Monday, July 30, 2018

பெரியோரை வியத்தலும் இலமே..




சமூகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழ்ந்த ஒருவர்
தன் மூப்பு அதன் காரணமாக ஏற்படும் உடல் உபாதைகள்
நிமித்தம் மருத்துவமனையில் இருக்கும் போது..
அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கவலையில்
இருக்கும் போது..
அத்தருணம் அந்த தனிப்பட்ட நபர் குறித்த செயல்பாடுகளை
விமர்சிக்கும் நேரமல்ல. இதையே அந்த நபர் விமர்சனத்திற்கெல்லாம்
அப்பாற்பட்டவர் என்று எடுத்துக் கொள்வதும் தவறு.
நாகரீகம் அனைவவருக்கும் உண்டு. ஆனால் நயத்தக்க நாகரீகம்
தமிழர் பண்பாட்டின் ஆகச்சிறந்த கொடை என்பது என் கருத்து.
இத்தருணத்தில்  அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம்
பதில் சொல்லி நியாயப்படுத்திவிடுவது அறமல்ல.


அவர்களின் கருத்துகளை
அவர்கள் பக்கத்தில் பதிவதற்கு அவர்களுக்கு 
எந்தளவுக்கு உரிமையுண்டோ
அதே உரிமை அப்பதிவை public வாசிக்கலாம் 
என்று அறிவிக்கும் போது
அதை வாசிப்பவர்களுக்கும் கருத்து சொல்லும் 
உரிமையை அப்பதிவு
தன் உரிமையுடன் சேர்த்தே பதிவு செய்திருக்கிறது என்பதை 
பலர் உணர்வதில்லை
தன்னுடைய பதிவை கருத்தை வரவேற்று
கொண்டாடும் கூட்டத்திற்கு நடுவில் ஓரிருவர் 
அக்கருத்தை தெளிவான
கருத்துகளுடன் எதிர்கொண்டால்
கவனிக்க வசைச்சொல் இன்றி கருத்தை
கருத்தால் எதிர்கொள்வது
உடனே விமர்சனம் செய்தவரை பிஜேபி என்றும்
துரோகி என்றும் இனப்பற்று இல்லாதவன் என்றும்
இன்னும் ஒரு படி மேலே
ஏறி அரசியல் அறியாதவர் என்றும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளும்
வாசகங்கள் அண்மையில் அதிகரித்திருக்கின்றன.
இன்னார் இன்னாரைப் இந்த வாசகத்தை 
இத்தருணத்தில் சொன்னார் என்பதை
எதிர்காலம் மறந்துவிடும். ஆனால் சொல்லப்பட்டவை
சொல்லப்பட்டவையாக அப்படியே எடுத்துச் செல்லப்படும்.

உண்மையை எழுதுங்கள். உங்கள் அனுபவத்தை எழுதுங்கள்.
அரசியலை எழுதும் போது ஆதாரங்களுடன் எழுதுங்கள்.
மன எழுச்சியில் எழுதும் அரசியல் விமர்சனங்கள் 
ஆபத்தானவை. எழுதுபவருக்கும் எழுதப்படுபவருக்கும் கூட
ஆபத்தானவை தான்.
சூதர்களின் பாணர்களின் வாய்மொழியில் போற்றப்பட்ட
புராண இதிகாச தலைவர்களின் காலம் அல்ல நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

பிகு: கலைஞர் அவர்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு
நெருக்கமானவரோ அதைவிட அதிகமாக எனக்கும்
நெருக்கமானவர். எம் தந்தையர் வாழ்க்கையின் எச்சமாக
இருப்பவர். என்னைப் பற்றி அறியாதவர்களுக்காக இதையும்
சேர்த்தே எழுதியாக வேண்டி இருக்கிறது. 


Saturday, July 28, 2018

கேன்சர் டிரெயின் ..


