Wednesday, March 13, 2024

கனவு இல்லம்

 கனவு இல்லமெல்லாம் தரவேண்டாம்.

கனவில்லாத இல்லமாவது தரலாம்தானே.!


காணி நிலத்தில் ஒரு குடிசை

கட்டித்தந்தால் போதும்.

அது எனக்கே எனக்கானதாக

இருக்க வேண்டும்.

என் எழுத்துகள் விரும்பும்போதெல்லாம்

எழுந்து  நடமாடவும்

அழவும் சிரிக்கவும்

உயிர்ப்புடன் உலாவரவும்

குடிசையாக இருந்தாலும் போதும்.


கனவு இல்லத்திற்குத்தானே

சா.அ. விருதும் பட்டயமும் தேவை.

கனவில்லாத இல்லத்திற்கு

என்ன தேவை?

வீடில்லை என்பதே 

எழுத்தாளரின் தேவை.

எனக்கு வீடில்லை.

எனக்கு தமிழ் நாட்டில்

முகவரி இல்லை,

எனக்கும் என் எழுத்துக்கும்

இளைப்பாற ஓரிடம்..வேண்டும்.

அதை 

வாரிசுகளுக்கு எழுதி வைக்க மாட்டேன்.

பெற்ற பிள்ளைகளுக்கும்

என் எழுத்துகளுக்கும்

என்ன உறவு?

எழுத்தும் இயக்கமும்

மரபணுவில் வந்ததென்றால்

கம்பனின் பிள்ளைகளை

ஏன் காணவில்லை.?


வாழும்போதே

வந்துப் போகவும்

என் முகவரியை எழுதவும்

என்னைப் போலவே

முகவரியற்ற எழுத்துகளுக்கு

முகவரியாகவும்

ஓர் இல்லம் வேண்டும்.


அரசு கேட்கும் அடிப்படைத் தகுதிகள்

ஆதார் அட்டை

தாசில்தார் முத்திரை

எதுவுமில்லை என்னிடம்.

அவ்வை விருதோ

அம்மா விருதோ

உங்கள் எந்த விருதுகளுக்கும்

எங்களிடம் விண்ணப்ப படிவங்களும் இல்லை,

ஆனாலும்,

வந்துப் போகவும்

தங்கிப் போகவும்

ஓரில்லம் ..வேண்டும்.

கனவு இல்லம் கேட்கவில்லை,

கனவில்லாத ஒரு குடிசை..

போதும்.


#புதியமாதவி_கனவுஇல்லம்.


Monday, March 11, 2024

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

 


கலை இலக்கியத்தை உன்னத சன்னிதானத்தில் பூஜை செய்து

புனிதம் என்ற கங்கை நீரைத் தெளித்து அதன் மீது படிந்திருக்கும்

தீட்டுக்கறையை நீக்கி இலக்கியத்தை ஆராதிக்கும் ஒளிவட்ட பிம்பங்களின் நிழல்களும் தரையில் தான் விழுகின்றன. இது இந்த மண்ணின் நியதி. நேற்று மட்டுமல்ல, இன்றும் தொடரும் இந்தப் பட்டியல் போடும் கூட்ட்த்தின் நுண்ணரசியல் இலக்கிய விமர்சனங்கள் என்ற பெயரில் அதன் அடியாழத்தில் பதுங்கி இருக்கும் அசல் முகம் அவ்வப்போது வெளிவந்துவிடுகிறது.

இப்படியாகத்தான் இலக்கிய வடிவத்தின் பெரியாரியல் தீண்டாமையும்.

     தந்தை பெரியாரின் “இல்லை, இல்லை” என்ற எதிர்மறை கோட்பாடு அழகியலுக்கு எதிரானது என்பதாக ஒரு கருத்தியலை அவர்கள் பல்வேறு மாயஜாலங்களுடன் நம்முன்  நிகழ்த்திக் காட்டினார்கள். வெங்கட் சாமி நாதனின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் தந்தை பெரியாரின் தமிழ் இலக்கிய விமர்சனத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன? இருவரும் தமிழ்சாதியை உருப்படாது என்றுதான் ஏசுகிறார்கள். தமிழ் நிலத்தை இது ஒரு பாலை நிலம் என்றார் வெ.சா. இதைப் பற்றி ஈழத்து விமர்சகர் எம்.ஏ. நுஃமான் காலச்சுவடு கட்டுரையில் (1998, ஜீலை செப். பக் 43) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

     “தமிழ்ப் பாரம்பரியத்தை ஒரு பாலை என்று முற்றாக நிராகரிக்கும் வெ.சா. எழுத்து அகங்காரமானது. வரலாற்றின் பார்வை அற்றது. முற்றிலும் தன்முனைப்பானது. வெ.சா.விட மிகத்தீவிரமாக பெரியார் தமிழ்ப் பாரம்பரியத்தை நிராகரித்துவிட்டார். பெரியாரின் நிராகரிப்புக்கு ஒரு கருத்து நிலை அடித்தளம் இருந்த்து. வெ.சா.வின் நிராகரிப்புக்கு உன்னதக்கலை என்ற கானல் நீர்தான் அடிப்படை.”

