Saturday, November 12, 2022

வலி முறித்த மின்னல்


 உன்னைப் புதைத்த இடத்தில்

எங்காவது

உறவின் அர்த்தங்கள்

பூத்திருக்கலாம்.

அப்பூவின் பெயர் 

தெரியாமல் இருக்கலாம்.

ஆனாலும்...



கூடவே இருக்கிறது

நம்பிக்கையில் கிழிபடும்

நாட்காட்டி நாட்கள்.

நாடு கடத்திய தேசங்கள் உண்டு.

வீடு கடத்திய உறவுகள்???!!

அலைந்து கொண்டிருக்கிறது

காலத்தின் சாபம்.

யாரை யார் விரட்டுவது?!


பிறந்த வீடும்

வளர்ந்த முற்றமும்

கதவடைத்துவிட்ட வாசலும்

திறந்து வைத்திருக்கின்றன

கல்லறைகளை மட்டுமே.

ஆடுமாடுகள் இளைப்பாறும்

நிழலில்

நினைவுகளை அசைபோடும்

நிழலோடு நானும்.

என்மீது கவிந்திருக்கும்

உன் வாசனையை எரிக்கிறேன்.

மல்லிகைப்பூ ஊதுவத்தி

மணக்கும்..

பறக்கும் சாம்பல் துளியிலும்

காற்றோடு கலந்து

நம் கதைகளைப் பேசும்.

..

உன் தேசம்

எனக்கானதாக இல்லை.

வலி முறித்த மின்னல்

மழைத்துளியின் ஈரத்துடன்

கசிகிறது..


++அப்பாவின் நினைவுநாள்.

13 நவம்பர் 1986

Tuesday, November 8, 2022

கனவுகள் விரியும்..விழி.


 


கவிஞர் விழி.பா.இதயவேந்தன் என்ற பா.அண்ணாதுரய் அவர்கள் தலித் சிறுகதை எழுத்தாளர் என்றே பொதுவாக அறியப்படுகின்றார். 1984 முதல் எழுத ஆரம்பித்த இவரின் இலக்கியப் பயணம் இன்று கிட்டத்தட்ட 14 புத்தகங்களாக இந்த விளிம்புகளுக்கு வெளிச்சம் தந்துக்கொண்டிருக்கின்றது.

நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை என்ற சிறுகதைகளின் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல்கள், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைகளின் தொகுப்பு... இந்த எழுத்து வரிசையில் ஒற்றையாக நின்று கனவுகளை விரிக்கின்றது அவருடைய கவிதைகள்.
கவிதைகளின் தொகுப்பு : கனவுகள் விரியும்.

"அடிப்படையில் நான் ஒரு கவிஞனா என்றால் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கலைஞன்.. கலையின் பிரமாண்டமான உலகத்தில் ஒரு சின்ன உளியோடு கரடுமுரடான கற்களிலிருந்து கலைகளாக வடிக்கத் துவங்கியிருக்கிற ஒரு எளிய சிற்பி" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் கலைஞர் இந்தக் கவிஞர்.

தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும்போது, அதுவும் அவர்களின் ஒருவரே எழுதும்போது வைதீக சமய சமூக அமைப்பின் நம்பிக்கைகள் தூக்கி எறியப்படுகின்றன. புரட்டிப் போடப்படுகின்றன. அகமும் புறமும் சார்ந்து இயங்கும் இவரின் எல்லா இயக்கங்களிலும் ஒடுக்கப்பட்டவனின் வலியும்
வேதனையும் பதிவுச் செய்யப்படுகின்றன. எது அழகு? என்று கவிஞனைக் கேட்டால் காலம் காலமாய்
ரோசாப்பூ அழகு
கள்ளிச் செடி அழகு
வானம் அழகு
நடசத்திரம் அழகு
நிலவு அழகு
சூரியனின் சூடு அழகு
நதி அழகு
காதலி அழகு
அவள் கண் அழகு
கருங்கூந்தல் அழகு
பெண் அழகு
பெண் விரும்பும் ஆணின் வீரம் அழகு
விவேகம் அழகு... இப்படி விரிக்கலாம்..
இப்படித்தான் அழகியல் விரிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் சொல்லப்போனால் இந்த அழகியல் சிந்தனை உலகம் தழுவிய அழகியல் சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் புள்ளியிலிருந்து விலகி விரிகின்றது இவரின் அழகு என்ற கவிதை

"அம்மாவின் யாசிப்பில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்குத் துணி

சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன
அம்மா நெட்டி முறித்து
அழகு பார்ப்பாள் என்னை
திரும்ப திரும்ப.."
(பக் 27)

தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை. தலித்தின் தோள்களைத் தழுவும் தோழமைக்கூட தோழமைக்கான அர்த்தத்தை காயப்படுத்தி விடுகின்றது. தலித்தின் வேதனையை அனுபவத்தை ஒரு தலித் உணர்வதற்கும் தலித் வட்டத்திலிருந்து வெளியில் நின்று உணர்வதற்கும் நிறைய வேறுபாகுகள் இருக்கத்தான் செய்கின்றது.

" நீ
எனக்கானவன் என்பதில்
எனக்கு இருக்கிறது
இன்னமும் சந்தேகம்.

எவற்றிலாவது உனது பதிவை
என்னுள் வைத்துப் பார்க்கத்
தொடர்பேயில்லாமல்
உன்னால் எப்படி முடியும்?"
( க : அர்த்தம்/ பக் 30)

"தமிழகத்தில் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே நால் வருணப்பிரிவுகள்

இருந்தன என்பதை நம் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அவர்கள் தலித்துகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அன்றுமுதல் இன்றுவரை தலித்துகளுக்கு மேலுள்ள பெரிய சாதிகள் முதல் சின்னச் சாதிகள்வரை ரொம்ப வன்மத்தோடு கண்காணித்து வந்துள்ளன. மீறினால் வன்முறைக்குத் தயாராக இருக்கின்றன " என்கிறார் தலித்தியச் சிந்தனையாளர் ரா.கவுதமன். அதை வரிக்கு வரிச் சொல்லும் கவிதைதான் இரத்தசாட்சி.

நீ
உயிரோடு இருந்ததற்கான
தடயங்களை ஒவ்வொன்றாய்
ஓர் ஆய்வாளனைப் போல்
பரிசீலித்துப் பார்த்தேன்..

மூச்சு முட்டமுட்ட
உன் குரல்கள் நெறிக்கப்பட்டிருந்தன.
கதறக் கதற
நீ கற்பழிக்கப்பட்டிருக்கிறாய்
அடையாளம் தெரியாதவாறு
உன் எலும்புகள்
நொறுக்கப்பட்டிருக்கிறது.
செல்லும் இடங்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய
செய்திகள்கூட எரிக்கப்பட்டிருக்கிறது."
(பக்: 32)

தலித்தின் வரலாற்றில் அவர்களின் அவலங்களுக்கு சாட்சியாய் நிற்பது மட்டுமின்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இரத்தசாட்சியாய் நிற்பது மட்டுமே தலித்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து கவிதையை நம்பிக்கை கனவுகளுடன் முடித்திருப்பது இரத்தசாட்சியை ஈரமுள்ளக் கவிதையாக்குகின்றது.

இப்படிப்பட்ட தலித்திய எழுத்துக்களால், சிந்தனைகளால் தீடிரென்று தலித்திய வாழ்வியல் மாறிவிடுமா?.. என்றால் அப்படிப் பட்ட  பூம்பா புரட்சிகளில் யதார்த்தத்தைப் படைக்கும் இவருக்கு நம்பிக்கை இல்லை. எதிலும் யதார்த்த நிலையை விட்டு விலகாமல் இவர் கனவுகள் விரிவது மட்டுமெ இவர் கனவுகளுக்கும் கவிதைகளுக்குமானத் தனிச்சிறப்பு என்றே சொல்லவேண்டும்.

"காலங்காலமாய்
நின்றிருந்ததில்
திடீரென்று பாய்ந்தோட
நம்மால் முடியாது.

ஓடமுடியாவிட்டால் என்ன
நிற்காதே.
ஓரடி முன்னால் வைத்தபடி
நட..

களத்தில் ஓடுவது
நாலை நடக்கும்வரை
இப்போதைக்குத்
தைரியமாய் நட!"
(பக்: 36 & 37)

தலித்தியப் படைப்பாளி தலித்திய பிரச்சனைகளை மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் மானுடம் தழுவிய ஒட்டு மொத்த வேதனையை, வறுமையை, வலியை, ஏமாற்றத்தை, இயலாமையை மற்றவர்களைவிட ஒரு தலித்தியப் படைப்பாளிக்கு உணர்வதும் உள்வாங்குவது படைப்பதும் எளிதான அனுபவமாகிவிடுகின்றது. ஆழ்கடலில் முத்துக்குளிப்பவனுக்கு கரையோரத்து கிளிஞ்சல்களைப் பொறுக்குவதில் சிரமம் இருப்பதில்லை. இதைத்தான் இவரின் நிறம், வியாபாரம், எங்கள் தெரு, குருவிக்கூடு, அலுவலக்சிறை போன்ற கவிதைகளில் காண்கின்றோம். இல்லற உறவில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. தன் பெண்டு, தன் வீடு , தன்பிள்ளை, தன் உறவு என்று வாழாமல் இயக்கம் சார்ந்து வாழும் ஆண்களுக்கும் இருக்கும் பிரச்சனையை மிகவும் நுட்பமான அந்த முரண்பாடை யாரையும் குற்றம் சொல்லாமல் இவர் எழுதியிருக்கும் கவிதைதான்

"எனக்கும் அவளுக்கும்".


எனக்குப் பிடித்தது
அவளுக்குப் பிடிக்கவில்லை

அவளுக்குப் பிடித்தது

எனக்குப் பிடித்த மாதிரி இல்லை.

எங்கோ ஓர்
வேர் முடிச்சு..
சுழன்று சழன்று
சுருண்டு அடங்கி
எனக்குள் அல்லது
அவளுக்குள்
விலக மறுக்கிறது..
(பக் 97)

அகம் சார்ந்து எழுதப்பட்டிருக்கும் சிலக் கவிதைகள் அதன் கருப்பொருட்கள் உரைநடை உத்திகள் பாத்திரப்படைப்புகள்.. இவருடைய சிலச் சிறுகதைகளின் மறுவாசிப்பாக இருப்பதை இவரின் கதைகளை வாசித்தவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இவருடைய சிறுகதைகளின் தொகுப்பு அம்மாவின் நிழலில் உள்ள சிறுகதைகள் அலுவலகச்சிறை, ஒரேயொரு பார்வையில்.. கதைகளைச் சொல்லலாம்.

சூடான அக்னிக்குழம்பாக கொதிக்கின்ற தலித்திய யாதார்த்த வாழ்வியலைப் படம்பிடிக்கும் இவரின் எழுத்துக்கள் எரிமலையாக வெடிக்காமல் வல்லினம் தவிர்த்து மென்மையாக ஒரு அதிர்ச்சியை மின்னலெனத் தாக்கிச் செல்கின்றன.

தலித்திய வாழ்வியலின் காட்சி, அதில் பிறக்கும் சமுதாயக் கேள்வி, முடிவில் நம்பிக்கைத் தரும் வரிகளில் முடிக்கும் வடிவமைப்பை கட்டமைத்துக் கொண்டு இவர் கவிதைக் கனவுகள் இலக்கிய வானில் விரிந்திருக்கின்றன.

கனவுகள் விரியும்
வெளியீடு: அநுராகம்
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை 600 017
விலை: ரூபாய் 30/ மட்டும்
பக்கங்கள் : 112

(மீள்பதிவு: நன்றி:  வார்ப்புகள்.காம்)






Tuesday, October 25, 2022

காஃபி வித் நாஞ்சில் நாடன்.


 என் முதல் கவிதை நூல் சூரியப்பயணம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது. மிக மோசமான வடிவமைப்பு!!!

கவியரங்க கவிதைகளை வேறு இணைத்திருப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது.

முதல் புத்தகம் என்பதால் வெளியீடு விழா என பிரமாதப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. தன் வாழ்த்துரையில் நாஞ்சில் "எல்லாமே கடக்க முடிகிற தூரங்கள் தான், நடக்கத் தயாராக இருந்தால்" என்று முடித்திருப்பார்.

தூரங்களை கடந்திருக்கிறேனா ?!! தெரியாது.