IRADA … ECO THRILLER மட்டுமல்ல.
இது கேன்சர் டிரெயின் கதை,
நாம் வாழும் காலத்தில் நாம் திரும்பிப் பார்க்காத
நிஜம். இவர்கள் நம் தேசத்தில் தான் வசிக்கிறார்கள்.
இன்று பஞ்சாப்.
நாளை தமிழகமும் இருக்கலாம்.
கேன்சர் டிரெயின் இமயம் முதல் குமரி வரை
ஓடி ..
இந்திய இறையாண்மையைக் காப்பாற்றிவிடலாம்.
நசுரூதின் ஷா (நான் விரும்பும் நடிகர்)
நடித்தப் படம் என்பதால் பார்த்தேன்.
ஒரு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து.
அதைப் பற்றி ஆய்வு செய்வதற்கு வருகிறார்
அர்ஷர் வர்சி. இருவரின் நடிப்பும் அபாரம்.
இராசயணக் கழிவுகளை நிலத்தடியில் விடுகிறது
தொழிற்சாலை. பூமியின் மடியே நச்சாகிவிடுகிறது.
விளைவு.. இன்று அந்த மக்கள் கேன்சர் டிரெயினின்
பயணிகள்..
…..
இப்படம் பார்த்தவுடன் சினிமா என்று எண்ணி கடந்து
வந்துவிட முடியவில்லை. காரணம் இத்திரைப்படம்
உண்மையான கதைகளின் சாரம் என்று இத்திரைப்படம்
வெளிவந்தவுடன் வாசித்தது இரவெல்லாம் என்னைத் தொந்தரவு
செய்தது. அதிகாலையில் (இந்தியாவில் இப்போது இரவு8.30)
எழுந்தவுடன் இந்தியாவில் எதுவும் கேன்சர் டிரெயின் ஓடிக்
கொண்டிருக்கிறதா அல்லது இக்கதையில் அப்படியான ஓர்
ஆபத்து வந்துவிடும் என்று காட்டுகிறார்களா என்று அறிவதற்காக
கூகுள் அகராதியில் தேடினேன். கேன்சர் டிரெயின் கதையல்ல.
நிஜம். பஞ்சாப் மா நிலம் பசுமைக்கும் அம்மக்களின் உழைப்புக்கும்
பெயர்போனது. அந்த பூமி இன்று நோயாளிகளின் கல்லறையாகி
விட்டது. நாம் வாழும் காலத்தில் நம் தேசத்தில் தான் இதுவும்
நடந்து கொண்டிருக்கிறது. எவனும் இதைப் பற்றிப் பேசுவதில்லை.
எந்தக் கட்சிக்கும் இதைப் பற்றி பேச நேரமில்லை.
கேன்சர் நோயாளிகள் இந்த டிரெயினில் இலவசமாகப்
பயணம் செய்யலாம் என்ற சலுகையை வழங்கிவிட்டதுடன்
அரசியல்வாதிகளின் கடமை முடிந்துவிட்டது.



Thursday, July 26, 2018

இராமன் எத்தனை இராமனடீ..


கேரளாவில் மார்க்சிஸ்டுகளின் இராமாயணமாதம்,
காங்கிரசும் கொண்டாடப்போகிறது இராமாயண மாதத்தை..
என்னடா திடீர்னு இராமாயண கொண்டாட்டங்கள்
என்று கேட்டால்..
எதிரணிக்கு எதிராக என்று சொல்லுகிறார்கள்.
நம்பத்தான் வேண்டும்.  

