Sunday, November 14, 2010

ஓபாம நமஹ!

ஒபாமா போற்றி போற்றி

உலகளந்தாய் போற்றி போற்றி

உன்னையே போற்றி போற்றி

உன் டாலரைப் போற்றி போற்றி

ஐ டியைப் போற்றி போற்றி

உன் ஐடியாவைப் போற்றி போற்றி

வாழ்க ஒபாமா..

வாழ்க அமெரிக்கா

ஓம் சக்தி ஒபாமாவே சக்தி

போற்றி போற்றி

ஓபாமா போற்றி..





ஒரு வழியாக எங்கள் ஒபாமா நமஹ! மந்திரங்களை எல்லாம் முடிந்து மும்பை மட்டுமல்ல இந்தியாவே நார்மல் நிலைமைக்கு வந்திருக்கிறது.


ஒபாமாவின் வருகையை ஒட்டி என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒளிவு மறைவின்றி நம்ம ஊரு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்டி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வதற்குள் எதிர்பார்த்த மராத்திய மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற ஆருடங்களும் பலப்பரீட்சைகளும் ஆரம்பித்துவிட்டன.


இருக்கட்டும்.. ஓபாமா வருகையை ஒட்டி நடந்த மிக முக்கியமான செய்தி.. வழியில் இருந்த தென்னைமரங்களில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்துவிட்டார்களாம்.


மற்றபடி எதுவும் முக்கியமானதாக தெரியவில்லை. ஒரு கம்பேனியின் விற்பனை அதிகாரி தன் கம்பேனி பொருட்களை அதிகம் விற்கவும் அதற்கான சந்தை வாய்ப்புள்ள ஊரில் எப்படி எல்லாம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஒத்துழைக்கும் என்று ஓபாமா சொல்லி வாய்மூடுவதற்குள் பாகிஸ்தானின் குரல் ஒலித்தது..

அதுவும் எப்படி..?


"உங்களால் அவ்வளவு எளிதில் ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க விட்டுவிடுவோமா..என்ன? '


என்று மிரட்டும் தொனியில். கூடவே எல்லா சாட்சியங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் சீனாவைக் காட்டி.. சீனாவின் வீட்டோ அதிகார சீட்டை இறக்கி உங்களை ஆட்டமிழக்கச் செய்வோம் என்கிறார்கள்..!


அமெரிக்காவால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒபாமா இந்தியா வருவதற்கு முன் தான் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலரைத் தந்தி மணியார்டர் அனுப்பியிருக்கிறார்கள்.


அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தும் பணம் கொடுத்தும் நம்ம பசங்க கெட்டு குட்டிச்சுவராக்கப்படுவது மாதிரிதான் இதுவும்.

அமெரிக்க அனுப்புகிற பணத்துக்கு என்றைக்காவது கணக்கு கொடுத்திருக்கிறார்களா நம்ம பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பசங்க. இந்தக் காசை வச்சிக்கிட்டு கஷ்டப்படுகிற வீட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் செய்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னைப் பாரு, என் துப்பாக்கியைப் பாரு, சுட்டுப்பிடுவேன் சுட்டுனு திருடன் போலீஸ் விளையாட்டுக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.


புதியக் கண்டுப்பிடிப்பு :


அவுட்சோர்ஸிங் மூலம் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புண்டு என்ற புதிய பொருளாதரக் கண்டுபிடிப்புக்கு சிங் ஓபாமா பொருளாதர திட்டம் என்ற பெயரிடலாம்.


க்ளைமாக்ஸ்:


இந்தியா யாருடைய வேலை வாய்ப்புகளையும் திருடிக் கொள்வதில்லை என்று நேருக்கு நேராகவே ஒபாமா சாட்சியாக மன்மோகன்சிங் சொன்ன காட்சி


ஸ்டார் அந்தஸ்து:


ஒபாமாவுடனும் அவர் மனைவியுடனும் கலந்துரையாடிய மும்பை மாணவர்கள். அதிலும் குறிப்பாக கை குலுக்கிய மாணவர்களுக்கு மாணவர்கள் வட்டத்தில் ஸ்டார் அந்தஸ்த்து... மேலும் அதிக விவரங்களுக்கு பார்க்க டுவிட்டர், ஃபேஸ்புக் ஆர்க்கூட் ...


