Tuesday, March 22, 2011

கூட்டணி



கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக
இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள்.


காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை.
காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.
இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா
போய்ட்டான்.
செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத
அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது.
அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக்
கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா..
தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு.
அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம்.
சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப்
பார்த்தாள்.


"ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா?

"இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சி கூட்டம்.
நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம்."

"யாரு அந்த மவராசனா..?நல்லாயிருக்கட்டும்.
ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.."

"யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது"

"போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே"

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.
கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு
தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார்?
வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை
ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.


"ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.."

"ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க"

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.
"அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா
இருக்குமா?"

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள்.
வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.
ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ" வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும்
இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யி¢லிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள்
ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.
"தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
தலைவரைக் கொலை செய்ய சதியா?
இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .."

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

(2005 ல் வெளிவந்த என் சிறுகதை தொகுப்பு மின்சாரவண்டிகள் நூலில்
இடம்பெற்றிருக்கும் கதை. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கூட்டணி
கூத்து நடக்கும் போதெல்லாம் இந்தக் கதையில் வரும் அந்த மூதாட்டியின்
அழுகுரல் காதில் விழுகிறது...)




Thursday, March 3, 2011

எங்கள் அருணாவும் கருணைக்கொலை மனுவும்





அருணாவை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அவள் செய்தக் குற்றம் என்ன தெரியுமா?
பாலூட்டியாகப் பிறந்தது மட்டும்தான்!
அவள் இருமுலையும் அல்குலும் தான் அவள் சுமந்தக் குற்றம்.
அதற்காக அவள் அனுபவிக்கும் தண்டனை...
நம்மால் கற்பனைச் செய்துப் பார்க்க முடியாத தண்டனை
38 ஆண்டுகள் KEM மருத்துவமனையில் படுக்கையில் இருக்கிறாள்..
கோமாவில் இருக்கிறாளா.. இல்லை செடியிலிருந்து பறிக்கப்பட்ட
காய்கறி போல ஒரு சதைப் பிண்டமாக (permanent vegetative state)
இருக்கிறாளா.. மருத்துவர்களும் பத்திரிகைகளும் இப்போது அதைப்பற்றி
பல்வேறு கருத்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என்னைப் பொருத்தவரையில்..
அவள் கொலை செய்யப்பட்டு 38 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
அவளை இந்த நிலைக்குள்ளாக்கிய சோகன்லால் வால்மிகி மீது
எங்கள் சட்டம் ரொம்பவும் தான் கருணைக் காட்டி இருக்கிறது,
வல்லாங்கு (Rape) செய்ததாக அவன் குற்றம் சாட்டப்படவில்லை.
அவன் மீது வெறும் திருட்டுக் குற்றம் மட்டுமே.
அதிலிருந்தும் அவன் வெளிவந்தாகிவிட்டது. தற்போது டில்லி மருத்துவமனையில்
அவன் வார்ட் பாயாக மீண்டும் வேலை. ஒருவேளை இந்த 38 வருடத்தில்
அவன் ரிடையராகி சொந்த ஊருக்குப்போய் நிம்மதியாக பான்பாராக் சாப்பிட்டுக்
கொண்டு இருக்கலாம், யாருக்குத் தெரியும்.

அருணாவுக்கு கட்டாயமாக கொடுக்கப்படும் மருந்து, உணவுகளை நிறுத்தி
அவளுக்கு கருணைக் காட்ட வேண்டும், அதாவது கருணைக்கொலைக்கு
நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இருக்கிறார் அருணாவைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் ஒரு புத்தகமாக எழுதிய பிங்கி விரானி.
நீதிமன்ற உத்தரவு படி அருணாவின் மூளையை செகேனிங் செய்து
பார்த்திருக்கிறார்கள். மூளை சுருங்கிப் போய்விட்டதாகத் தெரிகிறது.