இராமாயண பண்டிதரான .கே.இராமானுசரின் ஒரு நூலுக்கு 
முன்னூறு இராமயணங்கள்என்று பெயர்
எத்தனை இராமயணங்கள் உள்ளன. முன்னூறா, மூவாயிரமா?’ 
என்ற கேள்வியோடு அந்த நூல் துவங்குகிறது
ஆயிரக்கணக்கான இராமாயணங்கள் உள்ளன.
அவை யாவும் வால்மீகி இராமாயணத்தின் பாடபேதங்கள்
அல்ல என்றும், அவை சுதந்திரமான கதைகள் என்றும் கூறப்படுகிறது.
இராமாயணம் என்பது வால்மீகி, துளசிதாசு, கம்பர், எழுத்தச்சன்
ஆகியோரின் மட்டும் படைப்பல்ல
அது ஆயிரக்கணக்கான பாடங்களின் தொகுப்பு
இராமாயணத்தின் ஒரு நிகழ்வுகூட நிரூபிக்கப்பட்டதல்ல
எல்லாவற்றிலும் பாடபேதங்கள் உள்ளன.
தாய்லாந்தின்இராமகியேனா’(இராமகீர்த்தி) எனும் இராமயணத்தின் 
கதை நடந்தது, தாய்லாந்தில். சீதையும், இராமனும் அங்குள்ளவர்கள்தான்
இராமனும், இராவணனும் சகோதரர்கள்
தாய்லாந்தின் இன்றைய அரசகுலமான சாக்ரி இனத்தின் 
நிறுவனரான ப்ராபுத்த சோட் பாசூலாஉலகமகா மன்னன்’ 
எனும் பெயர் பெற்றவர். அவரது பதவிமுதலாம் இராமன்என்பதாகும்.
இன்றைய இலங்கைக்கு வால்மீகி இராமாயணத்தின் இலங்கையோடு 
தொடர்பில்லை என்றும், வால்மீகி இராமாயணத்தின் இலங்கை 
மத்திய பிரதேசத்தில்தான் என்றும், வால்மீகி விந்திய மலைகளுக்கு
அப்பால் உள்ள தென் இந்தியா குறித்து எதுவும் தெரியாது எனவும் 
வரலாற்று ஆசிரியர் சங்காலியா கூறுகிறார் அசாமீசு, சைனீசு
வங்காளம், கம்போடியன், குசராத்தி, யாவானீசு, கன்னடர், காசுமீரி
கோட்டனீசு, லாவேசியன், மலேசியன், மராத்தி, ஒரியா, சமத்கிருதம்
சிங்களீசு, தமிழ், தெலுங்கு, தாய், திபத்தியன் ஆகிய அநேக மொழிகளில் 
இராமகதை உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மாறுபட்டவை

மும்பை பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருந்த தோழர் அருண் காம்ப்ளே
எழுதிய இராமாயணம் புத்தகம்  மராத்திய மா நிலத்தில்
மிகவும் முக்கியமானது.
(Ramayanatil Samskrutik Sangharsh"- (Cultural Struggle in Ramayana – 
Critical study of Ramayana)
தமிழர்களுக்கு கம்பராமாயணம் தான்.
இதை இன்றளவும் பாதுகாப்பதில் கம்பன் கழக சொற்பொழிவுகளும்
பட்டிமன்றங்களும் கூட பெரும் பங்காற்றுகின்றன.
இதில் மார்க்சிய இராமாயணம் .. என்னவாக இருக்கும்?
அயோத்தி இராமனுக்கு எதிராக இவர்கள்  முன்வைக்கும் இராமன் யார்?