எச்சரிக்கை


குடிய்ரசுத்தலைவர் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் தமிழகத்தின் அதிகாரமிக்க எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினத்தந்தியில் போட்டோவுடன் வந்திருக்கும் செய்தி..

கனிமொழி எம்.பி.யுடன் ஓபாமா கலந்துரையாடினார்!


ஓபாமாவின் சின்ன ஆசை


ஓபாமா ,


நீங்கள் வி.டி. ரயில்வே நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும் எங்கள் ஊர் முதலமைச்சர் அசோக்சவான் (இரண்டு நாளுக்குள் அப்போதைய முதல்வர் என்று எழுத வேண்டியதாகிவிட்டது!) அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அறிந்தேன். உங்கள் வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் மும்பை ஜனங்களுக்கு விடுமுறை அறிவித்து எல்லா ரயில்களையும் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். பாசஞ்சர் டிரெயின்களை வீராரிலும் கல்யாணிலும் நிறுத்தி இருக்கலாம். எங்களைப் போன்றவர்களிடம் ஐடியா கேட்காமல் அசோக்சவான் உங்களுக்கு ந்நோ சொன்னது தப்பு தான்.


சரி விட்டுத் தள்ளுங்கள். அவருக்கு அவருடைய பிரச்சனை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்... எங்கள் இளவரசர் ராகுல்காந்தியிடம் சொல்லியிருந்தீர்கள் என்றால் அவருடன் சேர்ந்து நீங்கள் எங்கள் மும்பை டிரெயினில் ஓசியில் பயணம் செய்திருக்கலாம்.!


உங்களால் கற்பனைச் செய்ய முடியாத ஒரு உச்சக்கட்ட விளம்பரம் கிடைத்திருக்கும். அம்ச்சி மும்பை மானுஷ் குஷியாகி உங்கள் கம்பேனி பொருட்களை வாங்கி உங்கள் பொருளாதரச் சரிவைக் கூட நிமிர்த்தி இருக்கலாம்.


இந்த மாதிரியான உங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மாதிரியான நிறைய ஐடியாக்கள் எங்கள் மும்பை வாசிகளிடம் நிறைய உண்டு.


எப்படியோ ஓபாமா உங்கள் எளிமையும் உங்கள் மனைவியின் அழகும் எங்கள் மீடியா பிரபலங்களுக்கு மட்டுமல்ல எங்க பொதுசனங்களுக்கும் சில பிம்பங்களை உடைத்திருக்கிறது. அதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி ஓபாமா..


:

Tuesday, November 9, 2010

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?




இந்திய இறையாண்மைக்கு எதிராக அருந்ததிராய் காஷ்மீர் பிரச்சனையில்
பேசிவிட்டாராம்! எழுதிவிட்டாராம்! அவர் மீது குற்றம் சுமத்த தன் இபிகோ
கரங்களை எந்திரன் ரேஞ்சில் சுழற்ற தயாராக இருக்கிறது இந்திய அரசு.
அப்படி அவர் என்ன தான் சொல்லிவிட்டார்?
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா சொல்வது சரியா? பாகிஸ்தான் சொல்வது
சரியா? என்றுதானே இன்றுவரை பட்டிமன்றங்கள் மாறி மாறி நடந்துக் கொண்டு
இருக்கின்றன.
யார் சொல்வது சரி என்பது அல்ல முக்கியம்.
எது சரி என்பது தான் முக்கியம்.
யார் சொல்வது உண்மைக்கு மிகவும் நெருக்கமானது?
யாருடைய பார்வை அந்த மண்ணின் மக்களின் பார்வையை முன்வைக்கிறது?
யார் சரித்திரத்தை தன் கையில் கையில் எடுத்துக் கொண்டு
திரிபு வாதம் செய்வது? இக்கேள்விகளுக்கான பதிலில் காஷ்மீரின்
இன்றைய நிலமைக்கான காரணங்களைக் கண்டடைய முடியும்.

