Wednesday, February 13, 2008

இரண்டாம் இடம் -அன்றும் இன்றும்


கன்னட எழுத்தாளர் பைரப்பாவின் "பருவம்' வாசித்தவுடன் அனைவரும்
கேட்டது எம்.டி.வாசுதேவன்நாயரின் மலையாள நாவல்
"இரண்டாம் பருவம்' வாசித்தீர்களா என்பதுதான்.
குறிஞ்சிவேலனின் தமிழ் மொழியாக்கமாக சாகித்திய அக்கதெமியின் வெளியீடாக
வந்திருக்கும் அந்நாவலை அண்மையில் வாசித்தேன்.

தலைமைக்குத் தகுதியான வீரம், காதல் இரண்டும் அளவுக்கு அதிகமாகவே
கொண்டிருந்த மகாபாரதக்கதையின் பீமன் எப்போதும் இரண்டாம் இடத்தில்
இருக்கிறான். அவன் தான் வாசுதேவநாயரின் மகாபாரதக்கதையை
இரண்டாம் இடத்தின் பார்வையில் நின்று கொண்டு பார்க்கிறான்.
காலமெல்லாம் தர்மம், மனு சாத்திரம், முன்னோர் சொன்னது,
அரசு சட்டம், வழக்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமைப்பீடத்தை
அவனுடைய இரண்டாம் இடம் கேள்விக்குரியதாக்குகிறது.


அர்ச்சுனன் சுயம்வரத்தில் வென்றெடுத்தவள் பாஞ்சாலி என்று
அர்ச்சுனனுடன் மட்டுமே சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறாள்
பாஞ்சாலி. ஆனால் சுயம்வரத்தில் வென்றவளைப் பத்திரமாக
காப்பாற்றி எதிர்த்தவர்களை எல்லாம் ஓடச்செய்தவன் பீமன்.
அந்தவகையில் பார்த்தால் பாஞ்சாலி பீமனுக்குரியவளாகிறாள்.
ஆனால் எப்போதும் அப்படி பேசப்படுவதில்லை.

யுத்தத்தில் பகைவர்களை வென்றவனுக்கே அரசுரிமை என்பது வழக்கம்.
அப்படிப்பார்த்தால் குருசேத்திரத்தில் பகைவர்களான துரியோதனன்,
துச்சாததனை வென்றவன் பீமன். அரசுரிமை அவனுக்குத்தான் உரியது
என்று தருமனும் சொல்ல ஒரு கணநேரம் அரசனாகும் கனவுகளில்
மிதக்கும் பீமனை பாஞ்சாலி தன் தலைமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக
சந்திக்கிறாள்.
பீமன் அரசன் ஆனால் அவனுடைய மனைவி பலந்தரை அரசியாவாள். தன்னுடைய
இடம் 'இரண்டாம் இடமாகி'விடும் என்று அச்சப்படுகிறாள் அவள்.
விதுரனோ காலமெல்லாம் பணிப்பெண்ணுக்குப் பிறந்த காரணத்தால்
அரசுரிமைகளிலிருந்து விலக்கப்பட்டவன். தன் மகன் யுதிஷ்டரனுக்கு
அரசுரிமை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என்பதில்
கவனமாக இருக்கிறான். யுதிஷ்ட்ரன் விதுரனின் மகன் என்பதை
குறிப்பால் உணர்த்தும் இடங்களை ஆசிரியர் தன் பின்னுரையாக இணைத்துள்ளார்.

பீமன் தன்னை எப்போதும் தருமசீலன் என்று சொல்லிக்கொள்வதில்லை.
துவாரகைக் கடலில் மூழ்கி எல்லாம் முடிந்து ஐவரும் பாஞ்சாலியுடன்
இறைவனடி சேர மகாபிரஸ்தானம் ஆரம்பிக்கிறார்கள்.
களைப்புற்று பாஞ்சாலி மண்ணில் சாய்கிறாள். அப்போது தருமசீலன்
யுதிஷ்டிரன் ,"அவள் எப்போதும் அர்ச்சுணனை மட்டும்தான் மனதார
நேசித்துக்கொண்டிருந்தாள். ராஜசூயத்தில் என் அருகில் அமர்ந்திருக்கும்போதும்
அவள் கண்கள் அர்ச்சுனனிடம் தான் நிலைத்திருந்தன" என்று குற்றம்
சுமத்திவிட்டு சொர்க்கத்தேரை நோக்கி நடக்கிறான்.
பீமன் மட்டும் தான் சொர்க்கத்தேரை மறந்து தான் நேசித்த தன்
பாஞ்சாலியின் கண்கள் திறக்குமா என்று காத்திருக்கிறான்.
பீமனுக்கும் தெரியும் அவளின் காதல் மனம்.
நான்காண்டுகளுக்குப் பிறகு அவனுடைய முறையில் அவனுடைய குடிலில்
அவள் அர்ச்சுனனை நினைத்து "சொல்லுங்கள், காலகேயவதத்தைப் பற்றி
முழுவதுமாகக் கூறுங்கள்" (பக் 286) என்று சொன்ன நாட்கள்.
" வேண்டாம், தன் மனதில் அர்ச்சுனனைக் கனவில் கண்டு கொண்டிருக்கும்
அவளின் குளிர்ந்த உடல் இன்றைய இரவில் எனக்கு வேண்டாம்' என்று
அவன் குடிலிலிருந்து வெளியில் வந்த நாட்கள்.
ஆனாலும் அவன் மட்டும் தான் கடைசிவரை அவளுக்காக வாழ்ந்தவன்.
ஜெயாசக்கரவர்த்தி எழுதிய 'திரெளபதி' யில் தருமர் சொர்க்கம் போய்
சேர்வதற்கு முன்பே பாஞ்சாலியும் பீமனும் சொர்க்கத்தில் அவரை
வரவேற்றார்கள், என்ன அதிசயம்!" என்று எழுதியிருப்பார்.(பக் 14)
ஒவ்வொரு நிகழ்விலும் தருமன் பேசும் தருமம் எவ்வளவு
கேலிக்கூத்தானது என்பதை பீமன் போகிறப்போக்கில் சொல்லிக்கொண்டிருப்பான்.

