Monday, July 26, 2010

ஜடாயு எதிர்வினைக்கு நன்றி

மதிப்பிற்குரிய ஜடாயு அவர்கள் என் கருத்துக்கு எழுதியிருக்கும் எதிர்வினைக்கு மிக்க நன்றி.

ஜடாயு:

-----------

>புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது ஒரு *மொழியையும்*, *பிரதேசத்தையும்* மட்டுமே குறிக்கும் சொல்லாகவே சம்ஸ்கிருத இலக்கியம் முழுமையும் பயன்படுத்தப் பட்டு வந்தது, கால்டுவெல் காலம் வரை." >

மிகவும் சரி. அப்படியே ஏற்றுக்கொள்வதில் எதுவும் சிக்கலில்லை!

ஜடாயு:

--------------

>கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //

என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள். >

இந்த இடத்தில் மட்டும் மிகவும் சரியாக திராவிட என்ற சொல் 5 தென்னிந்திய பிராமணர் குழுக்களைக்

குறிப்பதாக ஏற்றுக்கொண்டிருப்பதற்கும் ....மிக மிக நன்றி.

இப்போது எனக்குச் சில சந்தேகங்கள் அய்யா:

தென்னிந்தியாவில் தமிழர்களை அவர்களே விரும்பாத, அடையாளமாக்காத, திராவிடர் என்ற அடையாளத்துடன்

ஒரு கருத்துருவாக்கம் வருகிறது. அக்கருத்து பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தில் தலையாய இடம் பெற்றது இருக்கட்டும்.

தமிழர்கள் திராவிடர்களாக்கப்பட்ட போது .... இந்த தென்னிந்திய பிராமணர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள்?

தென்னிந்திய பிராமணர்களுக்குத் தங்கள் அடையாளம் பறிபோனதில் ஒரு கலகமே வெடித்திருக்க வேண்டாமோ?

ஏன் அப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை?

எனக்கு இந்த இடத்தில் தான் அய்யா ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்து தொலைக்கிறது.

* தங்களுக்கான அடையாளத்தை இழக்கும் தருணத்தில் தென்னிந்திய பிராமணர்கள் கள்ளமவுனம்

சாதித்தது ஏன்?

பிராமணர்கள் என்றாலே ஆரியர்கள். திராவிட கருத்துருவாக்கம் பிராமணர்களுக்கு வழங்கிய

கொடை இதுதான். கால்டுவெல், திராவிட மொழிக்குடும்பம் இத்தியாதி எல்லாம் வருவதற்கு முன்பே

வட இந்திய மனுவும் வேதங்களும் சகலமும் ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் பெற்று பிராமணர்கள் எல்லோரும்

ஆரியர்களாகி சமஸ்கிருதம் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தின் அறிவு பீடத்தில் அமர்ந்துவிடுகிறது.

அதுவும் வெள்ளையர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் ஓர் அறிவுபீடம்.

அதனால் தானோ என்னவோ இந்தச் சுண்டைக்காய் திராவிட அடையாளம் ஒழிந்து போனதில்

தென்னிந்திய பிராமணர்களுக்கு வருத்தமோ இழப்போ இல்லை. ஆரியமாகி உலக அரங்கில்

உயர்ந்த பீடம் கிடைக்கும் போது யாருக்குத்தான் இழக்க மனம் வரும்?

>பிரிட்டிஷார் வர்ண சாதிப் பாகுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பது பற்றிய தவறுதலான பார்வை...

என்று நீங்கள் சொல்வதின் உங்கள் பக்கத்தை என்னால் சரியாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

ராம் ஸ்வரூப்பின் கட்டுரையை உங்கள் மொழியாக்கத்தில் வாசித்தேன்.

உங்கள் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.

Annihilation of caste - பாபாசாகிப் அம்பேத்கரின் கட்டுரை நீங்கள் வாசித்திருக்க கூடும்.

இல்லை என்றால் கட்டாயம் வாசிக்கவும்.

நன்றி.





நன்றி.:thinnai.com 


Sunday July 25, 2010




கடந்த இருவாரங்களாக தமிழ்செல்வன் எழுதிய கிறிஸ்தவ திராவிட மாயவலை கட்டுரையையும், அதற்கு புதியமாதவி எழுதியுள்ள எதிர்வினையையும் படித்தேன்..

தமிழ்செல்வன் எழுதியிருப்பதில் தகவல் பிழைகள் உள்ளன (திராவிட என்ற சொல் உருவாக்கம், கால்டுவெல் ஆகியவை தொடர்பாக).. ஆனால், அவரது கட்டுரை கிறிஸ்தவ மதமாற்றங்கள், தமிழ் கலாசார, வரலாற்றுத் திரிபுகள் ஆகியவற்றில் கிறிஸ்தவ அமைப்புகளும், திராவிட இயக்கமும் இணைந்து செயல்பட்டுள்ள சில விஷயங்களை சரியாகவே விளக்கியுள்ளது என்று நான் கருதுகிறேன்.

புதியமாதவி ஆதியிலிருந்தே திராவிட என்ற சொல் இனத்தைக் குறிப்பதாக எழுதுகிறார்.. இது முற்றிலும் தவறு. அது ஒரு *மொழியையும்*, *பிரதேசத்தையும்* மட்டுமே குறிக்கும் சொல்லாகவே சம்ஸ்கிருத இலக்கியம் முழுமையும் பயன்படுத்தப் பட்டு வந்தது, கால்டுவெல் காலம் வரை.

தமிழ -> தமிள -> த்ரமிள -> த்ரமிட -> த்ரவிட என்பது தான் இந்தச் சொல்லின் உருவாக்கம். இதில் இடையில் உள்ள மூன்று வடிவங்களும் பிராகிருத மொழியில் வழக்கில் இருந்தவை. பிராகிருத இலக்கியங்களில் இச்சொல் வடிவங்கள் வருகின்றன.

// கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்நாடகாஸ்²ச தைலங்கா³: த்³ரவிடா³: மஹராஷ்ட்ரகா​: |

கு³ர்ஜராஸ்²சேதி பஞ்சைவ த்³ரவிடா³: விந்த்⁴யத³க்ஷிணே ||

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது. //

என்று புதியமாதவி எழுதுகிறார். இந்த சுலோகம் “தென்னிந்திய மக்களை” பொதுவாகக் குறிக்கவில்லை. “பஞ்ச திராவிடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து தென்னிந்திய பிராமணர் குழுக்களைக் குறிக்கிறது. இவர்கள் விந்தியத்திற்குத் தெற்கே வசிப்பவர்கள்.