காஷ்மீர் அழகானப் பனிமலைப் பிரதேசம். காஷ்மீரி மக்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் ரொமபவும் அழகானவர்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக
இந்திய அரசு தன் படைவீரர்களை இரவும் பகலும் இடைவிடாது நிறுத்தி
காவல் காக்கிறது. நம் இராணுவவீரர்களை காஷ்மீரின் தீவிரவாதிகள்-
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் இராணுவப் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள்
சுட்டுக் கொல்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி க்ருத்துகளை நம் ஊடகங்களும்
மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய்
இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி ஒலித்தவுடன் அச்சப்படுகிறார்கள்.
அருந்ததிராயை விட அதிகமாகவும் ஆணித்தரமாகவும் இதே கருத்துகளை இன்றும்
பேசியும் எழுதியும் வரும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் மாநில எல்லைகளைத் தாண்டவில்லை.
அவரவர் மொழியில் எழுதுவதும் ஒரு காரணம். அவர்கள் கருத்துகளை
வெகுஜன ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

தெகல்கா பத்திரிகையின் நேர்காணலில் ( நவ 6,2010)தான் சொல்லியதைக் குறித்து
மீண்டும் ஆணித்தரமாக அருந்ததிராய் வலியுறுத்துகிறார்.

"காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை" என்று நீங்கள் கூறியதுதான் உங்கள் பேச்சில் விவாதத்திற்குள்ளானது.
உங்கள் கருத்தை விரிவாக சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு
அருந்ததிராயின் பதில்:
"இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி
நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு
இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லையா?
இல்லை என்றால் இந்திய அரசு 7 இலட்சம் இராணுவ வீரர்களை காஷ்மீரில்
ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் ஏன் ஆஷாத்
காஷ்மீர் எல்லைக்கோட்டை தீர்மானிக்கும் படி சொல்லுகிறார்கள்?
அல்லது ஏன் அந்தப் பகுதியை பிரச்சனைக்குள்ள நிலமாக (disputed territory)
சொல்லுகிறார்கள்?
காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு
கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?"
என்று கேட்டுள்ளார்.

அருந்ததிராய் பிரபலமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுவதாலும் அவருடைய
நாவல் 40 மொழிகளில் மொழியாக்கம் பெற்றதன் மூலம் அவருடைய கருத்துகள்
உலக நாடுகளின் பார்வைக்குள்ளாவதாலும் இந்திய அரசு அவர் சொல்வதைக்
கண்டு அச்சப்படுகிறது. ஆனால் பிரபலமானவர்கள் சொல்வதலாயே
அவர்கள் கூறும் கருத்துகளும் பிரபலமடையும் என்பதெல்லாம் சுடச்சுட
செய்திகளுக்கு அலையும் ஊடகங்களுக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம்.
ஆனால் கருத்துகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து அலசி ஆராய்பவர்களுக்கு
பிரபலங்களின் முத்திரை என்பது இரண்டாம் நிலைதான்.
அருந்ததிராயின் கருத்துகள் உண்மைக்கு மிகவும் நெருக்கமானவை,
வரலாற்று பார்வையில் வெகுஜனங்கள் மறந்துவிட்ட காட்சிகளை
மீண்டும் நினைவூட்டுபவை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசின்
கருத்துகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் கூட
எதிரானவைதான்.

எரிமலையான பனிமலை
------------------------

காஷ்மீர் ஏன் பற்றி எரிகிறது? அதற்கு நம் இந்திய அரசு சொல்வது போல
பாகிஸ்தான் மட்டும்தான் காரணமா? என்றால் பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும்
குறையாமல் நம் அரசும் காரணம்தான்.

