Tuesday, March 17, 2020

ஆதிரை ஆங்கிலத்தில் ...

3000 ஆண்டுகால இலக்கிய மரபின் தொன்மையும் யுகங்களாக கடந்துவரும் ஆதித்தாயின் மொழியும் எதோ ஒரு வகையில் என் கவிதைகளிலும் முகம் காட்டும் போது அதை அப்படியே இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும்போது . சொற்களுக்கு நடுவில் புதைந்திருக்கும் பெருமூச்சுகளை எப்படி வெளிப்படுத்துவது ..!அடிக்குறிப்புகளுடன் சொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆதிரை அதற்கு விதிவிலக்கல்ல. தன் மொழியின் ஊடாக அதைக் கொண்டுவந்திருக்கும் இனிய நண்பர் ஸ்ரீ க்கு என் அன்பும் நன்றியும்.
The five great epics of Sangam Poetry are Silappadhikaaram, Manimekalai, Jeevaka Chintaamani, Valayaapathi and Kundalakesi. Aathirai, the protagonist of this poem, plays a pivotal role in the epic named second in the list above.
When the whole world ticks on hope, this poet, a former banker like me, paints a picture of hope in verse. I am very happy to reproduce this beautiful poem in Tamil penned by Poet Puthiyamaadhavi Sankaran here with prior permission from the poet together with an English translation by moi:
கார்காலத்தை இழந்த முல்லை
மணல்காடுகளின் பெருமூச்சு
கானல் நீரில் மிதக்கும் கவிதையில்
மழைத்துளி குடை பிடித்து நடக்கிறது.
கடற்கரையில் அலைமனிதர்கள்
கையசைத்து நடனமாடுகிறார்கள்.
பாறைகளை ஓங்கி அறையும்
அலையின் கரங்கள்
கடலில் மிதக்கும் மரங்களை எடுத்துச்
சிலம்பம் ஆடுகின்றன.
நட்சத்திரக் கப்பல்கள் ஒதுங்கும் கடற்கரையில்
கருவாடுகள் மீன்களாகின்றன.
ஆதிரை மட்டும் ஈரம் காயாமல்
நெய்தல் நிலத்தில் காத்திருக்கிறாள்.
The sigh of the sandy forests
of Mullai
that lost the monsoon
walks
holding a raindrop umbrella
in the poem
that floats on a mirage.
Wavefolk dance on the seashore
waving hands.
The arms of the wave
that slaps the rocks hard
pick up the trees
floating on the seas
and perform silambam.
On the beach
where starships berth,
karuvaadu become fishes.
Only Aathirai
with her hopes still not dry
waits
in the Neidal land.
~Sri 2245 :: 17032020 :: Noida
Mullai : A pasture of grass and shrubs.
Silambam : A martial art using a sturdy wooden pole.
Karuvaadu : Kippers or dried fish.
Neidal land : Maritime area.
Aathirai : A woman who plays an important role in the Tamil epic Manimekalai. The reference to her waiting is drawn from the epic where she is dissuaded from committing suicide by an Oracle that assures the safe return of her husband .

