Thursday, June 24, 2010

கவிஞனைச் சந்திக்க நேர்ந்தால்.


கவிஞனின் கவிதையை ரசித்தால்
வாசியுங்கள் மீண்டும் மீண்டும்..
வார்த்தைக்கு வார்த்தை அப்படியே
மனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்
திறந்த வெளியில்
மேற்கூரையில்
தனியாக நின்று
தனக்குத் தானே
சொல்லிப்பாருங்கள்

ஆனால் வேண்டாம்
அந்தக் கவிஞனை
நேரில் சந்திக்கும் முயற்சிகள்
வேண்டவே வேண்டாம்.
அப்படியே எப்போதாவது
சந்திக்க நேர்ந்தால்......
கவிதை மீதான உங்கள் ரசனை
முட்டை ஓடுகளைப் போல
உடைந்துவிடக்கூடும்!

கவிதையைப் போல
கவிஞனின் உள்ளம்
அப்படியொன்றும் அழகானதல்ல.!
அவன் இதயம்
புதுப்புனலின் அலைகளைப் போல
பொங்கி எழுவதில்லை.
சாதாரண மனிதர்களின் நடுவில்
அவன்
ரொம்பவும் சாதாரணமானவன்.

கவிதையைப் படியுங்கள்
மறந்துவிடுங்கள் கவிஞனை!
எங்கோ எப்போதோ
அவனைச் சந்திக்க நேர்ந்தால்
காதலின் வசீகரத்தையோ
கவிதையின் ஆன்மாவையோ
தேடாதீர்கள் அவனிடம்.

(Translation from Indian Literature
sahitya akademi's bi-monthly journal
May-June 2009 No:251)

oriya poet Sunanda Pradhan

வரைபடம்


நட்சத்திரப் பூக்களை
ஒவ்வொன்றாய் அடுக்கி
வெந்நிற மேகத்தின் மார்பில்
யாரோ வரைந்த வரைபடம்

அந்த வரைபடத்தில்
கணக்கிலடங்கா பால்வீதிகள்
பவனிவரும் சூரியன்கள்
சந்திரன்கள்
நடசத்திரக் கூட்டங்கள்
கோள்கள்
எத்தனை எத்தனையோ உலகங்கள்
என்ணிலடங்கா பூமி உருண்டைகள்!

பசுமை நிறைந்தப் பூமி
பழுப்பு நிறத்தில் குன்றுகள்
பனிப்படர்ந்த மலைச்சிகரங்கள்
எண்ணிலடங்கா நதிகள்
கடல்கள் ஏரிகள்
மனிதர்கள் பறவைகள் பூச்சிகள்
மரங்கள் செடிகள்
மலர்கள் கனிகள்
எங்குப் பார்த்தாலும்
ஒளிமயமாய்
அழகாய் அந்தப் பூமி.

அந்த இனிய பூமியில்
சூரியக் கதிர்கள் சுட்டெரிப்பதில்லை
எல்லா இரவுகளிலும்
ஒளிவீசும் நிலவு வெளிச்சம்
புயல் காற்று புயல் மழையின்
அச்சம் இல்லை
கள்ளம் கபடமில்லாத
குழந்தையைப் போல
சாந்தமானக் கடல்
அடக்கமான இளம் பெண்களைப் போல
கரைகளை உடைக்காத நதிகள்
பாலைவனத்தைச் சந்திப்பதில்லை.
பருவமாற்றமோ சீற்றமோ
அறியாத அற்புத உலகம்!

தேன் சொட்டும் மலர்கள்
எப்பொதும் பூத்துக் குலுங்கும்
பசுமை நிறைந்த வெளி
பழுத்துத் தொங்கும்
தீஞ்சுவைக் கனிகள் நிறைந்த
தாழ்வான மரக்கிளைகள்.
வேண்டும் போதெல்லாம்
ஏரிநீரே
தித்திக்கும் பாலாக
மாறும் அதிசயம்.
புன்னகைத் தவழும் மழலையின் முகங்களுடன்
இந்த மண்ணின் மனிதர்கள்
அவர்கள் அறிந்ததில்லை
துன்பமும் துயரமும்.
பேராசை பொறாமை
கோபம் அச்சம்
விரோதம் வஞ்சகம்
இத்தியாதி வார்த்தைகளை
அறிந்திருக்கவில்லை
அவர்கள் அகராதிகள்.

துப்பாக்கிகளை
அணுஆயுதங்களை
சட்டங்களை
உருவாக்கும் வித்தைகளை
அறிந்திருக்கவில்லை அவர்கள்.

அவர்கள் அறிந்ததெல்லாம்...
ஒரு கைதேர்ந்த கலைஞன் உருவாக்கிய
இந்த வரைபடத்தை.
இதுவரை யாரும் உருவாக்காத
இந்த ராஜாங்கத்தை.
அற்புதங்கள் நிறைந்த
இந்தப் புண்ணிய தளத்தை!.


Translation from Indian Literature
sahitya akademi's bi-monthly journal
May-June 2009 No:251


Kum Kum Roy - Oriya Poet
poem - THE MAP
-----------------------------