போர்க்களத்தில் அபிமன்யு மாண்ட செய்தி கேட்டு கிருஷ்ணனின் முகம்
கறுத்துவிடுகிறது. அவன் உபதேசம் செய்த கீதையின் சாயம் வெளுத்து
விடுகிறது பீமனின் பார்வையில்.
'கிருஷ்ணனின் கருத்த முகத்தைக் கண்டேன், சொந்த இரத்தமென்றும்
குடும்பம் என்றும் வரும்போது தான் நைந்த ஆடைகளின் உவமையை
மறந்துவிடுகிறோம்..." என்கிறான் பீமன்.

பீமனின் மகன் கடோத்கஜன் போரில் இறந்துவிடுகிறான். கர்ணன் அர்ச்சுனனுக்கு
எதிராக இறுதியில் பயன்படுத்த வைத்திருந்த வேலைப் பயன்படுத்தியே
கடோத்கஜனைக் கொல்ல முடிந்தது. எனவே அர்ச்சுனன் தப்பித்துக் கொண்டான்
என்பதற்காக பாண்டவர்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணன்
பாண்டவர்களிடன் சொல்கிறான்.
திட்டமிட்டே தன் மகன் கடோத்கஜன் அன்றைய போரில் முன்
வரிசையில் அனுப்பப்பட்டதை அறிகிறான் பீமன். அதுமட்டுமல்ல
கிருஷ்ணன் மீண்டும் சொல்கிறான்,
" கடோத்கஜன் காட்டுமிராண்டிதானே! அரக்ககுணமுள்ளவன், யாகத்தின்
எதிரி, பிராமணர்களின் பகைவன் அவன் இப்போது இறக்கவில்லை
என்றாலும் என்றாவது நாமே கொல்ல வேண்டியது வரலாம்.."
கதை முடிவில் பீமனும் ஒரு காட்டுவாசிக்குப் பிறந்தவன் என்பதை
குந்தியே ஒத்துக்கொள்வாள்.
'அந்தப் பயங்கரக் காட்டிலிருந்து அவர் வந்தார். அதுவும் சங்கிலி அறுபட்ட
ஒரு சண்டமாருதத்தைப் போல்.. பெயர் தெரியாத ஒரு காட்டுவாசி வந்தார்"
என்று பீமன் பிறந்தக்கதையைச் சொல்லுவாள்.
கிருஷ்ணனின் கூற்றும் பீமன் பிறந்தக்கதையும் இணைத்துப் பார்க்கும்
போது அனைத்து திறமைகளும் கொண்ட பீமனுக்கு
பாரதக்கதையின் ஒதுக்கப்பட்ட இரண்டாம் இடத்தின் வரலாறு
சமூகப்பின்னணியுடன் புரியும்.


பீமனின் பார்வையில் ஒரு சமூகப்பின்னணியைக் குறிப்பாக
உணர்த்தியிருக்கும் நாவல் இரண்டாம் இடம். வாசிப்பவர்களுக்காக
படைப்பாளன் விட்டு வைத்திருக்கும் பக்கங்கள் அவை.
வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியிருக்கும் சொற்களுக்கு
நடுவில் மவுனத்தில் இமயத்தின் பனிக்கட்டியாக உறைந்து
போயிருக்கிறது இரண்டாம் இடத்தின் வரலாறு.
அந்த வரலாற்றின் எச்சமாகவே
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில்
நாட்டுப்புறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடல்களில் பீமனும் கர்ணனும்
மற்ற கதை மாந்தர்களை விட அதிகமாகப் பாடப்பட்டிருக்கிறார்கள்.

'கத்தி எடுத்துச் சண்டைசெய்து -நான்
கர்ணனோட பொண்பொறந்தேன்
கர்ணன் மதிச்சாலும்
கர்ணனுக்கு வந்தவள மதிக்கலியே
காணமுற்றுத் தேடலியே

வில்லெடுத்துச் சண்டைசெய்து
வீமனோட பொன்பொறந்தேன்
வீமனுக்கு வந்த வேசிமதிப்பாவ
வேணுமின்னு தேடுவானா.."
.

இரண்டாம் இடம் :இன்று
----------------------

எப்போதும் சிலருக்கு இரண்டாம் இடம் நிரந்தரமாக இருந்துவிடுகிறது.
இரண்டாம் இடத்தில் இருப்பதாலேயே அவருடைய திறமைகள்
பல நேரங்களில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

இன்னும் சிலர் இரண்டாம் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போட்டிப்
போடுகிறார்கள். அவர்களும் முதலிடம் காலியானால் இரண்டாம் இடம்
முதலிடமாகும் எழுதப்படாத சட்டத்தை நம்புகிறார்கள்.
அரசியலில் இந்த நம்பிக்கை பல நேரங்களில் பொய்த்திருக்கிறது.
அப்போதெல்லாம் முதலிடத்தைத் தவறவிட்டவர்கள் தங்களின்
இரண்டாம் இடத்திலும் நிலைத்து இருக்க முடியாமல் மன உளைச்சலில்
கூடாரம் மாற்றிக்கொள்கிறார்கள். கொள்கையாவது கொள்கை..!
வெங்காயம்!!

இரண்டாம் இடத்தில் இருப்பது சிலருக்கு பாதுகாவலாக அமைந்து
விடுகிறது. அவர்கள் செய்கிற நல்லதுகளுக்கு மட்டுமே அவர்கள்
பொறுப்பு. அவர்களின் அநியாயச் செயல்களுக்கு பொறுப்பேற்க
வேண்டியது அவர்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும்
முதலிடம். இதைப் பயன்படுத்திக்கொண்டு முதலிடத்தை விட
அதிகமாகக் கோடி கோடியாக தன் கணக்கில் சேர்த்துக்கொண்டவர்களூம்
உண்டு.

