Wednesday, December 23, 2009

பனைமரம்





ஒற்றைப் பனைமரம்
-------------------

உங்கள் தோட்டத்தில்
பனைமரத்தின் வேர்கள்
அத்து மீறி நுழையவும் இல்லை
ஆசைக் கொண்டு அலையவுமில்லை.

உங்கள் தென்னை மரங்களுக்கு
குழித் தோண்டி
பக்குவம் பார்த்த நீங்கள்
இந்தப் பனைமரத்தின்
மண்ணையும் வளைத்து
வேலிப்போட்டு
தோட்டம் கண்டீர்கள்.!

தனிமரங்கள் தோப்பாகாது
மரங்களுடன் இருப்பதே
இந்த மரத்திற்கும் சிறப்பு
கனவுகளின் மயக்கத்தில்
உங்கள் தோட்டத்தின்
கம்பீர தோற்றத்தில்
உலாவந்தது பனைமரத்தின்
பச்சை நிழல்கள்.

கறுப்பின விடுதலையை
கர்ஜித்து கர்ஜித்து
வைரம் பாய்ந்த கறுப்பு தோள்களுடன்
வலம் வந்தது
பனை மரத்தின் கருக்குகள்.

மரங்கள் அடர்ந்த உங்கள்
தோட்டம்
சோலையானது.
பலருக்கு மாலையானது
எப்போதும் தொடர்ந்தது
மாலைகளுக்கான
மரியாதை அணிவகுப்புகள்.

ஒருவர் நிழலில்
ஒருவர் மயங்கி
ஒருவர் நிழலில்
ஒருவர் ஒதுங்கி
தனக்கென நிழல்களில்லாத
மரங்கள் அடர்ந்த
உங்கள் தோட்டத்தில்
ஒற்றைப் பனைமரத்தின்
நிழல்..
தோட்டத்தின் நிழல்களைத் தாண்டி
விழுவதைக் கண்டு
தீடிரென ஒருநாள்
அதிர்ந்து போனது
உங்கள் தோட்டத்து முள்வேலிகள்.


முகம்மாறிய
உங்கள்
முகம் அறியாமல்
தன் நீண்ட நெடிய நிழல்காட்டி
உங்கள் மேடையில்
நாட்டியமாட நினைத்தது
பனைமரம்.
கறுத்த பனைமரங்களுக்கு
இடமில்லை.
விலக்கி வைத்தது
உங்கள் புதுப்புது விதிகள்.

யாரையோ சந்தோஷப்படுத்த
எப்போதும்
விலக்கி வைக்கப்படுகிறது
பனைமரத்தின் நிழல்.
பனைமரத்தின் மண்ணில்
பத்திரமாய் வளர்ந்தக்கதையை
மறந்து போனது
எல்லா மரங்களும்.
'வெட்டுவது கூட
கிளைகள் வளர்வதற்குத்தான்'
தத்துவம் பேசுகிறது
வாழை.
"எல்லா தத்துவங்களும் எல்லோருக்கும்
பொருந்துமானால்
ஏன் பிறக்கிறது
இன்னொரு தத்துவம்?"
கிளைகளே இல்லாத
பனைமரத்தை
வெட்டினால்
எப்படி ஜீவிக்கும்
இந்த ஒற்றைப்பனை.?

கேட்கிறது
தோட்டக்காரனிடம்.
'உன் நிழல்கள்
தோட்டத்திற்குள் மட்டுமே விழவேண்டும்'
ஆணையிடுகிறது
ஆட்சி அதிகாரம்.
உயரமாக இருப்பதும்
கிளைகள் இன்றி
பிறப்பதும்
கறுப்பு பனைகளின் கம்பீரம்.
நிழல்களைச் சுருக்குவதும் விரிப்பதும்
பனைமரங்களின் வசமில்லை.
அரசும் அதிகாரமும்
மாற்ற முடியாத
பிரபஞ்சத்தின் விதியை
கிழக்கில் உதிக்கும் சூரியனிடம்
கேளுங்கள்
சொல்லக்கூடும்-
.இயக்கவாதிகளின்
நிழல்களைக் கூட
கட்டுப்படுத்தும் அதிகாரம்
தன்னிடம் இல்லை என்பதை.

