Wednesday, June 22, 2016

அண்டர்கிரவுண்ட் கூட்டணி



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் திமுக, அதிமுக
இந்த இரு பெரும்கட்சிகளின் எதேச்சதிகாரத்திற்கு
சாமரம் வீசி அரியணையில் ஏற்றி இருக்கிறது.
இந்த இரு பெரும்கட்சிகளும் திராவிட அரசியல் கட்சிகள்
என்று கொண்டாட முடியவில்லை.
இவர்களிடம் திராவிடமும் இல்லை, தந்தை பெரியாரும் இல்லை.

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் என்பது கானல்நீர்தானா?
என்ற கேள்வி இப்போது விசவரூபமெடுக்கிறது.
நீ இருக்கனும்
இல்ல நான் இருக்கனும்
கொடுக்கல் வாங்கல் சண்டை சச்சரவு
கோர்ட் வாய்தா அடிதடி கொலை கொள்ளை
நமக்குள்ள ஆயிரம் இருக்கலாம்
ஆனா .. நம்மள விட்டா ஒரு பய இனி உள்ளே
வந்திடப்பிடாது... ஆமா சொல்லிப்பிட்டேன்.

அடடா... எனக்கென்னவோ .. இப்படி ஒரு அண்டர்கிரவுண்ட் கூட்டணி
செமையா வேலை பார்த்திருக்கிறது என்ற எண்ணம் வருகிறது.
எம்ஜியார் ஆட்சியில் இருந்தப்போது...
சூட்கேஸ் வந்தா .. கொண்டுவந்தவரிடம் கேட்பாராம்..
கோபாலபுரத்திற்கு போயிடுச்சா னு.
ஆளும்கட்சிக்கு இத்தனை விழுக்காடு பங்கு
எதிர்க்கட்சிக்கு இத்தனை விழுககாடு பங்கு என்று
உடன்படிக்கை இருக்கிறது .
இந்த தேர்தல் முடிவுகளை ஆழ்ந்து கவனித்தால்
அச்சம் ஏற்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் தமிழக அரசியலில்
ஜனநாயகத்தை கொலை செய்து புதைத்துவிட்டன.

தமிழ்த்தேசியம் கேள்விக்குரியதாகிவிட்டது மட்டுமல்ல
கேலிக்குரியதாகவும் ஆகிவிட்டது.
இது ஏன்? என்று யோசித்தாக வேண்டும்.
அதுவும் ஈழ அரசியலுடன் இணைத்து தமிழ்த்தேசிய அரசியலை
பார்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.
தலித் அரசியல் நீர்த்துப் போய்விட்டதா..?
என்ற கனமான கேள்வி எழுகிறது.
தொல். திருமா, சிவகாமி, டாக்டர்  கிருஷணசுவாமி மூவருமே
இத்தேர்தலில் மிகவும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்
வெற்றியை இழந்திருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான
களத்தில் நின்றவர்கள் இவர்கள். இவர்களை ஒதுக்கிவிட்டு
அதே தொகுதிகளில் (ரிசர்வ் தொகுதிகள்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்
வேட்பாளர்களும் ஒடுக்கப்பட்டவர்கள் தான் என்று பார்த்தால்
இந்த அரசியல் களத்தில் தனக்கென தனி அடையாளம் இல்லாத
முழுக்கவும் சார்பு நிலை கொண்டவர்களை ம்ட்டுமே
தனித்தொகுதிக்கான தவப்புதல்வர்களாக முடியும் என்று
காட்டி இருக்கிறது. இதுவும் ஒருவகையில் தனித்தொகுதி
என்ற சலுகையை கேலிக்குரியதாக்கிவிட்டது.
தலித் அரசியல் பேசினால் இடமில்லை.
இரு பெரும் கட்சிகளின் எடுபிடிகளாக இருந்தால் மட்டுமே
அரசியல் களத்தில் தலித் அரசியல் சாத்தியப்படும் என்பதை
இம்முடிவுகள் மூலம் உணர்த்தி இருக்கிறது இந்த இருபெரும்
கட்சிகள். தலித்திய அரசியல் களத்தில் இருப்பவர்கள்
இது குறித்து என்ன முடிவு செய்திருக்கிறார்கள்?
நாலு எருதுகளும் இரண்டு ஓநாய்களும் கதை எழுதவேண்டும்.

களப்பணியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் பொதுவுடமை
இயக்கத் தோழர்கள் இத்தேர்தல் முடிவுகளை
"பண நாயகம் வெற்றி பெற்றது"
என்று மட்டுமே சொல்லி நகர்ந்துவிடும் கொடுமை..
சிறுதுளி நம்பிக்கையையும் நீர்த்துப்போகச்செய்கிறது.

அரசியலில் வெற்றி தோல்வி என்பது ஒரு பாடம்.
அதைப் பாடமாக கற்று தேர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு
யார் நகரப்போகிறார்கள்?

.

Monday, June 20, 2016

கூத்துக்காரனின் கவிதைமொழி



"தாண்டுகால்" கவிதை தொகுப்பு என் வாசிப்புக்கு வந்து சில
மாதங்கள் கடந்துவிட்டன. கவிதை எழுதிய தவசிக்கருப்பசாமி தான்
நான் அறிந்த தம்பி ஹரி கிருஷ்ணன் என்பதைப் புரிந்து கொள்ள
என் மரமண்டைக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.
இரு நாட்களுக்கு முன் ஹரி என்னுடன் பேசினார்.
அவருடைய கவிதைகளை வாசித்தவர்கள் " நீ இனிமேல்
கவிதை எழதவேண்டாம்" என்று சொன்னார்களாம்!! ஆம்
சொன்னார்களாம்.!!
நீங்க வாசித்தீர்களா , எதுவுமே சொல்லவில்லையே! என்று இரு
தினங்களுக்கு முன் அவர் என்னிடம் கேட்டார். அறிந்தப்பெயரும்
அறியாத பெயரும் ஏற்படுத்திய குழப்பத்தை அவரிடம் சொல்லி
ரசித்தேன். எவரெல்லாம் அவரை கவிதை எழுதவேண்டாம் என்று
சொன்னார்கள் என்று அவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாகவும்
அருவெறுப்பாகவும் இருந்தது.

"கவிதை என்ன இவனுகளுக்கு பட்டா போட்டு எழுதிக்கொடுத்த
சொத்தா?"
இவனுகளின் மொழி தான் வசீகரமானதா?
கவிதையை ஒளிவட்டமாக தலையில் தூக்கி சுமந்துக்கொண்டு
அலையும் இந்த விருது சிகாமணிகளுக்கு
தாண்டுகால் மொழி நிச்சயமாக மிரள வைத்திருக்கும்.
அந்த மிரட்சியில் அரண்டு போய் அந்தக் கவிதா
சிகாமணிகள் அலறுகிறார்கள் ..
கூத்துக்காரனின் மொழி தமிழ்மொழி இல்லையா?
இவனுகளைப் போல கொஞ்சம் கொஞ்சும் சமஸ்கிருத
வார்த்தையைக் க்லந்து கவிதை எழுதிவிட்டால்
தமிழின் செம்மொழி அந்தஸ்த்து பாதுகாக்கப்படுமா என்ன?
சற்றொப்ப் (1500 ஆண்டுகள்) சில நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழ் மண்ணை தமிழன் ஆளவில்லை.
தமிழ்க்கவிதையின் ஆணிவேரை தன் கூத்துகளில்
மறையாது பறை அடித்து முழங்கிக்கொண்டிருந்தவன்
இவர்கள் விமர்சிக்கும் இந்தக் கூத்துக்கவிதைககாரன் தான்.
என்னடா நியாயம் இது?
கவிதை நீதிமன்றத்தில் இவனுகளை எவண்டா நீதியரசர்களாக
நியமித்தது? !!

ஹரி.. உனக்குத் தெரியுமா.. மராத்தி மொழியில்
நாம்தேவ் தாசல் என்ற புகழ்பெற்ற கவிஞ்ருக்கும்
இதே நிலை ஏற்பட்டது.
"மொழியின் அந்தரங்க உறுப்பில்
நான்
பால்வினை வியாதியின் ஆறாதப் புண்."
என்ற அவன் வரிகளில் அதிர்ந்துப்போனது மராத்தி இலக்கிய உலகம்.
இன்றுவரை அந்த அதிர்ச்சி அலைகள் ஓயவில்லை.
ஆனால் நாம்தேவ் தாசலின் மொழி ஆளூமையை
எவராலும் எட்டமுடியவில்லை.

தாண்டுகால் தொகுப்பிலிருந்து..

"ஓடிப்போன பதினேழு வயசுக்கரியைத்
தேடி மீட்டுக்கொண்டு வந்தாயிற்று.
அடி அதிரசம் குத்து கொளுக்கட்டை
வாலிபத்திற் கிட்டாத வாய்ப்பையெண்ணி
உடனமர் காதலனை காரில் வைத்துப்போர்த்தியதில்
நிபந்தனையற்ற கெட்டியன்பு நீர்த்துப்பின் விட்டோடி நீங்கியது.
பரம்பரை மானம் சொல்லி கயிறுப்பிடித்துக் கூத்தாட்டும்
மசிர்பொசுங்க சாம்பலைத் தேய்த்தோ
உசிர் கருக உறுப்பில் சூடிழுத்தோ
பிறந்த ஒழுக்கமற்ற அரும்பாவியை உய்விக்காதா
மனுஷஞ் செத்தாலும் நாயம் சாகப்பிடாது.