Thursday, March 12, 2020

மும்பையில் சாதனைப் பெண்களுடன் நானும்

நேற்று (11/3/20) மாலை சாதனைப் படைத்தப்
பெண்களுடன் நானும்..
அவர்களின் முன்னால் நான்..??
சுயபரிசோதனைக்கான நேரமிது..
யோசிக்கும் போது வெட்கமாக இருக்கிறது.
என் கடந்தப் போன காலங்கள்
இனி வரப்போவதில்லை..!
அவர்களிடமிருந்து துணிச்சலையும் விடாமுயற்சியையும்
 கொஞ்சம் கடனாக வாங்கி வந்திருக்கிறேன்.
இதோ.. அவர்களில் சிலரைப்பற்றி..
ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்கும் பெண்..-
குடிசைவாழ் குழந்தைகளின் கல்விக்காக போராடி
பள்ளிக்கூடம் திறந்து கற்பித்தப் பெண்..-
நடனம் என் உயிர்மூச்சு.. என்று வாழும் பெண்
இசையே என் ஜீவன் என்ற பெண்-
நோய் நாடி மருத்துவம் பார்க்கும் ஆயுர்வேத
மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற பெண்-
பெளதிகம் படித்துவிட்டு “make India” வின்
நம்பிக்கை நட்சத்திரமாகி இருக்கும் விஞ் ஞானிப் பெண்,-
9 வயதில் கடலில் நீந்தி இன்று நீச்சலிலும்
துப்பாக்கி சுடுவதிலும் சாதனை நிகழ்த்தி இருக்கும்
வீராங்கனை,-
ஆண் மைய அதிகார அரசியலில் எந்த ஒரு
"காட் பாதரும் " இல்லாமல் தங்களுக்கான இடத்தை
அடைந்திருக்கும் பெண் அரசியல்வாதிகள்..(கவுன்சிலர்கள்)
குழந்தைகளுக்கு லிவர் மாற்று அறுவைச்சிகிச்சை
செய்த பெண் மருத்துவர்.-.
இந்திய அரசின் உதவித்தொகையை பயன்படுத்தி
இன்றுவரை 3000 பேர்களுக்கும் அதிகமாக
கண் அறுவைச்சிகிச்சை செய்த பெண் மருத்துவர்-
ச ச்சின் டெண்டுல்கரை உருவாக்கிய பள்ளியில்
இன்று பெண்களுக்கான கிரிக்கெட் டீம் உருவாகி
அகில இந்திய அளவில் விளையாடிக் கொண்டிருக்கிறது 
என்று பெருமையுடன் சொன்ன பெண்..-
“பெண்கள் முதலில் தங்கள் உடல் நலனைக் 
கவனித்துக் கொள்ள வேண்டும்.. செய்வீர்களா பெண்களே..” 
என்று தன் தாயின் கதையைக் கூறி
 எங்களை நிமிர்ந்து உட்கார வைத்த பெண்-
உணவு வங்கி திட்ட த்தைக் கொண்டுவந்தப் பெண்-
உணவு கெட்டுப்போகாமலிருக்க இனி பிரிட்ஜ் தேவையில்லை என்று கண்டுப்பிடிப்புகள் நட த்திக் கொண்டிருக்கும் பெண்..-
பணி ஒய்வுக்குப் பிறகும் கல்லூரியில் சேர்ந்து படித்து
பட்டம் வாங்கியப் பெண்.. -
இவர்களுக்கு நடுவில் நான்..?????????????????
இவர்களில் பெரும்பாலோர் திருமணமாகி
குழந்தைகள் பெற்று.. அதனால் ஏற்பட்ட
நேரமின்மை.. சிலருக்கு வேலையைவிட்டு
தற்காலிகமாக வீட்டிலிருக்க வேண்டிய சூழல்..
அதன் பின் அவர்கள் தங்களின் மீள்வரவில் தான்
RE –ENTRY சாதனைகள் படைத்திருக்கிறார்கள்.
என்ற உண்மையை அவ்வளவு எளிதில்
 ஒரு செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.
அடுத்த தலைமுறை இன்றைய பெண்கள் பேசும்போது 
எங்களுக்கு வேண்டியதை எல்லாம் எங்கள் பெற்றோர்
 கவனித்துக்கொண்டார்கள். உங்கள் அனுபவங்கள், கடினமான பாதை எங்களுக்கில்லை என்றார்களே தவிர
இன்றைக்கு அவர்களில் ஒவ்வொருவரும் 100 பெண்களுக்கு 
வேலை கொடுத்து சுயமாக தொழில் நட த்தும்
 சாதனைப்பெண்களாக வலம் வருகிறார்கள்..
இவர்களுக்கு நடுவில் நானும் !!
அவர்கள் நடந்து வந்தப் பாதை
அவர்கள் கடந்து வ ந்த வாழ்க்கைத்துளிகள்
என்னை நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.
வாழ்க்கையில் நான் தவறவிட்ட தருணங்கள்
அதற்கான காரணங்கள்
இன்று யோசிக்கும்போது அர்த்தமற்றதாக இருக்கின்றன.