நேற்று நாஞ்சில் நாடன் அவருடைய அண்மையில் வெளிவந்த 4 புத்தகங்களை " புதியமாதவிக்கு வாழ்த்துகளுடன்" என்றெழுதி கையெப்பமிட்டு அனுப்பி இருக்கிறார். காலையில் எழுந்தவுடன்' காஃபி வித் நாஞ்சில்'

பல நினைவுகளையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துவிட்டது.

என் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும்  வாழ்த்துரையுடன் அவர் எழுதி இருந்தக் கடிதம்.. அது என்னளவில் மிகவும் முக்கியமானது. அக்கடிதத்தில்

" கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல் ஏந்நதலினிது"

என்ற திருக்குறளோடு முடித்திருப்பார். என்  ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவருடைய அக்கடிதத்தை எடுத்து வாசிப்பது இன்றுவரை தொடர்கிறது.

தொல்குடி சிறுகதை தொகுப்பில்‌ தன்னுரையாக "கைம்மண் அளவு" என்று எழுதியவர் இதே திருக்குறளுடன் முடித்திருக்கிறார்..

இன்னும் பக்கங்களைப் புரட்டவில்லை!

முதல் பக்கத்தின் நினைவலைகள் இழுத்துச் செல்கின்றன.

அரசியல் கருத்து முரண்பாடுகள் உண்டு. இருவரும் அறிவோம். அதையும் தாண்டி அவர் எழுத்துகளை வாசிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும் எவ்வித நெருடலும் இல்லாமல் தொடர்கிறோம். தொடர்கிறேன்.

இலக்கியம் அதை எழுதுபவருக்கும்

வாசிப்பவருக்கும்

இதைக்கூட செய்யவில்லை என்றால்!

பேரன்பும் நன்றியும் நாஞ்சில் சார்.

Saturday, October 22, 2022

Ammu..அம்மூ...

 



Ammu….அம்மு

திரைப்படம் பாருங்கள்

எச்சரிக்கை..

 உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! 


“அடிக்கிற கைதான் அணைக்கும்”

ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக 

ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.

என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.

அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்

பயன்படுத்திக் கொள்வானாம்.!

இதைக் காரணமாக சொல்லும் எந்த ஓர் அறிவுஜீவி புண்ணாக்கும் பொம்பளக்கி கோபம் வந்தா என்ன செய்வாடேனு யோசிச்சதில்ல.

அது அப்படித்தான்.

காலம் காலமாக பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

இன்னிக்கு கணினி யுகத்தில் என்னவோ

இந்தப் பொம்பள பிள்ளங்க நாலு காசு சம்பாதிக்காறாங்களே

இதெல்லாம் வந்தப்பிறகு மாறிடுச்சு அப்படின்னு

சொல்லத்தான் ஆசை.

ஆனா.. இந்த மீசைக்காரப்பசங்க

சொல்லவிடுவதில்ல.

புதுசுபுதுசா எப்படி எல்லாம் தன் கோபத்தை

தன் மனைவி/ காதலி மீது காட்டுவது 

என்பதில் பல புதுப்புது வித்தைகளை அறிந்தவர்களாக

இருக்கிறார்கள்.


மிருகம் பாதி, மனிதன் பாதி..

என்பதில் மிருகம் எப்போதும் அவனிடம் தூங்குவதில்லை.

அது பாய்வதற்கு தயாராகவே இருக்கிறது.

அந்த மிருகத்திற்கு வடிகாலாகவே பலருக்கு

திருமண உறவு கை கொடுப்பது அவலம்தாம்!

(எல்லோரையும் சொல்லவில்லை. )

கை நீட்டி நான் என் பொண்டாட்டியை அடிப்பதில்லை 

என்று சொல்லும் ஆணிடமும் இருக்கிறது

அந்த மிருகம்.

அது மவுனத்தைக் கூட ஒரு பாய்ச்சலாக காட்டி

பெண்ணுடலையும் உள்ளத்தையும் பிறாண்டி

ரத்தம் கசிய வைத்து அதில் ஒரு சுகம் காணும்!

எத்தனை விதம் விதமான டார்ச்சர்கள்! ச்சே..

 “பொறுத்துப் போயிடும்மா” என்று சொல்வது தவறில்லைதான்.

ஆனால் “பொறுத்துப் போயிடுப்பா”னு அவனிடமும் சொல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இல்லாத இப்பிரச்சனை 

என் தலைமுறைக்கு ஏற்பட்டதாக எப்போதும்

நினைப்பதுண்டு நான். காரணம் அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை ஒரு கோவில். அவள் அதில் கேள்விகளின்றி சரணடைந்துவிட்ட பிறவி.

இங்கே உணர்வுப் பொங்க எழுதப்படும்

“நின்னை சரணடைந்தேன” என்பதும் 

காலம் காலமாய் ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல்.

அவள் சரணடைய தயாராக இருக்கிறாள்.

நீ அதற்கு தகுதியானவனாக 

இருக்கிறாயா?!!! 


இதை எல்லாம் எனோதானோனு எழுதவில்லை.

வேலையை விட்டவுடன் மும்பை Sophia College For Women

ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேர்ந்தேன். Women counseling , Domestic violence – law and police help  படிப்பும் பயிற்சியும். அப்பயிற்சியும் படிப்பும் முடித்து அதை

செயல்படுத்தும் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாக அமைந்தது. நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அவலங்கள் தெரிய வந்தது.  

‘யாரும்மா உன் புருஷன்?”

அவர்கள் சொன்னவுடன் ஏற்படும் அதிர்ச்சி…

அடப்பாவிகளா உனக்கு இப்படியும் ஒரு முகமா…!

அந்த நபர் எனக்கும் தெரிந்தவராகவும் சிலர் பிரபலங்களாகவும்கூட இருந்தார்கள். அது என்னை ரொம்பவும் மன உளைச்சலுக்குள் தள்ளியது.

மீண்டும் அந்த ஆண்களை சந்திக்கும்போது

பொய்யாக புன்னகைக்க முடியவில்லை.

இப்படியாக நானும் பாதிக்கப்பட்டேன்.

அதன்பின் தான் 

அவனுக்குள் இருக்கும் அந்த வேட்டை மிருகம்

எப்போதும் விழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்படித்தான் இருப்பான்.