----

பெண்ணியம் பேசும் ஆண்களை விட ஆண் பெண் உறவில்
ஆணின் அவஸ்தைகளை வெளிப்படையாக சொல்லவரும்
ஆண்கள் நம்பிக்கையானவர்கள். உண்மையானவர்கள் என்பதால்.!
சிலர் அந்த உண்மைகளை வெளிப்படையாக
பேசினாலும் எழுத்தில் பதிவு செய்வதில் தயக்கம் காட்டுவதை
அறிவேன்.. காரணம் தங்களை முற்போக்காளர்
பட்டியலில் இருந்து நீக்கிவிடுவார்களொ என்ற அச்சம்தான்!
ஆனால் ஹரி எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
தொலைபேசியில் பேசும்போது இப்படியும் கூட பெண்கள்
இருக்கிறார்கள் என்பதைச் சொல்லுவார்,.

என்றைக்கு  நம் வீட்டு படுக்கை அறையில்
தொலைக்காட்சி பெட்டி ஓரிடத்தைப் பெற்றுவிட்டதோ
அன்றே வாழ்க்கை நுகர் கலாச்சாரமாகிவிட்டது.
பெண்கள் நுகர்ப்பொருட்கள் அல்ல என்ற விழிப்புணர்வு
இருக்கும் பெண்களிடமும் கூட உலகச்சந்தையும்
விளம்பர உலகமும் மயக்கத்தை ஏற்படுத்திவிடும்
உண்மையை இனியும் நாம் மறைக்க வேண்டியதில்லை.
இந்தப் பின்புலத்தில் தான் கீழ்க்கண்ட இக்கவிதை என் கவனத்தை
ஈர்த்திருக்கிறது

குடலைப் பிடுங்கிக் காட்டினாலும்
வாழை நாரேங்கிறவாள் வாய்த்தாளெனக்கு.
காதல் கடிமணம் கரைந்தது பணம்
மகன் பிறந்து அப்பாவென விளித்ததொன்றுதான் சாக்கு
வரதட்சணை புகார் கொடுத்து ஓடிப்போனவள் மீண்டுத் திரும்ப
புருஷன் நான் கூடிக்கொண்டேன்.
ரத்தினப்பிரகாசத்துடன் பத்துவிரற் மோதிரம் தரித்தேன்
உடமை மேலுடமை சேர்த்து உபரியை பதுக்கியும் வைத்தேன்.
லாரியை நான் பார்த்துக்கொள்கிறேன்
அவளை யோனர் பராமரிக்கிறார்
மண்ணு திங்கற பண்டத்த மனுஷன் தின்னாலென்ன.

(தாண்டுகால் கவிதை தொகுப்பு வெளியீடு
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்.)

Wednesday, June 8, 2016

தமிழினத்துரோகி


நீங்கள் திமுக குடும்ப ஆட்சியை ஆதரிக்கவில்லையா?
நீங்கள் திமுகவின் நிரந்தர தலைவர் திருவாரூர் மு. கருணாநிதியை தமிழினத்தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையா?
அப்படியானால் -
நீங்கள் தமிழ் அறியாதவர்.
தமிழகம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது.
தமிழ் இலக்கியம் பற்றி பேசும் தகுதி உங்களுக்கில்லை.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
இதற்கும் ஒரு படி மேலே போய் நீங்கள் அதிமுக தலைவர்
செல்வி ஜெயலலிதாவை ஏதாவது காரணங்களால் ஆதரிப்பவரா..?
போச்சு.. !போச்சு..!! எல்லாம் போச்சு.!!!
அப்படியானால்-
நீங்கள் மிகவும் பிற்போக்கானவர்.
முற்போக்கு சிந்தனைகளுக்கு எதிரானவர்.
இன்னும் சிலரின் பார்வையில் நீங்கள் பார்ப்பன அடிவருடி.
மொத்தத்தில் நீங்கள் தமிழினத்துரோகி.
அடடா.. என் தமிழினமே
உன் இன அடையாளம் இப்படியா சுருங்கிப்போகவேண்டும்?!!..
(இம்மாதிரியான விமர்சனங்களை முன்வைக்கும்
 பிரபலமான எழுத்தாளர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்)

Tuesday, June 7, 2016

அம்ரிதா ப்ரிதம்






வாரத்தில் ஒரு முறையாவது அம்ரிதா ப்ரிதம் வாசிக்கவிட்டால்
என்னவோ பித்துப்பிடித்த மாதிரி இருக்கும்.
என்னை வசீகரித்த அந்த எழுத்துகள்.. 
இதோ இந்த நிமிடத்திலும் என்னால் அவளுடைய
ஒரு வரியைக் கூட எழுதிவிட முடியாது.
என் மீள் மீள் வாசிப்புகளில் அவள்
என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு சிகிரெட் துண்டுகளை விட்டுச்சென்ற ஷாகிர்
எனக்கு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறான்.
ஜீவராசிகள் வாழ்வதற்கு காற்று இருக்கும்வரை
பூமியில் எதுவும் வெற்றிடமில்லை என்பது மட்டும்தான்
இத்தருணத்தில் ஆறுதல் தரும் உண்மையாக
அணைத்துக்கொள்கிறது.
அந்தக் கடைசிக்க்டிதத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.
அதை வாசிக்கப்போகிறேனா
எழுதப்போகிறேனா
காலம் இன்னும் முடிவுசெய்யவில்லை.
------
Amrita Pritam
i
There was a pain
That like cigarettes
I inhaled quietly
Just a few poems remain
That I flicked along
With ash from the
Cigarettes

Monday, June 6, 2016

மழைக்கவிதை




குடைகள் விரிவதற்கு தயாராகிவிட்டன..
மழைக்கால காலணிகள் வாங்கியாகிவிட்டது.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி
வேகமாக நடக்கிறது.
தண்டவாளங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை
அவசரமாக அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்
அப்பளமும் வடகமும்
டப்பாக்களில் பொரிவதற்கு காத்திருக்கின்றன.
கோபுரத்தில் விழுந்த காக்கையின் எச்சத்திலிருந்து
ஆலமரத்தின் விதை முளைவிட விழித்திருக்கிறது...
புழுக்கம் தாளாமல் புறாக்கள்
தனித்தனியாக பெருமூச்சில்.
இன்றொ நாளையோ
இன்னும் இருபத்திநாலு மணிநேரத்தில்
மழை வந்துவிடும்.
அறிவித்துவிட்டார்கள் அவர்கள்.
படபடப்புடன் கண்ணாடி சன்னலைத் திறக்கிறேன்.
சூல்கொண்ட கருமேகங்கள் மெல்ல அசைகின்றன.
தொட்டில் அழுகிறது
அணுகுண்டுகள் துளைத்த என் பூமியில்
பூக்கள் பூக்காவிட்டாலும் பரவாயில்லை.
புல் முளைக்குமா .,,?.
காத்திருக்கின்றன  என் கவிதைகள்

Tuesday, May 31, 2016

கவிதை கொலை







கூப்பிடு தூரத்தில் இனப்படுகொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் பாரட்டினீர்கள்
பக்கத்து ஊரில் கவுரவக்கொலை
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்.
நீங்கள் கொண்டாடினீர்கள்
ஊரெல்லாம் வெள்ளக்காடு
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் லைக் போட்டீர்கள்
தலைவர் அகாலமரணம்
அவன் கவிதை எழுதிக்கொண்டிருந்தான்
நீங்கள் ஆஹா என்றீர்கள்
நேற்று அவன் கொலை செய்யப்பட்டான்
துப்பு துலக்கியதில் 
கவிதை அவனைச் சிறுக சிறுக
விஷம் கொடுத்து கொலை செய்தது
கண்டுபிடிக்கப்பட்டது.
நீங்கள் வேறோரு கவிஞனைப் பாராட்டுவதற்கு
புறப்பட்டுவிட்டீர்கள்.

Sunday, May 29, 2016

ஹிரோசிமாவில் ஓபாமா






அமெரிக்க அதிபர் ஓபாமாவின் ஜப்பான்  ஹிரோசிமா பயணம்
உலக அரங்கில் அதிர்ச்சி கலந்த ஆர்வத்துடன் கவனிக்கப்பட்டது.
71 வருடங்களுக்கு முன் இரண்டாம் உலகப்போரின் எந்த மண்ணில்
அமெரிக்க போர்விமானம் அணுகுண்டு போட்டு (ஆக 6, 1945 காலை 8.30
மணியளவில்) இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததோ
அந்த மண்ணில் அதே நினைவிடத்தில் ஓபாமா பேசினார்.
அதிலும் குறிப்பாக அணுகுண்டு வீசியதில் தப்பித்து இன்று
உயிருடன் வாழும் ஜப்பானியர்களையும் (மே, 27)சந்தித்தார்.
நெகிழ்வாக  இருந்தது அக்காட்சிகள்.
வருத்தப்பட்டாரே தவிர தங்கள் போர்விமான தாக்குதலுக்காக
ஒபாமா மன்னிப்பு கேட்கவில்லை! அதை ஜப்பானியர்கள் எதிர்பார்க்கவும்
இல்லை என்பது கூடுதல் தகவல்.