=============================

2 மொட்டைப் பனைமரம்
--------------------------------
செந்நீரைச்
செம்மொழியில் கரைத்து
தெளித்துவிட்டார்கள்.
உப்புக்கரித்தது.

தித்திக்கிறது
என்று
தீர்மானம் போட்டார்கள்
பனைமரத்தையும்
பக்கத்தில் நிறுத்தி.

ஏமாந்து விட்டதையும்
ஏமாற்றிவிட்டதையும்
மறைக்காமல்
ஆகாயத்தை நோக்கி
அலறியது பனை.

கருக்குகளை வெட்டி
பனை ஓலைகளை
எரித்து
ஒற்றைப் பனைமரத்தை
மொட்டைப் பனைமரமாக்கி
நிறுத்திவிட்டார்கள்
ராட்சதக் காற்றாடிகள்
போட்டிப்போடும்
புஞ்சைக்காட்டில்
தன்னந்தனியாக.

இன்னும் விழுந்துவிடவில்லை
மொட்டைப் பனைமரம்.
எப்போதாவது
தோட்டங்களுக்குள்
நுழைவதற்கும்
நிழல்களில் அமர்வதற்கும்
அனுமதி மறுக்கப்பட்ட
கறுப்பு மனிதர்கள்
வரக்கூடும்
மொட்டைப் பனைமரத்தின்
ஒற்றை நிழலில்
ஒதுங்கி இளைபாற.

--------------------------

Sunday, December 13, 2009

தெலுங்கானா ஸீரியலுக்கு அடுத்த ஒளிபரப்பு


தனி மாநிலம் கேட்ட தெலுங்கானாவுக்கு தலையசைத்தாலும் அசைத்தார்கள்
எங்கே பார்த்தாலும் தனிமாநில கோரிக்கைகள்.
இந்தியப் பூகோளப் பாடம் படிக்கிற மாதிரி இருக்கு.
சும்மா சொல்லப்பிடாது நம்ம பக்கத்து வீட்டு சந்திரசேகர ராவ் இருந்த உண்ணாவிரதத்தை.
மனுசர் நிசமாலுமே சாப்பிடாமா இருந்தாருனு சொல்லுதாங்க.
எதுக்கு உடம்பைக் கெடுத்துக்கனும் சொல்லுங்க?
கொஞ்சம் சொல்புத்தி சுயபுத்தி இல்லாட்டாலும் அடுத்தவனைப் பார்த்து நடக்கிற
புத்தியுமா இல்லை. எதுக்காக இப்படி 11 நாளு உண்ணா நோன்பிருக்க வேண்டும?
பக்கத்து மாநிலமான நம்மைப் பார்த்தாவது காலை 9 மணி முதல் பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும் அதிரடி உண்ணாவிரத ஸ்டைலைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டாமோ?

டில்லியிலே ரொம்ப குளிருங்க. குளிரில் தலையாட்டினதை நம்ம டில்லிக்காரங்க
தெலுங்கானாவுக்கு சரினு சொல்லிப்பிட்டாங்கனு எழுதப்போக இங்கே பாருங்க
இன்னிக்கு பத்திரிகையிலே வந்திருக்கிற ஏகப்பட்ட தனிமாநில கோரிக்கைகளை.

> நாங்க தான் முதல்ல தனிமாநிலம் கேட்டோம்னு சொல்றாங்க நம்ம கூர்க்கா மக்கள்.
மே.வங்கத்துடன் இருக்கப் பிடிக்கலையாம் அந்த டார்ஜிலிங் கூர்க்கா சனங்களுக்கு.
முதல்ல கேட்ட எங்களுக்கு கொடுக்காமா அது என்ன தெலுங்கானாவுக்குனு
கேட்கிறாங்க.