ஒரு கருத்துக்கணிப்பில் முதலிடமா இரண்டாவது இடமா என்று
காகிதத்தில் வந்த வெறும் அட்டவணைகள் கூட சிலரின்
அரசியல் முகவரியை மாற்றி இருக்கிறது.

போட்டிகள் எப்போதுமே முதலிடத்திற்குத்தான். எனினும் அமைதியாக
இந்தப் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் கொண்டவர்கள்
பிழைக்கத் தெரிந்தவர்கள்.

முதலிடத்தை ரப்பர் ஸ்டாம்பாக்கிய இரண்டாம் இடங்களின்
துணிச்சலைப் பாரட்டியே ஆகவேண்டும்.


முதலிடத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் இப்போதெல்லாம் இரண்டாமிடங்களுக்கு
இருப்பதால் இரண்டாம் இடத்தின் அதிகாரம் கொடிக் கட்டிப்பறக்கிறது.

மும்பையில் பாருங்கள்..
மண்ணின் மைந்தன் கொள்கை உன்னுடையது மட்டும்தானா?
என்று போட்டி நடக்கிறது. பாவம் மாராட்டிமானுஷ்.
யார்ப்பக்கம் சேர்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் பீகார், உத்திரபிரதேசத்துக்காரர்களின் ஆதிக்கம்
அதிலும் குறிப்பாக மும்பையில் என்கிறார் - ராஜ்தாக்கரே.

இதே ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களை
நிறுத்தியிருந்தார் என்பதும் அந்த 15 பேரும் தோற்றுப்போனார்கள்
என்பதும் உண்மை.

ஈழத்துப் பிரச்சனையையும் தமிழனின் அகதி வாழ்க்கையையும் புரிந்து
கொள்ளாமல் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஈழப்போராளிகளை
ஆதரிக்கவில்லையா என்று வேறு கேட்டு வைத்திருக்கிறார்.!

பெரியவர் பால்தாக்கரேயோ விடுதலைப்புலிகளின் தலைவர்
பிரபாகரனை வெளிப்படையாகவே ஆதரிப்பவர்.

இந்தியாவின் தலைமை அமைச்சராகும் தகுதி சரத்பவாருக்கு
உண்டு, அவர் பிரதமராக வேண்டும் என்றார் பெரியவர் தாக்கரே.

20 எம்.பி.களை வைத்துக்கொண்டு இந்தியாவின் தலைமை அமைச்சராக
எப்படி வரமுடியும்? என்று சிரித்தார் சரத்பவார்.

சரி இது என்னவொ கொள்கைப் பிடிப்பில் மண்ணின் மைந்தர்கள் மீது
கொண்ட அதீதமான அக்கறையுடன் செயல்படுவது என்கிறமாதிரியான
ஒரு தோற்றத்தை... ஆம் தோற்றத்தைத் தருகிறது.
ஆட்சி, அதிகாரம் கைப்பற்றுவதற்கும் ஒரு எளிதான வழியாக
இருக்கிறது. இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும்
வெளிமாநிலத்திலிருந்து மும்பை வந்து மும்பையை வணிகப்பெருநகரமாக்கி
இருக்கும் அம்பானி போன்றவர்களின் வருவாயை இழக்கத் துணிய
மாட்டார்கள். பொன்முட்டையிடும் வாத்துகளை இழக்க யாருக்குத்
துணிச்சல் வரும்?

ராஜ்தாக்கரே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம்
என்ற செய்தி வந்தவுடன் (12/2/2008) பாட்னாவில் இனிப்பு
வழங்கி இசை வாத்தியம் முழங்க ஆடிப்பாடிக் கொண்டாடி
இருக்கிறார்கள்! மனிதர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கலாம் !
ஆனால் இரண்டாம் தரச் செயல்களைச் செய்வது என்பது
கேவலம்!

இரண்டாம் இடத்தில் கூட இப்போதெல்லாம் இரண்டு பேருக்கு
நிம்மதியாக இருக்க முடிவதில்லை. முதலிடத்தைக் குறிவைத்து
இரண்டாம் இடங்கள் நடத்தும் குருசேத்திரத்தில்
மீண்டும் ஒரு மகாபாரதக்கதை ....!!.

Tuesday, February 12, 2008

தொண்டர்களின் கதைப்பாடும் கவிதை அலை



தலைவர்களுக்காகவும்
அவர்கள் சொன்ன
தத்துவங்களுக்காகவும்
தன்னைத் தொலைத்த
தலைமுறைகளின் எச்சமாய்
பரந்து விரிந்து
மண்ணைத் தொடும்
அரபிக்கடலின் அலைகள்.
பேரலைகளாய்
சிற்றலைகளாய்
எப்போதும்
இந்த மண்ணில்
உங்கள் குரல்.

வங்கக்கடலோரம்
வலைவீசும்
கூட்டணித் தோணிகளுடன்
உங்கள் அரபிக்கடலின்
அலைகள் எப்போதும்
கைகுலுக்குவதே இல்லை.
அதனால் தான்
உங்கள் கூடாரங்களில்
கொள்கைகள் மட்டுமே
வெளிச்சங்களாய்-
எங்கள் தலைமுறையை
அதிசயிக்க வைக்கும்
அற்புதமாய்-
எப்போதும் அமைந்துவிடுகின்றன
பவள விழாக்காணும்
உங்கள் பாதைகள்.

