Wednesday, January 22, 2014

பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்






பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு
நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால்
அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.





நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில் - என்றும்

'நாங்கள் வாழ வேண்டும் இந்தப் பூமியில்

இயற்கை தந்த இனிய வாழ்வை

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும் - நாங்கள்

இணைந்து மகிழ்ந்து வாழ வேண்டும்

நாங்கள் வாழவேண்டும் இந்தப்  பூமியில்


யாழினி வரனின் இனிய குரலில் சி.ஜெயசங்கர் எழுதிய உருக்கமான
பாடல் வரிகளுடன் துவங்கியது
பெண்ணிய உரையாடலில் முதல் அரங்கம். யாழினி இலங்கையிலிருந்து வந்திருந்தார்.
"“முகாம் கூத்துச் செயற்பாடுகளில் பெண்கள்” வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையங்களை மையமாகக் கொண்ட- ஓர் பார்வை.
என்ற  தன் கட்டுரையை அவர் வாசித்த விதம் மட்டுமல்ல, கட்டுரை பேசிய பொருளும் மிகுந்த கவனத்திற்குரியதானது.

ஈழத்து தமிழ்ப் பாரம்பரிய அரங்குகளில் ஒன்றான கூத்து ஈழத்துத்தமிழர் மத்தியில் மகிழ்வுடனும், அழகியலுடனும் பயிலப்பட்டு வருகின்றது. ஈழத்துத் தமிழர் எங்கெல்லாம் செறிந்து வாழ்கின்றார்களோ அவ்வாறான பிரதேசங்களில் எல்லாம் அவர்களுக்கான பாரம்பரியக் கூத்து வடிவங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமது பண்பாட்டுத் தளத்தில் நின்று சடங்குக்குரியதாகவும் மகிழ்வூட்டலுக்குரியதாகவும் கருத்திலெடுக்கப்படும் கலைச் செயற்பாடொன்று தமது வாழ்வின் இருப்புப் பெயர்க்கப்பட்டு இடப்பெயர்வு திணிக்கப்பட்டதான முற்றிலும் புறம்பான முகாம் வாழ்வுச் சூழலில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பின்னணியில் பாரம்பரியத் தொடர்ச்சிமிக்க வன்னிப் பெருநிலப்பரப்பிலே ஏற்பட்ட யுத்தப் பேரழிவு, இடப்பெயர்வு அதன் பின்னரான  முகாம் வாழ்வுச் சூழலிலும் அம்மக்கள் தமது பாரம்பரியக் கூத்துக்களை முன்னெடுத்துள்ளனர்.
போர்க்கால கூத்தரங்கின் அனுபவங்கள,;; பொருளிழப்பு, உயிரிழப்பு, சமூகச் சிதைவு, குடும்பச் சிதைவு, தனிமனிதச் சிதைவு என்பவை வெளிக்கிளம்பும் துயரங்களின் சேர்க்கையாகி கூத்தரங்கின் அதிர்வை, அதுதரும் அனுபவப் பகிர்வை வீச்சாக்குவதாகவும், கூத்தரங்கினதும், கூத்துப் பனுவலதும் அர்த்தங்களையும், அனுபவங்களையும் புதிய தளங்களுக்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கின்றது. இந்தப் பிண்னனியிலேயே வன்னிப் பேரழிவின் பின்னரான முகாம் வாழ் கூத்துச் செயற்பாட்டை சிறப்பாக  அச் செயற்பாடுகளில் பெண்கள் பங்களிப்பை  பேசுவது இக்ட்டுரையின் நோக்கம் என்று கூறிய யாழினி தொடர்கையில்
இலங்கை முகாம்களில் நடக்கும் கூத்துக்கலை பற்றிய செய்தியின் ஊடாக அவர் காட்டிய சித்திரம், போருக்குப்
பின்னரான வாழ்க்கைப் போராட்டத்தின் முகம்.  முகாம்கள் அனைத்தும் இன்றைக்கும் அரசின் அதிகப்படியான கவனிப்பு வட்டத்தில் தான் இருக்கின்றன. யார் முகாமுக்குள் நுழையலாம், யாருக்கு அனுமதி உண்டு , யாருக்கு அனுமதி கிடையாது என்கிற சட்டதிட்டங்களின் கெடுபிடிகள்.
இதற்கு நடுவில் போரில் பாதிக்கப்பட்ட மக்களின்
சகஜநிலை வாழ்வுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒன்றாகத்தான் முகாம்களில்
நடத்தப்படும் கூத்துவகைகளும். இன்னும் சொல்லப் போனால் அரசாங்கத்திற்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் கூத்து நடத்துவதற்கான நோக்கமும்
முகாம்களில் கூத்துக்கலைஞர்கள் தொடர்ந்து கூத்து நடத்திக் கொண்டிருப்பதற்கான நோக்கமும் ஒன்றல்ல.
இரண்டும் வேறானவை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.

தொடர்ந்து கண்ணகி கூத்தும் காத்தவராயன் கூத்தும் நடக்கின்றன. ஏன்? கதையும் கதைவசனமும் கூட அங்கு வாழும் அனைவருக்கும் தெரிந்ததாகவே இருக்கும். இருப்பினும் கண்ணகியின்  அறச்சீற்றத்தில் நடக்கும் கூத்து ஏதொ ஒருவகையில் " தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்கிற உளவியல் மருந்தாகி அவர்களைத் தேற்றுகிறது. காத்தவராயன் தனக்கு விடப்பட்ட சவால்களை எல்லாம் நேர்க்கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்ற கதை வாழ்க்கையில் அவர்களுக்கு ஓர்
நம்பிக்கை வெளிச்சத்தை தருகிறது.

கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு முகாமில். குடும்ப உறவுகள் என்ற கூடு
முகாம் வாழ்க்கையில் சிதைக்கப்பட்டிருக்கிறது. தன் குஞ்சுகளைத் தேடும் தாய்ப் பறவைகளாக, தன் இணையைத் தேடும் பறவையாக அலைக்கழிக்கப்பட்டிருக்கிறது முகாம்களில் இவர்களின் வாழ்க்கை. கூத்துக்கலைஞராக அடுத்த முகாம்களுக்குச் செல்லும் வாய்ப்பின் ஊடாகவே தங்கள் உறவுகளைத் தேடும் விழிகளின் பயணமும் தொடர்கிறது.
கைகளை இழந்த போராளி ஒருவர் கூத்துக் கலைஞராக
தன் மனக்குரலை வேறு ஒரு தொனியில் ஒலிக்கவும்
இந்தக் கூத்து தான் கை கொடுக்கிறது. அதுவும் தன் கைகளில் சாக்ஸ் உறைகளை மாட்டிக்கொண்டு அவர் கூத்து நடத்துவதாக தெரிகிறது.

தமிழ்ச்சமூகத்தில் கூத்தும் பாட்டும் சாதியுடன் தொடர்புடையது தான். ஈழமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வேஷங்கட்டி ஆடிவந்தக் கூத்து இன்றைக்கு முகாம்களில் சாதியம் கடந்து  நிற்கிறது என்று யாழினி
என் கேள்விக்குப் பதிலாகச் சொன்னபோது, கூத்து
மேடையில் சாதியம் கடக்க முகாம்கள் வரை வர வேண்டியதாகிவிட்ட அவலம் முகத்தில் அறைந்தது.

போரில். கலவரத்தில் மாண்ட இன்னாரின் நினைவாக
என்றும் கூத்துகள் நடத்தப்படுவதை ஆதாரங்களுடன்
பட்டியலிட்டார் யாழினி.


பெருந்தோட்ட பெண்கள் மீதான ஒடுக்குமுறையும்- வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும் - என்ற தலைப்பில்
 சந்திரலேகா கிங்ஸலி (கொட்டகல மலையகம் இலங்கை) கட்டுரை வாசித்தார்.  சந்திரலேகா கிங்ஸ்லி நம்மால் பதில் சொல்ல முடியாத இன்னொரு கேள்வியையும்  வைத்தார்,

"நான் மலையகத்தின் தமிழச்சி,
எங்களுக்காக  குரல் கொடுக்க யாருமில்லையா? " என்று கேட்டார். மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை, பெண்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளித்துவமும் குடும்பமும்
என்று அவர் கட்டுரை விரிந்தது. லைன் வீடுகள் என்று
சொல்லப்படும் தீப்பெட்டிகளை வரிசையாக வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்ட வீடுகளும்
அந்த வாழ்விட சூழலும் பெண்ணுக்கு ஏற்படுத்தி இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதை அவர் பட்டியலிட்டார். அதிலும் குறிப்பாக பெண்ணின் கற்பைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்தில் தான் பெற்ற குழந்தைகளை தகப்பனை நம்பிக் கூட தனியே விட்டுவிட்டு செல்ல முடியாத தாய்மார்களின் பேரச்சத்தையும் பதிவு செய்தார். கல்வி கற்று
ஓரளவு வசதி வாய்ப்புகள் வந்தப் பின் மலையகத்தமிழர் தம்மை மலையகத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதைச் சுட்டிக் காட்டினார்.

வே.யமுனாதேவி இலங்கை தோட்டப்புற கர்ப்பினி பெண்களின் வாழ்க்கையைச் சித்திரமாக வரைந்துக் காட்டினார். கர்ப்பினி பெண் வேலைப்பார்க்கும் தேயிலைத் தோட்டம் செங்குத்தாக இருக்கும். அவள் குழந்தைப் பேறுக்கான மருத்துவமனை மலையடிவாரத்தில் இருக்கும். எப்போதும் பிரசவத்திற்கு முந்தின நாள் வரை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் இப்பெண்கள் பிரசவவலி வந்துவிட்டால் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல டிராக்டர்களைக் கூட பயன்படுத்துவோம். எப்போதும் வயிற்றைச்சுற்றிக் கட்டிய கூடையுடன் இருப்பதாலோ என்னவோ பிரசவம்
அவர்களுக்கு பெரும்பாலும் எளிதாக இருக்கிறது, அதனாலேயே அவர்களில் பெரும்பாலோர் "மாதம் ஒரு முறை ஏற்படும் மாதவிடாய் ' போலவே பிரசவத்தையும் எடுத்துக் கொள்கிறார்கள், எனவே பிறக்கும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளாகவே இருக்கின்றன என்றார். அத்துடன்
பிரசவத்திற்கு கொடுக்கப்படும் விடுமுறையும் மருத்துவ
வசதிகளும் கூட எப்படி அவர்கள் வாழ்க்கையில் அந்தப்
பெண்ணுக்குப் போய் சேர்வதில்லை என்பதையும்
தெளிவாக விளக்கினார்.

அடுத்து ஆழியாள் பேசிய படகு மனிதர்கள்.
என்னவோ ஆஸ்திரேலியா அகதிகளின் சொர்க்கம்
என்ற கருத்து நிலவுகிறது. பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் அக்கருத்து எவ்வளவு பொய்யானது என்பதை ஆழியாளின் படகு மனிதர்கள் விவரித்தது. இலங்கையிலிர்ந்து வரும் அகதிகளுடன் சேர்த்து  சூடான். ஆப்கானிஸ்தான். ஈரான். ஈராக் என்று
போர் சூழ்ந்த மண்ணிலிருந்து வந்த அனைத்து மனிதர்களின் முகங்களையும் காட்டினார் ஆழியாள்.

குடியுரிமை திட்டத்தில் குடிவரவுத்துறை அகதி ஒருவருக்கு குடியுரிமைக்கான அனுமதி கொடுத்தப்பிறகும் பாதுகாப்புத்துறையும் அந்த அனுமதியை ஏற்றுக்கொண்டால் மட்டுமே குடியுரிமை
கிடைக்கும் என்பதை தெளிவுபடுத்தினார். பாதுகாப்பு துறை குடியுரிமையை நிராகரிப்பதற்கான காரணங்களை
எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. இப்படியாக
தங்கள் நாடுகளை விட்டு ஆஸ்திரேலியாவுக்கு குடியுரிமைக் கனவுகளில் வந்தவர்கள் எந்த நாட்டுக்
குடிமக்களாகவும் வாழாமல் முடிந்துவிடும் அவலங்கள்,
 குடியுரிமைக்காக காத்திருக்கும் நாட்கள் வருடங்களாகி
முடிந்துப் போகும் வாழ்க்கை.. என்று ஆஸ்திரேலியாவின் படகுமனிதர்களாக வந்தவர்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்தார் ஆழியாள். அத்துடன்
படகில் வந்து இறங்குபவருக்கும் விமானத்தில் வந்து
இறங்குபவருக்கும் ... இருவருமே அகதிகளாக இருந்தாலும் அவர்களை அந்த அரசாங்கம் நடத்தும்
முறை வித்தியாசமானது தான் என்பதையும் ஒத்துக் கொண்டார்.


