Wednesday, December 23, 2009

பனைமரம்





ஒற்றைப் பனைமரம்
-------------------

உங்கள் தோட்டத்தில்
பனைமரத்தின் வேர்கள்
அத்து மீறி நுழையவும் இல்லை
ஆசைக் கொண்டு அலையவுமில்லை.

உங்கள் தென்னை மரங்களுக்கு
குழித் தோண்டி
பக்குவம் பார்த்த நீங்கள்
இந்தப் பனைமரத்தின்
மண்ணையும் வளைத்து
வேலிப்போட்டு
தோட்டம் கண்டீர்கள்.!

தனிமரங்கள் தோப்பாகாது
மரங்களுடன் இருப்பதே
இந்த மரத்திற்கும் சிறப்பு
கனவுகளின் மயக்கத்தில்
உங்கள் தோட்டத்தின்
கம்பீர தோற்றத்தில்
உலாவந்தது பனைமரத்தின்
பச்சை நிழல்கள்.

கறுப்பின விடுதலையை
கர்ஜித்து கர்ஜித்து
வைரம் பாய்ந்த கறுப்பு தோள்களுடன்
வலம் வந்தது
பனை மரத்தின் கருக்குகள்.

மரங்கள் அடர்ந்த உங்கள்
தோட்டம்
சோலையானது.
பலருக்கு மாலையானது
எப்போதும் தொடர்ந்தது
மாலைகளுக்கான
மரியாதை அணிவகுப்புகள்.

ஒருவர் நிழலில்
ஒருவர் மயங்கி
ஒருவர் நிழலில்
ஒருவர் ஒதுங்கி
தனக்கென நிழல்களில்லாத
மரங்கள் அடர்ந்த
உங்கள் தோட்டத்தில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழல்..
தோட்டத்தின் நிழல்களைத் தாண்டி
விழுவதைக் கண்டு
தீடிரென ஒருநாள்
அதிர்ந்து போனது
உங்கள் தோட்டத்து முள்வேலிகள்.


முகம்மாறிய
உங்கள்
முகம் அறியாமல்
தன் நீண்ட நெடிய நிழல்காட்டி
உங்கள் மேடையில்
நாட்டியமாட நினைத்தது
பனைமரம்.
கறுத்த பனைமரங்களுக்கு
இடமில்லை.
விலக்கி வைத்தது
உங்கள் புதுப்புது விதிகள்.

யாரையோ சந்தோஷப்படுத்த
எப்போதும்
விலக்கி வைக்கப்படுகிறது
பனைமரத்தின் நிழல்.
பனைமரத்தின் மண்ணில்
பத்திரமாய் வளர்ந்தக்கதையை
மறந்து போனது
எல்லா மரங்களும்.
'வெட்டுவது கூட
கிளைகள் வளர்வதற்குத்தான்'
தத்துவம் பேசுகிறது
வாழை.
"எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும்
பொருந்துமானால்
ஏன் பிறக்கிறது
இன்னொரு தத்துவம்?"
கிளைகளே இல்லாத
பனைமரத்தை
வெட்டினால்
எப்படி ஜீவிக்கும்
இந்த ஒற்றைப்பனை.?

கேட்கிறது
தோட்டக்காரனிடம்.
'உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டுமே விழவேண்டும்'
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்.
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்.
நிழல்களைச் சுருக்குவதும் விரிப்பதும்
பனைமரங்களின் வசமில்லை.
அரசும் அதிகாரமும்
மாற்ற முடியாத
பிரபஞ்சத்தின் விதியை
கிழக்கில் உதிக்கும் சூரியனிடம்
கேளுங்கள்
சொல்லக்கூடும்-
.இயக்கவாதிகளின்
நிழல்களைக் கூட
கட்டுப்படுத்தும் அதிகாரம்
தன்னிடம் இல்லை என்பதை.

=============================

2 மொட்டைப் பனைமரம்
--------------------------------
செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.

தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.

ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.

கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.

இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
ஒற்றை நிழலில்
ஒதுங்கி இளைபாற.

--------------------------

Sunday, December 13, 2009

தெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு


தனி மாநிலம் கேட்ட தெலுங்கானாவுக்கு தலையசைத்தாலும் அசைத்தார்கள்
எங்கே பார்த்தாலும் தனிமாநில கோரிக்கைகள்.
இந்தியப் பூகோளப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கு.
சும்மா சொல்லப்பிடாது நம்ம பக்கத்து வீட்டு சந்திரசேகர ராவ் இருந்த உண்ணாவிரதத்தை.
மனுசர் நிசமாலுமே சாப்பிடாமா இருந்தாருனு சொல்லுதாங்க.
எதுக்கு உடம்பைக் கெடுத்துக்கனும் சொல்லுங்க?
கொஞ்சம் சொல்புத்தி சுயபுத்தி இல்லாட்டாலும் அடுத்தவனைப் பார்த்து நடக்கிற
புத்தியுமா இல்லை. எதுக்காக இப்படி 11 நாளு உண்ணா நோன்பிருக்க வேண்டும?
பக்கத்து மாநிலமான நம்மைப் பார்த்தாவது காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும் அதிரடி உண்ணாவிரத ஸ்டைலைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமோ?

டில்லியிலே ரொம்ப குளிருங்க. குளிரில் தலையாட்டினதை நம்ம டில்லிக்காரங்க
தெலுங்கானாவுக்கு சரினு சொல்லிப்பிட்டாங்கனு எழுதப்போக இங்கே பாருங்க
இன்னிக்கு பத்திரிகையிலே வந்திருக்கிற ஏகப்பட்ட தனிமாநில கோரிக்கைகளை.

> நாங்க தான் முதல்ல தனிமாநிலம் கேட்டோம்னு சொல்றாங்க நம்ம கூர்க்கா மக்கள்.
மே.வங்கத்துடன் இருக்கப் பிடிக்கலையாம் அந்த டார்ஜிலிங் கூர்க்கா சனங்களுக்கு.
முதல்ல கேட்ட எங்களுக்கு கொடுக்காமா அது என்ன தெலுங்கானாவுக்குனு
கேட்கிறாங்க.

> எங்க மராத்தி மாநிலம் ( அய்யோ நான் இப்படி எழுதியிருக்கதை மேரா ராஜ்தாக்கரெ மானுஷ்களிடம்
யாராவது போட்டுக் கொடுத்திடாதீங்க அண்ணாச்சீங்களா, எம் பிழைப்புக் கெட்டுப்போயிடும்!)
5 வருடங்களுக்கு முன்பே 'விதர்பா' தனிமாநில கோரிக்கையை வைத்தது. பாவம் அப்படி
வைத்தவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர். யாரும் அவர் சொன்னாருனு
கண்டுக்காமா விட்டுட்டாங்களொ என்னவோ.
இப்போ மீண்டும் 'விதர்பா' வந்திடுச்சி.
ஒரே கூட்டணியிலிருக்கும் சிவசேனா எதிர்ப்பு, பா.ஜனதா ஆதரவு.

> சும்மா சொல்லப்பிடாது எங்க மாயாவதியை. பின்னே என்ன உ.பி எவ்வளவு பெரிய மாநிலம்.
தனி ஆளா தூத்து பெருக்கி துடைக்கிறவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும்.
அவுங்களும் கடிதாசி எழுதிட்டாங்க அவுங்க கஷ்டத்தை. உ.பி இரண்டா இல்லை மூணா பிரிச்சா
ரொம்ப நல்லா நிர்வாகிக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
பண்டல்காண்ட்., மேற்கு உ.பி, கிழக்கு உ.பினு 3 மாநிலங்காளாகிடும்.


>இதை எல்லாம் பார்த்திட்டு இருக்கிற நம்ம தமிழ்நாட்டிலிருந்து ஏன் எந்தக் குரலும் வரலைனு
எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குங்க. என்னவோ நம்ம் தமிழினத்தலைவரை எல்லொரும்
அரசியல் சாணக்கியர் அது இதுனு புகழாராங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்காமா
இப்படி கம்முனு இருக்காரோ.
இப்போ போயி அவர் சந்திரசேகர ராவிடம் வருத்தப்பட்டுக்கவோ முறைச்சுக்கவோ கூடாதுங்க.
சில வேலை இல்லாததுகள் தேவையில்லாமல் சந்திரசேகர ராவ் உண்ணா விரதத்தையும் அவர்
உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துக்கொண்டிருப்பது அவரைக் கடுப்பேற்றி இருக்கும்.
இதெல்லாம் என்ன சின்னக் கொசுக்கடி மாதிரி அவருக்கு.
அப்படியே லைட்டா தட்டிவிட்டுட்டு தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி
தன்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தாங்க என் ஆசை.

* தமிழ்நாடு மாநிலத்தை இரண்டா பிரிச்சிடலாம். ஒன்று தஞ்சை, கடலூர் என்று வடமாநிலங்களை
உள்ளடக்கிய சோழ மண்டலம். இன்னொன்று மதுரையைத் தலைநகராகக் கொண்ட தெற்கு மாநிலங்களை
உள்ளடக்கிய பாண்டிய மண்டலம். எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் முதல்வர்னு நான் சொல்லியா
உங்களுக்குப் புரியனும்?
மதுரையைத் தலைநகராகக்கொண்டு மூன்று சங்கங்கள் வைத்து அரசாண்ட் நம் பாண்டியர் வரலாற்றை
சரித்திர சான்றுகளுடனும் இலக்கியச் சான்றுகளுடனும் எழுதவும் நிரூபிக்கவும் நம் தமிழினத் தலைவர்
தமிழக முதல்வரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்?
சோழ மண்டலம் கண்ட ராஜ ராஜ சோழன் என்ற பட்டமும் நான்காவது தமிழ்ச்சங்கம் கண்ட
பாண்டியன் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம். தமிழகம் எங்கும் நம் சோழ பாண்டியர் வரலாற்றை
கதை கவிதைகள் எழுதி சாமாய்ச்சிடலாம்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ( ரொம்ப பழசாகிப் போன சொலவடைனு கோவிச்சிக்காதீங்க)
அடிச்ச கதையா தமிழகத் தலைவர் அவரை வாட்டி வதைக்கும் 'யாருக்குப் பட்டாபிஷேகம்" என்ற
பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக தீர்வு கண்டுவிடலாம்.
பெண்ணியம், பெண்ணுரிமை அது இதுனு பேசற நானே எங்க கனிமொழியை அப்படியே அம்போனு
விட்டுவிடுவேன்னு நினைச்சீங்களா.
நெவர். அவுங்களுத்தான் இப்போ டில்லிக்குப் போற ரூட் க்ளியர் ஆயிடுமே! இனிமே என்ன
டில்லியில் நிறைய கருத்துக்களம் நடக்கும். அப்புறம் டில்லியில் தமிழ்ச்சங்கமம் நடக்கும்.
அசத்திடலாம். அய்யோ நினைச்சாலே ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. அங்கேயும் கவியரங்கத்தில்
போய் நம்ம ஆதவன் தீட்சண்யா மாதிரி தோழர்கள் காச்சு பூச்சுனு கத்தாமா கவிதை வாசித்தோமோ
வாசிக்கலியோ டில்லியைச் சுத்திப் பாத்தமா வந்தோமானு வரனும்னு இப்போவெ சொல்லி வையுங்க.

> அப்புறம் இன்னொரு முக்கியமான செய்திங்க.
யாரும் ஏன் டில்லி அரசு தெலுங்கானாவுக்கு தலையசைச்சாங்கனு மண்டையைப் போட்டு
கசக்கிப் பிழிஞ்சிக்கவேண்டாம்.
தப்பித்தவறிக் கூட இது சந்திரசேகர் ரர்வ் உண்ணாவிரதத்தின் மகிமை, வெற்றினு நினைச்சி
காந்தியம் பேச ஆரம்பிச்சாடாதீங்க. வருஷக்கணக்கில் மணிப்பூரில் மனோராமா உண்ணா நோம்பிருப்பதை
ஏன் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசுனு தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள்.

.> உலகத்தில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக நம்ம காம்ரேட்கள்
தொண்டை வறள கத்திக் கொண்டிருப்பார்கள். சோவியத் ஒன்றியத்தை உடைத்த அமெரிக்கா
ஆசியாவின் பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டு துண்டுகளாக
உடைக்கும். உடைக்க வைக்கும் .. மன்மோகம் சிங் இதெற்கெல்லாம் தலையாட்டியே ஆகவேண்டும்
என்று பேசுவார்கள், நீங்கள் என்ன செய்யுங்கள்.. உங்கள் டி.வி சேனலில் மானாடா மயிலாட பாருங்கள்,
அதுப் பிடிக்காட்டா உலக அரங்கில் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவின் கிரிக்கேட்
மேட்சைப் பாருங்கள். காம்ரேட்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் தலைவலி வரும். எனவே முன்னெச்சரிக்கையாக
அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

> பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுனா என்னானு இத்தனை வருஷமும் புரியாம
இருந்தேனா. இப்போ புரிஞ்சிட்டுங்க. தெலுங்கானா வேணும்னு ஒரு கூட்டம், வேண்டாம்னு ஒரு கூட்டம்.
டில்லிக்காரன் பயங்கர எம்டன். சரினு சொல்ற மாதிரி சொல்லி எப்படி ந்நோ சொல்லிட்டிருக்கான்
கவனிச்சீங்களா. How to say YES when you want to say NO என்று இந்த எம்டனகளை வச்சே
தலையாணி மாதிரி தடியா புக்கு போடலாம்.

இப்படியே நாளையும் பொழுதையும் இவனுக எல்லாம் கழிச்சிடுவானுக. அப்புறம் பொதுசனத்தைப் பத்தி
பேசவோ யோசிக்கவோ இந்த பார்லிமெண்டு, சட்டசபை , பத்திரிகை, டி.விக்காரன் இவனுக்கெல்லாம்
எங்கே நேரமிருக்கும்? அது என்னா லிபரன் கமிஷன் அது இதுனு எதோ காதில் விழுந்ததே...
எல்லாத்துக்கும் கோவிந்தா..
எங்க ஊரிலே
சாம்பார் பருப்பு விலை கிலோ 100 ரூபாங்க. அட வெங்காயம், உருளைக்கிழங்கி விலை கிலோ 25க்கும் மேலே.
இப்போ புரியுதா ஏன் டில்லிக்காரன் YES சொன்னானு.
புரியாட்டாலும் ஒன்னும் குடிமுழுகிப் போயிடாதுங்க. கோவையில் நடக்க இருக்கும் செம்மொழி மாநாடு
ஏற்பாடுகள் குறித்து எழுதுங்களேன் யாராச்சும்.
செம்மொழி மாநாடு நடக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறொம் என்பதை
நினைத்து நினைத்து பூரித்துப் போகும், தமிழாக நான்



பின்குறிப்பு:
சில தனி மாநிலக் கோரிக்கைகளின் நியாயங்களை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்தி
எழுத உட்கார்ந்தேன். புத்தகம் படிச்சி குறிப்பெடுத்து எப்பவுமே ஸீரியசா எழுதி எழுதி என் கணினி மவுசுக்குப் போரடித்துவிட்டதாம்!