At Hiroshima Memorial, Obama Says Nuclear Arms Require ‘Moral Revolution’

Obama in Hiroshima calls for 'world without nuclear weapons'

ஓபாமா  ஜப்பான் மண்ணில் "அணு ஆயுதங்களில்லாத
உலகம் " பற்றி பேசியது கேட்க நன்றாக இருந்தாலும்
பெரிய அண்ணன் , ஆயுத விற்பனை அதிகாரி,
அமெரிக்க அதிபர் அதைப் பற்றி பேசும்போது
நெருடலாக இருக்கிறது.

Monday, May 23, 2016

புரட்சிதலைவி முதல் "அம்மா" வரை

 
புரட்சிதலைவி , "அம்மா" ஆனது தற்செயலானதா?
அல்லது திட்டமிடப்பட்டதா..?

எம் ஜி ஆர் அவர்களை புரட்சிதலைவர் என்று கொண்டாடியவர்கள்
செல்வி ஜெயலலிதாவை புரட்சிதலைவி என்று கொண்டாடினார்கள்.
புரட்சிதலைவர் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் சொல்
புரட்சிதலைவி.
புரட்சிதலைவி இன்று "அமமா" என்றழைக்கப்படுகிறார்.
அம்மா என்று கொண்டாடப்படுகிறார்.


எம் ஜி ஆரால் அரசியலுக்கு அறிமுகமானவர் ஜெயலலிதா.
எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக எம் ஜி ஆருக்குப் பின்
அதிமுக தொண்டர்கள் ஜெ வை ஏற்றுக்கொண்டார்கள்.
இன்று எம் ஜி ஆர் என்ற பிரம்மாண்டத்தையும் தாண்டி
ஜெ என்ற "அம்மா" தன் தடம் பதித்திருக்கிறார்.
ஓர் ஆளும் கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சி அமைத்திருக்கிறது தமிழகத்தில்.
எவ்விதமான அனுதாப அலையோ அதிர்ச்சி அலையோ
இல்லாமல் தமிழக அரசியலில் இதை சாதித்துக்காட்டி
இருக்கிறார் ஜெ.
அவர் கடந்து வந்தப் பாதை..
ஒரு பெண்ணின் அரசியல் வெற்றி..
அவ்வளவு எளிதானதாக அவருக்கு வாய்க்கவில்லை.

அதிகம் படித்தப் பெண்கள், வாசந்தி போன்ற எழுத்தாளர்கள் கூட
ஜெ பற்றி சொல்லும் கருத்துகள் ஆணாதிக்க சிந்தனையின்
வெளிப்படாகவே இருக்கின்றன.

ஆண் – பெண் உறவில் திருமணம் என்ற சமூகம் அங்கீகரித்த
ஓர் உறவிலிருந்து விலகி / விலக்கப்பட்ட ஒரு பெண்
நல்ல பெண்ணாக இருக்க வேண்டும் என்றால் அவள்
கட்டாயம் மாசற்ற கன்னிப்பெண்ணாக மட்டுமே இருந்தாக வேண்டும்
 என்ற ஆணாதிக்க மரபு சிந்தனைதான் வாசந்தி அவர்கள் ஜெ குறித்த சொன்ன
அந்த விமர்சன வரிகள்..
(She , (ஜெ)  wants to project herself as the Immaculate Virgin. She is Amma.)
(இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்)


மக்கள் திலகம் எம்ஜியாரின் அரசியல் வாரிசு, எம்ஜியார்
விரும்பிய பெண், ஏம் அவருடைய காதலி.. , சின்னவீடு..
.. இப்படி ஏதோ ஒன்றாகத்தான் ஜெ ஆரம்பகாலங்களில்
பெண்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார்.
எம்ஜிஆர் மீது இந்தப் பெண்கள் கொண்டிருந்த அதீத ஆசையும்
விருப்பமும் எம்ஜிஆர் என்ற ஆண்மீது குற்றம் காணாது,
அவர் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் இடம் பிடித்த
ஜெ என்ற பெண்ணை அப்படியே சுவீகரித்துக்கொண்டது.
அந்தப் பெண்கள் கூட்டத்தை தன் ஓட்டு வங்கிக்காக
ஜெ அப்படியே தக்க வைத்துக்கொண்டார், ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக.

ஜெ வின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இணைத்துப் பேசப்பட்ட
எம்ஜிஆரின் மரணத்தில், அந்த இறுதி ஊர்வலத்தின் போது
கூட்டத்திலிருந்த அனைவரும் பார்க்க அவர் பலவந்தமாக
இறுதியாத்திரைக்குப் புறப்பட்ட ஊர்தியிலிருந்து இறக்கப்பட்டார்.
அவர் திரைப்படங்களில் நடித்த எந்த ஒரு காட்சியையும் விட
மிகவும் உருக்கமாக இருந்த ஒரு காட்சி அதுதான்.
அப்போது ஜெவுக்காக பரிந்துப் பேசவோ ஆதரிக்கவோ அக்கூட்டத்தில்
யாருமில்லை. ஜெ என்ற ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணுடன் இருந்தஉறவு / நட்பு
 கீழ்த்தரமாக பார்க்கப்பட்டது. அத்துடன் தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக இருந்த
மூப்பனார் போன்றவர்கள் ஜெ வை ஓர் அரசியல் தலைவராகக் கூட வேண்டாம்,
ஓர் அரசியல் இயக்கத்தைச் சார்ந்தவராகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
 மூப்பனாரைப் பொறுத்தவரை ஜெ என்றுமே ஒரு சினிமா நடிகை, அவ்வளவுதான்.
ஒரு சினிமா நடிகரை அரசியல் தலைவராக ஏற்றுக்கொள்வதில் எவ்விதமான
உறுத்தல்களும் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் அதுவே ஒரு நடிகை
என்று வந்துவிட்டால், நடிகை எல்லாம் அரசியல் தலைவராக வரலாமா?
 என்ற ஆதிக்க மனப்பான்மை அரசியல் கூடாரங்கள் எங்கும் இருக்கிறது.
 இன்றும் கூட ஓட்டு வாங்குவதற்கு , மிஞ்சிப் போனால் பாராளுமன்றத்தில்
 எதுவுமே பேசாமல் இருக்கிறமாதிரி ஒன்றிரண்டு திரைப்பட நடிகைகள்,
 குறிப்பாக ரிடையர்ட் நடிகைகள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள்.
ஆனால் அரசியல் தலைவராக அல்ல! என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


அரசியலின் இச்சூழலில் தான் ஜெ நம் சமூகத்தில் விலக்கப்பட்ட
அனைத்து அடையாளங்களுடனும் ஓர் அரசியல் தலைவராக்
நுழைகிறார். அரசியலின் இந்த அகம் அறியாதவர் அல்ல ஜெ.
மிகவும் நன்றாக அறிந்தவர்தான்.


புரட்சித்தலைவி என்ற அடையாளத்துடன் நுழைந்த ஜெ அதே தொடர முடியவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அம்மா என்ற சொல்லை விட
 புரட்சித்தலைவி என்ற சொல் உலக அரசியலின் அடையாளத்துடன்
ஒத்துப்போகும் சொல். கலகக்குரலின் அடையாளம். ஆனால்..அதைத் தொடர்வதில்
 அல்லது அந்த அடையாளத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்வதில்
ஜெ வுக்கு சிக்கல்கள் பல இருந்தன.
அதற்கும் இந்த சமூகத்தின் ஆண்-பெண் உறவுச்சிக்கலே முதன்மையான காரணமாக இருந்தது.

எம்ஜிஆர் அவர்கள் இன்றும் புரட்சித்தலைவர் என்றழைக்கப்படுகிறார்.
புரட்சித்தலைவர் என்ற ஆண்பாலின் பெண்பால் சொல் புரட்சித்தலைவி.
இந்தச் சொல் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் என்ற ஆண்மகனுடன்
 ஜெ என்ற பெண்ணுக்கிருந்த இச்சமூகம் அங்கீகாரம் தாராத
ஒரு அடையாளத்தை மட்டுமே சுமந்து நிற்கும்.
அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை.!

இக்காலக்கட்டத்தில் தான் ரொம்பவும் தற்செயலாக
வந்துசேர்கிறது “அம்மா” என்ற அடையாளம்.

புரட்சித்தலைவி”அம்மா” என்ற அடையாள வட்டத்தில் வந்ததன்
 உளவியல் இப்படித்தான் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழ் நாட்டில் எந்த ஒரு பெண்ணையும் அம்மா என்று அழைக்கும்
வழக்கமும் உண்டு.
அந்த வழக்கம் ஜெ விசயத்தில் மரியாதைக்குரிய மேடம் என்ற சொல்லின்
தமிழாக்கமாக பயன்பாட்டுக்கு வந்தது.
அதையே ஜெ தன் வசதிக்காக தொடர்ந்தார்.
ஏன் என்றால் எம்ஜிஆர் என்ற ஆணுடனான உறவு
 வெளிப்படையாக தெரிந்த உறவாக இருந்தாலும்
அதில் ஒரு நவயுக பாஞ்சாலியாகக்கூட அவரால் பெருமைப்பட்டுக் கொள்ள முடியவில்லை.
பாஞ்சாலியைக் கூட மகாகவி பாரதி வழியாக கொண்டாடிய
இந்த தமிழ்ச்சமூகம் ஜெ வைக் கொண்டாடுவது என்பது அரிது என்பதை அவர் அறிவார்.