எழுத்தும் வாசிப்பும் மட்டுமே சாதனையாகிவிட
முடியுமா..? யாருடைய வாழ்க்கையிலாவது
ஒரு துளியாவது அது தன் பங்களிப்பை
செய்யுமா..?

இப்படியான பெண்களைத் தேடி
பெண்கள் தினத்தில் சந்திக்க வைத்து
விருதுகள் கொடுத்து ஒவ்வொரு பெண்ணையும்
தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நேரமும்
கொடுத்து… LIC யில் வேலைப்பார்க்கும் பெண்கள்
முதல் முறையாக பெண்கள் தினத்தை இம்மாதிரி
கொண்டாடியதைப் பாராட்டுகிறேன்.
இத்தனைக்கும், நடுவில் சின்னதா இன்னொரு
செய்தியும் என் இருத்தலை அர்த்தமுள்ளதாக்கி
இருக்கிறது…சற்று ஆறுதலாக மயிலிறகாக
வருடிக் கொடுப்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
இவ்விருதுக்கு தேர்வு செய்திருப்பதாக
அறிவித்து வீட்டில் வந்து LIC ராமலஷ்மி சொன்னபோது 
தயக்கமாக இருந்த து. வேறு யாருக்காவது கொடுங்கள்
 என்று சொல்ல நினைத்தேன்.. 
ஆனால் அப்பெண் சொன்னார்..
“அக்கா.. யாரிடம் கேட்டாலும் சாதி மத அரசியல் 
வேறுபாடின்றி முதலில் அவர்கள் சொல்லும் பெயர்
 உங்கள் பெயர் தான் “என்றார்.
அவர்களின் பெயர்களையும் சொன்னார்.
அரசியல் காரணமாக தடாலடியாக நான் 
விமர்சித்தவர்கள் முதல்  நேரில் கண்டாலும் நான்
 கண்டுகொள்ளாமல் கடந்து சென்றவர்கள் வரை .. .
அவர்களின் முகங்கள் என் கண்முன்னால் வந்து
என்னைப் பார்த்து புன்னகை செய்தன. .
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
இப்போதும் வெளிப்படையாக சொல்கிறேன்..
நான் எதுவுமே சாதிக்கவில்லை..
அந்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிட்டவள்
என்று வேண்டுமானாலும் என்னை
வைத்துக்கொள்ளலாம்.
அம்ச்சி மும்பைக்கு ..இத்தருணத்தில்
இந்த தமிழச்சியின் நன்றிகள் கோடி..