Saturday, December 12, 2009

+ மக்கள் சக்தி _ மைனஸ்_ அரசியல் சக்தி ? ஏன் ?????



-----------------------------------------------------

டிசம்பர் 06, மும்பை தாதர், அண்ணல் அம்பேத்கரின் கல்லறை இருக்கும் இடமான
சைத்தியபூமி ..
கூடும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12, 14, 15 இலட்சம் இந்த வருடம்
15 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்கிறது மும்பை காவல்துறை.
எதற்காக இவர்கள் வருகிறார்கள்?
திருப்பதிக்கோ அய்யப்பனுக்கு மாலைப் போட்டு கூட்டம் கூட்டமாக
செல்லும் மனித மனங்களில் வேண்டுதல்களும் வேண்டியதைக் கொடுத்ததால்
அதற்கு கைமாறாக எதையாவது கொடுக்க நினைக்கும் மனித இயல்பும்,
அவனுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்துவிட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்..
எனக்கு எப்போது கொடுக்கப்போகிறாய் என்ற கேள்வியும் நீ கொடுக்கும் வரை
உன்னை நான் விடப்போவதில்லை என்ற தீர்மானமும் இப்படியாக ஏதோ ஓர்
எதிர்பார்ப்பின் உந்துதல் காரணமாகவே பக்தி என்ற பெயரில் மனிதர்கள்
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற தளம் நோக்கி லட்சக்கணக்கில் ஆண்டுதோறும்
போகிறார்கள்.
இதில் அடிக்கடி புண்ணிய தளங்களை மாற்றிக்கொண்டிருக்கும் பேர்வழிகளும் உண்டு.
நாங்கள் எதையுமே வேண்டி போவதில்லை என்று சொல்லும் ஆன்மீகப் பேர்வழிகளும்
முக்தி, தேவலோகம், சொர்க்கம் , ஆன்மவிடுதலை என்று எதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டுதான் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இத்தியாதி எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக
மும்பை தாதர் கடற்கரையிலிருக்கும் சைதன்யபூமிக்கு வருகிறார்கள் இவர்கள்.
பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 06ல் சைதன்யபூமிக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இலட்சம் இலட்சமாக டிசம்பர் 5, 6 நாட்களில் மும்பையை நோக்கி வரும் இவர்களுக்காக
மும்பையின் காவல்துறை என்னவெல்லாமோ முன்னேற்பாடுகள் செய்கிறது.
குறைந்தது 1500 தொண்டர்கள் தாதர் ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குச்செய்வதில்
காவல்துறைக்கு உதவுகிறார்கள். ஆங்காங்கே தலித் அமைப்புகள், எஸ்.சி, எஸ்.டி யூனியன்கள்
வருகின்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது முதல் உணவு வழங்குவதை வரை தங்களால் இயன்றதை
செய்து வருகிறார்கள்.

அன்றும் இன்றும்
-----------------

தொடர்ந்து இந்நிகழ்வை நான் பார்த்து வருகிறேன். பொதுவாக 5ஆம் தேதி மாலை சிவாஜி பார்க்
போனால் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியே இரவு 12 மணிவரை
கடைசி டிரெயினைப் பிடித்து வீட்டுக்கு வருகிற மாதிரி இருந்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு 6ஆம் தேதி பகல் 2 மணிக்கு புறப்பட்டால் தாதரில் இறங்கியவுடனேயே
கூட்டத்துடன் கூட்டமாக நாமும் நடந்தாக வேண்டும் என்பதை விட அந்தக் கூட்டம் நம்மை
நகர்த்திச் செல்லும் என்பதுதான் சரியாக இருக்கும்.
15 அல்லது 20 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தைக் கடக்க 2 மணிநேரமானது.
'தாயி.. இவளைப் ப்டித்துக் கொள்' என்று சொல்கிறார் ஒருவர்.
அவள் அம்மா வரவில்லை. பக்கத்துவீட்டு குழந்தை என்னை நம்பி அனுப்பியிருகிறாள்'
என்று சொன்னவருக்கு நடுத்தர வயதிருக்கும். அவர் குழந்தை என்று சொன்ன குழந்தைக்கு
10லிருந்து 12க்குள் இருக்கும். என் மும்பை மூளை தப்பு தப்பாக கற்பனைச் செய்து கொண்டு
கவலைப்பட்டது!

அன்று பார்த்தவர்களுக்கும் இன்று பார்ப்பவர்களுக்கும் இடையில் ஓர் அப்பட்டமான
வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. படித்த ஆணும் பெண்ணுமாய், தூய்மையான
உடையில், கம்பீரமாக நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருப்பதாய்ப் பட்டது.
எண்ணிக்கையில் ஆண்களுக்கு குறையாத அளவு பெண்களும். வெள்ளை நிற
புடவை/சுடிதாரில். இந்த ஆண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தையும் தாண்டியிருக்கும்
என்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்கள் வந்ததால் மும்பை நகரமே குப்பைமேடாகிவிட்டது என்று சில வருடங்களுக்கு முன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதி தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டது.
இன்று A sea of people throngs chaityabhoomni in dadar என்று எழுதுகிறது.
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது மேடைகளும் மேடையை அலங்கரிக்கும் கோஷங்களூம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் சம்பந்த மில்லாத அரசியல் தலைவர்கள் எல்லோரும் அம்பேத்காருடன்
போஸ்டரில் போஸ் கொடுப்பார்கள், நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போஸ்டர்கள் மயமாக காட்சியளிக்கும்..
சிவாஜி பார்க்கில் பெண்களும் ஆண்களூமாய் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஈவ்டிசிங், ஆண்கள் பெண்களிடம் காட்டும் சில்மிஷம், கூட்டம் அதிகமாக இருப்பதால் நடக்கும் திருட்டு,
கூட்டங்களில் குடித்துவிட்டு நடக்கும் ரகளைகள்.. இப்படியான எந்தக் குற்றங்களும் இங்கே நடப்பதில்லை.
குடிப்பதும் திருடுவதும் தலித் ஆண்களின் குணாதிசயமாக காட்டப்படும் ஊடகக் காட்சிகளை இங்கே நாம்
பார்க்கவோ படம் பிடிக்கவோ முடியாது.

அறிஞர் அண்ணாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கின்னிஸ் ரிகார்ட் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப்பின் இன்று அந்த தம்பிமார்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றுதான்
தெரியவில்லை! பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்து 53 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை மாறி இன்னொரு தலைமுறை
தன் அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு சைத்திய பூமிக்கு வருவது உலக அரங்கில் வேறு
எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.




இந்த மனித சக்தியை ஒன்று திரட்டி அரசியல் சக்தியாக ஏன் மாற்ற முடியவில்லை?

அம்பேத்கருக்குப் பின் வந்த எவருமே அம்பேத்கரின் இடத்தைப் பிடிக்க முடியாதுதான் எனினும்
தலித்துகளின் நம்பிக்கைக்குரிய ஓரு தலைமை ஏன் உருவாகவில்லை.

ஆண்டுதோறும் சைத்திய பூமிக்கு வருகின்ற வழக்கம் இந்த 50 வருடங்களில் ஒரு சடங்காக
சம்பிரதாயமாக மாறிவிட்டதா?

வந்திருக்கும் எத்தனைப் பேர் அம்பேதரின் சிந்தனைகளை கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு
வாழ்வியலாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடமும் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் உளவியலைப்
புரிந்து கொள்ளூம் முயற்சியில் அவர்களை வாசித்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும்
இருக்கிறோம் நானும் என் அரபிக்கடல் அலைகளும்.

Monday, December 7, 2009

சைத்தியபூமியில்..





சட்டப் புத்தகத்தின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் உரிமைகளை நம்பி
உறங்கிக்கொண்டிருக்கிறான் இவன்
அரைநூற்றாண்டுகளாக ....

Tuesday, December 1, 2009

பாட்டுலகின் பாட்டனார்கள்

பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்
-------------------------------------------------



புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்றும் - நம்
தந்தையர் நாடென்றும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வேஷமிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலை காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியை
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
-------

தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்- என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.

-------------


திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி..
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்துப் போன
என்னையும் உன் மண்ணையும்.

---

எங்கள் போர்முரசே
தெந்திசையைப் பார்த்து
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த
புத்தனின் கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளை கனவுகளை
அக்னிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.

உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதற கதற
ரத்தம் சொட்ட சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.

----

உன் வீட்டில்
உன் கவிதைகளை
உரக்க வாசித்தே
ஊராளும் கூட்டம்
தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
இலவசமாக பல்பொடி
வழங்கலாம்
போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
மருத்துவர்கள் மாறி மாறி
கூட்டணி அமைத்து
கூட்டணி உடைத்து
தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
காலை 10 மணிமுதல்
பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும்
அதிசயங்கள் நடக்கலாம்
பார்வையாளர் வரிசையில்
பதுங்கி இருக்கிறது
உறைக்குள் வாளாக
உறங்கும் போர்ப்படை.

---


தமிழ்த் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக-
முலை வீசி எறிந்த -எம்
கொற்றவை சாட்சியாக-
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
'கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்'

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல- அவன்
பாடல்களும் கனவல்ல.

-----

(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
"பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்..
"பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் உரைவீச்சு.)

Friday, September 25, 2009

மவுனவெளி


பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில்
நிரம்பி வழியும்
புன்னகை விசாரிப்புகள் வரிசையில்
ஆடை அணி உறவுகள் களைந்து
நிர்வாணமாய் பேசியது
நம் மவுனம்.

தொட்டுப்பார்த்துக்
களைத்துப்போனது
காற்று
மூடிக்கொண்டன
கருவறைக் கதவுகள்

யுகம் யுகமாய்
சிற்பியின் உளிகளுக்காய்
காத்திருக்கிறது
கடலடியில் கரும்பாறை
*
உடைந்த சிலை
சிதைந்த ஓவியம்
எரிந்த கரித்துண்டு
என்னைப் போலவே
எதையும் சொல்வதில்லை என
பூக்கள் வாடலாம்
பூமி வாடுவதில்லை.

*

செத்தப்பின்
உயிர்த்தெழுந்த
பரமப்பிதாவின்
கல்லறைச் சத்தியமாய்
வாசிக்கிறேன்.
'புதைந்து போன
கனவுகள் உயிர்த்தெழுவதில்லை"
ஆமென்.'

*

காத்திருந்ததாய்
கனவுக்கண்டதாய்
கவலைக் கொண்டதாய்
கண்ணீர்விட்டதாய்
கவிதை எழுதியதாய்
காணத்துடித்ததாய்
அன்று போலவே
இன்றும்
சொற்குப்பைகளுக்கு நடுவில்
தொலைந்து போன
வாழ்க்கையைத் தேடுகிறாய்
வார்த்தைகள் எட்டாத
பிரபஞ்சவீதியில்
காலத்தைத் தின்று செரித்த
நெருப்பாய்
எரிந்து கொண்டிருக்கிறது
நீ தூக்கிவீசிய
மவுனவெளி.

-------------

Friday, September 18, 2009

காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தில்









ஜெட் விமான ஓட்டிகள் திடீரென வேலை நிறுத்தம் செய்ததால் 08

செப்டம்பர் சென்னையிலிருந்து திட்டமிட்டபடி என்னால் மும்பை

வரமுடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற

தனியார் விமானங்கள் நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் கணக்கில்

பயணச்சீட்டு தொகையை ஏற்றிக்கொண்டிருந்தார்கள்.
10ஆம் தேதிக்குத்தான் ஏர் இந்தியாவில் இடம் கிடைத்தது.
எனவே 9/9/09ல் சென்னைக்கு அருகிலிருக்கும் காஞ்சிபுரம் கோபுர

தரிசனங்களுக்காக சென்று வந்தேன்.

சென்னையின் எந்த வளர்ச்சியும் எட்டிப்பார்க்காத பத்து வருடம்

பின்னோக்கிய வட்டத்தில் காஞ்சிபுரம். சுட்டெரிக்கும் வெயில்.
பல்லி தரிசனம் கண்டால் செய்த பாவம் எல்லாம் கரைந்துவிடும்
என்று ஒரு கோவில்.. 2500 ஆண்டு பழமைவாய்ந்த மாமரமே
தலவிருட்சமாக இருக்கும் இன்னொரு கோவில், சிவனில்லாமல்
சக்தி மட்டுமே காமாட்சியாக காட்சியளிக்கும் தாய் வழிபாட்டின்

எச்சமாய் காமாட்சி அம்மன், எப்போதும் வெண்ணெய் நெடி கலந்து
புளிச்ச மோரின் வாசம் துளசி மணத்துடன் சேர்ந்து மணக்கும் பெருமாள்

கோவில்.. இப்படியாக கோவில்களின் நகரமாக சோழர் பல்லவர்

கட்டடக்கலையுடன் கவனிப்பாரின்றி சிலையாகிவிட்ட சிற்பங்கள்..
பக்தர்களின் பசியை மிகவும் அக்கறையுடன் வியாபாரமாக்கியிருக்கும்
சரவணபவனில் கை நனைத்துவிட்டு காஞ்சிபுரத்தில் நான் விரும்பிய

தரிசனத்தை நோக்கி பயணித்தேன்.

வண்டி ஓட்டுநருக்கு பெயர் தெரிந்திருந்தது. ஆனால் முகவரி

தெரியவில்லை. அருகிலிருந்த பெட்டிக்கடையில் விசாரித்தப் போது அவர்

சரியாக வழி சொன்னார். அதுவே அப்போது நிம்மதி கலந்த மகிழ்ச்சியைத்

தந்தது. ஒருவேளை அந்தப் பெட்டிக்கடைக்காரர் 'வழி தெரியாது' என்று

சொல்லியிருந்தால் அதிர்ச்சி என்னைத் தாக்கியிருக்கும். அந்த மாதிரி

அதிர்ச்சி ஏற்படவில்லை என்பதால் ஏற்பட்ட நிம்மதியும் பல வருடங்கள்
நான் பார்க்க விரும்பிய ஓரிடத்தைப் பார்க்கப்போகும் மகிழ்ச்சியும்
கலந்த கலவை உணர்வுகள்.

