Wednesday, April 21, 2010

குறுஞ்செய்திகள்



குறுஞ்செய்திகளின்
எல்லைத் தாண்டிய
தீவிரவாதம்
எங்கள் பிரதேசத்தில்
செத்துப் போன மனிதவாடை.

தனிமையின் இருளை
விரட்டிய வானம்பாடிகள்
காணாமல் போய்விட்டன.
காதலைக் கொண்டாடிய
சிட்டுக்குருவிகள்
எட்டிப் பார்ப்பதில்லை
எம் சன்னல்களை.
கூட்டம் கூட்டமாய்
கொல்லைப்புறத்தில்
எப்போதும் கூடும்
காக்கைகள்
விருந்துவரவில்லை என்பதால்
வேறு எங்காவது
போயிருக்க கூடும்.

ஆண்டுக்கு ஒருமுறை
பிறந்தநாள்
திருமணநாள்
பொங்கல் தினம்
பெண்கள் தினம்
வாழ்த்துகளாக
ஒலித்துக்கொண்டிருந்த
அமுதராகங்கள்
ஊமையாகிவிட்டன..

எல்லோருக்கும்
எல்லா வாழ்த்துகளையும்
நகலெடுக்கும் வரிசையில்
நிரம்பி வழிகிறது
குறுஞ்செய்திக் கூடம்


எனக்கே எனக்கான
எந்தச் செய்தியும்
குறுஞ்செய்தி அலைவரிசையில்
இல்லை என்றாலும்
வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன்
நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளை.