Friday, August 26, 2022

இலக்கியப்புண்

 இலக்கியப்புண்

---------------------------------

இலக்கியப்புண் சீழ்ப்பிடித்து

நாற்றம் எடுக்கிறது.

அதிலிருந்து எட்டிப்பார்க்கின்றன

இலக்கியப்பீடங்களின் 

முட்டைகள் பொறித்த 

அதிகாரக்குஞ்சுகள்.


செம்மொழியின் கொரொனா தொற்று

கைகழுவி கழுவி 

துடைத்துக் கொள்கிறேன்.

முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.

மூச்சு முட்டுகிறது.

சுவாசிக்க முடியவில்லை.


கனவிலிருந்து விழிக்கும்போது

எம் குடிசைகளில்

அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும்

குழந்தைகளிடம்

கவிதையின் சாயல்.

கொரொனாவாவது மயிராவது!

முகக்கவசத்தை எடுத்து தூர வீசிவிட்டு

அச்சமின்றி சுவாசிக்கிறேன்.

ஹஹா…

காற்று உனக்கானது மட்டுமல்ல..


ரத்தம் வடியும் காயத்தில்

என் ஆத்தாக்கிழவி

காளியாத்தா

எச்சில் துப்பி

தெருப்புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.

பீடங்கள் சரிகின்றன.

டண் டணக்கா..

டணக்க்கு டக்கா.

டண் டணக்க்கா..

இனி என்ன…!?

இலக்கியச் சிறைவெளி உடைகிறது.

ஆடுவோமே பள்ளிப்பாடுவோமே

டண்டணக்கா

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஆடுவோமே நாம் பாடுவோமே1


டண் டணக்கா

டணக்கு டக்கா.

டண் டணக்கா..

ஹேஹே 

டண் டணக்கா..

காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.

டண் டணக்கா..

Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!

 

Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

Saturday, August 13, 2022

ஆகஸ்டு 15 ..ஏன்?


 ஆகஸ்டு 14 இரவு 12 மணி, 1947 

அன்று நடந்தக் காட்சிகளைக் கண்டவர்கள் இன்று நம்மிடம் இல்லை! அப்படி யாராவது ஒன்றிரண்டுபேர் இருந்தால் அவர்களிடம் அந்த முக்கியமான தருணத்தைக் கேளுங்கள்.. அவர்கள் நினைவுகள் மறப்பதற்குள்.

இந்த ஆகஸ்டு 15.. யார் தீர்மானித்தார்கள்?

எப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறீர்கள் ? என்ற கேள்விக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் கொடுப்போம் என்று பதில் சொல்ல நினைத்த மவுண்ட்பேட்டன் தன்னையும் அறியாமல் சொன்ன நாள்தான் ஆகஸ்டு 15. 

அவருக்குள் அந்த நாள் அத்தருணத்தில் ஏன் ? என்றால் எதுவுமே எதேச்சையாகக்கூட வருவதில்லை. ஒவ்வொன்றுக்கு அடிமனதில் எதோ ஒரு காரணம் இருக்கிறது. மவுண்ட்பேட்டன் அறிவித்த ஆகஸ்டு 15ம் அப்படியான  ஒன்றுதான். அன்றுதான் ஜப்பான் இங்கிலாந்திடம் சரணடைந்த நாள். அதை மவுண்ட்பேட்டன் சர்ச்சிலின் அறையில் அவருடன் உட்கார்ந்து வானொலியில் கேட்ட நாள்.இப்படியாக ஆகஸ்டு 15 இந்திய தேச வரலாற்றில் தன்னை எழுதிக்கொண்டது.

ஆனால் அன்று நாள் கிரஹம் சரியில்லை என்றும் இரண்டு நாள் கடந்து சுதந்திரம் வந்திருந்தால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் ஜோதிடர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்.!

சங்கு ஒலித்து இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டதாம்.

சுதந்திரப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட து. 

அந்த அரங்கில் அந்தக் கூட்டத்தில் தேசப்பிதா காந்தி இல்லை. அவர் கல்கத்தாவில் இருந்தார். நமக்கு அந்த ரத்தக்கறை படிந்த வரலாறும் தெரியும்.

(இப்புகைப்படம் அந்த நாளில் ஒரு தருணம்.. நன்றி indian express)


Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

Wednesday, August 3, 2022

5 G அரசியல்

 


 

சரவணா...
எதாவது புரியுதா..
எல்லாம் ஜியோ மயம் என்பதைத்தவிர
எனக்கு எதுவும் புரியல.
திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருவது மட்டும்
புரியுது.

சரவணா,
இந்த அலைக்கற்றை விவகாரத்தில் சொல்லப்படும் தொகை

 எல்லாம் ரொம்ப பெரிசா .. அதுக்கு எத்தனை பூஜ்யம் போடனும்னு 

எப்பவும் எண்ண வேண்டியதா இருக்கு. 

அந்த எண்கள் என்னைப் போன்ற சாமானியர்களை மருட்டுகிறது. 

நாங்க வழக்கம்போல ஜூட்!


