Monday, April 24, 2017

தமிழ் இலெமுரியா

Image result for தமிழ் இலெமுரியா இதழ்

தமிழ் இலெமுரியா விடைபெறுகிறது..
இனி இதழ் வரப்போவதில்லை
மும்பையிலிருந்து வெளிவந்துக் கொண்டிருந்த மாத இதழ்
 தமிழ் இலெமுரியா. இதழாசிரியர் சு.குமணராசனின் வரிகளை
 வாசிக்கும் போது தொண்டைக்குழி வறண்டு போனது.
 விழிகள் நிறைந்து மனம் கனத்து
அடுத்த வரிகளுக்கு நகர முடியாமல் .. என்னை...
கடந்த பிப்ரவரி திங்களில் குமணராசனைப் பற்றிப் பேசும் 
வாய்ப்பு கிடைத்தப்போது
சொன்ன வரிகள் இப்போது நினைவுக்கு வருகிறது.

நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு மும்பை இதழ்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு பதிப்பகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு நூலகம்
நாங்கள் கனவு கண்டோம்
எங்கள் கனவில் ஒரு அறக்கட்டளை
நாங்கள் கனவு கண்டோம்
நாளையும் நாங்கள் கனவு காணுவோம்
கனவு எங்கள் பிறப்புரிமை
எங்கள் கனவுகள் வாழ
வாழ்த்துகிறோம் உங்களை
தமிழ் இலெமுரியா மாத இதழ், தமிழ் இலெமுரியா பதிப்பகம்,
 தமிழ் இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் இலெமுரியா சீர்வரிசை சண்முகராசனார் நூலகம்.... என்ற வரிசையில்
மும்பையில் எங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருந்தவர் 
திரு குமணராசன் அவர்கள்.
அந்தப் பயணத்தில் 9 வருடங்களாக தொடர்ந்து மாத இதழாக வெளிவந்துக்கொண்டிருந்த தமிழ் இலெமுரியா மாத இதழ் 10 வது ஆண்டு சிறப்பிதழுடன் விடை பெறுவதாக
அவர் எழுதி இருக்கிறார். அதிலிருந்து சில  துளிகள் :
*ஒவ்வொரு இதழும் கொண்டு வர ஆகும் செலவு சற்றொப்ப 2 இலட்சம் ரூபாய்.
*12 அயல் நாடுகளுக்கு இதழ் அனுப்பப்பட்டாலும் இன்றுவரை ஒரு டாலர் கூட பணம் வரவில்லை. பாராட்டுரைகள் மட்டுமே வந்தன.
*தமிழக அரசு நூலகங்களுக்கு இதழை வாங்க ஆணையிடப்பட்டது என்றாலும் 2014-15, 16, 17 ஆண்டுகளுக்கான நிலுவை மட்டும் ரூ 850,000/
*கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் இலெமுரியா இதழ் கொண்டு வர தன் சுய சம்பாத்தியத்திலிருந்து
செலவு செய்த தொகை சற்றொப்ப ஒரு கோடியே பத்து இலட்சம்.
 *அண்மைக் காலத்தில் உறுப்பினர் கட்டணத்தை ஓராண்டுக்கு மேலாக செலுத்திய
வாசகர்கள் எஞ்சியுள்ள பணத்தை திரும்பப் பெற விரும்புவோர் எம் அலுவலகத்தைத்
தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
*தற்போது கொடுப்பதற்கும் இழப்பதற்கும் எதுவுமில்லை என்ற நிலையில் இதழைத் தொடர்ந்து
வெளிக்கொணர முயல்வது அறிவுடைமையாகாது. இயலாது என்பதே இயல்பாகும்.
* சேய்தனை இழந்த ஓர் தாயின் மனநிலையில் யாம் விடை பெறுகிறோம்.....

நாங்களும் தாயை இழந்த சேய் போல... இத்தருணத்தில்.
திரு குமணராசன் அவர்களே எழுதியிருப்பது போல அவருக்குப்
 பரிவு காட்டாவோ கருணை காட்டாவோ நானும் விரும்பவில்லை
தமிழ் இலெமுரியாவுக்கு விடை கொடுக்கும் இத்தருணத்தில்.. சில வரிகள்..
" சினிமா துளிகளோ கவர்ச்சிப் படங்களோ
ஜோசியர் நட்சத்திர பலன்களோ எல்லாவற்றுக்கும் மேலாக
 விளம்பரங்களோ இல்லாமல் இதழ் பணி தொடர்வது
 சாத்தியமில்லை. அதுவும் அப்படியான ஒரு இதழை
 தொடர்ந்து தொய்வின்றி 9 ஆண்டுகள்
மாதச் சம்பளத்திலிருந்து எடுத்து செலவு செய்து
 தனி ஒரு நபராக கொண்டு வந்திருப்பது 
என்பதே இமாலய சாதனை தான். 
. இந்த ஒன்பது ஆண்டுகள் மும்பை வரலாற்றில் 
ஆகச்சிறந்த ஏடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுதான்
தற்காலிகமாக தமிழ் இலெமுரியா இளைப்பாறுகிறது .
ஒரு கதவை மூடினால் ஓராயிரம் கதவுகள் திறக்கும்.
வானம் நம் வசப்படும்."

#தமிழ்_இலெமுரியா
http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=1286

Friday, April 21, 2017

எட்டப்பனுக்கெல்லாம் சூடு போட்ட கட்டப்பா..

Image result for பாகுபலி சத்தியராஜ்

அப்படிப்போடு ராசா
நீ வருத்தம் தெரிவிச்சப் பாருய்யா
அது உன் பெருந்தன்மை மட்டுமல்ல.
உன் பொருட்டு உன் சக தொழிலாளி நஷ்டமடையக்கூடாதுனு
நீ உண்மையாகவே கவலைப்பட்டுக் காட்டிய மனித நேயமய்யா..

நீ வருத்தப்பட்டதைக் கூட மன்னிப்பு கேட்டதா சொன்னவர்களுக்கு
சூடு சுரணை வர்ற மாதிரி நீ கடைசியா சொன்னப்பாருய்யா ராசா..
அதுதான் சத்தியமான வார்த்தை
. போதும்ய்யா.. அதுபோதும்.
இன்னும் தமிழ்நாட்டில் கலைஞன் உயிருடனும் உயிர்ப்புடனும்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறான் என்பதைக் காட்ட.

"இனிவரும் காலங்களிலும் தமிழ் ஈழ மக்களின் பிரச்சனையாக இருந்தாலும் சரி விவசாயிகளின் பிரச்சனையாக இருந்தாலும் சரி தமிழக மக்களின் அனைத்து நியாயம் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதைத் தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்கிறேன்."
இப்படி நான் கூறுவதால் இந்த சத்தியராஜை வைத்து படம் எடுத்தால்
எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவு செய்து இந்த சாதாரண சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் , என்னால் நஷ்டமடைய வேண்டாம்
என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனேன்றால்
இரு நடிகனாக இறப்பதை விட எந்த விதமான மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும் தான் எனக்கு பெருமை, மகிழ்ச்சி.."
நன்றி சத்தியராஜ்.
"பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளி
தான் நான். என் ஒருவனது செயலின் பொருட்டு சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும் பணமும் விரயம்
ஆவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது, கர்நாடக மாநிலத்தில் பாகுபலி இரண்டாம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது'
உண்மைதான் சத்தியராஜ். கர்நாடக மாநிலத்தில் உங்களுக்கு
சொந்தமான எந்த தொலைக்காட்சியும் இல்லை. வணிக வளாகங்கள்
இல்லை, கட்டிடங்கள் இல்லை, தோட்டம் இல்லை, இந்த
மன்னிப்பு முழுக்க முழுக்க உங்கள் பொருட்டு ஒட்டு மொத்த
திரைப்படக்குழுவுக்கும் நஷ்டமோ பிரச்சனையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையின் காரணமாகவே
வந்திருப்பதை உணர்ந்து கொள்கிறோம்.
சூப்பர் சத்தியராஜ். 
நாங்கள் வாழும் காலத்தில் வாழும் தமிழ் நடிகன் நீ என்பதில்
பெருமை அடையும் தருணம் இது.. 
விடை தெரியாத இன்னொரு கேள்வி...
9 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பேசிய பேச்சுக்கான எதிர்வினை
இது என்றால்... இந்த 9 ஆண்டுகளில் உங்களின் எத்தனையோ
 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. கன்னட ரசிகர்களும்
பார்த்திருக்கிறார்கள். ஏன் பாகுபலி 1 கூட வந்தபோது
நடக்காத எதிர்வினை ஏன் இப்போது..?
தமிழ் கலை இலக்கிய உலகில் இனி
 எவனும் இனி வாய் திறந்து மொழி இனம்
குறித்துப் பேசிவிடக்கூடாது என்று யாரோ நினைக்கிறார்கள்..!

