Friday, November 27, 2015

சிற்பி விருதும் கவிஞர்களும்



பரிசுகளோ விருதுகளொ ஒரு படைப்பாளனின் படைப்புக்கான மதிப்பீடல்ல
என்றாலும் கவிதை எழுதும் என் நண்பர்கள் அனைவரும்
சிற்பி விருது பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.
காரணம் கவிஞர் சிற்பி அவர்கள் ஒரு படைப்பாளனுக்கு கொடுக்கும்
அங்கீகாரமும் மரியாதையும். சிற்பி பரம்பரை பணக்காரர். எனவே அவரால்
மிகச்சிறப்பாக சிற்பி விருது நிகழ்வை நடத்த முடிகிறது என்று உங்களில் பலர்
சொல்லக்கூடும். ஆனால் அவரைப்போல வசதியானவர்கள் வழங்கும்
விருது நிகழ்வுகளில் விருது பெறும் படைப்பாளனின் இடம் எப்படி
இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்கும் போது தான்
சிற்பியின் சிறப்பு நமக்குப் புரியும்.

முதலில் விருது பெறும் படைப்பாளரின் வருகையை உறுதி செய்வார்.
கோவையில் இறங்கியவுடன் படைப்பாளர் தங்குவதற்கான ஏற்பாடுகள்
கச்சிதமாக செய்யப்பட்டிருக்கும். நிகழ்வுக்கு முன் அதிகாலையில்
தன் விருந்தினர்களை நேரில் வந்து சந்தித்து வசதிகள் குறித்து
அக்கறையுடன் விசாரிப்பார். காலை உணவு அவருடைய இல்லத்தில்.
அழைத்துச் செல்ல கார் ரெடியாக இருக்கும். அவர் இல்லத்தில் அவர்
குடும்பத்தினரே தயாரித்த காலை டிபன்.. சுடச்சுட.. அவர் வீட்டினர்
பரிமாறுவார்கள். அதன் பின் ஹாலில் அவர் விருந்தினர்கள் அனைவருடனும்
ஒரு குட்டி உரையாடல் நடக்கும். விருந்தினர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரில் விழா நடக்கும் அரங்கத்திற்கு அழைத்துச் செல்ல
ஏற்பாடாகி இருக்கும். விழா அரங்கில் விருது பெறும் படைப்பாளர்கள்,
சிறப்பு விருந்தினர்,, விருது வழங்குபவர் அமர்ந்திருக்க நிகழ்வு தொடங்கும்.
ஒவ்வொரு விருது பெறுபவர் குறித்த குறிப்புகளுடன் கவிதைகளும்
இடம் பெற்ற வண்ணத்தில் அச்சிடப்பட்ட கையேடு வழங்கப்படும்.
அவ்விழா சிற்பியின் புகழ்ப்பாடும் விழாவாக இல்லாமல்
விருது பெறும் எழுத்தாளருக்கு முழுக்க முழுக்க சிறப்பு செய்யும்
நிகழ்வாக மிக செம்மையாக திட்டமிடப்பட்டு நடத்தப்படும்.
விருது பெறும் ஒவ்வொரு படைப்பாளரும் ஏற்புரை வழங்க
போதிய நேரமும் எழுத்தாளர் தன் மனதில் பட்டதைப் பேசுவதற்கான
முழு சுதந்திரமும் இருக்கும்.
நிகழ்வின் இறுதியில் தலைவாழை இலைப்போட்டு திருமண வீடு போல
பந்தி நடக்கும். கோவை எப்பொதுமே எழுத்தாளர்களின் கூடு.
பலர் வந்திருப்பார்கள். சந்திப்புகள், ஸ்நேகம் வளர்க்கும் புன்னகைகள்..
தொடரும்.
..............


 சிற்பி விருதுகளில்
நம் படைப்புகள் மட்டுமே அங்கே முன்னிலை வகிக்கும்.
நம் சாதி, மதம், இனம், வாழ்விடம் இதெல்லாம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
(விருதுகளில் இவை எல்லாம் கண்டு கொள்ளப்படுகிறதா என்று என்னிடம்
எதிர் கேள்வி கேட்காதீர்கள். ப்ளீஸ் ..)
விருதுகளில் வழங்கப்படும் கேடயமோ, பரிசுத்தொகையோ, ஆடம்பரமான
மேடையோ ஒரு படைப்பாளனுக்கு பொருட்டல்ல. அவனும் அவன் படைப்பும்
அவ்விருது மேடையில் பெறும் இடம் ரொம்பவும் முக்கியமானது.
2006 ல் நிழல்களைத் தேடி கவிதை நூலுக்கு சிற்பி கவிதைப் பரிசு கிடைத்தது.
அந்நிகழ்வில் கலந்து கொண்ட பின் கவிஞர் சிற்பி அவர்களுக்கு சொல்லாத
நன்றியை இவ்வளவு காலம் கடந்து சொல்கிறேன்...
என் ஆசை எல்லாம் என் நண்பர்களும் கவிதைக்கான சிற்பி விருது பெற வேண்டும் என்பது தான்.

 நன்றி சிற்பி. 