கறுப்பும் சிவப்புமாய்
உங்கள் பாதைகளுக்கு
அடையாளமாய்
உங்கள் கரைவேட்டிகள்.
கைநீண்ட ஜிப்பாக்கள்
தோள்களில்
தென்றலெனப் புரளும்
நீண்ட நேரியல்
நிமிர்ந்த நடை
ஆட்சிக்கட்டிலுக்கு
வெண்சாமரம் வீசாத
உங்கள் செருக்கு
எப்போதும் எவரிடத்தும்
உங்கள்
அடையாளங்களைக் காட்டி
உங்கள் வாரிசுகளான
எங்களுக்காக
எதையும் வரமாக வேண்டாத
உங்கள் பெருந்தவம்
தந்தையே..
தலைவணங்குகிறேன்


ஈரோட்டுப்பாதையை
எங்களுக்காக
இந்த மண்ணில்
நிலைநிறுத்த
நீங்கள் நடத்தியது
வெறும் போராட்டங்கள்
மட்டுமல்ல.
உங்கள் கனவுகளுக்காக
நீங்கள் நடத்தியதெல்லாம்
வெறும் கூட்டங்கள்
மட்டுமல்ல.
எனக்குத் தெரியும்
நீங்களே பாதையாகிப்
போன அந்தக்கதை.

எனக்குத் தெரியும்...
இந்தப் பாதையில்
மண்ணாக
சல்லிக்கல்லாக
உறைந்த தாராக
எவராலும் உடைத்து
எடுக்கமுடியாத
பகுத்தறிவுப் பாதையாக
நீங்கள் மாறிய நாட்கள்.
அந்த நாட்களில்
உங்கள் வசந்தப் பருவங்களில்
நீங்கள்
எதை எதை எல்லாம்
தொலைத்தீர்கள் என்பது
எனக்கும்
எங்களைப் பெற்றெடுத்த
எங்கள் அன்னையர் பூமிக்கும்
தெரியும்.

தந்தையே
நீங்கள் வாழ்ந்த
வாழ்க்கைக்கு
சாட்சியமாய்
தொண்டர்களின் கதையை
எப்போதும்
என் கவிதைஅலைகள்
இந்தக் கடற்கரையோரம்
பாடிக்கொண்டே இருக்கும்.

Monday, February 11, 2008

கறுப்புக்குதிரையில் கவிதைகளின் ஊர்வலம்



மும்பையில் காலாகோடா (Gala godha) -

கறுப்புக்குதிரை என்ற பெயரில் ஒவ்வொரு

ஆண்டும் நிகழும் கலைத்திருவிழா இந்த

ஆண்டு கடந்தவாரம் மிகச்சிறப்பாக

நடைபெற்றது. (02/2/2008 முதல் 10/2/2008

வரை)
நாட்டுப்புற கலை முதல் மேற்கத்திய இசை

வரை எல்லாம் பல்வேறு அமைப்புகளின்

உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும்

நடைபெறுகிறது. இந்த மும்பை மாநகரத்தில்

வாழும் மாநகரக்கவிஞர்களை அழைத்து

இந்த மாநகரத்தைப் பற்றிய கவிதைகளை

வாசிக்கும் ஒரு நிகழ்வு டேவிட் சாசன் நூலக

பூங்காவில் பனிவிழும் முன்னிரவில் 100

முதல் 150 வரை எழுத்தாளர்கள் கூடி இருக்க
ஆங்கிலத்திலும் இந்தியிலும் மராத்தியிலும்
விரும்பினால் அவரவர் தாய்மொழியிலும்

வாசிக்கும் அனுபவம் கொஞ்சம்

வித்தியாசமானது.
ஆனால் ஒவ்வொரு முறையும் இம்மாதிரி

அனுபவங்களில் சின்னதாக ஒரு பெருமிதம்

எற்படும். எல்லா கவிஞர்களும் கிட்டத்தட்ட

ஒரே நேர்க்கோட்டில் நிற்பது தெரியும்.
அன்றும் அப்படித்தான்.
09/2/2008 மாலை 6 முதல் 7 வரை கவிதை

வாசிப்பின் முதல் பகுதியில் என்

கவிதைகளுக்கான நேரம்

ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வுக்கு என்று கவிதை எழுத

நேரமில்லை. ஏற்கனவே நான் எழுதியிருந்த

இருகவிதைகள் அந்த நிகழ்வுடன் மிகவும்

தொடர்புடையதாக இருந்ததால் அந்த இரு

கவிதைகளையும் வாசித்தேன்.
(ஆங்கிலத்தில் தான்) என்னதான்

ஆங்கிலத்தில் வாசித்தாலும் என்னவோ

அந்தக் கவிதையின் ஒட்டுமொத்த

ஜீவனையும் கொடுத்த மனநிறைவு

ஏற்படுவதில்லை. இம்மாதிரி நிகழ்வுகளுக்குப்

பின் இப்படி ஒரு மனக்குறையும்

அவஸ்தையும் ஏற்படுவதைத் தவிர்க்க

முடிவதில்லை.

எனக்காக என் கவிதைகளை இதோ
சத்தமாக வாசிக்கப்போகிறேன்!

(1)
மாநகரக் கவிதை
--------------------

எப்போது ஏறலாம் ?
எப்போது வேண்டுமானாலும் ஏறலாம்.
எப்போதும் இருக்கும்
எங்கள் மாநகர் வண்டியில்
மனிதர்களின் மந்தைக்கூட்டம்.
ஏறுவது மட்டும்தான் என்வசம்
இறக்கிவிடும் கூட்டத்துடன் கூட்டமாய்
என் பயணம்.
அடிக்கடி இறங்கும் இடம் கூட
என்னால் தீர்மானிக்கப்படுவதில்லை.
சரியான பக்கத்தில் நின்றாலும்
சரியான நேரத்தில் சென்றாலும்
சரியான இடத்தில் இறங்குவதற்கு
உத்திரவாதமில்லை.

கஞ்சியில் உலர்ந்து
கடை இஸ்திரியில்
காஸ்ட்லியாக நடக்கும் காட்டன்கால்கள்
கசங்கி நொறுங்கி
மரக்கால்களூடன் நொண்டியடிக்கும்
கம்பீரநடையில்
கண்துஞ்சாமல்
வெற்றியை நோக்கி வீறுநடைபோடுகிறது
என் மாநகரத்தின் மனித வெளிச்சங்கள்.