 என் மகளின் தாயார் இவர் என்று தன் மனைவி உயிருடன் இருக்கும் போதே
இன்னொரு பெண்ணை அடையாளம் காட்டுபவரையும் தலைவராக ஏற்றுக்கொண்ட
 தமிழ்ச்சமூகம் ஜெ என்ற பெண்ணை அப்படி ஏற்றுக்கொள்ளாது.
இந்த ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியல் அதிகார மையத்தில்
 ஒரு பெண்ணாக அவர் கடந்து வந்தப் பாதையில் “அம்மா” என்ற சொல்
அவருக்கு ஒரு கவசமாக இருந்தது.
அந்தக் கவசத்தை அவர் தனக்கு முற்றிலும் பொருத்தமாக்கி கொள்ள
 அவருடைய வயதும் கூட ஒத்துழைத்தது.


தந்தை பெரியாரை விட்டு விலகி வந்த திமுகவும் சரி,
திமுகவிலிருந்து பிரிந்து வந்த அதிமுகவும் சரி,
தங்களுக்கு என்று எந்த அரசியல் சித்தாந்தத்தை தனியாக வளர்த்தெடுத்தார்கள்
என்பது இன்றுவரை கேள்விக்குறி தான். ஆனால் அடையாள  அரசியலை வளர்த்தெடுத்ததில்
திமுகவின் வழியையே அதிமுக வும் பின்பற்றியது.
இரு கட்சிகளும் சித்தாந்த ரீதியாக அரசியல் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்குப் பதிலாக உணர்ச்சி அரசியல் உத்திகளைப் பயன்படுத்தினார்கள்.
திமுகவின் தலைவர் “அண்ணா” என்றானப் பின்
அவர் தொண்டர்கள் அனைவரும் அவர்மீது கேள்விக்கு அப்பாற்பட்ட
 பாசங்கொண்ட தம்பியராக மாறினார்கள்.
அரசியல் பாடங்களை “தம்பிக்கு” எழுதிய கடிதங்கள் மூலம் நடத்தினார் அண்ணா அவர்கள்.
அவருக்குப் பின் திமுக அரசியலில் தலைமைப் பொறுப்புக்கு
வந்த கருணாநிதி அவர்கள் “கலைஞர்” ஆனார்.
அவர் தன் தொண்டர்களை “உடன்பிறப்பே” என்று விழித்தார்.
அவரிடமிருந்துப் பிரிந்த எம்ஜிஆரும் உடன்பிறப்பின்
இன்னொரு நாடக வசனமான ” என் ரத்தத்தின் ரத்தமே” என்று ஆரம்பித்தார்
இந்த வழியில் வந்த ஜெ அவர்கள் இவர்கள் அனைவரையும்
மிஞ்சிய இடம் தான் இந்த ” அம்மா” என்ற அவதாரம்!

திராவிட சமுதாய வரலாற்றில் இந்த “அம்மா” என்ற உறவுக்கு
நீண்ட நெடிய வரலாறு, மரியாதைக்குரிய இடம் உண்டு.

திராவிட சமூகம் தாய்வழிச் சமூகம். தாயைக் கொண்டாடிய சமூகம்.
தமிழர்களின் கடவுளான குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் குமரன்.
இந்தக் குமரனின் தாய் குமரி. கன்னியாகுமரியில் வீற்றிருக்கும்
 அம்மன் குமரி தான். குமரன் என்ற ஆண்பாலுக்கு இணையான பெண்பால் குமரி,
 குமரனின் காதலியோ மனைவியோ அல்ல. அவன் தாய், குமரனின் அம்மா…
இப்படிப் போகிறது தமிழ்ச் சமூகத்தின் தொல்லியல் கதை.
தமிழ்ச்சமூகத்தின் தாய்வழி உறவை,
அந்த உறவின் அடையாளமான “அம்மா” என்ற சொல்லை
ஜெ தன் அடையாளமாகக் காட்டும் போது,
இதுவரை ஜெ என்ற பெண்ணின் மீது வீசப்பட்ட கறைகள் தானாகவே
மறைந்துவிடுகின்றன.
ஆண் பெண் உறவில் பாலியல் தொடர்பை விலக்கிய ஒரே சொல் “அம்மா” என்ற சொல் தான்.

அடையாள அரசியலையும் தன் தொண்டர்களை வெறும் உணர்ச்சி விலங்குகளாக
மட்டுமே வைத்திருப்பதையும் வளர்த்தெடுத்த திராவிட அரசியலில்
காலம் ஜெ வின் மடியில் போட்ட “அம்மா” என்ற சொல் அவருக்கு கிடைத்த வரம்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் அந்தச் சொல் தாங்கள் வளர்த்தெடுத்த
உணர்ச்சி அரசியலின் உச்சம் என்பதையும் அச்சொல்லின் கனத்தையும் வீரியத்தையும்
திராவிட அரசியல் நன்கு உணர்ந்தது. அதை உடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல
என்பதையும் ஜெ வின் அரசியல் எதிரிகள் உணர்ந்தார்கள்.
ஜெ அடுக்கடுக்காக கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள்
“அம்மா ஜெ”வின் பிம்பத்திற்கு ஏற்படுத்திய தாக்கத்தை தமிழகம் உணர்ந்தது.
 நிழல் அம்மா, அரசியல் அம்மா , வறிய மக்களின் வாழ்க்கையில்
 நிஜ அம்மாவாக மாறிக்கொண்டு வந்தார்.
ஜெ வின் அரசியல் எதிரிகளை ரொம்பவும் பயமுறுத்திய இடம் இதுதான்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இம்மாதிரியான
ஓர் உணர்ச்சி உத்திகளின் அரசியல் காட்சிகள் அரங்கேறியதே இல்லை.
இக்காட்சிகள் தமிழகத்திற்கான சிறப்பு காட்சிகளாகவே இருக்கின்றன.
இந்த உணர்ச்சி உத்திகளைக் கையாளாத எந்த ஓர் அரசியல் கட்சியும்
 இந்த தமிழ் மண்ணில் கடை விரித்தால் வியாபாரம் செய்ய முடியாது
என்கிற நிலைக்கு இன்று வந்துவிட்டது. இதனால் தானோ
என்னவோ களப்பணியில் இன்றுவரை தங்களுக்கு என்று
ஒரு தனி அடையாளத்தை வைத்திருக்கும்
 இடதுசாரிகளாலும் தமிழ்நாட்டில் அரசியல் தேர்தல் தேர்வுகளில்
 பாஸ் பண்ணக்கூட முடியவில்லை.

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பார்கள்.
தமிழக உணர்ச்சி அரசியலில் "அம்மா" என்ற ஆயுதம்
அதை மிக வலுவாக செய்து காட்டி இருக்கிறது.
ஜெ வின் ஓட்டுவங்கியில் பெரும்பான்மையாக இருக்கும்
பெண்களுக்கு "ஜெ" வின் கடந்தகாலமோ அல்லது
ஜெ குறித்த கதைகளோ பேசப்படுவது கண்டு அவர்மீது
வெறுப்பு வருவதில்லை. மாறாக அவர்மீது அனுதாபம்
ஏற்படுகிறது. ஜெ மீது அவதூறுகள் சுமத்தப்படும் போதெல்லாம்
அப்பெண்கள் "அம்மா" என்ற பிம்பத்தின் மீது விழும்
எச்சிலாகவே அதைப் பார்க்கிறார்கள். துப்பியவனைக் கண்டிக்கவும்
தண்டிக்கவும் தங்களுக்கு தெரிந்த ஏதொ ஒரு முறையைக் கையாளுகிறார்கள்.

ஜெ என்ற பெண்ணை ஒரு பெண் என்ற பால் அடையாளம் தவிர்த்து
ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, தமிழத்தின் முதல்வராக மட்டுமே
விமர்சிக்க வேண்டும். அப்படியான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை
மட்டுமே இனி எதிர்காலத்தில் சிலரின் அரசியல் வாழ்வுக்கு
துணை நிற்கும்.

ஓர் அரசியல் சாதனையை ஏற்படுத்தி இருக்கும் "அம்மா"விடமிருந்து
ஆக்கப்பூர்வமான மக்கள் ந்லத்திட்டங்களை, செயல்பாடுகளை
எதிர்பார்க்கிறார்கள் அவ்ருக்கு ஓட்டுப்போட்டவர்களும் ,
என்னைப் போன்றவர்களும்.

Thursday, May 12, 2016

மின்பற்றாக்குறையா அல்லது மின் ஊழலா..?




காற்றில் ஊழல், தண்ணீரில் ஊழல், மின்சாரத்தில் ஊழல்.
இந்த ஊழல்களிலும பங்குதாரர்கள் தனியார் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும்.
சந்தைப்பொருட்கள் அனைத்திற்கும் சந்தை விலை உண்டு. அந்த விலையை நிர்ணயித்துவிட்டு அதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை கொடுத்து தனியாரிடமிருந்து வாங்குவது அரசு தான்.
இப்படி செய்கிற அரசாங்கம் வாய்க்கூசாமல் சொல்லுகிறது அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன என்று. ! இது எப்படி இருக்கு?
தமிழ்நாட்டைத் தொடர்ந்து ஆண்டு வந்திருக்கும் திராவிட அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக இருவரும் இந்த ஊழலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
மின்துறை இன்று அரசின் நஷ்ட கணக்கில் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் மின்சார பற்றாக்குறை என்பதை விட
>அரசின் மெத்தனப்போக்கு.
.>அறிவித்த பொதுத்துறை மின் நிலைய திட்டங்களை கிடப்பில் போட்டிருப்பது.
>மின்சார உற்பத்தியில் தனியாரை வளர்த்துவிட்டதுடன்
சந்தைவிலையை விட அதிக விலைக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை அரசே வாங்கி விநியோகிப்பது....
இதனால் இன்று தமிழ்நாடு மின்சார துறைக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம் ரூ. 97000 கோடி ....
.
இந்த லட்சணத்தில் நம் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையிலேயே மின்சாரம் தயாரித்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள்..
(நேற்று மாலை ஊழல் மின்சாரம் ஆவணப்படம் பார்த்தேன்.நன்றி விழித்தெழு இயக்கம். மும்பை)

Monday, May 9, 2016

ஜனநாயகத்தில் நாய்கள்



நாய்கள் ஆபத்தானவை.
ஆதிகாலம் தொட்டு மனிதன் காலடியில் வாலாட்டும்
நாய்களை வெறுப்பது உசிதமல்ல
என்கிறார்கள் நாய்க்காவலர்கள்.
நன்றியுள்ள ஜிவன் நாய்கள் தான்
என்கிறார்கள் நாய்ப்பிரியர்கள்.
ஆமாம்.. இந்த நாய்கள்
யாருக்கு காவல் இருக்கின்றன?
இந்த நாய்கள்
யாருக்கு நன்றி காட்டுகின்றன.?
எதற்கு நன்றி காட்டுகின்றன.?

வாலை ஆட்டும் நாயகள்
சில மானுடப்பிறவிகளின் அடையாளம்.
எச்சில் எலும்பு கடிக்க
ஏங்கும் பரிதாபம்.
குரைக்கும் நாய்கள்
அரசியல்வாதிகளின் வாத்தியார்கள்.
கூட்டம் கூட்டமாக
பிச்சைக்காரனைத் துரத்தும் நாய்கள்
காவல்துறையில் .
வேட்டை நாய்களும் உண்டு
நம் நாட்டில்.
அதுகளை நினைத்தால் தான்
என் உடல் நடுங்குகிறது.
உடம்பெல்லாம் கண்ணாக
இந்திரனின் வெறிப்பிடித்த கண்கள்
எம்மை வெருட்டுகின்றன.

வாயில்லாத ஜீவன் நாய்கள் என்று
வக்காலத்து வாங்காதீர்கள்.
ஊரெங்க்கும் வீதியெங்க்கும்
நாய்கள் விரட்டுகின்றன..
நாய்க்கடித்தால் தொப்புளைச்சுற்றி நாற்பது ஊசி
பயமுறுத்துகிறதா உங்கள் அறிவு...
நாய்களைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்துவிட்டு
நாய்கள் ஜாக்கிரதை யை
கழுத்தில் தொங்க்விட்டு
காலம் தள்ள முடிவு செய்துவிட்டீர்களா..?
ச்சே.. நாயும் பொழைக்கும் இந்தப் பொழைப்பு!
நாய்கள் ஆபத்தானவை.
நாய்களை வளர்ப்பவன் எஜமான்
நாய்கள் என்றும் அடிமைகள்.
ஜனநாயகத்தில்  நாய்களும் அடிமைகளும்
ஆபத்தானவர்கள்.

Saturday, May 7, 2016

ஓசுரில் மோடி




தமிழகத்தில் பா.ஜ.க. 3வது சக்தியா வளர்வதாக மோடி
சொல்கிறார். அது அவர் விருப்பம். எத்தானாவது சக்தியாகவும்
இருந்துவிட்டு போகட்டும். நமக்கென்ன..?
ஆனா கடைசியில் மோடி வைத்த வேண்டுகோள் தான்
இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கெ வேட்டு வைக்கிறமாதிரி
இருக்கு.. இந்திய ஒருமைப்பாட்டை இப்படி எல்லாம் ஒரு
பிரதமர்.. கேள்விக்குறி ஆக்கினால்..

(தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல, பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் போது டெல்லியில் நான் கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்தி, உங்களுக்காக உழைக்கத் தயாராக உள்ளேன்”)
அப்போ... பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி
தலைமையில் இயங்கும் நடுவண் அரசின் திட்டங்கள்  அமுல்படுத்த
மாட்டீர்களா.. இந்தியாவின் பிரதமர் என்றால் அவர் குமரி முதல்
இமயம் வரை பரந்திருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் பிரதமர்
அல்லவா.. நடுவண் அரசு அனைத்து மாநில மக்களின் நலனுக்காகவும்
செயல்படும் அரசு அல்லவா..
என்ன இது... இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒழுங்கு நாடாளுமன்ற
திட்டங்கள் மாநில அரசும் மைய அரசு உறவுகள் பற்றி எலலாம்
ஒன்றும் தெரியாத 3 ஆம் தர பேச்சாளர் மாதிரி ... ஓர் அகில
இந்திய கட்சியின் தலைவர் பேசலாமா.. பாரதப்பிரதமர் பேசலாமா..

பாரதமாதா கி ஜெ.

Thursday, May 5, 2016

விஜயகாந்த்




சினிமா நடிகர் என்பதால் அவர் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.
அவர் நடித்துக்கொண்டிருந்தக் காலத்திலும்
மிகப்பெரிய வெற்றி படங்களைக் கொடுத்தார் என்று சொல்வதற்கில்லை.
அவருக்கு என்று தல. தளபதி க்கு இருக்கும் அளவுக்கு கூட
ரசிகர்கள் இருந்ததாக தெரியவில்லை.
வரும்போது வருவேன் ... என்று பஞ்ச் டயலாக் பேசியே
தன் ரசிகர்களை ரஜினிகாந்த் ஏமாற்றிக்கொண்டிருந்த காலக்கட்டம்..
ரஜினிகாந்த அரசியலுக்கெல்லாம் வர வேண்டாம்..
அவர் யாருக்கு ஆதரவு? என்று டில்லி முதல் மெரினா வரை
காத்துக்கிடந்த காலத்தில் இவர் அரசியலுக்கு வருவார் என்று
எவரும் சொல்லவில்லை. அவரும் சொன்னாரா தெரியவில்லை.
அதனால் தான் இக்கேள்வி எழுகிறது....
விஜயகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டது தற்செயலானது தானா?

Wednesday, May 4, 2016

கூட்டணி




கிழவியின் இட்லிக்கடையில் நல்ல கூட்டம். எலெக்ஷன் பிரச்சாரத்திற்கு நடக்கும் எல்லா கட்சியின் கூட்டங்களும் ஊர்வலமும் கிழவியின் கடை விரித்திருக்கும் அம்மன் கோவில் மரத்தடியைத் தாண்டித்தான் போகவேண்டும். வருவோர் போவோருமாக வியாபாரம் அதிகமாக இருந்தது. துணைக்கு பக்கத்து வீட்டு மரியம்மா பையன் சூசையை வைத்துக் கொண்டாள். காசு நல்ல புழங்கியது. இது கடன் சொல்லிட்டு சாப்பிடற உள்ளூர் கூட்டமில்லை. காசு கொடுத்து சாப்பிடற வெளியூர் கூட்டம்.

இந்த வருடம் மகனின் திவசத்தை நல்ல படியா செய்யனும்னு கிழவி மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். கிழவியின் ஒரே மகன் இறந்து நாளை விடிந்தால் இரண்டு வருசம் ஆகப் போகிறது.இந்த மாதிரி எலக்ஷன் நேரத்தில்தான் தகராறில் அவன் வம்பாங் கொள்ளையா

போய்ட்டான்.

செத்தாலும் செத்தான்...நோய்பட்டு தூக்கிட்டுப்போக நாலு ஆள் இல்லாத அனாதை மாதிரியா செத்தான். அவன் மகராசானா செத்தான். சும்மா சொல்லப்புடாது. அன்னிக்கி கூட்டம்னா கூட்டம் அம்புட்டு கூட்டம். எம்மாம் பூ மாலை விழுந்திச்சி. பெரிய்ய பெரிய தலைவர் மாரெல்லாம் வந்தாங்க... நான் தலையில் அடிச்சி கூப்பாடு போட்டதைக் கூட படம் பிடிச்சாங்க .பேப்பர்கார மகராசனெல்லாம் வந்து எம்மாம் படம் பிடிச்சாங்க தெரியுமா.. தலைவரு வந்திருந்தாரு.. நம்ம ஆளு மாதிரியே இல்ல வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாரு. அவரு கூட எனக்கு என்னவோ நிறைய பணம் தரப்போறதா சொன்னாராம். சூசைப் பயக் கூட சொன்னான். ஆனா இரண்டு வருஷம் ஆகப் போறது. இன்னும் பணம் தான் கைக்கு வந்த பாடில்லை. பஞ்சாயத்து போர்டுக்கு அலைஞ்சதுதான் மிச்சம்..ம்.