     தந்தை பெரியாரின் அந்தக் கருத்து நிலையைக் கண்ட அச்சம்தான்  பெரியாரியம் கலை இலக்கிய வடிவமாகிவிட முடியாது என்று சொன்னவர்களின் அசல் பதட்டமும் தன்முனைப்பும். மீண்டும் மீண்டும் இலக்கிய விமர்சன உலகில் அந்த ஒளிவட்டப்பாதையில் சிக்கித்தவித்த பெரியார் கருத்தியல பொதுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. பெரியாரியம் மேடைகளில் பேசுவதற்கானது மட்டும்தான் என்ற இன்னொரு பிம்பம் பெரியாரிய சிந்தனை வட்ட்த்திலும் புகுந்து

பெரியார் இலக்கிய மேடைகளில் தீண்டப்படாதவராக ஒதுக்கப்பட்டார்.

அதிலும் குறிப்பாக பெரியாரியல் கவிதைகள் என்பதெல்லாம் யோசித்துப் பார்க்க முடியாத ஏலியன் கனவுகளாக இருந்தன.

     இச்சூழலில்தான் சுகுணா திவாகரின் கவிதை தொகுப்பு இந்த ஒற்றைப்புள்ளியிலிருந்து புறப்படுகிறது, விமர்சன உலகின் உன்னதங்களை புனிதங்களை நோக்கி எழுதுகின்ற பெரியாரையே கவிதையின் கருவுக்குள் ஏந்தி வந்திருக்கிறது. வெறும் கருத்தியலை மடக்கி மடக்கி அடுக்குமொழியில் சொல்லிவிட்டு போய்விடும் உரைவீச்சுகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு முழுக்கவும் நவீன கவிதையின் உள்வீச்சை

தனதாக்கி, களத்தில் இறங்கி சமராடி இருக்கிறது.

     சாயல் என்ற தலைப்பில் ஒரு கவிதை.

“போகும்போது மனிதர்கள்

எதைக் கொண்டு போகிறார்கள்?”

என்றார் அவர்.

“நிழல்களை .

எல்லா மனிதர்களும்

போகும்போது தன்  நிழல்களை

எடுத்துச்சென்று விடுகிறார்கள்”

என்ற பதில் வந்தது.

“நான் நிழலையும்

விட்டுச் செல்கிறேன்” என்றார்.

பிறகு நாம் அவரின் நிழல்களானோம.

இனி, பெரியார் கவிதைகளின் நிழல்களில் உலாவருவார்,

கருந்துளை என்பது கருந்துளை அல்ல,

அது இல்லை என்று இனி எவராலும் சொல்லிவிடமுடியாது.

நாளை தமிழிலக்கிய கவிதா மண்டலத்தில் இக்கருந்துளையிலிருந்துதான்

கவிதைகள் புறப்படும். அழகியல் மையத்தைச் சுற்றி     சுற்றிவரும் அனைத்து ஒளிவட்டங்களையும் இது விழுங்கிவிடும்.!

ஆச்சரியத்தில் விமர்சன உலகம் தன் கண்டுப்பிடிப்புகளை மீளாய்வு செய்யும்.

ஆம்..

எப்படி அந்தக் கருந்துளையிலிருந்து இவ்வளவு வெளிச்சம் வருகிறதென்று .

(கருந்துளை கவிதையிலிருந்து)

முகவரியைத் தொலைத்தவர்களும்

முகவரி இல்லாதவர்களும்

தவறான முகவரியில் இருந்து கொண்டு

தங்கள் அடையாளமிழந்திருப்பவர்களும்’

இனி, முகவரியைத் திருத்திக் கொள்ளுங்கள்.

நம் பிரபஞ்சத்தின் அதிசயக் கருந்துளை,

நம் சாயலாக .. கவிதைப் பூக்களில்

“அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்”

வெளியீடு: கருப்புப் பிரதிகள்.

கவிஞர் சுகுணா திவாகர்.


------------------------------------------------------------   

    

 

Monday, March 4, 2024

ஒரு கோணல் மரத்தின் கதை

     புதிய இந்தியா வரவேற்கிறது. வாருங்கள். வருவதற்கு முன், ஜனநாயக அடிப்படையிலான குடியுரிமை, அடிப்படை உரிமைகள் என்ற சிந்தனைகளைக் கதவுக்கு வெளியே கழற்றி வைக்கவும்

ஸ்டாண்டப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்டப் இந்தியா, மேக் இன் இந்தியாமாபெரும் நம்பிக்கையைத் தந்த இந்தபுதிய இந்தியாவின் திட்டங்களைக் காணவில்லை! யாரும் தேடவும் இல்லை.

ஏன் இத்திட்டங்களின் நோக்கம் நிறைவேறவில்லை?

இவை ஏன் மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை?!

மிகையான விளம்பரங்களுடன் மேடை பேச்சுகளுடன் வெளியான இத்திட்டங்கள் இப்போது எங்கே இருக்கின்றன? அப்படியே இருந்தாலும்

இதன் பயனாளிகள் யார்?

     இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி நமக்கு நம்பிக்கை தருகிறது.