லிப்ஸ்டிக்கில் சிவந்த உதடுகள்
எப்போதும் தூங்கிவழியும் சன்னல்

இருக்கைகள்
திறந்தவெளி முதுகுகளுடன்
போட்டிப்போடும் செழிப்பான மார்புவெளிகள்
எப்போதும் தாதர் ஸ்டேஷனில் இறங்கக்

காத்திருக்கும்
காய்கறிக்கூடைகள்
ஏறி இறங்கும் பூக்காரிகள்
மார்புச்சீலை மறைக்காத
பால்குடிக்குழந்தைகள்
போகிற வழியில் உட்கார்ந்திருக்கும்
மூட்டை முடிச்சுகள்
நைலான் புடவைக்குள்
அடங்க மறுக்கும்
அரவாணிகளின் சதைத்துடிப்புகள்
தொப்புள் வளையங்கள் சிரிக்க
செல்போனுடன் ஜனித்துவிட்ட
இளங்குமரிகள்
இவர்களுக்கு நடுவில்
எங்காவது
தொங்கிக்கொண்டிருக்கும்
என் முகம்!

மீன்கூடையின் கவிச்சல்
வாடாபாவுடன் கலந்து
மல்லிகைப்பூவில் உரசி
குளித்தவுடன் தடவிக்கொண்ட
வாசனைத்தைலத்துடன்
வியர்வையாய்
மெல்லிய உள்ளாடையை ஈரப்படுத்தும்

சேச்சியின் தோள்களுக்கும்
மவுசியின் தொடைகளுக்கும் நடுவில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்கும் இருக்கை.
அந்த இருக்கையில்
எப்படியும் எழுதிவிட வேண்டும்
இறங்கும் இடம் வருவதற்குள்
எனக்கான
என் கவிதையின் இருத்தலை.
------
(2)
புத்தக அலமாரி
----------------

கழிவறைச் சுவர்களைத் தவிர

மற்ற எல்லா சுவர்களிலும்

கண்ணாடிக் கதவுகளுடன்

தொங்கிக்கொண்டிருக்கிறது

புத்தக அலமாரிகள்.


ஒவ்வொரு பொங்கலுக்கும்

வெவ்வேறு தளங்களில்

மாறி மாறி அடுக்கப்படுகிறது

புத்தகங்கள்.


அலமாரிக்கு கண்களாய்

இருக்கும் புத்தகங்கள் சில.

பிரபலங்களின் பெயர்கள்

பளிச்சிடும் கண்ணாடிக்குள்

புத்தகமாய் இருப்பதுகூட

அலமாரிக்கு அந்தஸ்தை

அதிகரித்து காட்டும் என்பதால்

எப்போதும் முன்வரிசையில்.


நண்பர்களின் புத்தகங்களைத்

தொட்டுப் பார்க்கும்போதெல்லாம்

சிலிர்த்து போகிறது

தனிமையின் நாட்கள்.


அலமாரியில் எப்போதும்

போனசாக சேர்ந்து கொள்கிறது

நானே காசு போட்டு

அச்சடித்து வைத்திருக்கும்

புத்தக வரிசைகள்.


தூசி துடைத்து

கரப்பான் அடித்து

கவனிக்க

அதிக கூலி கேட்கிறான்

கண்ணன் என் சேவகன்.


வைக்க இடமில்லை

என்பதால் மட்டுமே

எந்தப் புத்தகத்தையும்

பழைய பேப்பர்கடைக்கு

பார்சல் செய்யமுடியாமல்

அடிக்கடி எல்லைத்தாண்டி

அடுத்தவர் அலமாரிகளை

அபகரிக்கும் குற்றத்திற்காய்

எப்போது வேண்டுமானாலும்

தூக்கிலடப்படலாம் நானும்

என் எழுத்துகளும்.


என் கவலை எல்லாம்

சாவைக் குறித்தல்ல.

என் சாவுக்குப் பின்

அனாதையாகப் போகும்

அலமாரியின்

புத்தகங்களைப் பற்றித்தான்.

...
அப்பாடா இப்போ தான் நிம்மதி!

Friday, February 8, 2008

கலைக்கூத்தனின் இராகங்களைப் பாடிய இலெமுரியா




மும்பை வாழ் தமிழர்களின் கவிதை எப்போது எங்கே சூல் கொண்டது?
நாடகமேடையிலா? கவியரங்கங்களிலா?
தெரியவில்லை. ஆனால் இந்த இரண்டிலிருந்தும் பிறந்த வடிவேலு என்ற
இளைஞனின் கவிதைகள் தான் அச்சுவடிவம்-நூல்வடிவம் என்ற
நடைப்பயின்று துள்ளிக்குதித்து அருவியாகி,
மண்ணில் கலந்து நதியென மனிதர்கள் வாழ்வில் இணைந்து, அரசு, அதிகாரம், பதவி என்ற எந்த அணைக்கட்டுக்குள்ளும் தன்னைச் சிறைப்படுத்த முடியாத
பெருமிதத்துடன் கடலில் கலந்தது. அரபிக்கடலின் அந்தக் கவிதைகள் வாழ்ந்ததன் சாட்சியாக 02/02/2008 ல் தன் ஆரம்பவிழாவில் இலெமுரியா பதிப்பகம் கவிஞர் கலைக்கூத்தனின் இசைப்பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து
கவிஞர் கலைக்கூத்தனின் 'தமிழிசைத் தென்றல்" என்ற பெயரில் குறுந்தகடாக
வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.
கவிஞர் கலைக்கூத்தனின் கவிதைகளை வெளியிடுவதன் மூலமே பல்வேறு
செய்திகளைக் குறியீடாக வெளிப்படுத்தி இருக்கும் இலெமுரியா பதிப்பகத்திற்கு
எம் வாழ்த்துகள்.