Monday, March 9, 2020

மோதியும் கனவு தொழிற்சாலையும்

Image result for modi $ 5 trillion 2024

2014 ல் மோதிஜியின் கனவு தொழிற்சாலையில்
“நல்ல காலம் பொறக்குது..நல்ல நாள் வருது ..
வருது..” என்ற கனவு விற்பனைக்கு வந் த து.
அந்தக் கனவுகள் எல்லாம் 2019ல் நிறைவேறிவிடும்
என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டது..
இந்திய பொதுஜனம் தங்கள் வங்கி கணக்குகளில்
வரப்போகும் பணத்தை நினைச்சி குஷியா கடனை
வாங்கி செலவு செய்த தெல்லாம் தனிக்கதை!
வெளி நாட்டில் பதுக்கி வச்சிக்சிருக்கும் இந்தியப்
பணம் இந்தியாவுக்கு வந்திடுச்சா, வரலையா
ஏன் வரலை..? ம்ம்ம் .. யாருமே கேட்கலையே?
ஏன் சரவணா.. நீ என்ன சொல்றே..?
“கனவுகளைத் தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டா
மோதியா அதற்கு பொறுப்பு!
அந்தக் கனவு பலிச்சிடுச்சி..
மோதிஜிக்கு நல்ல காலம் பொறந்திச்சா இல்லையா..
அவரு அவருக்குத்தான் நல்லகாலம் 
பொறக்கப்போவதுனு சொன்னாரு.. அதைப் போயி.. 
பொதுஜனத்திற்கெல்லாம் நல்லகாலம்னு தப்பு தப்பா
 புரிஞ்சிக்கிட்டா என்ன செய்யறதும்மா..”
அடேங்கப்பா..இனிமே
சரவணா மாதிரி யோசிக்கனும்.
சரவணா சொன்னா சரணம் தான்.
இது இப்படி இருக்க 2019 வருவதற்கு முன்பே
2017 ல் தடாலடியா இன்னொரு புது கனவு
வருது. நியு இண்டியா 2022 –( NEW INDIA 2022)
.. மோதிஜி புதிய இந்தியக் கனவைச் சொல்லும்
போதே எனக்கெல்லாம் புல்லரிச்சுப் போச்சு.
ச்சே.. மனுஷனைச் சும்மா சொல்லப்பிடாது..
இந்தக் கனவில் ஒன்றிரண்டு நிறைவேறினால்
கூட போதும்..மோதிஜி ஜிந்தாபாத் னு சொல்லிட்டு
நாமும் இருந்திடலாம்னு நினைச்சதுண்டு.
பெரிய திட்டங்களை நிறைவேற்ற 5 வருஷம் போதுமா..
போதாது தானே! இன்னொரு முறையும் மோதி
வந்த தும் சரிதான் என்று மனசுக்குள் ரகசியமா
நினைச்சிக்கிட்ட துண்டு..மனுஷன் இப்போ
அந்த நினைப்பில மண்ணை அள்ளிப்போட்டாரு
பாருங்க..அதுதான்யா. $.FIVE TRILLION 2024 புதுசா
ஒரு கனவு .. இது என்னய்யா.. இந்தியப் பொருளாதரத்தை 
பலூன் மாதிரி காற்றடிச்சா கூட FIVE TRILLION 
அமெரிக்க டாலரை எட்டுமா..
இந்தக் கணக்கை நானும் எத்தனையோ விதமா 
போட்டுப் பார்த்திட்டு இது என்னடா புதுக்கணக்கா 
இருக்குனு யோசிச்சி யோசிச்சி .. 
என்னைவிட கணக்குப் போடறதில்ல
 கெட்டிக்கார கணக்கப்பிள்ளைக்கிட்ட ஒரு போன்
போட்டு கேட்டா.. அவரு கோபத்தில என்னைக்
கண்ணாபின்னானு திட்ட ஆரம்பிச்சிட்டாரு..
சரவணா.. உனக்கு எதாச்சும் புரியுதா ..
புத்திசாலிகளுக்குப் புரியாத கணக்கு கூட
சில சமயங்களில் மரமண்டைக்குப் புரிஞ்சிடும்னு
சொல்லுவாங்க.,.. அதுதான் உங்கிட்ட கேட்கேன்..

இந்தக் கனவுகளுக்கு நடுவில் வரும் செய்தி
இந்தியப் பொருளாதரத்தின் சரிவை சரி கட்டுவதற்காக
 ரிசர்வ் பேங்க் தன் இருப்பு தங்கத்தை 30 ஆண்டுகளுக்குப்
 பின் முதல் முறையாக விற்றிருக்கிறது.

தனிமனிதர்கள் கனவு காணட்டும்.
ஆனா..
ஓர் அரசாங்கமே கனவு கண்டால்..
கனவுகள் தான் என்ன செய்யும்..????

தாங்கலடா சாமீ..