இந்தியாவுடம் இணைந்த பிற சுயராஜ்ய இணைப்புகளுக்கும் காஷ்மீர் சுயராஜ்ய
இணைப்புக்கும் உள்ள வேற்பாடுகள் முதல் காரணம்.
வரலாற்று நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கிறது
அருந்ததிராயின் பேச்சு.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் முன் மவுண்ட்பேட்டன் 03/6/1947 ல்
காஷ்மீர் சென்றார்..
"எக்காரணம் கொண்டும் காஷ்மீரைத் தனிநாடாக அறிவித்து விடுதலை வழங்கும்
எண்ணம் ஆங்கிலேய அரசுக்கு இல்லை" என்பதைத் தெளிவு படுத்தினார்.
தங்கள் விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் ராஜ்யத்தை
இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் காஷ்மீர்
எந்த முடிவும் எடுக்காமல் ஒரு ஒத்திவைப்பு ஒப்பந்தத்தை (standstill agreement)
இரு நாடுகளுடனும் செய்து கொண்டது. வழக்கம்போல அப்போதே பாகிஸ்தான்
அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாலும் காஷ்மீருக்கு வழங்கி வந்த
அத்தியாவசிய பொருட்களை நிறுத்திக் கொண்டது. காஷ்மீருக்கு தங்களுடன்
இணைய வேண்டும் என்று பயமுறுத்த ஆரம்பித்தது. 22 அக்டோபர் 1947ல்
பாகிஸ்தான் அதிகாரிகள் சில காஷ்மீர் மக்கள் குழுவுடனும் முஸ்ஃபராபாத்தின் இசுலாமிய அமைப்புகளுடனும் சேர்ந்து காஷ்மீருக்குள் அத்துமீறி
நுழைந்தனர். மகுரா மின்நிலையத்தைக் கைப்பற்றினார்கள். ஸ்ரீநகர் இருட்டில் மூழ்கியது.
இந்தச் சூழலில் தான் காஷ்மீர் ராஜ்யம் இந்திய அரசின் இராணுவ உதவியை நாடியது.
காஷ்மீரின் அரசர் பத்திரமாக ஜம்முவுக்கு அனுப்பப்பட்டார்.

காஷ்மீர் அரசு பிரதிநிதி மகாஜன் 25/10/1947ல் டில்லி வந்தார். இந்திய பிரதமரைச்
சந்தித்து "இன்று மாலைப் பொழுதுக்குள் ஸ்ரீநகரருக்கு இந்திய இராணுவம் அனுப்பப்
பட்டாக வேண்டும். ஸ்ரீநகரைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீங்கள் விரும்பும் அரசியல் அதிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் மறுத்தால்
நாங்கள் ஜின்னாவிடம் போக வேண்டிவரும்" என்று சொன்னவுடன், ஜின்னாவின்
பெயரைக் கேட்டவுடனேயே எரிச்லடைந்தார் பிரதமர் நேரு. கோபத்தில் மகாஜனை
வெளியேற்ற முனைந்தார். அப்போது இவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்ட
மூன்றாம் நபர் காஷ்மீரின் ஷேக் அப்துல்லா நேருவுக்கு அனுப்பிய துண்டுச்சீட்டு
காஷ்மீரின் தலைவிதியை மாற்றியது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான
ஷேக் அப்துல்லா காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை லண்டனில் வாழ்ந்து கொண்டு ஷேக் அப்துல்லாவின் குடும்பமே காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் குத்தகைக்கு
எடுத்துக் கொண்டிருக்கிறது.

1951இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் அப்துல்லா முன்னணியில் நின்றார். தேர்தலில் போட்டியிட 75 வேட்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றுள் 73 விண்ணப் பங்களை ஷேக் அப்துல்லா செல்லுபடியற்றவை என அறிவித்து விட்டு, காஷ்மீரில் வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்தார். அந்த மக்கள்நாயகப் படுகொலையை நேரு ஆதரித்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை இராணுவ பலத்துடன்
ஓட்டுப்பெட்டிகள் காஷ்மீரின் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கின்ற அவலம் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது.

காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம்
--------------------------------------

இந்தியாவுக்கு என்று அரசியல் சட்டமிருக்க காஷ்மீருக்கு என்று தனி அரசியல்
சட்டம் இருக்கிறது.
அது என்ன சொல்கிறது.. "We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947.... IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.,'
அதாவது
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது.

ஆனால் இந்திய அரசியல் சட்டம் “இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் “இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி தேசியக் கொடி உண்டு.

இந்தியாவுடன் ஆன இணைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்பில், அப்பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நாடாக - இந்தியாவின் கூட்டுக்குள் விளங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட எல்லாத் தனி உரிமைகளையும் 1959க்கும் 1965க்கும் இடையில் அடியோடு பறித்துக்கொண்ட 1965க்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பேரில் படையையும், எல்லையோரக் காவல் படையையும், காவல் துறையினரையும் ஏவி பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்கிற பேரால், காஷ்மீரின் தன்னுரிமைக்குப் போராடியவர்களைக் கொன்று குவித்தது இந்திய அரசு.