இதற்கு அடுத்த சுலோகத்தைப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும். அந்த சுலோகம் “பஞ்ச கௌடர்” என்று அழைக்கப் பட்ட ஐந்து வட இந்திய பிராம்மணர்களைப் பட்டியலிடுகிறது. இவர்கள் விந்தியத்திற்கு வடக்கே வசிப்பவர்கள்.

ஸாரஸ்வதா​: காந்யகுப்³ஜா: கௌ³டா³: உத்கலமைதி²லா​: |

பஞ்சகௌ³டா³: இதி க்²யாதா விந்த்⁴ஸ்யோத்தரவாஸின: ||

(நன்றி: http://en.wikipedia.org/wiki/Brahmin)

இந்த சுலோகத்திலும் முழுக்க முழுக்க பிரதேச வேறுபாடுகள் மட்டுமே சுட்டப் படுகின்றன. இனவேறுபாடுகள் அல்ல.

பிரிட்டிஷார் வர்ண, சாதி வேறுபாடுகளை எங்ஙனம் திரித்தனர் என்பதைப் பற்றிய தவறுதலான பார்வையையே அவரது பதில் அளிக்கிறது... இது பற்றி சிறந்த சிந்தனையாளர்கள் ராம் ஸ்வரூப் எழுதிய the logic behind the perversion of caste என்ற கட்டுரையைப் படிக்கக் கோருகிறேன். இந்தக் கட்டுரையை நான் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளேன் -

சாதிகள் வக்கிரமடைந்தது எப்படி? - http://www.tamilhindu.com/2010/05/perversion-of-caste-by-ram-swarup/

அன்புடன்,

ஜடாயு

தமிழ்ச்செல்வனின் திண்ணை கட்டுரை தொடர்பாக

அண்மையில் தோழர் தமிழ்ச்செல்வன் திண்ணையில் எழுதியிருந்த கீழ்க்கண்ட கட்டுரைத் தொடரை வாசித்தப் போது சில செய்திகளை ஆரம்பத்திலேயே தெளிவு படுத்திக் கொள்வது நல்லது என்று நினைத்தேன்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=21007042&format=html

கோவையில் நடந்து முடிந்த செம்மொழி திமுக திருவிழாவில் பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு “கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கப்பட்டதையும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூட, காலாவதியாகிப் போன ஆரிய-திராவிட கோட்பாடுகளை இன்னும் ஆதரித்து வருபவர் தான் என்ற விமர்சனத்தை வைத்திருப்பதும் இன்றைய சூழலில் ஆரிய திராவிட இனவரலாற்றை ஆய்வு மனப்பான்மையுடன் அணுகும் அனைவருக்கும் இணை கோடாக இருக்கும் இன்னொரு பாதையை அறிமுகப்படுத்தும் முன்னுரையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் போகிற போக்கில் தமிழ்ச்செல்வன் அவர்கள் சில கருத்துகளை உதிர்த்து செல்கிறார்.

***விமர்சனத்திற்குரிய அக்கருத்துகள்:

கிறுத்துவ மதத்தைப் பரப்பவேண்டும் என்கிற ஒரே குறிக்கோளோடு தமிழகத்திற்கு வந்திறங்கிய பாதிரிமார்களுள் ஒருவரான ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. சங்க கால இலக்கியங்களிலும் அதனைத் தொடர்ந்து இடைக் கால இலக்கியங்களிலும் நூல்களிலும் கூட ’திராவிடம்’ என்கிற வார்த்தைப் பிரயோகம் இல்லை. மண்ணின் மைந்தர்களிடையே பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் தான் கிறுத்துவ பாதிரியான கால்டுவெல் அவ்வார்த்தையை பிரயோகித்துள்ளார் என்பதும் உண்மை. ஒரு பக்கம் அரசியல் நிறுவனமான ஆங்கிலேய அரசு, மண்ணின் மைந்தர்களைப் பிரித்து ஆள்வதற்காக, ஆரிய-திராவிட கோட்பாடுகளைப் பயன் படுத்தியது என்றால், மறுபக்கம் மத நிறுவனங்கள் நம் பூர்வீக மொழியைக் கைபற்றி, கலாசாரத்தை அழித்து, நம் தேசத்தை கிறுத்துவமயமாக்க அதே கோட்பாடுகளைப் பயன்படுத்தின.*** என்கிறார்.

>ராபர்டு கால்டுவெல் தான் “திராவிடம்” என்கிற வார்த்தையைத் தமிழில் அறிமுகப் படுத்தியவர் என்கிற உண்மையை நாம் மறக்கக் கூடாது. என்கிறார் தமிழ்ச்செல்வன்.

அவர் மறந்திருக்கும் சில செய்திகளை நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. 1856ல் தான் கால்டுவெல் நூலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. ஆனால் 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் எழுதியிருக்கும் "சவுந்தர்யலாகிரி" நூலின் 75வது பாடல் திருஞானசம்பந்தரை 'திராவிடசிசு' என்று அழைக்கிறது. இன்றைக்கு ஆரிய திராவிட இன வரலாற்று ஆய்விலும் திராவிடர் தமிழர், திராவிட தேசம், தமிழ் தேசம் என்ற பார்வையிலும் மிகவும் ஆணித்தரமான ஓர் அடையாளமாகி இனவரலாற்றை மறுவாசிப்பு செய்து கொண்டிருக்கிறது.



கல்ஹனரால் 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "ராஜதரங்கினி" என்ற காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலும்

கர்னாடக ஆஸ்ச்ச தைலங்கா திராவிட மஹாராஷ்ட்ரகஹோ l

குர்ஜராஷ்சேத்தி பஞ்சைவ திராவிட விந்தியதக்ஷஜீனே ll

என்று தென்னிந்திய மக்களைக் குறிக்க திராவிட என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறது.

புராணங்களில் பாகவத புராணம் (9 அல்லது 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் ) 'திராவிட தேசத்து ஈஸ்வரனும்' என்று பதிவு செய்திருக்கிறது.

எனவே திராவிடம் என்ற இங்கு ஏற்கனவே இருந்த ஒரு கருத்தியலைத்தான் கால்டுவெல் தன் ஆய்வில் எடுத்துக் கொண்டாரே தவிர அவர் உருவாக்கிய வார்த்தையோ கருத்துருவாக்கமோ அல்ல.