நான் 30 வருடங்களுக்கு முன் முதன் முதலாக வாசித்த அறிஞர்

அண்ணா குறித்த புத்தகம் நினைவுக்கு வந்தது. முதல் பக்கத்திலேயே
காஞ்சி என்றால் அண்ணா என்ற கருத்து எழுதப்பட்டிருக்கும்.
அதற்கு கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவில் நடைபெற்ற உண்மைச்

சம்பவம் பேசப்பட்டிருக்கும்.

கிருபானந்தவாரியார் தன் சொற்பொழிவில் ஒவ்வொரு தளங்களின்

பெயரையும் சொல்ல சொல்ல கூடியிருந்தவர்கள் அந்தந்த தளங்களின்

மகான்கள் பெயரைச் சொன்னார்கள். அந்த வரிசையில் அவர் காஞ்சி

என்று சொன்னவுடன் கூட்டத்தினர் (அதுவும் ஆன்மிக சொற்பொழிவு

கூட்டத்தில்!) அண்ணா.. அண்ணா என்று ஒரே குரலில் ஒலித்ததாகப்

பதிவு செய்யப்பட்டிருந்தது. வாரியார் காஞ்சி என்றவுடன் காஞ்சி

காமக்கோடி பீடாதிபதியின் பெயரைத்தான் எதிர்பார்த்தார் என்றும் கூட்டம்

அண்ணா என்றவுடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவருக்கு ஏற்பட்டது

என்றும் கட்டுரையாளர் எழுதியிருந்தார்.. ( புத்தக ஆசிரியர் பெயரும்

தலைப்பும் நினைவில் இல்லை. )
காஞ்சியில் அண்ணாவின் இல்லத்தை நோக்கிப் பயணம் செய்தப் போது

இக்கருத்து மட்டும் நினைவில் வந்தது.

அண்ணாவின் பெயரைச் சொல்லி வளர்ந்துவிட்ட கட்சிகள்.. அண்ணாவின்
முகத்தைக்கூட அவர் நூற்றாண்டை முன்னிட்டு மட்டுமே

அழைப்பிதழ்கள், சுவரொட்டிகளில் இடம் கொடுக்கும் அவலத்தை நான்

உணர்ந்திருக்கிறேன். எனினும் இவ்வளவு மோசமாக தி.மு.க.வின்

ஆட்சியில் அதுவும் அண்ணாவின் நூற்றாண்டு நிறைவை ஒரு சடங்கு

போல கொண்டாடிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ...

அங்கே நான் பார்த்த காட்சிகள்..

ஒரு பெண் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார். முகப்பில்

தலைவாசலுக்கு மேல் அண்ணாவின் புகைப்படத்தை ஆணி அடித்து

மாட்டிக்கொண்டிருந்தார்கள். அந்தப் புகைப்படத்தின் பிரேமுக்குள்

சின்னச்சின்ன மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அந்த

மின்விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்த்தார்கள். அதுதவிர

அண்ணாவின் புத்தகங்கள் ஒரு சில கண்ணாடி அலமாரிக்குள் இருந்தன.
மலிவு விலைப் பதிப்பு புத்தகங்கள். அண்ணா பயன்படுத்திய மூக்கு

கண்ணாடி, எழுதும் இங்க் பேனா, இரண்டு பக்கத்தில் எழுத்துகள் மஙகிய
நிலையில் இருந்த அவர் நாட்குறிப்பு வைக்கப்பட்டிருந்தது. மற்றும்

அண்ணாவின் புகைப்படங்கள். 20 முதல் 30க்குள் இருக்கும். அனைத்து

புகைப்படங்களும் அந்தக் காலத்தில் தினத்தந்தியில் வந்த
சாதாரண வாசகனும் அறிந்த புகைப்படங்கள் தான். குறிப்பிட்டு சொல்லும்

படி எதுவுமில்லை. அண்ணாவையும் தி.மு.க.வையும் ஒன்றாக பார்க்கும்

சிலர் சொல்லக்கூடும்.. அண்ணா நூற்றாண்டை ஒட்டி அண்ணாவின்

இல்லம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் அப்படி இருந்திருக்க்

கூடுமென. ஆனால் அங்கு வேறு எதுவும் இருந்ததற்கான

அடையாளங்கள் எதுவுமில்லை..!
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டிருந்தது. 10/09/1930 ..







"நாளை அண்ணாவின் திருமண நாள்"
என்று நினைத்துக் கொண்டே புகைப்படம் எடுத்தேன்.
அண்ணாவின் திருமண அழைப்பிதழ் நிறைய செய்திகளை இன்று

நமக்குத் தருகிறது. ( இது குறித்தும் எழுத வேண்டும்)


அண்ணாவின் இல்லத்தில் அரசு வைத்திருக்கும் அண்ணாவின் நினைவுப்

பொருட்களை விட அதிகமாக அந்தக் காலத்தில் அண்ணா சம்பந்தப்பட்ட
புகைப்படங்கள், புத்தகங்கள், கையொப்பமிட்ட கடிதங்கள் எங்கள் வீட்டில்

கூட இருந்தது. அண்ணாவை தன் அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்ட
எண்ணற்ற தம்பிமார்களின் இல்லங்களிலும் இருந்திருக்கும்.

இன்னொரு செய்தி.. அண்மையில் அண்ணாவின் திருவுருவம் பொதித்த

நாணயத்தை பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அண்ணா நூற்றாண்டு

நிறைவு விழாவில் தமிழக முதல்வரின் பேச்சு. 16/9/09 தினத்தந்தி

மும்பை பதிப்பில் முதல் பக்கம்.. கலைஞரின் பேச்சு ..
தினத்தந்தியை நம்பிவிடுவதற்கில்லை. கலைஞர் அண்ணா குறித்து

பேசியதை எடிட் செய்துவிட்டு மத்திய மந்திரி பிரணாப்முகர்ஜி குறித்து

பேசியதை மட்டும் வெளியிட்டு விட்டார்களொ என்னவோ..!

எங்கள் மும்பையில் புறநகர் திமுக இலக்கிய அணி சார்பாக அண்ணா

நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருநெல்வேலி மாவட்டம்

நாங்குநேரி தொகுதி சட்டசபை உறுப்பினர் அப்பாவு சிறப்பு விருந்தினராக

கலந்து கொண்டார். அப்பாவு அவர்களின் அரசியல் வாழ்க்கையும் மக்கள்

பணியும் போற்றுதலுக்குரியதுதான். அதில் எனக்கும் கருத்து

வேறுபாடில்லை. ஆனால் நிகழ்ச்சி அண்ணா நூற்றாண்டு விழாவாக

இல்லாமல் அப்பாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவாக தவிர்க்க

முடியாமல் தடம் மாறியதைக் கண்டேன். !


திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.

நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.

Thursday, August 13, 2009

சூரிய கிரகணம்


ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்
பூமகளை ஆட்சிசெயும்
ஞாயிறு போற்றுதும்

கொலை கொள்ளை
இனவெறி
இனப்படுகொலை
எது நடந்தாலும்
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்..

ஜெய ஜெய ஜெய ஜெய
ஜெய ஜெய ஜெய ஜெய
ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்

ஆர்ப்பரிக்கும் குரலோசையில்
தென்குமரி கருவறை
விழித்துக்கொண்ட தருணம்.......

விடியலைத் தொலைத்த
பதட்டத்தில்
ஆகாயத்தை அதிரவைக்கும்
சிறகுகளின் படபடப்பு
மயங்கித் திரியும்
அதிகாலைச் சேவல்கள்
இரவல் வெளிச்சமாய்
வாழ்ந்த வாழ்க்கையை
புரட்டிப்போடும்
பூமியின் நிலவு

சுட்டெரிக்கும்
சூரியக்கங்குகள்
எரித்துவிடக்கூடும்
அவள் இளமுலையை

ஹரிஓம் ஹரிஓம்
ஜெய ஜெய ஹரிஓம்
அச்சுறுத்துகிறது
அவன் எழுதிய
குருஷேத்திரம்

அடங்க மறுத்தலின்
அடையாளமாய்
ஆர்ப்பரிக்கும் தென்குமரி
ஒற்றைச் சிலம்புடன்
கொற்றவை
தீமிதிக்கிறாள்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஆதித்தாயே ஓம்சக்தி

சடச்சட சடவென
சரிந்து விழுகிறது
நிழலுக்கும் சொந்தம் கொண்டாடும்
உரிமையை இழந்த
சூரியக்குடைகள்.

'எல்லாம் தான் தான்'
அவன் எழுதிய
மறைமொழியை
மறுவாசிப்பு செய்யும்
மங்கையின் விழிகளில்
அவன் இழந்துப்போனது
தேர்கள் பவனிவந்த
பிரபஞ்ச வீதிகளை மட்டுமல்ல
பூமியில் பதிந்த
நிழல்களின் சுவடுகளையும் தான்.

கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்
பூமகளை வாழவைக்கும்
கொற்றவைப் போற்றுதும்
கொற்றவைப் போற்றுதும்..

--------------------------------------

Thursday, July 23, 2009

நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்



என் முதல் கவிதை நூல் - சூரியப்பயணம் கவிதைகளுக்கு ஓர் அணிந்துரைக்காக நாஞ்சில்நாடனின் முகவரித் தேடி
என் கவிதைகள் பயணித்தன. அப்போது என் வாசிப்பு நாஞ்சில் நாடனின் பேய்க்கொட்டு, தலைகீழ்விகிதங்கள், சதுரங்ககுதிரை
மட்டுமே. மும்பையில் என்னையும் நாஞ்சிலாரையும் அறிந்த நண்பர்கள் நாஞ்சிலாரின் அணிந்துரைக்காக
என்னைக் காத்திருக்கச் சொன்னார்கள். அதன்பின் நானும் என் பணிகளுக்கு நடுவில் மறந்துப்போனேன்.
கவிதைகளையும் கவிதைகள் அனுப்பியதையும். சில மாதங்கள் கடந்து அவர் அணிந்துரையும் கடிதமும்
வந்தது. அணிந்துரை நாஞ்சிலாரின் 'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
அவர் தந்த அணிந்துரையை விட மிகவும் முக்கியமானது அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம்.

கானமுயலெய்த அம்பினில் யானைப் பிழைத்த
வேல் ஏந்தல் இனிது

என்று முடியும். அக்கடிதம். இன்றும் ஒவ்வொரு நூலும் அச்சில் வெளிவரும் போது நான் எடுத்து மீண்டும் மீண்டும்
வாசித்துக் கொள்ளும் ஒரு கடிதம் நாஞ்சிலாரின் கடிதம் தான்.
எங்காவது என் சிறுகதைகள், கவிதைகள் வாசித்தால் அதைப் பற்றி தொலைபேசியில் பேசுவது மட்டுமல்ல
அதிலிருக்கும் குறைகளையும் தெளிவாக என்னிடம் சொல்லும் அன்பும் ஆதரவும் என்னை நெகிழ்ச்சிப்ப்படுத்தும்
தருணங்கள். மழையில் மிதந்த மும்பை, தீவிரவாதிகள் தாக்கிய மும்பை, குண்டுவெடிப்புகளில் காயப்பட்ட
மும்பை.. இப்படியாக மும்பையைப் பற்றிய செய்திகள் வாசிக்கப்படும் போதெல்லாம் அதைப் பற்றி
பேசியிருக்கிறார். பெரும்பாலும் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது
சமூக அக்கறையுடன் மும்பை, மும்பை சார்ந்த செய்திகளைப் பேசியிருக்கிறார்.

அவர் குடும்பத்தில் அடுத்தடுத்து துயரச் செய்திகள் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டு பேசிய போது
'இனிமேல் குடிப்பதில்லை ' என்று முடிவு செய்திருப்பதாகவும் தனக்கென நிறைய பொறுப்புகள் இருப்பதாகவும்
சொன்ன குடும்பத்தலைவனைப் பார்த்தேன்.

ஓரளவு இன்று நாஞ்சில் நாடனின் படைப்புகளை முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரைப் பற்றியும்
அறிந்திருக்கிறேன் என்ற பின்புலத்தில் இன்று அவர் படைப்புகளை மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும்
ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
நாஞ்சிலாரின் படைப்புகளில் பெண் காதாபாத்திரங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் ? என்று
நண்பர் கே.ஆர்.மணி என்னிடம் கேட்டார். அப்போது தான் நாஞ்சிலார் படைப்புகளில் உலாவும்
பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

நாஞ்சில் நாடனா.. அவர் கதைத்தளம் முழுக்கவும் ஆண்களின் ஆக்கிரமிப்பு..ஆண்பார்வையில்
நகரும் கதைகள் என்பது புறந்தள்ள முடியாத உண்மை. நாஞ்சில்நாடன் தன் கதைகளில் பெண்ணியம்
பேசுவதாகவோ அல்லது பெண்விடுதலைப் பேசி தன்னை பெண் விடுதலையின் நாஞ்சில் தலைவனாகவோ
அடையாளம் காட்டிக்கொள்ளும் பம்மாத்துகளைச் செய்வதில்லை. நாஞ்சிலாரின் கதைகளின் ஊடாக
பயணிக்கும் போது நாம் சந்திக்கும் பெண்கள் மிகவும் சர்வசாதாரணமாக பெண்ணியத்தையும் பெண்விடுதலையையும்
பாட்டிவைத்தியம் போல சொல்லிக்கொண்டிருப்பார்கள்! அவர்களுக்கே உரிய நாஞ்சில் மொழி நடையில்
கதைக்கு மிகவும் தேவையான அளவு மட்டுமே கருத்துகள் தெளிக்கப்பட்டிருக்கும்.
எந்தக் கதையிலும் கதையை விட்டு விலகியோ துருத்திக்கொண்டொ அவர் பேசும் பெண்ணியம்
தனித்து நிற்பதில்லை. பெண்ணியம் மட்டும் அல்ல.. நாஞ்சில் நாடன் அவர் படைப்புகளில் பேசும் சமூக அரசியலும்
அப்படித்தான். நாஞ்சிலார் கதைகளில் சமூக அரசியல் பேசுகிறாரா ? என்று பலர் வியப்படையலாம்.
அவர் படைப்புகளின் ஊடாக நடத்தும் சமூக அரசியல் குறித்து கோவை ஞானி அவர்களும் மிகவும்
வியப்புடன் என்னிடம் பேசியிருக்கிறார். தனிக்கட்டுரையாக இது குறித்தும் எழுத வேண்டும்.

நாஞ்சிலாரின் முதல் நாவல் தலைகீழ் விகிதங்கள் முழுக்கவும் ஆணின் பார்வையில் நகரும் கதைதான்.
அதுவும் ஒரு 25, 27 வயது இளைஞனின் பார்வையில் வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் முதலில் அறிந்த ஆண் அவள் தந்தை. அவளுக்குத் திருமணமாகி
இன்னொருவன் மனைவியானப் பின் அவள் தன் கணவனை தன் தந்தையுடன் அதிகமாக ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.
அதிலும் குறிப்பாக ஆளுமையும் அதிகாரமும் கொண்ட தந்தையாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
இந்த ஒப்புமையின் ஏற்ற இறக்கங்களின் பாதிப்புகள் ஓர் ஆணின் பார்வையில் தலைகீழ் விகிதத்தில்
பேசப்படுகிறது. ஒரு பெண்ணின் பார்வையில் எதுவும் பேசப்படவில்லை.
இந்திராகாந்தியின் வாழ்க்கையில் தந்தை-கணவர் என்ற இருவருக்கும் நடுவில் அவர்
இழந்துப் போன வாழ்க்கையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அவரே கூட
இல்லஸ்டேட் வீக்லி பத்திரிகையில் ஒரு நேர்காணலில் இதைக் குறிப்பிடத் தான் செய்திருக்கிறார்.


நாஞ்சிலாரின் பெண்கள் சிலரின் முகம் தெரிவதில்லை. பலருக்கு தனிப்பட்ட எந்த அடையாளமும்
கிடையாது. தனிப்பட்ட கருத்துகளோ விருப்பு வெறுப்போ கூட கிடையாது.
'எச்சம்' சிறுகதையில் எல்லோரும் போனபின் செத்துப்ப்போன பலவேசம் பிள்ளையின் சிதைக்குப்
பக்கத்தில் வந்து தன் இரு பெண்குழந்தைகளுடன் நின்று அழுதுவிட்டு வாய்க்குள்ளேயே புலம்பிக்கொண்டு
போகும் உருவங்கள். முகம் தெரிவதில்லை, வார்த்தைகள் குறைப்பிரசவமாகிப் போகும் இடத்தில்
நாம் பார்க்கும் பெண்களின் மவுனத்தில் தான் கதையின் அதுவரை எழுதப்பட்ட அனைத்து சொற்களும்
மறுவாசிப்புக்குள்ளாகி கதையைக் கனப்படுத்துகின்றன.
அப்படித்தான் நாஞ்சிலாரின் சில பெண் கதைப்பாத்திரங்களும்,

மாமிசப்படைப்பு நாவலில் (பக் 71)
"இவனுகெல்லாம் எட்டு ஏக்கரும் பத்து ஏக்கரும் அம்மைக்கு வயத்திலேருந்து வர்ச்சிலேயே கூட கொண்டு வந்தானுகோ?
எவனோ எழுதி வச்சான்.. பெண்டாட்டியோ மகளொ பாக்கதுக்கு செவப்பா லெச்சனமா முலையும் தலையுமா
இருக்காளா? இன்னா நாப்பது கோட்டை விதப்பாடு..." என்று சொல்லும் போது பெண் என்னவாக பயன்படுத்தப்பட்டாள்
என்பதைக் காட்டுகிறார்.
இவருடைய பெண்களுக்கு ஆண் சமுதாயம் பெண்ணியல்புகளாக செதுக்கி வைத்திருக்கும் கற்பியல் குறித்த
கோட்பாடுகள் இல்லை. பெரும்பாலான பெண் கதைப்பாத்திரங்கள் அக்கா என்றும் மதனி என்றும்
அழைக்கப்படுகிறார்கள். அக்காவுடனும் மதனியுடனும் சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாலியல் உறவுகளைத் தின்று
செரித்து நிற்கும் ஆண்களுடன் முரண்படாமல் இசைந்து படுக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள்.
உபாதை சிறுகதையில் வரும் பூமணி, தவசி சிறுகதையில் வரும் விசாலம், தலைகீழ் விகிதங்கள்
க்தைநாயகி இவர்கள் தான் விதிவிலக்கானவர்கள். அதிலும் குறிப்பாக உபாதை கதையின் பூமணி.
கங்காதரன் பிள்ளையிடம் வசமாக மாட்டிக்கொண்ட போதும் தன் சாதுர்யத்தால் அவரைத் தள்ளிவிட்டு
தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டவள்.
தவசியில் வரும் விசாலம் கணவனால் கைவிடப்பட்டு குழந்தையுடன் ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
வயிற்றுப்பசி தீர்க்க காத்திருக்கும் தவசி. இக்கதையில் கூட தவசியைப் பற்றிய காட்சிப்படிமம் நம்மை
அதிகம் சிந்திக்க வைக்கிறது.
"சற்றும் கவர்ச்சியின் சாயை அடிக்காத உடலமைப்பு. மேல்வரிசைப் பற்கள் முரண்பாடான கோணத்தில் இருக்கும்.
என்ன முயற்சி செய்தாலும் வாயை மூடவே முடியாது. கதவோ, திரையோதான் போட வேண்டியதிருக்கும்...
விசாலத்திடம் யாருக்கும் விளையாடத் தோன்றாது. அந்த சோகம் தங்கிய முகத்தைப் பார்க்கவே ஆகாது ஆண்களுக்கு"
இப்படிப்பட்ட விசாலம் தவசியாகி - பிச்சை எடுப்பதற்கு - காரணம் அவள் ஆண்களை ஈர்க்கவில்லை என்பதும்தான்.
"அழகே இல்லாததால் அவள் எனக்குத் தங்கை ஆகிவிட்டாள்" என்று வாசித்த புதுக்கவிதை வரிகள்
நினவுக்கு வருகிறது.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவனால் தாம்பத்ய சுகம் அனுபவிக்க முடியாத பெண்கள்,
கணவனால் தாய்மை அடைய வாய்ப்பில்லாத பெண்கள் இவர் கதைகளில் சமூகம் விதித்திருக்கும்
ஒழுக்க கோட்பாடுகளை மீறியவர்களாகக் காட்டப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால்
பெண் தன் கணவன் தவிர்த்து பிறிதொரு ஆணை விரும்புவதற்கும் உடலுறவுக்கு இசைவதற்கும்
மேற்கூறிய காரணங்களையே நாஞ்சிலார் தன் கதைத்தளத்தில் கையாண்டிருக்கிறார்.
இந்தக் காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக
நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை.

"கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள்.
அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து
அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும்
அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்.

நாஞ்சிலார் அவர்கள் மங்கலம், குழூவுக்குறி, இடக்கரடக்கல் கட்டுரையில் பெண்
ஆண் உடல் மீது கொண்டிருக்கும் கவர்ச்சி குறித்தோ ஈர்ப்போ குறித்தோ ஏன் பதிவு செய்யவில்லை என்பதைப்
பற்றி சங்க இலக்கியம் தொட்டு கம்பன், கலம்பகம் வரை பேசியிருக்கிறார். நகக்குறி இடுதல் குறித்து எழுதும்போது
: பெண் எங்கு நகக்குறி இட்டாள்? யாரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை. நகக்குறி போகட்டும். ஆண்குறி பற்றி
சங்கப் பரப்பில் குறிப்பேதும் உண்டா.." என்றெல்லாம் கேள்விகளை முன்வைக்கிறார். அவருடைய கதைமாந்தர்களில்
பொன்னம்மை தான் ஆண்குறியைப் பார்த்து ரசித்ததாக அல்லது ஏங்கியதாகக் காட்டப்படும் பெண். ஆனால்
பொன்னம்மை ஏன் இப்படி இருக்கிறாள் என்பதற்கு ஒரு காரணம் கதைப் போக்கில்சொல்லப்படுகிறது.
" முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ
படை குதிரை போல்தான் இருக்கிறாள்!" (பக் 276)

பிள்ளை குட்டி இல்லாத பெண் என்ற ஓரு வரி நாஞ்சில் நாடன் அவள் செயல்களுக்கு சொல்லும் ஒரு காரணமாகவே
கருத வேண்டியுள்ளது.
அவளுக்கு குழந்தைகள் இருந்ததாக எழுதியிருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் அதைப் பற்றி எந்தக் குறிப்பும்
எழுதாமல் விட்டிருக்கலாம். ஆனால் பொன்னம்மை பிள்ளைக் குட்டி இல்லாதவள் என்று எழுதுவதன் மூலம்
அறிந்தோ அறியாமலோ இப்படிப்பட்ட காரணங்களை பெண் பிறிதொரு ஆணை
விரும்புவதற்கான காரணங்களாக காட்டுவது ஏன்? இம்மாதிரியான காரணங்களே சமூக விதிவிலக்குகளுக்கான
விதிகள் ஆக்கப்படுவதை நாஞ்சில் நாடன் அவர்களும் நன்கு அறிவார்.
இந்தப் பொன்னம்மை தான் எட்டுத் திக்கும் மதயானையில் வரும் சுசிலா.
சுசிலாவும் இப்படித்தான் பேசுகிறாள்..
"எனக்கு வெலக்கம் வர்ற நாளு தப்பி இருவது நாளாச்சு.. முப்பிடார் அம்மன் கண்ணைத் தொறந்து பாத்திருக்கா,
பந்திரெண்டு வருசத்துக்குப் பொறவு. ஆணாலும் பெண்ணாலும் இது ஒனக்க பிள்ளை. .ஓர்மையிலே வச்சுக்கோ.."
என்று பூலிங்கத்திடம் சொல்கிறாள்.
12 வருட தாம்பத்ய வாழ்க்கையில் அவளுக்கு கணவன் மூலமாக குழந்தை இல்லை. அவள் பூலிங்கத்துடன்
கொண்ட உறவுக்கு இது ஒரு காரணமா?
இதே நாவலில் வரும் கோமதியும் கணவனால் ஒரு குழந்தைக்குத் தாயானப் பின் கைவிடப்பட்டவள்.
அவளுக்கு பூலிங்கத்துடன் உடலுறவு உண்டு. ஆனால் அவனுக்கு மனைவியாக வாழ விரும்பவில்லை.
குழ்ந்தை நீனாவுடன் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருந்தும் அவளால் அவனுடன் வாழ்க்கையை
தொடர முடிவதில்லை.
செம்பகத்தின் கணவனோ உடலுறவுக்கே தகுதியில்லாதவன். அதுவே பூலிங்கமும் செண்பகமும் இணைவதற்கான
வலுவான காரணமாக அமைந்துவிடுகிறது.
பெண்கள் அதிகமாக இடம் பெற்றுள்ள அவர் நாவலான எட்டுத்திக்கும் மதயானை நாஞ்சிலாரின் பெண் பாத்திரப்படைப்புகளின்
பல்வேறு முகங்களைக் காணும் தளமாக அமைந்திருப்பதுடன் பெண்ணியம் குறித்த பல்வேறு கருத்துகளைப்
போகிறப் போக்கில் சொல்வதற்கான தளமாகவும் அமைந்திருக்கிறது.

தாயின் நடத்தைச் சரியில்லை என்று தாயுடன் உறவு கொண்டவனைக் கொலை செய்த பரமுவிடம் பூலிங்கம்
கேட்கிறான்.. :" தப்பா ஒரு ஆள் ஒனக்க அம்மை மேலே கை போட்டிருந்தா கொடுக்கரிவாளை வச்சுக் கொத்திப்
போட்டிருக்க மாட்டாளா? ஆனா அவ அப்படிச் செய்யல்லே. அந்த ஆளு தப்பா நடக்கப் பாக்காண்ணு ஒங்க அப்பா
கிட்டே சொல்லல்லே.. இல்லியா? நீ எங்கிட்டே கோவப்படாம யோசிச்சுப்பாரு.. காசுக்காச்சுட்டி போகப்பட்ட பொம்பிளையா?
இல்லேல்லா? பின்னே எதுக்கு அவளும் உடை குடுத்தா?

............
இதெல்லாம் நம்ம கணக்கிலே ஆம்பிடாத விசயம்டே..

இங்கே பரமுவின் அம்மாவாக பெயரிலியாக காட்டப்படும் பெண்தான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல்
இன்னொரு ஆணிடம் உறவு கொண்டதாகக் காட்டப்படும் பெண் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்,

"காவல், கற்பு, குலம், பெருமை என்ற சொற்கள் எல்லாம் மனித அகராதியில் என்று வந்து சேர்ந்தவை என்று
தெரியவில்லை.
சொற்கள் மட்டுமே மேலும் மேலும் சேர்ந்திருக்க வேண்டும். கரையான் புற்று வளர்வதைப்போல.
சொற்களுக்கு அச்சப்பட்டுப் பதுங்கித் திரியும் மனிதன், சொற்களைத் தூக்கித் தூர எறிய முடியாமல்,
சொற்களைச் சுமந்து திரியும், முகமூடியாய் அணிந்து திரியும், வெறுமனே வாயிலிட்டு வெற்றிலைப் பாக்குப்
போலக் குதப்பித்திரியும் மனிதன்.."

பூலிங்கம் குரலில் ஒலிக்கும் நாஞ்சில்நாடனின் குரல் இது.

குடும்பச்சுமையில் தன்னைக் கவனிக்காது நாற்பது வயதிலேயே உருவமற்று கட்டொழுங்கு இல்லாமல்
போகும் பெண்களைப் பற்றியும் பாபி கதைப் பாத்திரத்தின் மூலம் உணர்த்துகிறார் நாஞ்சில்நாடன்.

"தன் உடலைச் சீராக வைத்துக் கொள்வதிலும் சேட்டைக் கட்டியிருந்த தாம்பத்யக் கயிறு தழையாமல்
பார்த்துக் கொள்வதிலும் சாமர்த்தியம் போதவில்லை போலும். இந்தியக் குடும்பப் பெண்களுக்கு நாற்பத்தைந்து
வயதுக்குள்ளேயே எல்லாம் ஆடி அடங்கிவிடும் போலிருக்கிறது. பிறகு பெசரெட் செய்வதும் பெண் பிள்ளைகளுக்குச்
சீர் விடுவதும் பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றுவதும் சனீசுவரனைச்
சுற்றுவதும் தான் வாழ்க்கை என்று ஆகிவிடும் போலும்" (பக் 71) என்கிறார்.

நாஞ்சில் நாடனின் கதைக்களம் நகரமாக இருக்கலாம். ஆனால் கதை மாந்தர்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் நாஞ்சில் நாட்டு பெண்கள். அவர்கள் தனக்கென தனி அடையாளம் இல்லாதவர்கள். ஆண்களால்
வஞ்சிக்கப்பட்டும் ஏமாற்றப்பட்டும் தனித்து விடப்பட்டவர்கள். ஆண் துணைக் கிடைக்கும் போது
நெருப்பில் பற்றிக்கொள்ளும் பஞ்சு போல எரிந்து போகிறவர்கள். எனினும் கற்பு, திருமண உறவு
என்று கற்பிக்கப்பட்டிருக்கும் சமூக விதிகளை வார்த்தைகளால் அல்ல தங்கள் வாழ்க்கையால்
வளைத்து போட்டு வாழக்கற்றுக் கொண்டவர்கள். அவர்கள் அதிகமாக வாய்திறந்து பேசுவதில்லை.
அவர்களின் மவுனங்களும் செயல்களுமே கதைக்களத்தில் ஆண் கதை மாந்தர்களின் முகத்தைக்
காட்டும் கண்ணாடிகளாகவும் இருக்கின்றன.

நாஞ்சில் நாடனின் பெண் கதைப் பாத்திரங்கள் பெரும்பாலும் அவர் தலைமுறையை/அவர் அம்மாவின் தலைமுறையைச்
சார்ந்தவர்கள் என்று தான் சொல்லவேண்டும்.
கதைப் போக்கில் கதைக்கான பிரச்ச்னை முடிச்சு அந்த தலைமுறைக்கான எண்ண ஓட்டத்தில்
அவிழ்க்கப்படுகிறது. அதே முடிச்சு இன்றைய பெண்ணிடம் கிடைத்திருந்தால் அவள் என்ன் செய்திருப்பாள்
நாஞ்சிலார் அவள் என்ன செய்வதாக நினைப்பார் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

இன்றைய இளம் தலைமுறை பெண்களின் செயல்களும் பிரச்சனைகளுக்கு அவர்கள் எடுக்கும்
முடிவுகளும் நாஞ்சில் நாட்டிலும் மாறித்தானிருக்கும். அந்த மாற்றங்களை அவர் வருங்காலத்தில் பதிவு செய்ய
வேண்டும் என்பது என் போன்றவர்களின் எதிர்பார்ர்பும் விருப்பமும்.
"தாய் பயன்படுத்திய சொற்களை மனைவி பயன்படுத்தவில்லை, ஆனால் அறிந்திருந்தாள்,
மனைவி அறிந்த அச்சொற்களை மகள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை" நாஞ்சில் நாட்டு வழக்குச் சொற்களுக்காக
வருத்தப்படும் நாஞ்சில்நாடன் இந்த மாற்றங்கள் வெறும் சொற்களில் மட்டும் நிகழவில்லை, வாழ்வியல்
வாழ்க்கை மதிப்பீடுகள் என்று பல்வேறு தளத்தில் நிகழ்ந்திருப்பதை பதிவு செய்ய வேண்டும்.

ஒரு மகனாக தந்தையாக, தனையனாக, நண்பனாக ஏன் தாத்தாவாகவும் அவரைச் சுற்றி இருக்கும்
பெண்களின் தலைமுறை சிந்தனை மாற்றங்களைப் பதிவு செய்வதன் மூலம் அவர் படைப்புகளின்
கதை மாந்தர்களின் தலைமுறை வட்டம் பூர்த்தி அடையும்.


நாஞ்சில் நாடன் பெண்ணிய விடுதலைக்காக பெண்ணியக்குரல் எழுப்ப தன் பெண் கதைப்பாத்திரங்களைப்
படைக்கவில்லை. ஆனால் அவரின் பொன்னம்மை, சுசிலா, கோமதி, பானு, செம்பகம், பேய்க்கொட்டு மதனி,
விசாலம், பூமணி , பரமுவின் அம்மா என்று பல்வேறு பெண்முகங்களைக் காட்டி அவரவர் செயல்களின் மூலம்
கதையை நகர்த்திச் செல்கிறார். ஆனால் அதிகமாக அந்தந்த பெண் கதாபாத்திரங்கள் தங்கள் செயல்கள்,
உணர்வுகள் குறித்து பேசவில்லை, பெரும்பாலும் அவர்களுக்காகவும் அவர்கள் குறித்தும் பேசுவதும்
கதையின் ஆண் கதை மாந்தர்களாகவே இருப்பது ஆண் பார்வையில் சித்தரிக்கப்படும் பெண் கதை
மாந்தர்கள் என்று சொல்வதற்கே இடமளிக்கிறது.
நாஞ்சிலார் அவர்களே சொவ்லது போல எந்த ஒரு செயலுக்கும் இரண்டு பார்வைகள் உண்டு.
வண்டிக்காரனின் பார்வையில் பேசப்படுவது மட்டுமல்ல. வண்டியை இழுக்கும் மாடுகளின் பார்வையிலும்
பேசப்பட வேண்டும் என்பார்., அதையே தான் அவர் படைத்திருக்கும் பெண் கதைப் பாத்திரங்களுக்கும்
பொருத்திப் பார்க்கிறேன்.
விசாலம் கதையில் பேசவே இல்லை. பேசியிருந்தால் கைக்குழந்தைக்குப் பசி தீர்க்க பிச்சை எடுப்பதை
" தவசி" என்று சொல்லத் துணிவாளா? அல்லது தன்னை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை - இச்சமூகத்தை
அரக்கர்கள் என்று அடையாளம் காட்டுவாளா?
சுசிலாவுக்கு தனக்கு தாய் அந்தஸ்த்துக் கிடைக்கிறது.
ஆண் துணையின்றி வாழும் கோமதியின் வறண்ட நிலத்தில் அவன் மழையாகும் போது
அவளுக்கு அந்த ஈரம் தேவைப்படுகிறது.
செம்பகத்தின் கணவன் தாம்பத்ய உறவுக்கு லாயக்கில்லாத அவலம்தான் அவளை பூலிங்கத்தின்
தோள்களில் சரிந்து விடச் செய்கிறது.
அப்படியானால் ஆண்-பெண் ஈர்ப்பு, உடலுறவுகளுக்கு இவை மட்டுமே காரணமா என்றால் இல்லை.
இக்காரணங்களைத் தாண்டிய ஆண்-பெண் உறவுகளை நாஞ்சிலார் தன் கதைக்களத்தில் பயன்படுத்தவில்லை
என்பதை மட்டுமே இப்பொதைக்குச் சொல்லிக்கொள்ளலாம்.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஆண்-பெண் ஈர்ப்பு நிலைப் பற்றி சதுரங்க குதிரையில் ஒரு
சின்னக்கோடு வரையப்பட்டிருக்கும். அவர் படைப்புகளில் வாழும் மற்ற பெண்களுக்கு
அம்மாதிரியான மன உணர்வுகள் இருந்திருக்கும் என்பதைப் பற்றி எல்லாம் எந்த ஒரு ஆண் கதை
மாந்தரும் யோசிக்கவே இல்லை.
சுசிலா பூலிங்கத்தை மோகித்ததும் கோமதி பூலிங்கத்தை மோகித்ததும் வெறும் உடல் சார்ந்த தேவை
மட்டும்தானா? அவர்களின் பக்கம் இருந்த நியாயங்கள், உணர்வுகள் அனைத்துமே
ஆண் கதைமாந்தர்கள் மூலம் பேசப்படுவதால் வாசகன் அறிந்து கொள்ளும் வாய்ப்பே இல்லை.
உடல் தேவைகளுக்கு அப்பாற்பட்ட அகமனம் சார்ந்த ஆண்-பெண் ஈர்ப்புநிலை பேசப்படவே இல்லை.
பெண் ஆணை நாடுவதும் உடலுறவுக்கு இசைவதும் கதைகளில் சொல்லப்படும் காரணங்களாக
மட்டுமே இருக்குமானால் அது பெண்ணை எந்த வகையிலும் பெருமைப் படுத்தாது.
செம்பகம் பூலிங்கத்தை தவிர வேறு எந்த ஆணை அந்தச் சூழலில் சந்தித்திருந்தாலும் கூட
அவனுடன் ஓடிப்போயிருப்பாள் என்று கருத கதைக்களத்தில் நிறைய இடம் இருக்கிறது.
ஆண் உடலுறவுக்கான தேவை இருக்கும் போது பெண் அந்தச் சூழலில் சந்திக்கும்
எவனுடனும் உடலுறவுக்கொள்ள இசைவது போல காட்டுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதில்லை.
ஆண் மடியில் படுத்தவுடன் எந்தப் பெண்ணும் அடுத்தக்கட்டமாக உடலுறவுக்கு இடம் கொடுத்து
விடுவளா. ?
பல மாதங்கள் பட்டினிக்கிடந்தவன், தாகமாக இருந்தவன் பழைய கஞ்சியைக் கண்டதும்
எடுத்து குடித்து வாயைத் துடைத்துக்கொண்டு நிற்பது போல் பெண் உடலும் பெண் மனமும்
இருப்பதில்லை.
உடல் தேவைகளைத் தின்று செரித்து வாழ்ந்த ஆச்சிகளும் மதனிகளும் உண்டுதான்.

நாக்கில் எச்சில் ஊறும் நாஞ்சில் நாட்டு வகைவகையான சமையல்களைப் பற்றி புத்தகம் போடும் அளவுக்கு
எழுதக்கூடியவர் நாஞ்சில் நாடன். அப்போதெல்லாம் அந்த வகைவகையான சமையல்களைச் செயது பரிமாறும்
நாஞ்சில் நாட்டு வளைக்கரங்கள் இதைப்பற்றி எல்லாம் எழுதினால் என்ன எழுதி இருப்பார்கள் என்பதை
யோசித்துப் பார்க்கிறேன். வெறும் ருசி மட்டுமல்ல அந்த ருசிகளுக்குள் அவர்கள் இழந்துப் போன வாழ்க்கையின்
எத்தனையோ ருசிகரமான உணர்வுகள், ரகசியங்கள் வெளிவரலாம்.





மும்பையை மும்பை மக்களை தன்னுடம் தன் படைப்புகளுடனும் இணைத்து சீரஞ்சீவியாக
வாழ வைத்துக் கொண்டிருக்கும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எங்கள் நன்றியும் வணக்கமும்.

Friday, June 19, 2009

காணாமல் போன கடலலை

ஏழு கடல் தாண்டி
ஏழு மலைத் தாண்டி
ஒரு குகை.
ஒற்றைக்கண் அரக்கனின்
இமைகளில்லாத இரவுகள்
சிறகொடிந்த மைனாவாய்
சிறை எடுக்கப்பட்ட
எங்கள் இளவரசி
கனவுகளுடன் காத்திருக்கிறாள்
எப்படியும் வந்துவிடுவான்
பறக்கும் கம்பளத்தில்
பட்டத்து ராஜா என்று.

கடலை நிரப்பிக்
கட்டிடம் கட்டியதும்
மலையைக் குடைந்து
மரங்கள் மறைந்ததும்
அவள் கனவுகளில் காட்டும்
கண்ணாடிகளைத் தேடுங்கள்
கனவுகளின் கருக்கலைப்பில்
மரணம் சம்பவிக்குமென
மருத்துவர்கள் சொன்னதை
மறந்து விடாதீர்கள்.

கனவுகள் கட்டிய
கல்லறைக்குள்
காலம் அவளைப் புதைப்பதற்குள்
தோண்டி எடுத்து
காப்பாற்றி விடுங்கள்
அவள்
கனவுகளாவது
உயிர்ப் பிழைக்கட்டும்.

Monday, June 8, 2009

இந்தியக் கருவாடும் வெள்ளைப்பன்னிகளும்

பிரபலங்கள் எழுதும் பத்திகளை விட உங்களையும் என்னையும் போல
சாதாரண பொதுசனம் எழுதும் எழுத்துகளில் இருக்கும் பாசாங்கில்லாத சத்தியத்தின்
குரல் இப்போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பக்கங்கள்.
அப்படித்தான் 31மே2009 டைம்ஸ் ஆஃப் இந்தியா மும்பை பதிப்பில்
'சிக்கன் ஹலால்' என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி.
எழுதியவர் தன் பெயரைக்கூட "இந்தியக்குடிமகன்" - son of india
என்றுதான் அடையாளப்படுத்தி இருந்தார்.
http://epaper.timesofindia.com/Daily/skins/TOINEW/navigator.asp?Daily=TOIM&showST=true&login=default&AW=1244016793984



அவருக்கு ஏற்பட்ட அனுபவம் போல நம்மில் பலருக்கும் ஒவ்வொரு பயணத்திலும்
ஏற்பட்டிருக்கும். ஆனால் வழக்கம் போல கொதித்து அடங்கிவிடும்
பால் போல நாமும். அந்த நேரத்தில் ஆத்திரம் கொண்டு அதன் பின் அதை மறந்து
எப்போதும் போல இதெல்லாம் சகஜம்தான் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குள்
அடங்கிப்போகிறோம். அதற்கான காரண காரியங்களை நம்மில் பலர் யோசிப்பதில்லை.
(அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரமிருக்கிறது என்கிறீர்களா?)

எல்லோரும் ஒரே கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் வானூர்தியில் வெள்ளைக்காரனுக்கு
மட்டும் தனிக்கவனமும் மரியாதையும் செலுத்தும் இயல்பு என்னவோ அந்த விமானப்பணிப்பெண்ணுக்கு
மட்டுமே இருப்பதாக நினைப்பது தவறு. நம் எல்லோரிடமும் எப்போதாவது அந்த உணர்வு, மனநிலை
இருக்கிறது. ரொம்பவும் இயல்பாகவே நம் எண்ணங்களில் கலந்திருக்கும் ஒரு மதிப்பீடு.
வெள்ளைக்காரன் உசத்தி.. கறுப்பன் தாழ்வு என்ற எண்ணம் தான்.
வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு சுற்றிப்பார்க்க வரும்போது அனுபவிக்கும் மேட்டுக்குடி
மரியாதையை எந்த ஓர் இந்தியனும் உலகில் வேறு எங்கும் அனுபவிக்கும் வாய்ப்பில்லை.
ஆஸ்திரேலியா, இலண்டன் என்று பல்வேறு நாடுகளில் இந்தியனுக்கு ஏற்படும் நிறவெறிக்
கொடுமைகளை அண்மையில் ஊடகங்கள் வழி அதிகம் தெரிந்து கொண்டிருப்பதும்
அன்றைய சூடான காலை காபி போல சூடானச் செய்தி.. அதற்குமேல் அதற்கான முக்கியத்துவம்
எதுவுமில்லை.

பாலின் வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்.!
பால் போல ஒளீவீசும் நிலவின் அழகு.
என்பதை எல்லாம் உலக மொழிகள் அனைத்திலும் எழுதி வைத்து தலைமுறை தலைமுறையாய்
நம் எண்ணத்தில் விதைத்துவிட்டார்கள்.

இருளடர்ந்த கரிய மேகங்கள் அழகு
ஒளி நுழைய முடியாத அடர்ந்த வனம் அழகு
கரிய பாறையிலும் வளைந்து நிமிர்ந்து செங்குத்தாய் மண்ணின் மடிக்கிழித்து திமிறி நிற்கும்
மலைமுகடுகள் அழகு.. சுருள் கேசமும் தடித்த உதடுகளும் மின்னும் கண்களுமாய்ச் வெள்ளை நிறப் பல்
தெரிய பளிச்சென சிரிக்கும் ஆப்பிரிக்க குழந்தையும் அழகுதான்.