Sunday, November 8, 2015

எஸ்.ரா.வின் உப பாண்டவம்





-இன்னும் எத்தனை பாண்டவர் கதைகள் களம் கண்டாலும்
அத்துனை பார்வைகளுக்கும் இடம் கொடுக்கும் பெரும் சமுத்திரமாக
மகாபாரதக்கதை விரிகிறது.
எஸ்.ராவின் உபபாண்டவம் புனைவிலக்கிய உத்திகளின் உச்சம்.
கதைகளைத் தானே உருவாக்கி கதைமாந்தர்களைப் படைக்கும் எழுத்தாளனுக்கு அக்கதையும் அக்கதையை நகர்த்தி செல்லும் சம்பவங்களும் முன்னுரிமை பெறும்.
ஆனால் மகாபாரதம் போன்ற அனைவரும் அறிந்தக் கதையை மறுவாசிப்பில்
தன் படைப்புக்குள் கொண்டுவரும் எழுத்தாளனுக்கு கதையோ நிகழ்வோ
முன்னுரிமை பெற வேண்டிய அவசியமில்லை. கதையை மாற்றவோ அல்லது
கதைப் போக்கை தீர்மானிக்கவோ வேண்டிய அவசியமும் இல்லை.
அதனால் தான் தெரிந்தக் கதையில் தெரியாத பக்கங்களை நாம் அறியாத முகங்களை வெளிச்சப்படுத்திவிடும் வித்தையை செய்துவிட முடிகிறது.
எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் வெளிச்சப்படுத்தும் மாந்தர்கள்
மகாபாரதக் கதையில் உள்வட்டதை விட்டு விலகி நிற்கும் கதை மாந்தர்கள்.
விதுரனைப் போலவே பணிப்பெண்ணுக்குப் பிறந்த திருதராஷ்டிரனின்
மகன் விகர்ணன் அஸ்தினாபுரத்தின் அரண்மனையில் தொடரும்
விதுரன்களை நோக்கி நம் பார்வையை நகர்த்துகிறான்.


மயன் பாண்டவர்களுக்காக கட்டிக்கொடுத்த இந்திரபிரஸ்த மாய மாளிகை
மகாபாரதக்கதையில் குரு வம்சத்தின் அழிவுக்காக திட்டமிடப்பட்டே கட்டப்படும் ஆதிவாசியின் சாபம்.
பாஞ்சாலி துகிலுரியப்பட்டதையும் குருஷேத்திரத்தில் பாண்டவர்கள் வெற்றியையும்
" தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்றே
எப்போதும் போதிக்கப்பட்டு வந்திருக்கிறோம். தர்மம் வென்றதாகவே இருக்கட்டும்,
ஆனால் ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியை காவு கொண்டுவிட்ட வெற்றியாகவே
பாண்டவர்களின் வெற்றி.
கதைப்போக்கில் பாண்டுவின் இரண்டாம் மனைவி மாத்ரி பாண்டு இறந்தப்பின் தீயில் விழுந்து உடன்கட்டை ஏறுகிறாள். அதற்கான காரணங்களை  நோக்கி கதை நகரும் போது
பாண்டவர்களின் தாயாக கடைசிவரை மகாபாரதக்கதையில் உயிர்ப்புடன் வாழும் குந்தி எதிர்மறை பாத்திரமாக மாறிவிடுகிறாள்.
தம்தம்  சகோதரியின் பிள்ளைகளுக்காக சகுனியும் வாசுதேவனும்   போராடுகிறார்கள், அவரவர்களுக்கான நியாயங்களுடன்.

பாஞ்சாலி துகிலுரியப்பட்டதில் ஏற்பட்ட அவமானத்தை துடைக்க கெளரவர்களின் மனைவியர் 100 பெண்களும் விதவைகளாக. !
தன் நூறு புத்திரர்களைப் போரில் இழந்த சோகத்தை விட
காந்தாரிக்கு தன் புத்திரர்களின் விதவை மனைவியரை
 எதிர்கொள்வதில் ஏற்படும் சோகம்.
அதை தவிர்க்க விரும்பும் காந்தாரி.. இன்னொரு முறையும்
 மகாபாரதக்கதை மறுவாசிப்பு செய்யப்படலாம்.
 அக்கதையில் துரியோதனின் மனைவி பானுமதி பேசினால்.. ..
அல்லது திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி பேசினால்..
மகாபாரதக்கதை வாசகனை மட்டுமல்ல,
ஒவ்வொரு படைப்பாளரையும் கூட
மீண்டும் மீண்டும் தனக்குள் கரைத்துக் கொள்கிறது.


Monday, November 2, 2015

அண்டைமாநிலங்களுடன் சுமுகமான உறவு - திமுக


அண்டைமாநிலத்தவரை அரவணைத்து சென்றது திமுக"
என்று உண்மையை ரொம்பவும் வெளிப்படையாக
கிருஷ்ணகிரியில் நேற்று பேசி இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள்.
நமக்கு நாமே தானே ,
 இதில் என்ன ஒளிவு மறைவு வேண்டி இருக்கிறது?
என்று நினைத்திருப்பாரோ?
திமுக அண்டைமாநிலங்களுடன் ரொம்ப ரொம்ப சுமுகமான
உறவு நிலை வைத்திருந்தது தானே பிரச்சனையே! 

ஏன் இவ்வளவு சுமுகமான உறவு வைத்திருந்தார்கள்
என்று பொடிப்பசங்க கூட தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பிப்பார்கள்...
இதெல்லாம் தேவைதானா? ப்ளீஸ்..
எதுவும் பேச வேண்டாம்.. 
உங்களுக்குப் பிடித்தமான உடைகளில்
சைக்கிள் விடுங்கள்.. சந்தைக்குப் போங்கள்,
 வருகிறவர் போகிறவர்களிடம் ஜாலியாகப் பேசுங்கள்.
 டீக்கடையில் சூடா டீயும் போண்டாவும் சாப்பிடுங்கள்.
ஆட்டோவில் உட்கார்ந்து போங்கள்,
நின்று கொண்டே போங்கள்.. 
டிராக்டர் ஓட்டுங்கள். தேவைப்பட்டால் லாரி கூட ஓட்டலாம்.
 விடியல் பயணம் கலர்புஃல்லா இருக்கட்டும்!!

Comment