Tuesday, July 30, 2013

காதலின் தற்கொலை





நான் பறவையைக் காதலித்தேன்
அது தன் சிறகுகளில்
என்னை அணைத்து
வையகமெங்கும்
வானகமெங்கும்
பறந்து திரிந்தது.
விட்டு விடுதலையானக்
காதலின் சுகத்தை
அப்போதுதான் அனுபவித்தேன்.

நான் ஆமையைக் காதலித்தேன்
அவசரப்படாமல் அருகில் வந்தது.
தேரில் பவனிவரும்
மதுரை மீனாட்சியைப் போல
அதன் ஒடுகளே சிம்மாசனமாய்
கம்பீரமாக அசைந்து நடந்தேன்.
கடல் அலைகளில்
பாய்மரக்கப்பலாய்
பவனி வந்தேன்.


நேற்று
கோபியர் கூட்டத்தில்
நானும் நுழைந்தேன்.
அப்பத்தைப் பங்குவைத்த
பூனையின் கதையாய்
காதலைக் கூட
கண்ணா.. நீ
பங்கு வைத்தாய்
எப்படியும்
என்முறை வந்தே தீருமென
காத்திருந்தக் காலத்திலும்
காதல் என்னுடன் வாழ்ந்தது.
நான் காதலில் வாழ்ந்தேன்.

அப்போதெல்லாம்
நானும் என் காதலும்
இணைப்பிரியாமல்
இருந்தோம்.
இப்போது
என்னைப் போலவே
மண்ணில் வாழும்
மனிதா
உன்னைக்  காதலித்தேன்.
காதல் என்னைக் கொலைசெய்தது.
தானும் தற்கொலை செய்து கொண்டது.

மறுநாள் பத்திரிகையில்
காதலின் முகவரி
சாதி அட்டையிலும்
கடவுளின் கட்டைவிரல்
அடையாளத்திலும்
பத்திரமாக
சிவப்பு மையால்
எழுதப்பட்டிருந்தது.

Wednesday, July 24, 2013

காங்கிரசு பயப்படும் ஹோட்டல் "பில்"

ஹோட்டல் பில்லைப் பார்த்தெல்லாம் காங்கிரசு பயப்பட ஆரம்பித்துவிட்டது
ஏதொ உங்களையும் என்னையும் போல மத்திய தர வர்க்கம் பயப்பட்டால்
அதில் காரணம் இருக்கிறது..
இந்தியாவையே விலைக்கு வாங்கி சுவிஸ் வங்கியில் டெபாசிட் பண்ணுகிற
அளவுக்கு பணத்தில் புரளும் காங்கிரசுக் கூட்டணி.. போயும் போயும்,
ஒரு சின்ன , நட்சத்திர அந்தஸ்த்து கூட் இல்லாத ஹோட்டல் பில்லில்
இருந்த வாசகங்களைக் கண்டு ரொம்ப்வும் கொதித்துப் போய்விட்ட
நிகழ்வு  தொலைக்காட்சி காமெடியை எல்லாம் விஞ்சி விட்டது.

அப்படி என்ன அந்த ஹோட்டல் பில்லில் விசேஷம் என்கிறீர்களா?
அட, ஏதொ இரண்டு வரியை ஹோட்டல் சொந்தக்காரர் தன் வயித்தெரிச்சலைக் காட்டுகின்ற மாதிரி அச்சடித்து "மீண்டும் வருக"
என்ற வாசகத்தின் கீழ் போட்டிருக்கிறார்.




"யுபிஏ கூட்டணி அரசு 2G மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் அதிகமாக பணத்தை
சாப்பிட்டுவிட்டதால் ஏசி ஹோட்டலில் சாப்பிடுவது என்பது லக்சுரியாகிவிட்டது"

இதற்குப் போய் இளைஞர் காங்கிரசுக்காரர்கள் கோபித்துக் கொண்டு
டில்லியின் ஆதரவுடன் ஹோட்டலை நோக்கி படை எடுத்துச் சென்று
ஹோட்டல் அதிபரைச் சிறைப்பிடித்து  அவரை தோப்புக்கரணம் போட
வைத்துவிட்டார்கள்!

மும்பை, பரேல் பகுதியில் கே யி எம் மருத்துவமனைக்கு எதிராக இருக்கும்  ஆதித்தி வெஜ் ஹோட்டலில் தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது
 இந்தச் சம்பவத்தை நம்ம மோதி சார் தன் டிவிட்டரில் ரொம்பவும்
கண்டித்து  சகிப்புத்தன்மை இன்மையின் உச்சம் என்று எழுதியிருக்கிறார்.
சாத்தான்  வேதம் ஓதுகிறது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

2 G யின் தாயகமாக இருக்கும் தமிழ்நாட்டில் ஹோட்டல் அதிபர்கள் இதைப் பின்பற்றி விதம் விதமாக தங்கள் பில்லில் அச்சடிக்கும் ஐடியா உதயமாகலாம்!

அதை எதிர்த்து  சிலர் அச்சடிக்கலாம்.!!