கடைவியாபாரம் எல்லாம் முடிஞ்சது. கிழவி கூட்டமா போற ஊர்வலத்தைப் பார்த்தாள்.

'ஏலே சூசை.. நேற்றுதானே பெரிய கூட்டம் வந்திச்சி..இன்னிக்கும் என்ன அதே கூட்டமா ?

'இல்ல பாட்டி..இது வேற கட்சி..நம்ம அண்ணன் இருந்திச்சி பாரு அந்த கட்சிக் கூட்டம். நம்ம அண்ணன் செத்த அன்னிக்கி வந்தாரு பாரு சிவப்பா ஒரு தலைவரு.. அவரு இன்னிக்கி வாராராம். '

'யாரு அந்த மவராசனா.. ?நல்லாயிருக்கட்டும். ஏலே சூசை அந்த மகாராசனைப் பார்த்து நமக்கு இன்னும் பணம் வரலைன்னு சொல்வோம் வர்றியா.. '

'யே கிழவி சும்மா இரு. அவருக்கு அதெல்லாம் எங்கே நினவில இருக்கப் போவுது '

'போலே அவரு என்ன நம்மூர்க்காரப் பயலுக மாதிரியா ? சொன்னா சொன்ன வாக்கு தவறு மாட்டர்லே '

ஊர்வலம் துவங்கியது. கூட்டம் ஜெ ஜேனு.

கிழவி திறந்த வேனில் கை அசைத்தபடியே வந்த தலைவரைப் பார்த்துவிட்டாள். எவ்வளவு பெரிய மனுஷன்.. நம்ம நிற்கிறதைப் பாத்துப்பிட்டு தான் கையை அசைக்கிறாரு.. கிழவியும் பதிலுக்கு கை அசைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் சேலை தலைப்பை எடுத்து கண்கள் ரண்டையும் துடைத்து கொண்டாள். அவர் நின்று பயணம் செய்த வேன் அவளருகில் வந்தது. தலைவரு பக்கத்தில் நிற்பது யார் ? வணக்கம் போட்ட படி நெற்றியில் சந்தணப்பொட்டுடன் நிற்பது அவந்தானே..எம்மவன் காசியை ஆள்வைத்து அடித்துக் கொன்ற அந்த பாவிப்பயல் தானே...கிழவியின் பெற்றவயிறு பற்றி எரிந்தது.

'ஏலே சூசை..தலைவர் கிட்ட நிக்கறது அந்த கொலைகாரப் பேய்தானே.. '

'ஆத்தா, கத்தாதே.. சும்மா இரு. இப்போ அவுங்க ரண்டு பேரும் கூட்டாளிங்க '

கிழவி ஆவேசம் வந்தது போல் ஓடினாள்.

'அடப் பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா.உங்க பிள்ளை குட்டிக நல்லா இருக்குமா ? '

இறந்து போன மகன் காசியின் முகம் கண்முன்னால் வந்து நின்றது. ரோட்டோரத்தில் தார் ரோடு போடுவதற்காக குவிந்து கிடந்த கற்களை எடுத்து ஊர்வலத்தை நோக்கி வீசினாள். வெறிப்பிடித்தவள் போல கூட்டத்தை தள்ளிக் கொண்டு ஓடினாள். மண்ணை எடுத்து கூட்டத்தில் தூவினாள்.

ஊர்வலம் சிதறியது. போலீசார் ஓடிவந்து கிழவியைச் சுற்றி வளையம் அமைத்தார்கள். கிழவி நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு 'ஓ ' வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஏதோ பெரிய்ய மனித வெடிகுண்டு வெடிக்கப் போகிறது என்று பயந்த போலீசார் கிழவியைப் பார்த்தவுடன் எரிச்சலுடன் ஒருவர் மாற்றி ஒருவர் லத்தியால் விளாசு விளாசுனு விளாசித்தள்ளினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வளவோ கவனமாகச் செய்திருந்தும் இந்தக் கிழவி எங்கிருந்தோ வந்து இப்படி எல்லாவற்றிலும் மண்ணை அள்ளி போட்டு விட்டாளே..நாளைக்கு டி.ஜி யிிலிருந்து சி.எம். வரை கேட்கப்போகிற கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற டென்ஷனில் கிழவியைப் பின்னி எடுத்து விட்டார்கள்.

அவளுக்கு அவர்கள் கொடுத்த எந்த அடியும் வலிக்கவில்லை. அவள் கண்கள் ஆகாசத்தைப் பார்த்து என்னவோ தேடிக்கொண்டிருந்தது.

மறுநாள் பத்திரிகைகளில் விதவிதமான செய்திகள்.

'தலைவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

தலைவரைக் கொலை செய்ய சதியா ?

இது எதிர்கட்சிகளின் சதிச்செயல் .. '

கிழவி என்ன ஆனாளோ தெரியவில்லை.

***

( April  2003ல் எழுதி திண்ணையில் வெளிவந்த கதை. மீள்வாசிப்புக்காக)

Saturday, April 30, 2016

ஜெய் மகாராஷ்டிரா



மே 1, உழைப்பாளர்கள்  தின வாழ்த்துகள்.
மே 1, மகாராஷ்டிர தினமும் கூட.
சென்னை மாநிலத்தைப் போலவே பம்பாய் பிரசிடென்சியும்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசத்தின் சில  பகுதிகளை உள்ளடக்கியதாக  இருந்தது.  மொழிவழி மாநிலமாக இந்தியாவைப் பிரிப்பதற்கு முதலில் ஆதரவு கொடுத்த காங்கிரசு ஆட்சிக்கு வந்தப்பின் அப்பிரிவு இந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கருதியது.
நேரு இக்கருத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் மராத்தி பேசும் மக்கள்
தங்களுக்கான மாநில கோரிக்கையை முன்வைத்து பிப். 6, 1956ல் சம்யுக்த மகாராஷ்டிர சமிதியை உருவாக்கினார்களா. அவர்களின் தொடர் போராட்டத்தில் ஃப்ளொரா பவுண்டனில்
அவர்கள் நடத்திய பேரணியில் பலர் உயிரிழந்தார்கள். அன்றைய நிதித்துறை அமைச்சராக இருந்த டி. தேஷ்முக்  தன் எதிர்ப்பை காட்ட பதவி விலகினார். சற்றொப்ப 105 பேர் உயிரிழந்தார்கள். அவர்களுக்கான நினைவு சின்னம் தான் ஹுடாம சவுக்கில்  இருக்கிறது. இப்போராட்டத்தில் பம்பாய் நகருக்கு மராட்டியர்களும் குஜராத்திகளும் உரிமை கொண்டாடினார்கள். நடுவண் அரசோ பம்பாய் நகருக்கு தனி ஸ்டேட்
அந்தஸ்த்து கொடுக்க விரும்பியது. பம்பாய் எங்கள் நகரம், பம்பாய் எங்கள் மண்,
என்று இம்மண்ணின் மைந்தர்கள் எடுத்த போராட்டம் வெற்றி பெற்றது.
மே 1, 1960 ல் மகாராஷ்டிர மாநிலம் பிறந்தது.
இன்றைய தினத்தை மகாராஷ்டிர மாநிலத்தவர் சாதி, மத, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடுகிறார்கள்.
ஜெய் மகாராஷ்டிரா என்ற முழக்கத்துடன்.

சீமான்

சீமான் அரசியல்வாதியா?
இன்னொரு கெஜ்ரிவால் போல சீமான் ஆக முடியுமா?
அல்லது
சீமான் ஒரு கனவுலத்தை விரும்பும் இளைஞர்களுக்கு
நம்பிக்கை ஊட்டும் தலைவராக வளர்ந்து கொண்டிருக்கிறாரா?
நாம் தமிழர் கட்சிக்கோ சீமானுக்கோ எந்த ஒரு ஊடகத்தின்
ஆதரவும் இல்லை என்றாலும்
இளைஞர்களின் ஆதரவு ஏறுமுகமாக இருக்கிறது.

தினத்தந்தி தொலைக்காட்சியில் பாண்டேயின் கேள்விகள்
ஒவ்வொன்றாக விழும்போது சீமான கொஞ்சம் தடுமாறினார்,

:உங்களுக்கு என்னய்யா வேனும்?
காரு வேண்டுமா?
இறக்குமதி செய்யறேன்யா...!
என்று சொன்னபோது கொஞ்சம் பொருளாதரம் இடித்தது.
இறக்குமதி செய்வதற்கு பணம் வேண்டுமே! அதை எப்படி பெறுவது?
ஏற்றுமதி இருந்தால் தானே இறக்குமதியை சரி செய்யலாம்.
இந்த இரண்டும் ஏறுமாறாக இருப்பதால்தானே இந்திய ரூபாயின்
மதிப்பு இறங்குமுகமாகவே இருக்கிறது.
இந்த லாஜிக் ரொம்ப சிம்பிள்.