Monday, July 23, 2018

களவாடிய கவிதை




நம்மைத் திருடுகிறார்கள்.
நம் எழுத்துகளை
அவர்கள் திருடிக்கொண்டே இருக்கிறார்கள்.
திருடுவது எளிது.
அதைவிட எளிது 
திருடியதை எழுதி பிரபலமாகிவிடுவது.
யார் முதலில் எழுதியது 
யாரை யார் திருடினார்கள்
என்பதெல்லாம் 
பொற்றாமரைக் குளத்தின் ரகசியங்களாய்
சூரிய வம்சத்தின் ஆட்சிக்குட்பட்டதாய்
பாதுகாக்கப்படுகின்றன.
திருடுகிறவர்களுக்கு நம் எழுத்துகளின் சொல் 
ஒரு சப்தம்.
சொல்லகராதியின் நகல்.
அவர்களால் சொற்களைக் கொண்டே
சொற்களைக் கட்டுடைக்கும் நம் அரசியலின்
ஒற்றைப்புள்ளியைக் கூட 
உயிர்ப்பித்துவிட முடியாது.
ஆயுத எழுத்துகளை அர்த்தமுள்ளமாக்குவது
வெறும் புள்ளிகள் மட்டுமல்ல.
அதையும் தாண்டிய குருஷேத்திரம்.
தோழி..
உன் வாழ்க்கையை நானும்
என் வாழ்க்கையை நீயும்
வாழ்ந்து விட முடியாது.
பசாங்குகள் நமக்குத் தெரியும்.. 
முக நூல் திருடர்களின் முகமூடி.
களவாணிகளின் பண்டமாற்றும்
கூட்டாளிகளின் விற்பனைத் தந்திரங்களும்
நீயும் நானும் அறியாதது அல்லவே!

அவர்களிடம் சொற்களின் உறவுமுறைகளைக் கேட்டுப்பார்.
களவாடியதை உறவு கொண்டாட முடியாமல்
கள்ள உறவிலும் கைப்பற்ற முடியாமல்
அவர்களின் அடியாட்களைக் கொண்டு
உன்னை  மிரட்டுவார்கள்
மிரட்டினால் பணியவில்லையா
இருட்டில் அடைப்பதும் விலக்கி வைப்பதும்
அவர்களின் மனுதர்மம்.

சொற்கள்..
எதுகையும் மோனையும் தேடி அலைவதில்லை.
சொற்களில் வாழ்தல் என்பது
சொற்களைத் தாண்டிய உயிரின் தேடல்.
உன்னை உன் மாதவியைத் திருடியவனுக்காக
பொற்கைப் பாண்டியன் தண்டனைக் கொடுக்கப்போவதில்லை.
உன்னிலிருக்கும் உன்னை 
வெறும் சொற்களுக்குள் அடைத்துவிட முடியாது
எனதருமைத் தோழியே..
சொற்கள் அவர்கள் வாசலில் தற்கொலை
செய்து கொண்டன.
அவர்கள் செத்தப் பிணத்தைத் தூக்கிச் சுமக்கிறார்கள்.
சுடலை ஆண்டவன்.. நம் சொக்க நாதன்
 சொர்ணவல்லிகளைப் புணர்வதில்லை.
ஓம் நமசிவாய.
கொற்றவை அணிந்திருக்கும் மாலையில்
மண்டையோடுகள் சிரிக்கின்றன.

(களவாணிகளுக்கு சமர்ப்பணம்)




Thursday, July 19, 2018

ஶ்ரீ லீக்ஸ்

ஶ்ரீ லீக்ஸ்
ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும் 
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டி சொன்னது சமூகப்பிரச்சனை அல்ல,
அவர் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தும்
போராட்டங்களைத் திசை திருப்பி மஞ்சள் பத்திரிகை
ரேஞ்சுக்கு கவன ஈர்ப்பு செய்கிறார் என்ற குற்றச்சாட்டை
சிலர் வைக்கிறார்கள். இது ஶ்ரீ லீக்ஸ் காட்டும் ஒரு பக்கம்
மட்டும் தான். ஒரு வேளை அவருக்கு படுக்கையறை
பண்டமாற்றுக்குப் பின் சினிமா வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்
இப்பிரச்சனையே எழுந்திருக்காது, அவர் ஏமாற்றப்படவில்லை,
அவர் செய்தது வெறும் சதைப் பண்டமாற்று என்று பார்ப்பவர்கள்
அந்தப் பண்டமாற்று சந்தையின் சில முகங்களைப் பார்க்க
மறுக்கிறார்கள், அல்லது விரும்பவில்லை.
ஶ்ரீ ரெட்டி வைக்கும் குற்றச்சாட்டுகளின் இன்னொரு பக்கம்..
அப்படியானால் சினிமா உலகில் சதைப் பண்டமாற்று
நடந்தால் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றனவா?
இது வரை வாய்ப்புகள் பெற்று முன்னுக்கு வந்திருக்கும்
பிரபலங்கள் இதைக் கடந்து வந்திருக்கிறார்களா
இல்லையா?
மிஷ்கின் போன்ற திரைப்பட இயக்குனர்கள் ரேப் செய்துவிடுவேன்
என்று “பேரன்புடன்” மம்முட்டியைப் புகழ்வதற்கு தேர்ந்தெடுத்த
ஆகச்சிறந்த புகழுரையை மிஷ்கின் என்ற தனி நபரின் பார்வையாக
கடந்து சென்றுவிட முடியுமா..? 