> எங்க மராத்தி மாநிலம் ( அய்யோ நான் இப்படி எழுதியிருக்கதை மேரா ராஜ்தாக்கரெ மானுஷ்களிடம்
யாராவது போட்டுக் கொடுத்திடாதீங்க அண்ணாச்சீங்களா, எம் பிழைப்புக் கெட்டுப்போயிடும்!)
5 வருடங்களுக்கு முன்பே 'விதர்பா' தனிமாநில கோரிக்கையை வைத்தது. பாவம் அப்படி
வைத்தவர் பாபாசாகிப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர். யாரும் அவர் சொன்னாருனு
கண்டுக்காமா விட்டுட்டாங்களொ என்னவோ.
இப்போ மீண்டும் 'விதர்பா' வந்திடுச்சி.
ஒரே கூட்டணியிலிருக்கும் சிவசேனா எதிர்ப்பு, பா.ஜனதா ஆதரவு.

> சும்மா சொல்லப்பிடாது எங்க மாயாவதியை. பின்னே என்ன உ.பி எவ்வளவு பெரிய மாநிலம்.
தனி ஆளா தூத்து பெருக்கி துடைக்கிறவங்களுக்குத்தானே கஷ்டம் தெரியும்.
அவுங்களும் கடிதாசி எழுதிட்டாங்க அவுங்க கஷ்டத்தை. உ.பி இரண்டா இல்லை மூணா பிரிச்சா
ரொம்ப நல்லா நிர்வாகிக்க முடியும்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
பண்டல்காண்ட்., மேற்கு உ.பி, கிழக்கு உ.பினு 3 மாநிலங்காளாகிடும்.


>இதை எல்லாம் பார்த்திட்டு இருக்கிற நம்ம தமிழ்நாட்டிலிருந்து ஏன் எந்தக் குரலும் வரலைனு
எனக்கு ரொம்பவும் கவலையா இருக்குங்க. என்னவோ நம்ம் தமிழினத்தலைவரை எல்லொரும்
அரசியல் சாணக்கியர் அது இதுனு புகழாராங்க. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்காமா
இப்படி கம்முனு இருக்காரோ.
இப்போ போயி அவர் சந்திரசேகர ராவிடம் வருத்தப்பட்டுக்கவோ முறைச்சுக்கவோ கூடாதுங்க.
சில வேலை இல்லாததுகள் தேவையில்லாமல் சந்திரசேகர ராவ் உண்ணா விரதத்தையும் அவர்
உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்டு ஆய்வு செய்துக்கொண்டிருப்பது அவரைக் கடுப்பேற்றி இருக்கும்.
இதெல்லாம் என்ன சின்னக் கொசுக்கடி மாதிரி அவருக்கு.
அப்படியே லைட்டா தட்டிவிட்டுட்டு தனக்கு கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான சந்தர்ப்பதைப் பயன்படுத்தி
தன்னால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தாங்க என் ஆசை.

