Thursday, April 7, 2011

மன்மோகன்சிங்கின் மனவளக்கலை







தமிழர்கள் தமிழ்நாட்டில் ரொம்பவும் தான் குழம்பிப் போயிருப்பார்கள்.

காங்கிரசுக்கு 63 இடத்திலும் டெபாசிட் கூட கிடைக்காமல் புத்திப் புகட்டுவார்கள்
எம் தமிழர்கள் என்றெல்லாம் நான் பகற்கனவு காண விரும்பவில்லை.

காங்கிரசு அதிமுகாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்கப் போகிறது

காங்கிரசு தோற்றாலும் ஜெயித்தாலும் திமுகாவுக்கு "ஆப்பு
" தான்.
என்கிறார்கள் சில நம்பிக்கைக்குரிய ஊடக நண்பர்கள்.


ராஜபக்சே தமிழினத்தின் எதிரி
எனவே அவன் வரக்கூடாது மும்பைக்கு என்று சண்டைக்கோழியாய்
சிலிர்த்துப்போய் இங்கிருக்கும் பிற மொழிக்காரர்களிடம் பேசிய போது
ஃபிட் பிட்டாக சில கருத்துகள் உதிர்ந்தன.


இந்திய அரசாங்கம் அவனை அழைக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி ராஜபக்சே அருகில்
அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார். இந்திய அரசு தமிழன அழிப்பில் ராஜபக்சேக்கு
வலக்கரமாகவும் இடக்கரமாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது.
காங்கிரசாகட்டும் பிஜேபி ஆகட்டும்.. இந்த வெளியுறவுக்கொள்கையில்
மட்டும் ஒரே கொள்கை உள்ளவர்கள் தான். கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள்
அல்ல. இவர்கள் எல்லோரும் சேர்ந்த அரசியல் உலகம் தான் இந்தியா.
ஏன் .. உங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைப் பாருங்களேன்..
வேட்பாளாராக எல்லா கட்சிகளிலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நின்றார்களே!

காங்கிரசு, பிஜேபி இவர்களுடன் மாறி மாறி கூட்டணி பேசி கூட்டணி அமைத்து கூட்டணி
உடைத்து கூட்டணியில் கொள்ளை அடிப்பவர்கள் தான் உங்கள் தமிழினத்தலைவர்கள்!
மனித நேயம், மனித உரிமை என்ற அடிப்படையில் ராஜபக்சேவை நீங்கள் எதிர்க்கலாம்
என்றால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது சாட்சாத் ஓபாமாவைத்தான்.
அமெரிக்க வல்லரசு செய்யாத அட்டகாசமா? கொடுமையா? மனித உரிமை மீறல்களா?

சரி இந்த மாதிரியான விமர்சனங்களை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு
நான் இப்போதெல்லாம் அவஸ்தைப் படுவதில்லை.

தமிழ்நாட்டில் தேர்தல் நேரம்.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் நடக்கப்போகும் காமெடி!
அசத்தப்போவது யாருனு தெரியலை?
ஏதாவது நினைவுகள் உங்களைத் தூக்கமின்றி அலைக்கழிக்கலாம்.
உளவியல் பிரச்சனைகளின் தாக்கம் உடனே வெளியில் தெரியாதாம்.
எனவே தான் இந்த டிப்ஸ் உங்கள் அனைவருக்காகவும்.
இதை மன்மோகன்சிங் மனவளக்கலை என்று மனோதத்துவ நிபுணர்கள்
சொல்கிறார்கள்.
ரொம்பவும் சிம்பிள்..

தமிழன எதிரி
தமிழனத் தூரோகி
2 ஜி, 3ஜி, இஸ்ரோ
கூட்டணி தர்மம்
லைவ் காமெடி
லைவ் அடிதடி
கட்டைப்பஞ்சாயத்து
கச்சத்தீவு
இப்படியாக எதைப் பற்றிக் கேட்டாலும் ஒரே பதில்..


"ஓ.. அப்படியா..! எனக்குத் தெரியாதே! ' என்று சொல்ல வேண்டும்.
அப்படிச் சொல்லும் போது உங்கள் குரலும் உங்கள் உடல்மொழியும்
மன்மோகன்சிங் போலவே இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
.
மனநிம்மதிக்கு இந்த எளியமுறையை நம் தமிழர்களும் கற்று
கற்றபின் அவர்போலவே நிற்கவும் தக என்று திருக்குறளுடன்
இணைத்து பயன்பெறுமாறு வேண்டுகிறேன்.

