Sunday, November 10, 2013

மவுனத்தின் பிளிறல்





உங்கள் இலைகளில்
ஓரமாக ஒதுக்கப்படும்
கறிவேப்பிலையாக
இருப்பதில்
எனக்கு வருத்தமில்லை.
ஆனால்...
உப்பாக இருக்கிறேன்.
இந்த  உண்மை
உங்களுக்கு உவப்பானதாக இல்லை.
எனக்கும் தான்!

*

உங்களுக்கு விருப்பமானதை மட்டுமே
நான் விரும்புவதில்லை
உங்கள் பூமியில்
ஒரே சூரியன்
என் பிரபஞ்சமெங்கும்
ஒரு கோடி சூரியன்கள்
என் சிறகுகளை   
உங்கள் சூரியனால்
எரித்துவிட முடியாது.
ஏனே னில்
உங்கள் சூரியக்கதிர்களுக்கு
கங்குகளை ஏற்றி
சூடேற்றியது எம் சிறகுகள்.

*

என்னோடு நீங்கள் நடத்தும்
தீண்டாமை யுத்தத்தில்
பெரியாரின் கைத்தடி
எனக்கு மூன்றாவது காலல்ல.
மூன்றாவது கண்.

*

வெறுப்பின் உச்சத்தில்
உங்கள் தலைகள்
விலக்க முடியாத
அச்சத்தில்
என் இதயம்.

*

கடகரேகைக்குள்
மகரரேகை சங்கமிப்பதில்லை.
பூமத்திய ரேகையின்
விதிக்குள் புதைந்துவிட்டது
இந்தப் பஃறுளி
மவுனத்தின் பிளிறலோடு.




 




2 comments: