Sunday, December 22, 2013

கோவையில் கருத்தரங்கம், வாருங்களேன்....





சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10

தமிழ்நாடு இலக்கியப்பேரவையில்

திராவிட இயக்கம் அன்றும் இன்றும்

என்ற தலைப்பில் பேச அழைத்திருக்கின்றார்கள்.


இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை
18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,
கோவை 45.

Wednesday, December 18, 2013

தேவயானி கோபர்கடே கைதும் மும்பை முனியம்மா அரசியலும்


நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே
கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பணிப்பெண் கொடுத்தப்
புகாரின் அடிப்படையில். குற்றம்: ஒப்பந்தப்படி சம்பளம் கொடுக்கப்படவில்லை.
கொடுக்கும் சம்பளம் அமெரிக்க சட்டப்படி இல்லை ..

இந்தியாவின் எதிர்வினைகளைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை.
"ஓ" போடுவோம் இந்தியாவுக்கு,
என்கிறேன் நான்.

ஆனால் என் அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா வேறு சில
கருத்துகளைச் சொல்லுகிறாரே!


*எதிர்வினைக்கு பல முகங்கள் உண்டாம், அந்தந்த முகங்களுக்கு வெவ்வேறு
அனுபவங்கள் இருக்கிறதாமே!

*ராகுல்ஜிக்கு பாஸ்டன் ஏர்போர்டில் நடந்தது நினைவுக்கு வந்திருக்குமோ?

*நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விசா கொடுக்காமல் இழுத்தடித்தது
நினைவுக்கு வந்திருக்கும்.

*மன்மோஹன் சிங்கை இனி யாரும் குற்றம் சொல்ல முடியாது.
எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்காவுக்கே ஆள்காட்டி விரலைக்
காட்டி அதட்டி இருப்பார்? அவரை இனிமேல் "பயந்தாங்கொள்ளி" என்று
சொல்ல முடியுமா?

*இப்போதும் மறக்காமல் தேவயானியின் சாதி சர்டிபிகேட்டைப் பார்த்து
அந்த பெண் அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் இந்தியா
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி அவர் பார்வையில் ஒரு அதட்டல்.

*இந்தியா தன் வெளியுறவுக்கொள்கைகளை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பேசினாராமே
மக்களவையில் நம் தமிழ்நாட்டின் திமுக வின் ஒற்றைப் பிரதிநிதி
கனிமொழி.எம்.பி.. (வெளியுறவுக் கொள்கைக்கும் 2Gக்கும் ஏதாவது
சம்பந்தம் இருக்கிறதா என்று முனியம்மாவிடம் கேட்டால் அவர்
முறைக்கிறார்... ஒரு காலத்தில் கனிமொழியின் தோழியாக
இவரும் இருந்திருப்பாரோ.. யார் கண்டது?!!)

*அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாமே இந்தக் கைது.
இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி
சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக்
காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது
இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி
கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை
செய்துவிட்டு அதன்பின் டிசம் 11 இல் இச்சம்பவம் நடந்திருப்பதால்
இது அமெரிக்காவின் திட்டமிட்ட செயல் என்று
ஒரேயடியாக அமெரிக்காவைக் தாக்குகிறார் மும்பை முனியம்மா.


முனியம்மாவின் கேட்டேன், அமெரிக்காவுக்கே அதட்டல் போடும்
இந்தியா பக்கத்திலிருக்கும் இலங்கை நாட்டிடம் மட்டும் ஏன் இப்படி
பயப்படுகிறது? தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் இந்த மாதிரி
:ஹாட்டா" எடுத்திட்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று
கேட்டேன்.

எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்
அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா!
நீங்கள்..?

Saturday, December 7, 2013

நெல்சன் மண்டேலாவுக்கு அவருடை சிறைவாச நண்பர் எழுதிய கவிதை


நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் பக்கத்து அறையில் இருந்த டென்னிஷ் புருட்டஷ் எழுதிய
கவிதை இது.



In the cell opposite Nelson Mandela’s cell on Robben Island, was our poet friend Dennis Brutus, who wrote It is The Constant Image of Your face and A troubadour I traverse, all reviewed previously on this blog. Both of them were partners against apartheid, working in the quarry together, cracking stones and being tortured. It is fitting we honour the memory of Mandela today with poetry that was written by a man who knew him first hand. Dennis Brutus wrote this poem after Mandela was released from prison and was on his way to finally assume presidency of South Africa, unify a nation standing at a point of indecision on its future and teach humanity a lesson on forgiveness.

Here is Dennis Brutus’ tribute,





Yes, Mandela, some of us
we admit embarrassedly
wept to see you step free
so erectly, so elegantly
shrug off the prisoned years
a blanket cobwebbed of pain and grime;
behind, the island’s seasand,
harsh, white and treacherous
ahead, jagged rocks
bladed crevices of racism and deceit
in the salt island air
you swung your hammer grimly stoic
facing the dim path of interminable years,
now, vision blurred with tears
we see you step out to our salutes
bearing our burden of hopes and fears
and impress your radiance
on the grey morning air



My name is Dela. Even before I was old enough to know anything about this world, my cousins called me Man-Dela, in tribute to the greatness of a man whose life touched everyone who believes in the greater humanity, irrespective of country. I bid him peaceful rest. We will tell our children this, that we lived in the time of Nelson Mandela.

Tuesday, December 3, 2013

பாவம், திருமதி நரேந்திர மோதி



நரேந்திர மோதிக்கு திருமணம் ஆகிவிட்டதா , இல்லையா?
அவருக்கு காதலியர் உண்டா, கிடையாதா?
இதைப் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை.
எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதில்
எப்போதும் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.
இங்கே நான் விமர்சனப்படுத்த விரும்புவது தனிநபரின் வாழ்க்கையுடன்
அந்த தனிநபர் ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் அல்லது
நம்பப்படும் தத்தவம் குறித்த விசாரணை தான்.

ஜசோதாபேன் ( JASHODABEN) அவர்கள் தான் திருமதி நரேந்திர மோதி.
அவருக்கும் மோதிக்கும் திருமணம் ஆகி ஒரு சில நாட்களில் தன்
பிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டவர் ஜசோதாபென். திருமணம் நடக்கும்போது
அந்தப் பெண்ணின் வயது 18, ஏழோ எட்டோ தான் படிப்பு. பார்க்க ரொம்பவும்
சுமாராக இருப்பதாக அந்தப் பெண்ணுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.
தன் கணவர் மோதி அளவுக்கு தான் அழகானவளில்லை, அறிவுள்ளவளில்லை
என்று இப்போதும் அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அதன் பின் 1972ல்
எஸ் எஸ் சி தேர்வு எழுதி பாஸாகி ஆரம்பபள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்குப்
படிக்கிறார். அதன்பின் அகமதாபாதி டெக்வாலி பள்ளிக்கூடம், ரூபல் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்ட் பாடசாலை என்று அவர் ஆசிரியர் பணி தொடர்ந்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட ஒர் ஆசிரியை.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தகரக்கூரை வேய்ந்த வீட்டில் வாழ்க்கை
தனியாக. 100 சதுர அடியில் வாடகை வீடு. கழிவறையோ குளியலறையோ
கிடையாது. தண்ணீருக்கு வெளியில் தான் வரவேண்டும். அதிகாலையில் விடியலுக்கு முன் எழுந்து வீட்டுக்கு வெளியில் குளித்தால் தான் குளியலுக்கு
சாத்தியப்படும் வாழ்க்கை.

அந்தப்பெண்ணை எந்த நிருபரும் சந்திக்க வழியில்லை. அதையும் மீறி சந்தித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தன் ஆசிரியர்
தொழில் மூலம் அந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
வேலைப்பார்த்த கிராமங்களிலும் சொந்த ஊரிலும் திருமதி ஜசோதாபென் நரேந்திரமோதி என்றே அறியப்பட்டவர்! அவரைச் சுற்றிய கண்காணிப்பு வலையம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அவரோ தன்னைப் பற்றி
எவரிடமும் அதிகம் சொல்லிக்கொள்ளாமல் தன் கணவர் நரேந்திரமோதி
கலந்து கொள்ளும் கூட்டங்களில் தூர நின்று பார்த்துச் செல்லும் பெண்ணாக
இருக்கிறார்.

45 வருடங்களுக்கு மேலாக கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில்
அவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது ஆருடங்களும் ஆன்மிகமும் தான்.
ஜோசியக்காரர்கள் எல்லோரும் " கட்டாயம் உங்கள் கணவர் உங்களை அழைத்துக் கொள்வார்... அந்த நாள் வரும்"என்று உறுதியாகச் சொல்கிறார்களாம். அதை அப்படியே நம்பி இந்தப் பெண்ணும் அந்த அழைப்பு
வரும் என்று காத்திருக்கிறார்.

கணவரின் அதிகாரவட்டம் மிகவும் பெரியது என்பதை அறிந்தவர்தான் இந்தப் பெண். பல நேரங்களில் அச்சப்பட்டும் சிலநேரங்களில் அதையும் மீறி எதையோ
நம்பி இன்றும் காத்திருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் மோதி பக்தர்கள் சொன்ன விளக்கம்,
"அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் முதலிரவு, இரண்டாம் இரவு..
இத்தியாதி எதுவும் நடக்கவில்லை" என்பது தான்.
இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ?

எது எப்படியோ.., இந்து தர்மம் திருமணத்தை உடலுறவுக்கு அப்பால் எடுத்துச்
செல்வதாக சொல்கிறது. அது மட்டுமல்ல, ஒரு மனைவியைக் காப்பாற்றுவதும்
கணவனின் கடமை என்பதை மிகவும் உறுதியாகச் சொல்கிறது இந்து தர்மம்.
இந்து தர்மம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை என் போன்றவர்களைவிட மோதியும் மோதியின் பக்தர்களும் நன்கு அறிவார்கள்.

மற்ற தலைவர்களின் லட்சணமெல்லாம் தெரியாதா? என்று கேட்காதீர்கள்.
தெரியும். என் கவலை எல்லாம், தான் தூக்கிப்பிடித்திருக்கும் இந்து தர்மத்தின்
முதல் தர்மத்தையே காப்பாற்ற தவறி விட்டாரோ நரேந்திரமோதி என்பது தான்.