நீ பொறுத்துப்போம்மா..என்பதன் அர்த்தம் இன்னும் ஆழமாக எனக்குள் வடுவானது.

பிறகென்ன…

நான் அதிலிருந்து வெளியில் வரவே சிரமப்பட்டேன்.


பெண்ணைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். அது பொய். அப்படி எழுதியதெல்லாம் ஆண்கள்.

ஆனால்… இப்போது சொல்கிறேன்…

ஆண் மனதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

அவனுக்குள் இருக்கும் அந்த மிருகம்

எப்போது பாயும்?

ஏன் பாய்கிறது?

அவன் தேவை என்ன?

அவன் காலம் காலமாய்

பெண்ணின் சரணாகதி நிலையிலும்

புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருக்கிறான்.

……

அம்மு … திரைப்படம்

இதன் ஒரு துளி.

பெண்கள் கட்டாயம் பாருங்கள்.

ஆனால் அவனுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டாம்.

தனியாக உட்கார்ந்து பாருங்கள்.


"take care Ammu

உன்னை உன் சுயத்தை இழந்து

வாழ்ந்துவிட முடியாது.

சரணடைதல் கூட அர்த்தமிழந்துவிடும்

take care மை டியர் அம்மு..

Thursday, October 20, 2022

கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது!?

 “கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது” 

-அறிஞர் அண்ணா.

(அண்ணா , திராவிட நாடு இதழ் , 06/1/1946)

இந்த வரிகளை அறிவார்கள். ஆனால் எத்தனை பேருக்கு

இதன் வரலாறு தெரியும்???

யாருமே பேசியதில்லை. ஏன்?!!!

ராஜாஜியை விவாதத்திற்கு அப்பாற்பட்ட   ஞானியாகவும் உத்தமராகவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டி எழுப்பியதில் வெற்றி பெற்றிருக்கின்றன. 

ராஜாஜி?!!!

1942ல் அலகாபாத்தில் கூடிய அகில இந்திய காங்கிரசில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் சகல பொறுப்புகளிலிருந்தும் உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொண்டார். 


வெள்ளையனே வெளியேறு காங்கிரசின் ஆகஸ்டு புரட்சி பற்றி எரியும்போது தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். ராஜாஜி கல்கத்தாவின் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ‘ஆகஸ்டு புரட்சியைக்’ கேலி செய்து பேசினார். 


இந்திய சுதந்திரம் நெருங்கியது என்றவுடன் ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கு காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோடு பகுதியிலிருந்து ‘ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது” 

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. அது எப்படி தனக்குத் தெரியாமல் 

திருச்செங்கோடு தேர்தல் நடந்தது என்று திகைத்தார். 

1945 அக்டோபர் 31ல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ் நாடு காங்கிரசுகமிட்டி ‘ராஜாஜியை தமிழ் நாடு காங்கிரசுக்குள் சேர்க்க கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் திருச்செங்கோடு கபட செயலுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரசு ராஜாஜி ஆகஸ்டிலேயே காங்கிரசில் சேர்ந்துவிட்டாரே என்று மெளலானா ஆசாத்தை விட்டு அறிக்கை வெளியிட வைத்தது. காமராஜர் ஏமாற்றப்பட்டார். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “ கோடு உயர்ந்தது, குன்ற,ம் தாழ்ந்தது “ என்றார்.

(கோடு – திருச்செங்கோடு, குன்றம் – திருப்பரங்குன்றம்)


 இதுமட்டுமல்ல, காந்திக்கும் காமராசருக்கும் நடுவில் கூட மனஸ்தாபங்களுக்கு காரணமாக ராஜாஜியே இருந்திருக்கிறார். காந்தியார் தமிழ் நாடு வந்திருந்தப்போது ராஜாஜி கூடவே இருந்ததும் தமிழ் நாடு காங்கிரசு தலைவராக இருந்த காமராஜர் காந்தியிடம் எதையும் உரையாட முடியாத சூழலும் ஏற்பட்டிக்கிறது . காந்தியும் காமராசரைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்: அரசியல் நட த்துகிறார்கள் என்று காமராஜரை மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்து காமராஜர் காங்கிரசிலிருந்து பதவி விலக தயாராகும் அளவுக்குப் போனார் என்பதுதான் உண்மை. ஆனால் காந்தி ஒரு மழுப்பலான அறிக்கையை தன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டு காமராஜரை சமாதானப்படுத்தினார். 


 1937ல் இந்தி திணிப்பு.. காங்கிரசு கட்சியின் விருப்பத்திற்கு மாறாகவே தன் விருப்பத்தின் படி இதைச் செய்த அதே ராஜாஜி அவர்கள்தான் 1957ல்

‘ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்று எழுதினார்.



ராஜாஜி தன் மொழிக்கொள்கையில் பல்டி அடித்தார் என்று எந்த ஊடகமும் எந்தப் பத்திரிகையாளரும் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை.

இதுதான் ராஜாஜி அவர்களின் பத்திரிகை ஊடக பலம்.

அன்று மட்டுமல்ல இன்றும் 

“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது “ இதனால்தான்.

Wednesday, October 19, 2022

கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை

 கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை




நேற்றுதான் அக்கவிதையின் தரிசனம்

என்ன ஒரு வாழ்க்கை இது!

பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில்தான்.

வாழ்க்கையில் எத்தனையோ முறை

அந்தக் கடலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே

பயணித்திருக்கிறேன்.

போகவேண்டும்..

எப்படியும் அந்தக் கவிதை அருகில்

அந்தக் கடலின் மொழியை

கரும்பாறைகளுடன் சேர்ந்து நானும்

வாசிக்க வேண்டும்..

அப்பாவிடம் கேட்கவே பயம்!

அப்பா அழைத்துச் செல்லவில்லை.

சங்கரிடம் கேட்கும்போதெல்லாம்

“IAM NOT INTERESTED”

நேற்றும் சங்கர் சொன்னது அதே வரிகள்தான்.

மும்பையை சுற்றிப்பார்க்க வரும்

உறவுகளும் தோழர்களும்

மகாலட்சுமிக்குப் போகும்போது கூட

சாலையோரத்தில் அழைக்கும் 

அக்கடலின் அழகைக் கண்டு கொள்வதில்லை.

தனியாக போயிருக்கலாமே..!

ஆம் போயிருக்கலாம்.

வெளி நாடுகளுக்குத் தனியாக பறக்கிறேன். 

ஆனால் உள்ளூரில் அது வாய்ப்பதில்லை.

ஏன்?

எனக்கும் தெரியவில்லையே…!


இத்தனை ஆண்டுகள் ஆசையும்

அந்த சூஃபிக்கவிதையை வாசிக்கவே முடியாதா

என்ற ஏக்கமும் தீர்ந்தது.

 நேற்றுதான் முதல்முறையாக

மும்பை ஹாஜி அலி தர்க்காவுக்கு போனேன்.


அந்தக் கடலின் மொழி.. 

இப்போதும் மாறவில்லை.

ஆனால் அது காயப்பட்டிருக்கிறது.

அதன் கம்பீரமும் நளினமும்

எந்திரமயமான வளர்ச்சி திட்டங்களால்

சிதைக்கப்படுகின்றன.

கவிதையின் மெளனமான அழுகையை

கேட்டிருக்கின்றீர்களா..?

நேற்று நான் கேட்டேன்.

எனக்கும் அழுகைதான் வந்த து.

ஆனால் அழுகின்றவருடன் சேர்ந்து அழுவதைவிட

அவர் கைகளைப்பிடித்துக் கொண்டு

மெளனத்தில் கரைவது உசிதம். 


சூஃபியின் மொழியுடன் நானும்.

எங்கள் இருவருக்கும் சாட்சியாக

எம் கடலும் கரும்பாறைகளும்.

கிளம்பி வரும்போது திரும்பிப் பார்க்கவில்லை



மக்ஃபியும் மெளலான ரூபியும்

வாழும் சூஃபிகளின் உலகத்தைக்

கடந்து வரும்போது

கால்களும் வலிக்கின்றன.

மெதுவாக  நடக்கிறேன்.

அலைகளும் பாறைகளும்

அங்கேயே இருக்கின்றன.

நான் மட்டும்?


“ உலகம் ஒரு கல்லறை. 

மரணம் 

அக்கல்லறையின் கதவுகளைத் திறக்கிறது.

சிறகுகள் இருப்பவர்கள் 

அதிலிருந்து பறந்து எழுகிறார்கள் .”

எப்போதோ எங்கேயொ வாசித்த சூஃபி கவிதையுடன்

நான் 

மீண்டும் ஜனக்கடலுக்குள் .

Sunday, October 16, 2022

காணாமல் போன கண்ணதாசனின் "சேரமான் காதலி"

 


கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’
காணாமல் போனது ஏன்?
கண்ணதாசனுக்கு சாகித்திய அகதெமி விருது
சேரமான் காதலி நாவலுக்காக.!
(இப்படியான சாகித்திய அகதெமி செய்த சேட்டைகள் நிறைய உண்டு)
அவ்வளவுதான்.
அதைப் பற்றி யாருமே பேசமாட்டார்கள்.
பிறகென்ன…?
 
யாருக்குத்தான் பிடிக்கும்!
 
 
உண்மையில் சேரனே அப்படி செய்திருந்தாலும்
அதைப் போயி கண்ணதாசன் எழுதி இருக்கலாமா!???
அதுதானே…
 
கதைப்படி மூன்றாம் சேரமான் பெருமாள் 
முடிசூட்டிக் கொள்ளும்போது
கண்ணதாசன் ஒரு கற்பனை காதலியை உருவாக்கினார்.
அவள் யூதப்பெண் யூஜியானா.
பதவியேற்கும்போது அவள் கர்ப்பவதி.
அரசன் பதவிக்கு அது ஆபத்து என்று நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
எனவே அவளை இஸ்ரேலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால் அதன் பின் சேரமானுக்கு இன்னொரு காதல் வருகிறது.
(வரக்கூடாதா என்ன?)
அரபுக்கப்பலில் வந்து இறங்கும் சலீமாவுடன் காதல்.
இப்போ சலீமா கதைப்பாத்திரம் உண்மையான வரலாறு.
சலீமாவை மணக்க அரசன் இசுலாமியராக வேண்டும்.
சலீமாவை அரசன் திருமணம் செய்து கொண்டால்??
இது யூதக்காதலியை விட ஆபத்தானது என்று
நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
உள் நாட்டு கலகம் வருகிறது.
பாண்டியர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசனைக் சலீமாவிடமிருந்து விடுவிக்க
யூதக்காதலியை மீண்டும் வரவழைக்கிறார்கள்.
கதையில் திருப்புமுனை…
யூதக்காதலி அரபுக்காதலியை விரட்டிவிடவில்லை.
அரசனின் இரு காதலியரும் தோழியர் ஆகிவிடுகிறார்கள்.
 
கதையின் முடிவில் 
சேரமான் தன் அரசை தன் உடன் பிறந்த சகோதரிகள், தம்பி மற்றும் உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு 
 சலீமாவுடன் கப்பல் ஏறி அரபு நாட்டுக்கு போவதாக முடியும்.
 
அதாவது சேரமானின் காதலி சலீமா..
சலீமாவுக்காக தன் அரியணையை விட்டுவிட்டார் சேரமான்.
கதையில் குலசேகர ஆழ்வாரின் கதை உண்டு.
வைணவம் உண்டு.
கதையில் கண்ணதாசனின் மெய்யியல் 
அதீத புனைவுகள் உண்டு.
 
சேரமான் காதலியில் சேரனின் காதல் வெற்றி பெறுகிறது.
ஆனால்.. என்ன இருந்து என்ன…!
கண்ணதாசனைக் கொண்டாடுபவர்களுக்கும்
கதையின் முடிவு உவப்பானதாக இல்லையோ.
ஆகையினால்,
கண்ணதாசனின் சேரமான் காதலி
காணாமல் போய்விட்டாள். 
 
17 அக்டோபர் , கண்ணதாசன் நினைவு நாள்.
காணாமல் போன
அவருடைய “சேரமான் காதலி”யையும் வாழ்த்துவோம்.
காதல் வாழ்க
சேரமானின் காதல் வாழ்க.
சேரனின் காதலியர் வாழ்க.

Friday, September 16, 2022

கிழவனின் கைத்தடி.

கவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி – உண்மை இதழ்

பெரியாரியம் இலக்கியமாவதில் இருக்கும்
அடிப்படை சிக்கல்களைப் பேசுவதில்லை நாம்.
நம்மையும் அறியாமல் அதை எல்லாம் எழுத்தில்
கொண்டுவருவது இலக்கியமாக முடியாது என்ற
கருத்து நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இலக்கிய அந்தஸ்த்தை தீர்மானிக்கும்
வானளாவிய அதிகாரம் எப்போதும் வலதுசாரிகள்
கூடாரத்தில் இருக்கிறது..
அதையும் மீறி பெரியாரியத்தின் சமூக அரசியலை
எழுத்தில் கொண்டுவரும்போது மிக எளிதாக
அதையும் “உரக்கப்பேசும்” கவிதைகள் எப்படி
கவிதைகளாக முடியும் ? என்ற விமர்சனங்கள்
வரும், வந்திருக்கின்றன.
மொழியை வசப்படுத்தும் பயிற்சியில் நாம்
அவர்களைத் தாண்டி பயணிக்கும்போது
அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்
“கள்ள மவுனம்”
இது முந்தைய அடியைவிட அபாயமானது,
பெரும் மன உளைச்சலைத் தரக்கூடியதுதான்.
இந்த “கள்ள மவுனம்” அந்தப் பக்கம் மட்டுமல்ல,
இந்தப் பக்கமும் இருக்கும். இருக்கிறது.
காரணம்.. பெரியார் தான்!
ஜால்ரா போடுவதில்லை.
திராவிட அரசியலை விமர்சிக்க தயங்குவதில்லை.
கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போடுவதில்லை.
இப்படி எல்லாம் இருந்தால்
கள்ளமவுனம்
வாழும்போதே நமக்கான கல்லறையாக
நாமே தோண்டிக்கொண்ட புதைகுழியாக
இருக்கிறது.
என்ன செய்ய முடியும்..?
சரவணா..
இந்த ஒரு நாளில் மட்டும்
தந்தை பெரியாரைக் கொண்டாடுவதை தவிர.!
புதைகுழியில் சிக்குண்ட
எம் போன்றவர்கள் பலருண்டு.
கிழவனின் கைத்தடியைப் பிடித்துக்கொண்டு
புதைகுழியில் மிதக்கிறேன்.
 
#பெரியாரிய_இலக்கியம்
 
#பெரியாரின்கைத்தடி
 
(செப் 17, 2022. )

 

 

Friday, August 26, 2022

இலக்கியப்புண்

 இலக்கியப்புண்

---------------------------------

இலக்கியப்புண் சீழ்ப்பிடித்து

நாற்றம் எடுக்கிறது.

அதிலிருந்து எட்டிப்பார்க்கின்றன

இலக்கியப்பீடங்களின் 

முட்டைகள் பொறித்த 

அதிகாரக்குஞ்சுகள்.


செம்மொழியின் கொரொனா தொற்று

கைகழுவி கழுவி 

துடைத்துக் கொள்கிறேன்.

முகக்கவசம் மாட்டிக்கொள்கிறேன்.

மூச்சு முட்டுகிறது.

சுவாசிக்க முடியவில்லை.


கனவிலிருந்து விழிக்கும்போது

எம் குடிசைகளில்

அச்சமின்றி விளையாடிக் கொண்டிருக்கும்

குழந்தைகளிடம்

கவிதையின் சாயல்.

கொரொனாவாவது மயிராவது!

முகக்கவசத்தை எடுத்து தூர வீசிவிட்டு

அச்சமின்றி சுவாசிக்கிறேன்.

ஹஹா…

காற்று உனக்கானது மட்டுமல்ல..


ரத்தம் வடியும் காயத்தில்

என் ஆத்தாக்கிழவி

காளியாத்தா

எச்சில் துப்பி

தெருப்புழுதியை எடுத்துப் பூசுகிறாள்.

பீடங்கள் சரிகின்றன.

டண் டணக்கா..

டணக்க்கு டக்கா.

டண் டணக்க்கா..

இனி என்ன…!?

இலக்கியச் சிறைவெளி உடைகிறது.

ஆடுவோமே பள்ளிப்பாடுவோமே

டண்டணக்கா

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று

ஆடுவோமே நாம் பாடுவோமே1


டண் டணக்கா

டணக்கு டக்கா.

டண் டணக்கா..

ஹேஹே 

டண் டணக்கா..

காளியாத்தா தாம்பூலம் சிவக்கிறது.

டண் டணக்கா..

Sunday, August 21, 2022

அபத்தமான கேள்விகள்! திருமா ரசித்தாரா?

 
 

    அபத்தமான கேள்விகளை தொல். திருமா ரசித்தாரா?
அவர் உடல்மொழி சொல்வதென்ன?
எதற்காக நடிகை மீனாவும் ஜெயலலிதாவும் தலைப்பு செய்தியானது?!!!
எப்போதுமே நேர்காணல்களில் வெளிப்படையான மொழியின் அர்த்தங்களைவிட முக்கியமானது அதை வெளிப்படுத்துபவரின் உடல்மொழி.
பல தருணங்களில் அந்த உடல்மொழி, மொழியால் வெளிப்படுத்த முடியாத அர்த்தங்களையும் வெளிப்படுத்தும்..
 
தொல். திருமா அவர்களின் உடல்மொழியிலும் அது வெளிப்பட்டது.
அவர் தன் இரு கை விரல்களையும் ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு பேச ஆரம்பித்தார். நிதானமாக சிந்தனையுடன் தன் மொழியை வெளிப்படுத்த தன்னை தயார் செய்து கொள்ளும் உடல்மொழியின் வெளிப்பாடு அது!
 
    அடுத்து தன் நேர்காணலில் இருவருக்கும் நடுவில் இருக்கும் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் தன்னை நோக்கிப் பார்த்து சிரிப்பதாக தொல்.திருமா சொல்கிறார். மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உத்திகளில் ஒன்றுதான் அந்த உடல்மொழி. அந்த உடல்மொழியைக் கூட எதிரில் இருப்பவர் அபத்தமாக அணுகுவது ! .. பார்ப்பவருக்கு எரிச்சல் தருகிறது.
 