Monday, April 17, 2017

கல்லறைகளின் அரசியல்



ஜோதிடர்கள் சுபஹோரைகள் கூடிய சுபதினத்தை
 குறித்துக் கொடுக்கிறார்கள். அந்தநாளில் தான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்
பெண்கள். பிரசவவார்டில் சிசரியன் குழந்தைகள் பிறக்கும்போதே
சுக்கிரதிசையுடன் வளர்பிறையில் பிறக்கின்றன.
பெற்றோர் மட்டுமல்ல, மருத்துவர்களும் செவிலியரும் கூட
மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார்கள்.
ஜனனம் மட்டுமல்ல, மரணத்தையும் சிலருக்காக  சிலர்
தீர்மானிக்கிறார்கள். எந்த மாதம் எந்தநாளில் எப்போது
மூச்சுக்குழாயை இழுத்து மரணத்தை அறிவிக்கலாம் என்பதையும்
ஏற்கனவே தீர்மானித்துவிடுகிறார்கள்
எரிக்கலாமா புதைக்கலாமா
யமுனையிலா கங்கையிலா வற்றிப்போன காவிரியிலா
எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.
கல்லறைக்கான பளிங்குகற்களைக் கூட வாங்கிவைத்துவிடுகிறார்கள்.
இரங்கற்பா முதல் டிவி நிகழ்ச்சிவரை எல்லாம் தொகுக்கப்பட்டு
வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன..
கல்லறைகளின் தலைநகரில் 
புதர்கள் சூழ்ந்து ஆள் அரவமின்றி கிசான்கட்.
கல்லறைகளுக்கும் அரசியல் இருக்கிறது.
பூத உடல்கள் அரசியல் நடத்துகின்றன.
 எரியாதப் பிணங்களை ஆற்றில் தள்ளி
சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கும்
தொண்ணூறு சுடுகாடுகள்
கங்கைக்கரையில் விழித்திருக்கின்றன.
டிசம்பர் 6ல் புத்தனைக் கொலை செய்கிறார்கள்.
சுடலைப்பொடிப் பூசியவன் தோள்மேல் கங்காளத்தின் கண்கள்
கொலைவெறியுடன் கூத்தாடுகின்றன.
கிழக்குமுகமாக அமர்ந்து 12 நாட்கள்  தினமும்  1000 தடவை
மந்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டான் குருபகவான். .
உடல் உயிர் அரசியல்

Thursday, April 13, 2017

அம்பேத்கரின் அவளுக்கு என் நன்றி






அறிவாயுதம் ஏந்திய அண்ணல் அம்பேத்கருக்கு
ஆத்மார்த்த தோழியாய் ஒருத்தி இருந்தாள்.
1920 களில் இலண்டனில் மதிய உணவுக்கு வழியின்றி
 இலண்டன் மியுசியத்தில் தன் பகல் பொழுதை அவர் கழித்த
 அந்த நாட்களில் அவளைச் சந்தித்தார்.
 அவள் பெயர் பிரான்சிஸ் பிட்ஜெரால்ட் (Francis Fritzgerald)
ஹவுஸ் ஆஃப் காமன் அலுவலகத்தில் டைப்பிஸ்டாக
வேலை செய்து கொண்டிருந்தார்.
கணவரை இழந்த அப்பெண்மணிக்கு இரு குழந்தைகள்.
இலண்டன் மியுஸியம் வாசலில் அவர்கள் சந்திப்பு.
அதன் பின் அப்பெண் தன் கடைசி நாட்கள் வரை
அண்ணலை நேசித்தார்.
1923ல் அம்பேத்கர் இந்தியா திரும்பியது முதல் 1943 வரை
 அப்பெண் அம்பேத்கருக்கு எழுதிய 91 கடிதங்கள் .
. அவைப் புத்தகமாக வெளிவருவதில் ஏகப்பட்ட சிக்கல்களும்
குழப்பங்களும். ஆனால் என்னைப் போன்றவர்கள்
குழப்பவாதிகளின் காரணங்களைச் செவிமடுக்க விரும்பவில்லை.

