Sunday, October 29, 2023

மாணவர்களுக்கு ஒரு கையேடு - குமணராசன்

 

.மாணவர்களுக்கு ஒரு கையேடு

 மும்பை தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவரான திரு குமணராசன் அவர்கள் பல்வேறு பயணக்கட்டுரைகள், சமூக அரசியல் கட்டுரைகள் எழுதியவர். அதில் தடம்பதித்தவர். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் ‘செவ்வியல் இலக்கியங்கள்: ஓர் அறிமுகம்” கட்டுரை தொகுப்பு வித்தியாசமானது. அவருடைய தமிழார்வம் மட்டுமல்ல, அவர் ஈடுபாடும் அதில் அவர் கொண்டிருக்கும் தெளிவும் இக்கட்டுரைகளின் வெளிப்படுகிறது.

     மாபெரும் இலக்கியவெளி பரப்பை எடுத்துக் கொண்டு அதை ஒரு கையேடாக கொடுப்பது என்பது அவ்வளவு எளிதானப் பணியல்ல. பக்கம் பக்கமாக ஒவ்வொரு செவ்விலக்கியம் குறித்தும் எழுதிவிடுவது எளிது. ஆனால், அத்தனையும் சேர்த்து ஒரு குறிப்பேடு போல எழுதி அதிலும் கவனமாக எது தேவையோ எது ரொம்பவும் முக்கியமானதோ அதையும் விட்டுவிடாமல் சேர்த்துக் கொண்டு குறிப்பெடுப்பது என்பது கடினமான பணி. அந்த அரிதினும் அரிதான காரியத்தை தன் முயற்சியால் இளைய தலைமுறைக்கு பயன்படும் வகையில் கொடுத்திருப்பது பாராட்டுதலுக்குரியது  அது இன்றைய தேவையும் கூட.

     செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் தன் முதல்கட்டப் பணிக்காக பட்டியலிட்டிருக்கும் 41 செவ்வியல் இலக்கியங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதப்பட்டிருக்கிறது இக்கட்டுரைகள்.

+ @ நாழிகை கணக்கிடும் முறையை தமிழர் அறிந்திருந்தனர். முல்லைப்பாட்டு பற்றிய குறிப்பெழுதும்போது ‘குறு நீர்க்கன்னல்” பற்றி எழுதுகிறார், ஒரு கலத்தில் நிரைத்து வைத்திருக்கும் நீரைச்சின்ன்ஞ்சிறு துளை வழியாக சிறுகச் சிறுகக் கசியவிட்டு , அவ்வாறு கசியும் நீரை அளந்து காண்பதன் மூலம் நாழிகையைக் கணக்கிட்டனர். இதைச் செய்பவர்கள் ‘நாழிகைக் கணக்கர்’ என்று அறியப்பட்டனர். ( பக் 112)

+ @ குறிஞ்சிப்பாட்டும் கபிலரின் 99 மலர்களும் தமிழரின் மண்சார்ந்த மணமிக்க மலைவாழ்க்கை. அந்த மலர்களை அறியத்தருவதும் அந்த வரிகளை குறிஞ்சிப்பாட்டின் அடிக்கோடிட்ட வரிகளாக்குவதும் மாணவர்களுக்கு தேவையானதாக இருக்கிறது.

+ @ சங்க இலக்கியத்தை அகம் என்றும் புறம் என்றும் வகைப்படுத்தி இருப்பதன் அடிப்படை என்ன? இதை எளிதாக்கவே நெடுநல்வாடை ஏன்

புறப்பொருள் வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டது என்பதைக் கொண்டு விளக்கம் தருகிறார். (பக் 122)

+ @ பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஆசிரியர் பத்தொன்பது நூல்களைப் பற்றி குறிப்பெழுதுகிறார். காரணம், பதினெண் கீழ்க்கணக்கு வகைப்பாட்டில் ‘இன்னிலை, கைந்நிலை என்ற இரண்டு தொகுப்புகள் குறித்த விவாதமும் பட்டியலிடுவதில் சிறு குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது. அதையும் மறக்காமல் இரண்டையுமே இந்த நூல் வகைப்பாட்டில் சேர்த்திருப்பதன் மூலம் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின்  தொகுப்புக்கும் வழிகாட்டுவதாக

அமைகிறது இத்தொகுப்பு.