துணைநின்ற நூல்கள்:

*மன்மோகன்சிங் மனவளக்கலை
* body language of singh @ parliment - you tube ..
*அசத்தப்போவது யாரு? தமிழ்நாட்டு தேர்தல் கள ஆய்வு


.

Tuesday, April 5, 2011

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி



28 வருடங்கள் காத்திருந்து இறுதியாக கிடைத்த உலகக்கோப்பைக்காக
நான் நன்றி சொல்ல வரவில்லை. உங்களுக்கு கிடைத்திருக்கும் ஊடக
வெளிச்சம், பாராட்டு பரிசு/பணம் மழையாகக் கொட்டுகிறது. உங்களைப் போன்ற
சக விளையாட்டு வீரர்களான ஹாக்கி விளையாடு வீரர்களுக்கு பொருத்தமான
காலணி கூட கிடைப்பதில்லை. இன்னும் 25 வருடங்களுக்கு நீங்கள் இந்தக்
கோப்பையை முத்தமிட்ட கனவுகளைக் கண்டே ஒரு தலைமுறை வாழ்ந்துவிட
முடியும். இதைக் காட்டிக் காட்டியே விதம் விதமான விளம்பரங்களில்
உங்கள் அனைவரின் முகமும் வரப்போவதை நினைத்து இப்போதே எனக்குப்
பயமாக இருக்கிறது. உங்களுக்கு கிடைக்கும் பணத்தில் மற்ற விளையாட்டுகளை விளையாடும் வீரர்களுக்கு ஏதாவது செய்தால் என்ன? என்றெல்லாம் கிறுக்குத்தனமாக உங்களிடம் நான் கேட்கப்போவதில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட வரும்போதெல்லாம் எங்க ஊரு பெரிசு
பால்தாக்கரே சத்தம் போடுவது வாடிக்கை. எனக்கு அப்போதெல்லாம் கோபம்
வருவதும் உண்டு.
விளையாட்டை விளையாட்டா பாருங்கய்யா.. என்று அறிவுரை எல்லாம்
சொல்லி இருக்கேன்! இந்து முஸ்லீம் என்று ஒரு வட்டத்தை என் பார்வை
தாண்டியதில்லை. ஒரு முறை பாகிஸ்தான் அதிபர் இந்தியா வந்து விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்திய எல்லையில் பாகிஸ்தான் படை ஊடுருவி தாக்க ஆரம்பித்தது எனக்கும் நினைவிருக்கிறது என்றாலும் அதற்கு பாகிஸ்தான்
கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள் என்று நியாயம் பேசி இருக்கிறேன்.

இலங்கை அதிபர் மும்பை வருகிறார் என்றவுடனேயே டென்ஷன் அதிகமானது.
எதுவும் எங்களால் செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் அந்த இயலாமை
இன்னும் கொஞ்சம் எங்கள் எண்ணத்தைக் கொடூரமாக்கியது.
இலங்கை வீரர்கள் வெற்றிப் பெற்று அந்த வெற்றிப்புன்னகையுடன்
ராஜபக்சே .. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!
இதற்காகவாவது இந்தியா வெற்றிப் பெற்றே ஆக வேண்டும் என்று
நான் நினைத்தது நியாயமற்ற உணர்வாக இருக்கலாம், என்னிலிருந்த
கொடூர எண்ணமாக இருக்கலாம். நான் எந்த மகாத்மாகவும் என்னை
நினைத்துக் கொள்ளவோ ஏமாற்றிக்கொள்ளவோ விரும்பவில்லை.

இலங்கை கிரிக்கெட் வீரர்களே... என்னை மன்னித்துவிடுங்கள்.
இந்திய கிரிக்கெட் வீரர்களே... உங்களுக்கு நன்றி..
உங்கள் வெற்றி .. என்னை என் காயத்தை...
மயிலிறகாய்த் தடவிக் கொடுத்தது.
என்னால் செய்ய முடியாததை உங்கள் பந்தும் மட்டையும்
செய்ததற்காக மீண்டும் உங்களுக்கு நன்றி.