மை டார்லிங் பீம்... என்று ஆரம்பிக்கும் ப்ஃனியின்கடிதங்கள் ..
என் டார்லிங் பீம்...
உன் புகைப்படம் என்னருகில் என் மேசைமீது
ஆனால் எந்தப் பதிலும் சொல்லாமல்
என் முத்தத்தை எனக்குத் திருப்பித் தராமல்..."
அம்பேத்கருக்கு வேண்டிய புத்தகங்களை கப்பலில் அனுப்பி வைத்துக்கொண்டே இருந்த அறிவார்ந்த தோழியாய்..
நட்பின் உன்னதமாய்.. ஆத்மார்த்தமான காதலியாய்
(platonic relationship.) எந்த ஒரு எதிர்பார்ப்புகளும் இன்றி வாழ்ந்து மறைந்திருக்கிறாள்.

இந்துவாகப் பிறந்த நான் ஓர் இந்துவாக இறந்துப்போக மாட்டேன்
என்று அண்ணல் அறிவித்தப்பின் அம்பேத்கரை தேசவிரோதியாக சித்தரித்தார்கள். ஜனவரி 1937ல் அவர் இங்கிலாந்தில் ஒரு விதவையை இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்தியைப் பரப்பினார்கள்! ஆனால் அம்பேத்கர் அப்பெண்ணைத் திருமணம்
செய்து கொள்ளவில்லை. பிரான்சிஸ் எழுதிய கடிதங்களைப் பற்றி அவருடைய வாழ்க்கை வரலாற்றை மராத்தியில் எழுதிய
 கெர்மோடெவிடம் (C B Khairmode) அம்பேத்கர் சொன்ன
வரிகள் தான்  இப்பதிவை எழுதுவதற்கு எனக்குத் துணிவு தந்தது.
.
"நம் மக்களின் ஒழுக்கவியல் கோட்பாடுகள் ரொம்பவும்
 விசித்திரமானவை" என்று சொன்ன
அம்பேத்கர்
 "பிரான்சிஸ் பற்றிப் பேசினால் .. எனக்கு ஆட்சேபனை இல்லை.
இதனால் மக்கள் என்னைப் பற்றி தவறாக நினைக்க கூடும்
என்ற கவலையும் இல்லை"
என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

அறிவாயுதம் ஏந்தி எதிர்நீச்சல் போட்ட ஒரு போராளிக்கு
நட்பும் காதலும் அவன் இளைப்பாறும் நிழலாக
அவனை உயிர்ப்புடம் இயக்கும் ஜீவனாக
யுகம் யுகமாக  தொடர்கிறது.
அத்தொடர் பயணத்தில் பிரான்சிஸ் ஜெரால்ட் 
என்னளவில் ஓர் அற்புதமான பெண்.
அம்பேத்கருக்கு வாய்த்த அறிவான ஸ்நேகிதி.
அண்ணலின் பிறந்தநாளில் அந்த நட்புக்கு தலைவணங்கி..
அவள் வாழ்ந்த திசைநோக்கி கண்ணீருடன் கை கூப்பி..
(venkat shyam ஓவியம். event TOI LIT festival 2016 @Bandra)

Wednesday, April 12, 2017

இன்று அதிமுக ; நாளை திமுக.