இனி, கால்டுவெல் ஆய்வுகளை மதமாற்ற கருவியுடன் இணைப்பதும் , பொத்தம் பொதுவில் குற்றம் சாட்டுவது வரலாற்றின் சில பக்கங்களை இருட்டடிப்பு செய்யவே உதவும். கால்டுவெல் மதமாற்றம் செய்யவில்லை என்று வாதிடுவது என் நோக்கமல்ல. அதற்காக தான் அவர் வந்தார். ஆனால் அவராலும் அவருடைய மதமாற்ற ஆயுதத்தாலும் ஏற்கனவே தடித்துப் போய்க்கிடந்த இந்த தமிழ்ச்சமூகத்தின் சாதிய ஆதிக்கத்தை இம்மி அளவு கூட அசைக்க முடியவில்லை. அதில் அவருக்கு மிகப்பெரிய தோல்விதான். பறையர்கள் ஆதிதிராவிடர்கள், ஆதித்தமிழர்கள் என்று தன்னுடைய ஆய்வு நூலில் அவர் பின்னூட்டாக இணைத்திருப்பதை அப்படியே கிழித்துவிட்டு மறுபதிப்புகள் வெளியிட்ட தமிழ் அறிவுஜீவிகளுக்கும் பல்கலை கழகங்களுக்கும் அவருடைய சமூகப்பார்வை ஒவ்வாமையை இன்றைக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. நான் வலியுறுத்த வரும் செய்தி இன்றுவரை இந்தச் சாதித்தமிழ் ஏற்றுக்கொள்ளாத ஒரு கருத்தை தன் ஆய்வில் முன்வைத்த கால்டுவெல் கூட பறையர்களை மதமாற்றம் செய்யவில்லை. அதாவது தன்னுடைய மதமாற்ற கோட்பாட்டுக்கும் எல்லைத்தாண்டாத பாதுகாப்பான ஒரு சாதிய அமைப்பை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவர் மதமாற்றியதெல்லாம் நாடார் சாதி மக்களைத்தான். அவர் மட்டும் இந்தச் சாதிய எல்லைக் கோட்டைத் தாண்டி இருப்பாரேயானால் அவரால் எதையும் சாதித்திருக்க முடியாது. இந்தச் சாதிய சமூகம் அவரைப் புறந்தள்ளி இருக்கும். என்னவோ கால்டுவெல் , பாதிரிமார்கள் வருவதற்கு முன்பு இந்த மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தது போலவும் அவர்கள் வந்துதான் நம்முடைய கலாச்சாரத்தை அழித்தது போலவும் தமிழ்ச்செல்வன் வருத்தப்படுவது புரியவில்லை!

அவர் மண்ணின் மைந்தர்கள் என்றும் நம்முடைய கலாச்சாரம் என்றும் பேசுவது யாரை, யாருடைய கலாச்சாரத்தைப் பற்றி என்பதும் யோசிக்க வைக்கிறது.

ஆங்கில அரசுக்கு ஆரியம் திராவிடம் அதிகம் தேவைப்படவில்லை. ஏனேனில் ஆரியம் திராவிடம் என்ற இரட்டைப்பிரிவு இந்திய சமூகத்தை வலிமைப்படுத்திவிடும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். அதைவிட ஏற்கனவே இந்திய சமூகத்தில் நிலவிய ஆயிரக்கணக்கான சாதியப்படிநிலைப் பிரிவை அவர்கள் அப்படியே சேதப்படுத்தமால் இருந்தால் போதும் என்று நினைத்தார்கள். அதில்தான் அவர்களுக்கு ஆதாயம் இருந்தது.

கிறித்தவ மதமாற்றத்திற்கு இங்கிருந்த சாதியமும் அதைக்காப்பாற்றிய இந்து மதமும் காரணமே தவிர இந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் புதுக்காரணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மராத்திய மாநிலத்தில் (அன்றைய பம்பாய் மகாணத்தில்) ஆங்கில ஆட்சி செய்த ஒரு மாற்றம் தான் மகர்களின் எழுச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது இதுதான்:

1857ல் நடந்த சிப்பாய் கலகத்தின் காரண காரியங்களை ஆராய்வதற்கு 1858ல் ஏற்படுத்தப்பட்ட பீள் கமிஷன் சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி ஏற்கனவே இந்தியாவில் இருந்த சமூகப்படிநிலை கட்டுமானத்தை அப்படியே ஏற்றுக்கொள்வது என்று முடிவுக்கு வந்தது. அதாவது சாதிய வர்ணபாகுபாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் சட்டதிட்டங்களை மாற்றிக்கொள்வது என்பதுதான் அது. (We cannot practically ignore it (the caste system) so long as the natives socially maintain it). இக்கமிஷனின் பரிந்துரையை ஏற்று 1890ல் ஆங்கிலேயர் தங்கள் படைகளைச் சீரமைத்தனர். அப்போது இராணுவ தளபதியாக இருந்த லார்ட் கிட்சனர் (Lord Kitchner, commander in chief of the indian army discontinued the mahar recruitment on the plea that the mahars did not belong to the martial races of india) படைவீரர்கள் சேர்ப்புக்கான விதிகளை இந்திய சமுதாய அடித்தளக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றம் செய்தார்.

எனவே என்னவோ ஆங்கிலேயர்களும் பாதிரிமார்களும் வந்துதான் நம் மண்ணின் மைந்தர்களைப் பிரித்தார்கள் என்றெல்லாம் சொல்வது உண்மைகளை இருட்டடிப்பு செய்யவே உதவும். நெய்தல்நில மக்கள் பரதவர்கள் மதமாற்றத்திற்கும் கொங்கன் கடற்கரை நெய்தல் நில மக்கள் மதமாறியதற்குமான அரசியல் காரணங்கள் பல. மதமாற்றத்திற்கான காரணங்கள் சமூகத்திற்கு சமூகம், இடத்திற்கு இடம் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

கால்டுவெல் செய்ததெல்லாம் திராவிடம் என்ற சொல்லை தமிழர்களுடன் இணைத்தது தான். அது சரியோ தவறோ விமர்சனத்திற்கு உரியதுதான் ஆனால் அவருடைய நூலில் அவர் செய்திருக்கும் ஆய்வுகளையோ அந்த ஆய்வுகளின் மூலம் அவர் எடுத்திருக்கும் முடிவுகளையோ மறுப்பதற்கு இடமில்லை. தமிழ்த்தேசியப் பார்வையை முன்வைக்கும் முனைவர் த.செயராமன்., திராவிடம், திராவிடர், திராவிட தேசம்.. ஆகிய சொற்கள் வரலாற்று ரீதியாக பார்ப்பனர்களோடு தொடர்புடைய சொற்கள், இச்சொற்களோடு பார்ப்பனர்களுக்கு முதல் உரிமையும் முற்றுரிமையும் இருக்கிறது ' என்கிறார்

தமிழ்ச்செல்வன் பொத்தம் பொதுவாக கருத்துகளை எழுதிச்செல்வதை விட வரலாற்றுச் சான்றுகளுடனும் மாற்றுக்கருத்துகளையும் அறிந்து அதை ஆய்வுக்கு உட்படுத்தி மறுவாசிப்பு செய்வதும் இன்றைய தேவை மட்டுமல்ல, அவரிடமிருந்து என்போன்றவர்கள் எதிர்ப்பார்ப்பதும் ....