இந்திய ஆளுகையிலுள்ள காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசும், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரை (விடுதலை பெற்ற காஷ்மீரை)க் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய தேசியவாதிகளும், . இந்திய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்துக்கென்று ஒதுக்கப்படுவதில் பெரிய அளவு தொகையை, ஜம்மு - காஷ்மீர் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கென்றே செலவழித்து நாசப்படுத்திவிட்டனர்.

சட்டமேதை அம்பேத்கரும் காஷ்மீரும்
--------------------------------------

காஷ்மீர் பிரச்சனையை ஜக்கிய நாடுகளின் சபைக்கு எடுத்துச் செல்ல
மவுண்ட்பேட்டன் நேருவை வலியுத்தினார். அதில் வெற்ரி பெற்றார்.
ஆனால் மவுண்ட்பேட்டன் அறிவுரையை நிராகரிக்க வேண்டும் என்றும்
எக்காலத்திலும் ஜக்கிய நாடுகளின் மன்றத்தால் காஷ்மீர் பிரச்சனைக்குத்
தீர்வு காண முடியாது என்பதையும் சொன்னவர் அம்பேத்கர்.
ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் காஷ்மீர் குறித்த கருத்தை
வழிமொழிவதற்கு கூட உலக நாடுகள் முன்வராது என்றும் தீர்க்கதரிசனமாக
அம்பேத்கர் சொன்னதும் நினைவு கூரத்தக்கது.

காஷ்மீருக்கு இராணுவ உதவியை அனுப்பியதில் முன்னுரிமைக் கொடுத்த
அம்பேத்கர் காஷ்மீருக்கும் இந்திய அரசு வழங்கிய தனி அந்தஸ்த்தை (article 370) வெகுக் கடுமையாகச் சாடினார். அம்பேத்கரின் விருப்பத்தை மீறியே இச்சட்டம்
நிறைவேறியது. காஷ்மீர் குறித்த இச்சட்டத்தின் விவாதங்களுக்கு
அம்பேத்கர் பதில் சொல்லவில்லை என்பதும் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் தான்
விவாதத்தில் பங்குக் கொண்டார் என்பதும் பதிவாகியுள்ளது.

Balraj Madhok reportedly said, Dr. Ambedkar had clearly told Sk. Abdullah: "You wish India should protect your borders, she should build roads in your area, she should supply you food grains, and Kashmir should get equal status as India. But Government of India should have only limited powers and Indian people should have no rights in Kashmir. To give consent to this proposal, would be a treacherous thing against the interests of India and I, as the Law Minister of India, will never do it." என்பதுதான்.
நேருவுக்கோ அம்பேத்கரின் எதிர்ப்புக்குப் பின் இது தன்மானப் பிரச்சனையாகிவிட்டது
என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தன்மானத்தின் தொடர்ச்சியைத் தான்
1980ல் காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரக் கணக்காண மக்கள்
சாகடிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர்
இந்திராகாந்தி " நான் ஒரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனப் பெண் என்பதில்
பெருமை அடைவதாக சொல்ல வைத்தது.

இந்துக்கள் வாழும் ஜம்முவும் பவுத்தர்கள் வாழும் லடக் பகுதியும் இந்தியாவுடன்
இணைய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் வாழும் மக்கள்
சுதந்திரமாக அவர்களுககான அரசியல் தீர்வைக் காண அவர்களுக்குரிமை உண்டு
என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவின் குறிப்பாக நேருவின் வெளிநாட்டுக் கொள்கையை மிகவும்
கவலையுடன் அம்பேத்கர் விமர்சனம் செய்தார் என்பதும் அவருடைய
கரிசனமும் கவலையும் எவ்வளவு நியாயமானவை என்பதையும்
அவருக்குப் பின் வந்த இந்தியா அனுபவத்தில் உணர்ந்து கொண்டது எனலாம்.