கலைக்கூத்தன் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தில் வேலைப்பார்த்தவர். அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாய் - ஏன் பல நேரங்களில் பேருந்து பயணச்சீட்டிலும் எழுதி வைத்திருக்கும் கவிதைகளை
நோட்டுப்புத்தகத்தில் எழுதிப் பாதுகாத்து அவை அச்சில் வர உதவிய
இளைஞர்களில் ஒருவர்தான் திரு.குமணராசன் அவர்கள். அவரே கவிஞரின்
பாடல்களுக்கு குறுந்தகட்டு வடிவம் கொடுத்து அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு
அந்த மறைந்தக் கவிஞனின் கனவுகளை எடுத்துச் சென்றிருப்பது
நட்பு, கவிதை ரசனை எல்லாம் தமிழனின் வாழ்வில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதைத் தான் உணர்த்தியுள்ளது.

எத்தனையோ பேர் வந்தார்கள், வாழ்ந்தார்கள்.. போனார்கள்.. ஏன் கலைக்கூத்தனுக்கு மட்டும் இந்தச் சிறப்பு?

இந்தக் கவிஞன் தான் 1977ல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த நேர்க்காணலில் செம்மாந்து பதில் சொன்னான்.
"தமிழக அரசின் அரசவைக் கவியாக இருப்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள மராட்டிய மாநிலத்தில் ஒரு தமிழ்க்கவியாக இருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று.
Q: why didn't you ask the DMK Govt to help you?
poet: if the DMK Govt had by itself offered to help me, it would have been different. But i would not use my status as a party worker to promote my position as a poet. Besides it is more exciting to emerge as a poet from non tamil maharashtra rather than to be a court poet of a political party in tamil nadu.

தன் பெயரையும் புகழையும் தான் சார்ந்த அரசியல் மேடையில் இணைத்து எந்தப் பூமாலைக்காகவும் இவர் கவிதைகள் காத்திருந்ததில்லை.

கலைக்கூத்தன் கவிதைகள் - 1973
மனிதனை நான் தேடுகின்றேன் - 1979
எதிர்நீச்சல் போடுகின்றேன் - 1988
பூங்கோதை - 1976

பூங்கோதைக் காப்பியம் தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் இளங்கலைப் பட்டப்படிப்புக்குப் பாடநூலாக இருந்தது. 1988ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.
மும்பைக் கவிஞர் எழுதிய காப்பியநூல் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது இன்றுவரை இவருக்கு மட்டுமே!
இவர் எழுதிய தமிழிசைப்பாடல்கள் இசைப்பேராசிரியர் வித்துவான் எஸ்.இராமச்சந்திரன் அவர்களின் இராக, தாள, சுரக்குறிப்பு மெட்டமைப்புகளுடன்
வெளியிடப்பட்ட தொகுப்பு. இந்நூலை அக்காலத்திலேயே சண்முகாநந்தா கலையரங்கில் கவிஞர் வெளியிட்டார்.
"மகாகவி பாரதியையும் புரட்சிக்கவி பாரதிதாசனையும் நான் கலைக்கூத்தன்
வடிவில் காணுகின்றேன்" என்றார் அன்றைய சென்னை பல்கலை கழக
தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.சஞ்சீவி அவர்கள்.
கலைக்கூத்தனின் 'மனிதனை நான் தேடுகின்றேன்' கவிதைகளை டி.எஸ்.எலியட்டின் 'the hollow man' கவிதைகளுடன் ஒப்பிடக்கூடியது என்கிறார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் திருக்குறள்மனி
க.த. திருநாவுக்கரசு.

பொங்கல் பற்றி எத்தனையோ கவிதைகள். ஆனால் இவர் போல
எழுதியவர் எவருமில்லை.
இதோ "பொங்கல் நாளை!" கவிதையிலிருந்து சில வரிகள்

முப்பாலைத் தந்தானின் பிறந்தநாளை
முகிழ்த்து வரும் செங்கதிரை வணங்கும்நாளை
எப்போதும் வயற்சேற்றில் உழன்ற மக்கள்
இன்பமெலாம் வீடுவந்து சேருன்நாளை
தப்பாமல் உடனுழைத்த எருதின் வாயில்
தளிர்க்கரும்பு சோறுபழம் ஊட்டும்நாளை
எப்போதும் வரவேற்போம் வாழ்த்துக்கூறி
எம்தமிழர் போற்றவரும் பொங்கல்நாளை!

செந்தமிழன் வீரமதைப் பகரும்நாளை
தென்னிலத்தார் மேன்மைகளை விளக்கும்நாளை
நந்தமிழன் வரலாற்றின் தொடக்கநாளை
நாகரிகம் முகிழ்த்தயினம் கண்டநாளை
எந்தவொரு சூழலிலும் மாசில்லாத
இயற்கை வழி கொண்டாடும் சிறந்த நாளை
வந்தவர்கள் கதைகட்டி ஏய்த்து மாற்று
வழக்கத்தைக் கொண்டுவந்து புகுத்தநாளை!

உருவவழிபாடு கண்ட சமுதாயத்தில்
ஒருக்காலும் குறைகூற முடியா வண்ணம்
பருவவழிபாடு கண்ட தமிழன் காலப்
பக்குவத்தைப் பகுத்தறிந்தே ஏற்றநாளை
மதங்கலவாத திருநாளை மனிதவாழ்வின்
மதிப்புயர்த்தும் பொன்னாளை அரியநாளை
விதவிதமாய்ப் பொங்கலிட்டுத் தமிழன் வாழும்
வீடெல்லாம் விருந்துமணம் கமழும்நாளை
இதமாக வரவேற்போம் இன்பநாளை
இசையாலும் தமிழாலும் போற்றும்நாளை!

நாமும்,
நன்றியுடன் வரவேற்போம்.
கவிஞனின் தமிழிசைத் தென்றலை. அந்த இசைத் தென்றலின்
ராகங்களை மீட்டிய இதயவீணைகளை.