    சில தலைவர்களின் மனைவியர் +60 அல்லது +70ல் மரணித்துவிடுகிறார்கள். மரணம் இயற்கையானது. ஆனால் இதே இந்த ஆசாமிகள் தனித்திருக்கும் அந்தப் பெரியவரின் 'இல்லாள்" பற்றிய நினைவுகளைக் கொண்டாடுவார்கள். 
சில நேரங்களில் "ஏகபத்னி விரதம்" கொண்டவர் ரேஞ்சுக்கு போய்விடும் இவர்களின்  கொண்டாட்ட  மன நிலை. அப்போதெல்லாம்  நினைக்கமாட்டார்கள் வயதானக் காலத்தில் கவனிக்க துணை இல்லாத ஃபார்முலாவை! அதாவது துணைதான் கூடவே இருக்கும்னு அட்வைஸ் சொல்கிற இச்சமூகத்தின் பொதுப்புத்தி இப்படித்தான் இருக்கிறது.
இதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் விஷயத்தில் வேற மாதிரி யோசிப்பார்கள். 
    இவர்களுக்கு எப்போதுமே  தங்களை பரபரப்பாக விற்பனை செய்து கொள்ள பெண்கள் தேவைப்படுகிறார்கள்! சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆளுமை தனி மனித உணர்வு அதன் விளைவுகள் இப்படி எதைப் பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை.
 
    அண்மையில்தான் நடிகை மீனாவின் கணவர் மறைவு. அவரைப் பற்றிய ஊடகச்செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழலில் “ நடிகை மீனாவை காதலித்தாரா, திருமா? என்று தலைப்பு செய்தியாக போட்டு “திருமணம் பற்றி மனம் திறக்கும் திருமா !” என்று விளம்பரப்படுத்தி இருப்பது கேவலமாக இருக்கிறது. மீனா மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெண்களைப் பேசி பரபரப்பாக்கி தன்னை விற்றுக்கொள்ளும் இவர்களை என்ன செய்யலாம்?!

 

Friday, August 19, 2022

மும்பை கோவிந்தா VS ஸ்பெயின் கேஸ்டல்ஸ்

  Janmashtami 2022: Govindas form a human pyramid to break the Dahi Handi in  Mumbai's Dadar, watch video - The Economic Times Video | ET Now

கிருஷ்ணனும் ராமனும் இந்திய தேசத்தின் அரசியல்
அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்கள்!
இதற்கான காரணங்கள் தத்துவ விசாரணைகள் உண்டு.
கிருஷ்ண ஜன்மாஷ்டமியை முன்னிட்டு நடக்கும்  

தயிர்ப்பானை உடைக்கும்
விளையாட்டு மண்ணின் அரசியல் வளர்த்தெடுக்கப்பட்ட  சூழலில்
அரசியலாக உருமாற்றம் பெற்றிருக்கிறது.

நான் சிறுமியாக இருந்தப்போது
மிக உயரமான கம்பத்தின் உச்சியில் தயிர்ப்பானை  கட்டப்பட்டிருக்கும்.
அதை உடைப்பதுதான் விளையாட்டு. 

லோக்கல் வீர்ர்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள்.

 கம்பம் எண்ணெய் தைத்து வளவளப்பாக இருக்கும்.ஏறுவது அவ்வளவு எளிதல்ல.கூட்டம் அலைமோதும். குறிப்பாக இளம்பெண்களும் குழந்தைகளும். மழைக்கொட்டினாலும் நனைந்துக்கொண்டே அதைப் பார்த்த நாட்களும் அதற்காக வீட்டில் தண்டனை அனுபவித்த நாட்களும் மறக்கவில்லை,

இப்போது அதே விளையாட்டு என்னைச் சுற்றி ஒரு 

மாபெரும் மனிதப் பிரமிடாக நடக்கிறது.
கோவிந்தா க்கோவிந்தா….

கோவிந்தாக்கள் லாரிகளில் ஏறி வருகிறார்கள். எங்கெல்லாம் தயிர்ப்பானைகள் உயரத்தில் கட்டப்பட்டிருக்கிறதோ அதை எல்லாம் மனிதப் பிரமிடுகளாகி உடைக்கிறார்கள்.
க்கோவிந்தா க்கோவிந்தா

கூட்டம் ஆரவாரம் செய்கிறது.
மழைக்கொட்டுகிறது.
தயிர்ப்பானையின் உயரம் பொதுவாக 20 அடி இருக்கும்.

30, 40 என்று உசரம் கூடிக்கொண்டே போனது.

நேற்று கின்னஸ் ரெகார்ட்.

50 அடி உசரத்தில் மனிதப்பிரமிடு. மும்பை தானா பகுதி கோவிந்தாக்களின் சாகசம். இது ஸ்பெயின் சீன தேசத்து மனிதப்பிரமிடுகளை விட உசரமானது!
கோவிந்தா க்கோவிந்தா..

ஸ்பெயில் வடகிழக்குப் பகுதியான கேஸ்ட்டோலினா மக்களின் விளையாட்டு மனிதப்பிரமிடு.
கேஸ்ட்டோலோன் நாட்டுப்புற பாடல்கள் புல்லாங்குழலிசைக்க இந்த மனிதப்பிரமிடுகள் உருவாகும் காட்சியைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த விளையாட்டுக்கான கேஸ்டல்ஸ் க்ளப்புகள் உண்டு. பயிற்சி எடுப்பார்கள். சற்றொப்ப இதே பின்புலத்தில் தான் மும்பையின் கோவிந்தாக்களும்! பயிற்சி இல்லாமல் திடீரென ஒருவர் தோள்களில் ஒருவர் ஏறி பத்தடுக்கு மனிதப்பிரமிடாக மாற முடியாது.
கோவிந்தா..க்கோவிந்தா..