#Modi_Govt_dreams

GOOD NEWZz

Image result for good newwz
GOOD NEWwz
ஒரு மசாலா இந்திப்படம் “குட் நியூஸ்ஸ்”.
நகைச்சுவைப்படமும் கூட. ஆனால் கதை
ரொம்பவும் கனமானது. ஆண் மையமும்
குடும்பத்தின் வாரிசுடமை ஆண்வழி
வருவதையும் பெரும் கேள்விகுட்படுத்தி
இருக்கும் கதை.
இரு தம்பதியர். குழந்தையின்மை.
மருத்துவரிடம் வந்து IVF முறையில் குழந்தை
பெற்று கொள்ள தீர்மானிக்கிறார்கள். அதாவது
ஆணின் விந்தை பெண்ணின் கருமுட்டையுடன்
இணைத்து அவை இரண்டும் சேர்ந்தவுடன்
அந்த உயிரியை பெண்ணின் கருப்பைக்குள்
அனுப்பி 9 மாதம் தாயின் வயிற்றில் கருவை
வளர வைத்து பிரசவிக்கும் அறிவியல் முறை.
வருண் பத்ரா, தீபு பத்ரா .. இரு கணவன்மார்களின்
குடும்ப பெயரும் பத்ரா. – BATRA. இருவருக்கும்
ஒரே காலத்தில் இச்சிகிச்சைக்கு வரும் போது
வருண் பத்ராவின் விந்து தீபு பத்ராவின் மனைவியின்
கருமுட்டையுடனும்.. தீபு பத்ராவின் விந்து வருண் பத்ராவின்
மனைவி கருமுட்டையுடன் தவறுதலாக சேர்க்கப்பட்டு
அதுவே இருவரின் மனைவி  கருப்பையிலும்
செலுத்தப்பட்டும் விடுகிறது!
அதாவது .. விந்துகள் தம் தம் இணையை மாற்றி
சேர்க்கப்பட்டு விடுகின்றன.
வருணின் வாரிசு.. தீபுவின் மனைவி வயிற்றில்!
தீபுவின் வாரிசு வருணின் மனைவி வயிற்றில்
வளர்கிறது…
கருமுட்டை யாருடையது என்பதை வைத்தல்ல
வாரிசுடமை. விந்துகளே வாரிசுகளே நியமிக்கும்
அதிகாரம் கொண்டிருக்கின்றன.
இந்த அதிகாரத்தை பெரும் கேள்விக்குட்படுத்தி
இருக்கிறார்கள் இக்கதையில் அடுத்தவன்
விந்தை சுமக்கும் அவர்களின் மனைவியர் இருவரும்.
இதனால் ஏற்படும் மன உளைச்சல்களை
ஆண் எப்படி கடந்து வருகிறான், ஒரு பெண் எப்படி
கடந்து வருகிறாள்...
ஆண் பெண் உடலுறவு என்பதும் பெண்ணுக்கு
மட்டுமல்ல, ஆணுக்கும் எப்போது வேண்டுமானாலும்
சாத்தியப்பட்டுவிடும் காரியமல்ல.. இச்சிகிச்சையின்
போது ஓர் ஆணும் அவன் உடல் மனமும்
அனுபவிக்கும் உணர்வுகள்.. இன்னும் எழுதப்படவில்லை.
நாம் அதைப் பற்றி யோசிப்பதும் இல்லை.
இப்படம் இவை அனைத்தையும் நகைச்சுவையுடன்
கொடுத்தாலும் இக்கதையின் கனம்..
குட் நியுஸ் தான்…
தன் வாரிசை சுமப்பதால் அடுத்தவன் மனைவி
மீது ஆசைவரவில்லை. ந்னோ டூயுட் ..
பிரசவித்தப் பின் குழந்தைகளை மாற்றிக்
கொள்ளவும் இல்லை… கதைக்கு ரொம்பவும்
தெளிவா துணிவா கொடுத்திருக்கும் முடிவு
பாராட்டுதலுக்குரியது.
நல்லாதான்யா இருக்கு.. உண்மையிலேயே
இது தான்யா குட் நியுஸ்ஸ்.