Monday, February 4, 2008

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும் _

மும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு
இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய
இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் கலைக்கூத்தனின்
பாடல்கள்- குறுந்தகடு, எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசனின் வாழ்வின்

சுவடுகள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. இந்திய நகர மேயர்கள் கருத்தரங்கில்

கலந்து கொள்ள வந்திருந்த நெல்லை மாவட்ட மேயர்
ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

வழக்கம்போல மாலை 8 மணிக்கு என்று அழைப்பிதழில் போட்டு கூட்டம்
பொறுமையிழந்து காத்திருக்க 8.50க்கு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இனி, சீமானின் பேச்சிலிருந்து சிலத் துளிகள்:

பொறுமையிழந்து தவிக்கும் மக்கள் அரங்கைத் தன் கட்டுப்பாட்டுக்குள்

கொண்டுவர சீமான் பாட்டுப்பாட வேண்டி இருந்தது. விசில் சத்தமும்
கைதட்டலும் கட்டுப்ப்பாட்டுக்குள் வந்தவுடன் சீமான் தன் பாணியில்
இறங்கினார்.

> வாழ்த்துகள் திரைப்படம் 3 வாரத்திற்குள் பெட்டிக்குள் போய்விட்டது.
மக்களுக்கு படம் முழுக்கவும் தமிழிலேயே இருந்ததால் புரியவில்லையாம்!

> தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கும் மாநிலம் அல்ல, அது இங்கிலாந்துக்குள்

இருக்கும் ஒரு மாநிலமாக இருக்கிறது.

> வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்கிறான். எல்லோருக்கும் இடம்

கொடுத்தான் தன் மண்ணில். இப்போ எல்லோரும் இவன் மேலே ஏறி

மிதிக்கிறான்.

>பர்மா, பம்பாய், கர்நாடகம், கேரளா, இலங்கை இப்போ மலேசியா எல்லா

இடத்திலும் தமிழன் அடிப்பட்டுச் சாகிறான். இதிலே ஒரே ஒரு இடத்தில்தான்
தமிழன் திருப்பி அடிச்சான்! அவன் திருப்பி அடிச்சவுடனே எல்லாரும்

சொல்றான்..இது வன்முறை, தீவிரவாதம்னு.

> கங்கைக் கொண்டான், கடாரம் வென்றான்னு சொல்லிக்கிட்டே இருக்கியே
இன்னிக்கு உன் இனம் ராமேசுவரத்தில் குப்பறப்படுத்திருக்கே.. அனாதையா,
அகதியா..ஏன்?

> எங்கே போச்சு உன் வீரம்?

> சோறுதின்னாமா ரைஸ் தின்னா எப்படிடா உனக்கு சுயமரியாதை ஏற்படும்?

> நான் இவ்வளவு பேசிக்கிட்டிருக்கேன், அவன் "பாட்டுப்பாடு"னு கத்தறான்.
நீ விளங்கமாட்டே. உன்னை வெறிநாய் மாதிரி அடிச்சியே கொல்லப்போறான்.
இப்போ உனக்குப் பாட்டு கேட்குது.. அப்படித்தானே.. பாட்டுப் பாடறேன்
கேட்டுட்டு செத்துப்போ.!!

>உன் தோட்டத்திலே உன் மண்ணிலே காய்க்கிற இளநீரை நீ

வாங்கிகுடிக்கமாட்டே. உனக்கு கோக் குடிச்சாதான் பெருமை. சச்சின் 2 கோடி
ரூபாய் வாங்கிட்டு குடிக்கிறான். அட குடிக்கிற மாதிரி நடிக்கிறான். நீ
அந்தப் பூச்சி மண்டின பாட்டிலை வாங்கிக் குடிக்கிறே.

> உன் பாட்டன் செத்துப்போனதை அவன் சொன்னானு மத்தாப்பு கொளுத்தி
பலகாரம் சாப்பிட்டு தீபாவளினு கொண்டாடிக்கிட்டிருக்கியே.

> கடந்த காலத்தில் நீ சூத்திரன், நிகழ்காலத்தில் நீ அகதி..
நீ எப்போ தமிழனா இருந்திருக்கே.

> நீ எங்களை நாத்திகன்னு சொல்றியே , உண்மையில் பார்க்கப்போன நீதான்
நாத்திகன், உனக்குத்தான் உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லை. அட
உனக்கு உன் கடவுள் மீது நம்பிக்கை இருந்தா ஏன் கோவில் வாசலைப்

பூட்டிட்டு போறெ. உன் கடவுள் காலடியில் இருக்கிற உண்டியலுக்கு ஏன்
பூட்டு போட்டு பூட்டி வச்சிருக்கே.
உனக்கே உன் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் தானே.
தன் காலடியில் இருக்கும் தன் உண்டியலைக் காப்பாத்த வக்கத்த கடவுள்
இந்த ஊரெல்லாம் காப்பாத்தும்னு நம்புறியா?
ஊரெல்லாம் காப்பாத்தும் தாண்டவக்கோனே
உன் உண்டியலைக் காப்பாற்று தாண்டவக்கோனே

> நடு செண்டர் னு சொல்றே
ஓகே ரைட் சரினு சொல்றியே..
இது என்ன மொழி?

> சொந்தமொழி தெரியாதவன் முட்டாள்

> பிறமொழிகள் கற்க வேண்டாம்னு சொல்லலை. பிறமொழிகள் எத்துணை

வேண்டுமானாலும் கத்துக்கோ. ஆனால் அதெல்லாம் உன் வீட்டு

சன்னல்கதவுகளாக இருக்கட்டும். உன் வீட்டு நுழைவாயிலாக உன் தாய்மொழி

இருக்கட்டும்.

> நீ என்ன பண்றே.. உன் தாய்மொழியை உன் கழிவறைச் சன்னலாக

வச்சிருக்கியே.

சீமான் இதெல்லாம் சரிதான்.
உங்கள் பேச்சு உங்கள் சீற்றம் உங்கள் அடிமனசிலிருந்து எரிகின்ற
தீக்குச்சி..
ஒரு தீக்குச்சி எரியாமல்
தீப்பந்தம் எரியாது என்று நீங்கள் மேத்தாவின் கவிதை வரிகளைச் சொன்னது
மிகவும் சரிதான். "நான் நெருப்பு, புரட்சி தீக்குச்சி உரசலுக்காக காத்திருக்கிறது

என்று உங்களைப் பற்றிய உங்கள் சுயவிமர்சனம் மிகையானதும் அல்ல.