பெண்கள் தெரிந்தே சதைப் பண்டமாற்று செய்துவிட்டு அதன் பிறகு
ஆண்களைக் குற்றம் சொன்னால் , இவளைப் பற்றித் தெரியாதா..
இது நடக்கலைனு இவ இன்னிக்கு குற்றம் சொல்ல வந்துட்டா
என்று சொல்ல ஆரம்பித்தால் இந்த வலையில் விழுந்த
எந்த மீன்களும் தண்ணீருக்காக துடிப்பது சமூகக் குற்றமாகிவிடும்
ஆபத்து உண்டு.
11 வயது ஊடல் ஊனமுற்ற பெண் குழந்தையை இளைஞன்
முதல் கிழவன் வரை பயன்படுத்திக் கொண்டிருக்கும் சமூகத்தில்
வாழ்கிறோம் நாம். ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல
பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து
சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கும்
சதை வியாபாரிகளைப் பற்றிய ஒரு சமூகப்பிரச்சனை.
ஶ்ரீ ரெட்டியின் கற்பை உரசிப் பார்த்து சோதிக்கும்
தூய்மைவாதிகள் பத்தினிகள் மட்டுமே பேச வேண்டிய
கற்பு வாத பிரச்சனையாக்கி இதை திசை திருப்புகிறார்கள்
ஶ்ரீ ரெட்டியின் சில வரிகள்:
பெண்களுக்கு சுத்தமாக பாதுகாப்பு இல்லாத இடம் தெலுங்கு
 திரையுலகம். பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும் 
நடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் படுக்கைக்கு
 செல்ல வேண்டியதாக உள்ளது. 
தெலுங்கு பெண்கள் கருப்பாக இருப்பதால் 
அவர்களை ஹீரோயினாக்குவது இல்லை.
தெலுங்கு நடிகைகளை நடிக்க வைத்தால் ஷூட்டிங் 
முடிந்ததும் வீட்டிற்கு சென்றுவிடுவார்கள்.
 வெளிமாநில நடிகைகளை நடிக்க வைத்தால் 
அவர்கள் ஷூட்டிங் முடிந்த உடன் ஹோட்டலுக்கு
 செல்வார்கள். அங்கு அவர்களுடன் உல்லாசமாக 
இருக்கலாம் என்பதால் வெளிமாநில நடிகைகளை
 அதிக அளவில் நடிக்க வைக்கிறார்கள் என்றார்  ஶ்ரீ ரெட்டி.
Show More Reactions

