Pages

Monday, January 23, 2012

ஜல்லிக்கட்டும் ஃபார்முலா கார்பந்தயங்களும்





ஜல்லிக்கட்டு தமிழனின் பாரம்பரிய வீ ர விளையாட்டு என்ற குரல் ஒவ்வொரு ஆண்டும்
தைப் பொங்கலை ஒட்டி ஓங்கி ஒலிக்கும் குரலாக இருக்கிறது ..
இந்த ஆண்டு என் மதிப்பிற்குரிய தோழி மாலதி மைத்ரி
அவர்களும் ஒரு கருத்தை வைத்திருப்பாதாக அறிந்தேன்.
அதாவது பார்முலா 1, ஃபார்முலா 3 போன்ற மேல்தட்டு மக்களின் வீர விளையாட்டுகளுக்கு
ஆதரவளிக்கும் அரசு கிராமப்புற மக்களின் தொன்றுதொட்ட வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் தடை செய்ய வேண்டும் என்று நினைக்கிறது?
இக்கேள்வி மிகவும் சரியானதாகவே மேம்போக்காக இப்பிரச்சனையை
அணுகுபவர்களுக்கு தோன்றலாம். இம்மாதிரியான பார்வை சமூகப் பிரச்சனைகளை
எப்போதும் வர்க்கப்பிரச்சனையாக மட்டுமே அணுகும் ஒரு வட்டத்தை
உருவாக்கி இருக்கிறது. இந்தியச் சமூகச் சூழல் என்றைக்குமே இந்த
வட்டத்துக்குள் சிக்குவதில்லை என்பது தான் சாதியத்தின் அடிப்படை
வெற்றியாக இருப்பதை ஏனோ அறிவு ஜீவிகளும் எடுத்துச் சொல்ல
முன்வருவதில்லை. வர்க்கம் தாண்டிய சமூகத்தின் அடித்தளம் வரை
கெட்டிப்பட்டிருக்கும் சாதியத்தின் ஆணிவேரை , பிரச்சனைகளின்
மையமாக காட்டுவதைக் கூட அறிவுஜீவிகள் வேண்டுமென்றே தவிர்க்கின்றார்களோ
என்ற ஐயம் ஏற்படுகிறது.

சமூகப்பிரச்சனைகளின் மையமாக எப்போதும் பிசகாத நூலிழையாக இருக்கும்
சாதிப்படிநிலையை எடுத்துச் சொன்னால் கூட முகம் சுளிப்பதும்
'இவர்களுக்கு வேறு வேலையில்லை' என்று ஒதுக்கி வைப்பதும்
இன்றும் தோழமை வட்டங்களில் கூடத் தொடரத்தான் செய்கிறது.


இந்தியாவில் டில்லிக்கு அருகில் உ.பி மாநில எல்லையில் நொய்டாவில் இரண்டாயிரத்து ஐநூறு ௦௦ ஏக்கர்
பரப்பில்இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் கார் பந்தய சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இதை அனுமதிக்கும் அரசு நடுத்தர வர்க்க , கிராமப்புற மக்களின் ஜல்லிக்கட்டை மட்டும் விமர்சிப்பதும்
கோர்ட் வாசல் வரை இழுத்திருப்பதும் சரியா ? என்ற
கேள்வியின் ஊடாக நாம் எதை எதிர்பார்க்கிறோம்?
பார்முலா ஒன கார் பந்தயங்கள் போல ஜல்லிக்கட்டும் ஆக வேண்டும் என்றா?
அப்படி ஆக வேண்டும் என்பது தான் அரசின் விருப்பமும். அதாவது ஜல்லிக்கட்டும் இனிமேல்
மல்லையா ஜல்லிக்கட்டு. ஜெபி குருப் ஜல்லிக்கட்டு, டாட்டா ஜல்லிக்கட்டு என்று முதலாளிதுவமாகி
அதன் பின் உலக மயமாக வேண்டும் என்பதே அரசின் நேக்கமும் ஆகும்.