----------

Tuesday, July 13, 2010

கடல் - Sunanda Pradhan - Oriya poet


யுகம் யுகமாய்
கடல்பக்கம் திரும்பாத நான்
திடீரென ஒருநாள்
காற்றைக்கிழித்து நீந்தி
கடலுக்கு வந்தேன்
ஈரமானக் கனவுகளுடன்.

பொங்கும் காதல் மார்பில்
நிம்மதியாக தலைசாய்த்து
கடலைப் பார்க்கிறேன்
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்
எவ்வளவு காலம்?
தெரியாது.
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

தெரியவில்லை
என் எதிரில் நிற்பது
கட்டித்தழுவி ஆலிங்கனம் செய்வது
கடலா இல்லை நீயா?
நனைக்கும் ஈரத்திலிருந்து விலகி
ஆசைதீரக் கடலைப் பார்த்துக் கொண்டே
ஆனால்.. ஆனால்..
நீதான் அது!
ஏன் நடிக்கவேண்டும்
உன் குரல் கேட்கவில்லை என்று?

சின்ன நண்டுவைப் போல
ஓடினேன் கடலுக்குள்
புடவை மடிப்புகளைச்
சரிசெய்துக்கொண்டே
தயக்கமின்றி
இன்னும் இன்னும் ஆழமாய்...
உடலெங்கும் கொஞ்சி சீராட்டும்
கடல் அலைகள் தந்த
உணர்வுகளுடன்..

இதோ..
நானே அலையாகிவிடாமல்
வெளியில் இழுத்தாய்
அங்குமிங்கும் பார்க்கிறேன்
எங்கே..? காணவில்லை உன்னை!
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை
கடற்கரைமட்டும்
கொஞ்சம் கொஞ்சமாய்
சின்னப்புள்ளியாய்..

------------

Saturday, July 3, 2010

தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்--நா.மு

WELL DONE Naa.Mu.sir!




தமிழ்ப் பாடநூல்களில் தமிழ்
--நா.முத்து நிலவன்--

கோவையில் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாடு நடக்கும் வேளையில், தமிழ்வளர்ச்சி குறித்த பல்வகைச் சிந்தனைகள் எழுவது இயல்பே. இதில், தமிழ்நாட்டு உயர்நிலைப்பள்ளிப் பாடநூல்களில் தமிழறிவு குறித்த சிந்தனைகளையும், அதுபற்றிய நம் ஆலோசனைகளையும் முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்து --10ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்று-- வரும் மாணவர்கள்; தாம் நினைப்பததைப் பிழையின்றி எழுதவேண்டும், சரியான உச்சரிப்புடன் பேசவேண்டும் ஆனால் இந்த இரண்டும் நம் பள்ளிப் பாடநூல்களின் வழியாகப் பெரும்பாலும் நிறைவேறவில்லை என்பதுதானே இன்றைய நிலை? இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவது, சிந்தனையை வளர்ப்பது இதையெல்லாம் விடவும் சொந்த சிந்தனையை வெளிப்படுத்தும் சாதாரண மொழிஆற்றல்தானே பள்ளிப்பருவத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்? இதற்கு நமது தமிழ்ப்பாட நூல்களை அல்லாமல் வேறு அடிப்படை இருக்கமுடியுமா என்ன?

அடிப்படை மொழியறிவுக்கான பயிற்சி :
மொழிப்பாடத்தின் முக்கியநோக்கம் பிழையின்றி எழுதவும் பேசவுமான பயிற்சிதான். இதற்காகத்தான் மொழிப்பாடங்களில் இரண்டாம்தாள் வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கென்று தனித்த எளிமையான பாடப் பகுதியே இல்லை. மாணவர்களால் வெறுக்கப்படும் இலக்கணப்பகுதிகளும் மனப்பாடம்செய்தோ எதையாவதுபார்த்தோ எழுதக்கூடியதான கட்டுரைப் பகுதிகளுமே உள்ளன. பிறகு?
நம் தமிழில் ‘க்’முதல் ‘ன்;’வரையான மெய்யெழுத்துகளின் வரிசை அமைப்புக்கான காரணமென்ன? இதையறிந்து கொண்டால் எழுத்துப்பிழைகள் வெகுவாகக் குறையும். இதை நமது மாணவர்க்குச் சொல்லித்தர வேண்டாமா? (தமிழாசிரியர்க்குச் சொல்லியிருந்தால் அல்லவா அவர் தம் மாணவர்க்குச் சொல்வார்?) தமிழ் முதுகலை படித்தவர்களிடம் கூட இந்தக் கேள்வியை நீங்கள் துணிந்து கேட்கலாம்! பெரும்பாலும் சரியானபதில் கிடைக்காது என்பதுதான் எனது அனுபவத்தில் கண்ட கசப்பான உண்மை!
தமிழ் மெய்யெழுத்துகளின் வரிசையில், காரணத்துடனான ஓர் ஒழுங்குமுறை உள்ளது.
1.க் எனும் வல்லினத்தை அடுத்து 2.ங்; எனும் மெல்லின எழுத்து,
3.ச்; எனும் வல்லினத்தை அடுத்து 4.ஞ் எனும் மெல்லின எழுத்து,
5.ட்; எனும் வல்லினத்தை அடுத்து 6.ண்;; எனும் மெல்லின எழுத்து,
7.த்; எனும் வல்லினத்தை அடுத்து 8.ந் எனும் மெல்லின எழுத்து,
9.ப் எனும் வல்லினத்தை அடுத்து 10.ம் எனும் மெல்லின எழுத்து,
அடுத்து வரிசையாக 11.ய், 12.ர், 13.ல், 14.வ், 15.ழ், 16.ள் எனும் இடையின எழுத்துகள், இறுதியாக மீண்டும் 17. ற் எனும் வல்லின எழுத்தை அடுத்து 18. ன் எனும் மெல்லின எழுத்து, இதில், இடையில் வரும் இடையின எழுத்துகளைத் தவிர்த்து ஏனைய 16 எழுத்துகளும் ‘வல்லினத்தைஅடுத்து மெல்லினம’; எனும்வரிசையில் --க,ங.ச,ஞ,ட,ண எனும் வரிசையில்-- அடுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதற்கும் காரணம் உண்டு! தமிழ்ச் சொற்களின் எழுத்து அமைப்புமுறையே இதன் அடிப்படைக் காரணம். அதாவது தமிழ்ச்சொற்களில் வல்லின உயிர்மெய்எழுத்துக்கு முன்பாக மெய்எழுத்து வந்தால் அது அதற்குரிய மெல்லினமாக மட்டுமே வரும். உதாரணமாக ‘க’எனும் வல்லினவர்க்கத்தைச் சேர்ந்த உயிர்மெய்எழுத்து வரும் சொல்லில், அதற்குமுந்திய எழுத்து ‘ங்’ எனும் மெல்லின மெய்எழுத்தாகவே வரும். (க,கா,கி,கீ.கு,கூ முதலான 12எழுத்தும் ‘க’வர்க்கம் என்பதுபோல)
எ.கா.:1.‘தங்கம்’- ‘ங்’ எழுத்தையடுத்து ‘க’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும் வராது!
எ.கா.:2.‘மஞ்சள்’-‘ஞ்’ எழுத்தையடுத்து ‘ச’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும்; வராது!
எ.கா.:3.‘பந்து’- ‘ந்;’ எழுத்தை அடுத்து ‘த’வர்க்கம் அல்லாத வெறெந்த எழுத்தும் வராது!
தமிழ் எழுத்துகளின் இந்த ‘வர்க்க ஒற்றுமையை’ தமிழ்மாணவர்க்கு நாம் சொல்லித்தரவில்லை!
இந்த அடிப்படையிலேயே மெய்எழுத்துகளின் வரிசையும் அமைக்கப் பட்டுள்ளது என்பதைச் சொல்லித்தந்துவிட்டால் எழுத்துப் பிழை வெகுவாகக் குறைந்துவிடும். வல்லினம் எங்கு மிகும், மிகாது என்பதை உதாரணங்களைக் கொண்டன்றி இப்போது சொல்வதுபோல ‘விதி’களைமட்டுமே கூறி விலகிவிடக்கூடாது. இதை விட்டுவிட்டு, சும்மா “வல்லினஎழுத்து ஆறுக்கும் மெல்லினஎழுத்து ஆறும் இனம்” என்று பொத்தாம் பொதுவாக மனப்பாடம் செய்யச்சொல்லி வந்திருக்கிறோம். எழுத்துப்பிழையும். உச்சரிப்புப் பிழையும் மண்டி வளர்கிறது!

குண்டு ‘ல’ வும், வெள்ளிக்கால் ‘ள’ கரமும் :
இவ்வாறே ‘மண்டபம்’ அல்லது ‘கண்டு’ நண்டு’ எனும் சொற்களை எழுதும்போது, ‘ரெண்டு சுழி ன வா?’ அல்லது ‘மூணுசுழி ண வா?’ எனும் சந்தேகம் (?) வருமானால், அடுத்துள்ள எழுத்து ட எனில் அது ‘ண’ எழுத்துத்தான் எனத் தெளியலாம். இதனால்தான் ‘ண’ என்பதை ‘மூணுசுழி’என்று சொல்லாமல் ‘டண்ணகரம்’ என்று சொல்ல வேண்டும். இவ்வாறே ‘ரெண்டுசுழி’யை ‘றன்னகரம்’ எனச் சொல்லவேண்டும்.
“குண்டு ல” வை உச்சரிப்புக் கருதி ‘ஒற்றல் லகரம’; எனவும், “வெள்ளிக்கால் ள” வை ‘வருடல் ள’கரம் எனவும் சொல்லித்தந்தால் பெயருடன் உச்சரிப்பும் தெளிவாகிவிடும்.
நுனிநாக்கு மேல்வாயின் நுனி அண்ணத்தில் ஒற்ற வருவது ஒற்றல் ‘ல’கரம்.
நுனிநாக்கு மேல்வாயின் நடு அண்ணத்தில் வருட வருவது வருடல் ‘ள’கரம்.
இந்தஎழுத்துகளை உச்சரிக்கும்போது நாக்கும் உதடும் எவ்வாறு செயற்படும் என்பதை எளிய படங்களோடு விளக்கலாம். இவை தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் விளக்கப்பட்டுள்ளன. தற்போது செயல்வழிக் கற்றல்-- அ.ஆ.கல்வி-திட்டத்தில் உச்சரிப்புக்கான ஒருசில படங்கள் உள்ளன. இது எழுத்துப்பிழை நீக்கத்திற்கும் விரிவடைய வேண்டும்! இதுபோல எழுத்துப்பிழை நீக்கத்திற்கும், உச்சரிப்புப் பிழை நீக்கத்திற்குமான பகுதியை ஆழப்படுத்தாமல் ஆயிரம் இலக்கணங்களைப் பாடம் வைத்தாலும் அவை வெற்று மனப்பாடமாகவே அமையும். பிழைகளும் தொடரும்!

பகுத்தறிவும் தமிழறிவும் :
பொதுவாகத் தமிழ்ப் பாடநூல்களின் அமைப்பு முறை சலிப்பூட்டுவதாகவே உள்ளது.இரண்டு தலைமுறையாக உள்ள தமிழ்ப் பாடநூல்களின்; அமைப்புமுறை மாறி, மாறி, ‘பழையன கழிந்து, புதியன புகுந்துவர’ வேண்டாமா?
ஆனால், மையமாக நாம் விரும்பும் தமிழறிவு-பகுத்தறிவு-சமூகஉணர்வு சார்ந்த செய்திகள் எந்தத் தமிழ்ப்பாட நூலிலும் மாணவர்க்கு முழுமையாகத் தரப்படுவதில்லை என்பது மட்டுமல்ல, காப்பியங்களிலம், சிற்றிலக்கியங்களிலும் மண்டிக்கிடக்கும் பெண்ணடிமை, மற்றும் மூடநம்பிக்கைக் கருத்துகள் பாடப்பகுதிகளில் ஊடாடிக் கிடப்பதும் வருத்தத்திற்குரியது! இதில் கட்சிபேதமெல்லாம் கிடையாது! ஆட்சிமாறினாலும் பாடநூல் ஆசிரியர்; மாறமாட்டார், அவர்களே மாறினாலும் அறிவுசார் செய்திகளில்லாமலே பாடநூல்வருவது மட்டும் தொடரும்!தகவல்களை மட்டும் தரும் பாடங்களால் அறிவு வளருமா என்ன? தகவல் வேறு அறிவு வேறு அல்லவா?

பெரியாரைப் பற்றிய பாடங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூல்களில் இடம்பெற்றுள்ளன. இது நல்லதுதான், ஆனால், பெரியாரின் தலையாய கருத்தான ‘கடவுள் இல்லை’ என்பது பற்றி, அவரைப்பற்றிய எந்தஒரு பாடத்திலும் ஒருவரிகூட இல்லை. இப்போதுள்ள 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் 6ஆம் பாடமாக திரு நெ.து.சு. எழுதிய ‘இவர்தான்; பெரியார்’ பாடத்திலும் சரி, இப்போது வெளிவந்துள்ள 6ஆம் வகுப்புச் சமச்சீர்க்கல்வித் தமிழ்ப்பாடநூலிலும் சரி ‘பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர்’ எனும் செய்தி மட்டும் இல்லை! அப்புறம் எதற்குப் பெரியாரைப்பற்றிப் பாடம்வைக்க வேண்டும்? வெறும் தகவலுக்காகவா? ‘பிரச்சினையைத் தூக்கி நடுவில் வை. சுற்றி சுற்றி வா! தொட்டுவிடாதே’ என்பது கந்தர்வன் எழுதிய கவிதை!