இந்தியாவில் கல்வித்துறை வளர்ச்சியும் இந்தியாவின் திறங்கள் குறித்த வளர்ச்சியும் ஏன் தலைகீழ் விகிதமாக இருக்கின்றன? நம் நாட்டிலிருக்கும் 53% தொழில் நிறுவன ங்களில் வேலை இருக்கிறது என்றாலும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் தேவையான திறன்கள் இல்லை!! எனவே யாரையும் வேலைக்கு எடுக்கமுடியவில்லை என்று இந்திய திறன் அறிக்கை வெட்கமின்றி சொல்கிறது. 2030ஆம் ஆண்டிற்குள் திறன் குறைபாட்டில் ஒரு பெரும் நெருக்கடியை இந்தியா எதிர்கொள்ள வேண்டி இருக்குமென சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணித்திருக்கிறது. அதன்விளைவாக இந்தியா தன் மொத்த பொருள் உற்பத்தியில் (GDP) சுமார் 1.6 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் ! ஆனால் அதைப் பற்றி ஆள்வோருக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான்புதிய இந்தியா’ .

     ஒருபக்கம் நம் தரவுகள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. இணைய கட்டுப்பாடு கண்காணிப்பு என்ற பெயரில் ஜன நாயகத்தின் குடியுரிமை குரல்வளை நெறிக்கப்படுகிறது.

     ஒவ்வொரு பிரச்சனைகளையும் தரவுகளுடன் அணுகி இருக்கிறார் பரகால பிரபாகர். அதிகாரத்திற்கு நெருக்கமாக இருப்பவர்கள் கூட அதிகாரத்திடம் உண்மையைப் பேச அச்சப்படுகிறார்கள் என்பதை இப்புத்தகம் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. புதிய இந்தியா ஒரு கோணல் மரம். இந்த கோணலுக்கு காரணம் ஆளும் கட்சி மட்டுமல்ல, திராணியற்ற எதிர்க்கட்சிகளும் தான்.

     சமகால அரசியலைப் பற்றி பேசுபவர்களுக்கும் எதிர்கால இந்தியாவைப் பற்றி உண்மையான தேசப்பக்தியுடன் அணுகுபவர்களுக்கும் இப்புத்தகம் ஒரு தீர்க்கமான பார்வையைக் கொடுக்கும். பக்கத்திற்கு பக்கம் அடிக்கோடிட்டு வாசிக்க வேண்டிய புத்தகமாகவும்  நம்மை அதிகம் யோசிக்க வைக்கும் புத்தகமாகவும் இருக்கிறது.

     இக்கட்டுரைகளை எழுதி இருக்கும் பரகால பிரபாகர் அவர்கள் இன்றைய நம் இந்திய அரசின் நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமனின் கணவர் என்பதையும் ஒரு தகவலாக மட்டும் என்னால் கடந்து செல்ல முடியவில்லை. பரகால பிரபாகருக்கும் அக்கட்டுரைகளை தமிழாக்கம்ச் செய்திருக்கும்ப்ரெண்ட்லைன் ஆர், விஜயசங்கர் அவர்களுக்கும் புதிய இந்தியாவின் வாழ்த்துகளும் நன்றியும்.

தமிழில் எதிர்வெளியீடு..

 



Friday, March 1, 2024

இராசேந்திரசோழனின் "பெண்கதைகள்"

 

இது அஞ்சலி கட்டுரை அல்ல.

ஒருவரின் மறைந்த நாளில் அவர் குறித்தப் பதிவுகளைப் போடலாம்.

ஆனால் விமர்சனங்களை வைத்தால் அதை நெருடலின்றி

அணுகும் மன நிலை இன்றுவரை நமக்கு வாய்க்கவில்லை.

மரணத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை என்றே வைத்துக் கொள்வோம்.

இராசேந்திர சோழன் தன் கதைகளைப் பற்றி சொல்ல வருகிறபோது
என் எழுத்தில் எதாவது செல்வாக்கு தென்படுமானால் புதுமைப்பித்தனும் தி.ஜானகிராமனும் தான் என்று சொல்வேன். அவர்கள் இரண்டு பேரைத்தவிர
மற்றவர் யாரும் என்னைக் கவரவில்லை” என்று தன் படைப்புலகம் பற்றி சொல்லுகிறார். ஆனாலும் புதுமைப்பித்தனின் “காலனும் கிழவியும்” கதையில்
வரும் ஒரு கிழவி கதைப் பாத்திரத்தை நாம் இராசேந்திர சோழனின் கதை பெண்களிடன் காண முடியாது. தி. ஜானகிராமனின் பெண்கள், அவர்களின் பாலியல் மீறல்களை இவரும் தன் கதைகளில் எழுதினார். (தி..ஜாவின் கதை பெண்களின் பாலியல் மீறல்கள் vs இராசேந்திர சோழனின் கதை பெண்கள் பாலியல் மீறல்கள் ஓர் ஒப்பீட்டு ஆய்வுக்குரியது )