அன்றைய உங்கள் பேச்சில் நீங்கள் நரிக்குறவர்கள் குறித்து சொன்ன கருத்தை
மீண்டும் ஒரு முறை தீக்குச்சி வெளிச்சத்தில் பாருங்கள், அண்ணன் அறிவுமதி,
மற்றும் தோழர் சுப.வீ யிடம் கேட்டுப்பாருங்கள். அல்லது நரிக்குறவர்

இனவரைவியல் குறித்த ஆய்வுகளைக் (தமிழினிப் பதிப்பகம்

வெளியிட்டிருப்பதாக நினைவு) கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.

சீமான் எனக்குச் சின்னதா ஒரு சந்தேகம்.

உங்களை எப்படி அழைக்கவேண்டும்?
இயக்குநர் சீமான் என்றா?
அப்படி அழைத்தால் தான் கூட்டம் சேரும். அப்படி அச்சடித்தால்தான்
விழாக்கள் வெற்றி பெறும். அப்படியானால் உங்களுக்கிருக்கும் முகம்,
உங்களுக்கிருக்கும் அடையாளம், உங்களுக்கிருக்கும் முகவரி
திரைப்படத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
உங்கள் சீற்றம் எனக்குப் பிடித்திருந்தது. உங்களை உங்களுக்கான மேற்கண்ட
அடையாளங்களுக்கு அப்பால் ஒரு பகுத்தறிவு மனிதனாக, சொந்தமொழி மீதும்,
தமிழ் மண், தமிழ் உறவுகள் மீதும் எல்லையில்லாத பாசமும் அக்கறையும்

கொண்ட தமிழனாக மட்டுமே அடையாளப்படுத்த முடியவில்லையே என்பதில்
என்னைப் போன்றவர்களுக்கு வருத்தம் தான்.
நீங்கள் பேசிய கருத்துகளை, உங்களை விடவும் ஆணித்தரமாக

பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள்
யாரை அழைத்தாலும் அவர்களிடன் "ஆட்டோகிராப்" வாங்கவும் சேர்ந்து நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் எந்தத் தமிழனும் ஓடிவருவதில்லை.
இதெல்லாமே திரைப்பட முகவரி உங்களுக்கு கொடுத்திருக்கும்

அடையாளங்களால் கிடைத்த வெளிச்சம்.

மேலே சொன்ன இனமானக் கருத்துகளைச் சொல்லவும் இந்த மின்மினி
வெளிச்சங்கள் தேவைப்படுகிறதே.. இதுதான் தமிழனின் சாபக்கேடு.

இத்தனையும் பேசிய/பேசுகின்ற நீங்கள் இதற்கெல்லாம் காரணமானவர்களைப்

பற்றி ஏன் மவுனம் காக்கிறீர்கள்?

எய்தவன் இருக்க அங்கே அரங்கில் விசிலடித்த அம்புகளைக் கண்டு
ஏன் சீற்றம்?
ரஜினி என்ற நடிகரின் ஆதரவு/ கண் அசைவு எந்தப் பக்கமிருக்கிறது என்று
தலைமுதல் வால்வரை நம் தலைவர்கள் தலைகீழாக நின்று

தவமிருக்கிறார்களே! ஏன்?
ரஜினிகாந்த என்ற சினிமா நடிப்புத்தொழிலைச் செய்யும் ஒரு மனிதனை
"சூப்பர் ஸ்டாராக" உயர்த்திப் பிடித்திருப்பவர்கள் இந்த உள்ளீடு இல்லாத
வெறும் காகிதக் குப்பைகளா? உங்களுக்குத் தெரியும் யார் என்று?
ஆனாலும் உங்கள் தீக்குச்சிகள் வெறும் குப்பைகளைக் காகிதங்களை
மட்டுமே எரித்துக் கொண்டிருக்கிறது!
அதனால் எரிக்க எரிக்க குப்பைகள் வேகமாக பன்மடங்குப் பெருகிக்கொண்டும்
இருக்கிறது!

தீபாவளிப் பண்டிகைக் குறித்து நீங்கள் சொன்னதில் எனக்கொன்றும் கருத்து

வேறுபாடில்லை. என் "பெரியாரிஸ்டின் தீபாவளி" சிறுகதையை உங்கள்

பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு நடுவிலும் முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசிக்க :
http://www.thinnai.com/?module=displaystory&story_id=10412023&format=html

நம் தலைவர்கள் அவரவர்களின் குடும்ப வாரிசு தொலைக்காட்சிகளில் தோன்றி
தீபாவளி வாழ்த்து சொல்வதைக் கண்டித்து சின்னதாக தமிழ்நாட்டில்
ஓர் அறிக்கை வெளியிட்டுப் பாருங்களேன்!

தீக்குச்சிகள்
எரித்த காகிதக் குப்பைகள்
எரிந்து கொண்டே இருக்கிறது
தீப்பந்தம் எரிவதாக
கனவுகளில்
தீக்குச்சிகள்.
புரட்சி வந்துவிடும்
காத்திருக்கிறது
தீப்பெட்டி.
ஒவ்வொரு குச்சியாக
எரிந்து முடிந்து
காலியவதற்குள்
விழித்துக்கொள்ள வேண்டும்
தீப்பெட்டிகள்.
நம் மண்ணை
நம் மனிதர்களைக்
குப்பைகளாக்கிய
கோமாளிகளின்
கூடாரங்களை
கூண்டோடு அழிப்பதற்கு.

தாள் பொறுக்கும் தமிழச்சியாக
தமிழகம்
அரபிக்கடலோரம் வீசி எறிந்த
இந்திய அகதிகளின்
முகாமிலிருந்து
உங்கள் தீக்குச்சி உரசலில்
எரியும் காகிதக்குப்பைகளுக்கு நடுவில்
எரியக் காத்திருக்கும் தீப்பந்தம்..

--------புதியமாதவி, மும்பை.