ளப் பொறக்கானு பாப்பம். தாயோளி ஆருகிட்ட வந்து கத விடுறங. சேவல்
இல்லாம பொட்டக் கோழி முட்ட இடுதாம். கிடாறி ஏறாம மாடுக கன்னுக்குட்டி போட்டு
பால் குடுக்குதாம். அப்புறமென்ன ஆம்பள இல்லாம பொம்பள புள்ளப் பெற வேண்டியதான? போங்க  போயி ரெண்டு பேரும் பொண்டாட்டிகளுக்கு ஊசி போடுங்க.."
2016ல் வெளிவந்த சூல் நாவலில் இந்த வரிகளை வாசிக்கும் போது
எதெல்லாம் முடியாது என்று அன்றைய மக்கள் நம்பி இருந்தார்களோ அவை அனைத்தும் இன்று ரொம்பவும் சாதாரண நிகழ்வாகி போய்விட்டன என்ற ஓர்மையுடன் அந்த வரிகளைக் கடந்து வர முடிகிறது. ஆண் பெண் உறவு இன்றி பிள்ளை பெறுவதை அன்றைய சமூகம் இப்படித்தான் எதிர்க்கொண்டிருக்கும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கதை ஓட்டத்தில் கச்சி நாயக்கரின் பொண்டாட்டியும் பேசு பொருளானதில் இருக்கும் அரசியலை எந்த வகையில் சேர்க்க முடியும்?

ஒரு தகவலுக்காக இச்செய்திகள் :
திருமணம் ஆன இரண்டாண்டுக்குப் பின் பெரியாருக்கு பெண் குழந்தை பிறந்ததையும் நாகம்மையார் அழகான பெண் குழந்தைக்குத் தாயானார் என்பதும்  ஆனால், அந்தக் குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது.
&
சூல் நாவலின் : கதைக்களம் தமிழகம். அல்லது அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சி.
காலம் :  சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்.
அக்காலத்தில் மேற்கண்ட மாநிலத்தை ஆட்சி செய்தவர்கள் :
1920  - 1937  வரை ஜஸ்டிஸ் பார்ட்டி
1937 - 1939 ராஜாஜி - காங்கிரசு கட்சி
1939 - 1946 - கவர்னர் ஆட்சி
1946 - மார்ச் 1967 வரை - காங்கிரசு கட்சி


Wednesday, July 5, 2017

ஊழலை விட ஆபத்தானவை

காங்கிரசும் மகாத்மாவும் இந்திய தேசியமும் சாதிக்க முடியாததை
பிஜேபி சாதித்துவிடுவோ என்று அச்சமாக இருக்கிறது.
ஊழல் செய்த அரசியல் தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
என்ற அரசியல் நியாயங்களுடன் ஒவ்வொரு காயாக ஆட்டத்திலிருந்து
அவுட் ஆகி கட்டத்துக்கு வெளியே தூக்கி எறியப்படுகிறது.
இந்த அரசியல் சதுரங்க வேட்டையில் மாநிலக் கட்சிகளும்
மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் வேட்டையாடப்படுகிறார்கள்.
பொதுவாக நோக்கும் போது பெரிதும் நியாயமாகத் தெரியும் 
இச்செயல்பாடுகள் அனைத்துக்கும் காரண காரியங்கள் உண்டு.
அவை ஊழலையும் விட ஆபத்தானவை.
 ஊழல் தவப்புதல்வர்களையும் தவப்புதல்விகளையும்
காப்பாற்றுவது நம் நோக்கமல்ல என்பதால் கையறுநிலையில்
நாமும் தண்டனையை அனுபவிக்க வேண்டியதுதான்.
நாம் செய்த குற்றமெல்லாம் அவர்கள் ஊழல் செய்த போது
கண்டு கொள்ளாமல்ல் அவர்கள் இலவசமாகக் கொடுத்த தொலைக்காட்சியில்
கையில் ரிமோட்டுடம் உட்கார்ந்திருந்தது மட்டும் தான். !