இன்று அதிமுக நாளை திமுக
திராவிட அரசியலுக்கு ஓரு சோதனைக்காலம்
மாநில சுயாட்சி என்ற கூட்டாட்சி அரசியலை இந்திய மண்ணில்
டில்லியின் செங்கோட்டை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு
பேசியவர்கள் நாம். திராவிட அரசியலின் மாநிலசுயாட்சி  கொள்கை
இந்திய மண்ணின் மாநில கட்சிகளுக்கான அடிப்படை உரிமை.
இந்திய கூட்டாட்சி முறையின் இன்னொரு விரிவாக்கம்.
ஒரே கட்சி  ஒரே தேசம் ஒற்றை ஆட்சி என்பது இந்திய மண்ணையும்
மனிதர்களையும் வரலாற்று ரீதியாகவும் பூகோள ரீதியாகவும்
அறியாத அரசியல் கட்சிகளின் அதிகார வெறி.
இந்த அதிகார வெறிக்கு இன்று தமிழகம் பலியாடு ஆகிவிட்டது.
ஜெ வின் மரணமும் கலைஞரின் செயல்படா நிலையும்
இன்றைய தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கும் வெற்றிடத்தை
 காற்றாக வந்து நிரப்பிவிட துடிக்கிறது பிஜேபி.
அதற்கு சாதகமாக இருக்கும் எவரையும் தன் வசப்படுத்திக்கொள்ள
துணிகிறது. எப்படியும் பெரும்பான்மை எம் எல் ஏக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் போதும் , அடுத்து தங்கள் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும்
 (ஆட்சியைப் பிடிக்குமா?) என்ற அபரிதமான நம்பிக்கையில்
ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போகிறது திமுகவும்.
இன்றைக்கு ஒரு பெரும்பான்மையான கட்சியின் ஆட்சியை
ஊழல் என்றும் வருமானவரி என்றும் காரணம்காட்டி
கவிழ்த்துவிட்டால் நாளை இதே ஆட்சி கவிழ்ப்புக்கு
 திமுக மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்பதையும்
சேர்த்தே யோசிக்க வேண்டும்.
 இப்படியான ஜனநாயகப் படுகொலையைச்
செய்துவிட்டு ஆட்சிக்கு வருவதை விட
மக்கள் மன்றத்தில் பயணித்து முறையாக
தேர்தலைச் சந்தித்து தங்களால் மீண்டும்
ஆட்சியை அமைக்க முடியும் என்ற
திமுக காட்ட முடியும். திமுக வால் அது முடியும்.
அதற்கான தொண்டர் படையும்
உழைப்பும் ஆள்பலமும் பணபலமும் சகலமும்
திமுகவிடம் இன்னும் குறையாமல் இருக்கிறது.
அதிமுக ஆட்சியை இன்று கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்துவிடலாம்.
ஆனால் அதே ஊழல் வருமானவரியை காரணம் காட்டி திமுகவின் அரசியலையும் பிஜேபி ஒழித்துக்கட்டும்.
அதற்கு வழிவிடப்போகிறார்களா
அல்லது தலைநிமிர்ந்து பிஜேபிக்கு அரசியல் பாடம் நடத்தும்
துணிவுடன்  நிகழ்கால வெற்றிடத்தை அர்த்தமுள்ளதாக
 மாற்றப் போகிறார்களா..?
இன்று அதிமுக. நாளை திமுக.

பிகு: துரைமுருகன் அண்ணாச்சி மற்றும் தமிழிசை அக்கா இருவரும்
உளறுவது போல இருந்தாலும் அவை உளறல்கள் மட்டுமல்ல.
உடையும் ரகசியக் கசிவுகள்.

Monday, April 10, 2017

இது டிரெய்லர் தான்

Image result for modi cartoon
"ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி."
ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால்..
அவ்வளவுதான் ஓபிஎஸ் க்கு மட்டுமா அரோகரா.
எல்லோருக்கும் தான்.
எல்லோரும் மொட்டை அடிச்சி முக்காடு போட்டுக்க
வேண்டியதுதான்.
ஜெ தீபா வெற்றி பெற்றுவிட்டால்
புதுசா இன்னொரு கட்சி  முளைக்கும்..
அரசியல் விளையாட்டு ரொம்பவும் தமாஷா போயிடும். .
ஓபிஏஸ் அணி வெற்றி பெற்றுவிட்டால்
நாங்க தான்  அ அ திமுக - அதாவது
அசல் அதிமுகனு அழிச்சாட்டம்  பண்ணி
உண்டு இல்லைனு இரட்டை இலையை பிச்சி எடுத்திடுவாங்க
. ஸ்டாலின் தலைமையில் திமுக வெற்றி பெற்றுவிட்டால்..
அதிமுக வின் பெரும்பான்மையை தங்களின் இந்த
 ஒற்றை வெற்றியை வைத்து கேலிக்கூத்தாக்கி
இப்பவே ஆட்சியைக் கலைக்கவும் தேர்தல் நடத்தவும்
 என்னவெல்லாம் செய்யமுடியுமே
அதை எல்லாம் டில்லியில் ஷிப்ட் முறையில் போயி வந்து
வந்து போயி  மே மாத வெயிலில் அனைவரையும்
மண்டைக்காய வைத்திருப்பார்கள்.
 ஒருவேளை நம்ம கரகாட்டம் கங்கை அமரன் வெற்றி
பெற்றுவிட்டால் ... அய்யய்யோ
கற்பனை இப்படி எல்லாம் கொஞ்சம் ஓவரா போகக்கூடாதுனு
சொல்றீங்களா..
என்னவொ ... இவர்கள் அனைவருக்கும் வைத்தாரு பாருங்க
மோடிஜி ஒரு ஆப்பு.. பூ னு ஊதித்தள்ளின மாதிரி இருக்கே..
ரொம்ப டேஞ்சரானா ஆளுப்பா மோடிஜி.
இது சும்மா ஒரு டிரெய்லர்தான் !