ஆனால் அழகு என்று சொன்னவுடன்
சிவந்த ரோஜாவும்
தூயமை என்றவுடன் வெள்ளை நிறமும் அடையாளமாய்
நம் எண்ணத்தில் கலந்திருப்பது எதனால்?
மாங்கொழுந்து நிறமுடைய கண்ணகியின் கொள்ளுப்பேரன்கள்
மணமகள் விளம்பரத்தில் எப்போதும் அழகானப் பெண் தேடும் வரிகளுக்குள்
ஒளிந்திருக்கிறது வெள்ளை நிறம் உசத்தி என்ற எண்ணத்தின் அடையாளம்.
அம்மாவும் அப்பாவும் அக்காவும் தங்கையும் கருப்பாக இருந்தாலும்
அதற்கான காரணங்கள் புரிந்தாலும்..
'fair good looking girl' தேடி அலைந்து கொண்டிருக்கும் திராவிட மண்ணின் மைந்தர்களை
நினைத்து பெருமைப் பட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?







கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு ..
என்ற பாடலைக்கூட ஓர் ஆண் பெண்ணைப் பார்த்து பாடுவதாகக் காட்டி இருந்தால்..!!??
ஹிட் ஆகியிருக்காது!!
அதையும் இந்தச் சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கும் சிவந்த பொன்னிற பெண் பாடியதால்தான்
பாடலும் ஹிட் ஆகியது. மக்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது.

இம்மாதிரி கருத்துகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்/விற்பனைப் பொருட்களை
ஒரு 10 வருடங்கள் ஊடகங்கள் விலக்கி வைத்தாலே போதும்.. இந்த மாயையிலிருந்து
ஓரளவு வளரும் தலைமுறையாவது விடுபடும்.

Tuesday, May 26, 2009

வாழ்ந்ததை உணர்த்திய மரணம்


(1)
வியட்நாமில், ஆப்கானிஸ்தானில்,
ருவண்டாவில், ருசியாவில்,
ஈரானில் ஈராக்கில்
இனப்படுகொலைகள் நடந்ததெல்லாம்..
நமக்கு வெறும் செய்தி.
சாப்பாடு மேசையில் புரட்டிப் பார்த்துவிட்டு
தூக்கி எறிந்துவிடும் செய்தி.
உலகச் செய்திகளில்
வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கப்பட்ட செய்தி.
அதுவே இலங்கையில் நடந்தப்போது....
செய்திகள் வாழ்க்கையானது.
அவர்களின் முகம் தெரியாதுதான்.
தொடர்புகள் இல்லைதான். ஆனாலும்
அவர்கள் வாழ்க்கையில்
அவர்கள் போராட்டத்தில்
அவர்கள் ரத்தத்தில்
அவர்கள் வெற்றியில் அவர்கள் தோல்வியில்
நாமும் இருந்தோம். இருக்கிறொம்.
அவர்கள் வாழ்க்கை நம்முடையதாக இல்லை எனினும்
அவர்கள் மரணம் நம்முடையதானது.
பிறப்பில் தான் உறவுகள் நிச்சயிக்கப்படுவதாகவும்
தொடர்வதாகவும் சொல்கிறார்கள்,.
ஆனால்
அவர்கள் இறப்பில் தான்
அவர்களுக்கும் நமக்குமான உறவு நிலம் விளைந்தது.
அவர்கள் மரணத்தில் தான்
நாம் நம்மை நம் வாழ்க்கையை கற்றுக்கொண்டோம்.
அவர்களின் ரத்தம் தோய்ந்த போராட்டத்தின் கதைகளின் ஊடாகவே
நாம் போராளிகளின் முகங்களை வரைந்தோம்.
மண்ணம்பேரியும் கோணேஸ்வரியும்
நம் ஆதித்தாயின் புதல்வியர் என்பதை
உணர்ந்த தருணங்களில் தான்
முலைப் பிடுங்கி எறிந்த கண்ணகியின் ஆவேசத்தைக்
கற்பனையில்லை என்றுணர்ந்தோம்.
சுயம்புவாக முளைத்த பெண்ணியத்தை கோணேஸ்வரியின்
யோனியில் வெடித்த கிரனைட் வெடிச்சிதறல்கள் தான் நம்மில் விதைத்தன.

--
(2)


சித்திரவதை முகாம்களில்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
வன்மத்தின் இரத்த வாடை
வேட்டைநாயின் இரத்த நெடி
ரத்தக் கறைப்படிந்த சுவர்களில்
மனித ஆன்மாவின் சித்திரங்கள்.

கனவில் கத்திகள் பாய்ந்தக் கவிதைகளை
ரசிக்கும் படி எழுதிக்குவித்த
எம் கவிஞர்கள்
எப்போதும் எழுதியதில்லை
காலம் காலமாய்
வரப்போகும் தலைமுறை தலைமுறையாய்
நம்மை நம் சந்ததிகளைத்
துரத்திக்கொண்டிருக்கும்
மரணத்தின் ஓசையை.


(3)
மரணம் மட்டுமே அறிந்த
எம் விளைநிலத்தில்
குருதியின் நிறத்தில்
பூக்கும் மலர்களில் கூட
வீச்சமடிக்கும்
இனவாத எலும்புத்துண்டுகளின் வாடை.

எங்கள் குழந்தைகள் மட்டுமல்ல
உங்கள் குழந்தைகளும்
குழந்தைகளாக வளரவில்லை.
வெடிகுண்டுகளும்
பீரங்கி ஓசைகளும்
பாலூட்டிய
பதுங்குகுழிகளின்
மழலை விரல்களில்
பிறக்கும் போது
பதிந்துவிட்டது
ரத்தம் தோய்ந்த
வன்மத்தின் வாடை.

யுத்த வெறியில்
உன்மத்தம் பிடித்த
நாய்களுக்குத் தெரிவதில்லை
நடுவீட்டிலும்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளின் காட்சி.
சிங்களத்தாயின் அடிவயிற்றிலும்
ஜனிக்கக்கூடும்
கம்சன்களை வதைச் செய்யும்
கண்ணனின் அவதாரம்.

-
(4)

மக்களின் மரணத்தை
கைதட்டிக் கொண்டாடியது ஒரு கூட்டம்
மனிதம் மரணித்து போனதை
மவுனமாக பதிவு செய்தது
அந்த நீண்ட இரவு.

தப்பித்ததாக சொன்னார்கள்.
நலமாக இருப்பதாக
நம்பிக்கையுடன சொன்னார்கள்
இல்லை இல்லை
எல்லாம் முடிந்ததென்றும்
எரித்துவிட்டதாகவும்
சாம்பலைக் கூட
இந்தியக்கடலின் மடிநிறைக்க
கரைத்துவிட்டதாகவும்
காற்றில் கலந்துவிட்டதாகவும்
மீண்டும் மீண்டும் சொல்லுகிறார்கள்..

மரணத்தை மீறியும்
தனி மனிதர்களின் வளையத்தைத் தாண்டியும்
வாழ்க்கையும் உண்டு
போராட்டங்களும் உண்டு

தன் பெண்டு தன் பிள்ளை
தன் மனைவி தன்துணைவி
தன் பேரன் தன் சுற்றம்
இவர்களையே மந்திரிகளாக்கும்
வித்தைகள் அறிந்த
நம் தலைவர்கள்
அறிந்ததில்லை
நிலத்தடியில் உதிக்கும்
சூரியக்குஞ்சுகளை.

(கவிதை தலைப்பு - சங்கரியின் கவிதை "இருப்பும் இறப்பும்"
கவிதை வரிகள். தொகுப்பு : சொல்லாத சேதிகள்)

Tuesday, May 5, 2009

நகம்




விதம் விதமாக
வண்ணம் பூசி
அழகுப்பார்த்த காரணத்தாலேயே
வெட்டாமல் இருக்க வேண்டும்
என்பதல்ல.
கவனமாக வெட்ட வேண்டும்.
ஆழமாக வெட்டினால்
ரத்தக்கசிவு வரலாம்
கவனிக்காமல் விட்டுவிட்டால்
வீங்கி சீழ்ப்பிடித்து
விண் விண் என்று
வலி கொடுக்கும்
பிராண அவஸ்தையை
அனுபவிக்க வேண்டிவரும்.


வளர்ப்பது தற்காப்புக்கு
என்றெல்லாம் சொல்லிக்கொள்ளலாம்
வளர்ந்து வளைந்திருக்கும்
இடுக்குகளில்
தங்கிவிடுகிறது
தேடிவந்த அழுக்கும்
தேகத்தின் அழுக்கும்.
சமைப்பது சாப்பிடுவது
அழுக்குகள் சேர்த்துதான்
என்றாலும்
பழகிவிட்டது
இரப்பையும்
இறைப்பையும்.


இரவில் வெட்டினால்
தரித்திரம் என்று
பாட்டி சொன்னதையே
அம்மாவும் மறக்காமல்
சொல்கிறாள்.

வெட்ட வெட்ட வளருமாம்
உன் நினைவுகளைப் போலவே
நகமும் .
செத்த உடம்பிலும்
நகம் வளருமாமே
சொல்லுகிறார்கள்
உண்மையா?
அதனால்தான் உயில் எழுதுகிறேன்
விரல்களைப் புதைக்காதீர்கள்
எரித்துவிடுங்கள் என்று.

---------------

Wednesday, April 29, 2009

சென்னைத்தமிழ்




குப்பத்து மொழியும் சில குழப்பங்களும்






அன்பின் Pudiyamadavi





தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?



4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .



5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?



பாண்டித்துரை

சிங்கப்பூர்


http://pandiidurai.wordpress.com

சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்



அன்பினிய பாண்டித்துரை அவர்களுக்கு,
வணக்கம்.




தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும்

யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில்

கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு

சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா

நெடுநாளாக என்னுள் உள்ளது).

>> சிங்கப்பூர் வருகிற என்பதை மாற்றி மும்பை வருகிற என்றும்
சிங்கப்பூர் நூலக வாயிலில் என்பதை மும்பைத் தமிழ்ச்சங்க நூலக வாயிலில் என்றும் மாற்றிக்கொண்டால் ...
மும்பையிலும் இதே நிலைமைதான்!





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை.

இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக

இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது

சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை

அல்லவா?)

* குப்பத்து பாஷை என்ற உங்கள் சொல்வழக்கு புரிந்து கொள்ள எளிதாக இருந்தாலும் அது சரியல்ல என்பது என் கருத்து.
சென்னை வட்டார வழக்கு என்றோ சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சுமொழி என்றோ இருந்திருந்தால் சரியாக இருக்கும்.
முதலில் குப்பத்தில் வாழும் மக்கள் யார்?என்ற அறிந்து கொண்டால் சில முடிச்சுகள் அவிழும்.
அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். உடல் உழைப்பு இழிவானதாக கருதப்படும் சமுதாயம் உழைப்பவர்களைத் ஊர்க்கோடியில்
ஒதுக்கி வைத்துள்ளது. தீண்டத்தாகதவர்கள் என்று ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சற்றொப்ப 2000 ஆண்டுகள் கல்வி இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிடம்தான் தமிழ் தன் உயிர்ப்பை
இழந்துவிடாமல், புராண இதிகாச கற்பனைக்குக்குள் தன்னை இழந்துவிடாமல் தன் சுயமிழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழை 2000- ஆண்டுகள் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குப்பத்து வாழ் தமிழர்கள் தான்.

சென்னை குடிசை வாழ் மக்களின் வழக்குத்தமிழ் இன்றொ நேற்றோ உருவானதல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநகரம் உருவான காலகட்டத்தில் உடல் உழைப்புக்கான தேவையும்
வாய்ப்பும் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருந்த இடங்களிலும் உருவான காலக்கட்டத்தில்
நம் கிராமப்புறங்களிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பெரும்பாலான
சென்னை குடிசை வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை - மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது
தெலுங்கர்களும் கன்னடர்களும் அதிகமாக சென்னையில் வசித்தார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால்
சென்னை தமிழ் உருவான வரலாறு ஒரளவு புரியவரும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் பல்வேறு மாவட்ட தமிழ் வழக்கு மொழிகளும்
கலந்து ஓர் அவியல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

சென்னை மொழி மற்ற வட்டார வழக்குகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாகவும் எதற்குள்ளும் அடைக்கமுடியாமல்
திமிறி நிற்கும் மாநகரக்குரலாகவும் இருப்பது இதனால்தான்.



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?

* வட்டார வழக்கில்வரும்.



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து

பாஷையிலிருந்து மருவியதா?

வழக்கம்போல மொழியும் பேசப்படும் மனிதர்களின் வர்க்க சாதி இட வேற்பாடுகளைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.
சென்னையில் பொதுவாக மேல்தட்டு மக்கள் பேசும் மொழி சமஸ்கிருதம் கலந்த/ஆங்கிலம் கலந்த தமிழாக இருக்க
குடிசைவாழ் மக்களின் பேச்சுதமிழ் முன்னதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மாறுபட்டது என்பதாலேயே கலப்படமில்லாத
தூயதமிழ் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் குடிசை வாழ் மக்களின் மொழிக்கலப்பு இயல்பானதாக அமைந்துள்ளது.
அவர்களுக்கே பிறமொழிச் சொல் என்பதெல்லாம் தெரியாது.






4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின்

இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .

* சாதிப்படிநிலை சமூகத்தில் உடல் உழைப்பு > ஏழ்மை > தீண்டாமை எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால்
குடிசைவாழ் பேச்சுமொழியை யார் எதற்காக இழிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புர்நிதுகொள்ள முடியும்.
பஞ்சமர் நாவல் எழுதிய ஈழத்து தமிழ் எழுத்தாளர் கே.டானியல் அவர்கள்

" ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் 'இழிசனர் வழக்கு'
மொழியிலேயே இந்த நாவலைச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்றோர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சீரழித்தபோதும்,
ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து மறுத்து நையாண்டி செய்த போதும் பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னையை மூடி முக்காடிட்டு
இருள் சிறைக்குள் வைத்த போதும் தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்த பஞ்சமர் கூட்ட மக்களேயாகும்.
இவர்களே தமிழுக்கு எஜமானர்களுமாவர்கள். அதனால் அந்த எஜமானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதன் பாத்திரங்களுக்கு
பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களைப் பேச வைத்திருக்கிறேன்" என்றும்
"மக்களின் எதிரிகள் எதைப் பிழை என்கிறார்களோ அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்றும் சொல்லியிருப்பதையும் நினைவு படுத்த
விரும்புகிறேன்.

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தொலைக்காட்சிகளில்
பட்டிமன்றங்கள், கம்பர் விழாக்களில் அவருடைய பேச்சை சில நேரங்களில் ரசித்தது உண்டு! ஏனவே அவருடைய பேச்சைக் கேட்க
போயிருந்தேன். அப்போது இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையையும் அவர்கள் சார்ந்த சாதி, மதம் கலந்து
அவர் நகைச்சுவை என்று பேசிய அபத்தம் என போன்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை
மறைந்து சில பிம்பம் உடைந்து போனது.