எது எப்படியோ சீமான் ஒரு சக்தியாக ,
திராவிட அரசியலுக்கு மாற்றுசக்தியாக வளர்ந்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும்
என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லும் காலம் வ்ரவில்லை.
தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் 18 வயது முதல் 39 வயதுவரை
உள்ள வாக்களர்கள் மொத்த வாக்களர்களில் சற்றொப்ப 50%..
என்பதையும் கணக்கில் கொண்டால் எதிர்காலத்தில்
தமிழக் அரசியலில்
சீமான் கவனிக்கப்பட வேண்டியவர்.

Monday, April 25, 2016

விருத்தாசலமும் கனக சுப்புரத்தினமும்





இவர்கள் இருவரும் நண்பர்கள், சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் தங்களுக்குள் இருக்கும்
கருத்தியல் ரீதியான வேறுபாடுகளுக்கு நடுவில் இருவரும் ஒருவரை ஒருவர் கொண்டாடினார்கள், மதித்தார்கள்,
ஆனாலும் என்னவோ இவர்கள் இருவரையும் கொண்டாடியவர்கள் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை, புரிந்துணர்வை.. ..
பெரிதாக பேசிக்கொள்வதில்லை.
ஒருவர் என் தந்தை கொண்டாடிய பாரதிதாசன் என்ற கனகசுப்புரத்தினம்.( தன் ஒரே மகனுக்கு சுப்புரத்தினம் என்று பெயர் சூட்டி பெருமை கொண்டவர் என் தந்தை பி.ஏஸ்.வள்ளிநாயகம் அவர்கள்)
இன்னொருவர் நான் என் வாசிப்பில் கண்டடைந்த புதுமைப்பித்தன் என்ற விருத்தாசலம்.
"தமிழர்களுக்கு பாரதியார் விட்டுச்சென்ற செல்வங்களில் குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலிசபதம் இவைதவிர பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினமும் ஒருவர்"
என்று உரக்க சொன்னவர் புதுமைப்பித்தன்.
1931க்குப் பின் வெளிவந்த மணிக்கொடி இதழ்களில் பாரதிதாசனின் மிகச்சிறந்த கவிதைகள் வெளிவந்துள்ளன. அக்கவிதைகளைக் கொண்டாடுகிறார் திஜரா.
பாரதிதாசனுக்கு அறிஞர் அண்ணா 29/07/1946 ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பொற்கிழி வழங்கியபோது அந்த நிதிதிரட்டும் குழுவில் உறுப்பினராக இருந்தவர் புதுமைப்பித்தன். பொருளாதர நெருக்கடி, வேலை இல்லை.. இச்சூழலில் புதுமைப்பித்தன் தன் பங்கிற்கு வழங்கி இருந்த
அன்பளிப்பு தொகை ரூ.100/ .... !!
புதுமைப்பித்தனை கொண்டாடும் மணிக்கொடி வட்டமும் சரி,
பாரதிதாசனைக் கொண்டாடிய/கொண்டாடும் திராவிட இயக்க/ திராவிட அரசியல் மேடைகளும் சரி..
இந்த இருவருக்கும் நடுவில் இருந்த தமிழ் உறவை
ஏன் கொண்டாடவில்லை?
புதுமைப்பித்தன் பிறந்தநாள் : 25 ஏப்ரல் 1906
பாரதிதாசன் பிறந்தநாள் : 29 ஏப்ரல் 1891.

Tuesday, April 19, 2016

நிலம் எனும்..

நிலம் எனும்
-----------------


"அம்மா... உழவர்களும் அவர்களின் தொழிலும் இவ்வளவு உயர்ந்தது என்றால்
ஏனம்மா என்னை நீ விவசாயி ஆக்கவில்லை?" என்று என் மகன் கேட்பது போல.ஒரு பொங்கல் நாள் முகநூல் பதிவில் எழுதியிருந்தேன்.
நாம் அனைவருமே விவசாயத்தை, விவசாயிகளைக் கொண்டாடுகிறோம்,
மதிக்கிறோம், கவிதை எழுதுகிறோம், இன்னும் என்னவெல்லோமோ
செய்து கொண்டிருக்கிறோம். ஆனால்.. நம் வீட்டிலிருந்து ஒருவரையும்
அந்த மையப்ப்புள்ளிக்குள் விட்டுவிடாமல் மிகவும் பத்திரமாக
வெளிவட்டத்தில் சுற்றவிட்டிருக்கிறோம்.
கிராமத்தில் மட்டும் என்ன வாழ்கிறதாம்? ஒவ்வொரு வீட்டின் திண்ணையிலும் மச்சியிலும் நெல்லும் தானியங்களும் காய்ந்து கொண்டிருக்கும்.. 30  வருடங்களுக்கு முன்.
இப்போது எந்த வீட்டிலும் நெல் மூடைகளை காணவில்லை. இலவச தொலைக்காட்சியில் மக்கள் மெகா தொடர்களைப் பார்க்கிறார்கள். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதொ கிடைக்கிறது. வீட்டுக்காவலுக்கு பெரிசுகள் மட்டும் . மாதாமாதம் அவர்களுக்கு
நகர்ப்புறத்திலிருந்து வரும் மணியார்டருக்காக தபால்காரரை எதிர்பார்த்து
காத்திருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் வீடுகள்..  வீடுகள்.. வீடுகள் .. வீட்டு மனைகள்..
இப்போதெல்லாம் வீடுகளொ வீட்டு மனைகளோ குடியிருப்புக்கானவை மட்டுமல்ல.
 அவர்களின் அசையா சொத்து, சில வருடங்களில்
ஒன்றை பத்தாக்கும் அலாவூதின் அற்புதவிளக்கு.
இந்த இரு வாழ்க்கையின் போராட்டங்கள்.. ஆண் - பெண் உறவில் ..
சு.வேணுகோபாலின் "நிலம் எனும் நல்லாள்" நாவலாக...
நிலம் சார்ந்த மனிதனாக பழனிக்குமார்.
நிலத்தை வாழ்க்கையாக நினைக்கிறான்.
நகரத்தில் வாழும் அவன் மனைவிக்கு நிலம் வாழ்க்கை அல்ல.
அது ஒரு சொத்து. பண மதிப்பீடு.
தன் நிலத்தை விற்பது என்பது பழனிக்குமாருக்கு தன் ஜீவனைக் காயப்படுத்துவது போல.
அவன் மனைவிக்கு நிலத்தை விற்பது என்பது லாப நஷ்ட கணக்கு.
இந்தப் போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த காதல் காணாமல் போய்விடுகிறது.
இரண்டு பூனைகளும் சண்டைப்போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் காயப்படுத்துவது போல கழிகிறது அவர்கள் வாழ்க்கை.
அவரவருக்கான நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் .. பழனிக்குமாரும் ராதாவும் நமக்குள்
.. ஒருவகையில் இது எம் தலைமுறையின் நாவல்.

பழனிக்குமாரின் பிள்ளைகளுக்கு இப்பிரச்சனை இருக்காது.
அவர்கள் மனைகளை வாங்கலாம், விற்கலாம்..
அவர்கள் மனைகளின் தரகர்களாக இருப்பார்களே தவிர
நிலத்தின் மைந்தர்களாக
 நிலத்துடன் உறவு கொண்ட மனிதர்களாக இருக்கப்போவதில்லை.
நாவலில் சில வரிகள்:
"அகல விரித்த கால்களுக்கிடையில் கோயிலைக் குவித்துச் சேர்த்து உருட்டிக்கொண்டிருக்கும் மாசாணி, தன் பருவம் பற்றி அறியாப் பேதை மாசாணி. மணற்கோவில் இந்த மாசாணி முன் ஒன்றுமில்லை. அது வெறும் மணல். அவள் உயிரோட்டமுள்ள கோவிலாக அமர்ந்திருக்கிறாள். பாவாடை ஏறி விலகி மாசாணியின் கருவறை வாசல் பயமுறுத்துகிறது. அவள் கால்களுக்கிடையில் கன்னி கனலாய்ச் சுடர்கிறாள். மனிதவடிவில் தான் கோயில்களை உருவாக்கியிருக்கிறானோ
ஆதிக் கலைஞன். ஆதி அம்மை, அங்கையற்கண்ணி உடலே கோபுரமாக அமர்ந்திருக்கிராள்.
அணையா விளக்கை நேருக்கு நேர் பார்க்கக் கூச்சமாக இருக்கிறது..."
(தமிழினி வெளியீடு.)