Monday, November 25, 2013

சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை




சச்சின் டெண்டுல்கர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் சம்பாதித்த தொகை பல கோடிகளைத் தாண்டும்,. ஆனால் அண்மையில் இந்திய அரசு சச்சின் டெண்டுல்கர் தன் 24 வருட கிரிக்கெட் ஆபிஸிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் நாளில் அவரை இந்தியாவின் தலைசிறந்த விருதான 'பாரத ரத்னா" விருதுக்கான அம்பாசிடராக்கிவிட்டது. சச்சின் டெண்டுல்கர் இனி லிட்டில் மாஸ்டர் சச்சின் அல்ல. பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்.
அவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருதை இந்திய அன்னையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாக பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. சச்சின் உளப்பூர்வமாகவே இந்த சமர்ப்பணத்தைச் செய்திருக்கலாம். எனினும்  சச்சின், நானும் ஒரு இந்திய அன்னை என்ற நிலையில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த சமர்ப்பணத்தை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் சமர்ப்பணத்தை ஓர் இந்திய அன்னையாக நிராகரிக்கும் உரிமை எனக்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சச்சின், உங்கள் கிரிக்கெட் விளையாட்டுகளைப் பற்றியோ அதில் எந்தளவுக்கு நீங்கள் நம் இந்திய திருநாட்டுக்காக விளையாடினீர்கள் என்பது குறித்தோ பத்திரிகைகளில் விளையாட்டு பகுதியில் விலாவரியாக நிறையவே எல்லோரும் எழுதி தீர்த்துவிட்டார்கள். எனக்குப் புதிதாக சொல்ல எதுவுமில்லை, சச்சின்.
நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றபடி உங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர். இந்திய மக்கள் அனைவரும் உங்களை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே அடையாளம் கண்ட போதும் அதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தும் வாய்க்கூசாமல் நான் ஒரு மாடலிங் நடிகன் என்று உங்களைச் சொல்லிக்கொண்டீர்கள், நினைவிருக்கிறதா சச்சின். இப்போதும் அதற்கான கோப்புகள் இந்திய வருமானவரித்துறையிடம் இருக்கின்றன.
2001- 2002, 2003, 2004 உங்கள் வருமானவரித்துறை கோப்புகளைப் புரட்டிப் பாருங்கள்!
இ எஸ் பி என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி, வெளிநாடுகளில் பணம் எடுக்கும் விசா கார்ட் (ESPN STAR SPORTS, PEPSICO, VISA FOREIGN CURRENCY) கம்பேனிகளின் விளம்பரங்களில் வந்ததற்காக (நடித்ததற்காக என்று சொல்வதே தவறு..) உங்களுக்கு கிடைத்த வருமானம் 5,92,31, 211/ அந்த வருமானத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய வரி 2,08,59,707/ ஆனால் நீங்கள் உங்கள் வருமானத்திற்கான வரியைக் கட்ட மறுத்தீர்கள், அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாதம் செய்தீர்கள். அந்தச் சூழலில் தான் உங்கள் திருவாய் மலர்ந்து, என் தொழில் மாடலிங் நடிப்பு என்று சொன்னீர்கள்.
அதாவது இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியில்  சலுகை பெற இல்லாத ஒன்றை இருப்பதாக வாதம் செய்தீர்கள்! உங்கள் கூற்றுப்படி உங்கள் தொழில் - நடிப்பு, நீங்கள் நடிகர். அதிலிருந்து வரும் வருமானத்தை தான் முதன்மையான வருமானமான காட்டினீர்கள்! கிரிக்கெட் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை "பிற வருமானங்கள்" (INCOME FROM OTHER SOURCES)என்றல்லவா சொன்னீர்கள்! he is a popular model acts in various products of various companies என்று உங்கள் வருமான வரி ஆலோசகர்கள் வாதிட்டார்களே!
நீங்கள் கிரிக்கெட் வீரர் இல்லை என்றால் வேறு யார் தான் கிரிக்கெட் வீரர்? நீங்கள் கிரிக்கெட் வீரர் என்பதால் உங்களைத் தங்கள் விளம்பரங்களில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றார்களே தவிர நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாடலிங் கலைஞர் என்பதால் அல்ல என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லவா உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது? ஏன் சச்சின்? கிரிக்கெட் உங்கள் அடையாளம், உங்கள் உயிர்மூச்சு என்றால் அதை எப்படி உங்கள் வரிச்சலுகைக்காக இரண்டாம் நிலைக்குத் தள்ளினீர்கள்?
அதன் பிறகும் நீங்கள் தொடர்ந்து வரிச்சலுகைப் பெற என்னவெல்லாம் செய்தீர்கள் சச்சின்?
ரூ. 57,969/ உங்கள் பணியாட்களின் நலநிதி
ரூ 50,000/ தொலைபேசி செலவு
ரூ 142,824/ உங்கள் கார்ச்செலவு...
இதற்கெல்லாம் கூட வரிவிலக்கு கேட்டீர்கள்.. இறுதியில் இதெல்லாம் உங்கள் குடும்பச்செலவு என்று இந்திய வருமான வரித்துறை கொஞ்சம் கறாராக சொல்லிவிட்டது.
சரி இதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்குப் பரிசாகக் கிடைத்த ஃபிராரி காருக்கு வரி கட்ட மறுத்தீர்களே எவ்வளவு கோபத்துடன் ஊடகங்களைச் சாடினீர்கள்? இறுதியில் உங்களுக்கு அந்தக் காரைப் பரிசாகக் கொடுத்த ஃபியட் அல்லவா அந்த வரியைக் கட்டினார்!
பரிசுப் பொருட்களுக்கு வரி வாங்குவது சரியல்ல என்றே வைத்துக்கொண்டாலும் பரிசாக வாங்கிய அந்தக் காரை குஜராத்தில் ஒரு வியாபாரிக்கு விற்றுவிட்டீர்களே! அந்தக் காரை விற்று வந்த வருமானத்தை எந்தக் கேபிடல் கணக்கில் காட்டி எப்படி சமாளித்தீர்கள்?
நல்ல இந்தியக் குடிமகன் வருமான வரியை உடனே கட்ட வேண்டும். அரசை ஏமாற்றாமல் கட்ட வேண்டும், சரியாகக் கட்ட வேண்டும், என்றெல்லாம் இந்திய அரசு எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. அதே இந்திய அரசு தான் உங்களுக்கு
பாரத ரத்னா வழங்கி இருக்கிறது!
சஹாராவின் க்யு ஷாப் விளம்பரத்தில் நீங்களும் வந்தீர்கள்.. அதுவும் செபி அந்த நிறுவனத்தின் மீது சந்தேகப்பட்டு யாரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவித்தப் பின்னரும் உங்கள் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருந்தன! ஒரு பேச்சுக்காவது சஹாராவின் மீது உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருப்பீர்களா? அதுமட்டுமா சச்சின், ஹோம் டிரேட் விளம்பரத்தில் உங்களைப் பார்த்து வீடு வாங்க தங்கள் சேமிப்பைக் கட்டி வீடும் கிடைக்காமல் நடுவீதிக்கு வந்தவர்களைப் பற்றி என்றைக்காவது வருத்தப்பட்டிருப்பீர்களா சச்சின்?
நீங்கள் நன்றாக விளையாண்டீர்கள், அதற்கு மிக அதிகமாகவே உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டை வியாபாரத்தில் நீங்கள் கொடி கட்டிப் பறந்தது போல இனி எவராலும் பறக்க முடியாது! வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் வாசலில் கொட்டியது போல யாருக்கும் வாய்த்ததில்லை. நீங்கள் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடியதாக எல்லோரும் சொல்கிறார்கள், நீங்களும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி அப்படித்தான் சொல்லிக்கொண்டீர்கள்.. ஆனால் உங்கள் சட்டைக்காலரிலிருந்து கை, கால், சட்டைப்பை என்று உங்கள் உடலெங்கும் விளம்பரங்களைச் சுமந்து கொண்டுதானே விளையாடிக் கொண்டிருந்தீர்கள்!
இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்கிறீர்களா சச்சின்? அப்படித்தான் .. நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரராக, ஏன் கிரிக்கெட்டின் அடையாளமாக மட்டுமே இருக்கும் வரை இதெல்லாம் இந்த விளம்பர உலகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவின் பாரத ரத்னா சச்சினுக்கு?


Sunday, November 10, 2013

மவுனத்தின் பிளிறல்





உங்கள் இலைகளில்
ஓரமாக ஒதுக்கப்படும்
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கு வருத்தமில்லை.
ஆனால்...
உப்பாக இருக்கிறேன்.
இந்த  உண்மை
உங்களுக்கு உவப்பானதாக இல்லை.
எனக்கும் தான்!

*

உங்களுக்கு விருப்பமானதை மட்டுமே
நான் விரும்புவதில்லை
உங்கள் பூமியில்
ஒரே சூரியன்
என் பிரபஞ்சமெங்கும்
ஒரு கோடி சூரியன்கள்
என் சிறகுகளை   
உங்கள் சூரியனால்
எரித்துவிட முடியாது.
ஏனே னில்
உங்கள் சூரியக்கதிர்களுக்கு
கங்குகளை ஏற்றி
சூடேற்றியது எம் சிறகுகள்.

*

என்னோடு நீங்கள் நடத்தும்
தீண்டாமை யுத்தத்தில்
பெரியாரின் கைத்தடி
எனக்கு மூன்றாவது காலல்ல.
மூன்றாவது கண்.

*

வெறுப்பின் உச்சத்தில்
உங்கள் தலைகள்
விலக்க முடியாத
அச்சத்தில்
என் இதயம்.

*

கடகரேகைக்குள்
மகரரேகை சங்கமிப்பதில்லை.
பூமத்திய ரேகையின்
விதிக்குள் புதைந்துவிட்டது
இந்தப் பஃறுளி
மவுனத்தின் பிளிறலோடு.




 




Saturday, November 9, 2013

அதிரடி.... வணக்கம் மும்பை






பத்திரிகை, புத்தகம் .. வெளியீடுகள் எப்போதும்
மும்பையில் நடந்துக்கொண்டிருக்கின்றன.

பத்திரிகை - நாளிதழோ வார மாத இதழ்களோ வெளியிடும் போது
யாரை வைத்து வெளியிடுவது என்பது எப்போதுமே வெளியிடுபவருக்குப்
பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
முன்னாள் தலைவருக்கா? இன்னாள் தலைவருக்கா?
யார் முதல் பிரதியை வாங்குவது?
யாரை விமர்சனம் செய்ய சொல்லலாம்?
அல்லது யார் விமர்சனம் செய்தால் பிரச்சனைகள் இருக்காது?
யார் யாரெல்லாம் வாழ்த்துரையில் இருக்கிறார்கள்?
வாழ்த்துரையில் இல்லாத பெயர்களை முன்னிலையில் போட்டுவிடலாம்.
முன்னிலையிலும் விடுபட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் போட்டுவிடலாம்

இதில் முன்னிலை பட்டியலுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலுக்கும்
என்ன வேறுபாடு? என்று யாரும் யோசித்து யோசித்து மண்டை காய வேண்டாம். !

இப்படியாக சகலவிதமான முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்படும் அழைப் பிதழில் தங்கள் பெயர் எத்தனாவது வரிசையில் யார் யாருக்குப் பின்
அச்சிடப்பட்டிருக்கிறது என்று பார்த்து வருத்தப்பட்டு தங்களின் ரேட்டிங்
இறங்கிவிட்டதாக நினைத்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள் மும்பைவாசிகள் சிலர் ..

பத்திரிகை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை என்ற
பெயரில் "உன்னால் பத்திரிகை நடத்த முடியாது" என்று வாழ்த்திவிட்டுப்
போகிறவர்களும் உண்டு. அவ்வளவு நல்ல மனசு அவர்களுக்கு.
தங்கள் தோல்வி அனுபவங்களால் அடுத்தவருக்கு எச்சரிக்கை செய்கிறார்களாம்!


இப்படியான பல காட்சிகள் அடிக்கடி அரங்கேறும் மும்பையில்
சரிதான் போங்கப்பா... நான் இந்த வெளியீட்டு விழா விளையாட்டுக்கெல்லாம்
வரவில்லை. என் "வணக்கம் மும்பை" இதழை தமிழர்கள் அதிகம் வாழும்
தாராவி சாலையில் வெளியிடப்போகிறேன் என்று சொல்லி அப்படியே
நவம்பர் 2 ல் மாலை 5 மணி வாக்கில் தாராவி 90 அடிச்சாலையிலும்
குறுக்குச்சாலையிலும் தன் பத்திரிகையை வெளியிட்டிருக்கிறார்
மும்பை பாமரன். எந்த முன்னறிவிப்பும் இன்றி சாலையில் போன ஒருவரை
அழைத்து " நீங்கள் தான் அய்யா இந்தப் பத்திரிகையை வெளியிடுகின்றீர்கள்!"
என்று சொன்னால் அந்த நபருக்கு எப்படி இருந்திருக்கும்?

பத்திரிகை வெளியீட்டில் அதிரடியாக இப்படி செய்திருக்கும்
வணக்கம் மும்பையின் ஆசிரியரிடம் பத்திரிகையின் நோக்கம் குறித்துக் கேட்டால்
"வணக்கம் மும்பை வாசிக்கிற வாசகன் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கனும்ங்க, லோ லோனு மும்பை டிரெயினில் ஏறி போயி வேலைப் பார்த்திட்டு அலுத்து வற்ற நம்ப ஆள்களுக்கு என். எஸ். கே பாணியில்
ஏதாவது சொல்லிட்டு இருப்போங்க.. சரிதானே !நான் சொல்றது?" என்று
சொல்லிவிட்டு வேகமாக வீரார் டிரெயின் பிடிக்க ஓடுகின்றார்.

Tuesday, November 5, 2013

மன்மோகன்சிங்கை நம்புங்கள்!







மன்மோகன் சிங் நல்ல மனிதர்.
அமைதியானவர்.
ஆடம்பரம் இல்லாதவர்.

அவருக்கு இலங்கையில் முந்திரித் தோப்புகள் நிச்சயமாக இல்லை.

அவர் ரஜபக்சேவின் விருந்தில் கலந்து கொண்டு
தங்க ஒட்டியாணமோ அல்லது வைர நெக்லஸொ பரிசாக..
இல்லை... தங்க டர்பனோ கட்டிக்கொண்டு வரப்போவதில்லை.

எதையும் வாய்திறந்து பேசவெல்லாம் மாட்டார். அவரை நம்புங்கள்.
நம் இளவரசர் ராகுல்காந்தியாவது தீவிரவாதம், படுகொலை ,என் பாட்டி
அப்பா என்று ஏதாவது உளறிக்கொட்ட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் நம் மன்மோகன்சிங் அப்படி எல்லாம் எதுவும் உளறக்கூட
மாட்டார்.

சரி எதிலாவது கை எழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் என்ன
செய்வது? ஒட்டு மொத்த இந்தியாவின் தலைவர் ஆயிற்றே என்று
பயப்படுகின்றீர்களா..?

என்ன இவ்வளவு விவரம் கூட இல்லாமல் இருக்கின்றீர்கள்?
ஒப்பந்தங்களில் கை எழுத்து போடுவதே அதை மீறுவதற்குத் தான்!
அதிலும் இதில் உலக அரங்கில் முன்னணியில் நிற்கும் இந்திய-இலங்கை
ஒப்பந்தங்கள் பற்றி அறிந்தப் பின்னருமா கவலைப்படுகின்றீர்கள்?



பிறகென்ன...?

மன்மோகன்சிங் இலங்கை சென்றால் விபரீத விளைவுகளைச் சந்திக்க
வேண்டி வரும் என்று திமுக தலைவர் கலைஞர் வேறு பயமுறுத்துகிறார்.
கலைஞர் டிவியில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் தாக்கம் இது
என்பது தெரியாமல் பாவம், மன்மோகன்சிங்  ரொம்பவும் பயந்துவிடப்
போகிறார். டில்லியின் வெள்ளை வேட்டியும் கலைஞரும் சேர்ந்து
இப்படி மன்மோகன்சிங்கை வைத்து காமெடி கலாட்டா செய்வதை
நிறுத்த வேண்டும் என்று நரேந்திரமோதியே கூட நாளை கண்டன
அறிக்கை வெளியிடலாம். பிறகென்ன... மன்மோகன்சிங் என்ன காங்கிரசு
மந்திரியா..?. இந்தப் பாரதநாட்டுக்கே பிரதம மந்திரியாயிற்றே!!



காங்கிரஸூ கோபண்ணா அவர்களின் தீவிர ரசிகர்கள்/ ரசிகைகளின்
கவனத்திற்கு:

அடுத்த முறை உங்கள் கோபண்ணா  அவர்கள்  டிவியில் நேர்ப்படவோ
நேர்ப்படாமலோ பேசும் போது மன்மோகன்சிங் போவதைக் குறித்து
யாரும் அதிகம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கட்டாயம் சொல்லும்படி
செய்தி அனுப்பி விடுங்கள்.




Saturday, November 2, 2013

பெண்களும் கொண்டாட்டங்களும்







அம்மா அருள் வந்தவள் போல ஆடிக்கொண்டு இருக்கிறாள்.
அவள் கைகள் இரண்டு என்றாலும் பன்னிரெண்டு கரங்களுடன்
அவள் வலம் வருவது போலிருக்கிறது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் துடைத்து வைக்கிறாள்.
பலகாரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்கிறாள்.
அதன் பின் நள்ளிரவு வரை உட்கார்ந்து இனிப்பும் காரமும்
என்று ஒவ்வொரு சுவையிலும் செய்துஅடுக்கி வைக்கிறாள்.

அதிகாலையில் எழுந்தே வாசலில் ரங்கோலி போட்டு விளக்கு
ஏற்றி வைத்துவிட்டு குளித்து பூஜை செய்து சாப்பாடு மேசையில்
அனைவருக்குமான பலகாரங்களை அலங்காரமாக அடுக்கி வைத்து
காத்திருக்கிறாள்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்,  ரம்சான், கோவில் கொடை, திருவிழா,
இப்படி எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் அம்மாக்கள் இப்படி
அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அடிக்கடி என் அம்மா அலுத்துக் கொள்கிறாள்
அவள் அம்மா செய்ததில் பாதி அளவு கூட அவள் செய்யவில்லையாம்!
அவள் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை என்பது எனக்குத் தெரியும்.
.
பால்கனியிலிருந்து பார்க்கிறேன்.

எங்கள் மும்பை நள்ளிரவிலும் மின்வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. கடைவீதிகள் எங்கும் கூட்டம், கூட்டம்
பெண்களின் கூட்டம். அவரவர் தகுதிக்கு ஏற்ப விரிந்து கடைப்பரப்பி இருக்கிறது சந்தை. அடுக்குமாடிகளின் குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட்
கடைகள் முதல் ரோட்டோரத்தில் கோலமாவு விற்கும் மவுசி வரை...
கூட்டம் கூட்டம் எங்கும் பெண்களின் கூட்டம்.
வீடுகள் தோறும் என் அம்மாக்களின் அவதாரங்கள் !


என் அம்மா சக்தியை வழிபடுபவள்.
என்னிடம் சக்தியின் மகிமைகள் குறித்து எத்தனையோ கதைகளையும்
தன் அனுபவங்களையும் சொல்லி இருக்கிறாள்.

அவள் கடைசிவரை சொல்லாத ஒரு கதை....

அம்மா ,
இந்தக் கொண்டாட்டங்கள்
சக்திக்கு
 மயிலிறகா? முள்கிரீடமா?

Saturday, October 26, 2013

தங்கர்பச்சன் பதட்டமும் என் கேள்விகளும்








தமிழ் வழிக்  கல்வி குறித்து தங்கர்பச்சன் பதட்டமடைந்திருக்கும்
செய்தி மகிழ்ச்சிக்குரியது.
பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் அவர்  இவ்வாறு சொல்லி இருக்கிறார். 

"வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்."


உங்கள் பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் மிகவும் மதிக்கின்றேன். அதே நேரத்தில் உங்களைப்  போல திரைப்படங்கள் எல்லாம் எடுத்து எவ்வித பிரபலமும் அடையாத என் போன்ற
சாதாரண தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சில கேள்விகளையும் இந்தப் பதட்டத்துடன் சேர்த்து
நீங்கள் பார்த்தாக வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்த வேண்டுகோளை வைப்பதற்கு எனக்கு மற்றவர்களை விட மிக அதிகமான தகுதி  இருக்கிறது என்பதை நீங்கள் முதலில்   தெரிந்து கொள்ள வேண்டும்..

தமிழ் தமிழ் என்று நீங்கள் பேசும் அ தே தமிழை சற்று உரக்கப் பேசிய ஒரு தலைமுறையின்
வாரிசுகள் இந்தக் கேள்வியை முன்வைப்பதில் இருக்கும் நியாயத்தை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.

நியாயங்கள்:

1)  தலைவர்கள் பேசிய தமிழால் தொண்டர்களின் பிள்ளைகள் எல்லாம் தமிழ் படித்தார்கள். தமிழில் படித்தார்கள். தமிழர்களாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் யாரும் தமிழ்ப் படிக்கவில்லையே! ஏன்?
அவர்கள் நாடாளுமன்றம் போகவும் மத்தியில் அமைச்சராகவும் இந்தி பேசக் கற்றுக் கொண்டது கூட
ஒரு காரணமாகச் சொல்லப்பட்ட தே! அப்போதெல்லாம் நீங்கள் பதட்டப்படவில்லை.
தொண்டர்களின் பிள்ளைகள் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டுமா என்ன?
போதும் தங்கர்பச்சன், கொஞ்சம் மாற்றிக் கொள்வோம். தலைவர்களின் பிள்ளைகளை
தமிழால் அரசாள வந்தவர்களை கொஞ்சம் தமிழ் படிக்கச் சொல்லுங்கள், தமிழில்  படிக்கச் சொல்லுங்கள்.

2) அது என்ன அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் மட்டும் தான் தமிழர்களா? புற்றீசல் போல ஆங்கில வழிக்கல்வி
நிலையங்கள் திறக்கப்பட்டதும் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிப் போட்ட
போதும் பதட்டப்படாத நீங்கள் இப்போது எதற்கு பதட்டப்படுகின்றீர்கள்?

 3) அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும்
அடித்தட்டு நிலையில்  இருக்கும் மக்கள். அவர்கள் குழந்தைகள் ஆங்கிலம் படித்துவிட்டுப் போகட்டுமே!
தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் என்று ஊடகங்கள் வெளிச்சப்படுத்தும் அனைவரும்
தங்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழிக் கல்வியில் அனுப்பி தங்கள் தரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக பாவனை / அல்லது தக்க வைத்துக் கொண்டிருக்கிக்கும் நினைப்பு.  இ ந்த வெளிச்சத்தைப் பார்க்கும்
எங்கள் குப்பனும் சுப்பனும் தன் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்க ஆசைப்படுவது தவறா
தங்கர்பச்சன்,?  சொல்லுங்கள்!