+ @  நக்கீரன், ஒளவையார் பெயர்களும் இவர்க:ளின் காலங்களும் ஆய்வுக்குரியவை. கொங்குதேர் வாழ்க்கை பாடிய நக்கீரனும், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரனும் ஒருவர் அல்லர். ஒரே பெயர் கொண்ட, காலத்தால் வேற்பட்டவர்கள் என்பதை திருமுருகாற்றுப்படையின் குறிப்பில் மறக்காமல் இணைத்திருக்கிறார்.

+ @ செவ்வியல் இலக்கியங்களில் பெண் என்னவாக இருக்கிறாள்? பெண்ணுடல் வண்ணனையைக் கொண்டு அதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், செவ்வியல் இலக்கியம் இன்றைய ஆபாசம் என்று கருதுவதை எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதாகவும் இதைப் புரிந்து கொள்ள முடியும் . (பக் 95)

     ஒவ்வொரு தொகுப்பு குறித்தும் இப்படியாக சில குறிப்புகளை எடுத்து அதை முன்வைக்கும் ஆசிரியர் மிகவும் தெளிவுடன் தன் கருத்தை இறுதிப்பகுதியில் சொல்லி இருப்பது அவருடைய சமூக அரசியல் தெளிவை

உறுதிப்படுத்துகிறது.

ஒவ்வொரு  நூற்றாண்டிலும் பல்கிப் பெருகிய இலக்கியங்கள் ஏராளம். ஆனால் இந்த இலக்கிய வளர்ச்சியானது தமிழ் மொழியின் தொடர்ச்சி என்ற அளவில் இருந்ததேயொழிய தமிழ் மக்களின் மரபு வழிச் சிந்தனையின் வளர்ச்சியாக அமைந்ததா என்றால் இல்லை என்றே கூறலாம் “ (பக் 250) இத்தெளிவு திரு குமணராசன் அவர்களின் தனித்துவமான அடையாளம் .

     எத்துணை சிறப்புமிக்கதாக இருந்தாலும் அதை ஒன்றுவிடாமல் சொன்னால் அதைக்கேட்க நேரமோ பொறுமையோ இல்லை நம்  இளைய தலைமுறையினருக்கு என்பதுதான் உண்மை. அவர்களுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும், நாளை அவர்களில் சிலராவது இந்தக் கையேடு கொண்டு தங்கள் தேடலின் ஊடாக பயணிப்பார்கள். அதற்கான ஒரு திறவுகோல்தான் இப்புத்தகம்.

     ஒவ்வொரு மாணவர்களிடமும் இருக்க வேண்டிய கையேடு. மாணவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு இப்புத்தகம்.

 

  நூல் :

செவ்வியல் இலக்கியங்கள் – ஓர் அறிமுகம்.

ஆசிரியர்: சு. குமணராசன்.

வெளியீடு : தமிழ் அலை ஜூலை 2023.

பக் 256, விலை ரூ 250

 

Saturday, October 14, 2023

ஹே சிவா.. உன் கருப்பி நான்

 ஹே சிவா...



தெரியும் தானே நான் கருப்பி
என்பதும்
அது என் நிறம் மட்டுமல்ல
என்பதும்.
அது என் உரம்
என் திறம்
என் வலி
உன் அழகியல் தோற்றுப்போன
யோனியின் சுழி.
வெள்ளை எலிகளும்
வெள்ளை பன்றிகளும்
உலாவரும் உன் தேசத்தில்
பச்சையமாய் உயிர்த்திருக்கும்
மழைத்துளியின் கருவறை
இந்தக் கருப்பி.
உன் புனைவுகள்
எட்டாத வானம்.
உன் கவிதைகள்
அறியாத மொழி.
வெண்மை புனிதம்
கருமை இருமையென
எவன் சொன்னான்?
ஏன் சொன்னான்?!
போடா போ.
ஆத்தாவும் அப்பனும்
கறுப்பாக இருப்பதை
வெளியில் சொல்லாதே.
ஃபேர் அண்டு லவ்லி
தேவதைகளைத் தேடிக் கண்டுப்பிடி.
பசுவின் பால் மட்டும்
வெள்ளை.
எருமைப் பால் கறுப்பாக
இருக்கும்.
நம்பு.
சொர்க்கலோகத்தில்
சிவப்பிகளுடன்
ஆடிப்பாடு.
உன் பிறவிப்பயன்
கிட்டும்.
தாகமெடுக்கும் போது
தண்ணீர்க் குடிக்காதே.
கார்மேக நீர்த்துளி
கறுப்பின் அடையாளம் டே.
வேண்டாம்.
சிவப்பு வெள்ளையின்
மூத்திரம் குடி.
ஹே.. சிவா..
போடா போ..
கங்கையைத் தலையில்
வைத்துக் கொண்டாடு.
பிரம்படி பட்டும்
பித்து தெளியாத உன்னை
நம்புவதற்கில்லை.
சிவசூத்திரங்கள்
மெளனிக்கின்றன.
பச்சைக்கிளியின்
புதிய சிறகுகள்
முளைக்கும் காலம்.
தவக்காலம் முடியும் தருணம்..
கண்முழித்தவுடன் வா.
உன் பித்தம் தெளிய
வழிப் பிறக்கும்.
பிறக்கும்.