Tuesday, July 17, 2018

தாலிப்பனை



தாலிப் பனை பூத்துவிட்டது..
யுகம் யுகமாய் காத்திருந்தப் பின்
தாலிப்பனை பூத்துவிட்டது
முதல் பூவே, கடைசி பூவாய்
தாலிப்பனை பூத்துவிட்டது.
எனக்காக அவன் நட்டுவைத்திருந்த
தாலிப்பனை பூத்துவிட்டது.
யுகங்கள் கடந்துவிட்டன.
அவன் வர வேண்டிய நேரமிது.
அவன் தலைமுடியும் பாதமும் தேடி
அலைந்தவர்கள் திரும்பிவிட்டார்கள்.
தாலி பனை பூத்துவிட்டது.
தோலுரித்த பாம்பை போல
சுருண்டு படுத்திருக்கிறாள் அவள்.
மேகம் இருண்டு மலைகள் பிளக்கும் ஓசை.
மத நீர் வழியும் களிறுகள்
அவளை அசைக்கின்றன.
புத்திரர்கள் வாரிசுகளுடன் வரிசையாக
காத்திருக்கிறார்கள்.
குமாரத்திகள் புறப்பட்டுவிட்டதாக
செய்திகள் வருகின்றன.
அவள் கவிதைகள் மவுனத்தில் உறைந்து
கனமாகிவிடுகின்றன.
அவள் பாடல்களை இசைத்தப் பாணர்களும்
விறலியரும் காந்தரப்பண் இசைக்கிறார்கள்.
கண் விழிக்காமல் படுத்திருக்கிறாள்..
தாலிப் பனை பூத்துவிட்டது
ஒற்றை பூவிதழை தோழி எடுத்துவருகிறாள்.
யுகங்களாக காத்திருந்தவள்
கடைசியாக கண்திறக்கிறாள்.
தாலி பனை பூத்துவிட்டதை
பூவின் வாசனையும் தோழியின் முகமும்
சொல்கின்றன.
அவன் குலச்சின்னங்கள் எழுதிய
தாலியுடன் அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவன் வந்துவிடுவா னா.
கொற்றவை மணல் காட்டில் மழைத்துளிகள்.
கனவோ.. கற்பிதமோ
ஓம் நமசிவாய..
ராஜ நாகங்கள் ஆடுகின்றன.

Friday, July 13, 2018

கலிங்கத்துப் பரணி






படைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில்
அவள் பிரபஞ்சம்
நிலவு வானம் மலர் மாங்கனி
அவளை உங்கள் கண்களால்
பார்த்துக்கொண்டதற்கு
அவள் பொறுப்பல்ல.
அவளுடைய இன்னொரு முகம்
கொலைமுகமாக உங்களைப் பயமுறுத்துகிறது.
கழுத்தில் மண்டையோட்டு மாலையைப் போட்டு
கையில் சூலாயுதம் கொடுத்து.
நாக்கை நீட்டித் தொங்கவிட்டு..
நடுக்காட்டில் நிறுத்திவிட்டீர்கள்.
குருதியின் வாடை
நாய்களின் ஓலக்குரல்
பாலைவெளி எங்கும் அவள் வழித்தடம்
வெயிலையே நீராகக் குடித்து குடித்து
வெந்து தணிகிறது அவள் வேட்கை.
ஐம்படைத் தாலிகள் அறுபடுகின்றன.
வேல்முனையை முத்தமிடுகிறாள்.
குருதி வழியும் பீடத்தில்
ஒவ்வொரு பூக்களாக உதிர்கின்றன.
கலிங்கத்துப்  பரணியின் கதவுகளை
களிறுகள் கொண்டு உடைக்க நினைக்கிறான்
ஒட்டக்கூத்தன்.

Tuesday, July 10, 2018

ராஷி.. RAAZI .. உண்மைக்கதை..


ராஷி.. RAAZI

இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் 
உண்மைக்கதை.
1971 இந்திய பாகிஸ்தான் போர்க்களத்திற்கான பின்னணி ஆய்வு.
பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க
பாகிஸ்தானின் இராணுவ அதிபதி வீட்டுக்கே
 திட்டமிடப்பட்டு மருமகளாக மணமுடித்து
சென்ற இந்தியப் பெண்ணின் கதை. 