ஜல்லிக்கட்டு ஒரு மிருகவதை என்று பேசும் கருணா மூர்த்திகளும் சரி,
ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனம் என்று பேசும் நாகரிக தலைமுறையும் சரி,
சாதியக் கொடுமைகளுக்கு எதிராக எப்போதும் கள்ளமவுனமே சாதித்து வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை நாகரிகமாகவும் மனிதாபிமானம் மிக்கதாகவும் மாற்ற நினைப்பவர்கள்
ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு தமிழனின் வீர விளையாட்டு,
தமிழர் பண்பாடு என்ற தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களின் வீர வசனங்கள் இன்னொரு பக்கம்.

உரக்கச் சொல்லும் பொய்யும் உண்மையாகிவிடும் என்ற யதார்த்தநிலையை
நன்குத் தெரிந்தக் கொண்டவர்களே மேற்சொன்ன தமிழ் பண்பாட்டுக் காவலர்கள்!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் வீர விளையாட்டு
என்றும் பலரும் அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் பரவியதே நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தான்
என்பதே வரலாற்று உண்மை.

தமிழகத்தில் கி.மு. 1500 காலத்தில் ”மஞ்சு விரட்டு” அல்லது “”எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.


நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “”மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.

இந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்( புதிய ஜனநாயகம் 2008)

இன்றைக்கு தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலின் போது எங்கள் தென்மாவட்டங்களில் (நெல்லை)
இப்போதும் மஞ்சு விரட்டு நிகழ்வு மட்டுமே நடக்கிறது. ஜல்லிக்கட்டு நடக்கின்ற தமிழகப் பகுதிகளில்
அந்த விளையாட்டு ஆதிக்கச் சாதியின் அடையாளமாகவும் நிலவுடமை சமூகத்தின் முகமாகவுமே
இருப்பதையும் பார்க்கிறோம். ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தங்கள் பாரம்பரியமாக
கொண்டாடுபவர்களும் அந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்துடனேயே இருப்பதையும் அடையாளம்
காண முடிகிறது.

இந்த ஆதிக்கச்சாதி மனோபாவத்தை வளர்த்தெடுத்ததில் நம் தமிழ் திரைப்படங்களுக்கு
மிக முக்கியமானப் பங்குண்டு. ஜல்லிக்கட்டு காளை எப்போதுமே அந்த ஊர்ப் பண்ணையாரின்
காளையாகவே இருக்கும்.

பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் என்று கொண்டாடுவதையும் நாம் கேள்விக்குட்படுத்த
வேண்டி இருக்கிறது. எது தமிழனின் பாரம்பரியம்? எது தமிழனின் பண்பாடு?
ஊர் என்றும் சேரி என்றும் தமிழன் பிரிந்திருப்பது தமிழனின் பாரம்பரியமா?
தமிழனின் பண்பாடா? என்று கேட்டால் அந்தக் கேள்வி கூட தமிழ்ப் பண்பாட்டுக்
காவலர்களுக்கு உவப்பானதாக இருப்பதில்லை. இக்கேள்விகளைத் தொடுப்பவர்கள்,
தமிழினத் துரோகிகள், தமிழ்த் தேசிய விரோதிகள் என்று பார்க்கும் பார்வையும் வளர்த்தெடுக்கப்பட்டிருப்பது
கவலைத் தருவதாகவே இருக்கிறது.

உங்கள் மொழி , சாதிக் காப்பாற்றும் மொழி
உங்கள் மதம் சாதிக் காப்பாற்றும் மதம்
உங்கள் அரசு சாதிக் காப்பாற்றும் அரசு
என்று தந்தை பெரியார் தமிழ் மொழியையும் அதன் பெருமைமிக்க பாரம்பரியத்தையும்
கண்டு மருண்டு விடாமல் வெகுண்டெழுந்த அறச்சீற்றம் அணையாமல் அக்னிக்குஞ்சாக
எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது ஜல்லிக்கட்டு காளைகளின் சீவிவிடப்பட்டிருக்கும்
கூரிய கொம்புகளுக்குப் பயப்படாமல்.