ஒருபக்கம் பெரியாரைப்பற்றிய தகவல்களைப் பற்றி மட்டும் பாடம் வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் அவர் வாழ்நாள் முழுவதும் எதிர்த்துப்போராடிய பல மூடநம்பிக்கைகளை அதேபாடநூலின் வேறு பக்கங்களில் தொடரும்படிப் பாடம் வைப்பதுபற்றி என்ன சொல்ல?

புராணமா? வரலாறா? குழப்பும் பாடப் பகுதிகள்:
பொய்மூட்டைகளான புராணங்களை ஏதோ நம்நாட்டு வரலாறு போலவே பாடக்குறிப்புகளில் தரப்படுகிறது! 1996இல் மறுபதிப்புக்கண்ட பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றிருந்த ‘திருவிளையாடற் புராணம்’ பகுதிக்கான முன்னுரை இப்படித் தொடங்குகிறது : ‘சிவபெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல் களில் ஒன்று தருமிக்குப் பொற்கிழி அளித்ததாகும்’ இந்த முன்னுரையின் கடைசி 2 வரிகளையும் பாருங்கள் : ‘சோமசுந்தரக் கடவுள் புலவனாய்த் தோன்றி நக்கீரனுடன் வாதிட்டதையும் விளக்குவதே நம்பாடப்பகுதி யாகும்’!(பக்கம்:34) இதன்பின் 1997ஆம்ஆண்டுப் பாடநூலில் இதே பெரியபுராணம் பற்றிய குறிப்புரையில், ‘‘தில்லைப்பெருமான் ‘உலகெலாம்’ என்ற அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினார்’’ என்று (பக்:48) மாணவர்க்குச் சொல்லப் பட்டுள்ள செய்தி, புராணமா? வுரலாறா? இவ்விரு பாடநூல்களின் நூலாசிரியர்குழுத் தலைவர் டாக்டர் மு.பி.பா.என்னும் ஒருவரே! இதில் கவனிக்க வேண்டிய செய்தி-- 1996இல் தமிழ்நாட்டு ஆளும்கட்சி மாறினாலும் இந்த நூலாசிரியர் மாறவில்லை என்பதுதான்! கற்றோர்க்கு ‘சென்ற’ இடமெல்லாம் சிறப்பு!

இவை பத்தாம்வகுப்பில் என்றால், 2005தொடங்கி, இந்தஆண்டும் பாடமாகஉள்ள 8ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் திருவிளையாடற் புராண முன்னுரையில் “புராணம் - பழைய வரலாறு”-என்றே பொருள் சொல்லியிருப்பது வெகுசிறப்பு! இந்த நூலாசிரியர் குழுத்தலைவர் திரு.வி.கணபதி “மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்தருளிய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடற் புராணம்” என்று தெளிவாகவே சொல்லிவிட்டார் (பக்:36) இந்த நூலாசிரியர் இருவரும் ‘திருவிளையாடல்’ தமிழ்த்திரைப்பட ரசிகர்கள் என்பது மட்டும் தெரிகிறது! நாமும் நல்ல கலையை ரசிப்போம், அதற்காக இப்படியா!

இந்த ‘வரலாற்றுக் கற்பனை’க்கு ஊற்றுக்கண்ணான குறுந்தொகைப் பாடல்(எண்:02) ‘கொங்குதேர்வாழ்க்கை’ யில், ஆசிரியர்பெயர் ‘இறையனார்’ என்றுள்ளதே தவிர அதில் செண்பகப் பாண்டியனும் இல்லை, நெற்றிக்கண் திறந்த சிவாஜிகணேசனும் இல்லை! ‘நெற்றிக் கண்திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று வாதிட்ட ஏ.பி.நாகராஜனும் இல்லை! நடிப்பும் வசனமும் நன்றாக இருந்ததால் மாணவர்களைப் போலவே இந்த நூலாசிரியர்களும் புராணக் கற்பனையை நடந்த வரலாறாகவே நம்பி, மாணவர்களையும் நம்ப வைத்துவிட்டார்கள் என்பது மட்டும் உறுதி!

இவ்வாறே தற்போதுள்ள 7ஆம் வகுப்புச் செய்யுள் பகுதியில் வரும் ‘சங்கரன் பெற்ற புண்கள்’ பாடல்பகுதிக் கதைகளும், ‘முப்புரம்எரித்தது’போலப் பற்பல புராணப் புனைவுகளும், வரலாற்றோடு குழப்பும் பகுதிகளாக நிறையவே உள்ளன… நல்லவேளை இந்தப் புராணங்களை வரலாற்றுப் பாடநூல்களில் சேர்க்காமல் போனார்களே?

விதியை வலியுறுத்தும் பாடப்பகுதிகள்!:
சிலப்பதிகாரப் பாடங்களில், அறிவுப்பூர்வமாகச் சொல்ல வேண்டிய பகுதி, கண்ணகியின் பாத்திரப் படைப்பு. ‘திருமணம் ஆனபெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு முற்பகுதிக் கண்ணகி உதாரணம் எனில், ஒருவேளை அப்படிஇருந்துவிட்டால் பின்னர் எப்படிஇருக்கவேண்டும் என்பதற்கே பிற்பகுதிக் கண்ணகி உதாரணம்’ என்றல்லவா சொல்லித் தரவேண்;டும்? அதைவிட்டு ‘சிலம்பு கூறும் மூன்று நீதிகள்;’ என்று கற்பைப் பற்றியும், விதியைப் பற்றியும் வலியுறுத்தவா சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது? ‘கற்பைப் பற்றி என்னவிளக்கம் சொல்ல வந்தாலும் அது பெண்ணடிமைத் தனத்தில்தான் முடியும்’ என்றுசொன்ன தந்தைபெரியார் இப்படிச் சிலப்பதிகாரத்தைப் பயன்படுத்துவது சரிதான் என்று சொல்வாரா? 2003முதல் இப்போதுவரை பாடநூலாக உள்ள பத்தாம் வகுப்புச் செய்யுள் பகுதியில், பாடப்பகுதிக்கும் அப்பாற்பட்டு இந்த ‘மூன்று நீதிகள்’ நூல்குறிப்பில் தரப்பட்டுள்ளன! அதை மாணவர்கள் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ கேள்வி-பதில் பகுதியிலும் ‘சிலம்புஉணர்த்தும் மூன்று நீதிகள் என்ன?’ என்று(பக்:39)சேர்த்திருப்பதன் நோக்கம் என்ன? ‘மாணவர்களின் விதி இதையெல்லாம் படித்துத்தான் ஆகவேண்டும்’ என்பது தானோ? ‘விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயடா?!’