உள்நாட்டு அரசியல்
----------------------
பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா வகையாறாக்கள் காஷ்மீர் இந்தியாவின்
ஒரு பகுதி அல்ல என்கிறார்கள். ஆனால் அதே கருத்தை உதிர்த்தவர்கள்
இந்திய இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இந்திய நடுவண் அரசில்
அமைச்சர்களாக உறுதிமொழியும் ஏற்கிறார்கள். இந்திய நடுவண் அரசில்
டில்லியில் இருக்கும்போதெல்லாம் காஷ்மீர் குறித்து அவர்கள் என்ன செய்து
கொண்டிருந்தார்கள் என்பதை அடிக்கடி மாறி மாறி வரும் அவர்கள் அறிக்கைகள்
காஷ்மீர் பிரச்சனையை கேலிக்கூத்தாக்கியது தான் மிச்சம்.


காஷ்மீர் ராஜா கரண்சிங்
-------------------------
(ஓம்சக்தி நவ 2010 தீபாவளி மலரில் காஷ்மீர் அரசரின் வாரிசான காங்கிரஸ் அரசியல்வாதி டாக்டர் கரண்சிங் அவர்களின் நேர்காணலில்)
காஷ்மீர் என்று ஒரு மாநிலம் கிடையாது என்கிறார்.
"உங்கள் வாழ்நாளுக்குள் காஷ்மீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று
நம்புகிறீர்களா?" என்ற கேள்விக்குப் பதிலாக..

காஷ்மீர் மாநிலம் ஐந்துப் பகுதிகளைக் கொண்டது .
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பிரதேசம், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் , சீனாவின் பிடியில் உள்ள சிறுபகுதி என்று 5 பகுதிகள்.
காஷ்மீருக்குத் தனியாக, ஜம்முவுக்குத் தனியாக என ஒவ்வொரு பகுதிக்கும்
ஒரு அபிலாஷை உள்ளது. இந்த அபிலாஷைகள் மிகவும் சிக்கலானவை.
எளிமைப்படுத்த முடியாதவை.
எனவே இந்தப் பிரச்சனையைப் பல கட்டங்களில் தீர்க்க வேண்டியிருக்கிறது.
பாகிஸ்தானுடன் பேசித்தான் ஆக வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் என்று ஒரு கோணம்,
இரண்டாவது கோணம் ஸ்ரீநகருக்கும் இந்திய நடுவன் அரசுக்குமான உறவு
என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.
மூன்றாவதாக பிரதேசம் சார்ந்த கோணம். ஜம்மு., லடாக், காஷ்மீர் பகுதிகளுக்கு
இடையில் உள்ள உறவு என்ன என்பதைப் பற்றியும் பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சனையில் அத்தனை லகுவான உடனடித் தீர்வு என்பது கிடையாது.
இந்தப் பிரச்சனையை அதன் முழுப்பரிமாணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்று கோணங்களில் இப்பிரச்சனையை அணுகும்போது ஒருவேளை
இதற்கான தீர்வு கிட்டலாம்" என்கிறார்.





காஷ்மீர் மக்களின் கலகக்குரலுக்கு செவிசாய்த்தால் இந்தியாவின் பிற மொழிவழி
மாநிலங்களின் பிரிவுக்கும் அதுவே காரணமாகிவிடும் என்று மேம்போக்கான
பூச்சாண்டி காட்டும் வித்தைகளை கைவிட்டு இந்திய அரசு இந்திய மக்களின்
வரிப்பணத்தில் பெரும்பகுதியை இப்பிரச்சனைக் குறித்து 60 ஆண்டுகளுக்கும்
மேலாக செலவு செய்தாகிவிட்டது. இனியாவது மக்கள் பிரச்சனைகளை
அரசியல் தலைவர்கள் தம் தம் தனிப்பட்ட அரசியல் அதிகாரத்திற்கும்
தனிப்பட்ட ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் தீர்வு செய்ய முன்வர வேண்டும்.

-------------

அருத்தி ராயின் அறிக்கை :


நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்' இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010

--------------------------------------------------

கட்டுரைக்கு துணைநின்ற குறிப்புகள்
-------------------------------------

> Tehelka Nov 6, 2010.

> அக்டோபர் 2008 சிந்தனையாளன் வே. ஆனைமுத்து கட்டுரை.

> indian exp mar 14,2009,
What if Ambedkar had shaped India’s foreign policy?

> Kashmir Problem From Ambedkarite Perspective
BY Dr. K. Jamanadas,