* தமிழ்நாடு மாநிலத்தை இரண்டா பிரிச்சிடலாம். ஒன்று தஞ்சை, கடலூர் என்று வடமாநிலங்களை
உள்ளடக்கிய சோழ மண்டலம். இன்னொன்று மதுரையைத் தலைநகராகக் கொண்ட தெற்கு மாநிலங்களை
உள்ளடக்கிய பாண்டிய மண்டலம். எந்தெந்த மண்டலங்களுக்கு யார் யார் முதல்வர்னு நான் சொல்லியா
உங்களுக்குப் புரியனும்?
மதுரையைத் தலைநகராகக்கொண்டு மூன்று சங்கங்கள் வைத்து அரசாண்ட் நம் பாண்டியர் வரலாற்றை
சரித்திர சான்றுகளுடனும் இலக்கியச் சான்றுகளுடனும் எழுதவும் நிரூபிக்கவும் நம் தமிழினத் தலைவர்
தமிழக முதல்வரை விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார்?
சோழ மண்டலம் கண்ட ராஜ ராஜ சோழன் என்ற பட்டமும் நான்காவது தமிழ்ச்சங்கம் கண்ட
பாண்டியன் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம். தமிழகம் எங்கும் நம் சோழ பாண்டியர் வரலாற்றை
கதை கவிதைகள் எழுதி சாமாய்ச்சிடலாம்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ( ரொம்ப பழசாகிப் போன சொலவடைனு கோவிச்சிக்காதீங்க)
அடிச்ச கதையா தமிழகத் தலைவர் அவரை வாட்டி வதைக்கும் 'யாருக்குப் பட்டாபிஷேகம்" என்ற
பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக தீர்வு கண்டுவிடலாம்.
பெண்ணியம், பெண்ணுரிமை அது இதுனு பேசற நானே எங்க கனிமொழியை அப்படியே அம்போனு
விட்டுவிடுவேன்னு நினைச்சீங்களா.
நெவர். அவுங்களுத்தான் இப்போ டில்லிக்குப் போற ரூட் க்ளியர் ஆயிடுமே! இனிமே என்ன
டில்லியில் நிறைய கருத்துக்களம் நடக்கும். அப்புறம் டில்லியில் தமிழ்ச்சங்கமம் நடக்கும்.
அசத்திடலாம். அய்யோ நினைச்சாலே ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. அங்கேயும் கவியரங்கத்தில்
போய் நம்ம ஆதவன் தீட்சண்யா மாதிரி தோழர்கள் காச்சு பூச்சுனு கத்தாமா கவிதை வாசித்தோமோ
வாசிக்கலியோ டில்லியைச் சுத்திப் பாத்தமா வந்தோமானு வரனும்னு இப்போவெ சொல்லி வையுங்க.

> அப்புறம் இன்னொரு முக்கியமான செய்திங்க.
யாரும் ஏன் டில்லி அரசு தெலுங்கானாவுக்கு தலையசைச்சாங்கனு மண்டையைப் போட்டு
கசக்கிப் பிழிஞ்சிக்கவேண்டாம்.
தப்பித்தவறிக் கூட இது சந்திரசேகர் ரர்வ் உண்ணாவிரதத்தின் மகிமை, வெற்றினு நினைச்சி
காந்தியம் பேச ஆரம்பிச்சாடாதீங்க. வருஷக்கணக்கில் மணிப்பூரில் மனோராமா உண்ணா நோம்பிருப்பதை
ஏன் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசுனு தேவையில்லாத கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள்.

.> உலகத்தில் என்ன நடந்தாலும் அதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக நம்ம காம்ரேட்கள்
தொண்டை வறள கத்திக் கொண்டிருப்பார்கள். சோவியத் ஒன்றியத்தை உடைத்த அமெரிக்கா
ஆசியாவின் பெரும் சக்தியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவைத் துண்டு துண்டுகளாக
உடைக்கும். உடைக்க வைக்கும் .. மன்மோகம் சிங் இதெற்கெல்லாம் தலையாட்டியே ஆகவேண்டும்
என்று பேசுவார்கள், நீங்கள் என்ன செய்யுங்கள்.. உங்கள் டி.வி சேனலில் மானாடா மயிலாட பாருங்கள்,
அதுப் பிடிக்காட்டா உலக அரங்கில் தரவரிசையில் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவின் கிரிக்கேட்
மேட்சைப் பாருங்கள். காம்ரேட்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் தலைவலி வரும். எனவே முன்னெச்சரிக்கையாக
அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

> பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவதுனா என்னானு இத்தனை வருஷமும் புரியாம
இருந்தேனா. இப்போ புரிஞ்சிட்டுங்க. தெலுங்கானா வேணும்னு ஒரு கூட்டம், வேண்டாம்னு ஒரு கூட்டம்.
டில்லிக்காரன் பயங்கர எம்டன். சரினு சொல்ற மாதிரி சொல்லி எப்படி ந்நோ சொல்லிட்டிருக்கான்
கவனிச்சீங்களா. How to say YES when you want to say NO என்று இந்த எம்டனகளை வச்சே
தலையாணி மாதிரி தடியா புக்கு போடலாம்.