இவர் கதைகள் பெண் உடலின் இச்சைகளையும் சந்தர்ப்பம்
கிடைத்தால் எவனுடன் வேண்டுமானாலும் படுத்து தன் உடலின்
பசித் தீர்க்கும் இரவு மிருகமாக பெண்ணுடல் அலைவதை
எழுதி இருக்கிறார். பெண்ணின் காம ம்
கட்டுப்படுத்த முடியாதது என்றும் அதை எதிரில் இருக்கும்
அனைத்தையும் உடைத்துப்போடும் என்றோ
கதை மையத்தில் வைப்பதில் நமக்கும் உடன்பாடுதான்.
ஆனால் பெண்ணுடல் மீறும் தருணங்களும்
பெண் தேர்வு செய்யும் ஆண்கள் யார்? என்பதுடனும் இராசேந்திர சோழன் எழுதிய கதைகள் அபத்தமானவை. காரணம் முன்பின் தெரியாத எவனுடனும் பெண்ணுடல் புணர்வதில்லை. காமத்தின் பசித் தீர்க்க அவள் பிச்சை எடுக்கும்போதும் பிச்சை இடும் கதவுகளையும் கைகளையும்
அவள் தேர்வு செய்து கொள்வாள். அதற்கான பல்வேறு
உளவியல் காரணங்கள் இருக்கும்.
அது மெல்ல மெல்ல கூடி வந்து ஒரு தருணத்தில்
அவள் உடல்வழி ஆண்மையத்தை சிதைக்கும்.
இதில் படித்தவள் படிக்காதவள் மேற்கத்திப் பெண்,
கீழைத்தேசப் பெண் என்ற வேறுபாடில்லை.
அது என்னவோ தெரியவில்லை.. இந்த ஒரு மிக முக்கியமான பெண்ணுடல் மையத்தை இராசேந்திர சோழனின் கதைப் பெண்கள்
அறிந்திருப்பதாகவே இல்லை. காரணம் அவர்கள்
அனைவருமே ஆண் பாலியல் உலகம் உருவாக்கிய பெண்ணுடல்களாகவே மட்டும் இருந்தன. அவர் கனவுகள் கூட இதை நெருங்கவில்லை! அவை பெண்ணுடலையோ அப்பெண்ணுடலின் காமத்தைத் தூண்டும்
உள்ளத்தையோ அதற்கான எந்த ஒரு காரணத்தையோ
காணுவதற்கு சின்னதாக கூட பிராயத்தனப்படவில்லை.
அதனால்தான் அவர் கதையின் பெண்கள் முன்பின் தெரியாத
ஆணிடம் கூட தன் காமம் தீர்க்கும் பெண்களாக வருகிறார்கள்.
'புற்றிலுரையும் பாம்புகள்' கதையில் வரும் பெண்ணை எடுத்துக் கொள்வோம்.
.அவள் ஆண்கள் முன்னால் வரவே மாட்டாளாம். சரி,
அப்படிக் கூட இருக்கலாம் , ஆனால் கதையின் விவரிப்போ
அக்கதை நடக்கும் பின்புலமோ அவள் ஆண்களின்
முன்னால் வராதப் பெண்ணாக இருந்திருப்பாள்
என்று நம்பக் கூடியதாக இல்லை! அதிலும் குறிப்பாக
உழைக்கும் சம்சாரி வீட்டுப் பெண்கள், இப்படி இவர்
கதைகளில் வருகிற மாதிரி ஆணின் முன்னால் வருவதற்கே
மராப்பை இழுத்து விட்டுக் கொள்வதும், கதவோரத்தில்
நிற்பதுமாக இருப்பதில்லை.
பெண்களின் பாலியல் மீறல்கள் ஆண்மையத்தைச் சிதைக்கும்
என்பதற்காக இக்கதைப் பாத்திரங்களை எழுதி இருக்கும்
அஷ்வகோஷ் தன் கதைகளில் படைத்தப் பெண்கள்
எல்லாம் ஆணுலகம் தன் பாலியல் பார்வையில்
படைத்தப் பெண்களே தவிர , பெண்களின் பாலியல் மீறல்களைப்
புரிந்து கொண்ட கதைகள் அல்ல. வேறென்ன சொல்ல?!!!

மற்றபடி, அவருடைய மார்க்ஸ் சாராம்சத்தில் ஒரு கலைஞன்,
தத்துவத் தேடலும் மனிதாபிமானமும் விடுதலை வேட்கையும்கொண்ட கலைஞன், என்பதிலும்
அரசியல் செயல்பாட்டாளனாக எனக்கு முன்னால் புனைவு, அ புனைவு என்பதா என்ற தேர்வு என்முன்னால் இருந்தது. நான் அபுனைவை நோக்கிச் சென்றேன் என்று அவர் நகர்ந்து அவர் எழுதிய அபுனைவுகள் முக்கியமானவை.

எனவே இராசேந்திர சோழனின் பெண்களும்
அவர்களின் பாலியல் மீறல்களும் ஆண்மையம் உருவாக்கிய
பெண்ணுடல்களாகவே இருந்தன. அவை நிஜமான வாழ்க்கையின்
களத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் கூட
அவர்களின் பாலியல் மீறல்களை ஆண்பார்வையிலேயே
கடைசிவரை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
அவரால் பெண்ணுடலின் காம உள்ளத்தை
அதன் மடிப்புகளை அதன் சின்னச் சின்ன அசைவுகளைக்
கண்டறியமுடியவில்லை. எனவே பெண்ணுடலின் அருகில்
அவர் கதைகள் நெருங்கவே இல்லை,
கனவுகளிலும் கூட அவருக்கு அது சாத்தியப்படவில்லையோ!

Monday, February 5, 2024

பெண் படைப்பாளுமை விருது - தமுஎசக


 

பெண் படைப்பாளுமை : புதியமாதவி

     மும்பை தாராவியில் தன் அசல் முகங்களை இழந்து ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை உழைப்பாளிகளின் பாழ்வெளி வாழ்க்கையே  எழுத்தாளர்

புதியமாதவியின் பாடுபொருள். கவிதை என்றாலும் கதைகளாயினும் அவருடைய சொற்கள் ஒடுக்கப்பட்டுக்கிடப்போரின் உளவியலையே பேசுகின்றன.

     பத்தமடையில் குளிர்ந்தோடும் பரணியாற்றுப் பரப்பிலிருந்து மூன்று தலைமுறைகளுக்கு முன்பாகக் கிளம்பி அலைகுடியாக இடம்பெயர்ந்து வாழும் குடும்பம் எழுத்தாளருடையது.

     கவிதை கதை கட்டுரை எனக் காத்திரமான பங்களிப்பினை இலக்கியத்திற்கு செய்திருக்கிறார் இவர். சூரியப்பயணம் துவங்கி அவள்களின் நாட்குறிப்புகள் வரையிலும் எழுத்தில் இறுதிச் செய்யப்பட்டிருக்கும் இவருடைய கவிதைச் சொற்கள் முற்றிலும் தனித்தன்மையிலானவை.

     புத்தாயிரத்தில் கவிதாயினிகள் பெண் உடலின் தனித்தப் பாடுகளைப் பாடினர். அவை யாவும் மத்தியதரவர்க்கத்தினரின் அன்றாடங்களில் முகிழ்க்கும் உளச்சிக்கல்கள் எனும் விமர்சனமுண்டு. புதியமாதவியின் கவிதை உலகம் முற்றிலும் வேறானது. உழுகுடிப்பெண், தான் வேலை பார்க்கும் வயலில் பிரசவ வலியில் துடித்து வரப்பில் பிள்ளைப்பேறு அடைகிறாள். எல்லாம் நிமிடங்களில் கரைந்துவிடுகிறது. பிறகு வயலிலேயே மீதிப்பொழுதையும் உழைத்துக் கழிக்கிறாள். மதப்பயங்கரம் தன்னை மூர்க்கமாக வெளிப்படுத்தும் மும்பையில் இருந்து கொண்டு ஹேராம் எனும் சொற்சேர்க்கையின் அரசியலைப் பேச முடிகிறது இவரால்.

     இவருடைய கட்டுரைகளில் உலகமயம் சிதைத்த பெண்களின் இருப்பை, இன்மையைக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன. சாதி மறுப்பு சாதொயொழிப்பிற்கான உரையாடல்களை முன்வைக்கும் புதியமாதவியின் கட்டுரைகள் தனித்தன்மையிலானவை. இவருடைய சிறுகதைகளும்  நாவல்களும் காலத்தைப் பாடும் கலைப்படைப்புகளாகின்றன. ரசூலின் மனைவியாகிய நானும், பச்சைக்குதிரையும் தேர்ந்தக் கலைப்படைப்புகள். கவிதை, சிறுகதை, நாவல், பெண்ணிய நுண் அரசியல்ல்ல்ல்ல் கட்டுரைகள், இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்புகள் என பன்முகம் கொண்ட படைப்பாளி, சமரசமின்றி தன் கருத்துகளை முன் வைக்கும் எழுத்தாளர் புதியமாதவி.

      நன்றி தமுஎசக.





தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,

கலை இலக்கிய விருதுகள் 2022 ஆய்வு.

நாள் 07-01-2024 சென்னை. 

மேலாண்மை பொன்னுசாமி நினைவு விருது 2022.

பெண் படைப்பாளுமை : புதியமாதவி.

.

Thursday, December 28, 2023

பெண்களும் சொத்துரிமையும்

பெண்களும் சொத்துரிமையும்.


இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டப்பின் இதனால் பயனடைந்த பெண்கள் எத்தனைப் பேர்?

சொத்துரிமை கேட்டால் பாசமலர் கருகிவிடும் என்பதால் சொத்தா? அண்ணன் தம்பியா?

 என்ற மன உளைச்சலில் பெண் தள்ளப்படுகிறாள்.

பெரும்பாலான பெண்கள் பிறந்த வீட்டு உறவு நல்லது கெட்டதுக்கு வேணும், ஊரும் உறவும் மதிக்க தாய்மாமன் சடங்குகள் /கட்டுகள் செய்ய வந்து நிற்கணும் அதுதான் முக்கியம் என்றே முடிவெடுக்கிறார்கள்!

நடைமுறையில் இதுதான் பெண்களின் நிலை.