நன்றி: திண்ணை டாட் காம்

Tuesday, January 17, 2012

உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.



உத்திர பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்த மாநிலத்தில் இருக்கும் யானை சிலைகளை மூடி வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம்
யானை என்பதால் இந்த உத்தரவு. எல்லாம் சரிதான்... உத்திர பிரதேசத்தில் யாரும்
கை அசைத்து டட்டா காட்டுவதோ கையை தூக்கி காட்டுவதோ எப்படி சரியாம்?
அதையும் தடை செய்திருக்க வேண்டாமோ? கை காங்கிரசு சின்னம் ஆயிற்றே!

எனவே, இனி உத்திர பிரதேசத்தில் யாரும் கைகளுடன் வெளியில் நடமாடக் கூடாது.
கை முட்டியை ஒரு வெள்ளை துணியால் கட்டி வைத்துக்கொண்டு தான் வெளியில் வர வேண்டும்.
தேர்தல் முடியும் வரை சாப்பிட கூட யாரும் முட்டியை விரித்து வெளி இடங்களில் சாப்பிட
கூடாது. தேர்தல் முடியும் வரை எந்த பயன்பாட்டுக்கும் கைகளை தூக்குவதோ
அசைப்பதோ விரிப்பதோ சட்டப்படி குற்றம்!

மும்பை ஜனக்கடலில்





மும்பையை முழுசா பாக்கனுமா... மும்பை வி.டி ஸ்டேஷனைப் பாருங்க. (இப்போ அதுப் பேரு சி.எஸ்.டி ங்க)
இல்லைனா தாதர் ஸ்டேஷனுக்கு வாங்க. தாதர் ஸ்டேஷனில் நீங்க நடக்க வேண்டாம். போற திசையை நோக்கி நின்னாப் போதும். அப்படியே ஜனக்கூட்டமே உங்களை விர்ருனு எடுத்திட்டு போயிடும்.

மும்பை பெண்களுக்கு ஓர் அசாதரணமான திறமை உண்டு. அதைப் பார்க்கனும்னா நீங்க
வி.டி. ஸ்டேஷனுக்குப் போனா ரொம்ப வசதியா இருக்கும். டிரெயின் வந்து ப்ளாட்பாரத்தில்
நிக்கறதுக்கு முந்தியே ஹேண்ட் பேக்கை இறுக்கமா முன்பக்கம் போட்டு பிடிச்சிக்கிட்டு
துப்பட்டாவை இழுத்து சொருகிக்கொண்டோ அல்லது துப்பட்டாவை மடிச்சி பேக்கில்
வைத்துக் கொண்டோ ரைட் சைட் விண்டோ ஸீட்டை பிடிக்கறதுக்கு ஒரு ஜம்ப் அடிப்பாங்கப்
பாருங்க... எம்மாடியோவ் அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியா இருக்கும்.
ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் இந்த மாதிரி ஒரு போட்டியை வச்சா
எங்க ஊரு துப்பட்டாக்கள் தூள் கிளப்பி விடுவார்கள்.
ஜல்லிக்கட்டில் காளை மாடு அடக்குவதெல்லாம் இந்த வீர சாகசத்திற்கு முன்னால்
வெறும் ஜிஜிப்பி.

அப்புறம் இந்த டிரெயினில் ஏறி உட்காந்த வுடனே இரண்டு நிமிடங்களுக்குள் நிக்கிறதுக்கு
இடமில்லாமல் நிரம்பிவிடும். நிற்பவர்கள் உட்கார்ந்திருப்பவர்களிடம் "ஸீட் ஸீட் ' என்று
கேட்பார்கள். அதிலும் சிலர் சைகையால் 'எங்கே?" என்று கேட்பார்கள். உட்கார்ந்திருப்பவர்கள்
சொல்லியாக வேண்டும். உடனே நிற்பவர் ஸீட்டை ரிசர்வ் செய்துவிடுவார்.
அதிலும் ஒரு சிலர் பைகுல்லாவிலோ தாதரிலோ வந்து அதே வண்டியில் ஏறப்போகும்
தன் தோழியருக்காக ஸீட் ஒதுக்குவது... இதில் நடக்கும் குளறுபடிகள், வாக்குவாதங்கள்,
சண்டைகள், இத்தனைக் கூட்டத்துக்கு நடுவிலும் ஜோராக நடக்கும் வளையல், காதணி,
பொட்டு, நகப்பாலிஷ், ஹேர்க்கிளிப் , நைட்டி, சுடிதார் டிரெஸ் மெட்டிரியல்,சிக்கு, ஆரஞ்சு பழ விற்பனை என்று ஒரு சில்லறை வணிக வளாகமே ஏறி இறங்கி மும்மரமாக வியாபாரம் நடக்கும்.




