Thursday, August 28, 2014

கணபதி வரும் நாளில்....




கணபதி குறித்தக் கதைகள், கட்டுரைகள் , புத்தனின் அரச மரத்தடியை
கணபதி கைப்பற்றிய சரித்திரம் இதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும்
நிறையவே எழுதியாகிவிட்டது. விநாயக சதுர்த்தியின் மகிமையைக்
கொண்டாட மும்பை மாநகரமெங்கும் பக்தர்களின் கூட்டம்
மண்டல்களில் லோக்கல் தாதாக்களின் ஆளுயரக் கட் அவுட்..
இப்படி எத்தனையோ காட்சிகள். ஆனால் கணபதி உற்சவத்தின்
அந்தப் பத்து நாட்களில் இன்றும் என் நெஞ்சைவிட்டு அகலாத
சில நினைவுகள் இருக்கின்றன. இந்த மனிதர்கள் நிஜமானவர்கள்.
என் கதைகளின் வசீகர மொழிகளுக்குள் அவர்களைப் படம் பிடிப்பது
அவ்வளவு எளிதல்ல. அது என் கருப்பண்ணசாமிக்கு திருப்பதி
பாலாஜியின் அலங்காரத்தைச் செய்துவிட்டது போல இருக்கும்!

நினைவு 1
-------------------

1982 ஆம் வருடம். என் திருமணத்திற்குப் பின்  நானும் சங்கரும் வடலா
அண்டாப்ஹில் ஏரியாவில் வாடகைக்கு குடியிருந்த நாட்கள்.
எதிர்வீட்டில் ஒரு வயதான மராட்டியப் பெண்மணி. அவள்
என்ன வேலை செய்கிறாள் என்பது குறித்து ஒவ்வொருவரும்
பற்பல கதைகளைச் சொல்வார்கள். சிலர் அவள் பிறந்தக் குழந்தைகளை
மாலிஸ் செய்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள். தற்போது தள்ளாடும்
வயதில் அதுவும் செய்ய முடியவில்லை என்றார்கள்.

 ஆனால் அவளிடம் யாரும் எதுவும்  பேசுவதில்லை.
அவளும் தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி
வந்தவுடன் அவள் தன் வீட்டை வெள்ளை அடிப்பாள். சின்னதாக
ஒரு கண்பதி சிலையை வீட்டில் வைத்து 10 நாட்களும் பூஜை
செய்வாள். அப்போது மட்டும் அவள் மகன் அவளுடன் வந்து
இருப்பான். லால்பாக் கண்பதியை மணிக்கணக்கில் வரிசையில்
நின்று கும்பிட காத்திருக்கும் மனிதர்கள் , அது என்னவோ அவள்
வீட்டு கண்பதியை மட்டும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை!

என் வீட்டுக்கு எதிர்த்த வீடு அவள் வீடு. அவள் கண்பதி எடுத்திருப்பதை
அதிசயமாக வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்., என்னை நோக்கி
புன்னகைத்தாள். சைகையில் அழைத்தாள். நானும் அவள் வீட்டு
கண்பதியைப் பார்க்கும் ஆசையில் அந்த வீட்டுக்குள் நுழைந்தேன்.
பூஜையில் வைத்திருந்த ஓர் ஆப்பிள் பழம், இனிப்பு பேடா கொடுத்தாள்:.
வாங்கிக்கொண்டேன். "இப்போ புதுசா கல்யாணம் ஆயிருக்கா?" என்றாள்.
"ஆம்" என்றேன். அவள் உடைந்த டிரங்க் பெட்டியைத் திறந்து அதில்
பழைய புடவைக்குள் வைத்திருந்த புதிய பச்சைக்கலர் கண்ணாடி
வளையல்களை எடுத்து என் கைகளில் போட்டுவிட்டாள்.
மராத்தி பெண்கள், திருமணமானவுடன் பச்சைக்கலர் வளையல்
அணிவது வழக்கம் என்பதை நானறிவேன். பச்சைக்கலர் வளையலைக்
கழட்டக்கூடாது என்று வேறு சொன்னாள். நான் தலையை ஆட்டி
வைத்தேன். வீட்டுக்கு வந்தவுடன் என் சங்கரிடன் நடந்ததைச் சொன்னேன்.
கண்பதி பிரசாதத்தை கொடுத்திருக்கிறாள், ஒரு 100 ரூபாயாவது
வைத்தாயா? என்று கேட்டார். ஓகோ அப்படி கூட ஒரு வழக்கம்
உண்டா என்று கேட்க நினைத்து அதற்குள் சங்கர் சொன்ன
வார்த்தைகளில் வாயடைத்து நின்றேன்.