ஹரிந்தர் சிக்க 2008ல் எழுதிய நாவல் “CALLING SEHMAT” . 
அந்த நாவலில் உண்மையான
அவளின் அடையாளம் புனைவுகளுக்குள் பொதிந்து 
வைக்கப்பட வேண்டும் என்பதே
பலரின் வேண்டுகோளாக இருந்தது
அப்புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்த காஷ்மீரின்
பரூக் அப்துல்லா முதல் அப்பெண்ணின் முதல் காதலாக இருந்த 
அபிநவ் வரை..
(டில்லி பல்கலை கழகத்தில் அவளுடன் படித்தவர்)
அவளை அப்படியே அடையாளம் காட்டுவதை 
விரும்பவில்லை. அவள் கற்பனை அல்ல.
அவள் நிஜமாக வாழ்ந்தப் பெண்

அதுவும் சமீபத்தில் தான் இறந்துவிட்டார்.
இத்துணை பின்பிலத்துடனும் RAAZI 
திரைப்படத்தைப் பார்க்கும் போது 
ஒவ்வொரு காட்சியும் அதன் வசனங்களும்
மிகையில்லாத நடிப்பும்.. 
அதிலும் குறிப்பாக இந்திய உளவுத்துறை/இராணுவத்திற்காக 
வேவு பார்த்த கதாபாத்திரத்தில் நடித்த 
நடித்த அலிய பட், அவள் மணமுடித்த 
பாகிஸ்தானிய இராணுவ வீரன் விக்கி குஷால்..
இதில் விக்கி குஷாலின் நடிப்பும் வசனமும் கத்தி மேல் நடப்பது போல.
கொஞ்சம் பிசகினாலும்தேசத்துரோகிபட்டம் தான்
கதைக்கும் கதையைப் பார்ப்பவர்களுக்கும் கூட கிடைத்துவிடும்
 . ஆனால் கதையை நகர்த்தி சென்றிருக்கும்
விதமும் அளவான மிகவும் கவனமாக கோர்த்திருக்கும் வசனங்களும் .. 
என்னை மிகவும் கவர்ந்தவை.
பாகிஸ்தானியர்கள் என்றாலே வில்லன் வேடம்
எதிர்மறை கதாப்பாத்திரம் என்ற
ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
அதிலும் இந்தியப்பெண் பாகிஸ்தான்
இராணுவ தளபதியின் வீட்டுக்கு போகிறாள். இராணுவ தளபதியின் மகனை
மணக்கிறாள்.. திட்டமிடப்பட்டே எல்லாம் நடக்கிறது
பாகிஸ்தானின் அவர்கள்
வீட்டில் அவள் வாழ்க்கை
அவளை அவர்கள் எதிர்கொள்ளும் மன நிலை
கணவனின்  கம்பீரம்,
 முதலிரவு என்றவுடனேயே பசித்திருக்கும் புலியைப் போல பாயாமல்
காத்திருக்கும் ஆண்மை… 
கதையின் போக்கில்  காட்டப்படும் அவனுடைய பண்பட்ட நாகரிகம்,
பெண்மையை மதிக்கும் குணம்.. 
கூட்டுக்குடும்பத்தின் பாசமும் நேசமும்..
பிரிவினைக்கு முந்திய உறவைத் தொடர
இந்திய மண்ணிலிருந்து பெண்ணைத் தேடி
மணமுடிக்கும் இராணுவதளபதி
எல்லாம் முடிந்தப் பின் … 
அவள் யார் , அவள் இந்தியாவுக்காக அங்கிருந்து செய்ததெல்லாம்
தெரிய வர அவள் தப்பித்து வரும் காட்சி
அவளை அங்கேயே முடித்துவிட நினைக்கும்
இந்திய உளவுத்துறை.. அதிலும் தப்பித்து வந்து.. 
அவள் கேட்பாள் பாருங்கள்
ஒரு கேள்வி… , 
ஏன்.. ஏன் .. இதெல்லாம் செய்றீங்க!’ 
அவள் உடைந்து அழும்போது அக்கேள்வியின் கனம்
நம்மீது பாறாங்கல்லாக இறங்கும்.
அதே நேரத்தில் அவளைக் குற்றவாளிக்கூண்டில் 
பாகிஸ்தானில் இருக்கும் அவள்
கணவர் குடும்பம்…. பாகிஸ்தானிய இராணுவதளபதி.. 
ஒரு இந்தியப் பெண்.. அதுவும்
ஒரு சின்னப்பொண்ணு.. நம்ம வீட்டுக்கே வந்து இவ்வளவும் 
செய்திருக்கா.. அவளை!”
கர்ஜிக்கும் போது.
.”அப்பா.. நாம் என்ன செய்கிறோமோ அதைத்தானே அவளும்
அவள் நாட்டுக்காக செய்தாள்என்று மெல்ல சொல்லும் அவர் மகன்
அதாவது
இந்தியப் பெண்ணின் கணவன்.
. இந்த இடத்தில் கதையும் கதைப்பாத்திரமும்
கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும். i respect you iqbal.
I love you Sehmat.