இந்த மும்பைக்கு நான் நான்காவது தலைமுறை தமிழ்க்குடும்பம். நான் ஓடி விளையாடிய
கடற்கரையைக் காணவில்லை என்று இப்போது சொன்னால் உங்களுக்கு வடிவேல் தன்
கிணறு காணவில்லை என்று ஜோக் அடித்த மாதிரி இருக்கலாம். ஆனா என் கடற்கரை
காணாமல் போனது ரொம்பவும் நிசமானது. என் வீட்டு பெரிய ஜன்னலிருந்து பார்த்தால்
கடற்கரை தெரியும். மாலை நேரத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கூடத்திற்கு போன நேரம் தவிர
மற்ற நேரமெல்லாம் அந்தக் கடற்கரை தான் எங்கள் விளையாட்டு மைதானம்.
கொளுத்துகின்ற வெயிலிலும் விளையாண்டிருக்கிறேன். பாடப்புத்தகம் எடுத்துப்
படித்தாகவோ ஹோம் வொர்க் எதுவும் செய்ததாகவோ நினைவில் இல்லை.
எங்களைக் கண்டு கடற்கரை பயப்படவில்லை. பெற்றோர்கள் தான் பயந்துப் போய் தமிழ்நாட்டில் விடுதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு நிம்மதியாக இருந்தார்கள்.
நாங்கள் வளர வளர ஒவ்வொன்றாக இந்த மும்பையின் காட்சிகளும் மாறிக்கொண்டே
வந்தது. அந்த மாற்றத்தில் தான் என் கடற்கரையும் காணாமலே போய்விட்டது.
இப்போது என் கடற்கரை இருந்த இடத்தில் தான் பாந்திரா சயான் ஹைவே..
அந்த ரோட்டில் காரில் போகும் போதெல்லாம் இப்பொதும் என் காதுகளில்
அந்தக் காணாமல் போன கடலலைகளின் சப்தம் கேட்கிறது.


பாந்திரா என்று சொன்னவுடன் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
மும்பையில் அய்யா வரதராசன் கொடி கட்டிப் பறந்த நேரம். அவர் மும்பையில்
இருக்கும் வரை செண்ட்ரல் மாதுங்கா ரயிலடிக்கு அருகில் தான் அவருடைய
கணபதி விழா பத்து நாட்களும் நடக்கும். சும்மா ஜே ஜேனு. தமிழ்நாட்டின்
சினிமா பிரபலப் பாடகர்கள் அனைவரும் வந்திருக்கிறார்கள்.
ஒருமுறை அவர் போட்ட பந்தல் தீ பிடித்து எரிந்துப் போய்விட்டது.
அதிகாலை விடியவில்லை. வரதராசன் காலகில்லாவுக்கு வருகிறார்.
காலகில்லா பகுதி சயானுக்கும் தராவிக்கும் நடுவில் இருக்கும் இடம்.
அங்கிருந்த என் மாமா சண்முகராசன் அவர்களை எழுப்பி கூட
அழைத்துக் கொண்டு பாந்திராவில் இருக்கும் சிவசேனா பால்தாக்கரே
வீட்டுக்கு அவர் கார் விரைகிறது. அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்?
தெரியாது. ஆனால் வரதராசன் கோபமாக இருந்திருக்கிறார்.
அன்று மாலைக்குள் எரிந்தப் பந்தல் மீண்டும் எழுந்து நின்றாக வேண்டும் என்று
சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்.
அன்று மாலை வழக்கம் போல திட்டமிட்ட படி அங்கே பந்தலில் நிகழ்ச்சி நடந்தது.
இந்த்ச் சம்பவம் மணிரத்தினத்தின் "நாயகன் " அறியாத நாயகன் கதை.