Thursday, April 6, 2017

GST ஜீ பூம்பா ..


ஒரு தேசம் ஒற்றை வரி
காஷ்மீரும் கன்யாகுமரியும் ஒன்றாகிவிட்டது.. ஆஹா..
தமிழ்நாடும் பீஹாருன் ஒன்றாகிவிட்டது..
GST .. ஜீ பூம்பா.. GST .. ஒரு மந்திரச்சொல்.. 
ஜீ பூம்பா. GST .. GST .. GST ..
இதுதான் தற்போது நம் நாடாளுமன்றத்திலும் மேல்சபையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்
GST .. ஜூலை 1 முதல் அமுலுக்கு வரப்போகும் GST ..
பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிடும் என்றும் 
இடைத்தரகர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் 
ஆகையினால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் 
அன்றாட பொருட்கள் கிடைக்கும் என்றும் மோதி அரசு அலங்காரமான அறிவிப்புகளுடன் தேசம் முழுமைக்குமான ஒற்றை வரி முறையை 
உரக்கப் பேசுகிறது.
ஆனால் இந்தியச் சட்டப்படி இந்தியாவிலிருக்கும் 
அனைத்து மாநிலங்களும் ஒரே வரி விகிதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்
 என்ற கட்டாயமில்லை.
அத்துடன் அரசு வசூலிக்கும் வரிகள் மூன்று வகையாக இருக்கின்றன
நடுவன் அரசு வரி
மாநில அரசு வரி
நடுவண் அரசும் மாநில அரசும் சேர்ந்து வசூலிக்கும் வரி.
இந்த மூன்று முறைகளை எப்படி ஒற்றை வரி முறையில்
 கொண்டுவர இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இதுவரை 
எந்த ஒரு செயல்திட்டமும் அரசு வெளியிடவில்லை.

பொருட்களின் கொள்முதல் விலையை
வியாபாரிகள் அவர்கள் இலாபத்திற்கு ஏற்ப தீர்மானிக்கும் வசதியை வழங்கி இருப்பதால் பொருட்களுக்கான வரி விகிதம் மட்டுமே 
பொருட்களின் விலையை மலிவாக்கும் என்பதும்
 பொதுமக்கள் பலனடைவார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
இவை எல்லாவற்றையும் விட இன்னொரு முக்கியமான கருத்து... 
பரந்த இந்திய தேசத்தின் பூகோள ரீதியான நிலப்பரப்பை
 நடுவண் அரசு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட்டிருப்பது தெரிகிறது.
 அதுவும் குஜராத்தில் முதல்வராக இருந்த மோதி.
 குஜராத்தின் வரி விதிப்பு ஏன் மற்ற மாநிலங்களின் வரி விதிப்பிலிருந்து வேறுபட்டிருக்கிறது என்பதை நன்கு அறிந்தவர்.
அதற்கான அனைத்து காரணங்களும் நிர்வாக ரீதியாகவும் 
அறிந்தவர் தான். இப்போது அவரே சொல்கிறார்... 
குஜராத்தும் அசாமும் ஒன்றுதான்.
மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் ஒன்றுதான் என்று!
அவர் டில்லியிலிருந்து எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும். 
அதை நாம் நம்பியே ஆகவேண்டும்.
(The GST is bound to lead to serious difficulties, and could possibly fail, because it seeks to treat unequal states equally)