வெளியில் தெரியாத பலரின் கதைகளில் இதுவும் ஒன்று.
இப்படி எல்லாம் நடக்கிறது.. நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எனக்கும் பாகிஸ்தானில் தோழி ஒருவர் உண்டு.
அவரை நான் வங்கதேசத்தில் HOPE FOUNTATION’ ல் நடந்த
CERI conference ல் சந்தித்தேன். அதன் பின் சில காலம் தொடர்பில்
இருந்திருக்கிறேன். வங்க தேசத்தில் ஒரு ஓவியரும் முன்னாள் நீதிபதி
ஒருவரும் நண்பர்களாக இருந்தார்கள். மா நகரக்கவிதா மும்பை 
 நிகழ்வு மூலமாக அறிமுகமானோம்.
இதெல்லாம் கடந்தக் காலமாகிவிட்டது.  வேறு வழி??!


Monday, July 9, 2018

இதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்


136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 
133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில்.
மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள்.
இந்திய காவல்துறை அதிகாரிகளுக்கான
 பயிற்சி வகுப்பு ஹைதராபாத்தில் இருக்கும்
சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகடெமியில் 
நடைபெறுகிறது. 
2018ல் நடைபெற்ற தேர்வின் முடிவுகள் தான் இது.
Only three of 136 IPS officers clear exams
08 Jul 2018
133 of 136 IPS-officers fail exams, but still in service
அதுவும் 45 வாரங்கள் பாடம் சொல்லிக் கொடுத்து 
ப்ராக்டிகல் வகுப்பு நடத்தி..
ரிசல்ட் இப்படி வந்தால் என்ன செய்யமுடியும்?!
எனவே மூன்றுமுறை தேர்வு எழுதி பாஸ் செய்யலாம்
என்று சலுகை இருக்கிறது. 
3 தடவையும் எழுதி பாஸ் செய்யலைன்னா 
என்ன செய்வார்கள் என்று தெரியாது.
சரி அப்படி என்ன தான் கேள்விகேட்டு நம்ம போலீஸ்
 அதிகாரிகளைத் திணறடிக்கிறார்கள் என்று பார்த்தால்..
கேள்விகள் ..இந்தப் பாடங்களிலிருந்து தான் 
கேட்கப்படுகிறதாம். 
Indian Penal Code (IPC), Criminal Procedure Code (CrPC), 
Evidence Act and forensic science, 
and outdoor subjects like weapons,
 swimming, horse-riding and unarmed combat.
நம்ம போலீஸ் அதிகாரிகளிடம் இப்படி எல்லாம் 
அவர்களுக்கு சம்பந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு 
அவர்களைத் துன்புறுத்தக் கூடாது என்று 
பொதுஜனம் சார்பாக ஒரு மனு கொடுக்க வேண்டும்.