நளாயினி தாமரைச்செல்வன் - புலம்பெயர் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவர்களின் மனநிலையும் -- என்ற கருத்தில் உரையாடும் போது  புலம்பெயர் சூழலில் ஐரோப்பா போன்ற நாடுகளில் வாழும் தம் பிள்ளைகள் சந்திக்கும் கலாச்சார பண்பாடு குறித்த அதிர்ச்சிகளை
ஒவ்வொன்றாக சொல்லிச்சென்றார். அவர் சிரித்துக் கொண்டே பேசினாலும் ஒரு தாயாக அவரின் வலி,
எதிர்காலம் குறித்த கவலை அவர் பேச்சில் வெளிப்பட்டது. தமிழ்நாட்டின் தமிழ் தொலைக்காட்சிகளின் தொடர்களில் மூழ்கிக்கிடக்கும் ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்ப்பெண்களைப் பற்றியும்
மெகா தொடர்களின் தாக்கங்களைக் குறித்தும் பேசினார்.
புலம்பெயர்ந்த வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட மொழிச் சிக்கலைத் தாங்கள் எப்படி எதிர்கொண்டோம்,
எங்கள் இருந்தலுக்கான போராட்டத்தில் மொழி தெரியாத தேசத்தில் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள
எடுக்கும் முயற்சிகளையும் நகைச்சுவையாக எடுத்து வைத்தார். அத்துடன் புலம்பெயர்ந்த பெண்கள் பலர் மன அழுத்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளதையும்  இரு  கலாச்சார விழுமியங்களை கடக்க முடியாமல் அவதிப்படுவதையும் சுட்டிக்காட்னார்


றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசினார். புகலிட தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்பு அடைந்தபின்னர் பெண்விடுதலைச் சிந்தனைகள் மேலும் தோன்றின சில பெண்எழுத்துக்கள் -தெரிந்தோ தெரியாமலோ- ஆண்நோக்கு நிலையிலிருந்தும் எழுதப்படுகின்றன.
இலங்கையின் போர்ச்சூழல், இயக்க அராஜகங்கள, உடனடி உயிர்ப் பாதுகாப்பு என்பவற்றால் மட்டுமன்றி இதைப் பாவித்து பொருளாதார காரணிகளால் புலம்பெயர்ந்தவர்களிடமும்கூட முற்றுமுழுதான வேறான கலாச்சார சூழல், இந்த நாடுகளின் இயற்கைக்கு முகம்கொடுப்பதில் இருந்த சிரமங்கள், கூட்டுவாழ்க்கையினைப் பிரிந்து உதிரியானமை, மொழிப் பிரச்சினை, நிறவெறி போன்ற பல காரணிகள் இவர்களின் வாழ்வியலைத் தாக்கியதால் அவை இலக்கியங்களிலும் வெளிப்பட்டன. அவை பெண்எழுத்துக்களிலும் வெளிப்பட்டன. இயக்கங்களிலிருந்த வந்த ஆண்களால் வெளிப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பிலிக்கியப் போக்கு ஆரம்பத்தில் பெண்ணியத்தில் வெளிப்படவில்லை என்பதை இலங்கையின் போராட்ட அரசியல் நிலைமைக்குள் வைத்தே பார்க்க வேண்டும். என்றார்


றஞ்சி தன் உரையாடல்களில் பல்வேறு கருத்துகளைப்
பேசி இருந்தாலும் இரண்டொரு கருத்துகள் மிக முக்கியமானவை. ஒன்று ஐரோப்பாவைப் பொறுத்தவரை புலம்பெயர்ந்த பெண்கள் பெரும்பாலும் திருமணத்தை நோக்கித்தான் புலம் பெயர்ந்தார்கள்
என்பது. இன்னொன்று ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தங்கள் கலாச்சார அடையாளமாகக் கட்டிக் காக்கும்
"பூப்பு நீராட்டு" அதையும் ஹெலிகாப்டரில் அந்தப் பெண்ணை உட்கார வைத்து விழா நடத்தும் இடத்தில்
பூத்தூவி இறக்கி கொண்டாடும் ஆடம்பர அந்தஸ்த்து
அடையாளமாகி இருக்கும் நிலையை வருத்தத்துடன்
பகிர்ந்து கொண்டார்.
றஞ்சி பகிர்ந்து கொண்ட இன்னொரு முக்கியமான செய்தி ஐரோப்பாவில் பள்ளி கூடங்களில் கவுன்சிலிங் என்ற பெயரால் குழந்தைகளுக்கு நடத்தப்படும் தெரபி
கொடுமை. அதாவது ஐரோப்பா குழந்தைகளும் ஆசியக்குழந்தைகளும் நிறத்தால் மட்டுமல்ல, சில அடிப்படை குணத்தாலும் வேறுபட்டவர்கள். இந்த
அடிப்படை உண்மையை ஐரோப்பா அரசு முற்றிலும்
நிராகரிப்பதுடன் அவர்களுக்கான அளவுகோளையும் ஒரேமாதிரியே வைத்திருக்கிறது. அதன் விளைவு
ஆசியக்குழந்தைகள்  அதிகம் குறும்பு செய்பவர்களாக இருக்கிறார்கள். நம் பார்வையில் குறும்பு என்ற அந்த
துடிப்பான குழந்தைகள் அவர்களின் பார்வையில் வன்முறையைக் கையாளும் குழந்தைகளாக, அதாவது
அக்குழந்தையும் துறுதுறுப்பு அடக்கப்படாவிட்டால்
வன்முறையாகிவிடும் என்ற கருத்து அவர்களுக்கு
இருக்கிறது. இதனால் மூன்று முறைக்கு மேல் குழந்தை விதிகளை மீறிவிட்டால், தண்டனைக்குள்ளானால் பெற்றோர் அழைக்கப்படுகிறார்கள். விண்ணப்பத்தில் பெற்றோரிடம் கை எழுத்து வாங்கப்படுகிறது. மொழிச்சிக்கல் காரணமாக பல பெற்றோர்கள் எதற்கு கை எழுத்திடுகிறோம் என்பதை அறியாமலேயே கையொப்பம் இடுவது நடக்கிறது. அதன் பின் தெரபி என்ற சிகிச்சைக்குள்ளாகும் குழந்தை , அதுவரை நார்மலாக இருந்தக் குழந்தை அப்நார்மலான குழந்தையாக மாற்றப்படுகிறது. அப்நார்மல் குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்படும் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டுமே எதிர்காலத்தில் செய்ய வேண்டிய நிலைக்கு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தள்ளப்பட்டிருக்கிறது, பெற்றோர்களிடம் இது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்றார் றஞ்சி.

இவை தவிர தமிழகச்சூழலில் கோ. சுஜாதா வாசித்த ஆய்வுக்கட்டுரை என் கவனத்தைப் பெற்றது. "திராவிட சொல்லாடல்களில் பெண்"  என்ற தலைப்பிலான அவர் கட்டுரை அறிஞர் அண்ணாவின் படைப்புகளை எடுத்துக் கொண்டு பேசியது. மனையாள் , இல்லத்தரசி, வேசி,
நடனக்காரி என்ற சொற்களின் ஊடாக பெண் என்பவளை எப்படி இன்பம் என்ற நுகர்ப்பொருள் அடையாளமாக்கி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் காட்டினார். ஆனால் அவ்ர் கட்டுரையில் எனக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதை அங்கும் பதிவு செய்தேன்.
எப்போதும் எவ்விடத்தும் அண்ணாவை எவரும் ஒரு
பெண்ணியவாதியாக எடுத்துக் கொண்டதே கிடையாது.
ஒருவகையில் சொல்லப்போனால் அக்காலக்கட்டத்தில்
தந்தை பெரியார் மட்டுமே பெண்ணியவாதி. தந்தை பெரியாரின் பெண்ணிய கருத்துகளை எந்தளவுக்கு
அவரை ஏற்றுக்கொண்ட அறிஞர் அண்ணாவும் அவர் தம்பிமாரும், மற்றும் பாரதிதாசன் வகையாறாக்களும்
பேசினார்கள், முன்னிலைப்படுத்தினார்கள் என்பதை எல்லாம் நாம் மறுவாசிப்பு செய்தே ஆகவேண்டும்.
எப்படி இருந்தாலும் அண்ணாவின் சங்க கால, காப்பியக்கால பெண்ணின் மீட்டுருவாக்கம் என்பது முழுக்கவும் அரசியல் சார்ந்த பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாகும். சுதந்திர போராட்ட காலத்தில்
இந்தியா எங்கும் ஆங்கிலேயரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு
எதிராக இந்திய கலாச்சாரமாக வேத இந்தியாவின் கலாச்சாரம் வைக்கப்பட்டது. இந்திய மொழிகள் எங்கும் இதன் தாக்கம் இருந்தது. மகாகவி பாரதி " ஆரியதேசம்"
என்று கொண்டாடுவதெல்லாம் இந்தப் பின்னணியில் தான். ஆனால் 2000 ஆண்டுக்கும் பழமையான கலாச்சாரமும் தேசிய அடையாளமும் கொண்ட தமிழினத்தை அண்ணா சங்க காலத்திலிருந்தும் சிலம்பிலிருந்தும் எடுத்துக் கொண்டார். என்று அரசியல் காரணங்களை முன்வைத்தேன்.


சாதியம் பெண்ணின் பிறப்புறுப்பில் பத்திரமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்று
சாதியம் குறித்து பேச வந்த கவின்மலர் அண்மையில் தர்மபுரியில் நடந்த இளவரசன் திவ்யா
காதல் விவகாரத்தில் வெளிப்பட்ட சாதிய முகத்தை தன் கருத்துகளுக்கான வலுவான ஆதரமாக
எடுத்துக்கொண்டு பேசினார்.

பெண் விவசாயிகளுடன் தொடர்ந்து களப்பணியாற்றும் ஷீலு, மற்றும் தலித் பெண்களுடன்
களத்தில் நிற்கும் தலித் போராளி ஃபாத்திமா பெர்நாட் இருவரும் தங்கள் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டனர்.இந்தியாவில் மதச்சாற்பற்ற நிலை சாத்தியப்படுமா என்ற கேள்வியின்
ஊடாக அதன் சாத்தியப்பாடுகளையும் அதற்கான தேவை அரசியல் சூழலில் வரவேண்டியதன்
அவசியத்தையும் தன் கட்டுரையில் விளக்கினார் காப்ரியல் டீட்ரிச். உலக மயமாக்கலில்
பெண்களின் பாதிப்புகள், வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், போராட்டங்கள்,
வாழ்வாதரங்களின் பாதிப்பு என்று பல்வேறு தளங்களை நோக்கி தமிழகத்து பெண்ணிய
சிந்தனையாளர்களும் களப்பணியாளர்களும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை பல்கலை கழக மாணவ மாணவியர் மட்டுமின்றி சிதம்பரம் அண்ணாமலை
பல்கலை கழகத்திலிருந்தும் திருநெல்வேலி மனோண்மணி பல்கலை கழகத்திலிருந்தும்
எத்திராஜ் பெண்கள் கல்லூரி பேராசிரியர் முனைவர் அரங்கமல்லிகா, மற்றும் அவர்
கல்லூரி மாணவியரும் பேராசிரியர் கல்பனா சேக்கிழார், வழக்குரைஞர் ரஜனி , முனைவர்
தங்கம், தெ. மதுசூதனன், மரப்பாச்சி நாடகக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டு
கலந்துரையாடலில் தங்கள் காத்திரமான பங்களிப்புகளைச் செய்தார்கள்.

இவைதவிர என்னில் அதிர்ந்து கொண்டிருக்கும் இன்னும் சில:

*இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா கொண்டு வரப்பட்ட தமிழர்களுக்கு குடியுரிமை
கொடுப்பதைப் பற்றி எவரும் பேசவில்லை.
ஏனேனில் அவர்கள் காடுகளில் விலங்குகளுடன் விலங்காக விடப்பட்டார்கள்.

*நோக்கியா தொழிற்சாலையில் பெண் தொழிலாளர்கள் அதிகம். அவர்களும் உள்ளூர்ப் பெண்களாக இருப்பதில்லை. தூரத்து ஊர்களிலிருந்து மிகக்குறைந்த
சம்பளத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறது நோக்கியா.

*கிளிநொச்சி குடியேற்றப்பகுதி தான் போருக்குப் பின் வங்கிகளின் கிளைகள் அதிகம் திறக்கப்பட்ட பிரதேசம்.
வாங்கியக்கடனைத் திருப்பிக் கட்டமுடியாமல் தொடரும் தற்கொலைகள்.

*தமிழ்நாட்டின் சுய உதவிக்குழுக்கள்.. இவர்கள் மீது
திணிக்கப்பட்டிருக்கும் கட்டாயக்கடன்.
பெண்களை ஒடுக்கும் அரசின் முகம்.

*கடந்த 4 ஆண்டுகளில் சிங்கள விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது.

*2100ல் நெல் உற்பத்தி 80% குறையும்.

*புலிகள் காப்பகம் என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன.

*பிறமாநிலங்களிருந்து தமிழகத்தில் வாழ்வாதாரம் தேடி வந்திருக்கும் இன்றைய சூழலில் உருவாகி இருக்கிறது
சென்னைக்குள் இன்னொரு நிழல் சென்னை.

*தமிழகத்தில் இன்றைக்கும் ரேஷன் கடைகளில் தலித்துகளுக்கு என்று தனிநாள் ஒதுக்கப்படுகிறது.

ஆழியாளின் கருநாவு என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. மரப்பாச்சி குழுவினரின்
கவிதை நாடகத்துடன் நூல் வெளியீடு நிகழ்ச்சி
வெகு சிறப்பாக நடைபெற்றது.
இரு நாட்களிலும் காலை மாலை என்று தொடர்ந்து
நடந்த அரங்கு நிகழ்வுகளை மிகவும் செம்மையாக
ஒருங்கிணைத்து கட்டுரை வாசிப்புக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகளின் ஊடாகவும் பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து பதிவு செய்தனர் வ.கீதாவும்
ரேவதியும் மங்கை அவர்களும். கட்டுரைகள் புத்தக
வடிவமாகும் போது இக்கலந்துரையாடல்களும் இணைக்கப்பட்டால் கட்டுரைகள் தொடர்பான பிற
செய்திகளும் கணக்கில் கொள்ளப்பட்டு  பெண்ணிய உரையாடலுக்கான தளம் விரிவடையும்.