பாவம் தமிழ்நாட்டு ஹோட்டல் பிரியர்கள்!


Thursday, July 18, 2013

தமிழ்த் தாயும் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும்





1) இது வேண்டுகோள்
தமிழ் மொழி இனி தரணி ஆளும்
தேமதுர தமிழோசை தெருவெல்லாம் ஒலிக்கும்
ஆட்சி மொழி, அலுவலக மொழி, கல்வி மொழி, வழக்குமன்ற மொழி, கோவில்கள் எங்கும் வழிபாட்டு மொழி என்று எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
நான் பகற்கனவு கண்டு உளறிக்கொண்டிருப்பதாக எவரும் எண்ண வேண்டாம்.
தமிழ்த்தாய்க்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சிலை வைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துவிட்டதே.. இனி என்ன வேண்டும்? அமெரிக்க வல்லரசின் சுதந்திரதேவி சிலையைப் போல தமிழ்த்தாய்க்கும் சிலை என்றால், அதன் அருமை பெருமைகளை சொல்லவும் வேண்டுமோ? சுதந்திரதேவியின் சிலை இருக்கும் அமெரிக்காவில் தனி மனித சுதந்திரம் இருக்கிறதா என்றெல்லாம் நாம் அதிகமாக யோசிக்க கூடாது. ஆனால் சுதந்திர தேவியின் சிலையைத் தன்வசம் மட்டுமே வைத்திருக்கும் காரணத்தாலோ என்னவவோ சுதந்திரத்தை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து விட்ட நினைப்பில் அமெரிக்கா அடுத்த நாட்டவர் சுதந்திரத்தை எப்போதும் அனுமதிப்பதில்லை.
.
இதெல்லாம் நமக்குத் தேவையில்லாத செய்திகள். நம் மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை வைத்தப் பின் தமிழ் மொழிக்கு மீண்டும் பொற்காலம் பிறந்துவிடும். இதைப் பற்றி எவரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். தேவையில்லாமல் பிற மாநிலத்தவர் சொல்லும் எதிர்வினைகளைக் கண்டு அச்சப்படவோ மனக்குழப்பமடையவோ வேண்டவே வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
செந்தமிழ் மாநாடு நடத்துவது, தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது இதெல்லாம் தமிழனின் சிறப்பம்சங்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மற்றவர்களுக்குத் தெரிவதில்லையே! தமிழ்ச் சமூகத்திற்கு பிடித்திருக்கும் மனநோய் என்று மலையாளத் தாயும் கன்னடத் தாயும் தெலுங்குத் தாயும் ஒரியா தாயும் வங்காளி தாயும் அசாமி தாயும் மராட்டி தாயும் காஷ்மீரி தாயும் ஏன் இந்தி தாயும் கூட நம் தமிழ்த் தாயைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள். அதைக் கண்டு தமிழர் எவரும் வருத்தப்படவோ அல்லது அவர்களுடன் வாக்குவாதம் செய்யவோ வேண்டாம் என்று
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.!
(2) யார் தமிழைக் காப்பாற்றுவது?
2013 - 14 கல்வியாண்டில் தமிழக அரசு மாவட்டந்தோறும் 100 பள்ளிகள் வீதம் தமிழகம் எங்கும் 3200 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் வழி கல்வி கற்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு வந்தப் பின் "போச்சு, போச்சு எல்லாம் போச்சு" என்ற கூப்பாடு கொஞ்சம் உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. என்னவொ திடீரென தமிழத்தில் அனைவருக்கும் தாய்மொழியாம் தமிழ்மீது அளப்பரிய பாசமும் பற்றுதலும் வந்துவிட்டதாக மாயக்கண்ணாடியில் ஒரு தோற்றம். என்னவோ இந்த அறிவிப்பு வந்ததால் மட்டுமே தமிழ்மொழிக்கு ஆபத்து வந்துவிட்ட மாதிரி ஒரு எண்ணத்தை அனைத்து ஊடகங்களும் தமிழ் ஆர்வலர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க அவர்களின் ஆர்வமும் தமிழ்ப் பற்றும்.!
உண்மையாகவே அவர்கள் அனைவரின் தமிழ்ப் பற்றின் மீது நமக்கு நம்பிக்கையும் அவர்களால் நிச்சயமாக தமிழைக் காப்பாற்ற முடியும் என்ற அசைக்க முடியாத எண்ணமும் இருப்பதால் நாம் அவர்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். இதுவரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வியைக் கற்றுக்கொண்டிருந்த சுப்பன் வீட்டுப் பொண்ணும் குப்பன் வீட்டு மகனும் கொஞ்ச நாளைக்கு ஆங்கிலத்தில் கல்வி கற்றுவிட்டுப் போகட்டுமே!
தமிழ் மொழியை வாழ வைத்துக் கொண்டிருந்தது இதுவரை என்ன இந்த சுப்பனும் குப்பனுமா? இவர்கள் வாரிசு தமிழ் படிக்காவிட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? விட்டுத் தள்ளுங்கள். தமிழ் மொழியின் காவலர்கள் நீங்கள், முத்தமிழ் அறிஞர்கள் நீங்கள்... உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் உங்கள் பேரன் பேத்திகளும் தமிழ் படித்து தமிழ் வழியில் கல்வி கற்று நம் தமிழைக் காப்பாற்றட்டுமே! குப்பனும் சுப்பனும் அவர்கள் பிள்ளைகளும் காப்பாற்ற முடியும் என்றால் வாய்ப்பும் வசதியும் படைத்த உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் மிகவும் எளிதல்லவா? எனவே இனி தமிழ்த்தாயைக் காப்பாற்றும் முழுப்பொறுப்பும் உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. உங்கள் உரிமையை விட்டுக் கொடுக்காமல் தமிழை எப்படியும் காப்பாற்றிவிடுங்கள்! தமிழ்த்தாய் உங்கள் அனைவருக்கும் சங்கத்தமிழை வரமாகக் கொடுத்து தன் தாம்பூல மகிமையை நிலை நாட்டிக் கொள்ளட்டும்!!
(3) இந்தியாவுக்கு எச்சரிக்கை
ஆங்கிலம் வழிக் கல்வி கற்கும் முறையை அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவது இருக்கட்டும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கும் அழகைப் பார்த்து இங்கிலாந்து அரசு கடுங்கோபம் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இந்தியப் பேரரசை நீக்கிவிடும் அபாயம் ஏற்படலாம். எச்சரிக்கை, எச்சரிக்கை. இது நம் சார்பாக இந்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை.
இப்படி கூட இந்திய அரசை தமிழக அரசு பழி தீர்த்துக் கொண்டதாக தமிழினக் காவலர்கள் முகநூல்களில் நிறைய எழுதி தீர்க்கலாம்.
(4) கலக்டரும் கார்ப்பரேஷன் பள்ளிகளும்
ஆர். ஆனந்தக்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியாளர். தன் மகள் கோபிகாவை இரண்டாம் வகுப்பில் சேர்க்க தனியார் பள்ளியை நாடவில்லை. அவர் மனைவி ஶ்ரீவித்யா தன் மகளுடன் பஞ்சாயத்து யூனியன் நடத்தும் ஆரம்ப பள்ளிக்கூடத்தின் வாசலில் மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களுடன் அட்மிஷனுக்காக நிற்கிறார். தலைமை ஆசிரியராக இருந்த ராணி அவர்கள் அவர்கள் ஏதோ பள்ளிக்கூடத்தைச் சோதனை செய்ய வந்திருப்பதாகக் கூட பயந்துவிட்டதாக செய்தி. ஆனால் கோபிகா தமிழ்வழி அரசுப் பள்ளியில் சேர்ந்துவிட்டார். அச்செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எங்கும் காட்டப்பட்டது. ஆஹா... அவருடையை செயல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு புரட்சி மலர்ந்துவிட்டது என்று எங்களைப் போன்ற உலகம் தெரியாத கிறுக்குகள் எண்ணிக் கொண்டிருந்தோம். மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கூட அவருடைய செயல் ஒரு தூசி துரும்பையும் அசைக்கவில்லை. (பாவம், கலக்டர் சார், இப்படியும் ஒரு ஆள் கலக்டரா வந்திருக்காரே என்று அதிகாரிகளும் எடுபிடிகளும் அவரை ஒரு அதிசயமாக பார்த்திருப்பார்களோ என்னவோ!)
தமிழ்நாட்டின் மாவட்ட ஆட்சியாளர் ஓர் உதாரணமாக இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் அவர் செயலும் ஒரு விதிவிலக்காக மட்டுமே இருந்தது. ஒரே ஒரு சின்ன மாற்றம் மட்டும் ஏற்பட்டது. அதுவும் அரசாங்கமோ அரசு நிர்வாகமோ பெருமைப் பட்டுக்கொள்ளும் காரியமல்ல. அதாவது கலக்டர் மகள் படிக்க வந்தப் பின் அந்த வீரப்பன்சத்திரம் பஞ்சாயத்து உடனடியாக அப்பள்ளி கூடத்தை வந்து பார்வையிட்டு தேவையான வசதிகள் அனைத்தையும் அவசரம் அவசரமாக செய்து கொடுத்தார்களாம்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் எவருக்கும் அவர்கள் சொல்லிக்கொடுக்கும் திறமையின் மீது நம்பிக்கை இருக்கிறதா? அவர்களில் எத்தனைப் பேர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் கல்வி கற்க அனுப்புகிறார்கள்? சந்திரசேகரன் என்ற சமூக ஆர்வலர் இது குறித்த ஒரு கள ஆய்வை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டிருக்கிறார். அக்டோபர் 2011ல் வெளிவந்திருக்கும் அவருடைய கள ஆய்வு முன்வைக்கும் சில அதிர்ச்சி மிக்க உண்மைகள்:
ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலை அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகளில் 27% அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள், மீதி 73% தனியார்ப் பள்ளிகளுக்கு தங்கள் குழுந்தைகளை அனுப்புகிறார்கள். இதுவும் உயர்நிலைப் பள்ளி, மற்றும் மேல் உயர்நிலைப் பள்ளி என்று மேல் வகுப்புகளுக்குப் போகும் போது வெறும் 13% பிள்ளைகள் தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். மீதி 87% தனியார் பள்ளிகளில் (அதாவது ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்கள்) சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
என்ன வாத்தியார்களை மட்டும் குறை சொல்லிக்கொண்டிருக்கின்றீர்களே என்று சிலர் கேள்வியில் இருக்கும் நியாயத்தை நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஏனேனில் இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள், தமிழ் காப்போம் என்று முழங்கும் தமிழ் காவலர்கள், நவீன இலக்கியத்தின் பிதாமகன்கள், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஜாம்பவான்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேல்சபை, கீழ் சபை எல்லா சபைகளிலும் முன்வாசல் வழியாகவும் பின்வாசல் வழியாகவும் வந்து உட்கார்ந்திருக்கும் மதிப்புக்குரியவர்கள், தமிழனத்தின் தலைவர் தான் தான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் பெருந்தலைமைப் பீடங்கள்.. இவர்களிடமெல்லாம் வாத்தியார்களிடம் எடுத்த மாதிரி ஒரு கள ஆய்வு செய்தால்.. என்ன மாதிரி முடிவுகள் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்கவும்.
இதை எழுதும் போது அம்முடிவுகள் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தே ஓர் அச்சம் வருகிறது. வாசிப்பவர்களுக்கும் நிச்சயம் ரொம்பவே பயம் கலந்த ஓர் உணர்வு வந்து தொண்டைக்குழியில் அடைக்கும். எனக்குப் புரிகிறது. இந்த ஒரு புள்ளியில் மட்டும் அனைத்துக் கட்சிகளும் தலைவர்களும் மாவட்ட, வட்ட பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட அனைவரும் ஒன்று சேர்ந்து, தயவு செய்து அம்மாதிரியான கள ஆய்வு செய்ய வேண்டும் என்ற முயற்சியில் எவரும் ஈடுபட வேண்டாம், அது தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் எவ்விதத்திலும் நலம் தராது என்று ஓரு கூட்டறிக்கை விடுவார்கள்.! அப்படி வெளிவரும் கூட்டறிக்கைக்கு இருக்கும் வானாளவிய அதிகாரத்தைப் புரிந்து கொண்டு தொலைக்காட்சியில் மதுரகீதம் பார்த்துக்கொண்டே பொழுதைப் போக்கிவிடுவது பொதுஜனங்களுக்கு நல்லது.
5) கல்வித் தரமும் ஆசிரியர்களும்
கல்வித்தரத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பா? அரசின் கல்விக்கொள்கை பொறுப்பா? இல்லை இது மாணவர்கள் சம்பந்தப்பட்டது மட்டும்தானா? இக்கேள்விகள் தனித்தனியானவை அல்ல. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு 96%. இது பிற மாநிலங்களை ஒப்பிடும் போது மிகவும் பாராட்டுதலுக்குரியதாக இருக்கிறது. ஆனால் அதே அந்தப் பள்ளிகளில் மாணவர்களின் தரவரிசையை சோதித்துப் பார்த்தால் 35% மாணவர்கள் கூட தேர்ச்சி பெறாத நிலை இருப்பதை 2011ல் நடந்த ஓரு கள ஆய்வு பதிவு செய்திருக்கிறது. (ASER 2011)
ASER2011
தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் 26000 மாணவர்களிடம் நடத்திய கல்வித்தரம் குறித்த சோதனையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 32% மாணவர்கள் மட்டும்தான் மிகவும் எளிதான தமிழ் மொழிக் கதையை சரளமாக வாசித்தார்கள். மீதி 68% விழுக்காடு மாணவர்களால் வாசிக்க முடியவில்லை. நான்காம் வகுப்பு மாணவர்களில் 40.6% விழுக்காடு மாணவர்களுக்கு இரண்டு இலக்கு எண்ணில் கழித்தல் கணக்குப் போடத் தெரிந்தது. அதாவது 60% மாணவர்களுக்கு அந்தக் கணக்கு தெரியவில்லை. இது யாருடைய குற்றம்?
தவறாமல் பள்ளிக்கு வரும் மாணவனால் வாசிக்கவும் கணக்குப் போடவும் தெரியவில்லை என்றால் அதற்கு பொறுப்பு ஆசிரியர்களும் தமிழக அரசும் தான். இந்த உண்மை நிலவரத்தை எப்போதுமே தமிழக அரசும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவோ அதற்கு தீர்வு காண வேண்டும் என்றோ எப்போதுமே முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. (அவர்கள் யார் வீட்டுப் பிள்ளைகளும் இந்தப் பள்ளி கூடங்களில் படிக்கவில்லை என்பதைத் தவிர வேறு எந்தக் காரணம் இருக்க முடியும்?)