கடந்த ஞாயிறன்று மாலை எழுத்தாளர் மன்றத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் நினைவுச் சொற்பொழிவுனு என்னைப் பேசச் சொல்லியிருந்தார்கள்.
சரி என்று ஒத்துக்கொண்டு பேசிவிட்டு வந்தேன். இன்று காலை 20/12/2011 தினத்தந்தியில்
புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.
செய்தியில் : புதியமாதவி, விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்னு எழுதியிருக்காங்க.
மற்ற பத்திரிகைகளில் எப்படி வந்திருக்கிறதோ..! தெரியாது. இதற்காகவெல்லாம் நாங்க
பத்திரிகையாளர்களுடன் சண்டை போடுவதில்லை. தினசரிகளில் நகைச்சுவை வரக்கூடானு
யார் சொன்னது? !!!


நன்றி : வடக்கு வாசல் ஜன.2012

Sunday, January 8, 2012

கொலவெறியும் ஏ ஆர் ரகுமானும்




http://www.youtube.com/watch?v=4L5qR6HtePQ&feature=youtu.be%2F


கொலவெறிப்பாட்டைக் கேட்டதும் நடுவராக இருந்த
பாடகர் பி ஜெயசந்திரன் எழுந்து வெளியேறுகிறார்.
பாடகர் பி ஜெயசந்திரன் , மலையாலம், இந்தி தமிழ் சினிமாக்களில் பாடிப் பல விருதுகள் பெற்றவர்.
ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு,
தாலாட்டுதே வானம்,
ஆடிவெள்ளி தேடி உன்னை
ஆகிய நம்மால் மறக்க முடியாத தமிழ் பாடல்களைப் பாடியவர்.



நம் இசைப்புயல் ரகுமான்

மிகவும் ரசித்ததாக சொல்கிறார்.இந்த கிட் சாங் மூலம் தமிழ் இசை தேசத்தையே திருப்பி பார்க்க வைத்து விட்டதாம்!
வாழ்க
ராராராராகுகுகுகுகுமான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!



Saturday, December 31, 2011

2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்







ஓரளவு அறிமுகமான
எழுத்தாளருக்கு / அரசியல் விமர்சகருக்கு
தமிழக இலக்கிய அரசியல் வட்டத்தில்
அனுபவமிக்க
ஒரு ஃகாட் ஃபாதர்/ஃகாட் மதர்
தேவை.

பிரபலமான அரசியல்வாதிகளின்
அரசியல் அறிவை அவர்களின்
அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம்
அறிந்துக் கொண்டதால்
தன்னுடைய அரசியல் ஞானம் அவர்களை விட
எவ்வகையிலும் தரம் குறைந்ததில்லை என்று திடமாக நம்புகிறார்.

மிகப் பிரபலமானவர்களின் பிரபலமான படைப்புகளை
வாசித்த அனுபவங்கள் மூலம்
அவர்கள் பிரபலமான சூத்திரத்தை
அவரும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பு ,
அறிந்தவர்கள் சொன்ன அண்மைக்கால சரித்திரங்கள்
என்ற பின்புலத்தின் அடிப்படையில்
அவருடைய 2012க்கான திட்டங்கள்:

2012க்கான திட்ட அறிக்கை
----------------------------

* 2012ல் ஓர் இலக்கிய- அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பது.

* விருதுகள் அறிவிப்பது. (இது ஒருவகையான கொடுக்கல்/வாங்கல்)

*யாராவது எதிர்மறையாக விமர்சிக்க ஆரம்பித்தால் அவருக்கே
விருது கொடுப்பதில்/புத்தகம் வெளியீட்டு விழாவில் தலைமை இத்தியாதி
முன்னுரிமைகள் கொடுப்பது.

