Monday, May 23, 2016

புரட்சிதலைவி முதல் "அம்மா" வரை

 
புரட்சிதலைவி , "அம்மா" ஆனது தற்செயலானதா?
அல்லது திட்டமிடப்பட்டதா..?

எம் ஜி ஆர் அவர்களை புரட்சிதலைவர் என்று கொண்டாடியவர்கள்
செல்வி ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்று கொண்டாடினார்கள்.
புரட்சிதலைவர் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் சொல்
புரட்சிதலைவி.
புரட்சிதலைவி இன்று "அமமா" என்றழைக்கப்படுகிறார்.
அம்மா என்று கொண்டாடப்படுகிறார்.


எம் ஜி ஆரால் அரசியலுக்கு அறிமுகமானவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக எம் ஜி ஆருக்குப் பின்
அதிமுக தொண்டர்கள் ஜெ வை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று எம் ஜி ஆர் என்ற பிரம்மாண்டத்தையும் தாண்டி
ஜெ என்ற "அம்மா" தன் தடம் பதித்திருக்கிறார்.
ஓர் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சி அமைத்திருக்கிறது தமிழகத்தில்.
எவ்விதமான அனுதாப அலையோ அதிர்ச்சி அலையோ
இல்லாமல் தமிழக அரசியலில் இதை சாதித்துக்காட்டி
இருக்கிறார் ஜெ.
அவர் கடந்து வந்தப் பாதை..
ஒரு பெண்ணின் அரசியல் வெற்றி..
அவ்வளவு எளிதானதாக அவருக்கு வாய்க்கவில்லை.

அதிகம் படித்தப் பெண்கள், வாசந்தி போன்ற எழுத்தாளர்கள் கூட
ஜெ பற்றி சொல்லும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனையின்
வெளிப்படாகவே இருக்கின்றன.

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த
ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண்
நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள்
கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும்
 என்ற ஆணாதிக்க மரபு சிந்தனைதான் வாசந்தி அவர்கள் ஜெ குறித்த சொன்ன
அந்த விமர்சன வரிகள்..
(She , (ஜெ)  wants to project herself as the Immaculate Virgin. She is Amma.)
(இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்)


மக்கள் திலகம் எம்ஜியாரின் அரசியல் வாரிசு, எம்ஜியார்
விரும்பிய பெண், ஏம் அவருடைய காதலி.. , சின்னவீடு..
.. இப்படி ஏதோ ஒன்றாகத்தான் ஜெ ஆரம்பகாலங்களில்
பெண்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும்
விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது,
அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த
ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது.
அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக
ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட
எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது
கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக
இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட
மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில்
யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு
 கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த
மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம்,
ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
 மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான
உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை
என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா?
 என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது.
 இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில்
 எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள்,
 குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட
அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்
நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ.
மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.


புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட
 புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன்
ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில்
 அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில்
ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன.
அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி.
இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன்
 ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத
ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.
அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.!

இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக
வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.

புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன்
 உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும்
வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின்
தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார்.
ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு
 வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும்
அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய
இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார்.

 என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே
இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட
 தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில்
 ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல்
அவருக்கு ஒரு கவசமாக இருந்தது.
அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள
 அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.


தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி,
திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி,
தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள்
என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில்
திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது.
இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின்
அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட
 பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள்.
அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள்.
அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு
வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார்.
அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார்.
அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின்
இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார்
இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும்
மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு
நீண்ட நெடிய வரலாறு, மரியாதைக்குரிய இடம் உண்டு.

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.
தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும்
 அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி,
 குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா…
இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை.
தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை,
அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை
ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது,
இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே
மறைந்துவிடுகின்றன.
ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.

அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக
மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில்
காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த
உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும்
திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்
“அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது.
 நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில்
 நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார்.
ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான
ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.
இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும்
 இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது
என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ
என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று
ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும்
 இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில்
 பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள்.
தமிழக உணர்ச்சி அரசியலில் "அம்மா" என்ற ஆயுதம்
அதை மிக வலுவாக செய்து காட்டி இருக்கிறது.
ஜெ வின் ஓட்டுவங்கியில் பெரும்பான்மையாக இருக்கும்
பெண்களுக்கு "ஜெ" வின் கடந்தகாலமோ அல்லது
ஜெ குறித்த கதைகளோ பேசப்படுவது கண்டு அவர்மீது
வெறுப்பு வருவதில்லை. மாறாக அவர்மீது அனுதாபம்
ஏற்படுகிறது. ஜெ மீது அவதூறுகள் சுமத்தப்படும் போதெல்லாம்
அப்பெண்கள் "அம்மா" என்ற பிம்பத்தின் மீது விழும்
எச்சிலாகவே அதைப் பார்க்கிறார்கள். துப்பியவனைக் கண்டிக்கவும்
தண்டிக்கவும் தங்களுக்கு தெரிந்த ஏதொ ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.

ஜெ என்ற பெண்ணை ஒரு பெண் என்ற பால் அடையாளம் தவிர்த்து
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, தமிழத்தின் முதல்வராக மட்டுமே
விமர்சிக்க வேண்டும். அப்படியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை
மட்டுமே இனி எதிர்காலத்தில் சிலரின் அரசியல் வாழ்வுக்கு
துணை நிற்கும்.

ஓர் அரசியல் சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "அம்மா"விடமிருந்து
ஆக்கப்பூர்வமான மக்கள் ந்லத்திட்டங்களை, செயல்பாடுகளை
எதிர்பார்க்கிறார்கள் அவ்ருக்கு ஓட்டுப்போட்டவர்களும் ,
என்னைப் போன்றவர்களும்.

No comments:

Post a Comment