Sunday, March 8, 2020

யெளவனம் தொலைத்தவள்

Image result for durga devi painting

உன் கருவறையின்
இருளாகவும் ஒளியாகவும்
என்னை எரித்துக் கொண்டேன்.
உன் வில்வ மரத்தின் நிழலில்
என் யெளவனம் தொலைத்தேன்.
நீ கால்தூக்கி ஆடும்போதெல்லாம்
பூமிப் பந்தின் விசையை நிறுத்தும்
வித்தைகள் செய்தேன்.
நடராசன் நீ..
என்னைப் போராட அனுப்பினாய்
ஆயுதம் தாங்கினேன்.
முலை வற்றியது
முகம் கறுத்தது
உதடுகள் தடித்து வெடித்தன
பூக்களின் வாசம் மறந்துப்போனது.
ரத்தவாடையுடன் பிசுபிசுத்த கூந்தல்
கொடுமணல் பரப்பில் காய்ந்துப்போனது..
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
கனவுகளில் மிச்சமிருந்தது
நீ கடைசியாக கொடுத்த முத்தத்தின் வாசனை.
உன் கோட்டைகள் அதிர
வெற்றிமுரசுகள் ஒலிக்க
உன்னொடு ஆட ஓடோடி
வருகிறேன்..
உன் கழுத்து பாம்புகள் நெளிகின்றன.
நெற்றிக்கண் படபடக்கிறது அறியாமல்.
நீயோ மலர்ப்படுக்கையில்
அவளுடன் சயனித்திருக்கிறாய்..
கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும்
மாலையிலிருந்து
ஒவ்வொரு மண்டையோடுகளாய்
உதிர்கின்றன…
ஓம் நமசிவாய.

Friday, March 6, 2020

மார்ச் 06.. 1967 தமிழக அரசியலை மாற்றிய நாள்

Image result for c.n.annadurai ministry

மார்ச் 06, 1967…
தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

1967..
அண்ணாவின் புகழ்மிக்க பேச்சுகளில் ஒன்று 
1967 என்ற தலைப்பில் பேசியது.
இந்த தலைப்பு அவராக எடுத்துக்கொண்ட தலைப்பல்ல.
வழக்கம் போல.. சட்டசபையில் அண்ணாவின் 
தம்பியரைப் பார்த்து அன்றைய நிதியமைச்சர்
 இன்னும் 10 ஆண்டுகள்
நீங்கள் எல்லாம் “சும்மா” இருங்கள் என்று சொல்ல
அதை நினைவில் வைத்துக்கொண்டு
மதுரையில் 11. 08-1957 ல்
1967 என்ற தலைப்பில் அண்ணாவைப் பேச சொல்கிறார்கள்.
அந்த உரையில் தான் அண்ணா சொல்கிறார்..
1967 ல் திட்டவட்டமாக
எதிர்காலம் எங்கள் கையில் இருக்கும்” என்று.

1957 ல் அண்ணா சொன்னபடியே 
1967 ல் தமிழகத்தின் எதிர்காலமானது
திமுக..!

மார்ச் 06, 1967 அண்ணா தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.
அந்தப் பதவியேற்பு விழாவில் அண்ணாவின்
 குடும்பத்தினருக்கு எந்த சிறப்பு
அனுமதி சீட்டும் வழங்க அனுமதிக்கப்படவில்லை..
அவரது மனைவி ராணி அண்ணாதுரையைத் தவிர
 மற்ற அனைவரும் பொதுமக்களோடு சேர்ந்து நின்றுதான்
 பதவியேற்பு விழாவைக் கண்டனர்.
இதை எழுதும் போது.. 
இன்றைய பதவி ஏற்பு விழாக்களும் 
செம்மொழி மா நாடுகளும் அதில் கலந்து கொள்ளும்
 தலைவர்களின் குடும்ப உறுப்ப்பினர்கள் அவர்களுக்கு என்று
ஒதுக்கப்படும் சிறப்பு இருக்கைகள்.. இத்தியாதி எல்லாம்
 நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!

ம்ம்ம்.. 1967..
ஒரு தலைமுறையின் கனாக்காலமாய்..

Tuesday, March 3, 2020

ஒரு பெண் எழுத்தாளரை ரெளடியாக்கிய மதுரை

ஒரு (பெண்) எழுத்தாளரை ரௌடியாக்கிய
மதுரை.
“ட்டேய்.. மீசை வெறும் மசிருதாண் டா”
சில காரணங்களால் நான் கிளம்பவேண்டிய
மதுரை விமானத்தின் டிக்கெட் பிற்பகல் 2 மணி
விமானத்திற்கு மாற்றப்பட்ட து. இதற்கான சில
டெக்னிகல் காரணங்கள் உண்டு. அது இருக்கட்டும்.
தோழர் மதிகண்ணனும் தோழர் அஷ்ரபுதீனும் என்னை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார்கள்.
அதன் பின் 2 மணி வரை விமான நிலையத்தில்
இருக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்து
ஏற்கனவே என்னிடம் இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ்
டிரெயினைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி
விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தேன்…
அதன் பின் நடந்த ஒவ்வொரு காட்சியும் ஒரு
திகில் படம் போல..
வெளியில் வரும்போது செக்யூரிட்டி ஆபிஸரிடம்
விமான நிலையத்திலிருந்து கிளம்பும் பேருந்து பற்றி
விசாரித்தேன். எல்லோருமே சொன்ன பதில்..
“பேருந்து வருமாம். ஆனால் வராதாம்.
எப்போ வரும்னு யாருக்கும் தெரியாதாம்.
அதற்குனு ஒரு நேரகாலமே கிடையாதாம்!”
வெளியில் டாக்சி நிற்கிறது…பாருங்கள் என்றவுடன்
வெளியிலிருக்கும் டாக்ஸி நிலையத்திற்கு வந்தேன்.
வரிசையாக வெள்ளை நிற வண்டிகள்.. காத்திருந்தன.
விசாரிக்கும் போது முதலில் ரூ 500 கேட்டு என்னவோ
எனக்காக 450 ரூபாயில் வருவதற்கு ரெடி என்றும்
 25 கிலோ மீட்டர் தூரத்தில் மதுரை ரயில் நிலையம் 
இருப்பதாகவும் சொன்னார். 
அவர் சொன்ன இத்தகவல் எனக்கு எரிச்சல்
ஊட்டியது. கூகுள் வரைபடம் நெடுஞ்சாலை வழியாக
செல்லும் தூரம் 9 கி.மீ என்றுதான் சொல்கிறது. 
அவரிடம் அதைச் சொன்னவுடன் அவருக்கு கோபம்
 வந்ததைக் கண்டேன். ஆனால் அவர் 450க்கு குறைவாக 
வரமுடியாது என்று தன் குரலை உயர்த்திப் பேசினார்.
அப்படியானால் பரவாயில்லை, 
நான் ஆட்டோவில் போய்க் கொள்கிறேன் என்று
 விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு 
வரும் ஆட்டோவை அணுகும் போது அவர் ஓடி வந்து
 என்னை அதில் ஏற்றக்கூடாது என்று சத்தம் போட்டார். 
ஏன் என்று கேட்டபோது இந்த எல்லைக்குள் ஆட்டோவுக்கு 
அனுமதி இல்லை என்றவுடன் நான் வாகன ங்களுக்கு
நுழைவு கட்டணம் வசூலிக்கும் இட த் தைத் தாண்டி 
ஆட்டோவைப் பிடிக்க முயற் சி செய்தேன்.
அவர்கள் ஆறேழு பேராக சேர்ந்து ஒவ்வொரு முறையும் 
ஓடி வந்து அதையும் தடுத்தார்கள்..
எனக்குள் அடங்கி இருந்த அவள் முழித்துக் கொண்டாள்.
எங்கள் காரில் நாங்கள் சொல்லும் தொகையைக்
கொடுத்துவிட்டு தான் நீ பயணிக்க முடியும் என்ற
அதிகாரத்தை மிரட்டலை என்னால் பொறுத்துக் கொள்ள 
முடியவில்லை. மீண்டும் விமான நிலையத்திற்கு அருகில் 
நின்று கொண்டிருந்த டிராபிக் போலீஸ் வாகனம் அருகில்
வந்தப்போது அதிலிருந்து இறங்கியவரிடம் டாக்சிக்கார ர்களின்
 மிரட்டலைச் சொன்னேன்.
அவர் சொன்ன பதில்.. “மேடம்.. பல வருஷமா இதுதான் நடக்குது மேடம்” என்றார்.
“அப்போ நீங்க எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க?”
என் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
இதற்கிடையில் என்னைச் சுற்றி எட்ட டி தூரத்தில்
அவர்கள் வட்டமிட்டு நிற்கிறார்கள்.
அப்போது அதில் தலைவன் போல தெரிந்த ஒருவர்
தன் மீசையை முறுக்கினார் .. என்னைப் பார்த்து தான்!
நல்ல வாட்டசாட்டமான உருவம்.. 
நெற்றியில் பட்டையும் குங்கும மும். வேறு..
 அவன் மீசையை முறுக்க முறுக்க 
என்னை மீறிக்கொண்டு அவள் திமிறி எழுந்தாள்.
ஆதவன் தீட்சண்யா எழுதிய “மீசை வெறும் மயிரு தாண்டா” 
நினைவுக்கு வந்த து. நான் அத்தருணத்தில் அதைச் சொன்னேனா என்று தெரியவில்லை. 
அப்படியே சொல்லியிருந்தாலும் தான்
என்ன?????!!!