4) மேற்கண்ட குற்றச்சாட்டுகள் இன்றி இன்னார், இந்த தலைவர் இருக்கின்றார், இந்த அறிவுஜீவி
இருக்கின்றார் என்று நீங்கள் ஒருவரை அடையாளப்படுத்தினால்,
 தங்கர்பச்சன் அவர்களே, வாருங்கள் போராடுவோம், மும்பையிலிருந்து சில இலட்சம்
இளைஞர்களை அழைத்துவர நான் தயாராக இருக்கின்றேன்.


நம் தமிழ்நாட்டில் யார் தமிழ்ப் படிக்க வருகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள்,
வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், 
அப்புறம் பெண்கள்/ அதிலும், 
பெண்கள் அதிகமாக படிக்க வருவது கூட ' சரி திருமணம் வரை ஏதாவது படிச்சிட்டு இருக்கட்டும் என்ற நினைப்பும் திருமண அழைப்பிதழில் டிகிரி போட வேண்டிய அந்தஸ்த்து கருதியும் தான் படிக்கிறார்கள்.
இவ்வாறு படிக்க வந்தவர்கள் தமிழைக் காப்பாற்றிவிடுவார்கள் என்று எப்படி நம்புவது?

இன்னொரு செய்தி தெரியுமா தங்கர்பச்சன்? தமிழில் முனைவர் பட்டம் பெற்ற 95% பேருக்கு
33 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறுகிறதாம்!
வெறும் பதட்டங்கள் , போராட்டங்கள், ஆவேச உரைகள் எங்களுக்கு அலுத்துவிட்டது.
இந்தக் கல்வி முறையில் மாற்றம் தேவை. 

இந்த நாட்டில் ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருப்பது ஏன்?
மிகக் கேவலமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படும் தமிழ்ப் படித்தவன் எவனாவது தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப் பட்டிருக்கின்றோமா? அவன் படாத என்ன அவமானத்தை இந்த ஐடி அதிகச் சம்பளக்காரன் அனுபவித்துவிட்டான். ????
பனிரெண்டாம் வகுப்பு வரை மனப்பாடம் செய்து மார்க் வாங்கும் மாண்வன் தான் சுயமாகச் சிந்திக்க ஆரம்பிக்கும் வயதில் தன் பண்பாடு சார்ந்த மொழியைக் கற்பதில்லையே! பணம் சம்பாதிக்கும்
படிப்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை மட்டுமே படித்து வெளியில் வருபவன்
வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளவில்லை, அப்படி ஒரு கல்வியைக் கொடுக்கும் கல்வி முறை நம்மிடம் இல்லை.

இது ஒரு பக்கம் என்றால் தமிழ்ப் படிக்கிறவனின் நிலையும் தகுதியும் வெளியில் சொன்னால் வெட்ககேடு! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று
இவர்களால் எதாவது செய்ய முடியுமா?  தமிழில் படிக்கிறவன் என்றால் மொழிகள் பல தெரிந்தவன் என்ற நிலை வராத வரை தமிழில் படிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படும் நிலைத்தான் தொடரும்.

தமிழ்ப்படிக்கிறவனுக்கெல்லாம் இந்தியோ, ஆங்கிலமோ, பிரஞ்சோ , சரி அதை எல்லாம் விடுங்கள்
குறைந்த அளவு மலையாளம், கன்னடம் , தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும், இரண்டாவது மொழியாக
இரண்டு மொழிகள் இருக்க வேண்டும் என்று மாற்றிப் பாருங்கள். தமிழ் வளரும். தமிழன் வாழ்வு
உயரும்.

சிலர் மரங்களை வெட்ட மாட்டார்களாம். வெட்டினால் வெளிப்படையாக தெரிந்துவிடும் அல்லவா?
அதனால் மரத்தில் அடியில் நஞ்சு கலந்து மண்ணொடு மண்ணாக வைத்துவிடுவார்களாம்!
அப்படித்தான் தமிழ் என்ற மரத்தின் அடியில் நஞ்சு கலந்திருக்கிறது.
அவர்கள் மண்ணைத் தோண்டிய போதெல்லாம் ஏ ன் தோண்டுகின்றாய்? என்ற கேள்வியை நாம்
கேட்கவில்லை?  உரம் வைப்பவனையும் நஞ்சு வைப்பவனையும் பிரித்தறியும் நுண்ணரசியல்
நம்மிடம் இல்லை. மரத்தின் இலைகள் வாடி விட்டன. அங்கு கூடு கட்டி இருந்த பறவைகளைக் காணவில்லை. இதோ  இந்த மரத்தில் கூடு கட்டி இங்கிருந்து தான் நான் பறக்க ஆரம்பித்தேன்,
எங்கே போய்விட்டன எம் பறவைகள்? என்று பதட்டப்படுகின்றீர்கள்.
பறவைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் தங்கர்பச்சன்?

Tuesday, October 22, 2013

தேவனே...!



நான் நாடகம் எழுதினேன்
ரசித்தவர்கள் என்னை நடிக்க வைத்தார்கள்
நடிப்பு ஒரு அற்புதமான கலை
ஒப்புக்கொண்டேன்.

வசனங்கள் மனப்பாடம் ஆனது.
ஒத்திகைகள் தேவையில்லை 
மேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக 
ஒளிவட்டங்களாக 
 தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்தன.
திரைவிலகிய நேரம்
ஒப்பனைகள் 
கர்த்தாக்களைக் கொலை செய்தன.

நிஜங்கள் நிழல்களின் ராஜ்யத்தில்
அடிமைகளாக இருந்ததை
உணர்ந்த தருணம் அது.
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா?

சிலுவையைச் சுமந்தபடி
ரத்தக்கறையுடன்
தொடரும் பயணத்தில்
பாவமன்னிப்புகள்
மறுக்கப்பட்டன.
சுயம் காயடிக்கப்பட்டது.
இந்தக் கல்லறையிலிருந்து
மீண்டும் விழித்தெழ
அந்த தேவனின் ராஜ்யம்
"பரிசுத்தப்படுவதாக"
ஆமென்.






Sunday, October 13, 2013

கனவுகள் விழித்திருக்கின்றன







சகலமும் நொறுங்கிய புள்ளியில்
உன் அவதாரம்
என்னில் ஜனித்தது.

வெறுமையிலிருந்து
நீ வெளியில் வந்தாய்
என்னையும் சேர்த்து
இழுத்துக்கொண்டு.


நான் யாரென்று
அறியாத பயணத்தில்
நீ
வெறும் கற்பனையோ
என் கனவுகளில்
பச்சைப்பாவாடையில்
பக்கத்தில் ஓடிவந்த
அவளோ?
அவள் பிம்பமோ?
யாரென்று
நான் சொல்ல?

விழிகள் திறந்துவிட்டால்
விளையாடும் மேகங்கள்
களைந்துப் போய்விடுமோ?
அச்சத்தில்
கண்மூடிக்கிடக்கின்றன
விடிவெள்ளிகள்.

விழித்திருப்பதாக
இதுவரை ஆடிய
ஆட்டம்
தோற்றுப்போனது.

இரவு விழிகள்
களவாடியக் கனவுகள்
இன்னும் தூங்கவில்லை
விழித்திருக்கின்றன
எனக்காக.

Wednesday, October 9, 2013

கண்ணனின் குழலோசையில் மயங்காத எருமைகள்



எருமைமாடுகள் எல்லாம் சோகம் ததும்பும் தங்கள் கதையை
கவிதையாக எழுதிக்கொண்டிருந்தன. நித்தமும் சகதியில்
புரண்டுக் கொண்டிருப்பதையே குளியலாகக் கொண்டிருக்கும்
வாழ்க்கையின் அவலத்தை எருமைகளை விட எவரால் எழுதிவிட முடியும்?

எருமைகளின் எழுத்துகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சகதியின் ஈரம் யானைகள் குளித்துவிட்டு வந்ததில் விழுந்த
நீரின் ஈரமல்ல. பன்னிகள் கூட்டமாக காடுகளில் உலவிவிட்டு
வந்து செருமிய எச்சிலில் பட்டுத் தெறித்த ஈரமும் அல்ல.
அந்த ஈரம் எருமைகளுக்கு மட்டுமே உரியது. சகதியில்
இறங்கி முழங்கால் அளவுக்கு சீலையை தூக்கிக் கட்டிக்கொண்டு
நாற்று நடும் பெண்ணுக்கு எருமையின் ஈரம் தெரியும்.
அவள் எருமையை வெறுப்பதில்லை. எருமையின் கவிதைகளை
அவள் வாசித்ததைவிட எருமைகளுடன் பேசிப் பேசி எருமைகளைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்களை அவள் தன்
வலி தீர பாடிக்கொண்டுதான் இருக்கிறாள்.
ஆனால் என்ன செய்வது?
மீண்டும் பசுக்களுக்கே வெற்றி உறுதியானது.
பசுவின் பால் வெள்ளையாக இருப்பதை உலகமே வியந்து பாரட்டியதுடன் இது பசுவாக்கும், பார்க்க அழகாக இருக்கிறது,
பால் கொடுக்கிறது என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்து ஒரு
டாகுமெண்ட்ரி ஃபிலிம் எடுக்கும் அளவுக்குப் புகழ் சேர்த்துவிட்டார்கள்..






நரேந்திர மோதிக்கு ஒரு ஏஜன்சி இருக்கிறது. அந்த ஏஜன்சி மோதியின் புகழ்ப் பாடுவதில் பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகிறது.



இதைக் கேள்விப்பட்ட எருமை
என்ன விலை கொடுத்தேனும் அந்த ஏஜன்சியின் கஸ்டமராக
வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது.

எவ்வளவோ எருமையிடம் சொல்லிப்பார்த்தேன். எருமை
கேட்கத் தயாராயில்லை.
எருமைக்கு எப்படியும் புகழ்ப்பெற்ற பத்திரிகைகளில்
கவர் ஸ்டோரியாக வர வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.


எருமையிடம் கேட்டுப் பார்த்தேன் உன் ஒரே காதல் கணவன் எமராஜனை நீ வெறுத்து ஒதுக்க வேண்டும்.
அவன் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்கிறான் என்று
நீ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று
முதல் அட்வைஸ் சொன்னேன்.

அய்யய்யோ.. எங்க எமராசாவை அப்படி எல்லாம் குறை சொல்ல முடியாதே! ரொம்ப நல்லவராச்சே, முடியாது என்று
மறுத்துவிட்டது..

'ஃபேர் அன்ட் லவ்லி போட்டு உன் கலரை மாத்தி ஆகனும்.
இது என்ன கறுப்பு! அவலட்சணம்.. உன் கலர் தான் உனக்கு எதிரா இருக்கும் பிரச்சனையே! மைக்கல் ஜாக்சன் மாதிரி
உன் தோல் நிறத்தை மாற்றி ஆபரேஷன் செய்து பசுக்களின்
தோலை உன் மீது ஒட்டிவிடலாமா? கேட்டேன்.

'அய்யய்யோ வேண்டாமே... அப்புறம் எங்க பெருமை எல்லாம்
பசுவின் பெருமையாகிவிடும்... முதலுக்கே மோசம் வந்திடும்..
வேறு வழி சொல்லுங்கள்" என்றது எருமை.

இருந்தாலும் இந்த எருமைக்கு தன் கறுப்புக்கலரின் மீது இவ்வளவு அசட்டுத்தனமான பெருமை இருக்க வேண்டாம்
என்று மனசில் நினைத்துக் கொண்டேன்!