கருநாவு கவிதைநூலில் இருந்து சில வரிகள்:

எல்லா கதவுகளையும்
முகத்தில் அடித்து மூடுபவர்களே!
ஜன்னல்களை
அறைந்து சாத்துபவர்களே!
காற்றுப் புகும் வழிகளையும்
வெளிச்சம் கசியும் எல்லாத் துளைகளையும்
இறுக்கி அடைப்பவர்களே!

எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்
எங்களை முற்றிலுமாய்க் கைவிடுங்கள்

அப்போதுதான்
கடும் உறை குளிரிலும்
பிரிண்டபெல்லா மலைக்காடுகளை அண்டாத
பண்டுலக்ஸ் கிளிக்கூட்டங்களுக்குக்
கிட்டியது போல்,
நாங்களே  தேடிக்கொள்வோம்
எங்களுக்கான தானியங்கள்
விளைந்து இறைந்து கிடக்கும் இடங்க்ளையும்
எங்களுக்கான நகரங்கள்
எழும் நாட்களையும்.

(வாசித்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட இருக்கிறார்கள். கட்டுரைகளின் ஊடாக என் அனுபவங்களின் சில துளிகளை மட்டுமே பதிவு செய்திருக்கின்றேன். மற்றவை அச்சில் வெளிவரும்)

Sunday, January 19, 2014

எம் ஜி ஆரும் ஒன்றரை லட்சம் தாலிகளும்






இன்று (19/01.14) பிற்பகல் பாலிமார் தொலைக்காட்சியில் ஒரு பட்டிமன்றம்.

சினிமா  சமூகத்தைப் பிரதிபலிக்கிறதா?
அல்லது
சமூகம் சினிமாவைப் பிரதிபலிக்கிறதா?

என்ற தலைப்பில் . 

சாலமன் பாப்பையா மற்றும் லியோனி பட்டிமன்ற
வகையறாவிலிருந்து சற்று மாறுபட்ட பட்டிமன்றம் என்பதால்
பாதியிலிருந்து பார்க்க ஆரம்பித்த நான் தொடர்ந்து பார்த்தேன்.

அப்போது ராதா ரவி அவர்கள் பேசினார். எம்ஜிஆரின் பாடல்கள் 
எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தின என்பதை
அனைவரும் பேசியது போல ராதா ரவி அவர்களும் எம்ஜிஆர்\பெருமையைப்
பேச ஆரம்பித்தார். அப்போது அவர் சொன்ன செய்தி:

எம்ஜி ஆரின் இறுதிச்சடங்கின் போது  தமிழ்ப் பெண்கள் ஒன்றரை இலட்சம்
பேர் தங்கள் தாலியைக் கழட்டி வீசினார்கள் என்றார்., அதாவது தாலி \அறுத்துக் கொண்டார்கள் , 
இந்தச் செயல் எம் ஜி ஆர் அவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக
'இருக்கலாம்... ஆனால் தமிழ்ச்சமூகத்திற்கோ, தமிழ்ப் பெண்ணுக்கோ..?????

இது அவமானம். வெட்க கேடு. 

எம் ஜி ஆர் அவர்கள் தன் சினிமாக்களில் கூட திருமணக் காட்சிகளில்
மாலை மாற்றிக்கொள்வதை மட்டுமே பெரும்பாலும் காட்டுவார்.
தாலி கட்டவதாகக் காட்ட மாட்டார். 

மேலும், 

இச்செய்தியை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் பேசி இருந்தால்
எவ்வளவு கிண்டல் அடித்து பேசி இருப்பார் என்பதையும் நினைக்காமல்
இருக்க முடியவில்லை.

Friday, January 17, 2014

மாநகரத்தின் மஹாகவிதை : நாம்தேவ் தாசல்




தன் 64 வயதில் அண்மையில் மறைந்த மராத்தி மொழியின் மஹாகவிதை
நாம்தேவ் தாசல். மராத்தி கவிதை உலகத்தின்  கலகக்குரல்.
மராத்தி கவிதை உலகத்தை தன் மொழி வட்டத்திற்குள் இழுத்து வந்து
இந்த மாநகரத்தின் ஒவ்வொரு அனுபவங்களின் முகங்களாகவும்
மாற்றிக்காட்டியவன். மும்பையின் சாலையோரமே அவன் வீடுகளாக
இருந்தது. காமட்டிபுரம் (பாலியல் தொழிலாளர்கள் வாழுமிடம்) அவன்
உறவின் முகமாக இருந்தது. வயிற்றுப்பிழைப்புக்காக குற்றங்கள் செய்யும்
மும்பை இளைஞர்கள் அவன் நண்பர்களாக இருந்தார்கள்.
மஹர்களின் பேசு மொழி அவன் கவிதை மொழியானது.
மராட்டி கவிதை உலகம் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் அந்தப் புதுவெள்ளத்தை
எவராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தன் 23 வயதில் தலித் சிறுத்தைகள் (தலித் பைந்தர்) அமைப்பு உருவாக்கி
களத்தில் நின்ற இளைஞன் நாம்தேவ் தாசல்.
.
இந்தப் புள்ளி மட்டும் தான் தமிழ் தலித் கவிதை வரலாற்றுக்கும்
 மராத்திய தலித் கவிதை வரலாற்றுக்குமான மிகப்பெரிய வேறுபாடு.
அம்பேத்கர் மண்ணில் தலித் கவிதை எழுதியவன்
சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருந்த களப்பணிக்காரன்.
.
ஆனால் தமிழ்நாட்டில் தலித் இலக்கியப் படைப்பாளர்களும்
தலித் களப்பணியாளர்களும் இணையும் புள்ளிகள் கூட தெரிவதில்லை.
விதிவிலக்காக ஒரிருவர் இருக்கிறார்கள், அவ்வளவு தான்.

நாம்தேவ் தாசல் மராத்தி மண்ணில் தன் கவிதைகளையே
ஆயுதங்களாக ஏந்தி எப்போதும் போராட்டக்களத்தில் நின்றவர்.
அவருடைய அரசியல் சார்புகளில் கருத்து வேறுபாடுகள்
எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவருடைய வெளிப்படையான
தன்மை என்னை மிகவும் கவர்ந்தது.

திலீப்சித்ரே நாம்தேவின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்திருக்கிறார் POET OF THE UNDERWORLD என்று.
காமட்டிபுரம் என்ற தலைப்பில் நாம்தேவ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம்:

KAMATIPURA
The nocturnal porcupine reclines here
Like an alluring grey bouquet
Wearing the syphilitic sores of centuries
Pushing the calendar away
Forever lost in its own dreams

Man’s lost his speech
His god’s a shitting skeleton
Will this void ever find a voice, become a voice?

If you wish, keep an iron eye on it to watch
If there’s a tear in it, freeze it and save it too
Just looking at its alluring form, one goes berserk
The porcupine wakes up with a start
Attacks you with its sharp aroused bristles
Wounds you all over, through and through
As the night gets ready for its bridegroom, wounds begin to blossom
Unending oceans of flowers roll out
Peacocks continually dance and mate

This is hell
This is a swirling vortex
This is an ugly agony
This is pain wearing a dancer’s anklets

Shed your skin, shed your skin from its very roots
Skin yourself
Let these poisoned everlasting wombs become disembodied.
Let not this numbed ball of flesh sprout limbs
Taste this
Potassium cyanide!
As you die at the infinitesimal fraction of a second,
Write down the small ‘s’ that’s being forever lowered.

Here queue up they who want to taste
Poison’s sweet or salt flavour
Death gathers here, as do words,
In just a minute, it will start pouring here.

O Kamatipura,
Tucking all seasons under your armpit
You squat in the mud here
I go beyond all the pleasures and pains of whoring and wait
For your lotus to bloom.
— A lotus in the mud.

Thursday, January 16, 2014

லீனா மணிமேகலையும் நானும்....., நடந்தது என்ன?





பெண்ணிய உரையாடல் நிகழ்வில் நடந்தது என்ன?
சுற்றறிக்கை வெளியிட்ட பின்னரும் பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
ஏனேனில் அந்த இடத்தில் அத்தருணத்தில் நான் சாட்சியாக மட்டுமல்ல
பாதிக்கப்பட்ட முதல் நபராகவும் நின்று கொண்டிருந்தேன்.

பெண்ணிய உரையாடல் தமிழ் மண்ணில் புலம் பெயர் பெண்களுடன் சேர்ந்து
நடக்க வேண்டும் என்பது என் பல வருடங்களின் கனவு. அக்கனவை நனவாக்க
நான் செய்த முயற்சிகள் பல. சென்னை பல்கலை கழகமும் சென்னை
பெண்களின் சந்திப்பும் - அ. மங்கை, வ.கீதா மற்றும் ரேவதி
எம் முயற்சியை முழுமையாக சாத்தியப்படுத்தி மிகச்சிறப்பாக
தமிழக பெண்ணிய படைப்பாளர்கள், களப்பணியாளர்களையும் அழைத்து
பெண்ணிய உரையாடல் வெளியைத் திறந்து வைத்தார்கள்.

இச்சூழலில் தோழர் லீனாவின் முதல் நாள் அமைதிப்போராட்டம் நடந்தது. லீனா
வெள்ளைவேன் துண்டறிக்கை வெளியிட்ட பிறகுதான் அரங்கில் இருந்த
அனைவருக்கும் அப்பிரச்சனை குறித்து முதன் முதலாக தெரியவந்தது.
தன் கருத்துகளை பொதுமேடையில் கவனத்திற்கு கொண்டுவர தோழர் லீனா
எடுத்த முதல்நாள் அதாவது ஜனவரி3 மாலை 4 மணி பொது நிகழ்வு
முயற்சியில் என் போன்றவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் இல்லை.
அப்போது தான் முதல் முறையாக நான் தோழர் லீனா அவர்களை நேரில்
சந்திக்கின்றேன். நான் அழைத்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கும்
முனைவர் தங்கம் அவர்களை அழைத்துச் செல்ல ஆட்டோ டிரைவர் அரங்கின்
வெளியில் காத்திருந்தார். தொடர்ந்து கைபேசியில் அவர் தொடர்பு கொண்டிருந்த
சூழலில் அரங்கில் வைத்து கைபேசியில் பேச முடியாத சூழலில் நான் அரங்கிலிருந்து
எழுந்து வெளியில் செல்லும் தருணம், லீனாவைக் கடந்து சென்றே ஆகவேண்டும்.
'நீங்கள் புதியமாதவி தானே?" என்று அவர் கேட்டதும் நான் "ஆம்" என்று தலையசைத்து
கடந்து சென்றதும் எங்கள் முதல் சந்திப்பு.
துண்டறிக்கை என் கைக்கு வரவில்லை.

அன்றிரவு நானும் என்னுடன் தங்கி இருந்த கவிஞர் சுகிர்தராணியும் றஞ்சி
மற்றும் ஆழியாளுடன் இதுபற்றிய விவரங்களைக் கேட்டறிந்தோம். அப்போதும்
றஞ்சி உங்கள் தரப்பு நியாயங்களைக் கேட்டிருக்கின்றேன், இனி தோழர் லீனாவின்
தரப்பில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்டுவிட்டு தான் எங்கள்
நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று சொன்னேன்.



ஊடறு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி அல்ல இது.
அப்படியும் ஊடறுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நான் என்ன சுவிட்சர்லாந்தா
போக முடியும் ? என்று கேட்ட தோழர் லீனாவின் கேள்வியின்
நியாயத்தை அக்கணத்தில் புரிந்து கொண்டவர்களில் நானும் ஒருத்தி.
தன் எதிர்ப்பை பதிவு செய்வது மட்டுமே தன் நோக்கம் என்றால்
அவருடைய முதல்நாள் போராட்டத்தில் எனக்கும் உடன்பாடே.


மறுநாள் பொதுநிகழ்வில், என் தலைமையில் நிகழ்ச்சி
நடந்துக் கொண்டிருக்கும் போது
எழுத்தாளர் பாமா பேசி முடித்து
எழுத்தாளர் தமிழ்ச்செல்வி தன் படைப்பை வாசிக்கும் தருணத்தில்
லீனா மேடையை நோக்கி வந்தார். அவர் நேரடியாக எழுத்தாளர் பாமாவை நோக்கிப்
பேசினார். முதல் நாள் நிகழ்வுக்கு வராத பாமாவுக்கு எதுவும் புரியவில்லை.
அந்நிலையில் நான் எழுந்து லீனாவிடம்
"இந்த நிகழ்வு முடிந்து பேசலாம் தோழர்"

லீனா வின் எதிர்ப்பு


"உங்கள் சகப்படைப்பாளர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்,
அவர்களை மதிப்போம், நிகழ்ச்சி முடியட்டும் தோழர், பேசலாம்"

லீனா எதிர்த்தார். கேட்கவில்லை.

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர்,
கட்டாயம் நேரம் தருகின்றேன், பேசலாம் தோழர்"

நீ என்ன சொல்வது, நான் என்ன நீ சொல்லிக் கேட்பது என்கிற
தோரணையில் அப்போதே அக்கணமே அந்த மேடை தனதாக
வேண்டும் என்று உரத்தக்குரலில் லீனா மீண்டும் என்னிடம்...

நான் பொறுமை இழக்கவில்லை.
லீனாவுக்கு பேச இடம் கொடுத்தால் என்ன நடக்கும்? என்பதை நான்
அறிந்திருந்தாலும் அதற்கும் நான் அச்சப்படவில்லை.
என்னால் முடியும் என்ற நம்பிக்கை அக்கணம் வரை என்னிடம் இருந்தது.

ஆனால்...?