அவள் எவ்வளவு வறியப் பெண், வயதானவள், அதை எல்லாம்
மனசில் வச்சாவது நீ காணிக்கை வைத்திருக்க வேண்டும் என்றார்.
"இப்போ போய் 200 ரூபாய் வச்சிட்டு வரட்டா? என்று கேட்டேன்.
"வேண்டாம், அது அவளை அவமானப்படுத்தின மாதிரி ஆயிடும்" என்றார்
சங்கர்.

200 ரூபாய் அவளுக்கு ரொம்பவும் பெரிய தொகை தான், அதுவும் 1982ல்!
ஆனால் அவள் வாழ்ந்த பெருமிதமான அந்த வாழ்க்கையை நான்
மதித்தேன். பன்னாட்டு வங்கியில் கவுண்டரில் உட்கார்ந்து வேலைப்
பார்க்கும் போது அவள் தந்தப் பச்சை வளையல்களை அணிந்துக்
கொண்டு வேலைப் பார்ப்பது இயலாது. அந்தப் பச்சை வளையல்கள்
எப்போதும் என் ஆபீஸ் பையில் இருக்கும், வீட்டை விட்டுக் கிளம்பும்
போதும் வீட்டுக்குள் வரும் போதும் அவள் கண்கள் என் கைகளைப்
பார்க்கும், அதில் மறக்காமல் அவள் தந்த பச்சை வளையல்களின்
ஓசை அவளைப் பரவசப்படுத்தும்! அதற்காகவே நானும் வளையல்களை
கழட்டுவதும் மாட்டுவதுமாக இருந்தேன்.



எனக்கு அவள் பெயர் தெரியாது. அவளுடைய ஒரே மகன் கண்பதி
உற்சவ பத்து நாட்களுக்கு மட்டும் அவள் வீட்டுக்கு வருவான்.
மற்றபடி அவள் எப்போதும் தனியாகவே தள்ளாடும் வயதில்
பெருமிதத்துடன் வாழ்ந்தாள்.

இன்று அவளை நினைக்கின்றேன். பச்சை வளையல்களாக அவள்
எப்போதும் என் நினைவில் வாழ்கிறாள். அவள் வீட்டு கண்பதியைக்
கும்பிட யாருமே வராததைப் பற்றி அவள் வருத்தப்பட்டதே இல்லை. ஊரெல்லாம்

கண்பதி  பப்பா மோரியா
என்று உரத்து ஒலிக்கும் இந்த நாளில்
.
அவள் வாழ்ந்த திசை நோக்கி கைகூப்பி  கும்பிடுகிறேன்..

Monday, August 18, 2014

செங்கோட்டையில் சில காட்சிகள்




கடந்த ஆக 15, (2014) செங்கோட்டையில் இந்திய பாரம்பரிய உடையில்
தன் சொந்த வசனத்தில் குண்டுகள் துளைக்காத கண்ணாடி கூண்டுகளை
விலக்கி வைத்துவிட்டு, தனக்கே உரிய மேடைப் பாணியில் இந்திய பிரதமர்
நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்கள் முழங்கினார், முழங்கினார்.
மறுநாள், இணையங்களும் தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் சமூக வலைத் தளங்களும் அவர் பேசிய வீர வசனங்களை வெவ்வேறு தலைப்புகளில்
துண்டு துண்டாக போட்டு தங்கள் பக்கங்களை நிரப்பிக்கொள்வதில்
போட்டிப் போட்டன. அந்தப் போட்டி இன்றுவரை.. தொடர்கிறது.