6) அம்ச்சி மும்பை வாழ்க
தமிழக அரசின் மொழிக்கொள்கை என்ன? வெண்டைக்காய் மாதிரி இருக்கிறது.
தமிழ்மொழி அல்லது தாய்மொழி என்று புரிந்து கொள்கிற வகையில் தமிழ்மொழி/தாய்மொழி என்று அனைத்து அரசாணைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இருமொழிக் கொள்கை தான் எங்கள் மொழிக் கொள்கை என்று திராவிடக் கட்சிகள் எப்போதும் சொல்லிக் கொள்கின்றன.
இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வரை அம்மாநிலங்களில் ஆங்கிலமே நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழியை காங்கிரசுக் காரர்களை விட திராவிடக் அரசியல் கட்சிக்காரர்கள் தான் அடிக்கடி முழங்கி கொண்டிருப்பார்கள்.
நேருவிடம் "நீங்கள் எப்படி இந்த உறுதிமொழியைக் கொடுக்கலாம்?" என்று வடமாநிலத்தில் உள்ள பல்கலை கழக துணைவேந்தர் ஒருவர் மடல் எழுதியபோது நேரு சொன்ன பதில்:
"ஒரு நாளில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வந்துவிட முடியும். ஆங்கிலமில்லாமல் அந்த இடத்தில் அவரவர் தாய்மொழி அமர்ந்துவிட்டால் எந்தக் காலத்திலும் அந்த இடத்தைக் கைப்பற்றி இந்தியை அவ்விடத்தில் பொருத்த முடியாது" என்பதுதான். (ஆதாரம்: தென்மொழி ஏப் 2013 பக் 3)
மராத்தி மாநில மொழிக்கொள்கை ரொம்பவும் வெளிப்படையானதாகவும் எல்லோருக்கும் புரிகிற மாதிரியும் இருக்கிறது. மராத்தி மொழித்தாய்க்கு சிலைகள் வைக்கும் பக்தி எதுவும் இல்லாதவர்கள் தான் மராத்தியர்கள். ஆனால் குஜராத்தி சிற்பான்மையினர் நடத்தும் ஆங்கில வழிக் கல்வி நிறுவனத்திற்கும் மராத்திய அரசுக்கும் நடந்த மொழிக்கொள்கை குறித்த வழக்கில் மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு மிகவும் முக்கியமானது. (பார்க்க: usha mehta vs maharashtra state govt court case)
மகாராஷ்டிர அரசு தங்கள் மொழியான மராத்தி மொழியை கட்டாயப் பாடமாக எட்டாவது வகுப்பு வரை அறிமுகப்படுத்தியது. அச்சூழலில் சிறுபான்மையினராக இருக்கும் அயல்மாநிலத்தவர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் (பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்வி நிலையங்கள் தான்) அவர்களின் தாய்மொழி, அதன் பின் ஆங்கிலம், அவர்கள் இந்திய தேசிய மொழியாக நினைக்கும் இந்தி என்று மூன்று மொழிகளுடன் மராத்தி மொழியையும் நான்காவது மொழியாகக் கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் இது இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கும் தனி மனித உரிமை, மொழிக்கொள்கைகளுக்கு எதிரானது என்றும் குஜராத்தி கல்வி நிறுவனம் வழக்கை முன்வைத்தது.
"அதாவது எந்த மொழி வழிக் கல்வி கற்க வேண்டும் என்று தேர்வு செய்யும் வாய்ப்பு ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் எந்த மொழி வழி தன் குழந்தை கல்வி கற்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யும் உரிமை குழந்தையின் பெற்றோர்களுக்கு மட்டுமே உரியது. (It is the choice of the parents to select the language for the child) மராத்தி மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்படுவதன் மூலம். இக்கொள்கை அர்த்தம் இழந்து விடுகிறது” என்று வாதிட்டார்கள் குஜராத்தி கல்வி நிறுவனத்தார். ஆனால், உயர்நீதி மன்றம் மிகவும் தெளிவாக மராத்திய மாநிலத்தில் வாழ்ந்து கொண்டே அந்த மாநிலத்தின் அரசு மொழியாகவும் மக்கள் மொழியாகவும் இருக்கும் மராத்தி மொழியைத் தங்கள் மாணவர்களுக்கு கற்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்வதைக் கண்டித்ததுடன் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் முன்வைக்கும் சட்ட ரீதியான காரணங்களையும் உடைத்தது.
7) வரப்போகும் உச்சநீதிமன்ற தீர்ப்பு:
கர்நாடக அரசு கன்னட மொழி தான் தொடக்கப்பள்ளிகளில் பாடமொழியாக இருக்க வேண்டும் என்று பிறப்பித்த ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன்கோகாய் ஆகியோர் மிகவும் முக்கியமான இந்தப் பிரச்சனை கர்நாடக மாநிலத்திற்கான தனிப்பட்ட பிரச்ச்னை மட்டுமல்ல, பல்வேறு தேசிய இனங்களையும் மொழிகளையும் கொண்ட ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் பிரச்சனை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு வழிகாட்டுதலான தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 5 பேர்கள் கொண்ட ஒரு குழுவை (பெஞ்ச்) அமைத்திருக்கிறார்கள். இக்குழு ஒரு மாணவன் எந்த மொழியைப் படிக்க வேண்டும் என்று யார் தீர்மானிப்பது? தொடக்க கல்வியில் என்ன பயிற்று மொழி என்பதை அந்த மாணவனோ அவன் பெற்றோரோ தீர்மானிக்க உரிமை உண்டா? தாய்மொழியைத் தான் எடுத்துப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா? அப்படி கட்டாயப்படுத்துவது அரசியல் சட்ட விதி மீறலா? தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானதா? என்று பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலிருக்கும் தீர்ப்பை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வரும் போகும். விதி முறை மீறல்கள் நமக்குப் புதிதல்ல என்கிறீர்களா? அதுவும் சரிதான். அதிலும் கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை ரொம்பவும் சரிதான்.