நான் என் பொறுப்பிலிருந்து தோழமையுடன் கேட்டுக்கொண்ட எந்த ஒரு சொல்லையும்
உள்வாங்கிக் கொள்ள தோழர் லீனா ஏன் மறுத்தார்?

"எனக்கும் உங்களுடன் பேச வேண்டி இருக்கிறது தோழர் " என்று நான் சொன்ன
வார்த்தைகள் அரங்கில் கடைசி வரிசையில் இருந்தவருக்கும் கேட்டிருந்ததே,
லீனாவுக்கு மட்டும் , அதுவும் என்னருகில் நின்ற தோழர் லீனாவுக்கு மட்டும்
ஏன் கேட்கவில்லை?
கேட்கும் மனநிலையில் அவர் இல்லையா?

என்னையும் என் வேண்டுகோள்களையும் நிராகரித்தன் மூலம் லீனா
அந்த அரங்கத்தில் எதை எதிர்பார்த்தார்?
ஜனநாயக முறையில் நடந்துக் கொண்ட என்னை தோழர் லீனா
ஏன் அவமதித்தார்?
அந்த நிகழ்வில் தலைமை என்ற பொறுப்பிலிருந்து நான் திறந்த
அனைத்து கதவுகளையும் கடந்து சென்றவர் தோழர் லீனா அவர்கள் தான்!


நிகழ்ச்சி என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவியதற்கு யார் காரணம்?


பேச வேண்டும் என்றும் அதற்கு நான் நேரம் தருவேன், கட்டாயம் வாய்ப்பு
தரப்படும் என்று என் தரப்பிலிருந்து உறுதி தரப்பட்ட பிறகும்
தோழர் லீனா தன் இருக்கையில் அமர்ந்திருக்கலாம், பேசி இருக்கவும்
முடியும்,
ஒருவேளை அந்த மேடையில் வெள்ளைவேன் குறித்து பேச வேண்டும்
என்ற நோக்கமே அவருக்கு இல்லையோ என்னவோ?
தனக்குத் தரப்பட்ட வாய்ப்பை அவர் நிராகரித்ததை எப்படித் தான்
புரிந்து கொள்வது?

லீனாவின் விளம்பர உத்திகளையும் வெள்ளைவேன் கதைகளை எல்லாம்
புறம்தள்ளிவிட்டு அதிகார துர்வாசனை என்று கூவம் நதிக்கரையில்
நின்று கொண்டு அவர் அலறும் குரலும் அதன் வீச்சும் டில்லி,
கேரளா என்று பறந்து கொண்டிருக்கிறதாம்.

மும்பை டில்லி நண்பர்கள் என்னிடம் சொல்லி சொல்லி
கவலைப்படும் தொனியில் துக்கம் விசாரிக்கின்றார்கள்!



முதல் நாள் நிகழ்வில் அமைதியாக போராட்டம் நடத்தி சென்ற தோழர்
லீனா இரண்டாவது நாள், அதிலும் குறிப்பாக தலித் தலைமை, தலித்
படைப்பாளர்கள் இருக்கின்ற அரங்கில் வந்து தலித்துகளை அவமதித்தார்
என்று அரங்கிலிருந்த இளைஞர் ஒருவர் என்னிடம் சொன்ன போது
உண்மையில் அதிர்ந்து போனேன்!
அவரிடம் தலித் அரசியலுக்கும் தலித் படைப்புகளுக்கும் இம்மாதிரியான'
விளம்பரஙகள் தேவையில்லை, தயவுச்செய்து பிரச்சனைகளைத் திசைத்'
திருப்பாதீர்கள் " என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு நகர்ந்தேன்.


ஜனநாயகத்தின் எல்லா கதவுகளையும் உடைத்து எறிந்துவிட்டு
வன்முறையைத் தூண்டி அதில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம்
என் போன்றவர்களுக்கு இல்லை.


வேதனைத் தருகிறது தமிழகத்தின் அரசியல் சூழல் மட்டுமல்ல,
தங்களைப் போராளிகளாக பெண்ணியவாதிகளாக படைப்பாளர்களாக
எப்போதும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி சுயவிளம்பரங்களில்
சுயலாபங்கள் தேடும் பெண் முகங்கள் கண்டும் வெட்கப்படுகின்றேன்.

மிகச்சிறந்த கட்டுரைகளும் பேசு பொருள்களுமாக நடந்து முடிந்த
பெண்ணிய உரையாடலின் முதல் பதிவு இம்மாதிரியான ஒரு
பதிவாக நடந்துவிட்ட அவலத்திற்காக வேதனைப்படுகின்றேன்.








Thursday, January 9, 2014

பெண்ணிய உரையாடல்கள் : ஈழம், தமிழகம், புலம் பெயர் சூழல்




கருத்தரங்கு அறிக்கை

இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி.

பேசிய வெளி - சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3, 4, 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தன, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.

இரண்டாம் நாள் அரங்கில் பேசிய ஜமுனாவுக்கு முன் பேசிய சேர்ந்த சந்திரலேகா (இவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்) கோணிச் சாக்குடனும் முதுகில் பிணைக்கப்பட்ட கூடையுடனும் கலந்து விட்ட பெண்களின் வாழ்க்கையை சித்திரம் போல் தீட்டிக் காட்டியிருந்தார். இவர்களின் கட்டுரைகளில் விரிந்த ஈழ நிதர்சனம் ஒரு வகை என்றால், றஞ்சி, ஆழியாள், நளாயினி ஆகியோரின் பேச்சில் வெளிபட்ட புலம்பெயர் தமிழர் வாழ்க்கை அனுபவங்கள் வேறு வகையானவை. 1980களில் தொடங்கி வெவ்வேறு சூழ்நிலைகளில் அகதிகளாக சென்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில், குறிப்பாக காதல், குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவை நிகழ்ந்த வரலாற்று சூழ்நிலைகளின் பின்புலத்தில் வைத்து இவர்கள் விளக்கினர். தவிரவும் தமிழர்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் அகதிகள் எதிர்கொள்ள வேண்டிய சட்டத் திட்டங்கள், இனவெறி, பண்பாட்டு குழப்பங்கள் குறித்தும் இவர்கள் பேசினர். ஆழியாள் அவுஸ்திரெலியாவில் தஞ்சம் புக விழையும் அகதிகள் - தமிழர்கள் மட்டுமல்லாது ஈரானியர், சிரியர்கள், சுதானைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் - முகங்கொடுக்க வேண்டிய அரசு கட்டுபாடுகள் குறித்து பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த யாழினி முகாம்களில் உள்ள உள்நாட்டு தமிழ் அகதிகளுக்கென முன்னெடுக்கப்பட்ட நாடக நிகழ்வுகளை அவர்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளாக ஆக்கிக் கொண்டதையும் இதன் மூலம் தங்களுடைய வேதனையை, ஆற்றாமையை வெளிபடுத்தியதையும் பற்றிய உளவியல்சார்ந்த அவதானிப்புகளை முன்வைத்தார். கொழும்பிலிருந்து வந்திருந்த எழுத்தாளர், பத்திரிகையாளர் மதுசூதனன் ஈழப் போராட்டம் ஈன்ற இராணுவ வெற்றிகளையும் அரசியல் தோல்விகளையும் போராளிப் பெண்களின் தற்கால வாழ்க்கை நிலைமைகளின் பின்னணியில் வைத்து விளக்கினார். போரும் போராட்டங்களும் உருமாற்றி, முடிவில் அழித்த வாழ்க்கைகளுக்கு ஆறுதல் அளிக்கவல்ல எதுவும், படிப்பினைகள், மாற்று சிந்தனை உட்பட எதுவும் இல்லாத அவல நிலையை மிக கவனமாக சித்தரித்தார் - அவரது பேச்சையும் சிந்தனையையும் ஊடறுத்த கனத்த மௌனமும் பேசியது.

ஈழ யதார்ததங்களை வித்தியாசமான நோக்கில் வைத்து அலசிய இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் தற்கால தமிழகத்தில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றியும் கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. ஷீலு அவர் சார்ந்திருக்கும் பெண்கள் குழு இயற்கை விவசாயத்தைக் கைக்கொண்டதன் பொருளாதார, வரலாற்று பின்னணி குறித்தும், பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்ள பெண்களுக்கு வாழ்வாதார உரிமைகள் தேவை என்பது பற்றியும் பேசினார். பிரேமா ரேவதி, பெண்கள் சந்திக்கும் சவால்களை அவர்கள் மேற்கொள்ளும் வாழ்வாதார பிரச்சனைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியது குறித்து பேசினார் - விவசாயம், வனவளம், கடல்வளம் ஆகிய மூன்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கானவையாக இருக்கும் நிலைபோய் பன்னாட்டு மூலதனக் குவிப்புக்கும் இலாபத்துக்குமானமாக மாறியுள்ள சூழலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார "வளர்ச்சி" என்று சொல்லப்படுவதைக் கொண்டு விளக்கினார் - யாருக்கான, எதற்கான வளர்ச்சி என்பது குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பினார். கல்பனா கருணாகரன் இத்தகைய சூழலில் பெண்களின் வாழ்க்கையை "மேம்படுத்த" அரசு கையாண்டு வரும் சமாளிப்பு செயல்பாடுகளை பட்டியலிட்டு, அவை பெண்களின் கடன்சுமையைகூட்டி அரசை அண்டி வாழும் நிலைமையை நிரந்தரப்படுத்தினாலும், பெண்கள் எவ்வாறு இத்தகைய மாற்றங்களுக்கு முகங்கொடுக்கின்றனர், அவற்றை தமக்கு சாதமாக்கிக் கொள்கின்றனர் என்பது பற்றி பேசினார். கேப்ரியல் டீட்ரிச் இந்து பாசிசத்தின் எழுச்சி, தமிழகத்தில் சில தலைவர்கள் பொறுப்பின்றி இதற்கு ஆதரவாக பேசும் போக்கு, சமயத்தின்பால் பெண்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, அதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது என்று பல்வேறு விஷயங்களை விவாதித்தார்.

சென்னைக்கு வடக்கே உள்ள அரக்கோணம் பகுதியில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலித் பெண்கள் மத்தியில் வேலை பார்த்து வரும் பர்நாட் பாத்திமா ரேஷன் கடையில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை எதிர்த்தும், தாசில்தாரின் முறைகேடான பாலியல் நடத்தையை கண்டித்தும் போராடிய தாயரம்மா, சென்ஸம்மா போன்றவர்களின் கதையையும் அவர்களின் வாழ்க்கையும் செயல்களும் தனக்கு முன்னுதாரணமாக அமைந்ததைப் பற்றியும் பேசினார். கவின் மலர், சாதி கடந்த காதல், மணம், (அ)கௌரவ கொலைகள் பற்றியும் பெண்ணின் கர்ப்பப் பைக்குள் கிளைக்கும் சாதியடையாளம் குறித்தும், பிள்ளை பெற்று கொள்ளாது இருத்தல் என்பதன் அரசியல் குறித்தும் பேசினார். சுஜாதா கண்ணகி அறிஞர் அண்ணாவின் எழுத்துகளில் பெண் பிம்பம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, குடும்பம் என்பது எவ்வாறு இன்பம் துய்ப்பதற்கான வெளியாக புதிய வகைகளில் அடையாளப்படுத்தப் படுகிறது, மனைவி-வேசி என்ற பாகுபாடு எவ்வாறு கையாளப்படுகிறது குறித்து விவாதிக்கும் கட்டுரையை வாசித்தார்.

இந்த கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் மூன்று பிரதேசங்களை பற்றியதாக இருந்தன. ஈழம் - நாம் அதிகம் பேசாத மலையகம் உட்பட - தமிழகம், புலம்பெயர் நாடுகள். இந்த மூன்று தளங்களிலும் பெண்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருக்கின்றன, எங்கு வேறுபடுகின்றன, இவற்றை ஓப்பிட்டு பார்ப்பதற்கு தோதான வரலாற்று சூழல், நிகழ்வுகள் என்னென்ன, இனம், மொழி, தேசம் சார்ந்த அடையாளங்களை சாதி, பாலினம், சமயம் என்பன போன்றவை எவ்வாறு ஊடறுக்கின்றன, உழைப்பும் மறுஉற்பத்தியும் பெண்களின் வாழ்க்கையை வடிவமைத்துள்ள விதங்கள் என்று பல விஷயங்களை உரையாடல்கள், விவாதங்கள் மூலமாக இந்த கருத்தரங்கம் அரங்கேற்றியது.

புலம்பெயர் கவிஞர் ஆழியாளின் நூல் வெளியீடு முதல் நாள் அமர்வில் நடந்தது. வெளியீட்டு விழாவுக்கு முன் ஆழியாளின் "கறுப்பி" கவிதையை மையமாகக் கொண்ட அப்பெயரிட்ட நாடகப் பனுவல் சென்னையை சேர்ந்த மரப்பாச்சி குழுவினர் வாசித்தனர். நாடு விட்டு நாடு சென்ற உழைக்கும் வர்க்க தமிழ்ப் பெண்களின் வாழ்வனுபவங்களை பற்றி பேசும் பனுவல் அது. இரண்டாவது நாள் பொது நிகழ்வாக எழுத்தாளர்கள் பாமா, தமிழ்ச்செல்வி, சுகிர்தராணி மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த நாடகத்துறை செயல்பாட்டாளர் யாழினி யோகேஸ்வரன் ஆகியோர் வாழ்வும் படைப்பும் என்ற தலைப்பில் தங்கள் வாழ்க்கை அனுபவம்-படைப்பாக்கம் இவற்றின் இணையும் புள்ளிகள் பற்றி பகிர்ந்துகொண்டார்கள். அமர்வு தொடங்குமுன் பேராசிரியர் அரசு அரங்கில் பேசவிருந்த பெண் எழுத்தாளர்களை பற்றிய ஆழமான அறிமுகவுரையை வழங்கினார். நல்ல இலக்கிய பாடமாக அமைந்த அவரது உரையைத் தொடர்ந்து புதியமாதவி அரங்க நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

இரண்டு நாட்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டு விவாதங்களை அவற்றின் சாராம்சத்தோடு இயைந்த உணர்வுரீதியான பரிமாணத்தை மொத்த விவாதத்திற்கும் சேர்த்த இந்நிகழ்வு பெரும் மன உந்துதலை ஏற்படுத்தியது.