மோதி அவர்களின் தோரணை ரசிக்க கூடியதாகவே இருந்தது.
அவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதில் எனக்கும் உடன்பாடுதான்.

பெண் சிசுக்கொலைக்கு எதிராக அவர் முழங்கியதும், உங்கள் பெண் குழந்தைகளை குற்றம் சொல்லாதீர்கள், உங்கள் ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணை மதிக்க கற்றுக்கொடுங்கள்
என்று சொன்னதும், அடுத்த சுதந்திர தினத்திற்குள், அதாவது ஆக 15, 2015க்குள்
இந்திய பாடசாலைகள் அனைத்திலும் பெண் குழந்தைகளுக்கான கழிவறை வசதி செய்து தரப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னதும் ஒரு நிமிடம் என் கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது , போங்கள். அப்படியே ஆடிப்போய்விட்டேன் நான்.

அத்துடன், நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் கலவரங்களையும் அவர் கண்டித்ததும் அக்கொடுமைகளுக்காக அவர் வெட்கப்படுவதாக சொன்னதும்
தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் கைதட்ட வைத்தது.

ஆமாம், இதை எல்லாம் எப்படி செய்யப்போகிறீர்கள் மோதி?
நீங்கள் கொண்டாடும், நீங்கள் நம்பும் இந்து தர்மம்
என்ன சொல்கிறது?
பெண் சிசுக்கொலைக்கு காரணங்கள் என்ன?
இந்த நாட்டில் பாலியல் வன்கொடுமை நடக்க கழிவறை இல்லாதது
ஒரு காரணமாக சில இடங்களில் இருந்திருக்கலாம்! ஆனால்
தொடரும் பாலியல் வன்கொடுமை ஆகட்டும், கலவரங்கள் ஆகட்டும்..
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இந்த நாட்டில் நீங்கள்
வளர்த்தெடுக்கும் வருணாசிரமம் மட்டுமே !

குஜராத்தில் நீங்கள் முதல்வராக இருந்து 'குஜராத் ஒளிர்கிறது' என்று
எல்லோரையும் நம்ப வைத்தீர்கள். அப்படி எல்லாம் எந்த ஒளிவட்டமும்
குஜராத்தில் உருவாகவில்லை, டாடா நானாவுக்கு நீங்கள் கொட்டிக்கொடுத்த
மக்கள் பணத்தில் அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைக்குரல் அமுங்கிப்போனது என்பது மட்டுமே உண்மை.

மக்கள் நல்வாழ்வு கூறுகளைப் பட்டியலிடும் போது பிறந்த குழந்தைகளின்
இறப்பு விகிதமாகட்டும், பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை ஆகட்டும்,
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், ஏன் குழந்தைகளுக்கு தடுப்பூசி
போடுவதில் கூட குஜராத் மாநிலம் சொல்லிக்கொள்ளும் படியான நிலையில்
இல்லை. அதிலும் ஒப்பீட்டளவில் தமிழகத்தைவிடவும் பிந்தங்கிய மாநிலமாக
இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாது.

ஆண்ட காங்கிரசும் ஆளும் பி ஜே பி இருவரும் மேடைகளில் முழங்கும் வசனங்களும்
அதன் ஏற்ற இறக்க தொனியும் மாறுபடுகின்றனவே தவிர அவர்களின்
செயல்பாடுகளில் பெரிய வேறுபாடுகள் எதுவும் தெரியவில்லை.

இதோ உங்கள் பட்ஜெட்டிலிருந்து...