குறிப்புகள்: www.indiankanoon.org & ASER 2011
-

Tuesday, July 16, 2013

இளவரசன் சவ ஊர்வலத்தில் உயிர்த்தெழுந்த சிலக் கேள்விகள்







இளவரசன் : தமிழ் சாதியின் அடையாளம்
அவன் மறைவு தற்கொலையா?
கொலை செய்யப்பட்டானா/
எப்படி இருந்தாலும் அவன் முடிவுக்கு அவன் மட்டும்
பொறுப்பல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தின் முகத்தில்
காறித்துப்பிவிட்டு அவன் மறைந்திருக்கிறான்.

காதலைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில்
நெய்தல் நிலத்துப் பெண்ணை மருத நிலத்துக்காரன்
களவு மணம் செய்து காத்திருக்க வைத்ததை
பாடமாகப் படித்துக் கொண்டிருக்கும் இலக்கிய மேடையை
தன் புழுதிக்காலால் உதைத்து தள்ளி இருக்கிறான்.

காதல் தெய்வீகம்
காதல் ஒரு  முறைத்தான் வரும்
காதல் இல்லை என்றால் சாதல்
அவன் வீட்டு இலவச தொலைக்காட்சி நித்தமும் காட்டிய
காதல் ராஜாங்கத்தின் இளவரசனாக தன்னைக் கற்பனை
செய்து கொண்டதன் வீபரீதம்...
அவன்.

அரசியல் தலைவர்கள் வீட்டில் காதல் திருமணமும் சாதி மறுப்புத் திருமணமும் அவர்களைப் புரட்சிக்காரர்களாக சமூக சீர்திருத்தவாதிகளாகக்காட்டும் அடையாளங்கள்.
சாதி ஓட்டுகளை வாங்கும் சம்பந்தி முறை உறவுகள்.
ஆனால் அதையே இளவரசன்கள் செய்தால் ...
ரயில் தண்டாவளங்களில் அவர்களின் சீர்திருத்தம் தூக்கி எறியப்படும்.

இளவரசனின் முடிவு காதலர்களின் தற்கொலை முடிவாக மட்டுமே
அவன் எழுதிய / எழுதாதக் கடிதங்களைக் கொண்டு
நாளைக்கு ஒரு திரைப்படமே உருவாகலாம்.
அத்திரைப்படத்தை தமிழ்ச் சமூகமே கொண்டாடலாம்.
இளவரசன் திவ்யா வேடங்களில் நடித்தவர்களுக்கு
தேசிய விருதுகள் கூட வழங்கப்படலாம்.
எதுவும் நடக்கலாம்.


திராவிட அரசியல் சூத்திர வயல்களுக்கு நன்றாகவே தண்ணீர்ப் பாய்த்து
வளர்த்தது என்பது உண்மை. அப்படி அவர்கள் தண்ணீர்ப் பாய்த்தப்போது வயலோரங்களில் வாய்க்கால் கரைகளில் வரப்புகளில் இருந்த தலித்துகளும் பயனடைந்தார்கள். அது, அது மட்டும் தான் சூத்திர சாதிக்கு கண்களையும்
கருத்தையும் உறுத்தும் காட்சியாக இருக்கிறது. வெட்கம் கெட்டு தங்கள்
பெண்களைக் கேவலப்படுத்தினாலும் பரவாயில்லை, இளவரசனளிடம்
தங்கள் சாதி அதிகாரத்தைக் காட்டும் ரத்த வெறியுடன் அலைகிறார்கள்.