எருமை கொஞ்சம் புத்திசாலியாக இருப்பதாகவே பட்டது.
சரி, கவனமாக பேச வேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டேன்.

சரி, எருமையைப் பற்றி ஒரு டாகுமெண்ரி எடுத்து
டிஸ்கவரி சேனலிலோ அல்லது அனிமல்ப்ளாநெட்
சேனலிலோ போட்டு ஒளிபரப்பி விட்டால் நம் எருமையின்
பெருமை உலகம் எங்கும் பரவி விடும். அதன் பின்
இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா ஐரோப்பா
கண்டத்திலும் எருமை தான் கவர் ஸ்டோரியாகும் என்று
கற்பனை செய்துக் கொண்டு எருமையைப் பற்றி
டாகுமெண்ரிக்கு தயார் ஆனோம்.

எருமை குட்டையில் குளித்துவிட்டு எழுந்துவரும்,
அதை அப்படியே க்ளோஸப்பில் காட்ட வேண்டும்.
இதுதான் என் குளியல் என்று சொல்லிவிட்டு
எருமை ஓவென்று அழ வேண்டும், அந்தக் காட்சியைக்
காட்டும் போது அப்படியே பசு எப்படி ஓடும் நதியிலோ
குளத்திலோ குளிக்கிறது என்பதையும் மற்ற பிராணிகள்
ஓடும் நதியில் குளிப்பதையும் காட்ட வேண்டும் என்று
நினைத்தேன். எருமை குட்டையில் குளித்துவிட்டு
முகம் நிறைய சந்தோஷத்துடன் அசைந்து தேர் போல
எழுந்து வந்தது.
எவ்வளவோ சொல்லியும் குட்டையில் குளித்துவிட்டு
அழ வரவில்லை எருமைக்கு.
எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது, திஸ் இஸ் வாட்
ஐயம் என்று திமிராக வேறு எருமை சொல்லி
என்னை வெறுப்பேற்றியது.

அந்த ஐடியாவையும் கை கழுவி விட்டேன்.

எருமையிடம் நீ எமனை டைவர்ஸ் செய்துவிட்டு சிவனை
லவ் பண்ணினால் பரபரப்பான செய்தி ஆகிவிடும் என்று
சொன்னேன். கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தது எருமை.
பிறகு தலையை ஆட்டிக்கொண்டு
ம்கூம் முடியாது; என்றது.

என் எமனிடம் இல்லாத என்னது சிவனிடம் இருக்கு,
அவனை லவ் பண்ண?
ஊருக்கு ஒரு வப்பாட்டி வச்சிக்கிர ஆளு அவன்,
எனக்கு அவனை லவ் பண்ற மாதிரி கற்பனை செய்யக் கூட
முடியல என்று கையை விரித்துவிட்டது.

எருமை எழுதி இருக்கும் புத்தகங்களை எல்லாம் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன், வயலில் சகதியில் இறங்கி நாற்று நடும் பெண்,
அவள் தாலாட்டு, வயக்காட்டில் அவள் பெத்தெடுக்கும் பிள்ளை,
குளக்கரை ஓரம் காரில் வந்து இறங்கி கறுப்புக் கண்ணாடியைக் கழட்டாமல் புகைப்படம் எடுக்கும் பெண்மணி , எதைப் பற்றியும்
கவலைப்படாமல் இருக்கும் ஞானயோக சித்தியை அடைவது எப்படி என்று இப்படியாக என்னவெல்லாமோ எழுதி வைத்திருந்தது அந்த எருமை. அந்த எருமையின் எழுத்தில்
எங்குமே ஒரு மருந்துக்கு கூட இல்லை...

கண்ணனின் குழலோசையும் அந்த இசையில் மயங்கிய ஆயர்குல ஆடு மாடுகளும் நிர்வாணமாக நின்ற கோபியர் கதைகளும்.
ஆமாம் ... கண்ணனின் குழலோசையில் மயங்கியதாக
எருமைகள் காட்டப்படவே இல்லையே ...
ஏன்?
அப்போது ஆயர்பாடிகளில் எருமைகள் இல்லையா?
எருமைகள் எங்கிருந்தன அப்போது?

எனக்கு அழுகை வந்தது.
எங்கிருந்தன என் எருமைகள் அப்போது?
காற்றில் கலந்து வந்த கண்ணனின் குழலோசையை
என் எருமைகளுக்கு எட்டாமல் ஆக்கியது யார்?
கண்ணனா...? கண்ணணின் ஆயர்பாடிக் கூட்டமா?
கண்ணனின் கீதையைக் கொண்டாடும்
நீங்களா?
யார்?


எருமைகளைப் பற்றிய என் தேடல் இருக்கட்டும்.
நேற்று எனக்கு அறிவுரை என்ற பெயரில்
எனக்கு ரொம்ப வேண்டியவர் ஒருவர் எழுதியிருந்த
டிப்ஸ்கள் சில... (எருமைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்காதீர்கள். எருமையைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது இதுவும் வந்தது என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை
என்று சத்தியமாக சொல்கிறேன்)


பேரும் புகழும் அடைய ....

இலக்கிய உலகத்தில் பிதாமகன்களின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும், நெருக்கமாக இருக்க வேண்டும்
அதிலும் குறிப்பாக சில பதிப்பகங்களுக்கும் பத்திரிகைகாரர்களுக்கும்!
(இதெல்லாம் நமக்குத் தெரிந்தச் செய்திதான்.
வலைத்தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் பலர் வெவ்வேறு
பெயர்களுடன் தாங்கள் எழுதியிருப்பதற்கு தாங்களே
மறுவினை/எதிர்வினை எழுதிக் கொண்டே இருக்கின்ற
இன்னொரு டெக்னிக்கும் பலர் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இப்படி எழுதிக்கொண்டிருப்பவர்களில் பலர்
இந்தமாதிரி எழுதப்படுவதை கண்டுபிடிக்க முடியும் என்பதை
அறிந்துதான் எழுதுகின்றார்களா? தெரியவில்லை!)

உங்களுக்குத் தெரிந்ததாக நீங்கள் சொல்லும் பெரியமனிதர்கள்
எல்லோரும் வெஸ்ட் பேக்கேஜ். அவர்களை வைத்து உங்களுக்கு எதுவும் நடக்காது. ..

உங்கள் கணவர் வேறு அநியாத்திற்கு நல்லவரா இருப்பதாக
சொல்லிக்கொள்கிறீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை மாதவி.
அப்படி எல்லாம் இருக்கிறமாதிரி ஒரு எழுத்தாளர் சொல்லப்பிடாது! ஆண்கள் என்றைக்காவது பெண் விடுதலையை ஆதரித்ததாக உண்டா? உங்கள் பெரியார் என்ன சொல்லி இருக்கிறார்? நினவிருக்கிறதல்லவா? எனவே உங்கள் கணவர் ரொம்ப கொடுமைக்காரர், நீங்கள் எழுதுவதை அவர் ஆதரிக்கவில்லை, அப்புறம் நீங்க பாத்ரூமில் உட்கார்ந்து
லேப்டாப்பில் எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்ல வேண்டும்,
நீங்க லேட்டஸ்ட்டா எழுதியிருக்கும் ஒரு கதையை வாசித்தேன்.
ஒரு பெண் தொழிலாளி பற்றிய கதை. அதில் வீட்டிலும் வேலைப்பார்க்கும் இடத்திலும் அவள் பட்ட கஷ்டங்களை
எழுதி இருக்கின்றீர்கள். அதில் நீங்கள் தலைமுடியை பிடித்து
இழுத்து இடுப்பில் உதைத்தான் என்ற வரிகளில் தலைமுடி
என்பதற்குப் பதில் 'முலை' என்றும் இடுப்பு என்பதற்குப் பதில்
"யோனி" என்றும் மாற்றிவிட்டேன், இப்போது வாசித்துப் பாருங்கள் கதை சூப்பராக இருக்கிறது..

(தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். கதையை சூப்பர் கதையாக்கும் உத்திகள் இப்படி எல்லாம் இருக்கிறது என்று
எவரும் சொல்லவில்லையே என்று!)

ஒரு நேர்க்காணலுக்கும் ஏற்பாடு செய்கிறேன்.. அந்த நேர்க்காணலில் நீங்கள் தாராவியில் ரொம்பவும் கஷ்டப்பட்டதாகச் சொல்ல வேண்டும், அப்புறம் உங்கள் கணவர் எப்படி எல்லாம் உங்கள் எழுத்துக்கு எதிராக இருந்தார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் உங்கள் நண்பர்கள்
யாராவது உங்களுக்கு ரகசியமாக ஆறுதலாக இருந்ததாகச் சொல்லவேண்டும். உங்கள் நண்பருக்கும் அதனால் லாபம் தானே! அதன் பின் தாராவியில் கடற்கரையோரம் இருந்த அந்தக் குடிசையின் மாலா (குடிசைப்பகுதியின் மாடி) விலிருந்து நீங்கள்
பார்த்துக்கொண்டிருந்த வோப்பன் தியேட்டர் தான் நீங்கள் பார்க்க கிடைத்த உலகம் என்று சொல்ல வேண்டும்.
என்று அந்தக்கடிதம் நிறைய வழிமுறைகளை எழுதியிருந்தார்.
பல பிரபலங்களை உருவாக்கியவர் எழுதியக் கடிதம் அது.
அதனால் தான் அதைப் பற்றி எழுதியாக வேண்டிய
நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது!.

நண்பர்களே... அக்கடிதத்தில் எழுதி இருக்கும் எந்த வழிமுறைகளையும் என்னால் பின்பற்ற முடியாது!
ஏனேனில் அம்மாதிரியான பொய்முகங்களை அணிய வேண்டிய
அவசியம் எனக்கில்லை.
நான்குத் தலைமுறையாக இந்த மும்பை
மண்ணில் வாழ்ந்தக் குடும்பப் பின்னணியில் சமூக வெளியில்
தாராவியின் ஒவ்வொரு சந்தும் என்னைப் பற்றி சகலமும் அறியும். என்னைப் பற்றி யாரும் குறும்படம் எடுக்கவில்லையே என்றெல்லாம் எனக்கு வருத்தப்பட நேரமில்லை.

தலையில் இட்லி பாத்திரத்துடன் இரண்டு தூக்குச்சட்டியில் சட்னியும் சாம்பாரும் வைத்துக்கொண்டு விற்றுப்பிழைக்கும் என் அண்ணன் தம்பிகள் ஆயிரமாயிரம் பேர் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல இலட்சம் இட்லிகளை விற்கும் அவர்களைப் பற்றி யாராவது குறும்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

தாராவியின் ஒவ்வொரு முகமும் என்னில் புதைத்து வைத்திருக்கும் கதைகள் பலகோடி. என் மக்களுக்கு நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அதற்காக ஓடவே எனக்கு நேரமில்லை.

எப்படி புகழ் அடைவது?
இன்னாருக்கு இன்னார் எழுதிக் கொடுக்கிறார்.என்று தண்ணி அடித்து விட்டு உலறும் கிசுகிசுக்கள்
ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதும் கவர் ஸ்டோரி
அதற்குப் பின்னால் இருக்கும் சில காரணிகளும் காரணங்களும்..
நீங்கள் அறியாதது அல்ல.
தொடர்ந்து என்னிடம் புலம்பித் தீர்க்கும் உங்கள் கவலை
எனக்குப் புரிகிறது.