சாதி ஒற்றுமையைப் படி! - குலப்பெருமையும் பேசு!:
தமிழ்நாட்டுப் பாடநூல் அனைத்திலும் முதல்பக்கத்திலேயே ‘தீண்டாமை ஒழிப்பு’ வாசகங்கள் இடம்பெற்றிருப்பது பொருத்தம்தான். உள்ளேயும் பல்வேறு பாட-செய்யுள் பகுதிகளில் சாதிஒழிப்பு மற்றும் சமத்துவக் கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. பாராட்டத்தான் வேண்டும். ஆனால், நுட்பமாகச் சில இடங்களில் நூலாசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக ---அல்லது மிகுந்த கவனத்துடன்--- இடம்பெறும் ‘சாதிய’ மற்றும் ‘குலப்பெருமை’ தகவல்களை என்ன செய்வது? 1997இல் --கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டு-- வெளிவந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாட நூலில், ‘குலவித்தை கல்லாமல் பாகம் படும்’ எனும் --குலக்கல்வித திட்டத்திற்கு ஆதரவான-- பழமொழிப்பாடல் இடம்பெற்றது எவ்வாறு? இதில், இந்தப் பாடலைமட்டும் தனியாக எடுத்துப் போட்டு ‘அணிவிளக்கம்’ தந்த சிறப்புக்கவனம் வேறு! பல தலைமுறைகளை நாசப்படுத்துமல்லவா இது?

இதேபோல, 1996வரை இருந்த தமிழ்ப்பாடநூலின் ‘கம்பராமாயண’ பாடற்பகுதியில் ‘இராமனின் குலச்சிறப்புகளை விளக்கச் சொல்லி’ ஒரு கேள்வி, அதே பகுதியில் கம்பர் ‘உவச்சர் மரபு’எனும் சாதிய விளக்கம் வேறு! இதைப் படிக்கும் மாணவர் நெஞ்சில், சாதிப்பெருமையும் குலப்பெருமையும் ஆழப்பதியுமே தவிர அது தவறு எனும் கருத்து வளராதே! இந்தக் கவலை பாடநூல் ஆசிரியர்க்கு இருக்கவேண்டாமா?!

பெண்ணடிமையை வலிறுத்தும் பாரதிதாசன்!:
ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் ‘குடும்ப விளக்கு’ பாடப்பகுதி இருந்தது. ‘பரவாயில்லையே! பெண்கல்வியை வலியுறுத்தும் சிறுகாவியமாயிற்றே!’ என்று மகிழ்ந்துபோனேன். அதுவே கொஞ்சம் அதிகமாகி, படித்தபெண்ணும் வீட்டுவேலைகளைத் தவறாமல் செய்யவேண்டும் என்னும்தொனி அதிகரித்துவிட்டதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதையும் தாண்டிக் கேள்விபதில் பகுதியிலேயே ‘ஒரு பெண் காலையில் எழுந்து செய்யவேண்டிய வேலைகள் என்னென்ன?’ என்று கோடுபோட்டுத் தருவதை பாரதிதாசனே மன்னிக்கமாட்டார். இதற்குக் காரணம் பாடநூலாசிரியர்தம் மண்டையில் ஊறிய பெண்ணடிமைத்தனமன்றி வேறென்னவாக இருக்கும்?

இல்லாவிட்டால், சிற்றிலக்கியப் பகுதியில், ‘உலா’வைப் பாடமாக வைக்கும் போதெல்லாம், ‘வீதிஉலா வரும் அரசனின் அழகைப் பார்த்து, ஏழுபருவப் பெண்களும் ‘ஆசைப்பட்டு’ புலம்புவதுதான் உலா’ என்னும் விளக்கம் மறக்காமல் தரப்படுவதேன்? ‘பேதைப் பருவ’(ஆறுவயது?!) பெண்ணுக்கும் அரசன்மேல் காமம்’ என்பது கொஞ்சம் அல்ல ரொம்பவே ‘ஓவ’ரா இல்ல? ஒருபக்கம் ‘பெண்மைவெல்க’, ‘பெண் கல்வி’ என்னும் செய்யுள்கள், மறுபக்கம் ‘பெண்என்பவள் நுகர்பொருளே’எனும் கருத்தூட்டம்...ஏன்? (அறிந்தோ அறியாமலோ ‘ஆம்பளைக்கு ஏழுபருவம் கிடையாதா சார்?’ என்று கேட்கும் மாணவரிடம் மாட்டிக்கொள்ளும் ஆசிரியர்கள் பாவம்!)

ஆட்சி மாறினால் பாடநூல் மாறும்! உள்ளடக்கம் மாறாது! :
2004ஆம் ஆண்டுமுதல் இப்போது வரை தொடரும் 7ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலில் “பாரதரத்னா எம்.ஜி.ஆர்.”என்று 8பக்கப் பாடம் உள்ளது! அதிலும், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரமும், வாலியும் எழுதியுள்ள பாடல்கள் பலவற்றைப் போட்டு “… என்று எம்.ஜி.ஆர். பாடி நடித்துள்ளார்” என்று பாடம் வைத்தால் பிள்ளைகளின் பகுத்தறிவு வளர்ச்சிக்;குக் கேட்கவா வேண்டும்? வாழ்க அண்ணா நாமம்! வளர்க பெரியாரின் பகுத்தறிவு!
1996வரை இருந்த பத்தாம்வகுப்புத் தமிழ்ப்பாடநூலில் அப்போதைய முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் ‘மதுவிலக்கில் மனப்புரட்சி’ எனும் பாடம் இருந்தது! ஆட்சி மாறிய அடுத்த -1997ஆம்- வருடம், அந்தப் பாடம் காணாமல்போய் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் ‘குறளமுதம்’ வைக்கப்பட்டது! இது ஒரு சிறு செய்திதான், இது போல 1979ஆம் வருட ஆரம்பப் பாடவகுப்பு ஒன்றில், மொரார்ஜி தேசாய் பாடமாக இருந்தார். அவர் மாறியதும், அடுத்தவருடம் அந்தப் பாடம் இல்லை. இது என்ன விளையாட்டு? ஆட்சி மாறினால், தலைவர்கள் மாறுவது அரசியலுக்குப் பொருந்தலாம், பாடம் வைக்கப்படும்போது, தலைமுறை கடந்த தலைவர்களாக இருப்பவரைத்தானே பாடநூல்களில் இடம்பெறச்செய்ய வேண்டும்? இதுபற்றிய அக்கறை வேண்டாமா?