“டேய்… உங்க அதிகாரத்தை எல்லாம் காட்டினா
அதுக்கெல்லாம் பயப்படற ஆளு நானில்லைடா..
இன்னிக்கு நீயா நானானு பார்த்திடுவோம்..!”
உன் கண் முன்னாலேயே நான் ஆட்டோவில் ஏறிப்
போகல.. நான் …. இல்லடா..!
அவர்களில் ஒருவன் ஓடி வருகிறான்.
அண்ணன் என்னாச்சு..
ட்டேய்.. இந்தப் பொம்பள ரொம்ப பேசுதுடா..
இத்தனையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த து 
டிராபிக் போலீஸ் வேன்.
மதுரை ரெயில்வே நிலையத்திற்குப் போய்
டிரெயினைப் பிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை..
இந்த அடவாடித்தனத்திற்கு பயப்படப்போவதில்லை
என்று முடிவு செய்துகொண்டேன்.
அத்தருணத்தில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு பயணிகளுடன்
 வந்த ஆட்டோ அருகில் சென்று ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து
“அண்ணா வண்டியை எடுங்கண்ணா..
இவனுக ஓடி வந்து நிறுத்த முயற்சிப்பாங்க..
கத்துவானுக.. வண்டியை நிறுத்தாதீங்க..
எடுங்க.. நான் பார்த்துக்கிறேன்ன்ன்ன்ன்ன்”
என்று சொல்லவும் அவர் வண்டியை ஸ்டார்ட்
செய்தார். வண்டி முன்னால் வந்து மறித்தவுடன்
“எப்பா…. பெருங்குடி தான் போனுங்காறங்க..
அதுதான் ஏத்துனேன்” என்று சொல்லிக்கொண்டே
ஆட்டோவை பட்டென்று திருப்பி வேகம் கூட்டி
எடுத்தார். அவர்கள் என்னை நோக்கி கத்தினார்கள்.
நான் தலையை வெளியில் நீட்டி அந்த மீசையை
முறுக்கினவனை ஒரு பார்வை பார்த்தேன்”
அதன் பின் ஆட்டோ ஒட்டுனரிடம் “அண்ணா எனக்குப் பெருங்குடி போகவேண்டாம்.. அப்படி நான் சொல்லவே இல்லியே.. “ என்றேன்.
அவர் திரும்பிப் பார்த்து அப்படி சொல்லாட்டி
வண்டியை விட்டிருக்க மாட்டானுகம்மா என்றார்.
எனக்கு மதுரை ரெயில்வே ஸ்டேசன் போகனும்னா
என்று சொல்லிவிட்டு .. பையிலிருந்த தண்ணீர்
பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தேன்….
இப்படியாக மதுரை மா நகரம் ஒரு
எழுத்தாளரை ரெளடியாக்கிய பெருமையை
சேர்த்துக் கொண்ட து..
( நாள் 02 மார்ச் 2020, காலை 9.45 முதல் 11 மணி வரை)