என்னவோ 5G அலைக்கற்றை ஒருவழியா முடிஞ்சிட்டுனு அதில் வழக்கம்போல எதிர்பார்த்த து போல JIO தான் வந்திருக்கு.
இது எதுவுமே எங்களுக்கு பெரிசா தெரியல.
ஆனா..
இது எல்லாமே அரசியல்.
இதில் இப்போதும் 2G  - ராஜா அவர்கள்  மட்டும்தான் எதோ 

சொல்லவருகிறார்.

 இது தனிப்பட்ட ராஜா அவர்களின் பிரச்சனை மாதிரி..
2G காலத்திலும் சரி,
5 G காலத்திலும் சரி,
இது அரசியல் மட்டும்தான்.
இது தனிப்பட்ட ஒரு ராஜாவின் பிரச்சனை இல்ல.

என்னவோ தோணிச்சு..


திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருகிறார்.
அது பொதுஜன அரசியலுக்கானதல்ல
ஆதலால் மக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகளோ
அல்லது அரசியல் விமர்சகர்களோ
ஊடகங்களோ ...
வாய்திறக்கவே இல்லை.
அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளிலிருந்து
அறிந்து கொள்ள எதுவுமில்லை.

#2G_5G_POLITICS
 

Monday, August 1, 2022

கலை " திருட்டு"

 



அவளைச் சொந்தம் கொண்டாடிய கணவன்
அவள் ஓவியங்களையும் சொந்தம் கொண்டாடினான்!
உறவின் பெயரால் நடந்த “கலை திருட்டு”
&
அவள் ஓவியங்களுக்கு அவன் சொந்தம் கொண்டாடினான்.
 அவளை வெளியில் செல்லவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.
ஒரு நாளில் 16 மணி நேரம் அவள் தூரிகைகளுடன் வாழ்வதற்கு நிர்பந்திக்கப்பட்டாள். அவள் அவன் மனைவி.
ஆரம்பத்தில் பசி தீர்க்கவும்
குழந்தைக்காகவும் அவள் ஓவியங்களை அவன் விற்பனை 
செய்வதாக நினைத்தாள். அதன்பின் அவன் அவள் ஓவியங்களை வரைந்தவனாகபேட்டி கொடுத்தான்.
 உண்மை அறிந்தவுடன் எதிர்த்த அவள் மிரட்டப் படுகிறாள். 
10 ஆண்டுகள் மணவாழ்க்கை இப்படியாக கடந்துவிடுகிறது!
 
1965ல் அவனை விட்டு வெளியில் வந்து விவாகரத்து 
பெற்ற பிறகும் அவளுக்கு அவனை எதிர்க்கும் துணிச்சல் 
வரவில்லை. காரணம் அவன் புகழ்பெற்ற கலைஞனாக 
அமெரிக்க கலை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறான். 
உண்மையை அவள் சொன்னாலும் எடுபடுமா 
என்ற அச்சத்தில் இன்னும் சில வருடங்கள் கழிகிறது 
அவள் வாழ்க்கை.
1970ல் அவள் அவனை வெளிப்படையாக எதிர்த்து 
பொதுவெளியில் சவாலிடுகிறாள்
. “ மக்கள் முன் வரைந்து காட்டுவோம், 
அவர்கள் தீர்மானிக்கட்டும் இதுவரை வரைந்த 
கைகள் யாருடையவை என்று”
அவன் வரவே இல்லை.
 
1986 ல் ஹோனலுலு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
 53 நிமிடங்களில் நீதிபதி முன்னால் அவள் தூரிகை எடுத்து வரைந்து முடிக்கிறாள். அவனோ தோள்பட்டை காயம், 
அதனால் சரியாக வரைய முடியவில்லை என்று சொல்கிறான்.
 நீதிமன்றம் அவள் தூரிகையை அடையாளம் கண்டு கொண்டு 
அவளுக்கு அவன் 4 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கிறது.
அபாராத தொகை குறைக்கப்படுகிறது… அவளோ .
. “எனக்கு பணம் அல்ல முக்கியம், என் தூரிகையின் உரிமை, 
அடையாளம் முக்கியம்” என்று
அவன் தொட முடியாத தூரத்தை தொடுகிறாள்.
 
அவள் ஓவியங்கள் காட்டும் “பெரிய விழிகள்” பிரபலமானவை.
சான்பிரான்சிஸ்கோவில் “KEANE EYES GALLERY “ அவள் ஓவியங்களைப்பார்க்கலாம். 
 
இதில் வால்டரின் அறிவுத்திருட்டை காலம் கடந்துதான் மார்க்ரேட் நிரூபித்தாள். அதற்குள் பணம் புகழ் அனைத்தும் அவள் உழைப்பில்
வால்டர் அனுபவித்துவிட்டான். 
 
2014 ல் அவள் கதைதான் “BIG EYES” என்ற திரைப்படமாக
வெளிவந்தது. 
 
காலம்தோறும் “அறிவு திருட்டு” உண்டு. 
அதை அம்பலப்படுத்துவது அத்துனை எளிதல்ல. 
அதற்கும் அதை நாம் சொன்னால் நாலு பேர் கேட்கிற 
உயரத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால்
 “ஏழை சொல் அம்பலம் ஏறாது”
 காரணம் அறிவு திருட்டு நடத்தியவர்களின் 
ஆள்பலம், அதிகார பலம்
அச்சுறுத்தலாகவே தொடர்கிறது.

 
(மார்க்ரெட் வரைந்த ஓவியம்; நன்றி art in action)