பின்குறிப்பு

இந்த இரு நாட்களும் நடந்த பகிர்வும், சிரத்தையான விவாதங்களும் திசைமாறிப் போகும் வகையில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலையின் இடையீடு இருந்தது. ஈழத்தில் உள்ள நிலைமைகளைப் பேசிய அரங்குகளில் கூட அவருடைய ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை. அங்கு வந்திருந்த பலருக்கு ‘வெள்ளை வான் கதைகள்’ படம் பற்றித் தெரியவும் இல்லை. அப்படம் குறித்து ஊடறு இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறித்து பலர்முன் பேச வேண்டும் என்ற கோரிக்கை அமைப்பாளர் எவருக்கும் வரவும் இல்லை. இருந்தும், அவருக்கு தன் எதிர்ப்பை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் நாள் அவரது போராட்டம் தன்னுடைய எதிர்ப்பு அட்டையோடு அரங்கில் அமர்ந்திருப்பதும் அவர் கொண்டு வந்த துண்டு பிரசுரத்தை விநியோகிப்பதும்தான். அவற்றை பேராசிரிய வீ. அரசுவே அனைவரிடமும் கொடுத்தார். அவரை அங்கிருந்து வெளியே செல்லுமாறுகூட யாரும் சொல்லவில்லை மாறாக இருக்கையில் அமர்ந்து எதிர்ப்பை தெரிவியுங்கள் என்றும் வீ.அரசு கூறினார்.

அரங்கு முடிந்தபின் பிரச்சினை குறித்து அவருடன் தொலைபேசியில் பேசுவதற்கு அ. மங்கை எடுத்த முயற்சிக்கும் லீனா மறுத்துவிட்டார். பலகாலம் கழித்து இப்படி ஒரு ஈழம் - புலம்பெயர் சூழல் - தமிழகம் என்ற புள்ளிகளில் பெண்கள் கலந்துரையாடுவது அதற்கென பங்கேற்பாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள்வரை தங்கள் சொந்த செலவில் வந்து கலந்துகொண்டது என உருவான ஒரு கலந்துரையாடலை தன் பக்கம் திருப்ப லீனா அவர்கள் காட்டிய முனைப்பை கண்டு கலந்துகொண்டவர்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

இரண்டாவது நாள் பொது அரங்கிலும் அவர் அரங்கில் இருக்க யாரும் தடை செய்யவில்லை. ஆனால் சிறப்பான ஒரு பதிவை பாமா அவர்கள் உணர்வெழுச்சியோடு வாசித்து முடித்ததும் லீனா தான் அந்த அரங்கில் பேசவேண்டும் என்ற புதிய கோரிக்கையை எழுப்பினார். அரங்கு முடிந்தபின் அதுகுறித்து பேசலாம் என அரங்கின் தலைவர் புதியமாதவி பலமுறை அவரை வேண்டியும் அவர் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் உரத்து பேசத் தொடங்கினார். பேராசிரியர் வீ. அரசுவும் மேடைக்கு வந்து பேசுவதற்கு தடையில்லை என்றும் பேச்சாளர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் பேசி முடித்துவிட்டால் பேச நேரம் வழங்குவதாக கூறியபோதும் லீனா தன்னுடைய “அமைதியான போராட்டத்தை” நடத்தி கூட்டம் நடக்கவிடாமல் செய்தார். அமைதியாக ஒழுங்கமைக்க எடுத்த முயற்சிகள்பலனற்றுப் போனது. நிலைமை கைமீறியது.

வருந்தத்தக்க முறையில் எங்களை செயல்படவைத்த அந்த “அமைதிப் போராட்டத்தை” ஒருவேளை நாங்கள் அனுமதித்து இருந்தால் மிகுந்த சிரமங்களுக்கிடையே ஒருங்கு திரட்டப்பட்ட ஒரு முக்கியமான கலந்துரையாடல் அரைகுறையாக நிறுத்தப்பட்டு இருக்கும். பேசப்படாத வலிகளும் பேசமுடியாத சூழல்கள் தரும் பேரச்சமூட்டும் நிசப்தமும் பலருக்கு தொடந்திருக்கும்.

இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பேசப்பட்ட அரிய விஷயங்களை விவாதிக்க, மாணவர்கள் இவை போன்ற விவாதங்களில் பங்கேற்க சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பீடங்கள் வெளி ஏற்படுத்திக் கொடுத்தள்ள சூழலில் தேவையற்ற இடையீடுகள் நடைபெற்றது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. இந்த இடையீட்டுக்கு காரணமான ‘வெள்ளை வான் கதைகள்’ ஆவணப்படம் பற்றியும் ஆவணப்படத்துக்குரிய அறம் குறித்தும் விவாதிக்க அதற்கென களம் அமைத்து விவாதத்தை வேறு தளங்களில் முன்னெடுப்பதுதான் முறையாகும் என்று ஊடறு றஞ்சியும் ஆழியாளும் கருதினர்.

இப்போது தனது குறுக்கீட்டைக் குறித்துத் திரித்துச் செய்திகளை லீனா வெளியிட்டு வருகிறார். அவர் செய்த வன்முறை (உடல், சொல், செயல் ரீதியாக) பற்றிய பதிவே இல்லாமல் தன்னை ஒரு அப்பாவியாகக் காட்டிக்கொள்வதும் அவதூறுகளை அள்ளி வீசுவதும் அப்பட்டமான கயமை. அந்த இரு நாள் கலந்துரையாடல் நிகழ்வே அவரது ‘வெள்ளை வான் கதைகள்’ குறித்துத்தான் என்பது போலவும் அந்த சூழ்ச்சியை முறியடிக்கவே தான் அறப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் பதிந்து வருவது நகைப்புக்குரியது. தான் எடுத்த படம் குறித்த மோதலை மட்டும் மையப்படுத்தும் அவரது செயலுக்கும் அதைக் குறித்த வலைப்பதிவுகளில் எந்தவித சிந்தனையும் இன்றி பலரும் தத்தம் தீர்ப்புகளை வழங்கி மகிழும் நிலைமையையும்கண்டு தமிழகத்தில் நிலவும் அரசியல் உணர்வு பற்றி மனம் நோவது தவிர, வேறு வழி இல்லை.

அரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்ட இளம் தோழர் ஒருவர் இலங்கை குறித்து நாம்பொதுவெளியில் அறிய முடியாத பல தகவல்களைக் கேட்டு குழப்பத்தில் இருப்பதாகக் கூறினார். உண்மைநிலவரம் அப்படி இருக்க தனி மனித உட்பூசல்களுக்கும் குழுவாத மோதல்களுக்கும் முன்னுரிமை கொடுக்கமுடியாத/ தேவையில்லாத சூழலில் நாம் இயங்குகிறோம். கூட்டுச் செயல்பாடுகளின் அரசியல், தத்துவச்செறிவு, முரண்களை அங்ஙீகரித்த தோழமைக் கனவுகளை அடைகாக்க வேண்டிய கடமையை நினைவில்கொண்டு மேலும் பல பகிர்தல்களை முன்னெடுப்போம் என நம்புகிறோம்.

Sunday, December 22, 2013

கோவையில் கருத்தரங்கம், வாருங்களேன்....





சனிக்கிழமை : 28 -12 2013 காலை 10

தமிழ்நாடு இலக்கியப்பேரவையில்

திராவிட இயக்கம் அன்றும் இன்றும்

என்ற தலைப்பில் பேச அழைத்திருக்கின்றார்கள்.


இடம்: பொதுசன சங்கம் அறக்கட்டளை, நடராசா வாசகசாலை
18, இராமசாமி வீதி, கணேசபுரம், இராமநாதபுரம்,
கோவை 45.

Wednesday, December 18, 2013

தேவயானி கோபர்கடே கைதும் மும்பை முனியம்மா அரசியலும்


நியுயார்க்கில் இருக்கும் இந்தியத் துணைத்தூதர் தேவயானி கோபர்கடே
கைது செய்யப்பட்டு ,ஆடை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய பணிப்பெண் கொடுத்தப்
புகாரின் அடிப்படையில். குற்றம்: ஒப்பந்தப்படி சம்பளம் கொடுக்கப்படவில்லை.
கொடுக்கும் சம்பளம் அமெரிக்க சட்டப்படி இல்லை ..

இந்தியாவின் எதிர்வினைகளைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் தேவையில்லை.
"ஓ" போடுவோம் இந்தியாவுக்கு,
என்கிறேன் நான்.

ஆனால் என் அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா வேறு சில
கருத்துகளைச் சொல்லுகிறாரே!


*எதிர்வினைக்கு பல முகங்கள் உண்டாம், அந்தந்த முகங்களுக்கு வெவ்வேறு
அனுபவங்கள் இருக்கிறதாமே!

*ராகுல்ஜிக்கு பாஸ்டன் ஏர்போர்டில் நடந்தது நினைவுக்கு வந்திருக்குமோ?

*நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விசா கொடுக்காமல் இழுத்தடித்தது
நினைவுக்கு வந்திருக்கும்.

*மன்மோஹன் சிங்கை இனி யாரும் குற்றம் சொல்ல முடியாது.
எவ்வளவு துணிச்சல் இருந்தால் அமெரிக்காவுக்கே ஆள்காட்டி விரலைக்
காட்டி அதட்டி இருப்பார்? அவரை இனிமேல் "பயந்தாங்கொள்ளி" என்று
சொல்ல முடியுமா?

*இப்போதும் மறக்காமல் தேவயானியின் சாதி சர்டிபிகேட்டைப் பார்த்து
அந்த பெண் அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் இந்தியா
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையா? என்று பகுஜன் சமாஜ்
கட்சி தலைவர் மாயாவதி அவர் பார்வையில் ஒரு அதட்டல்.

*இந்தியா தன் வெளியுறவுக்கொள்கைகளை மறுபரிசீலனை செய்து
கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று பேசினாராமே
மக்களவையில் நம் தமிழ்நாட்டின் திமுக வின் ஒற்றைப் பிரதிநிதி
கனிமொழி.எம்.பி.. (வெளியுறவுக் கொள்கைக்கும் 2Gக்கும் ஏதாவது
சம்பந்தம் இருக்கிறதா என்று முனியம்மாவிடம் கேட்டால் அவர்
முறைக்கிறார்... ஒரு காலத்தில் கனிமொழியின் தோழியாக
இவரும் இருந்திருப்பாரோ.. யார் கண்டது?!!)

*அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாமே இந்தக் கைது.
இதனிடையே, தேவயானி தனக்குத் தருவதாக உறுதி தந்தபடி
சம்பளத்தைத் தரவில்லை என்று புகார் கொடுத்து இந்த சம்பவத்துக்குக்
காரணமாக இருந்த, சங்கீதா ரிச்சர்ட்ஸ் என்ற பெண்ணின் கணவர் மீது
இந்தியாவில் நீதிமன்றம் வாயிலாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்து இருந்தும், அவருக்கு விசா வழங்கி
கடந்த டிசம்பர் 10-ம் தேதி அவர் அமெரிக்காவிற்கு தப்பி செல்ல வழி வகை
செய்துவிட்டு அதன்பின் டிசம் 11 இல் இச்சம்பவம் நடந்திருப்பதால்
இது அமெரிக்காவின் திட்டமிட்ட செயல் என்று
ஒரேயடியாக அமெரிக்காவைக் தாக்குகிறார் மும்பை முனியம்மா.


முனியம்மாவின் கேட்டேன், அமெரிக்காவுக்கே அதட்டல் போடும்
இந்தியா பக்கத்திலிருக்கும் இலங்கை நாட்டிடம் மட்டும் ஏன் இப்படி
பயப்படுகிறது? தமிழக மீனவர்கள் பிரச்சனையையும் இந்த மாதிரி
:ஹாட்டா" எடுத்திட்டு போறதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று
கேட்டேன்.

எனக்கு அரசியல் அறிவு இல்லை என்று அலுத்துக்கொள்கிறார்
அரசியல் விமர்சகர் மும்பை முனியம்மா!
நீங்கள்..?

Saturday, December 7, 2013

நெல்சன் மண்டேலாவுக்கு அவருடை சிறைவாச நண்பர் எழுதிய கவிதை


நெல்சன் மண்டேலாவுடன் சிறையில் பக்கத்து அறையில் இருந்த டென்னிஷ் புருட்டஷ் எழுதிய
கவிதை இது.



In the cell opposite Nelson Mandela’s cell on Robben Island, was our poet friend Dennis Brutus, who wrote It is The Constant Image of Your face and A troubadour I traverse, all reviewed previously on this blog. Both of them were partners against apartheid, working in the quarry together, cracking stones and being tortured. It is fitting we honour the memory of Mandela today with poetry that was written by a man who knew him first hand. Dennis Brutus wrote this poem after Mandela was released from prison and was on his way to finally assume presidency of South Africa, unify a nation standing at a point of indecision on its future and teach humanity a lesson on forgiveness.

Here is Dennis Brutus’ tribute,





Yes, Mandela, some of us
we admit embarrassedly
wept to see you step free
so erectly, so elegantly
shrug off the prisoned years
a blanket cobwebbed of pain and grime;
behind, the island’s seasand,
harsh, white and treacherous
ahead, jagged rocks
bladed crevices of racism and deceit
in the salt island air
you swung your hammer grimly stoic
facing the dim path of interminable years,
now, vision blurred with tears
we see you step out to our salutes
bearing our burden of hopes and fears
and impress your radiance
on the grey morning air



My name is Dela. Even before I was old enough to know anything about this world, my cousins called me Man-Dela, in tribute to the greatness of a man whose life touched everyone who believes in the greater humanity, irrespective of country. I bid him peaceful rest. We will tell our children this, that we lived in the time of Nelson Mandela.

Tuesday, December 3, 2013

பாவம், திருமதி நரேந்திர மோதி



நரேந்திர மோதிக்கு திருமணம் ஆகிவிட்டதா , இல்லையா?
அவருக்கு காதலியர் உண்டா, கிடையாதா?
இதைப் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை.
எந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதில்
எப்போதும் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.
இங்கே நான் விமர்சனப்படுத்த விரும்புவது தனிநபரின் வாழ்க்கையுடன்
அந்த தனிநபர் ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் அல்லது
நம்பப்படும் தத்தவம் குறித்த விசாரணை தான்.

ஜசோதாபேன் ( JASHODABEN) அவர்கள் தான் திருமதி நரேந்திர மோதி.
அவருக்கும் மோதிக்கும் திருமணம் ஆகி ஒரு சில நாட்களில் தன்
பிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டவர் ஜசோதாபென். திருமணம் நடக்கும்போது
அந்தப் பெண்ணின் வயது 18, ஏழோ எட்டோ தான் படிப்பு. பார்க்க ரொம்பவும்
சுமாராக இருப்பதாக அந்தப் பெண்ணுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.
தன் கணவர் மோதி அளவுக்கு தான் அழகானவளில்லை, அறிவுள்ளவளில்லை
என்று இப்போதும் அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தன் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அதன் பின் 1972ல்
எஸ் எஸ் சி தேர்வு எழுதி பாஸாகி ஆரம்பபள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்குப்
படிக்கிறார். அதன்பின் அகமதாபாதி டெக்வாலி பள்ளிக்கூடம், ரூபல் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்ட் பாடசாலை என்று அவர் ஆசிரியர் பணி தொடர்ந்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட ஒர் ஆசிரியை.

மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தகரக்கூரை வேய்ந்த வீட்டில் வாழ்க்கை
தனியாக. 100 சதுர அடியில் வாடகை வீடு. கழிவறையோ குளியலறையோ
கிடையாது. தண்ணீருக்கு வெளியில் தான் வரவேண்டும். அதிகாலையில் விடியலுக்கு முன் எழுந்து வீட்டுக்கு வெளியில் குளித்தால் தான் குளியலுக்கு
சாத்தியப்படும் வாழ்க்கை.

அந்தப்பெண்ணை எந்த நிருபரும் சந்திக்க வழியில்லை. அதையும் மீறி சந்தித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தன் ஆசிரியர்
தொழில் மூலம் அந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
வேலைப்பார்த்த கிராமங்களிலும் சொந்த ஊரிலும் திருமதி ஜசோதாபென் நரேந்திரமோதி என்றே அறியப்பட்டவர்! அவரைச் சுற்றிய கண்காணிப்பு வலையம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அவரோ தன்னைப் பற்றி
எவரிடமும் அதிகம் சொல்லிக்கொள்ளாமல் தன் கணவர் நரேந்திரமோதி
கலந்து கொள்ளும் கூட்டங்களில் தூர நின்று பார்த்துச் செல்லும் பெண்ணாக
இருக்கிறார்.

45 வருடங்களுக்கு மேலாக கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில்
அவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது ஆருடங்களும் ஆன்மிகமும் தான்.
ஜோசியக்காரர்கள் எல்லோரும் " கட்டாயம் உங்கள் கணவர் உங்களை அழைத்துக் கொள்வார்... அந்த நாள் வரும்"என்று உறுதியாகச் சொல்கிறார்களாம். அதை அப்படியே நம்பி இந்தப் பெண்ணும் அந்த அழைப்பு
வரும் என்று காத்திருக்கிறார்.

கணவரின் அதிகாரவட்டம் மிகவும் பெரியது என்பதை அறிந்தவர்தான் இந்தப் பெண். பல நேரங்களில் அச்சப்பட்டும் சிலநேரங்களில் அதையும் மீறி எதையோ
நம்பி இன்றும் காத்திருக்கிறார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் மோதி பக்தர்கள் சொன்ன விளக்கம்,
"அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் முதலிரவு, இரண்டாம் இரவு..
இத்தியாதி எதுவும் நடக்கவில்லை" என்பது தான்.
இப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் ?

எது எப்படியோ.., இந்து தர்மம் திருமணத்தை உடலுறவுக்கு அப்பால் எடுத்துச்
செல்வதாக சொல்கிறது. அது மட்டுமல்ல, ஒரு மனைவியைக் காப்பாற்றுவதும்
கணவனின் கடமை என்பதை மிகவும் உறுதியாகச் சொல்கிறது இந்து தர்மம்.
இந்து தர்மம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை என் போன்றவர்களைவிட மோதியும் மோதியின் பக்தர்களும் நன்கு அறிவார்கள்.

மற்ற தலைவர்களின் லட்சணமெல்லாம் தெரியாதா? என்று கேட்காதீர்கள்.
தெரியும். என் கவலை எல்லாம், தான் தூக்கிப்பிடித்திருக்கும் இந்து தர்மத்தின்
முதல் தர்மத்தையே காப்பாற்ற தவறி விட்டாரோ நரேந்திரமோதி என்பது தான்.

Monday, November 25, 2013

சச்சினின் பாரதரத்னாவை நிராகரிக்கும் ஓர் இந்திய அன்னை




சச்சின் டெண்டுல்கர் ஏகப்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். அதற்காக அவர் சம்பாதித்த தொகை பல கோடிகளைத் தாண்டும்,. ஆனால் அண்மையில் இந்திய அரசு சச்சின் டெண்டுல்கர் தன் 24 வருட கிரிக்கெட் ஆபிஸிலிருந்து விருப்ப ஓய்வு பெறும் நாளில் அவரை இந்தியாவின் தலைசிறந்த விருதான 'பாரத ரத்னா" விருதுக்கான அம்பாசிடராக்கிவிட்டது. சச்சின் டெண்டுல்கர் இனி லிட்டில் மாஸ்டர் சச்சின் அல்ல. பாரத ரத்னா சச்சின் டெண்டுல்கர்.
அவர் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த உயரிய விருதை இந்திய அன்னையர்களுக்கு சமர்ப்பணம் செய்திருப்பதாக பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. சச்சின் உளப்பூர்வமாகவே இந்த சமர்ப்பணத்தைச் செய்திருக்கலாம். எனினும்  சச்சின், நானும் ஒரு இந்திய அன்னை என்ற நிலையில் நீங்கள் கொடுத்திருக்கும் இந்த சமர்ப்பணத்தை மனம் உவந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் சமர்ப்பணத்தை ஓர் இந்திய அன்னையாக நிராகரிக்கும் உரிமை எனக்கிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
சச்சின், உங்கள் கிரிக்கெட் விளையாட்டுகளைப் பற்றியோ அதில் எந்தளவுக்கு நீங்கள் நம் இந்திய திருநாட்டுக்காக விளையாடினீர்கள் என்பது குறித்தோ பத்திரிகைகளில் விளையாட்டு பகுதியில் விலாவரியாக நிறையவே எல்லோரும் எழுதி தீர்த்துவிட்டார்கள். எனக்குப் புதிதாக சொல்ல எதுவுமில்லை, சச்சின்.
நீங்கள் உங்கள் வசதிக்கு ஏற்றபடி உங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர். இந்திய மக்கள் அனைவரும் உங்களை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமே அடையாளம் கண்ட போதும் அதை நீங்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தும் வாய்க்கூசாமல் நான் ஒரு மாடலிங் நடிகன் என்று உங்களைச் சொல்லிக்கொண்டீர்கள், நினைவிருக்கிறதா சச்சின். இப்போதும் அதற்கான கோப்புகள் இந்திய வருமானவரித்துறையிடம் இருக்கின்றன.
2001- 2002, 2003, 2004 உங்கள் வருமானவரித்துறை கோப்புகளைப் புரட்டிப் பாருங்கள்!
இ எஸ் பி என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், பெப்சி, வெளிநாடுகளில் பணம் எடுக்கும் விசா கார்ட் (ESPN STAR SPORTS, PEPSICO, VISA FOREIGN CURRENCY) கம்பேனிகளின் விளம்பரங்களில் வந்ததற்காக (நடித்ததற்காக என்று சொல்வதே தவறு..) உங்களுக்கு கிடைத்த வருமானம் 5,92,31, 211/ அந்த வருமானத்திற்கு நீங்கள் கட்ட வேண்டிய வரி 2,08,59,707/ ஆனால் நீங்கள் உங்கள் வருமானத்திற்கான வரியைக் கட்ட மறுத்தீர்கள், அத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாதம் செய்தீர்கள். அந்தச் சூழலில் தான் உங்கள் திருவாய் மலர்ந்து, என் தொழில் மாடலிங் நடிப்பு என்று சொன்னீர்கள்.
அதாவது இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியில்  சலுகை பெற இல்லாத ஒன்றை இருப்பதாக வாதம் செய்தீர்கள்! உங்கள் கூற்றுப்படி உங்கள் தொழில் - நடிப்பு, நீங்கள் நடிகர். அதிலிருந்து வரும் வருமானத்தை தான் முதன்மையான வருமானமான காட்டினீர்கள்! கிரிக்கெட் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை "பிற வருமானங்கள்" (INCOME FROM OTHER SOURCES)என்றல்லவா சொன்னீர்கள்! he is a popular model acts in various products of various companies என்று உங்கள் வருமான வரி ஆலோசகர்கள் வாதிட்டார்களே!
நீங்கள் கிரிக்கெட் வீரர் இல்லை என்றால் வேறு யார் தான் கிரிக்கெட் வீரர்? நீங்கள் கிரிக்கெட் வீரர் என்பதால் உங்களைத் தங்கள் விளம்பரங்களில் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றார்களே தவிர நீங்கள் ஒரு மிகச்சிறந்த மாடலிங் கலைஞர் என்பதால் அல்ல என்று வருமான வரித்துறை அதிகாரிகள் அல்லவா உங்களிடம் சொல்ல வேண்டி வந்தது? ஏன் சச்சின்? கிரிக்கெட் உங்கள் அடையாளம், உங்கள் உயிர்மூச்சு என்றால் அதை எப்படி உங்கள் வரிச்சலுகைக்காக இரண்டாம் நிலைக்குத் தள்ளினீர்கள்?
அதன் பிறகும் நீங்கள் தொடர்ந்து வரிச்சலுகைப் பெற என்னவெல்லாம் செய்தீர்கள் சச்சின்?
ரூ. 57,969/ உங்கள் பணியாட்களின் நலநிதி
ரூ 50,000/ தொலைபேசி செலவு
ரூ 142,824/ உங்கள் கார்ச்செலவு...
இதற்கெல்லாம் கூட வரிவிலக்கு கேட்டீர்கள்.. இறுதியில் இதெல்லாம் உங்கள் குடும்பச்செலவு என்று இந்திய வருமான வரித்துறை கொஞ்சம் கறாராக சொல்லிவிட்டது.
சரி இதெல்லாம் இருக்கட்டும், உங்களுக்குப் பரிசாகக் கிடைத்த ஃபிராரி காருக்கு வரி கட்ட மறுத்தீர்களே எவ்வளவு கோபத்துடன் ஊடகங்களைச் சாடினீர்கள்? இறுதியில் உங்களுக்கு அந்தக் காரைப் பரிசாகக் கொடுத்த ஃபியட் அல்லவா அந்த வரியைக் கட்டினார்!
பரிசுப் பொருட்களுக்கு வரி வாங்குவது சரியல்ல என்றே வைத்துக்கொண்டாலும் பரிசாக வாங்கிய அந்தக் காரை குஜராத்தில் ஒரு வியாபாரிக்கு விற்றுவிட்டீர்களே! அந்தக் காரை விற்று வந்த வருமானத்தை எந்தக் கேபிடல் கணக்கில் காட்டி எப்படி சமாளித்தீர்கள்?
நல்ல இந்தியக் குடிமகன் வருமான வரியை உடனே கட்ட வேண்டும். அரசை ஏமாற்றாமல் கட்ட வேண்டும், சரியாகக் கட்ட வேண்டும், என்றெல்லாம் இந்திய அரசு எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.. அதே இந்திய அரசு தான் உங்களுக்கு
பாரத ரத்னா வழங்கி இருக்கிறது!
சஹாராவின் க்யு ஷாப் விளம்பரத்தில் நீங்களும் வந்தீர்கள்.. அதுவும் செபி அந்த நிறுவனத்தின் மீது சந்தேகப்பட்டு யாரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அறிவித்தப் பின்னரும் உங்கள் விளம்பரங்கள் ஓடிக்கொண்டு இருந்தன! ஒரு பேச்சுக்காவது சஹாராவின் மீது உங்கள் வருத்தத்தைப் பதிவு செய்திருப்பீர்களா? அதுமட்டுமா சச்சின், ஹோம் டிரேட் விளம்பரத்தில் உங்களைப் பார்த்து வீடு வாங்க தங்கள் சேமிப்பைக் கட்டி வீடும் கிடைக்காமல் நடுவீதிக்கு வந்தவர்களைப் பற்றி என்றைக்காவது வருத்தப்பட்டிருப்பீர்களா சச்சின்?
நீங்கள் நன்றாக விளையாண்டீர்கள், அதற்கு மிக அதிகமாகவே உங்களுக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. கிரிக்கெட் மட்டை வியாபாரத்தில் நீங்கள் கொடி கட்டிப் பறந்தது போல இனி எவராலும் பறக்க முடியாது! வாய்ப்புகளும் வசதிகளும் உங்கள் வாசலில் கொட்டியது போல யாருக்கும் வாய்த்ததில்லை. நீங்கள் எப்போதும் இந்தியாவுக்காக விளையாடியதாக எல்லோரும் சொல்கிறார்கள், நீங்களும் கூட இப்போதெல்லாம் அடிக்கடி அப்படித்தான் சொல்லிக்கொண்டீர்கள்.. ஆனால் உங்கள் சட்டைக்காலரிலிருந்து கை, கால், சட்டைப்பை என்று உங்கள் உடலெங்கும் விளம்பரங்களைச் சுமந்து கொண்டுதானே விளையாடிக் கொண்டிருந்தீர்கள்!
இதெல்லாம் பெரிய குற்றச்சாட்டுகள் இல்லை என்கிறீர்களா சச்சின்? அப்படித்தான் .. நீங்கள் வெறும் கிரிக்கெட் வீரராக, ஏன் கிரிக்கெட்டின் அடையாளமாக மட்டுமே இருக்கும் வரை இதெல்லாம் இந்த விளம்பர உலகத்தின் ஓர் அங்கமாகவே இருக்கும். ஆனால் இந்தியாவின் பாரத ரத்னா சச்சினுக்கு?


Sunday, November 10, 2013

மவுனத்தின் பிளிறல்





உங்கள் இலைகளில்
ஓரமாக ஒதுக்கப்படும்
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கு வருத்தமில்லை.
ஆனால்...
உப்பாக இருக்கிறேன்.
இந்த  உண்மை
உங்களுக்கு உவப்பானதாக இல்லை.
எனக்கும் தான்!

*

உங்களுக்கு விருப்பமானதை மட்டுமே
நான் விரும்புவதில்லை
உங்கள் பூமியில்
ஒரே சூரியன்
என் பிரபஞ்சமெங்கும்
ஒரு கோடி சூரியன்கள்
என் சிறகுகளை   
உங்கள் சூரியனால்
எரித்துவிட முடியாது.
ஏனே னில்
உங்கள் சூரியக்கதிர்களுக்கு
கங்குகளை ஏற்றி
சூடேற்றியது எம் சிறகுகள்.

*

என்னோடு நீங்கள் நடத்தும்
தீண்டாமை யுத்தத்தில்
பெரியாரின் கைத்தடி
எனக்கு மூன்றாவது காலல்ல.
மூன்றாவது கண்.

*

வெறுப்பின் உச்சத்தில்
உங்கள் தலைகள்
விலக்க முடியாத
அச்சத்தில்
என் இதயம்.

*

கடகரேகைக்குள்
மகரரேகை சங்கமிப்பதில்லை.
பூமத்திய ரேகையின்
விதிக்குள் புதைந்துவிட்டது
இந்தப் பஃறுளி
மவுனத்தின் பிளிறலோடு.




 




Saturday, November 9, 2013

அதிரடி.... வணக்கம் மும்பை






பத்திரிகை, புத்தகம் .. வெளியீடுகள் எப்போதும்
மும்பையில் நடந்துக்கொண்டிருக்கின்றன.

பத்திரிகை - நாளிதழோ வார மாத இதழ்களோ வெளியிடும் போது
யாரை வைத்து வெளியிடுவது என்பது எப்போதுமே வெளியிடுபவருக்குப்
பிரச்சனையாகத்தான் இருக்கிறது.
யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?
முன்னாள் தலைவருக்கா? இன்னாள் தலைவருக்கா?
யார் முதல் பிரதியை வாங்குவது?
யாரை விமர்சனம் செய்ய சொல்லலாம்?
அல்லது யார் விமர்சனம் செய்தால் பிரச்சனைகள் இருக்காது?
யார் யாரெல்லாம் வாழ்த்துரையில் இருக்கிறார்கள்?
வாழ்த்துரையில் இல்லாத பெயர்களை முன்னிலையில் போட்டுவிடலாம்.
முன்னிலையிலும் விடுபட்டவர்களை சிறப்பு அழைப்பாளர்கள் போட்டுவிடலாம்

இதில் முன்னிலை பட்டியலுக்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலுக்கும்
என்ன வேறுபாடு? என்று யாரும் யோசித்து யோசித்து மண்டை காய வேண்டாம். !

இப்படியாக சகலவிதமான முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்படும் அழைப் பிதழில் தங்கள் பெயர் எத்தனாவது வரிசையில் யார் யாருக்குப் பின்
அச்சிடப்பட்டிருக்கிறது என்று பார்த்து வருத்தப்பட்டு தங்களின் ரேட்டிங்
இறங்கிவிட்டதாக நினைத்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
எங்கள் மும்பைவாசிகள் சிலர் ..

பத்திரிகை வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை என்ற
பெயரில் "உன்னால் பத்திரிகை நடத்த முடியாது" என்று வாழ்த்திவிட்டுப்
போகிறவர்களும் உண்டு. அவ்வளவு நல்ல மனசு அவர்களுக்கு.
தங்கள் தோல்வி அனுபவங்களால் அடுத்தவருக்கு எச்சரிக்கை செய்கிறார்களாம்!


இப்படியான பல காட்சிகள் அடிக்கடி அரங்கேறும் மும்பையில்
சரிதான் போங்கப்பா... நான் இந்த வெளியீட்டு விழா விளையாட்டுக்கெல்லாம்
வரவில்லை. என் "வணக்கம் மும்பை" இதழை தமிழர்கள் அதிகம் வாழும்
தாராவி சாலையில் வெளியிடப்போகிறேன் என்று சொல்லி அப்படியே
நவம்பர் 2 ல் மாலை 5 மணி வாக்கில் தாராவி 90 அடிச்சாலையிலும்
குறுக்குச்சாலையிலும் தன் பத்திரிகையை வெளியிட்டிருக்கிறார்
மும்பை பாமரன். எந்த முன்னறிவிப்பும் இன்றி சாலையில் போன ஒருவரை
அழைத்து " நீங்கள் தான் அய்யா இந்தப் பத்திரிகையை வெளியிடுகின்றீர்கள்!"
என்று சொன்னால் அந்த நபருக்கு எப்படி இருந்திருக்கும்?

பத்திரிகை வெளியீட்டில் அதிரடியாக இப்படி செய்திருக்கும்
வணக்கம் மும்பையின் ஆசிரியரிடம் பத்திரிகையின் நோக்கம் குறித்துக் கேட்டால்
"வணக்கம் மும்பை வாசிக்கிற வாசகன் கொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்கனும்ங்க, லோ லோனு மும்பை டிரெயினில் ஏறி போயி வேலைப் பார்த்திட்டு அலுத்து வற்ற நம்ப ஆள்களுக்கு என். எஸ். கே பாணியில்
ஏதாவது சொல்லிட்டு இருப்போங்க.. சரிதானே !நான் சொல்றது?" என்று
சொல்லிவிட்டு வேகமாக வீரார் டிரெயின் பிடிக்க ஓடுகின்றார்.

Tuesday, November 5, 2013

மன்மோகன்சிங்கை நம்புங்கள்!







மன்மோகன் சிங் நல்ல மனிதர்.
அமைதியானவர்.
ஆடம்பரம் இல்லாதவர்.

அவருக்கு இலங்கையில் முந்திரித் தோப்புகள் நிச்சயமாக இல்லை.

அவர் ரஜபக்சேவின் விருந்தில் கலந்து கொண்டு
தங்க ஒட்டியாணமோ அல்லது வைர நெக்லஸொ பரிசாக..
இல்லை... தங்க டர்பனோ கட்டிக்கொண்டு வரப்போவதில்லை.

எதையும் வாய்திறந்து பேசவெல்லாம் மாட்டார். அவரை நம்புங்கள்.
நம் இளவரசர் ராகுல்காந்தியாவது தீவிரவாதம், படுகொலை ,என் பாட்டி
அப்பா என்று ஏதாவது உளறிக்கொட்ட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் நம் மன்மோகன்சிங் அப்படி எல்லாம் எதுவும் உளறக்கூட
மாட்டார்.

சரி எதிலாவது கை எழுத்துப் போட்டுவிட்டு வந்துவிட்டால் என்ன
செய்வது? ஒட்டு மொத்த இந்தியாவின் தலைவர் ஆயிற்றே என்று
பயப்படுகின்றீர்களா..?

என்ன இவ்வளவு விவரம் கூட இல்லாமல் இருக்கின்றீர்கள்?
ஒப்பந்தங்களில் கை எழுத்து போடுவதே அதை மீறுவதற்குத் தான்!
அதிலும் இதில் உலக அரங்கில் முன்னணியில் நிற்கும் இந்திய-இலங்கை
ஒப்பந்தங்கள் பற்றி அறிந்தப் பின்னருமா கவலைப்படுகின்றீர்கள்?



பிறகென்ன...?

மன்மோகன்சிங் இலங்கை சென்றால் விபரீத விளைவுகளைச் சந்திக்க
வேண்டி வரும் என்று திமுக தலைவர் கலைஞர் வேறு பயமுறுத்துகிறார்.
கலைஞர் டிவியில் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளின் தாக்கம் இது
என்பது தெரியாமல் பாவம், மன்மோகன்சிங்  ரொம்பவும் பயந்துவிடப்
போகிறார். டில்லியின் வெள்ளை வேட்டியும் கலைஞரும் சேர்ந்து
இப்படி மன்மோகன்சிங்கை வைத்து காமெடி கலாட்டா செய்வதை
நிறுத்த வேண்டும் என்று நரேந்திரமோதியே கூட நாளை கண்டன
அறிக்கை வெளியிடலாம். பிறகென்ன... மன்மோகன்சிங் என்ன காங்கிரசு
மந்திரியா..?. இந்தப் பாரதநாட்டுக்கே பிரதம மந்திரியாயிற்றே!!



காங்கிரஸூ கோபண்ணா அவர்களின் தீவிர ரசிகர்கள்/ ரசிகைகளின்
கவனத்திற்கு:

அடுத்த முறை உங்கள் கோபண்ணா  அவர்கள்  டிவியில் நேர்ப்படவோ
நேர்ப்படாமலோ பேசும் போது மன்மோகன்சிங் போவதைக் குறித்து
யாரும் அதிகம் பயப்பட வேண்டியதில்லை என்பதைக் கட்டாயம் சொல்லும்படி
செய்தி அனுப்பி விடுங்கள்.




Saturday, November 2, 2013

பெண்களும் கொண்டாட்டங்களும்







அம்மா அருள் வந்தவள் போல ஆடிக்கொண்டு இருக்கிறாள்.
அவள் கைகள் இரண்டு என்றாலும் பன்னிரெண்டு கரங்களுடன்
அவள் வலம் வருவது போலிருக்கிறது.

வீட்டின் மூலை முடுக்கெல்லாம் துடைத்து வைக்கிறாள்.
பலகாரங்கள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்கிறாள்.
அதன் பின் நள்ளிரவு வரை உட்கார்ந்து இனிப்பும் காரமும்
என்று ஒவ்வொரு சுவையிலும் செய்துஅடுக்கி வைக்கிறாள்.

அதிகாலையில் எழுந்தே வாசலில் ரங்கோலி போட்டு விளக்கு
ஏற்றி வைத்துவிட்டு குளித்து பூஜை செய்து சாப்பாடு மேசையில்
அனைவருக்குமான பலகாரங்களை அலங்காரமாக அடுக்கி வைத்து
காத்திருக்கிறாள்.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ்,  ரம்சான், கோவில் கொடை, திருவிழா,
இப்படி எதுவாக இருந்தாலும் அங்கெல்லாம் அம்மாக்கள் இப்படி
அவதாரங்கள் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் அடிக்கடி என் அம்மா அலுத்துக் கொள்கிறாள்
அவள் அம்மா செய்ததில் பாதி அளவு கூட அவள் செய்யவில்லையாம்!
அவள் மிகைப்படுத்தி எதையும் சொல்லவில்லை என்பது எனக்குத் தெரியும்.
.
பால்கனியிலிருந்து பார்க்கிறேன்.

எங்கள் மும்பை நள்ளிரவிலும் மின்வெளிச்சத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. கடைவீதிகள் எங்கும் கூட்டம், கூட்டம்
பெண்களின் கூட்டம். அவரவர் தகுதிக்கு ஏற்ப விரிந்து கடைப்பரப்பி இருக்கிறது சந்தை. அடுக்குமாடிகளின் குளிரூட்டப்பட்ட கார்ப்பரேட்
கடைகள் முதல் ரோட்டோரத்தில் கோலமாவு விற்கும் மவுசி வரை...
கூட்டம் கூட்டம் எங்கும் பெண்களின் கூட்டம்.
வீடுகள் தோறும் என் அம்மாக்களின் அவதாரங்கள் !


என் அம்மா சக்தியை வழிபடுபவள்.
என்னிடம் சக்தியின் மகிமைகள் குறித்து எத்தனையோ கதைகளையும்
தன் அனுபவங்களையும் சொல்லி இருக்கிறாள்.

அவள் கடைசிவரை சொல்லாத ஒரு கதை....

அம்மா ,
இந்தக் கொண்டாட்டங்கள்
சக்திக்கு
 மயிலிறகா? முள்கிரீடமா?

Saturday, October 26, 2013

தங்கர்பச்சன் பதட்டமும் என் கேள்விகளும்








தமிழ் வழிக்  கல்வி குறித்து தங்கர்பச்சன் பதட்டமடைந்திருக்கும்
செய்தி மகிழ்ச்சிக்குரியது.
பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் அவர்  இவ்வாறு சொல்லி இருக்கிறார். 

"வெளிநாடு சென்றிருந்த நான் சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை திரும்பினேன். கடலூர் மாவட்டப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி வகுப்பில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற செய்தியைப் படித்தவுடன் மிக வருத்தமாக இருந்தது. புகைப்படத்தில் பத்திரக்கோட்டை தொடக்கப்பள்ளி என்பதை பாத்தபோது மேலும் அதிர்ந்தேன். காரணம் அது நான் படித்த பள்ளி. அந்தப் பள்ளியின் அரசமர நிழலில் 'அ' என்ற எழுத்தை எழுதி எனது கல்வியைத் தொடங்கினேன். ஆலமர இலைகளைத் தைத்து அதில் மதிய உணவுடன் கல்வியையும் சேர்த்து உண்டு வளர்ந்தவன் நான். அந்த சாதாரணப் பள்ளியில் பயின்று தான் நான் ஒரு இயக்குனராக உயர்ந்துள்ளேன். எனது முதல் படமான 'அழகி', சமூகத்தில் முன்னேறியுள்ள பலர் தாங்கள் படித்த பள்ளிகள் குறித்த நினைவுகளையும் அவற்றை தரமுயர்த்த தங்களாலான உதவிகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்த 'பள்ளிக்கூடம்' என்ற படத்தை இயக்க எனக்கு ஆதாரமாக இருந்தது அந்தப் பள்ளிதான். இன்றுள்ள சிந்தனையாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் இதுபோன்ற பள்ளிகளில் இருந்து வந்தவர்கள் தான். மொத்தமே 3,000 பேர் இருக்கும் பத்திரக்கோட்டையில், ஒருவர் கூட தங்கள் குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க ஆர்வம் காட்டவில்லையே என்பது தான் என் பதற்றதுக்குக் காரணம்."


உங்கள் பதட்டத்தையும் அதற்கான காரணத்தையும் மிகவும் மதிக்கின்றேன். அதே நேரத்தில் உங்களைப்  போல திரைப்படங்கள் எல்லாம் எடுத்து எவ்வித பிரபலமும் அடையாத என் போன்ற
சாதாரண தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சில கேள்விகளையும் இந்தப் பதட்டத்துடன் சேர்த்து
நீங்கள் பார்த்தாக வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்த வேண்டுகோளை வைப்பதற்கு எனக்கு மற்றவர்களை விட மிக அதிகமான தகுதி  இருக்கிறது என்பதை நீங்கள் முதலில்   தெரிந்து கொள்ள வேண்டும்..

தமிழ் தமிழ் என்று நீங்கள் பேசும் அ தே தமிழை சற்று உரக்கப் பேசிய ஒரு தலைமுறையின்
வாரிசுகள் இந்தக் கேள்வியை முன்வைப்பதில் இருக்கும் நியாயத்தை நீங்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.

நியாயங்கள்:

1)  தலைவர்கள் பேசிய தமிழால் தொண்டர்களின் பிள்ளைகள் எல்லாம் தமிழ் படித்தார்கள். தமிழில் படித்தார்கள். தமிழர்களாகவே இன்றுவரை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் தலைவர்களின் பிள்ளைகள் யாரும் தமிழ்ப் படிக்கவில்லையே! ஏன்?
அவர்கள் நாடாளுமன்றம் போகவும் மத்தியில் அமைச்சராகவும் இந்தி பேசக் கற்றுக் கொண்டது கூட
ஒரு காரணமாகச் சொல்லப்பட்ட தே! அப்போதெல்லாம் நீங்கள் பதட்டப்படவில்லை.
தொண்டர்களின் பிள்ளைகள் தான் தமிழைக் காப்பாற்ற வேண்டுமா என்ன?
போதும் தங்கர்பச்சன், கொஞ்சம் மாற்றிக் கொள்வோம். தலைவர்களின் பிள்ளைகளை
தமிழால் அரசாள வந்தவர்களை கொஞ்சம் தமிழ் படிக்கச் சொல்லுங்கள், தமிழில்  படிக்கச் சொல்லுங்கள்.

2) அது என்ன அரசுப்பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகள் மட்டுமே தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று
எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் மட்டும் தான் தமிழர்களா? புற்றீசல் போல ஆங்கில வழிக்கல்வி
நிலையங்கள் திறக்கப்பட்டதும் கல்வி நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டிப் போட்ட
போதும் பதட்டப்படாத நீங்கள் இப்போது எதற்கு பதட்டப்படுகின்றீர்கள்?

 3) அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எல்லோரும் சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும்
அடித்தட்டு நிலையில்  இருக்கும் மக்கள். அவர்கள் குழந்தைகள் ஆங்கிலம் படித்துவிட்டுப் போகட்டுமே!
தலைவர்கள், சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள் என்று ஊடகங்கள் வெளிச்சப்படுத்தும் அனைவரும்
தங்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலம் வழிக் கல்வியில் அனுப்பி தங்கள் தரத்தை மேம்படுத்திக் கொண்டிருப்பதாக பாவனை / அல்லது தக்க வைத்துக் கொண்டிருக்கிக்கும் நினைப்பு.  இ ந்த வெளிச்சத்தைப் பார்க்கும்
எங்கள் குப்பனும் சுப்பனும் தன் பிள்ளைகள் ஆங்கில வழிக் கல்வி கற்க ஆசைப்படுவது தவறா
தங்கர்பச்சன்,?  சொல்லுங்கள்!

4) மேற்கண்ட குற்றச்சாட்டுகள் இன்றி இன்னார், இந்த தலைவர் இருக்கின்றார், இந்த அறிவுஜீவி
இருக்கின்றார் என்று நீங்கள் ஒருவரை அடையாளப்படுத்தினால்,
 தங்கர்பச்சன் அவர்களே, வாருங்கள் போராடுவோம், மும்பையிலிருந்து சில இலட்சம்
இளைஞர்களை அழைத்துவர நான் தயாராக இருக்கின்றேன்.


நம் தமிழ்நாட்டில் யார் தமிழ்ப் படிக்க வருகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துப் பாருங்கள்,
வேறு துறைகளில் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், 
அப்புறம் பெண்கள்/ அதிலும், 
பெண்கள் அதிகமாக படிக்க வருவது கூட ' சரி திருமணம் வரை ஏதாவது படிச்சிட்டு இருக்கட்டும் என்ற நினைப்பும் திருமண அழைப்பிதழில் டிகிரி போட வேண்டிய அந்தஸ்த்து கருதியும் தான் படிக்கிறார்கள்.
இவ்வாறு படிக்க வந்தவர்கள் தமிழைக் காப்பாற்றிவிடுவார்கள் என்று எப்படி நம்புவது?

இன்னொரு செய்தி தெரியுமா தங்கர்பச்சன்? தமிழில் முனைவர் பட்டம் பெற்ற 95% பேருக்கு
33 வயதுக்கு மேல்தான் திருமணம் நடைபெறுகிறதாம்!
வெறும் பதட்டங்கள் , போராட்டங்கள், ஆவேச உரைகள் எங்களுக்கு அலுத்துவிட்டது.
இந்தக் கல்வி முறையில் மாற்றம் தேவை. 

இந்த நாட்டில் ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்களுக்கு அதிக அளவு மன அழுத்தம் இருப்பது ஏன்?
மிகக் கேவலமாக இந்த சமூகத்தால் பார்க்கப்படும் தமிழ்ப் படித்தவன் எவனாவது தற்கொலை செய்து கொண்டதாக கேள்விப் பட்டிருக்கின்றோமா? அவன் படாத என்ன அவமானத்தை இந்த ஐடி அதிகச் சம்பளக்காரன் அனுபவித்துவிட்டான். ????
பனிரெண்டாம் வகுப்பு வரை மனப்பாடம் செய்து மார்க் வாங்கும் மாண்வன் தான் சுயமாகச் சிந்திக்க ஆரம்பிக்கும் வயதில் தன் பண்பாடு சார்ந்த மொழியைக் கற்பதில்லையே! பணம் சம்பாதிக்கும்
படிப்பை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை மட்டுமே படித்து வெளியில் வருபவன்
வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளவில்லை, அப்படி ஒரு கல்வியைக் கொடுக்கும் கல்வி முறை நம்மிடம் இல்லை.

இது ஒரு பக்கம் என்றால் தமிழ்ப் படிக்கிறவனின் நிலையும் தகுதியும் வெளியில் சொன்னால் வெட்ககேடு! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று
இவர்களால் எதாவது செய்ய முடியுமா?  தமிழில் படிக்கிறவன் என்றால் மொழிகள் பல தெரிந்தவன் என்ற நிலை வராத வரை தமிழில் படிப்பதை வெளியில் சொல்ல வெட்கப்படும் நிலைத்தான் தொடரும்.

தமிழ்ப்படிக்கிறவனுக்கெல்லாம் இந்தியோ, ஆங்கிலமோ, பிரஞ்சோ , சரி அதை எல்லாம் விடுங்கள்
குறைந்த அளவு மலையாளம், கன்னடம் , தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும், இரண்டாவது மொழியாக
இரண்டு மொழிகள் இருக்க வேண்டும் என்று மாற்றிப் பாருங்கள். தமிழ் வளரும். தமிழன் வாழ்வு
உயரும்.

சிலர் மரங்களை வெட்ட மாட்டார்களாம். வெட்டினால் வெளிப்படையாக தெரிந்துவிடும் அல்லவா?
அதனால் மரத்தில் அடியில் நஞ்சு கலந்து மண்ணொடு மண்ணாக வைத்துவிடுவார்களாம்!
அப்படித்தான் தமிழ் என்ற மரத்தின் அடியில் நஞ்சு கலந்திருக்கிறது.
அவர்கள் மண்ணைத் தோண்டிய போதெல்லாம் ஏ ன் தோண்டுகின்றாய்? என்ற கேள்வியை நாம்
கேட்கவில்லை?  உரம் வைப்பவனையும் நஞ்சு வைப்பவனையும் பிரித்தறியும் நுண்ணரசியல்
நம்மிடம் இல்லை. மரத்தின் இலைகள் வாடி விட்டன. அங்கு கூடு கட்டி இருந்த பறவைகளைக் காணவில்லை. இதோ  இந்த மரத்தில் கூடு கட்டி இங்கிருந்து தான் நான் பறக்க ஆரம்பித்தேன்,
எங்கே போய்விட்டன எம் பறவைகள்? என்று பதட்டப்படுகின்றீர்கள்.
பறவைகளைக் குற்றம் சொல்லி என்ன பயன் தங்கர்பச்சன்?

Tuesday, October 22, 2013

தேவனே...!



நான் நாடகம் எழுதினேன்
ரசித்தவர்கள் என்னை நடிக்க வைத்தார்கள்
நடிப்பு ஒரு அற்புதமான கலை
ஒப்புக்கொண்டேன்.

வசனங்கள் மனப்பாடம் ஆனது.
ஒத்திகைகள் தேவையில்லை 
மேடை ஏறிய தருணங்களில்
நாக்குகள் கீரிடங்களாக 
ஒளிவட்டங்களாக 
 தலையைச் சுற்றி
ஓடிக்கொண்டிருந்தன.
திரைவிலகிய நேரம்
ஒப்பனைகள் 
கர்த்தாக்களைக் கொலை செய்தன.

நிஜங்கள் நிழல்களின் ராஜ்யத்தில்
அடிமைகளாக இருந்ததை
உணர்ந்த தருணம் அது.
சாத்தான்கள் வேதம் ஓதலாம்
வேதங்களே சாத்தான் ஆகலாமா?

சிலுவையைச் சுமந்தபடி
ரத்தக்கறையுடன்
தொடரும் பயணத்தில்
பாவமன்னிப்புகள்
மறுக்கப்பட்டன.
சுயம் காயடிக்கப்பட்டது.
இந்தக் கல்லறையிலிருந்து
மீண்டும் விழித்தெழ
அந்த தேவனின் ராஜ்யம்
"பரிசுத்தப்படுவதாக"
ஆமென்.






Sunday, October 13, 2013

கனவுகள் விழித்திருக்கின்றன







சகலமும் நொறுங்கிய புள்ளியில்
உன் அவதாரம்
என்னில் ஜனித்தது.

வெறுமையிலிருந்து
நீ வெளியில் வந்தாய்
என்னையும் சேர்த்து
இழுத்துக்கொண்டு.


நான் யாரென்று
அறியாத பயணத்தில்
நீ
வெறும் கற்பனையோ
என் கனவுகளில்
பச்சைப்பாவாடையில்
பக்கத்தில் ஓடிவந்த
அவளோ?
அவள் பிம்பமோ?
யாரென்று
நான் சொல்ல?

விழிகள் திறந்துவிட்டால்
விளையாடும் மேகங்கள்
களைந்துப் போய்விடுமோ?
அச்சத்தில்
கண்மூடிக்கிடக்கின்றன
விடிவெள்ளிகள்.

விழித்திருப்பதாக
இதுவரை ஆடிய
ஆட்டம்
தோற்றுப்போனது.

இரவு விழிகள்
களவாடியக் கனவுகள்
இன்னும் தூங்கவில்லை
விழித்திருக்கின்றன
எனக்காக.