ஒருபக்கம் மது ஒழிப்பு என்று மேடைகளில் முழங்கும் இவர்கள்
இவர்களின் தொண்டரடிகள் மதுவில் மிதந்து மரக்காணத்தில் வெறியாட்டம்
ஆடியதை ரசிக்கிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்கள் சிலர்,
"ஒரு பாட்டாளி இன்னொரு பாட்டாளியைக் கொல்ல நினைக்கலாமா?
ஒரு கை இன்னொரு கையை வெட்டலாமா? ஒரு கால் இன்னொரு காலை
உதைக்கலாமா? " என்று மார்க்சியம் பேசுகிறார்கள்.
கொள்கை ரீதியாக அவர்கள் பேசுவது நடைமுறையில் அவர்களே தலித்துகளுக்குக் கற்றுக்கொடுத்த பாடத்திலிருந்து ரொம்பவும் வித்தியாசமாக
இருக்கிறது.


2500 பேர் சற்றொப்ப 20 கீமீ தூரத்திலிருந்து 150 லிட்டர் பெட்ரோலும் 200லிட்டர் மண்னெண்ணெயும் எடுத்துக்கொண்டு சிறியதும் பெரியதுமான வாகனங்களில் பயணிக்கிறார்கள். அதைக் காவல்துறைக் கண்டு பிடிக்கவே முடியவில்லையாம்! எப்படி இருக்கிறது நாட்டின் சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு? காவல்துறையும் நீதிமன்றமும் யாருக்காக ?
யாருடைய பாதுகாப்புக்காக?
குஜராத்தில் ஒரு மோதி தான். தமிழ்நாட்டிலோ ஆயிரக்கணக்கான மோதிகள்.
வெவ்வேறு பெயர்களில். வெவ்வேறு முகமூடிகளுடன்.



ஈழத் தமிழனுக்காக உருகி உருகி போராடும் வீரத்தமிழன் ஒருவனும்
இளவரசனுக்காக போராட வரப்போவதில்லை. மாணவர்கள் போராட்டங்களோ இது குறித்த விவாதங்களோ கல்லூரிகளில் இல்லை.
சாதியத்தின் பெயரால் இளவரசன்களை வாழ அனுமதிக்காத தமிழ்ச்சமூகத்தில் இளவரசனின் இன அடையாளம் தமிழன் என்பதல்ல, தமிழ்த்தேசியத்தில் அவனுக்கான இடம் இட ஒதுக்கீடாக கூட ஒதுக்கப்படவில்லை என்ற யதார்த்தத்தை இளவரசன்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள்,
இனி தமிழ்த்தேசிய அமிர்தம் கூட நஞ்சாகிப்போனது என்பதை அறிந்துக்
கொண்டார்கள். அமுதமே நஞ்சானால், அவர்கள் இந்தியனாக இருந்தால் என்ன? தமிழனாக இருந்தால் என்ன? தமிழனின் அடையாளம் சாதி
என்பதற்கு இளவரசன்களே சாட்சி.


ஒரு பெண் யாரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்/
யாரைக் காதலிக்க வேண்டும்?
யாருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்?
யாருடைய பிள்ளையைக் கருவில் சுமக்க வேண்டும்?
யாருடன் களவு மணம் செய்து கொள்ள வேண்டும்?
யாருடன் உடன்போக்கு செய்ய வேண்டும்?
இதை எல்லாம் தீர்மானிக்கும் அதிகாரம் அந்தக் குறிப்பிட்ட
பெண்ணுக்கு மட்டுமே உண்டு. அவளுடைய அதிகாரத்தில்
தலையிட அவள் பெற்றோர்களுக்கே உரிமையில்லை. தங்கள் அனுபவ
அறிவைக் கொண்டு பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுரை சொல்லலாமே தவிர கட்டாயப்படுத்தக் கூடாது, முடியாது. அப்படி இருக்க தங்கள் சாதிப்
பெண்களின் காதலுக்கும் கல்யாணத்துக்கும் ஓடீப்போரதுக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் மொட்டை அதிகாரத்தைச் சாதித் தலைவர்களுக்கு கொடுத்தது யார்?
இதற்காக போராட வேண்டியது திவ்யாக்கள் மட்டுமே.
எங்கே ஒளிந்துக்கொண்டிருக்கிறார்கள் முலை-யோனிகளின் விடுதலையைப் கவிதைகளாக்கி தங்களைப்  பெண்ணிய போராளிகளாக அடையாளம் காட்டிக் கொண்ட எம் பெண்ணிய வாதிகள்?