5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?

எந்த வட்டார வழக்குகளாலும் தமிழ் சிதைவுறுவதில்லை!


சில குறிப்புகள் :

> என் வாழ்விடம் மும்பை, என் சொந்தவூர் தமிழ்நாட்டின் தாமிரபரணி என்பதால் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு
மும்பைக்கும் சிங்கைக்குமான தொடர்புளவுதான். எனவே சென்னை குடிசைவாழ் மக்களின் மொழியுடனோ வாழ்க்கையுடனோ
எனக்கு அதிகத் தொடர்பில்லை. தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

> சென்னை வழக்கு மொழி குறித்த மேற்சொன்ன என் கருத்துகள் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு மொழி சமூகம் சார்ந்த
பார்வையின் ஊடாக கண்ட ஒரு பருந்து பார்வை தான்.

> வட்டார வழக்கு மொழியின் தாக்கம் படிப்படியாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றன. இன்றைய தொலைக்காட்சி ஊடகம் அறிந்தோ அறியாமலோ அதைத்தான் செய்கிறது .

> பேச்சுதமிழில் கதைகள் எழுதும்போது என் போன்றவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
எல்லோரும் வட்டார மொழி வழக்கில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?
எங்கள் மும்பை டமிளரின் (தமிழரின்) பேச்சு மொழியில் சரளமாகக் கலந்துவிட்ட இந்தி, மராத்தி.குஜராத்தி
மொழிச்சொற்களைக் கலக்காமல் எப்படி எழுதுவது?
அதனால் தான் குறைந்தப்பட்சம் "அச்சா, நஹி, சலோ, க்யா, பானி, இத்தியாதி மினிகலப்புகளுடன்
என் கதைமாந்தர்களின் பேச்சுதமிழை எடிட்டிங் செய்கிறேன்.!

சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சு தமிழ், வட்டார வழக்குகள் குறித்து கொஞ்சம் யோசிப்பதற்கான
வாய்ப்பை உங்கள் மடல் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,
மும்பை.

Tuesday, April 28, 2009

காமெடி டைம்

கலைஞர் டி.வி.யில் அதிரடி காமெடி டைம்
--------------------------------------------





ஜெயா டி.வி.யில் அடிவருடி கலக்கல் காமெடி
---------------------------------------------


Thursday, April 23, 2009

விற்பனைக்காக விந்துவும் கருமுட்டையும்

Life is beautiful.. pass it on என்ற வாசகத்துடன் வளவளப்பான காகித அட்டையில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையை வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா - CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு விந்து - கருமுட்டை வங்கி. டென்மார்க் தலைநகராகக் கொண்ட உலகின் மிகப்பெரிய விந்துவங்கி. அமெரிக்க ஐரோப்பிய மருத்துவ சட்டத்திட்டங்கள், சுகாதார வழிமுறகளைப் பின்பற்றி இந்தியாவில் நுழைந்திருக்கும் வங்கி. குழந்தைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத தம்பதியர் வாழ்க்கையில் வசந்தத்தை வழங்கும் தேவதைகள் / தேவதூதர்கள் நீங்கள்! எங்கோ யாருக்கோ தேவைப்படலாம் உங்கள் விந்துவும் கருமுட்டையும். இம்மாதிரியான சமூக அக்கறை தொனிக்கும் வாசகங்கள்..நம்மை யோசிக்க வைக்கிறது. கவர்ச்சிகரமான வரிகளைத் தாண்டி யோசிக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய தாராளமயம் எதை எல்லாம் தாராளமயமாக்கி விற்பனைக்கான கடைச்சரக்காக நம் சந்தைக்குள் நுழைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. போர்க்களத்தில் பணிபுரியும் வீரர்கள், இராசயணம், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதில் வேலைச் செய்பவர்களுக்கும் தங்கள் வாரிசுகளை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் உரிமையை இந்த வங்கிகளில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் விந்துகளை சேமித்து வைப்பதன் மூலம் பெறமுடியும் என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். அறிவியல் உலகத்தின் மிகச்சிறந்த பயன்பாடு என்றும் கொண்டாடலாம்தான். ஆனால் நடைமுறையில் இந்த வங்கிகளில் என்ன நடக்கிறது? விந்து தானம் கொடுப்பவருக்கு 10 சாம்பிளுக்கு குறைந்தது ரூ.5000 முதல் 10,000 வரை! கருமுட்டைக்கு விலை அதிகம். குறைந்தது ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை. வாடகைத்தாய்க்கோ ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க குறைந்தது 2 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரை . தகுதிகள்: *விந்து தானம் வழங்கும் ஆண் 18 வயதுக்கு மேல் 42 வயதுக்குட்பட்டவராய் இருக்க வேண்டும். * ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை. * இரண்டு தலைமுறையின் மருத்துவக்குறிப்புகள் தேவை. *தொடர்ந்து 6 முதல் 9 மாதங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விந்து வங்கிக்கு வருகைத் தந்து விந்துதானம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். *விந்துதானம் செய்வதற்கு முன் பாலியல் நோய்கள் (HIV & Hepatitis) மற்றும் பிற தொற்றுநோய்கள் இருக்கிறதா என்றறியும் சோதனைக்கு உடன்பட வேண்டும். * விந்துதானம் செய்வதற்கான மேற்குரிய தகுதிகளுடன் இன்னும் சில விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். விந்துதானம் வழங்கும் ஆணைப்போலவே கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கும் *வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். *ஏற்கனவே தாய்மை அடைந்தப் பெண்ணாக இருப்பது சிறப்புத்தகுதி! *கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி மருந்துகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். *தொடர்ந்து இரு முறையாவது கருமுட்டை தானத்திற்கு உடன்பட வேண்டும். *கருமுட்டை தானத்திற்கான மருத்துவ முறைக்கு- மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்தல், கருமுட்டையை எடுக்கும் மருத்துவமுறை - உடன்பட வேண்டும். *பாலியல் நோய்கள்/தொற்றுநோய்கள் அறியும் மருத்துவ சோதனைக்கு உடன்பட வேண்டும். வாடகைத்தாய்க்கும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் அவசியம். வயது வரம்பு 21 முதல் 35க்குள். இவைதவிர சம்பந்தப்பட்ட ஆண்/பெண் வாழ்க்கைத்துணையின் ஒப்புதலும் தேவை. எது விற்பனைக்கு? --------------------- பாக்கெட் மணி, ஆடம்பர இரவு விடுதி கேளிக்கைகள் இத்தியாதிகளில் மயங்கித்திரியும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இம்மாதிரியான வங்கிகள் மின்மினிப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும் விளக்குத்திரியாக இருக்கின்றன. பாக்கெட் மணிக்காக தன் நண்பன், பாட்டி தாத்தா தம்பி தங்கை உறவுகளின் உயிருடனும் விளையாட துணியும் இன்றைய இளசுகள் விந்துவங்கியில் கிடைக்கும் பணத்திற்காக அதிகமாக போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தவிசயத்திலும் ஆண்களைவிட அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். மாதம் ஒரு முறைதான் கருமுட்டைகள் உற்பத்தி என்ற இயற்கையின் விதி. எனவேதான் கருமுட்டைகளுக்கான விலையும் விந்துகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் கருமுட்டை தானம் செய்யும் போது மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது. அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஓவேரியன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா. தீடிரென சரியத் தொடங்கியிருக்கும் பொருளாதரம், கணினி ப்பிபிஓ துறைகளின் ஆள்குறைப்பு வேலை இழப்பு ஆகிய சூழல்கல் நிறைய இளம் பெண்களை கருமுட்டை தானம் செய்யும் நிலைக்கு தள்ளி இருக்கிறது என்பதும் உண்மை. வாடகைத்தாயாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய தமிழ்ச்சினிமா காட்சிகளும் பெண்ணுக்கு ஏற்படும் குற்ற உணர்வும் இன்றைய எந்த வாடகைத்தாய்மார்களுக்கும் இல்லை. இதை மனநிலை மாற்றம் என்பதா? பொருளாதரம் தின்று செரித்துவிட்ட உணர்வுகள் என்பதா? இரத்ததானம் செய்வது போலவே விந்துதானமும் கருமுட்டைதானமும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அறிவியல் பூர்வமாக அவர்கள் வாதத்தை உடைப்பது எளிதல்ல எனினும் தன்னுடைய கண், தன்னுடைய உதடு தன்னுடைய புன்னகை தன்னுடைய நடை தன்னுடைய நிறம் தன்னைப் போலவே அச்சு அசலாக இன்னொரு உயிர்.. தன்னை தன் பரம்பரை விதையை தன்னுள் சுமந்து கொண்டு தன் பரம்பரை சங்கிலியாய் இந்தப் பிரபஞ்சத்தின் உயிரணுவில் கலந்து.. நிற்கும்போது அந்த உயிருக்கும் அந்த உயிரின் விதைக்கும் உள்ள தொடர்பு.. வெறும் இரத்ததானம் அல்ல. அதற்கும் மேலான ஒன்று. பலகோடிக் கணக்கில் செலவு செய்து மக்கள்தொகை அதிகமுள்ள இந்திய சந்தையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த விந்து வங்கிகள் விந்துதானம், கருமுட்டைதானம், வாடகைத்தாயின் தியாகம் என்ற அறச்சிந்தனைகளைப் புறந்தள்ளி எல்லாம் உலகச் சந்தையில் விற்பனைக்கே என்ற விற்பனைச் சந்தையைக் கடைவிரித்திருக்கின்றன. குழந்தை இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற விழுமியங்கள் எல்லாம் கடந்த காலமாகிவிடும். இங்கே இனி எல்லாமே விற்பனைக்குத்தான்

 Cryos International - India Pvt. Ltd. Address : 209, Marathon Max, LBS-Link Road Junction, Mulund (West), Mumbai - 400080 INDIA Tel. : +91-22-25683998, +91-9322404849 +91-22- 2292 6264 Fax. : +91-22 2562 1308 E-mail : in@cryosinternational.com Website : www.cryosinternational.com

Monday, April 13, 2009

வலிநிவாரணி


அச்சமாக இருக்கிறது
மின்னஞ்சல்களை வாசிக்க.
அச்சமாக இருக்கிறது
பத்திரிகை பக்கங்களைப் புரட்ட.
அச்சமாக இருக்கிறது
பூக்கள் நடத்தும்
புறநானூறு பாட.
அச்சமாக இருக்கிறது
உண்மையின் கோரமுகம்.

சீழ்வடியும்
காயங்களின் வலியுடன்
காலம்தள்ளுவது
கஷ்டம்தான்.
எப்படியோ
24 மணிநேரமும்
திரைப்படங்களையே
காட்டிக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சிகளின்
அவசியத்தை
இப்போதாவது
நாங்கள் பாராட்டித்தான்
ஆகவேண்டும்.!!

Thursday, April 2, 2009

உண்மைக்கு நெருக்கமாய்






சீக்கியர்கள் VS தமிழர்கள்
--------------------------
"சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம். "

என்று வீரவணக்க வரலாறு குறித்த என் பதிவில் எழுதியிருந்தேன்.
கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்துதான்.
இக்கட்டுரையை பல்வேறு இணையதளங்களும் வலைப்பூக்களும் (Blog)
மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருந்ததை அண்மையில் கண்டேன்.

நண்பர்களுடன் இதுகுறித்து நிறைய பேசி இருக்கிறேன். கட்டுரைக்கான
பின்னூட்டங்கள் சில செய்திகளைத் தொடாமல் இருப்பதையும் அறிய முடிந்தது.
அதனால் என் பதிவுக்கு நானே பின்னூட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது!
அவற்றில் சில:


*என்னதான் மதம் குறித்த பார்வை என்போன்றவர்களுக்கு தந்தை பெரியார் சாயலில்
இருந்தாலும் மதம் என்ற ஒரு கட்டுமானம் சீக்கியர்களை இணைத்திருக்கிறது.
ஆனால் தமிழர்களின் மதம்?
இந்துமதம்! கேட்கவே வேண்டாம். தமிழ்ச்சாதியைப் பிரித்து வைத்திருப்பதில்
சூத்திரனாய் ஒதுக்கி வைத்திருப்பதில் மிகபெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது.
பல்நூறு ஆண்டுகள் தன் ஆளுமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற மாதிரி
மொட்டைப் போடுவதிலிருந்து பிச்சை எடுப்பது வரை சகலத்திலும் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பேசும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு,
உழவர் திருநாள் என்றெல்லாம் தமிழின அடையாளத்துடன் கொண்டாடப்படும்
-அல்லது கொண்டாட வேண்டும் என்ற தைத் திங்கள் முதல் நாளைக் கொண்டாடுவதில்லை!
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

* பஞ்சாபியர்களின் கடின உழைப்பும் ஒற்றுமையும். அவர்கள் புறநானூறு பாடல்கள் எல்லாம்
எழுதி அதைப் பற்றிப் பேசிப்பேசியே பொழுதுப் போக்குவதில்லை. அவர்கள் தான்
இன்றைய இந்திய மண்ணின் புறநானூறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஆம், இந்திய இராணுவத்தில் பஞ்சாபியர்களின் பங்களிப்பு இன்றுவரை
அளப்பரியது. இந்திய அரசு அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான்
இருக்கிறது. வரலாற்றில் சில நிகழ்வுகள் ( எழுத்தில் பதிவு செய்வது இயலாது)
இந்திய அரசுக்கு இதை நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

*இந்திராகாந்தி கொலையை அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்தியைச்
சுட்டுக்கொன்ற பியாந்த்சிங் அவர்களின் விதவை மனைவி விமலா கவுர் வேட்பாளாராக
நிறுத்தப்பட்டார். இந்தியாவிலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில்
ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான வாக்குவித்தியாசத்தில்.விமலாகவுர் வெற்றி பெற்றார்.

*பியாந்தசிங்கும் பிந்திரன் வாலேயும் இன்றும் சீக்கியர்களால் 'தியாகி' என்றே
போற்றப்படுகிறார்கள்.

*ப்ஞசாபிலும் காங்கிரசு கட்சி உண்டு, ஆனால் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா இறையாண்மை,'அது இதுனு
உளறினால் பஞ்சாப் மண்ணில் காங்கிரசு கட்சி துடைத்து எறியப்படும்.

*விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:
1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987. On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’


*ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் குறிப்பிடும் மேற்கண்ட
செய்திகளை இன்று பேசும் தோழர்கள் அன்றே உரத்தக்குரலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஊடகங்களும் பிற மாநிலத்தவரும் அறியும் வகையில் அந்த உண்மைச் செய்திகளைக் கொண்டு செல்லத்தவறிவிட்டோம்.
அந்த உண்மைகள் சரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் தமிழக காங்கிரசுக்காரர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
இந்தியக் காங்கிரசும் தமிழினத்தின் மீது சுமத்தும் வீண்பழியை நிறுத்தியிருக்கும்.

* தமிழர்கள் என்றாலே இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற எண்ணம் மிகவும் வலுவாக நடுவண் அரசின் காங்கிரசு, பிஜேபி
இரண்டு பக்கமும் இருக்கிறது. இந்திப் பேசத் தெரியாத கல்லூரி இளம்தலைமுறை பஞ்சாபில் உண்டு. இன்றைக்கு
ஊடகங்கள் நடத்து மானாட மயிலாட - ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பஞ்சாபி இளம்தலைமுறை
மற்ற மாநிலத்தவருக்கும் இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாபிக் காரர்களுக்கு
'இந்தி எதிர்ப்பாளர்' என்ற அடைமொழி கிடையாது.
தமிழ்நாட்டில் தான் தமிழ் எழுதவோ வாசிக்கவோ அறியாமலேயே பட்டப்படிப்பு படித்து வெளியில் வந்துவிட முடியும்
அவலம் அரங்கேறிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்,

* 1945, 1956களில் தந்தை பெரியார் முன்வைத்த தனிச் சுதந்திர தமிழ்நாடு கோரிக்கை,
1949 முதல் 1961 வரை திமுக தூக்கிப்பிடித்த பிரிவினைக் கோரிக்கை, மாநிலசுயாட்சி
இத்தியாதி சொற்கள் தமிழ் மண்ணின் தலைவர்களிடம் காணாமல் போய்விட்டது என்பது மட்டுமல்ல..
இதைப் பற்றிய எந்தச் செய்திகளும் இன்றைய இளம்தலைமுறைக்கு எள்ளளவும் தெரியாது.
அந்தளவுக்கு இந்திய இறையாண்மையைப் போற்றிப் புகழும் தமிழ் மண். ஆனால் என்ன கருமமோ
தெரியவில்லை... நடுவண் அரசுக்கு இன்னும் தமிழ் மண்ணில் ஒலித்த பிரிவினை வாதம்
அடிக்கடி கனவில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

* ராஜிவ்காந்தி கொலை நிகழ்ச்சியைக் காரணம் காட்டியே இந்திய அரசு ஈழப்பிரச்சனையை
அணுகுவதாக நினைப்பது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டாலும்
இந்திய அரசு இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும் என்ற புரிதல் தமிழர்களுக்கு வேண்டும்.



மேலே குறிப்பிடும் செய்திகள் அண்மைய இந்திய வரலாற்றின் உண்மை நிகழ்வுகள்.
நடந்து முடிந்த சம்பவங்களை நான் எழுதியிருப்பதால் மட்டுமே
அதெல்லாம் சரி என்றோ நியாயம் என்றொ வாதிடுவது என் நோக்கமல்ல.

"வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் வரலாறு படைக்க முடியாது "

இந்தியனை நம்பாதே.. இந்திய தமிழனை.. நம்பவே நம்பாதே


1981. ஈழத்து இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை.. 1983 ஜூலையில் தான்
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம். அய்யா அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அரசின் உதவியை நாடி தமிழகத்தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.
சென்னையில் பெரியார் திடலில் அறிஞர் பெருஞ்சித்திரனார்
'உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்' துவக்க மாநாடு ஏற்பாடு செய்கிறார். அதில் கலந்து கொள்ள அ.அமிர்த்தலிங்கம், பேராசிரியர் க..பொ.இரத்தினம் இவர்களுடன் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை.
மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய அறிஞர். ஆனைமுத்து அவர்கள்>

" அமிர்தலிங்கம் அவர்களே! இலங்கைத் தமிழர்களுக்கு உதவும்படிக் கோரி, தமிழகத் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக ஏன் இங்கே வந்தீர்கள்? தமிழகத் தலைவர்களில் ஒருவர் காலையில் இந்திராகாந்தியின் காலடியில் விழுகிறார். அவர் எழுந்தவுடன் இன்னொரு தலைவர் அதே இந்திராகாந்தியின் காலடியில் மாலையில்
விழுகிறார். இப்படிப்பட்ட அடிமைத் தலைவர்களை நம்பி ஏன் இங்கு வந்தீர்கள்? இலங்கைக்குத் திருப்பிப் போங்கள்.
அங்கே உள்ள ஈழத் தமிழர்களை முதலில் ஒன்று சேருங்கள். இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் நாட்டுத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அங்கு உள்ளனர். அவர்கள் பள்ளர், பறையர், தேவர், வன்னியர், நாடார், வண்ணார், மருத்துவர் எனப் பல உள்சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து நீங்களெல்லாம்
கள்ளத்தோணி, சின்னச்சாதி, பனங்கொட்டை என்றெல்லாம் இழிவாகப் பேசிக் கொடுமைப் படுத்தினீர்கள். இப்போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு இலங்கை அரசை எதிர்த்து அங்கே போய்ப் போராடுங்கள்"
(நன்றி: சிந்தனையாளன் மார்ச் 2009 பக் 2)


இங்கே ஆனைமுத்து அய்யா அவர்கள் இந்திராகாந்தி என்று சொல்லியிருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு சோனியாகாந்தி என்று வாசிக்கலாம்!
ஈழப்போராட்டத்தில் இந்திய அரசை ஓர் அண்டைநாடு என்ற அளவில் கூட அருகில் நிறுத்தியிருக்க கூடாது.
முழுவதுமாக விலக்கி வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் தமிழக தலைவர்களை முழுக்கவும் விலக்கி வைத்திருக்க வேண்டும்,. அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக "தமிழ் ஈழம் " எப்போதோ உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.

Thursday, March 26, 2009

என் முனியம்மா..


பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.


இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பாத்தா
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

Friday, March 20, 2009

பூப்பு நீராட்டு





புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.

பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.

பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே
இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை.
பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி
அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது.
ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த
முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து
அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே
இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும்
ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண
முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் எற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது
பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது
மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு
--------------------------------

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும்
பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி
சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன.
அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைத்தல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம்.
அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும்
அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.
தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை
தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான
அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.
ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie)என்றும்
பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின்
இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:
---------------------------------------
பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று
சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம்
உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ
அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள்
என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும்.
பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த
அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய
ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள்
என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும் . அந்தப் பெண் அவள் ஒத்தப்
பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள்.
பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே
பூப்படந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக்கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது
விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின்
முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்தித்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது.
அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது.
"பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது.!
தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை
உண்மை, பொய் அனைத்தையும் "பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

சங்க இலக்கியத்தில் பூப்பு
----------------------------

பெண் பூப்படைதல் சடங்குகள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் விரிவாக இல்லை.
தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியலில்
"பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்
நீததகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான" (நூற்பா 1133)

என்று மணமான பெண்ணோடு கணவன் புணரும் காலம் குறித்த தகவலைப் பதிவு செய்துள்ளது.
இவ்விடம் குறிக்கப்படும் பூப்பு குழந்தைப் பருவத்து பெண் கருத்தரிக்கும் பருவத்திற்கு மாறிவிட்டதைக் குறிக்கும்
பூப்பன்று.

பெண்ணின் முதல் பூப்பு, அதனை ஒட்டிய சடங்குகள் குறித்து ஒரேயொரு புறநானுறு பாடல், ம்கட்பாற் காஞ்சித்துறைப்
பாடல் (337:6:12) குறிப்பிட்டுள்ளது.

"பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்"

பெயர் குறிப்பிடப்படாத ஒரு மறக்குடிச் சிற்றரசனின் மகள் பூப்பு அடைந்ததால் பிறரால் காண்பதற்கு அரியவளாக,
பெண்மை நிரம்பிய பொலிவோடு நன்கு வெளுத்து மடித்த துகில் போல அகலின் நறும்புகை கமழும் கபிலநிற வீட்டிற்குள்
மனைச் செறிக்கப்பட்டாள் என்று இப்பாடல் பதிவு செய்துள்ளது.

காண்டற்கரிய பாலியல் பொலிவு, நுடக்கம், அகில் நறும்புகை, மனைச்செறிப்பு ஆகியவை சங்க காலத்தில் பூப்பு எய்தியதை
ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள் எனலாம். வேறு விளக்கமாக அறிந்திட சான்றுகள் இல்லை..

சடங்குகளூம் சமூக மாற்றங்களும்
--------------------------------------
"அறிவியலும் கலை இலக்கியமும் "உண்மைகளை" வெவ்வேறு மொழிகளில் பேசுகின்றன.
சடங்குகளும் அவ்வாறே பேசுகின்றன. மானிட வாழ்க்கையின் இருத்தலில் ஓர்மை மனதுக்கு (conscious mind) எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அந்த அளவிற்கும் குறையாமல் ஓர்மையற்ற மனதுக்கும் (unconsciousmind) பங்கு உண்டு. ஓர்மை மனதை அறிவு, பகுத்தறிவு
ஆகியவற்றொடு சம்பந்தப்படுத்துவதைப் போல ஓர்மையற்ற மனதை சடங்குகள், கலை இலக்கிய படிமம் ஆகியவற்றோடு
சம்பந்தப் படுத்த முடியும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து இனக்குழு நாகரிக வாழ்க்கையிலிருந்த சடங்குகள் மாந்தரைச் சமூக
வயமாக்கும் கருத்தியல் செயல்பாடுகளைச் செய்து வந்துள்ளன.: என்பார் ராஜ்கவுதமன்.
இத்தகைய சமூக முக்கியத்துவம் வாய்ந்த சடங்குகளைப் பற்றி ஆராய்ந்த அர்னால்டு வான் கென்னப் (Arnold Van Gennep)
அவற்றை ஒரு குடும்ப/சமூக/பாத்திர நிலையிலிருந்து ஒருவர் அல்லது ஒரு குழு மற்றொரு குடும்ப/
சமூக/ பாத்திர நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் (Rites of passage) என்று குறிப்பிடுவார்.
"தமிழர் மானுடவியல் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டில் பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள்
வழியாக பூப்பு, வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன " என்பார் பக்தவச்சலபாரதி- (தமிழர் மானுடவியல்)
இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப/சமூக பாத்திரங்களை ஒரு பெண்
ஏற்கிறாள்.

பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு ஆண் பொறாமை அடைகிறான். அச்சம் கொள்கிறான்.
பெண்ணின் மறு உற்பத்தியை பெண் மூலமாக ஆண் அறிய வேண்டி இருப்பதால் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தீவிரமாக
சிந்திக்கிறான். தாய்வழிச் சமூக அதிகாரம் தடை செய்யப்பட்டு தந்தை உரிமைச் சமூக மேலாதிக்கம் நிலைநிறுத்த
கொண்டாடப்பட்ட பெண்ணின் பூப்பு தீட்டாகி விலக்கி வைக்கப்படுகிறது. எதைக் கண்டு ஆண் அச்சப்பட்டானோ அதையே
காரணமாக்கி பூப்பு, பெண்ணின் மறு உற்பத்தி உறவு, மகப்பேறு அனைத்தும் அவள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட
சமூகக் காரணிகளாக மாறியது.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தில் பெண்ணைப் பற்றி பெண்ணின் சமூகத் தகுதி
நிலையைப் பற்றி விளக்கும் போது உயிர் உற்பத்தி செய்வதிலும் சமூகத்தில் உற்பத்திச் சக்திகளை உருவாக்குவதிலும்
சுதந்திரமாகவும் சம உரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் முதலாளித்துவ போக்கினாலும் தனிச்சொத்துரிமையாலும்
துணைநிலையினரகவும் சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்றி நிகழ்ச்சியில்
தவிர்க்கவியலாத மாற்றமாகியது என்று விளக்குகின்றனர்.

தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும்.
இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "ப்ழையோள்" என்றும் மணிமேகலையில்
"முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம்.

தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில்
கடைப்பிடிக்கப்படுகிறது.

எனினும் இன்றைய மத நம்பிக்கைகள் , தந்தை வழி ஆணாதிக்க சமூகம், முதலாளித்துவம் அனைத்தும்
பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப்பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில்
ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சட்டங்களாக்கிவிட்டது தான் உண்மை.
சாதியக் கொடுமையை உணர்த்தும் தீண்டாமை, தீட்டு போன்ற சொற்கள் பெண்ணின் கொண்டாட்டத்திற்குரிய
பூப்படைதலுடன் தொடர்பு படுத்தி தீட்டாகிப் போனது. பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது.
பெண் தீட்டாகிப் போனாள்., தீண்டத்தகாதவளாகிப் போனாள்.
பெண் அடிமையாகிப்போனாள்.
எனவே தான் பெண் பூப்படைதலைக் கொண்டாடுவதும் விளம்பரப்படுத்துவதுமான சடங்குகள் அவளை
அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் ஐயமின்றி ஒட்டுமொத்த பெண் விடுதலை விரும்பிகளும்
பூப்பு நீராட்டு சடங்குகளை எதிர்க்கிறோம்.
பழமை என்பதால் பாதுகாக்கலாம்
அருங்காட்சி அகத்தில்.
அதைப்போல தான் பழமையான சடங்குகளும் சம்பிரதாயங்களும் நம்பிக்கைகளும்.
சடங்குகளின் வேர்களைத் தேடி மனித வரலாற்றை ஆய்வு செய்யலாம்.
தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ்வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும்,.


வடநாட்டின் குளிருக்கு
கால்சராயும் பூட்சோடும் பூசாரி
மோட்டார் போட்டாகிவிட்டது
பெருமாக் கோயில் தேருக்கு
திருப்பதிக்குப் போகமுடியாவிட்டால்
தி.ந்கர் கிளையில் காணிக்கைச் செலுத்தலாம்
மூணுநாள் விரதம்
ஐயப்பனுக்குப் போதும்
அரே ராமாவில்
ஆங்கிலேய அர்ச்சகர்
இந்தோனேசியக் கோவிலில்
செருப்புப் போட்டுக் கொள்ளலாமாம்
கணேசனுக்கும்
கோழிக்கறிப் படையல்
சட்டம் எழுதியாயிற்று
எல்லா சாதியும்
கோயிலுக்கு வ்ர
என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்கான பெண்கள் மட்டும்
ஆவதே இல்லை.
- கவிஞர் கனிமொழி.


துணைநின்ற நூல்கள்:

> பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ்கவுதமன்.

> welcome to womenhood) – sharon supriya