கல்விக்கு ஒதுக்கி இருக்கும் தொகை ரூ 83,771 கோடி. இதில் சர்வ சிக்ஷா
அபியான - எல்லோருக்கும் கல்வி திட்டத்திற்கு போகும் தொகை
ரூ 28,635 கோடி. மீதி தொகை அனைத்தும் உயர் தொழில் நுட்பக் கல்விக்கு
ஒதுக்கப்பட்டிருக்கிறது. (அதாவது மேல்சாதி மேல்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு)

உயர் தொழில் நுட்பக்கல்விக்கு பெருந்தொகையை ஒதுக்குவதை கேள்விக்குறி ஆக்குவது என் நோக்கமல்ல. இதன் விளைவுகள் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தின் வளர்ச்சியாக இல்லாமல் ஒரு சிலரின் வளர்ச்சியாக மாறி சமூக நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும். 67 ஆண்டுகள் விடுதலைக்குப் பின்னரும் இந்திய இராணுவத்திற்கு வேண்டிய போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பத்தை இவர்களின் 67 ஆண்டுகால உயர் தொழில்நுட்பக்கல்வி வழங்கவில்லை என்பதையும்
நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றுவரை ஒவ்வொரு பட்ஜெட்டிலும்
இராணுவத்திற்கு ஒதுக்கும் தொகை நம் பட்ஜெட்டின் பெரும் செலவினத்தொகை.
மோதி அரசு சென்ற ஆண்டைவிட 12.5% கூடுதலாக நிதி ஒதுக்கி இருக்கிறது.
126 வானூர்திகளை வாங்க மட்டும் 60,000 கோடி ரூபாய் என்று காட்டுகிறது

இந்திய மக்கள் தொகை 122 கோடி. அதில் 73 கோடி மக்கள் வேளாண்மை
மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களை செய்பவர்கள். இவர்கள்
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள்
என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவர்களின் வேளாண்மைக்கு
ரூ 1700  கோடி ஐ உங்கள் பட்ஜெட்டில் ஒதுக்கி இருந்தார் உங்கள் நிதி அமைச்சர்
அருண் ஜெட்லி. இதிலும் 1000 கோடி பாசன வசதி பெருக்கத்திற்கு என்று
பிரதமரின் தனித்திட்டத்திலிருந்து வருகிறது என்றால் வேளாண்மைக்கு
ஒதுக்கி இருப்பது வெறும் 700 கோடி என்றுதான் கணக்கில் எடுக்க வேண்டும்.
சரி இந்தக்கணக்கு ஒரு புத்தகக்கணக்கு என்று ஒதுக்கி வைத்தால் கூட
கங்கையைப் புனிதப்படுத்திட ரூ 2037கோடி ஒதுக்கியது  உங்கள் செயல் திட்டம்


இராணுவத்துறை, வாழ்நாள் காப்பீட்டு துறை, மொத்த வணிகம் மற்றும்
சில்லறை வணிகத்தில் அயல்நாட்டார் நேரடி முதலீட்டை நுழையவிட்டது
மன்மோகன் ஆட்சியில் சோனியாகாந்தி அரசு. ஆனால் அதைவிடப் பெரிதாக
செய்திருக்கிறது நரேந்திர மோதியின் அரசு.

.. இப்படியாக உங்கள் செயல்பாடுகளும் அதற்கான திட்டங்களும் நீங்கள்
சுதந்திர தின உரையில் பேசிய எந்த வீர வசனத்துடன் ஒத்துப்போகவில்லை.
ஏனொ சம்பந்த மில்லாமல் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..
உங்கள் திருமதி குளிப்பதற்காக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம்
எழுந்து யாரும் பார்க்கும் முன் பொது தண்ணீர்க்குழாயில் தண்ணீரைப்பிடித்து
அங்கேயே குளித்து வாழும் வாழ்க்கை!


தமிழிலும் இந்தியிலும் நாங்கள் நிறைய கதாநாயகர்கள் இரட்டை வேடத்தில்
நடித்தப் படங்களைப் பார்த்து பார்த்து ரசித்து வெற்றிப்படங்களாக்கி
அவர்களைக் கொண்டாடி மகிழ்ந்து ... நிறையவே ரசித்துவிட்டோம்.
அதே பாணியில் தொடரும் அரசியல் மேடைகளை எங்களால் இனியும்
கொண்டாட முடியவில்லை.