குஜராத் மராட்டிய மா நில அரசியல் களத்தில் மராட்டிய மா நிலத்தில் சிவசேனா மக்களின் அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்ட போது இந்த தஹியண்டி ஜன்மாஷ்டமியும் மராட்டிய மண்ணின் மைந்தர்களுக்கான வீரமாக மேடைகளில் ஒலிவாங்கிகள் முழக்கமிடுகின்றன. அதனால் தான் இந்த மேடைகள் பெரும்பாலும் சிவசேனாவின் அடையாளங்களாக இருக்கும்! தஹி அண்டி கூட்டத்திற்கு அருகில் எப்போதும் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சற்றொப்ப 100 கோவிந்தாக்கள் காயத்துடன் மருத்துவமனையில் கைகால் இடுப்பு எலும்பு முறிவுடன் ! நமக்கு இதுப் புதிதல்ல. அவர்களுக்கும் இது புதிதல்ல.
தயிர்ப்பானையில் இப்போதெல்லாம் இலட்சகணக்கில் பணமுடிப்புகள் இருக்கின்றன.தயிர்ப்பானைகள் காஸ்ட்லியாகி விடுகின்றன. இதில் தஹி அண்டியை உடைக்கமுடியாவிட்டாலும் கூட பங்கெடுத்துக்கொள்ளும் கோவிந்தாக்களுக்கு ஊக்கப்பரிசுண்டு. இப்படியாக க்கோவிந்தாக்கள்..
நேற்றைய கோவிந்தா .. கின்னஸ் ரெகார்ட்
கோவிந்தா க்கோவிந்தா..

சரவணா….
சர்க்கார் (அமிதாப்பச்சன் நடித்தப்படம் ) திரைப்பட த்தில் அபிஷேக்பச்சன் ஓடிக்கொண்டிருக்கும் போது கொள்ளைக்கூட்டம் துரத்தும்போதும் அடிதடி காட்சிகளின் போது பின்னணி இசையாக
க்கோவிந்தா க்கோவிந்த்தாஒலித்துக்கொண்டே இருக்கும் .
இரண்டு நாட்களாக அதே பின்னணி இசை என்னைத் துரத்திக் கொண்டே இருக்கிறது!
க்கோவிந்தா க்க்க்கோவிந்தா..

#mumbai_govinda

 

Saturday, August 13, 2022

ஆகஸ்டு 15 ..ஏன்?


 ஆகஸ்டு 14 இரவு 12 மணி, 1947 

அன்று நடந்தக் காட்சிகளைக் கண்டவர்கள் இன்று நம்மிடம் இல்லை! அப்படி யாராவது ஒன்றிரண்டுபேர் இருந்தால் அவர்களிடம் அந்த முக்கியமான தருணத்தைக் கேளுங்கள்.. அவர்கள் நினைவுகள் மறப்பதற்குள்.

இந்த ஆகஸ்டு 15.. யார் தீர்மானித்தார்கள்?

எப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப்போகிறீர்கள் ? என்ற கேள்விக்கு ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் கொடுப்போம் என்று பதில் சொல்ல நினைத்த மவுண்ட்பேட்டன் தன்னையும் அறியாமல் சொன்ன நாள்தான் ஆகஸ்டு 15. 

அவருக்குள் அந்த நாள் அத்தருணத்தில் ஏன் ? என்றால் எதுவுமே எதேச்சையாகக்கூட வருவதில்லை. ஒவ்வொன்றுக்கு அடிமனதில் எதோ ஒரு காரணம் இருக்கிறது. மவுண்ட்பேட்டன் அறிவித்த ஆகஸ்டு 15ம் அப்படியான  ஒன்றுதான். அன்றுதான் ஜப்பான் இங்கிலாந்திடம் சரணடைந்த நாள். அதை மவுண்ட்பேட்டன் சர்ச்சிலின் அறையில் அவருடன் உட்கார்ந்து வானொலியில் கேட்ட நாள்.இப்படியாக ஆகஸ்டு 15 இந்திய தேச வரலாற்றில் தன்னை எழுதிக்கொண்டது.

ஆனால் அன்று நாள் கிரஹம் சரியில்லை என்றும் இரண்டு நாள் கடந்து சுதந்திரம் வந்திருந்தால் இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றும் ஜோதிடர்கள் சொன்னதாக சொல்கிறார்கள்.!

சங்கு ஒலித்து இந்திய சுதந்திரம் அறிவிக்கப்பட்டதாம்.

சுதந்திரப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட து. 

அந்த அரங்கில் அந்தக் கூட்டத்தில் தேசப்பிதா காந்தி இல்லை. அவர் கல்கத்தாவில் இருந்தார். நமக்கு அந்த ரத்தக்கறை படிந்த வரலாறும் தெரியும்.

(இப்புகைப்படம் அந்த நாளில் ஒரு தருணம்.. நன்றி indian express)


Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

Wednesday, August 3, 2022

5 G அரசியல்

 


 

சரவணா...
எதாவது புரியுதா..
எல்லாம் ஜியோ மயம் என்பதைத்தவிர
எனக்கு எதுவும் புரியல.
திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருவது மட்டும்
புரியுது.

சரவணா,
இந்த அலைக்கற்றை விவகாரத்தில் சொல்லப்படும் தொகை

 எல்லாம் ரொம்ப பெரிசா .. அதுக்கு எத்தனை பூஜ்யம் போடனும்னு 

எப்பவும் எண்ண வேண்டியதா இருக்கு. 

அந்த எண்கள் என்னைப் போன்ற சாமானியர்களை மருட்டுகிறது. 

நாங்க வழக்கம்போல ஜூட்!


என்னவோ 5G அலைக்கற்றை ஒருவழியா முடிஞ்சிட்டுனு அதில் வழக்கம்போல எதிர்பார்த்த து போல JIO தான் வந்திருக்கு.
இது எதுவுமே எங்களுக்கு பெரிசா தெரியல.
ஆனா..
இது எல்லாமே அரசியல்.
இதில் இப்போதும் 2G  - ராஜா அவர்கள்  மட்டும்தான் எதோ 

சொல்லவருகிறார்.

 இது தனிப்பட்ட ராஜா அவர்களின் பிரச்சனை மாதிரி..
2G காலத்திலும் சரி,
5 G காலத்திலும் சரி,
இது அரசியல் மட்டும்தான்.
இது தனிப்பட்ட ஒரு ராஜாவின் பிரச்சனை இல்ல.

என்னவோ தோணிச்சு..


திரு ராஜா அவர்கள் தனியா நின்னுட்டு
எதோ சொல்லவருகிறார்.
அது பொதுஜன அரசியலுக்கானதல்ல
ஆதலால் மக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகளோ
அல்லது அரசியல் விமர்சகர்களோ
ஊடகங்களோ ...
வாய்திறக்கவே இல்லை.
அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திகளிலிருந்து
அறிந்து கொள்ள எதுவுமில்லை.

#2G_5G_POLITICS