பாவம் நீங்கள் ..
உங்கள் ஆதங்கத்தை நான் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் உங்களுக்கு எப்படி புரியவைப்பது..?
வாழ்க்கை உங்களுக்கு ஒலிம்பிக் பந்தயம்.
வாழ்க்கை எனக்கும் என் எழுத்துகளுக்கும் என் மக்களுக்கும்
தங்கள் இருத்தலுக்காக எடுத்து வைக்கும் அடி.என்பதை.

(இதைக் கட்டுரைப் பிரிவில் சேர்க்கவா அல்லது
கதைப் பிரிவில் சேர்க்கவா என்று குழப்பமாக இருக்கிறது.
வாசிப்பவர் விருப்பத்திற்கு விட்டுவிட்டேன்)

Monday, September 23, 2013

திரைக்கதை திருட்டுகள்







நான் மதுரை காமராஜ் பல்கலை கழகத்தில் முதுகலை படித்துக்கொண்டிருக்கும் காலக்கட்டம். அப்போது அன்னக்கிளி
படம் வெளிவந்து வெற்றி பெற்றிருந்தது. இளையராஜாவின்
இசைக் கொடிகட்டிப் பறந்தது. பல்கலை கழகத்திற்கு பல்கலைநகர்
பகுதியில் வசிக்கும் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் வருவார். எல்லோரிடமும்
தான் எழுதியிருந்த கதையின் நகலைக் காட்டி அந்தக் கதையைத்தான்
அன்னக்கிளி திரைக்கதையாக எடுத்திருக்கிறார்கள் என்று சொல்லுவார்.
அப்படி அவர் சொல்லும் போது அவர் நா தடுமாறும். குரல் கம்மும்.
பார்க்க ரொம்பவும் பாவமாக இருக்கும். 'வாத்தியார் சொல் அம்பலம்
ஏறுமா?' என்பது அவர் விசயத்தில் ரொம்பவும் உண்மையாகவே இருந்தது
என்பதை இப்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.
அந்த வயதில் ஏதோ அவரைப் பார்த்து 'பாவம் இந்த வாத்தியார்' என்று
எங்களுக்குள் பேசிக்கொண்டு நகர்ந்தோமே தவிர அது குறித்து விவாதித்தாகவே அல்லது அவர் பிரச்சனையை எடுத்துச் சென்றதாகவோ
நினைவில் இல்லை. அப்போது நான் முதலாண்டு மாணவி வேறு.
அடிக்கடி வந்துக் கொண்டிருந்தவர் அதன் பின் நான் இரண்டாமாண்டு படிக்கும் போது வருவதே இல்லை. நாங்களும் அதை எல்லாம் மறந்துவிட்டு
நவீன இலக்கியத்தின் கனத்தைச் சுமந்து கொண்டு தலைக்கனத்துடன்
திரிந்து கொண்டிருந்தோம்.

அதைப் போலவே நாங்கள் ரொம்பவும் விரும்பி போற்றிக் கொண்டாடிய
இயக்குநர் கே. பாலசந்தரின் "ஆபூர்வ ராகங்கள்' குறித்த சர்ச்சையும் வந்தது.
பாலசந்தர் அப்படியெல்லாம் செய்திருக்கவே மாட்டார் என்று அந்த வயதில்
எண்ணினேன். அதன் பின் அக்கதை குறித்த உண்மைகளும் கோர்ட் தீர்ப்பும்
வெளிவந்தது என்றாலும் மும்பை வாழ்க்கை ஓட்டத்தில் அதைக் கண்டு கொள்ளவில்லை. இப்போது அந்த வழக்கு குறித்த செய்தியை கவிதாசரண்
எழுதியிருக்கும் "ஊற்றின் சீற்றம்" கட்டுரையில் வாசித்தேன்.

'கண்ணதாசன்' இதழில் எழுத்தாளர் என். ஆர். தாசன் அவர்கள் 1969ல் 'வெறும் மண் ' என்ற நாடகக்கதையை எழுதியிருந்தார். அக்கதையைத் திருடித்தான் பாலசந்தரின் அபூர்வராகங்கள் திரைக்கதையானது என்று 1975ல் தாசன் வழக்குத் தொடுத்தார். அந்த திருட்டுக்கு நஷ்ட ஈடாக அவர் கேட்ட தொகை
வெறும் ஒரு ரூபாய் மட்டும் தான். எனவே திருட்டை ஒத்துக்கொள்ள வைப்பது மட்டுமே தாசனின் நோக்கமே தவிர பாலசந்தரிடன் பணம் பறிப்பது அல்ல.

நீதிமன்றத்தில் பாலசந்தரின் வழக்குரைஞர் 'தாசனின் கதைத்தலைவன் தத்துவம் படிக்கிறவன். பாலசந்தரின் நாயகனோ ஒரு தீவிரவாதி. இதுவேபோதும் இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க' என்று
வாதிட, அதற்கு தாசன் " காரைத் திருடுகிறவன் முதலில் காரின்  கலரைத்தானே மாற்றுவான்? அதுதானே நடைமுறை?" என்று வாதிட்டார்.

1981ல் தாசனுக்கு சாதகமாகத் தீர்ப்பாயிற்று. ஒரு ரூபாய்க்குப் பதில் ஆயிரம் ரூபாய் வழங்கத் தீர்ப்பாயிற்று. பாலசந்தர் மேல் முறையீடு செய்தார். பின்னர் வழக்கைத் தொடர பிடிக்காமல் திரு கோமல்சுவாமிநாதன் மூலமாக சமரசத்திற்கு முயற்சி செய்து அதன் படியே நீதிமன்றத்துக்கு வெளியே
நஷ்ட ஈடு வழங்கி முடித்துக் கொண்டார். அதன் பின் நீதிமன்றத்தில்
வழக்கை நாங்களே சமரசமாக முடித்துக் கொண்டதால் தன் கட்சிக்காரர் சார்பாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று பாலசந்தர் வழக்குரைஞர் கேட்க,
:தீர்ப்பை உங்கள் விருப்பத்திற்கு வழங்குவது நீதிமன்றத்தின் வேலையல்ல"
என்று சொல்லி அந்த முறையீடு ரத்து செய்யப்பட்டது.

பாரதிராஜாவின் 'முதல்மரியாதை' கதையும் இந்த வரிசையில் பேசப்பட்டதும்
தோழர்கள் சங்கமித்ரா போன்றவர்கள் எழுதியதும் நினைவில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதும் என் தோழி ஒருவர் ஒருமுறை என்னிடம்
பேசிக்கொண்டிருக்கும் போது பெண்களும் அவர்கள் காணும் பாம்பு கனவுகளும் குறித்தச் செய்திகளைப் பேசிக்கொண்டிருந்தார்., அந்தப் பின்புலத்தில் தான் எழுத இருக்கும் கதையையும் என்னிடம் சொன்னார். நன்றாக இருக்கிறது, கட்டாயம் எழுதுங்கள் என்று சொன்னேன். அப்போது அவர்  சொன்ன செய்தி..
'எல்லோரிடமும் இம்மாதிரி எழுதுவதற்கு முன்பே கலந்துரையாட முடிவதில்லை என்றும் காரணம் கேட்பவர் அக்கதைக் கருவைத் திருடி
எழுதிவிடுவதாகவும் அங்கலாய்த்தார். இப்படியும் நடக்கிறது என்பதை அவர் சொன்னபோது நம்ப முடியவில்லை. இப்போது நம்புகிறேன்.
கூகுளின் கொடையாக இப்போதெல்லாம் எனக்கும் தெரியவருகிறது
என் வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரைகளை அப்படியே வரிப்பிசகாமல்
யார் எழுதியது,? எந்த வலைப்பக்கத்திலிருந்து ? என்ற எந்த ஒரு குறிப்பும் இல்லாமல்    எடுத்துப் போட்டுக்கொள்ளும்  புண்ணியவான்கள் சிலர்  இருக்கிறார்கள் என்பது.

Tuesday, August 27, 2013

UNTOLD STORIES OF IPKF in Madras Cafe




India became more actively involved in the late 1980s, and on June 5, 1987, the Indian Air Force airdropped food parcels to Jaffna while it was under siege by Sri Lankan forces. At a time when the Sri Lankan government stated they were close to defeating the LTTE, India dropped 25 tons of food and medicine by parachute into areas held by the LTTE in a direct move of support toward the rebels.[
Weisman, Steven R. (5 June 1987). "India airlifts aid to tamil rebels". STEVEN R. WEISMAN (New York Times). .

A  book on IPKF Operations in Sri Lanka:
Intervention in Sri Lanka: The IPKF Experience Retold, written by Major General Harkirat Singh throws fresh insight on IPKF operations and identifies the gaps and pitfalls which lead to its failure. General Harkirat was the first General Officer Commanding (GOC) for the IPKF and gives a first hand account of the initial phase of the operation.

General Singh argues that the IPKF did not succeed in achieving its mandate because it `did not have a clear-cut aim'. The IPKF went into operation within hours of the Accord being signed without adequate planning and preparation. The politicians and bureaucrats, including RAW, failed to address the real issues on the ground. Education and communication with the rural people were further road-blocks of success with the peacekeeping intervention.

First secretary in the Indian High commission in Colombo conveyed to Prabakaran that Rajiv Gandhi was waiting
to meet him to discuss certain issues prior to signing the accord.
Prabakaran was delighted to receive this message and agreed to leave for New Delhi.

On his arrival in New Delhi, Prabakaran had preliminary discussion with the Prime minister on 28th July, 1987, he was lodged in room 518 of the Ashoka Hotel and awaited for another meeting with the prime minister, unaware that the latter was already in Colombo negotiating an agreement for which, J N Dixit, India's high commissioner in Srilanka had laid the ground, the Prime minister's visit was telecast live, and watching it the
LTTE leaders felt betrayed"  - page 26


" On the night of 14/15 september 2987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Prabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC, Lt.Col. Gen. Depinder Singh directed me to tell Dixit that we as an orthodox army, did not shoot people in the back when they were coming for a meeting under white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that LTTE supremo had beedn invited by the IPKF in order to find solution to the problems in the implementation of the Accord. Dixit replied "HE (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it"
- page 57.


மெட்ராஸ் கஃபே ..