இப்படியான ஒற்றை வரிவிதிப்பின் மூலம் மாநில அரசுக்கு ஏற்படும் வரி இழப்பு/ வருவாய் இழப்பை மாநில அரசு எப்படி எதிர்கொள்ளப்போகிறது? மாநில அரசுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குமா என்ன? அதை யார் தீர்மானிப்பார்கள்? வறட்சி நிவாரணத்திற்கே ஆயிரம் ரூபாய்க் கேட்டால் வெறும் ஐம்பது ரூபாயை எடுத்து வீசுகிற மத்திய அரசு மாநில அரசின் வருவாய் இழப்பை எம்மாதிரி அணுகும்?!!
Image result for gst cartoon

இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை.. என்னவோ நடக்குது நடக்கட்டும்.
தற்போது நமக்கும் நம் அரசியல்வாதிகளுக்கும் இருக்கும் மாபெரும் பிரச்சனை
ஆர் கே நகர் தேர்தல் மட்டுமே.. அதுவல்லவா நம் அனைவரின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது!

Tuesday, April 4, 2017

VOTE FOR THE CROOKS

Image result for when crime pays

vote for the crook, its important
குற்றவாளிக்கு- கிரிமினலுக்கு ஓட்டுப் போடுங்கள்.
அது முக்கியம், இன்றைய தேவை என்றெல்லாம் கூட
 பிரச்சாரமே செய்து தேர்தலை சந்தித்த களங்கள்
உலக நாடுகளில் உண்டு.

ROUBA, MASFAZ
HE ROBS, BUT HE GETS THINGS DONE
ரூஃபா.., மஸ்ப்ஃஷ் என்ற போர்ச்சுக்கிசிய சொற்றொடரின் பொருள்
"அவன் திருடுகிறான். ஆனால் காரியங்களை செய்ய வைக்கிறான்"
அதாவது நமக்குப் புரிகிறமாதிரி சொல்ல வேண்டும் என்றால்
லஞ்சம் ஊழல் செய்யும் திருடன். வாங்குகிற லஞ்சத்திற்கு
 ஏமாற்றாமல் வேலையைச் செய்து முடிப்பவன்...
 இப்படியானவர்களை நாம் திறமைசாலிகள், புத்திசாலிகள், பிழைக்கத்தெரிந்தவன் என்றெல்லாம்
சொல்லி பாராட்டுகிறோம். இதை அறிந்த அந்நாட்டின் மேயர்
பவ்லா மாலுஃப் தன் மின்னஞ்சல் முகவரியைக் கூட maluf@masfaz.com
என்று வைத்திருக்கிறார்.
திருடன், கிரிமினல் , குற்றவாளி, ஊழல் செய்தவன்,
 சாராயம் காய்ச்சுபவன், கள்ளக்கடத்தல்காரன்,
 கொலை செய்தவன், எவனாக இருந்தாலும்
ஓட்டு வேட்டையில் வெற்றி பெற முடியும்.
மக்களும் அரசியல் கட்சிகளும் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களாக
ஏன் இம்மாதிரி கிரிமினல் குற்றவாளிகளை தேர்வு செய்கிறார்கள்?
அவர்களும் வெற்றி பெறுவது எப்படி?
மக்கள் அவர்களிடன் நவீன ராபின்குட் அவதாரத்தை
 எதிர்பார்க்கிறார்களா? இது என்னமாதிரி உளவியல்..!
புள்ளிவிவரங்களுடன் உண்மையான தேர்தல் களத்தை
வேட்பாளர்களின் குற்றப்பட்டியலுடன் நம் முன் வைக்கும்
இப்புத்தகம் மக்களாட்சியின் மகத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி
நம்மை கொஞ்சம் பயமுறுத்தி சிந்திக்க வைக்கிறது.
சாராயவியாபாரிகள் எல்லோரும் கல்வித்தந்தைகளான
காலத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.
எனவே நிஜம் நம்மைப் பயமுறுத்துகிறது.
சரி..
இப்படி ஒரு புத்தகத்தை தமிழ்நாட்டு அரசியலை
 மட்டுமே வைத்துக்கொண்டு எழுதினால் ... எப்படி இருக்கும்.?
என்று யோசித்துப் பார்க்கிறேன். ! நீங்களும் கொஞ்சம் கற்பனை
செய்து பாருங்கள்... அடடா...
இனி இறுதியாக ஒரு வரி..
இந்தப் பதிவின் முதல்வரியை ஏடாகூடமா ஆர் கே நகர் தேர்தலோடு
சேர்த்து நீங்கள் வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, April 3, 2017