* இறுதியாக அரசியல் கட்சி ஆரம்பிப்பது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும்
என்ற கொள்கையில் மிகவும் உறுதியாக இருப்பவர்களுக்கு கட்சியில்
பொறுப்புகளும் பதவிகளும் கொடுப்பது.

இந்த திட்டங்களை நடைமுறைப் படுத்த அவசரத் தேவை
ஒரு ஃகாட் ஃபாதர்/ ஃகாட் மதர்.

கள ஆய்வறிக்கை
--------------------


*யாராவது பிரபலத்தை நோக்கிச் செருப்பு வீசினால் பிரபலமாகிவிடலாம்
என்றார் என் நண்பர் ஒருவர். திகார் ஜெயில் வாசலில் போய் நில்லுங்கள்,
நிறைய பிரபலங்கள் உள்ளேயும் வெளியேயும் ... உங்களுக்கு வசதியாக
இருக்கும் என்றார். இந்த ஐடியா சொன்னவர் ஒரு டி.வி,க்காரர் என்பதால்
அவருக்குப் புத்தாண்டில் சுடச்சுட பிரேக் நியுஸ் கிடைக்கும் என்று
நம்மை வைத்து காமெடி கிமெடி பண்ணுகிறாரோ என்ற சந்தேகம்
வந்துவிட்டதால் அந்த ஐடியாவைக் கைவிட்டு விட்டோம்.

*சில இடங்களில் சிலர் வெளியேற்றப்பட்டதால் அந்த வேகன்சியில்
முயற்சிக்கலாம் என்றால் நம்மால் இன் -ஹுவுஸ் , 24x7 வேலை
எல்லாம் செய்ய முடியாது என்பதால் அதுவும் டிராப்.

*பிரபலங்களின் செல்ல நாய்/ நண்டுகளை சின்னவீடு/பெரியவீடு வேறுபாடின்றி
புகழ்ந்து கவிதைப்பாட வேண்டும் என்றார் ஓர் அனுபவஸ்தர். பிரபலங்களைப்
பற்றியே கவிதை எழுத எம் கவிதைகளுக்குத் தெரியாமல் போய்விட்டதால்
அதுவும் ஒத்துவரவில்லை.

*நவீன கவிதைகளைப் படைக்கும் அண்ணன் தம்பி, சித்தப்பா/மாமன்/மச்சான்
அவர்களின் பிள்ளைகள் என்று யாருமில்லை. அப்படி இருந்திருந்தாலும் கூட
அவர்கள் எழுதியதை நம் பெயரில் போட்டு அவர்கள் உதவியுடன்
உலக மொழிகளுக்கு நம் எழுத்துகளை எடுத்துச் செல்லும் கொடுப்பினையும்
இந்தப் பிறவியில் இல்லாமல் போய்விட்டது.

*அன்னா ஹசாரேவின் மும்பை உண்ணாவிரதத்தில் கலந்துக் கொள்வதற்கு
முன்னரே அவரும் உண்ணாவிரதத்தையே முடித்துக் கொண்டதால்
கிடைக்க இருந்த ஒரு வாய்ப்பும் கைநழுவிப் போய்விட்டது!
(உண்ணாவிரதம் இருப்பது எப்படி ? என்பதை அவர் நம்ம தமிழ்நாட்டுக்குப்
போய் பயிற்சி எடுத்திருக்க வேண்டாமா... ??!!)


பின்குறிப்பு:
-------------

பிரபலமாவது எப்படி ? என்பது குறித்த ஓர் ஆய்வின்
அடிப்படையில் மேற்கண்ட 2012க்கான திட்ட அறிக்கைத்
தயார் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


திட்டங்கள் குறித்து கருத்தரங்குகள்/பயிற்சிப் பட்டறைகள் நடத்த
மாநில ரீதியாகவும்/மாவட்ட ரீதியாகவும் ஐ.ஐ.எம் பட்டதாரிகள் தேவை.