அருணா கோமா நிலையில் இல்லை என்கிறார் KEM டாக்டர் சஞ்சய் ஓக்.
அவள் சங்கீதம் கேட்பதையும் அண்மையில் மீன் சாப்பிடக் கொடுத்தப்ப்போது
அவள் சந்தோஷமாக சாப்பிட்டதையும் அதனால் அவளுக்கு மீன் உணவு
விருப்பமானது என்பதை அறிந்துக்கொண்டதாகவும் கூறுகிறார்.
அழுவதும் சில நேரங்களில் சத்தமிடுவதும் கை கால்களை அசைப்பதும்
அவள் அறைக்குள் வந்தவர்கள் யார் என்பதை அறியவில்லை என்றாலும்
யாரோ வந்திருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்துக் கொள்கிறாள்
என்றும் டாக்டர் சஞ்சய் ஓக் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 38 ஆண்டுகள் படுக்கையில் இருக்கும் அருணாவை
அங்கு வேலைப்பார்க்கும் எவருமே தொல்லையாக நினைக்கவில்லை
என்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஏற்படும் புண்கள்
அவளுக்கு இல்லை என்றும் சொல்கிறார் டாக்டர் ஓக்.
"எங்களுக்கு அவள் உயிருடன் இருந்தாக வேண்டும், எங்களைப் பொருத்தவரையில்
அவள் மற்றவர்களைப் போல உயிருடன் இருப்பவள்தான்
We want us alive and she is very much a living person for us,"
என்பதுதான் இன்றும் டாக்டர் சஞ்சய் ஓக்கின் கருத்து.

மருத்துவப்புத்தகங்கள் permanent vegetative state நிலையில் இருக்கும்
நோயாளிகள் கண்களை அசைப்பது அழுவதும் சிரிப்பதும் உணர்ச்சிகளின்
வெளிப்பாட்டினாலோ அல்லது புறக்காரணிகளின் தூண்டுதலாலோ அல்ல
என்று சொல்கிறது.அதனால் தான் KEM மருத்துவமனை நரம்பியல்
அறுவைச்சிகிச்சை டாட்கர் சுனில் பாண்ட்யா அருணாவில் நிலையை
permanent vegetative state என்ற கருத்துடன் ஒத்துப்போகிறார்.

எல்லாவற்றுக்கும் அமெரிக்காவை உதாரணம் காட்டும் நம்மவர்கள் ஐந்து
ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க உச்சநீதிமன்றம் 15 ஆண்டுகள்
PVS நிலையிலிருந்த டெர்ரிசச்வோ (Terri Schiavo) என்பவருக்கு
உணவு கொடுப்பதை நிறுத்த உத்தரவிட்டதன் மூலம் கருணைக்கொலைக்கு
ஆதரவளித்ததைக் காரணம் காட்டுகிறார்கள்.ஆனால்
19 ஆண்டுகள் கோமா நிலையிலிருந்து மீண்டு வந்தவர்கள் இருக்கிறார்கள்.
இந்தியச் சட்டம் 21, சட்டப்படி வாழ்வதற்கான உரிமையைப் பற்றி
பேசுகிறது, சட்டப்படி சாவதற்கான உரிமையை அல்ல.

அருணாவுக்கு நினைவு திரும்பக்கூடாது. அப்படி ஓர் அதிசயம் நடந்தால்
அதுதான் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
உறவுகள் கைவிட்டதற்காக அழுவாளா?
உண்மைகள் தூக்கிலிடப்பட்டதற்காய்த் துடிப்பாளா?
காதல் செத்துப்போனதற்காய் கண்ணீர் வடிப்பாளா?
இல்லை.. இல்லை..
முகம் சுளிக்காமல் தன்னைத் தங்களில் ஒருத்தியாக இந்த 38 வருடங்கள்
காத்த அந்த மருத்துவமனை நர்சுகளிடம் நன்றி சொல்லி
மனிதநேயம் இன்னும் செத்துப்போகவில்லை, நன்றி .. என்று
தன் கடைசிமூச்சை அவர்கள் காலடியில் விடுவாளா?
அருணா என்ன செய்வாள்.. அவளால் என்னதான் செய்யமுடியும்?
62 வயது அருணாவுக்கு நினைவு திரும்பாமலேயே
இருக்கட்டும்.

(ref: TOI, 28/2/11& Mumbai mirror)


**

அவளைப் பற்றிய செய்தியை நான் உண்மையின் ஊர்வலங்கள் என்ற
தொடரில் திண்ணையில் எழுதியிருந்தேன். அதன் பின் என் வலைத்தளத்திலும்
சில வருடங்கள் கழித்து மறுவாசிப்புக்காக கொடுத்திருக்கிறேன்.
அருணாவைப் பற்றிய அந்தப் பக்கங்களை ...


http://puthiyamaadhavi.blogspot.com/2010/08/blog-post_05.html