Friday, October 6, 2023

பெரியாரியம் > காந்தியம் > கலை இலக்கியம்

 தமிழ் மண்ணில் பெரியாரியம் எந்தளவுக்கு

தமிழ் கலை இலக்கிய வடிவமாக வெளிவந்திருக்கிறது ?

ஏன் பெரியாரியம் மேடைப்பேச்சுகளுடன் ஆரம்பித்து

அதிலேயெ தேங்கி அதைவிட்டு வெளியில் வரமுடியாமல்

மூச்சுத்திணறுகிறது?

இக்கேள்வியை முன்வைத்தவுடனேயே என் தோழர்கள்
கொதித்தெழுவார்கள். சும்மா பொங்குவதால்
அடுப்புத்தான் பழுதடையும்.
இப்படிப் பொங்கிப் பொங்கியே அடுப்பிலிருக்கும்
பாத்திரமும் காலியாகும். வேறென்ன கண்டோம்?
இத்தனைக்கும் திராவிட அரசியல் தலைவர்கள்
னிமா துறையில் கதை வசனம் எழுதியவர்கள்
என்பதும் அதன் ஊடாக அவர்கள்
எதை மேடைகளில் பேசினார்களோ அதையே அவர்களின் கதைப்பாத்திரங்களையும் பேச வைத்தார்கள், அவ்வளவுதான்.
அதைத்தாண்டி பயணிக்கவில்லை.
இதெல்லாம் நேற்று "பரிணயம்" மலையாள திரைப்படம்
பார்த்த முடித்தப்பின் உறுதியானது.



இத்திரைப்படம் 1994ல் வெளிவந்திருக்கிறது.
தங்கள் சமூகத்தில் பெண்களின் பரிதாபமான நிலையை
அவள் உணர்வுகளை ரொம்பவும் துல்லியமாக
கதைப்போக்கில் காட்டி இருப்பார்கள்.
கதைமுடிவில் அப்பெண் தன்னைக் கர்ப்பினி ஆக்கியவனே
அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு
அவன் தான் தகப்பன் என்பதை ஒத்துக்கொள்ள
வரும் காட்சியில்
"இவனில்லை என்பாள் அவள்.
என் பிள்ளைக்கு தகப்பன் தேவை என்றால்
ஒரு நளனோ பீமனோ தகப்பன் என்று
சொல்லிக்கொள்கிறேன்" என்பாள்.
(கதைப்போக்கில் கதகளி ஆடிய மாதவன்
அந்த வேடத்தில் வந்துதான் அவளோடு இருந்தான். )

அதன்பின், அப்பெண் இராட்டையில் நூல் நூற்பதோடு
திரைப்படம் முடியும்.
அவள் காந்தியம் பேசவில்லை,
ஆனால் இக்காட்சி கொடுத்த அழுத்தமும் வீரியமும்
விளக்கமும் அவள் எவ்வளவு வசனங்கள்
பேசி இருந்தாலும் வராது.
இப்படியான வெளிப்பாடுகளை
பெரியாரியமும் கொடுத்திருக்க வேண்டும். ..

சம் திங்க் இஸ் மிஸ்ஸிங்க்.