Friday, December 26, 2008

சுபவீயுடன் நேர்காணல்




மும்பை திருவள்ளுவர் மன்றத்தின் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள மும்பை வந்திருந்த திரு.சுப. வீரபாண்டியன் அவர்களுடன் அவர் எழுதிய தந்தை பெரியாரின் இடதுசாரி தமிழ்த் தேசியம் என்ற நூல் குறித்தும் புலம் பெயர்ந்த தமிழர், ஈழத்தின் எதிர்காலம் குறித்தும்
நானும் நண்பர் கே.ஆர்.மணியும் நிகழ்த்திய நேர்காணலின் ஒலிவடிவம்.


http://rapidshare.com/files/176839264/Untitled1.mp3.html

http://rapidshare.com/files/176625642/Untitled.mp3.html

Tuesday, December 16, 2008

கண்ணீர்த்துளிகளின் கடைசிப்பக்கம்




இயல் தமிழ் தந்தை - தமிழர்
இதயத்து வேந்தன்
காஞ்சியின் கவிதை - தமிழர்
காத்திருந்தக் கனவு.
நாடகச்சோலை - கூத்து
நடனமாடும் மின்னல்
அரசியல் வானம் -அவனுக்குள்
ஆயிரம் சூரியன்

காவியம் படைக்காத
கம்ப ரசம்
வேலைக்காரி பார்க்காத
பணத் தோட்டம்
தீ பரப்பும்
சந்திரோ தயம்
ஆரிய மாயை
பிணி தீர்த்த
திராவிட மருந்து
பகுத்தறிவு விருந்து .

இந்தியக் கோட்டையில் -இவன்
எழுந்து நின்ற போது
இமயம் இவனை
அந்நாந்துப் பார்த்து
அதிசயித்துப் போனது.
இவன் - உலகின்
எட்டாவது அதிசயம்.

இந்து சாம்ராஜ்யம் -இவன்
எழுத்து முனையில்
பொடிப் பொடியானது
என்றாலும்
திருமூலருக்கு
இவந்தான் தேர்ப்ப்பாகன்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"
திருமந்திரம்
இவன் திருநா தொட்டப்பின்னே
பொதுமந்திரமாகி
புதுமந்திரமானது
ஒரு புதிய சகாப்தம்.

பூமி உருண்டையை
புரட்டிப் போடும்
வானம்பாடிக் கவிஞருக்கெல்லாம்
இவனே வாத்தியார்.

"தம்பி" என்ற
ஒற்றைச் சொல்லால் - தமிழ்
உலகையே அளந்த
'வாமந' அவதாரம்.
அடடா.. மன்னித்துவிடுங்கள்
இவன் அவதாரங்களை வென்ற
அதிசயப் பிறவி.

ஈரோட்டு போர்முரசே -திராவிடர்
ஈடில்லா தமிழ்முரசே
நினைவிருக்கிறதா.. அண்ணா..
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
கடைசிப் பக்கம்

'தலைவர் அவரே என்றாய்
பகை வெல்லும்
துப்பாக்கி ஒன்றே என்றாய்'
அண்ணா..
ஈரம் உலராத
கண்ணீர்த்துளிகளை
உன் இமைகளுக்குள்
புதைத்துவிடு.

இன்று-
ஊரெல்லாம் தலைவர்கள்
ஒவ்வொரு நாளும்
புதிது புதிதாகப் பறக்கும்
கழகக்கொடிகள்
இதயக்கனிகள்
அத்தனையும் உன் பெயரால்.

நித்தமும் தொடரும்
அறிக்கை யுத்தங்கள்
தொலைக்காட்சி சாம்ராஜ்ய
அடாவடிச் சண்டைகள்
வாரிசுகளின் பனிப்போர்
அண்ணா ..
காலம் எழுதாமல் விட்ட
கண்ணீர்த்துளிகளின்
கடைசிப்பக்கம்..