Saturday, April 16, 2016

முரண்வெளி


முரண்கள் எல்லாம் பகை முரண்கள் அல்ல.
உடன்பாடுகள் எல்லாம் நட்பு உடன்படிக்கைகளும் அல்ல.
முரண்வெளியில் பயணிப்பது கத்திமுனையில் நடப்பது போலதான்.
நட்பு முரண்களாக என் வெளி விரிகிறது.
லெனின் சொன்னது போல என் ஆயுதத்தை நான் தீர்மானிப்பதில்லை.
என் எதிரில் நிற்பவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
காந்தி மகானைப் போல நான் அஹிம்சைவாதி அல்ல.
நிராயுதபாணியாக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை
கொலை செய்த களம்.. 
அபிமன்யுவின் மரணத்தைவிட கொடியது.
தனிமனித ஆசாபாசங்களில் எவரும் எனக்கு வேண்டாதர்கள் அல்ல.
எந்த மூலையில் அநியாயம் நடந்தாலும்
உங்கள் உள்ளம் கொதிக்கிறதா.. அப்படியானால் நீ என் நண்பன்..
என்று என்னருகில் வந்து மீண்டும் சொல்கிறான் சேகுவேரா.
நான் சொல்வதை எல்லாம் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதல்ல என் எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அதைச் சொல்வதற்கான என் உரிமையை எவரும் பறித்துவிட முடியாது..
வால்டேர் எனக்காகவே .. உங்களுடன் பேசுகிறான்.
காதலைப் பற்றியும் கத்தரிக்காய் குழம்பு வைப்பதை பற்றியும் எழுதுவதில்லை தான். நான்!
எழுதத்தெரியாது என்பதால் அல்ல.!!
அபிப்பிராயங்கள் உண்மைகளாகிவிடுவதில்லை.
நான் எதை எழுதவேண்டும், எப்படி எழுதவேண்டும்
என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் என்னிடமில்லை. 
காலம் என் கைப்பிடித்து எழுதிக்கொண்டிருக்கிறது.
முடிவுகளை விட முயற்சிகள் முக்கியமானவை.
வெற்று வாழ்த்துகளில் செத்துக்கொண்டிருக்கும் ஜீவனுக்கு
நட்பு முரண்வெளி யில் ஒரு சொட்டு அமுது.

Wednesday, April 6, 2016

என்ன வை .....க்க்கோ




இப்படி விவரமில்லாத ஆளா இருக்கீங்களே.
தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு எப்படி ஓட்டுப்போடுவார்கள்?
ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்..
உங்கள் கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட கால்நடை மேம்பாட்டு துறை அமைச்சர் பதவி கூட
உங்களுக்கு கொடுக்கமுடியாது போலிருக்கிறதே!!!
கலைஞர் என்ன சாதி?
இந்த விவரம் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள்
இப்படி உளறிக்கொட்டும் வரைத் தெரியாமல் இருந்தது.
என்னதான் திராவிட அரசியல் வழி வந்தக் குடும்பத்தில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்.. நாங்கள் இந்த தகவல்
தொழில்நுட்பத்தில் ரொம்ப "வீக்".
வாழ்க எம் பெருமான் ஈ வெ. ரா.
ஆனால் எதையோ சொல்லிட்டு , அப்புறம் நீங்க
மாஞ்சி மாஞ்சி கெஞ்சி கெஞ்சி மன்னிப்பு
கேட்டிருக்கிறதை வாசிக்கும் போது எனக்கு
விக்கி விக்கி அழுகை வந்திடுத்து..
உங்களுக்கு கண்டனம் தெரிவிக்கத்தான் எழுத வந்தேனா..
ஆனா பாருங்க வைகோ.. உங்க கும்பகர்ண கதையைக்
கேட்டுட்டு உங்க மீது பரிதாபம் வேறு வந்து தொலைச்சிடுச்சி.
இந்த மாதிரி சாமாச்சாரத்தை எல்லாம் எப்போ யார் முன்னாலே பேசனும்னு ...
சரி.. சரி.. நீங்க இன்னும் கலைஞரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது..

Sunday, April 3, 2016

பஃறுளியின் வாசனை




புலம்பெயர்தல் என்பது
ஜீவராசிகளின் தொடர்கதை.
பனிப்பிரதேசத்தின் பறவைகள்
கூடுகட்டி குஞ்சுகள் பொறிக்க
நம் மண்ணின் மரக்கிளைகளைத் தேடி
பல்லாயிரம் மைல்கள் தாண்டி
பறந்து வருகின்றன.

கடல் சூழ்ந்த நம் பூமியில்
நம் கரைகளைத் தொடாத
பசிபிக் கடலின் ஆமைகளும்
முட்டையிடும் பருவத்தில்
நம் நெய்தல் நிலம் தேடி
பயணிக்கின்றன.

மனிதனும்
நிலம் தேடி நீர் தேடி
பசி தீர்க்க பயணித்த தூரத்தை
காலத்தை
கணக்கில் எடுத்தால்
பிரமிப்பாகவே இருக்கிறது.

இப்பயணங்களில் தமிழனின் குரல்
திரைகடலோடி திரவியம் தேடிய
பெருமையை ,
பொருள்வழிப் பிரிதல் என்று வகைப்படுத்தி
பெருமையுடன் பேசுகிறது.
இப்பெருமைகளின் மறுபக்கத்தில்
இன்றும் தங்கள் இருத்தலுக்காக
புலம்பெயரும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இப்புலம்பெயர்தல்
நம் பெருமைமிகு வரலாற்றின்
இருண்ட மறுபக்கம்.
அந்த மறுபக்கத்தில்
அரபிக்கடலோர மித்திநதிக்கரையில்
நானும் என் கவிதைகளும்.

எல்லா நதிகளும் கடலில் சங்கமிக்கும்.
இது நதிகளின் உரிமை.
அந்த உரிமையும் மறுக்கப்பட்ட
மித்தி நதியில்
மிதக்கின்றன எங்கள் வாழ்க்கைப்படகுகள்.

நாலு தலைமுறைகளுக்கும் மேலாக
இந்த மண்ணில் எங்கள் வாழ்க்கை
எங்கள் இருத்தலுக்கான வாழ்க்கையில்
தொட்டிச்செடிகளாகவே தொடர்கிறது
எங்கள் வேர்களின் பயணம்.

காங்கிரீட் காடுகளில்
கண்ணாடி ஜன்னல்களின் வழியாக
நீலநிற வானத்தை எட்டிப்பார்க்கும்
தொட்டிச்செடிகளின்
இலைகள் மட்டுமே அறியும்
மறுக்கப்பட்ட நிலத்தடி மண்ணின் வாசனையை
கட்டுடைத்துப் பயணிக்கும்
வேர்களின் பயணத்தை.

மாநகரத்தின் ஜனக்கடலில்
கரைந்துவிடவோ கலந்துவிடவோ முடியாமல்
ப்ஃறுளியின் மணல்மேடுகளில்
புதையுண்ட எங்கள் நிஜங்களைத் தேடி
கடலடியில் பயணிக்கிறோம்
ஆமைகளைப் போல.

கபாடபுரமும் குமரிக்கோடும்
எங்கள் கண்முன் விரிகிறது.
சிவனே எம் இனக்குழு தலைவனாய்
எங்களுடன் உரையாடுகிறான்.
கொற்றவையின் கைப்பிடித்து
நடக்கிறது எங்கள் கவிதை.

பெண்ணிய பெருவெளியில்
தந்தை பெரியாருக்கு முன் வாழ்ந்த
பெருமகனாய்
நெற்றிக்கண் திறந்து வழிகாட்டுகிறான் அவன்.
அவனோடு பயணிக்கிறேன்
அங்கே
மருதம் திரிந்த பாலையில்
அவன் மனைக்கிழத்தி
காதல் மறுக்கபப்ட்ட கொற்றவையாய்
பெருமூச்சு விடுகிறாள்.
என் கனவுகள் கலைகிறது.

மண்ணில் புதையுண்ட பஃறுளியின் ஈரம்
கடலடியில் நீரோட்டமாய்
பாய்ந்து வருகிறது.
அனாதையாக நிற்கும் எங்கள் இருத்தலை
முத்தமிட்டு வாரி அணைத்துக்கொள்கிறது.

பஃறுளியி மகள் நான்
நதிகளுக்கு என்று வரையறுக்கபப்ட்டிருக்கும்
எல்லைகள் கடந்து பயணிக்கிறேன்.
பஃறுளி என் முகம்.......
கதை என்றும் கட்டுரை என்றும்
விமர்சனம் என்றும்
கவிதை என்றும்
நீங்கள் கற்பித்திருக்கும்
அனைத்து வடிவங்களிலும்
அவளே நானாக..
என் மொழியாக..

மழைப்பொழியும் ஒரு கார்கால நள்ளிரவில்
பஃறுளியின் ஈரம்
என் தொட்டிச்செடிகளின் இலைகளில்
பட்டுத் தெறிக்கிறது..
நாளைய விடியலில்
என் தொட்டிச்செடிகள் பூத்திருக்கும்
எனக்காகவும் உங்களுக்காகவும்

அந்தப் பூக்களை
உங்கள் வாசலுக்கு எடுத்துவரும்
எழுத்து அறக்கட்டளைக்கும்
அறக்கட்டளை குழுவினருக்கும்
என் ஆதித்தாய் பஃறுளியின் வாழ்த்துகளுடன்.

உங்களன்பு,

புதியமாதவி.
மும்பையிலிருந்து,.

15 ஆகஸ்டு 2015 சுதந்திர தின நள்ளிரவில்..
(மவுனத்தில் பிளிறல் கவிதை தொகுப்பில்.. என்னுரை)