தற்போதுள்ள ஆணாதிக்க சமூக அமைப்பில், தன் திருமணத்திற்குப் பின் பெண் தன் பெற்றோர்களைப் பிரிந்து கணவனுடம் செல்கிறாள். அவள் வாழ்விடம் மாறுகிறது. அப்பெண் ‘’பெண்களுக்கு சொத்துரிமை’ சட்டத்தின் படி பெறுகின்ற நிலத்தை அவள் தொலைதூரத்திலிருந்துகொண்டு  எவ்வாறு பயிரிட முடியும்?  

நிலத்தை விற்பது,  சகோதரன் /உறவினரிடம் பராமரிக்க விடுவது,  மூன்றாவதாக  நிலத்தை குத்தகை முறையில் பயிரிட எழுதிக்கொடுப்பது, இந்த மூன்று வழிகள் தான் அவளுக்கு இருக்கின்றன.


இந்த சமூக அமைப்புமுறை பெண்களுக்கு சொத்துரிமையில் 

வினையாற்றுகிறது.


சீர் , சடங்கு , தாய்மாமன் முறை என்று எதோ ஒரு வகையில் பெண் தன் பிறந்த வீட்டு சொத்துரிமையை பெற்றிருக்கிறார் என்பதும் உண்மைதான்.


நிலம்தான் பெண்.

பூமாதேவி.

எத்தனை பிம்பங்கள் நிலத்தின் மீது பெண்ணுக்கு இருந்தாலும்

அவை அனைத்தும் நிழல்கள் தான்.

நிஜங்கள் அல்ல.

நிஜ வாழ்வில் சாத்தியப்படாதவை

கற்பனை உலகில் பிம்பங்களைக் கட்டமைத்து உலவ விடுகின்றன.


நிலம்.. பெண் ..

பெண் ..நிலம் ..

எப்படி சொல்லிப் பார்த்தாலும் அதன் உரிமை

அவளுக்கு இல்லை.


நிலம் தான் அதிகாரம்.

இன்றைய முதலாளித்துவ கார்ப்பரேட் ஜனநாயகத்தின் வர்த்தக உலகிலும் சரி

ஆட்சி அதிகார அரசியலிலும் சரி..

பெண் எப்போதும் எவ்வளவு 

திறமைகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை.

ஆண்வாரிசு இல்லாத இடத்தில் பெண் வரமுடிகிறது என்ற நிஜம்

அதிகாரத்தில் பெண் இடம் என்னவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.


#பெண்களும்_சொத்துரிமையும்

#women_landrightsact

Sunday, December 10, 2023

எடப்பாடி.. பேசப்படாத அரசியல்




 எடப்பாடி ... 

தமிழக அரசியலில் 

வித்தியாசமானவர்.

அவரை ஜனநாயக அறிவுஜீவிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

அவரை " டயர் நக்கி" என்று அசிங்கப்படுத்திய வர்கள் யார் ? யார்? அவர்கள் எல்லாம் ஒரு ஸ்க்ரூவைக் கூட விட்டுவிடாமல் நக்கிப் பிழைத்தவர்கள் தான்! எடப்பாடியை கிண்டலடித்த வர்களின் கோமாளித்தனங்கள் மறந்து விடவில்லை.


அதிமுக கட்சியில் ஓரே தலைமை பீடமாக திகழ்ந்த அம்மாவின் நியமன முதல்வர் ஓ பி எஸ். அவரை   ஓவர்டேக் செய்தார்.

சின்னம்மா ,  தினகரன் அனைவரையும் களத்திலிருந்து சரியான நேரத்தில் அவுட் ஆக்கினார்.

எடப்பாடிக்கு  ஐடி விங் பவர் இல்லை!

பத்திரிகைகள் அவரைக் கொண்டாடவில்லை.

அட.. தமிழ்நாட்டின் எந்த ஒரு பிரபல்யமும் எடப்பாடியைக் கவனிப்பது கூட தங்கள் பெருமைக்கு இழுக்கு என்று நினைத்தார்கள். நினைக்கிறார்கள்! அவர் பின்னால் திரைப்பட நடிகர் நடிகை வெளிச்சங்கள் கிடையாது! சூப்பர் ஸ்டார்களுக்கு அவர் யார் என்றே தெரியாது. 🤫

அவருக்கு போட்டோ இமேஜ் லுக் , கவர்ச்சி எதுவும் இல்லை. அவர் தனக்கென இமேஜ் கிரியேட்டர்ஸ் வைத்துக் கொள்ளவில்லை.

அவர் ஒரு சாதாரணமானவன், மேற்கண்ட எதுவும் இல்லாமல் தமிழக அரசியலில் வரமுடியும் என்ற  நம்பிக்கையை முதன்முதலாக கொடுத்தவர்.


அஇஅதிமுக கட்சி திமுகவுக்கு நிகரான தொண்டர்களைக் கொண்ட ஓர் அரசியல் கட்சி.

அவர் தமிழக முதல்வராக இருந்தக் காலத்தில்தான் கொரேனா லாக் டவுண் நேரம். அப்போது நான் தமிழ் நாட்டில் இருந்தேன்.

மிகச் சிறப்பாக அச்சூழலைக் கையாண்டார். 