ஏற்கனவே எம்முடன் தொடர்பில் இருக்கும் பெரிசுகள் இதற்கு
விண்ணப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(அதாகப்பட்டது அவர்கள் எல்லாம் ஒரு வேஸ்ட் ஃபீஸ்கள்/கையாலாகத
பிழைக்கத் தெரியாத பெரிசுகள்) எனினும் பொதுக்குழுவுக்கு அவர்கள்
அனைவரும் ஆயுட்கால கவுரவ ஆலோசகர்களாக நியமிக்கப்படுவார்கள்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்கள் திட்டங்களை விளம்பரங்களாகவும் தலைப்புச் செய்திகளாகவும்
ப்ரேக் ந்யுஸ்களாகவும் வெளியிடும் ஊடகங்களை , ஊடகவியலாரைக்
கனமான கவர்கள் கொடுத்து கவனித்துக் கொள்ள தனியாக
ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.

திட்டங்கள் மாற்றத்திற்குட்பட்டவை.
புதிய கருத்துகளுக்கு என்றும் வரவேற்புண்டு.

(இத்திட்டக்குறிப்பு தனிச்சுற்றுக்கு மட்டும்)

Friday, December 30, 2011

சந்திப்பின் வலி



சந்திப்பின் வலி
---------------------

உன்னைச் சந்திக்கத் துடித்த
கனவு வசப்பட்ட தருணம்.
மவுனம் கனமானது.
என்னை நேசித்த நீயும்
நீயே பிரபஞ்சமாக இருந்த நானும்
நாம் தொலைந்துபோனதை
உணர்ந்து கொண்ட அந்த தருணம்
நம் பிரிவின் வலியைவிட
கொடுமையானது.
நரை விழுந்து
முகம் கருத்து
இளமை விடைபெற்றுக்கொண்டிருக்கும்
இந்த நாட்களில்
சிட்டுக்குருவிகளாய்த் திரிந்த நாட்கள்
நேற்றைய கனவுகளாய்
நம் முன்.
நம் இமைகளை அழுத்தும் பாரமாய்
----


Thursday, December 29, 2011

திராவிடம் அருங்காட்சியகத்தில்





தமிழ் தேசியமும் திராவிட அரசியலும் என்ற தலைப்பில் எழுதியதை வாசித்த
எனதருமை தோழி சொல்கிறார்:
என்னப்பா இது... திராவிடம் அது இது என்று பேசிக்கொண்டு...
திராவிடம் என்ற சொல்லே இப்போது அருங்காட்சியகத்தில்
வைக்கப்படும் பொருளாகிவிட்டது என்றார்.
அவர் நிறைய படித்தவர். திராவிட அரசியல் தெரிந்தவர்.
ஊடகவியலார்.

அவர் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். இறுதியாக
நான் அவரிடம் ஒரே ஒரு கேள்வியைத் தான் வைத்தேன்.

இருக்கட்டும் நீங்கள் சொல்கிற படியே இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் எதுக்காக எங்க தமிழ்நாட்டில் அரசியல் கடை திறக்கறவன்
எல்லாம் திராவிடன்ங்கற சொல்லை வால் மாதிரி ஒட்ட வச்சிக்கிட்டு
கடை விரிக்கிறான்... இந்தக் கடையை ஆந்திராவில், கர்நாடகத்தில்,
ஏன் கேரளாவில் போய் விரிச்சி பார்க்கச் சொல்லுங்க.. அங்கே வாலை
ஒட்ட நறுக்கிடுவான்கிற பயமா? தமிழன்னா என்ன கேணப்பசங்கனு
நினைச்சுங்கீளா?னு ..................(எடிட் எடிட் எடிட் திருநெல்வேலி கெட்ட
வார்த்தைகள்.......!!!!)

அட இதுக்குப் போயி இவ்வளவு ஆத்திரப் படுவீங்கனு நினைக்கலியேனு
சொன்னார்கள்...
ஆமாம்... இதற்கெல்லாம் ஆத்திரப் படாமல் வேறு எதற்கு ஆத்திரப்படுவதாம்?
........................ரவுத்திரம் பழகு...