பார்ப்பன சாதியில் பிறந்தவர்களுக்குப் பார்ப்பனியப்புத்தி இருக்கிறதோ இல்லையோ சூத்திர சாதியில் ஒவ்வொருவரிடமும் அவர்களின்
அடையாளமாக சாதி மட்டுமே பாதுகாக்கப்பட்டிருகிறது.
தந்தை பெரியார் மீதும் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டை இனி
நாம் ஒவ்வொருவரும் மறுவாசிப்பு செய்தாக வேண்டி இருக்கிறது.
பெருந்தெய்வங்களையும் அதன் காவலர்களாக இருந்த பார்ப்பனர்களையும்
சாடிய பெரியார், சூத்திர சாமிகளையோ சூத்திர தர்மகர்த்தாக்களையோ
கை  வைக்க வில்லை. அப்படி கை வைத்திருந்தால் அப்போதே சூத்திர சாதியின் பார்ப்பனியப் புத்தி வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.
தமிழனைச் சூத்திரனாக விட்டுச்செல்வதற்காக வருத்தப்பட்ட பெரியார்,
அதே அளவு வருத்தமும் போராட்டங்களும் சூத்திரனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் பஞ்சமர்களுக்கும் காட்டினாரா? அவர் காலக்கட்டத்தில் பார்ப்பனிய அதிகாரத்துடன் மோதவே அவருக்கு காலம் போதவில்லை என்பதால்
இரண்டாவது கட்ட நகர்வுக்கு செல்ல முடியவில்லை என்று நாம் என்னதான்
சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும் அவை எல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் உத்திகள் மட்டுமே. பெரியாருக்குப் பின் பெரியார் வழி
வந்தவர்கள் பெரியாரின் சாதி ஒழிப்பு போரட்டத்தை வெறும் பார்ப்பனிய வெறுப்பாக மட்டுமே துப்பி விட்டு வாயைத்துடைத்துக்கொண்டார்கள்.

ஆதிதிராவிடன் தாழ்ந்தவன் என்றால்
மீதிதிராவிடன் உயர்ந்தவனா?
என்று அவர்களிடம் இன்று காலம் வைக்கும் கேள்வியின் கனம் தாங்க முடியாமல் தலித்துகள் பெரியாரையோ திராவிட இயக்கத்தையோ விமர்சனம் செய்தால் கூட உடனே "நன்றி கெட்டவர்கள்" என்று வசைப்பாடுகிறார்கள்.
பெரியாரின் சாதி ஒழிப்பு கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தாமல்
காலம் தள்ளிக்கொண்டிருப்பவர்களிடம் பெரியார் ஒரு பிள்ளையார் சிலையாகிப் போன அவலம் நடந்துவிட்டது. கொடைத்திருவிழாவின் போது மட்டும் நினைக்கப்படும் ஊர்க்காட்டு சாமி மாதிரி பெரியாரும் இன்றைக்கு
பெரியாரிஷ்டுகளுக்கு இருக்கிறார்.

இந்து மதக்குரு காஞ்சி மடாதிபதியைக் கை வைத்த அம்மாவின்
அபார துணிச்சல் சூத்திர சாதி தலைவர்களின் வானளவு அதிகாரத்தின் முன்னால் நாய்க்குட்டியாக இருப்பதன் காரணம் என்ன?
பிராமணர்களிடம் இருக்கும் பார்ப்பனியப்புத்தியை விட ஆபத்தானது
சூத்திரர்களிடம் குடி கொண்டிருக்கும் பார்ப்பனியம் என்பதால் தான்.

தொடரும் இளவரசனின் சவ ஊர்வலங்களும் மரக்காண ம் தர்மபுரி
எரிந்தச் சாம்பலும் சூத்திர பார்ப்பனியம் விதைத்த சாதி விதைகள்.

மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது என்றார் அம்பேத்கர். அவர் மொழியிலேயே சொல்வதானால் " பெரியார்கள் வருவார்கள் , போவார்கள், ஆனால்
தீண்டாமை அப்படியே தான் இருக்கும், இருக்கிறது"

இளவரசன் சாதியத்திற்கு எதிராகக் காலமெல்லாம் போராடிய அந்த ஈரோட்டுக்கிழவனின் கறுப்புச் சட்டையைப் பிடித்து கிழித்து உரக்க
கேட்கிறான்... அவன் கேட்கும் கேள்வியை இனி எவரும் உதாசீனப்படுத்தவோ
இல்லை பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை மாத்திரையில் வியாதியைக்
குணப்படுத்திவிடலாம் என்று எதிர்பார்ப்பதோ முடியாது, முடியவே முடியாது.


Thursday, July 4, 2013

வாழை இலை


உங்கள் விருந்தில்
உப்பாக கலந்திருக்க
என்னால் முடியவில்லை.
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கொன்றும் 
வருத்தமில்லை.
இருந்தாலும்
இந்த இரண்டாகவும்
இல்லாமல்
நீங்கள் தூக்கி எறிந்த
எச்சில் இலையாய்
தெரு ஓரத்து குப்பைத் தொட்டியில்
தெருநாய்களுக்கு நடுவில்
விழுந்து கிடக்கின்றேன்.
சாலையைக் கடந்து செல்லும்
உங்கள் கண்களின் வெளிச்சத்தில்
என் நிர்வாணத்தை
மறைத்துக்கொள்ள முடியாமல்
நிழல்களுக்கு அடியில்
புதைந்துப் போகிறேன்.
.

உங்கள் கொல்லைப்புறத்தில்
குலை தள்ளிய வாழை
குருத்தாக விரியும் இலை
கலியாணத்திலும்
கருமாதியிலும்
உங்கள் கூடவே வருகிறது
என் சாயலுடன்.
என் சரித்திரத்தின்
பக்கங்களை
உங்கள் மொழியில்
எழுதுவதற்காய்.