யூடியூப்பில் சிலர் இப்போதுதான் எடப்பாடி காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை புள்ளிவிவரங்களோடு  முன்வைத்து பேச ஆரம்பித்து இருக்கிறார்கள். அதிமுகவுக்கு உண்மையில் அரசியல் களமாட.. எரிகின்ற பந்தைப் பிடித்து வீசக் கூட  தெரியவில்லையா!

எப்படியோ காலதாமதமாக சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கின்றன.

இதுவும் தேவைதான்.


எதிர்க்கட்சி பலமில்லாத  ஜனநாயகம் ஒரு கார்ப்ரேட் நிறுவனம் ஆகிவிடும்.


எடப்பாடி போட்டோ.. இதுதான் கொஞ்சம் ஓகே வா இருக்கு! 😏


பிகு😺

நான் அதிமுக அனுதாபியாக கூட இருந்ததில்லை.

யாரும் இதை எல்லாம் எழுதுவதில்லை என்பதால் வழக்கம் போல

நான் எழுத முன் வந்தேன்.

அவ்வளவுதான்.💥🙏

#எடப்பாடி_அதிமுக

#EPS_AIADMK


Friday, December 1, 2023

Gandhi family tree

 இவர்கள் இருந்தார்கள்!!!


நேற்று எதையோ தேடும்போது

மகாத்மா காந்தியின் குடும்ப உறவுகள் கிளை பரப்பி.. Gandhi's Family tree!

பார்க்க பார்க்க பெருமித உணர்வு.

வாழ்ந்து காட்டிருக்கான்யா இந்தக் கிழவன்! ( காந்தி)

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்ற நிஜம் எனக்கும் அதிசயமாகத்தான் இருக்கு.!

அந்த அதிசயத்தை இன்னும் பிரமாண்டமாக்கியது இந்தப் பெரிசும் !( ராஜாஜி)


இரு மாபெரும் தலைவர்களின் வாரிசுகள் 

திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இன்றைக்கு நடக்கிற அதிகாரப் பகிர்வு திருமண ஒப்பந்தம் அல்ல.

இது அசல் காதல் திருமணம்.

5 ஆண்டுகள் இருவரும் சந்திக்க கூடாது என்று இந்தப் பெரிசுகள் இரண்டும் ஒரு கட்டுப்பாடு விதிக்கிறார்கள். 5 ஆண்டுகளை சந்திக்காமல் காதலோடு வாழ்ந்துக் காட்டி வாழ்க்கையில் இணைந்தவர்கள் இருவரும்.

அந்த ஆண்.. தேசப்பிதா மகாத்மா காந்தியின் கடைசிப் புதல்வன் தேவதாஸ் காந்தி.

அவள்.. வேறு யாருமல்ல.. ராஜாஜியின் மகள் லஷ்மி.

ஆனால் பாருங்கள்..

அந்த வாரிசுகள் இருவரும்

தங்கள் பேராளுமை மிக்க " தந்தையின்" அடையாள அட்டையைக் காட்டியதாக தெரியவில்லை.

இரு தலைவர்களும் கூட அப்படி நினைக்கவில்லை.

(பொழைக்கத் தெரியாத பிள்ளைங்க!)

ஆனா பாருங்க 

இதெல்லாம் இந்திய ஜனநாயக மரபில் இருந்திருக்கிறது என்பது மட்டுமே ! அதிசயமாக பெருமிதமாக இருக்கிறது.

எனக்கு காந்தியை விட ராஜாஜி மீது சில ஒவ்வாமைகள் உண்டுதான்.

அதெல்லாம் இருக்கட்டும்டே சரவணா..

ஆனா.. இப்படியும் வாழ்ந்துக் காட்டிய பெரிசுகள் டே... இந்த இரண்டும்.


அவர்கள் இருவரின் மரபுவழி கிளை பரப்பி நிற்கும் முகமும் முகவரியும் தெரியாத அவர்கள் அனைவருக்கும் கோடானக்கோடி வாழ்த்துகள்.


வாழ்தல் இனிது.

இவர்கள் வாழ்ந்த நினைவுகளுடன் 

வாழ்தல் இனிது.


புகைப்படம் 1)காந்தி தன் மகன் தேவதாசுடனும் பேரனுடனும். 2) ராஜாஜி தன் மருமகன் தேவதாஸ் & பேரனுடன். நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

#mahatmaGandhi_familytree

Monday, November 6, 2023

கி. ரா.வின் மொழி அரசியல்

 இவர்கள் எந்த மொழியில் கனவு காணுவார்கள்?!

(கி.ரா.வின் மொழி அரசியலை முன்வைத்து. )

காலனிய ஆட்சியில் மெட்ராஸ் மாநிலத்தில்
அதிகமான தெலுங்கு , கன்னட மொழியைத் தாய்மொழியாக
கொண்டவர்கள் இருந்தார்கள்.
அவர்களின் வீட்டுமொழி தெலுங்கு/ கன்னடமாகவும்
வெளியுலகத்தில் அவர்களின் மொழி
தமிழ் மொழியாகவும் இருக்கிறது.
மொழியை மட்டுமே கருவியாகக் கொண்டிருக்கும்
இலக்கியவெளியில் இவர்கள் தமிழ் இலக்கியப் பரப்பில்
பங்களிப்பு செய்தவர்கள் என்பதும்
மறுக்க முடியாத உண்மை.