சோ தர்மனின் சூல்..வெற்றிலைகள்

Image result for சோ தர்மனின் சூல்


சூல் கொண்ட கண்மாய் மீன்கள் துள்ளிக்குதிக்கின்றன.
அந்த கறுத்த பனைமரத்தின் அரசியல் என்னைப் பயமுறுத்துகிறது. 
தொட்டில் கட்டவும் கிளைகள் இல்லாத பனைமர நிழலில் 
என் பிள்ளைகள் காற்றில் தொட்டில் கட்டி
 வெயிலில் உறங்குகிறார்கள்.


ஒரு வாரமாக சூல் கதைப் பாத்திரங்களுடன் நான்.. 
என் நினைவுகள் வாழும் வரை கொப்புளாயி என்னுடன் இருப்பாள் .. 
வெற்றிலையைப் பார்க்கும் போதெல்லாம்
உருளைக்கொடி மகாலிங்கம் பிள்ளையும் தாமிரபரணி நாடாரும் வெற்றிலைக்கொடிக்கருகில் என்னுடன் உரையாடுவார்கள். 
அந்தக் கண்மாயும் நீர்ப்பாய்ச்சியும்
வரலாற்றின் சுவடுகளாய் என் மண்ணின் பெருமையை 
மண்ணை நம்பி வாழ்ந்த எம் மக்களின் மகத்துவத்தை
எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும் .. 
குஞ்ஞான் அரண்மனை சிறையில் அடைக்கப்பட்டு 
சித்தரவதைக்குள்ளாகும் போது சொல்லும் அருள்வாக்குடன்
 சூல் என்னளவில் முடிந்துவிடுகிறது.
அதாவது 406 வது பக்கத்துடன் முடிந்துவிடுகிறது.
 பக் 407 முதல் 500 வரை...? 
சூல் ... .
விமர்சனங்களுக்குரிய பல்வேறு அரசியல் நிகழ்வுகள்
நடைபெற்ற காலக்கட்டத்தில் ஒரே ஒரு தலைவரை மட்டும்
 கதைப் பாத்திரத்துடன் இணைத்து வைத்து
சொல்லப்படும் கிண்டல் -- பக் 459 - இதை வெறும்
உரையாடலாக மட்டும் எண்ணி என்னால்
 கடந்து செல்ல முடியவில்லை. தருமன்...

சூல் கதைமாந்தர்கள் நிஜமானவர்கள். சந்தேகமில்லை.
கொண்டாடப்பட வேண்டிய சம்சாரிகள்.
 ஆனால் இதெல்லாம் சமூகத்தின் ஒரு பக்கம் மட்டும் தான்.
இதையும் தாண்டிய தீண்டாமையும் பெண் அடிமைத்தனமும் 
சாதியமுகமும்
இதே சூல் பிரசவித்த சமூகத்தின் இன்னொரு பக்கம்.
நீர்ப்பாய்ச்சியின் திறமையைக் கொண்டாடும் போது
அதுவே அவனுக்கான தந்தைவழி சொத்தாக அறிவாக
மாற்றம் பெறும் அரசியல் என்னைப் பயமுறுத்துகிறது.

... எல்லோரையும் போல நானும்
 இந்த அரசியல் பார்வைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு..
வாசிக்கப் பழக வேண்டும். 

சூல்... சூல்.. சூல் ..
பனிக்குடம் உடைந்து கண்மாய் எங்கும் தண்ணீர்..
மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.
கரையோரத்தில் பனைமரங்கள்.
தாமிரபரணி என் கனவில் மட்டும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.
என் ஆச்சி வெற்றிலை இடிக்கும் சத்தம்..
சூல்.. கதைமாந்தர்களையும் தாண்டி என்னை
எனக்குள் என் வெற்றிலைகளைத் தேடி பயணிக்க வைத்தது.
 எப்போதாவது தான் வாசிப்பில் இப்படியான அனுபவங்கள் ஏற்படும்.