ராஜீவ்காந்தியின் படுகொலை பின்னணியை வைத்து 1993ல் ஆர் கே செல்வமணி 'குற்றப்பத்திரிகை" என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுத்திருந்தார். அந்த திரைப்படம் 90 களில் வெளிவந்த சாதாரண மசாலா
படங்களையும் விட மேசமாக இருந்தது.  அந்த திரைப்படத்தில்
வந்த ஒரே ஒரு வசனத்தில் ராஜிவ்காந்தியின் பாதுகாப்புக்கு இருந்த
காவல்துறை அதிகாரியை அரசியல் வாதி குற்றம் சுமத்தும் காட்சியில்
அந்த அதிகாரி அரசியல்வாதியைப் பார்த்து  ஒரு கேள்வி கேட்பார்,

நீங்கள் யாரும் குண்டு வெடிக்கும் போது அருகில் இல்லையே, யாரும் காயப்படவில்லையே அது எப்படி? என்று

இந்த ஒரு வசனம் தவிர இத்திரைப்படத்தில்  பாராட்டும் அளவுக்கு
எதுவுமில்லை. ஆனால் இத்திரைப்படம் தணிக்கையாளரின் பெட்டியில்
பல காலம் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதுவும் ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல. சற்றொப்ப 15 வருடங்கள் சென்சார் போர்ட் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதி மறுத்தது. அதன் பின் ஏகப்பட்ட எடிட்டிங் நடந்திருக்கும்.
அப்படி ஒரு மசாலா படத்தை வெளியிட  அனுமதி மறுத்த இந்திய தணிக்கை
ஆணையம் தற்போது வெளிவந்திருக்கும்
மெட்ராஸ் கபே திரைப்படத்திற்கு
எவ்விதமான இடையூறுகளுமின்றி அனுமதி கொடுத்தது எப்படி?
ஏன்?

இந்தக் கேள்வி தான் மெட்ராஸ் கபே திரைப்படத்தின் மூலம்
 இந்திய அரசு என்ன சொல்ல வருகிறது என்பதைப் பார்ப்பவர்களுக்கு யோசிக்க வைக்கிறது.


தமிழ் ஈழம் வரலாற்றையும் போராட்டங்களையும் அறியாத குறிப்பாக
தமிழரல்லாத  பிற மாநிலத்து இளைஞர்களிடம் இத்திரைப்படம்
உறுதியாக ஒரு இந்திய வல்லரசின் பிம்பத்தை நிலைநாட்டுகிறது.

அத்துடன் ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க உளவுத்துறை
உலக நாடுகளுக்கே சட்டாம்பிள்ளையாக இருப்பதைக் காட்டி
எல்லாம் அறிந்த பரம்பொருள் போல ஒரு பிம்பத்தைக் கட்டமைத்திருப்பார்கள். அதே பாணியில் மெட்ராஸ் கபேயும்
இந்திய  "ரா' உளவு அமைப்பைக் காட்ட முனைந்திருக்கிறது.
ஓரளவு திரைப்படத்தின் மிகச்சிறந்த காட்சி அமைப்புகளின் ஊடாக
அதை நிலைநாட்டியும் இருக்கிறது.  அதாவது இந்தியாவின் ரா உளவு
அமைப்புக்கு ராஜீவ்காந்தியின் அந்தக் கோர முடிவு குறித்து ஏற்கனவே
தெரியுமாம்! ஒரு மயிரிழையில் அவர்கள் பிந்திவிடுகிறார்களாம்!
அவ்வளவு திறமையான அமைப்பாம் இந்தியாவின் "ரா"

இந்திய ரா குறித்து இம்மாதிரியான ஒரு எண்ணத்தை இந்திய இளைஞர்களிடம் மட்டுமல்ல, உலகமெங்கும் காட்டியாக வேண்டிய
ஏதோ ஒரு நிர்பந்தம் இந்தியாவின் 'ரா'வுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

அது என்ன நிர்பந்தம் என்பதை 'பஞ்சாபி சமோசா' என்று  எதிர்காலத்தில்
யாராவது எழுதுவார்கள் அல்லது திரைப்படமாகவும் எடுக்கலாம்.
மெட்ராஸ் கபே ஃபில்டர் காபியை விட  வரப்போகும் 'பஞ்சாபி சமோசா"
ரொம்பவே சூடாக இருக்கும்.

------





Sunday, August 18, 2013

நேர்படப்பேசு, ஆனா பேசாதே!

.

அண்மைக்காலங்களில் புதியதலைமுறை தொலைக்காட்சி
 மட்டுமல்ல, சன், தந்தி , வின் என்று இந்த நேர்படப்பேசுகின்ற
 நிகழ்ச்சியை அவரவர் விருப்பம் போல வெவ்வேறு பெயர்களில்
 நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மும்பையில் என் தோழி ஒருவர், அவரும்  ஊடகத்துறையில்
இருப்பவர்தான், அடிக்கடி இந்த நிகழ்வுகள் குறித்துப் பேசிக்
 கொள்வோம்.
ந கைச்சுவை நடிகர் வடிவேலு புதுசா படங்களில்
நடிக்கவில்லையே என்ற குறையை இந்த நிகழ்ச்சியில் கலந்துக்
கொள்ளும்  சிலர் தீர்த்து வைக்கிறார்கள், மனம்விட்டு வாய்விட்டு
சிரிக்கலாம், சிரிப்பது உடம்புக்கும் உள்ளத்துக்கும் நல்லது,
அதுவும் இரவு தூங்குவதற்கு முன் இந்த நிகழ்ச்சிகள்
 இருப்பதால் ரொம்பவே நல்லது என்று அடிக்கடி
எனக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பார்.



அப்படித்தான் ஒருநாள் திமுக அரசியல் கட்சி சார்பாக
 கலந்து கொண்டவர்    நிகழ்ச்சியாளர் கேட்காமலேயே
 'அப்படியானால் ராஜ்யசபா  தேர்தலில்நீங்கள் ஏன்
கனிமொழிக்கு  ஆதரவு தேடி காங்கிரசிடம் போனீர்கள்?
என்று கேட்க கூடும்" என்று சம்பந்தமே இல்லாமல்
உளறிக்கொட்டினார். கனிமொழியின்
பெயரை உச்சரிக்க வேண்டிய அவசியமோ அல்லது
 ராஜ்யசபை தேர்தலில் திமுக ஏன் தன் ஒரே ஒரு உறுப்பினருக்காக காங்கிரசின் உதவியை நாடியது ஏன் என்பதைப் பற்றி
கேள்வி எழும் சூழலே அந்த நிகழ்வில் இல்லை,
இல்லவே இல்லை. ஆனால் பாவம் அவர், அப்படி ஒரு காமெடி
நிகழ்ச்சியைக் கொடுத்ததைக் கண்டு நிகழ்ச்சி நடத்துபவருக்கே
சிரிப்பு வந்தது.
கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு நாம் கேட்காமலேயே
கனிமொழி குறித்த  இச்செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு
நன்றி என்று கூறி அந்த நிகழ்ச்சியை கஷ்டப்பட்டு நடத்தினார் .

இப்படித்தான் அரசியல் கட்சிகள் சார்பில் கலந்துக்
கொள்பவர்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கும் போல.
கனிமொழி குறித்து கட்டாயம் கேட்பார்கள், நீங்கள் இந்தப் பதிலைச் சொல்லுங்கள் என்று எழுதிக் கொடுத்து
அனுப்பி இருப்பார்களோ, அதற்குப் பயந்து அவர்கள்
கேட்டாலும் கேட்காவிட்டாலும் நாம சொல்லிடுவோம்னு
அவரு சொல்லியிருக்கலாம்!
காங்கிரசு கட்சி சார்பில் கலந்துக் கொண்ட ஒருவர்
இவர்கள் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார்.
" உங்க டி.,வி எப்பவும் காங்கிரசுக்கு எதிரா இருக்கு,
சிபிஐ ரெய்டு நடத்திடுவோம் , ஜாக்கிரதை ; என்று
 போட்டார் பாருங்கள் ஒரு போடு,
சிபிஐ ரெய்டுக்கான காரணங்கள் என்ன என்று
அறியாதவர்களுக்கும் அறிந்து கொள்ளும் வகையில்
 அவர் ரகசியங்களைப் போட்டு உடைத்துவிட்டு போனார்.

 மார்க்சியவாதிகளும் அறிவியல் பொறியியல்
பொருளாதர வல்லுநர்களும்  கலந்துக் கொள்ளும் போது
 குடுமிப்பிடி சண்டை மாதிரி இருக்கும்.
அந்த நிகழ்ச்சிகளை ஒலி ஒளி காட்சியாக பார்க்க கூடாது,
 ஒலியின் அளவை முழுவதுமாக நிறுத்திவிட்டு
வெறும் ஒளிப்படமாக பார்த்தால் மட்டும் போதும்.
 பயமில்லாமல் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியும்.

ரொம்பவும் சூடான பிரச்சனைகளை எல்லாம் நம்ம டிவிக்காரர்கள்
பேசுகின்றார்களே, சமூக மாற்றத்திற்கான புரட்சியை அறவழியில்
அறிவு ஆயுதம் ஏந்தி நடத்துகின்றார்களே என்றெல்லாம் சில நேரங்களில்
அவர்கள் பேசுகின்ற தலைப்புகளை வைத்து நாம் கனவுகளுடன்
டிவி முன்னால் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம்.
அப்படித்தான் அண்மையில் இரண்டொரு நாட்களுக்கு முன்
தமிழ்நாட்டில் நடக்கும் மணல் கொள்ளை என்ற தலைப்பில் நேர்படப்பேசு
நிகழ்ச்சியில் பூவுலகின் நண்பர்கள் குழுமத்திலிருந்து தோழர் சீனிவாசன்
கலந்து கொண்டு பேசினார்.

தன் கருத்தாக " இந்த தாதுக்கள் நிரம்பிய மணலை அள்ளும் வேலையைச்
செய்பவர்கள் பெரும்பான்மையோர் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் தான் " என்றார். உடனே நிகழ்ச்சியாளர் குறிப்பிட்ட எந்தச் சாதியின் பெயரையும் சொல்லாதீர்கள் என்று இடைமறித்தார்.
என்னவோ சாதியின் பெயரைச் சொல்லிவிட்டால் மணல் கொள்ளை விவகாரம் சாதிக்கலவரமாகிவிடுவதைப் போல ! மணல் கொள்ளைக்கும்
சாதியைப் பற்றி பேசுவதற்கும் சம்பந்தமில்லை என்று புதியதலைமுறை
நிகழ்ச்சியாளர்  நினத்தாரோ என்னவோ!!

ஒரு சட்டத்திற்குப் புறம்பான செயல், தொடர்ந்து நடக்கிறது, அரசும்
சட்டமும் இதை எல்லாம் அனுமதிக்கிறது, இதைப் பற்றி எல்லாம் பேசுலாம்,
பேசுகிறார்கள் நம் அறிவுஜீவிகள்.
ஏன் அரசு மவுனமாக இருக்கிறது? என்பதற்கான காரணத்தின் முடிச்சை
அவிழ்க்க வந்தால் அடிமடியில் கை வைத்தது போலிருக்கிறது நம் அறிவுஜீவிகளுக்கு! பாதிக்க்கப்படும் மக்கள் தலித்துகளாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருப்பதால் தான் இந்த நாட்டின் அரசும்
சட்டம் ஒழுங்கும் கள்ளமவுனம் சாதிக்கிறது! இந்தக் கருத்தையோ இந்தக் கருத்து நோக்கி இட்டுச் செல்லும் எந்த ஒரு புள்ளியும்இருந்தால் நம் டிவிக்காரர்களுக்கு அலர்ஜி.

சாதிகள் இல்லையடி பாப்பா... பாரதி, உன்னிடமும் சொல்கிறேன்.
நீ சொன்ன அதே ரெளத்திரம் பழகி உன்னிடன் சொல்கிறேன்.
பாரதி , நேர்படப் பேசு. 
சாதிகள் இருக்குதடி பாப்பா..

Sunday, August 4, 2013

ஓடு மில்கா ஓடிக் கொண்டே இரு...





ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்,
இந்தியாவுக்கு விடுதலை வந்த அதே 1947.. எல்லைக்கோடுகள் ரத்தக்காட்டேரிகளாகி அவனைத்துரத்தியது. .
அப்போது ஓடி விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் எல்லைகளைத் தாண்டி ஓடுகிறான் ஓடுகிறான்
ஓடுவதே அவன் வாழ்க்கையாகிவிடுகிறது. அந்த ஓட்டமே
அவன் அடையாளமானது மட்டுமல்ல, அதுவே இன்று
திரையரங்குகளில் அந்தக் காட்சியைப் பார்க்கும் அனைவரையும் "ஓடு மில்கா ஓடு" பாஃக் மில்கா பாஃக்
என்று ஓட வைத்திருக்கிறது.

அக்டோபர் 8, 1935 ல் லயல்புர் (அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவின் ஒரு பகுதி, இன்று பாகிஸ்தான்) கிராமத்தில் பிறந்த மில்கா சிங்கின் சுயசரிதையை வாசித்த திரைப்பட இயக்குனர் ராகேஷ் மெஃரா ,( ரங் தே பசந்தி என்ற வெற்றி திரைப்படத்தைக் கொடுத்தவர்) எப்படியும் மில்கா சிங்கின் வாழ்க்கை சரித்திரத்தை திரைப்பட மாக்கியே தீர்வது என்ற
முடிவுக்கு வருகிறார். இந்திய தேச வரலாற்றில் பாகிஸ்தான் என்ற நாடு உருவான கதையின் பின்புலத்தில்
அதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் கதையாக
இருப்பதால் மட்டுமே மில்காவின் கதை வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்வதற்கில்லை.

அவன் தன் வலியைச் சுமந்துக் கொண்டு தன் சோகத்தை
தன் காயத்தை அவன் கண்முன்னால் நடந்தக் இனக்கலவரத்தை தன் உறவுகளின் பிணங்களைத் தாண்டி
அவன் அடைந்த வெற்றிகள் என்ற புள்ளியில் குவித்து
ஓர் இரசாயணவித்தையை ஏற்படுத்தி இருக்கிறது இத்திரைப்படம்.
மில்காவின் கதையை திரைப்படமாக்க  சற்றொப்ப 3 வருடங்கள் ஆனது இயக்குநருக்கு. அக்காலக்கட்டத்தில்
ஏற்பட்ட பொருளாதர சிக்கலைத் தீர்க்க குர்ஹாவில் இருந்த தன் சொந்த வீட்டை விற்றும் தன் மனைவிக்குச் சொந்தமான சொத்துகளை விற்றும் இந்த திரைப்படத்தை
எடுத்து முடித்திருக்கிறார் ராகேஷ் மெக்ரா. தன் கதையை
இயக்குநருக்கு திரைப்படம் ஆக்கும் உரிமைக்காக மில்கா வாங்கிக்கொண்டது வெறும் ரூபாய் 1/ மட்டுமே! இன்றைய
ரூபாய் மதிப்பில் இந்த ஒரு ரூபாயை அமெரிக்க டாலரில்
மாற்றுவது கூட கடினம்!

மில்காவின் கதைப்பாத்திரத்தை உயிரோட்டமாக திரையில் கொண்டுவந்ததில் பெரும்பங்கு மில்காவாக நடித்திருக்கும்
அந்தச் சிறுவனும் பஃர்ஹான் அக்தரும் தான். மில்காவின்
பாத்திரத்தை ஏற்று நடித்த பஃர்ஹான் இந்த ஒரு திரைப்படத்திற்காக மட்டுமே திரைப்பட உலகில் ஒரு
நிரந்தரமான முத்திரையைப் பதித்திருக்கிறார் எனலாம்.

'நான் என் வாழ்க்கையில் அனுபவித்த வேதனைகளில் 20 விழுக்காடு தான் இத்திரைப்படம் பேசி இருக்கிறது என்கிறார் மில்கா. 1956ல் திரைப்படம் பார்த்த மில்கா அதன்பின் 57 வருடங்கள் கழித்து இப்போது தான் அதுவும்
தன் கதையே திரைப்படமாக வந்திருப்பதைப் பார்த்து
மனம் நெகிழ்ந்திருக்கிறார் என்கிறார்கள். எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக வருவாயை இத்திரைப்படம்
கொட்டிக்கொண்டிருக்கிறது. அதிலும் மராட்டிய மாநிலம்,
மத்திய பிரதேசம் மற்றும் டில்லியில் இத்திரைப்படத்திற்கு
வரிச்சலுகை வழங்கப்பட்டிருக்கிறது.

1960ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கண்ணிமைக்கும் தருணத்தில் தன் தங்கப்பதக்கத்தை இழந்துவிடும் மில்காசிங்
என்று ஆரம்பமாகும் திரைக்கதை அதன் பின் ஒவ்வொரு
காட்சியிலும் மில்கா நடந்து வந்தப் பாதையை நோக்கிப்
பயணிக்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்ற வரலாற்று நிகழ்வு இக்கதையின் அடிநாதமாக ஓடிக்கொண்டே இருக்கிறது. உலகப்போரில் நடந்த ஹோலோகோஸ்ட் மரணங்கள், ருவண்டாவில் நடந்த இனப்படுகொலை, ஏன் நம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த இரத்தம் படிந்த வரலாற்று நிகழ்வுகளில் எல்லாம் சொல்லொணா துயரத்தை அனுபவித்தவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான்.
மில்கா அதில் ஒருவன்.
எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீதோ மதத்தின் மீதோ
வெறுப்பு ஏற்படும் வகையில் கதையோட்டத்தை
நகர்த்தாமல் திரைப்படத்தை எடுத்திருக்கும் இயக்குநரை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தன் இனப்பெருமையை தத்ரூபமாகக் காட்டுகிறேன் என்று
சொல்லிக்கொண்டே சாதி ஆணவத்திமிரைக்  காட்டும்
நம் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் இக்கதையைத் திரைப்படமாக்கியிருந்தால் சர்தார்களின் சரித்திரம் என்ற ஒரு சின்ன வட்டத்திற்குள் அடைத்திருப்பார்கள்.

திரைக்கதையோட்டத்தில் மில்கா வெளிநாட்டு பயணத்தின்போது ஒரு பெண்ணின் வலையில் வீழ்வதும்
அதனாலேயே தன் விளையாட்டு போட்டியில் சரிவதும்
காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இக்காட்சியைப் பார்த்த மில்கா "அய்யய்யோ இப்படி எல்லாம் எதுவுமே என் வாழ்க்கையில் நடக்கவில்லையே!" என்று அலற அருகில் இருந்தவர்கள் இக்காட்சி மில்காவின் ஆண்மையைக் காட்டுவதற்காக சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்களாம்.
கடைசிவரை மில்காவிற்கு இக்காட்சிக்கும் தன் ஆண்மைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது புரியவே இல்லையாம். இதனால், ஊடகத்துறை அன்பர்களுக்கு மில்கா ஓர் அதிசயமாக தெரிவதாக சொல்கிறார்கள்!


பாகிஸ்தானுடன் நேச உறவை வளர்க்கும் வகையில் நடக்கும் விளையாட்டுக்குழுவில் தலைமை ஏற்று பாகிஸ்தான் செல்ல மில்கா மறுக்கின்றான்.
"என்னால் முடியவில்லை, என்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது " முஜ்ஷெ நஹி ஹோகா, மெ பாகிஸ்தான் நஹி
ஜாவோன்ஹா" என்று அவன் சொல்லும் வசனத்திற்காக
பாகிஸ்தான் அரசாங்கத்தின் திரைப்பட தணிக்கை குழு
இத்திரைப்படத்தை பாகிஸ்தானில் திரையிட அனுமதி
மறுத்திருக்கிறது. திரையிடுவதற்கான பேச்சுவார்த்தைகள்
நடந்துக்கொண்டிருக்கின்றன என்கிறார் இயக்குநர்..

இத்திரைப்படத்தின் வருவாயிலிருந்து கிடைக்கும் பணத்தின்
ஒரு பகுதி மில்காவின் அறக்கட்டளைக்கு வழங்கப்பட இருக்கிறது. மில்கா சிங் தன் அறக்கட்டளை மூலமாக
நலிந்தோருக்கு மருத்துவ உதவிகள், வறிய இளம் விளையாட்டு  வீரர்களுக்கும் விளையாட்டு மைதானத்திலிருந்து வயோதிகம் அல்லது உடல் ஊனம் காரணமாக ஓய்வு பெற்றிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு
உதவி என்று சமூக தளத்திலும் ஆரவாரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்.

விளம்பரங்களில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நம் கிரிக்கெட் வீரர்கள் எவரும் விளையாட்டு வீரர்களுக்காக
ஏதேனும் தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கிறார்களா?
எப்போதாவது உதவிகள் செய்திருக்கின்றார்களா?
நாமும் தான் அவர்களை விடாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்!



மில்காவின் கடைசி ஆசை ஒன்றே ஒன்றுதான்.
"எந்த ரோம் ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கான தங்கப்பதக்கதை நான் இழந்தேனோ அந்தப் பதக்கத்தை என்
வாழ்நாளில் நான் உயிருடன் இருக்கும்போதே ஓர் இந்திய விளையாட்டு வீரன் கொண்டுவர வேண்டும் " என்கிறார்.

நிறைவேறுமா மில்காவின் ஆசை?




Tuesday, July 30, 2013

காதலின் தற்கொலை





நான் பறவையைக் காதலித்தேன்
அது தன் சிறகுகளில்
என்னை அணைத்து
வையகமெங்கும்
வானகமெங்கும்
பறந்து திரிந்தது.
விட்டு விடுதலையானக்
காதலின் சுகத்தை
அப்போதுதான் அனுபவித்தேன்.

நான் ஆமையைக் காதலித்தேன்
அவசரப்படாமல் அருகில் வந்தது.
தேரில் பவனிவரும்
மதுரை மீனாட்சியைப் போல
அதன் ஒடுகளே சிம்மாசனமாய்
கம்பீரமாக அசைந்து நடந்தேன்.
கடல் அலைகளில்
பாய்மரக்கப்பலாய்
பவனி வந்தேன்.


நேற்று
கோபியர் கூட்டத்தில்
நானும் நுழைந்தேன்.
அப்பத்தைப் பங்குவைத்த
பூனையின் கதையாய்
காதலைக் கூட
கண்ணா.. நீ
பங்கு வைத்தாய்
எப்படியும்
என்முறை வந்தே தீருமென
காத்திருந்தக் காலத்திலும்
காதல் என்னுடன் வாழ்ந்தது.
நான் காதலில் வாழ்ந்தேன்.

அப்போதெல்லாம்
நானும் என் காதலும்
இணைப்பிரியாமல்
இருந்தோம்.
இப்போது
என்னைப் போலவே
மண்ணில் வாழும்
மனிதா
உன்னைக்  காதலித்தேன்.
காதல் என்னைக் கொலைசெய்தது.
தானும் தற்கொலை செய்து கொண்டது.

மறுநாள் பத்திரிகையில்
காதலின் முகவரி
சாதி அட்டையிலும்
கடவுளின் கட்டைவிரல்
அடையாளத்திலும்
பத்திரமாக
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருந்தது.