இவர்களின் மொழி அரசியல்
அவ்வப்போது வெளிப்படும்.
மொழிவரலாறு குறித்தோ அல்லது
மொழிகள் திரிந்து கலந்து பிறிதொரு மொழியானது
குறித்தோ இவர்களிடம் வாதிட முடியாது. காரணம்
அதைப் பற்றிய எந்தவொரு புரிதலும் இவர்களிடம் இருக்காது.
கேட்டால் "மக்கள் மொழி" என்று சொல்லுவார்கள்.
மக்கள் மொழியின் ஜன நாயகப்படுத்தலை இவர்கள்
'சாம்பார்மொழி' என்று கொச்சைப்படுத்துவார்கள்.
அதை எல்லாம் தாண்டி இவர்கள்
தமிழ்ச் சமூக இலக்கிய உலகின் சட்டாம்பிள்ளையாக
கையில் பிரம்புடன் மொழி அரசியல் பேசும்போதுதான்
என் போன்றவர்களுக்கு இந்தக் கேள்வி எழுகிறது.
ஆம்..
இவர்கள் எந்த மொழியில் கனவு காண்பார்கள்?
இவர்களின் கனவுமொழி இவர்களின்
படைப்புலகில் மொழியாக்கம் செய்யப்படுகிறது.
அதாவது இவர்களின் எழுத்து மொழி
இவர்களின் அசல்மொழியல்ல.
அசல்மொழிதான் மக்கள் மொழி.
அசல்மொழிதான் மொழியின் ஜீவன்.
எது எங்கள் அசல்மொழி என்பதில்
எங்களுக்கு குழப்பமில்லை.

மொழி குறித்து புனிதம் தெய்வீகம் வழிபாட்டுணர்வு
இதெல்லாம் எனக்கு கிடையாது.
அவரவருக்கு அவரவர் மொழி உசத்தி. அம்புட்டுத்தான்.
ஆனா...
திரும்பி பார்க்கும்போது
இவர்கள் முன்வைத்திருக்கும் மொழி அரசியல்
இவர்களை என்னிலிருந்து பிரிக்கிறது.
என்னையும் என் மண்ணையும்
இவர்கள் எழுதி இருக்கலாம்.
ஆனால் அதை இவர்கள் ஒரு பார்வையாளனாக
ஒரு பயணியாக எழுதி இருக்கிறார்கள்.
கி.ரா.வின் மொழி அரசியல் - சிலம்பு நா. செல்வராசு
புத்தகம் வாசித்தப்பின் இப்படியான கேள்விகள்
எழுவதை தவிர்க்கமுடியவில்லை.!

Friday, November 3, 2023

பத்தமடை... நீங்கள் மறப்பது ஏன்?

 பத்தமடை. -

ஏன் சொல்லப்படவில்லை?
சொனனா அந்தக்குளத்தின் பெயரும் சொல்லியாக
வேண்டும் என்பதாலா?
அடேங்கப்பா.. ஒரு குளத்துக்கே
இவன் பெயரா!
அப்போ இவன் அந்த ஊரில்
யார்?
இதெல்லாம் தெரியவரும்.
பத்தமடை என்றால்
பத்து மடைகள் கொண்ட ஊர்.
மடை என்பது ஆறு, குளம், ஏரி, கால்வாய்களில்
தண்ணீர் வெளியேற அமைக்கப்பட்டிருக்கும் வழி.
இந்த வழியை கதவு கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள்.
மடையின் கதவு திறந்துவிட்டால்,
'மடை திறந்த வெள்ளம் போல' தண்ணீர் வெளியேறும்.
ம்ம்ம்ம்...
பத்தமடை என் சொந்த ஊர்.
இப்போதும் வீடு இருக்கிறது.
(கதவுகள்தான் பூட்டி இருக்கின்றன!)

பத்தமடை என்றவுடன் ' பத்தமடை பாய் '
என்பதோடு பத்தமடை வரலாற்றை
எழுதி முடித்துவிடுவார்கள்.
ஆனால் பத்தமடை பெயர்க்காரணத்தை
மறந்தும் பேச மாட்டார்கள்.
ஊர்ப்பெயரிடுகையில் 'மடை' என்ற நீர்மேலாண்மை
கொண்ட ஊர்ப்பெயர்களில்
யாரும் ஏன்
பத்தமடை குறித்து அறிந்திருக்கவில்லை!
அந்த பத்துமடைகளுக்கு
எந்தக் குளத்திலிருந்து நீர் வெளியேறியது
என்பதையும் சொல்லியாக வேண்டும் என்ற
கட்டாயம இருப்பதால்
அதைச் சொல்வதில் அவர்களுக்கு
சங்கடமிருப்பதால்
பத்தமடையை சொல்லாமல் விட்டுவிடுகிறார்களோ..
தெரியல.

அவர்கள் சொல்லாவிட்டால் என்ன?
நாம சொல்லிடுவோம்.
அந்தக் குளத்தின் பெயர்
"பறையன் குளம்"


பிகு: பத்தமடை திரு நெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி
அருகில் இருக்கும் ஊர். பத்தமடை "பாய்" உலகப்புகழ் பெற்றது.