இதே போலத்தான் 1996ஆம் ஆண்டுவரை இருந்த 10ஆம் வகுப்புத் தமிழ்ப்பாட நூலின் பின்அட்டையில், “மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா” அவர்களின் பெண்மையைப் போற்றும் ஐந்துவரி வாசகம் இடம்பெற்றிருந்தது! இப்போது 2010இல் வந்திருக்கும் 6ஆம் வகுப்புச் சமச்சீர்க் கல்வித் தமிழ்ப்பாட நூலின் பின் அட்டையில் கோவை உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு விளம்பரம் வந்துள்ளது!

பாடாய்ப் படும் பழமரபுக் கதைகள்:
பழமரபுக் கதைகள் நமது பெரும் சொத்து! அதிலிருந்து இன்றைக்குப் பொருந்துமாறு எடுத்தாள்வது எளிதான செயலன்று! பத்தோடு பதினொன்றாக அவற்றைப் பயன்படுத்தும்போது எதிர்விளைவே நிகழும்!
அரிச்சந்திரனைப் பற்றி அவன் ‘தன்னை இழந்து, தன்நாட்டை இழந்து, மனைவி-மக்களை இழந்தும் வாய்மையைக் காப்பாற்றி வரலாறாய் ஆனவன்’ எனும் பெருமை சொல்லப்படுகிறது. எனக்குத் தோன்றும் சந்தேகம், ‘அரசனின் கடமை மக்களைக் காப்பாற்றுவதா? வாய்மையைக் காப்பாற்றுவதா? என்பதுதான். வாழும் மக்களைக் காப்பாற்றாத அரசன், வாய்மையைக் காப்பாற்றி என்னசெய்யப் போகிறான்? இந்தக் கதை சரியானதா? அல்லது ‘பொய்மையும் வாய்மை இடத்த..’ திருக்குறள் சரியானதா? என் சிற்றறிவுக்கு எட்டியவரை, திருக்குறள்தான் சரி.
தனக்குக் ‘கற்றுக்கொடுக்காத’ துரோணாச்சாரிக்கு, குருதட்சணையாக கட்டைவிரலை வெட்டிக் கொடுத்த ஏகலைவன் செயல், ‘குருபக்தி’ என்றல்லவா போற்றப் படுகிறது! இதை ஆச்சாரியின் ‘குருத்துரோகம்’ என்றல்லவா சொல்லித்தந்திருக்க வேண்டும்? ஏனிந்தத் தலைகீழ்ப் பாடம்?
இதுபோல, மறுவாசிப்புக்கு உட்படுத்திச் சொல்லித்தரப்பட வேண்டிய பலநூறு பழமரபுக் கதைகள் இன்னமும் அப்படியே சொல்லித்தரப்படுவதால், பழம்பெருமையாலல்ல அழுகிய கருத்துக்களால் அல்லவா எமது மாணவர்கள் அலங்கரிக்கப் படுகின்றனர்? சொத்து இருந்தும் பிச்சையெடுக்கும் எமதுநிலைக்குக் காரணம் இதுதான்!

இலக்கணம் என்னும் பெருஞ்சுமை !
‘போலப் புரைய ஒப்ப உறழ மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே’ என்னும் நன்னூல் நூற்பா ‘உவம உருபுகள்’ எனும் பிரிவில் இலக்கணப் பாடத்தில் இடம்பெறுகிறது. இதில் வேடிக்கை என்னவெனில், சொல்லப்பட்ட 12உருபுகளில் ஒன்றுகூட இப்போது வழக்கில்இல்லை. (போல எனும்சொல் எழுத்துநடையில் மட்டுமே வருகிறது) ஆனால், வழக்கில் இருக்கும் உவமஉருபுச் சொற்கள் ‘மாதிரி’ ‘ஆட்டம்’ ‘கணக்கு’ முதலானவையே! ஏளிமையாக மனத்தில் நிற்கும் இவற்றை எழுதினால் மதிப்பெண் கிடைக்காது! மதிப்பெண் வேண்டுமெனில் வழக்கில்இல்லாத சொற்களை விழுங்கி செரிக்காமலே வாந்தி எடுக்க வேண்டும்! இதுதான், பெரும்பாலான இலக்கணப் பாடங்கள் இன்றைய மாணவர்க்குச் சுமையாக இருக்கக் காரணம்! இதற்கென்று பாடநூல் குழுவினர் கடுமையாக உழைத்தாக வேண்டும். இலக்கண மரபும், இன்றைய வழக்குச் சொற்களின் பொருளறிவும் மிகுந்த – முக்கியமாக மாணவர் நிலையில் யோசிக்கத்;தெரிந்த-- எதார்த்த அறிஞர்களை அழைத்துப் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், இலக்கணம் வெறும் மனப்பாடச் சுமையே எனும் கருத்தை மாற்ற இயலாது!

இதேபோல, வழக்குச் சொற்களைக் ‘கொச்சைச் சொற்கள்’ என்று சொல்லும் (ஏழாம் வகுப்புத் தமிழ்ப்பாட நூல் பக்:74) பண்டிதத் தனம் மாறியாக வேண்டும். பேச்சுமொழி வேறு, எழுத்து மொழி வேறு. இரண்டும் அதனதன் போக்கில் வளரும். ‘வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்…’ என்று வழக்கிற்கு முக்கியத்துவம் தந்து இலக்கணம் படைத்த தொல்காப்பியன் ஒன்றும் முட்டாளல்ல! மிகப்பெரிய மொழியறிஞன்! வழக்கிற்கு முக்கியத்துவம் தராத இலக்கணம் மொழிவளர்ச்சிக்கு உதவாது!

நிறைவாகச் சில சொற்கள்…
பாடநூல்கள் அடுத்த தலைமுறைக்கானவை என்னும் அக்கறையுடன், நமது தமிழின் விழுமியங்களுடன் இன்றைய வாழ்வின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் மொழிப்பயிற்சிகளுடன் சமகாலப் போட்டி உலகில் நமது மாணவர்கள் வெற்றிபெறும் கூர்மையுடன் இருக்கவேண்டும். சமச்சீர்க் கல்வி ஒரு நல்ல முயற்சிதான். அதிலாவது இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்பதே நம் நியாயமான எதிர்பார்ப்பு!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆதார நூல்கள்: 1991-2010வரை வந்துள்ள 6,7,8,9,10 வகுப்புத் தமிழ்ப்பாட நூல்கள்.
கட்டுரை ஆசிரியரின் அலைபேசி: 94431 93293 இக்கட்டுரையை வெளியிட்டமைக்கு
நன்றி : ‘உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டுச் சிறப்புமலர்- தீக்கதிர்’-18-06-2010
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------