அண்ணா..
'எதையும் தாங்கும் இதயம் உன்னிதயம்' என்று
எவர் சொனனாலும்
நம்ப வேண்டாம்
அந்தக் கண்ணீர்த்துளிகளின்
சாட்சியாய்
சத்தியமாய்ச் சொல்லுகிறேன்
'இதையும் தாங்க உன்னால் முடியாது அண்ணா"

புறநானூறு படைத்த
சங்கத் தமிழனை
எத்தனைக் கடிதங்களில்
எழுதி எழுதி வளர்த்தாய்
அத்தனையும் மொத்தமாக
கடல்தாண்டி தெரிகிறது
தெற்கே " தமிழன்படை"
எட்டிப்பார்..
-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-
அண்ணா
உன் கண்ணீர்த்துளிகளால்
மீண்டும் எழுது

'தம்பி உடையான் சிங்களப் படைக்கு அஞ்சான்'
'வெற்றி நமதே" என்று.

Thursday, December 11, 2008




திருவிழாவில் தொலைந்துப் போன சிறுமியைப் போல
அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களில்
தனித்து நின்று தவித்துக்கொண்டிருக்கிறேன்.

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்து போன உறவுகளை அல்ல
தொலைக்கப்பட்ட அண்ணாவை.

அண்ணாவின் எழுத்தும் பேச்சும்
எனக்கொன்றும் விமர்சனத்திற்கு
அப்பாற்பட்ட வேதவாக்கல்ல.

வேதங்களையும் வேதவாக்குகளையும்
விமர்சிக்கும் வித்தையை
நான் கற்றுக்கொண்டது என்னவோ
அண்ணாவின் கம்பரசம் வழியாகத்தான்.








நான்
அண்ணா உருவாக்கிய
அமைச்சர்களின் வாரிசல்ல.
அண்ணாவை நம்பிய
தொண்டனின் கடைசி வாரிசு.
அதனால்தான்
இன்னும் என்னிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது
அண்ணாவின் கண்ணியமும் நாணயமும்.
என் கேள்விக்கணைகள்
உங்கள் கருத்துகளுடன் மோதும்போதெல்லாம்
ஆத்திரப்படும் உங்களைக் கண்டு-
பலகீனமாகிப் போன
உங்கள் பாசறையைக் கண்டு.-
வருத்தப்படுகிறேன்.


காங்கிரசு போட்ட
தடையுத்தரவு
அண்ணாவின் ஆரியமாயைக்கு
மட்டும்தான்.
தம்பிகளின்
அரசுக்கட்டில் விதித்த
தடையுத்தரவு..!!??

தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்.
அண்ணாவுக்குத்தான்
எத்தனை எத்தனைத்
தம்பியர்.!
அவர் அத்துனைப் பேருக்கும்
பட்டா போட்டு
பாடிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிப் பெட்டிகள்.
24 மணிநேரமும்.
அண்ணாவின்
நூற்றாண்டு விழா திருவிழா கூட்டத்தில்
கவியரங்கம்
கருதரங்கம்
அமைச்சர்கள்
வருங்கால அமைச்சர்கள்
எல்லோர் முகங்களும் வருகின்றன.
போகின்றன.
வாசிக்கிறார்கள்
பேசுகிறார்கள்.
கைதட்டுகிறார்கள்.

காத்திருக்கிறேன்.
எப்போதாவது
காட்ட மாட்டார்களா?
அண்ணா பேசுவதை.!
இப்போதாவது
பார்க்க முடியுமா
அண்ணாவின் வேலைக்காரியை?
ஓரிரவு மட்டுமல்ல
அண்ணா நூற்றாண்டு திருவிழாவின்
ஒவ்வொரு இரவிலும்
கண்ணிமைகள் மூடாமல் காத்திருக்கிறேன்..
நீங்கள் இலவசமாகத் தந்த
தொலைக்காட்சி பெட்டிகளின் முன்னால்.





---- +-----------