இப்படியே நாளையும் பொழுதையும் இவனுக எல்லாம் கழிச்சிடுவானுக. அப்புறம் பொதுசனத்தைப் பத்தி
பேசவோ யோசிக்கவோ இந்த பார்லிமெண்டு, சட்டசபை , பத்திரிகை, டி.விக்காரன் இவனுக்கெல்லாம்
எங்கே நேரமிருக்கும்? அது என்னா லிபரன் கமிஷன் அது இதுனு எதோ காதில் விழுந்ததே...
எல்லாத்துக்கும் கோவிந்தா..
எங்க ஊரிலே
சாம்பார் பருப்பு விலை கிலோ 100 ரூபாங்க. அட வெங்காயம், உருளைக்கிழங்கி விலை கிலோ 25க்கும் மேலே.
இப்போ புரியுதா ஏன் டில்லிக்காரன் YES சொன்னானு.
புரியாட்டாலும் ஒன்னும் குடிமுழுகிப் போயிடாதுங்க. கோவையில் நடக்க இருக்கும் செம்மொழி மாநாடு
ஏற்பாடுகள் குறித்து எழுதுங்களேன் யாராச்சும்.
செம்மொழி மாநாடு நடக்கும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறொம் என்பதை
நினைத்து நினைத்து பூரித்துப் போகும், தமிழாக நான்



பின்குறிப்பு:
சில தனி மாநிலக் கோரிக்கைகளின் நியாயங்களை இனவரைவியல் ஆய்வுக்குட்படுத்தி
எழுத உட்கார்ந்தேன். புத்தகம் படிச்சி குறிப்பெடுத்து எப்பவுமே ஸீரியசா எழுதி எழுதி என் கணினி மவுசுக்குப் போரடித்துவிட்டதாம்!

Saturday, December 12, 2009

+ மக்கள் சக்தி _ மைனஸ்_ அரசியல் சக்தி ? ஏன் ?????



-----------------------------------------------------

டிசம்பர் 06, மும்பை தாதர், அண்ணல் அம்பேத்கரின் கல்லறை இருக்கும் இடமான
சைத்தியபூமி ..
கூடும் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12, 14, 15 இலட்சம் இந்த வருடம்
15 இலட்சத்தைத் தாண்டியிருக்கும் என்கிறது மும்பை காவல்துறை.
எதற்காக இவர்கள் வருகிறார்கள்?
திருப்பதிக்கோ அய்யப்பனுக்கு மாலைப் போட்டு கூட்டம் கூட்டமாக
செல்லும் மனித மனங்களில் வேண்டுதல்களும் வேண்டியதைக் கொடுத்ததால்
அதற்கு கைமாறாக எதையாவது கொடுக்க நினைக்கும் மனித இயல்பும்,
அவனுக்கெல்லாம் வேண்டியதைக் கொடுத்துவிட்டாயே நான் என்ன பாவம் செய்தேன்..
எனக்கு எப்போது கொடுக்கப்போகிறாய் என்ற கேள்வியும் நீ கொடுக்கும் வரை
உன்னை நான் விடப்போவதில்லை என்ற தீர்மானமும் இப்படியாக ஏதோ ஓர்
எதிர்பார்ப்பின் உந்துதல் காரணமாகவே பக்தி என்ற பெயரில் மனிதர்கள்
அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ற தளம் நோக்கி லட்சக்கணக்கில் ஆண்டுதோறும்
போகிறார்கள்.
இதில் அடிக்கடி புண்ணிய தளங்களை மாற்றிக்கொண்டிருக்கும் பேர்வழிகளும் உண்டு.
நாங்கள் எதையுமே வேண்டி போவதில்லை என்று சொல்லும் ஆன்மீகப் பேர்வழிகளும்
முக்தி, தேவலோகம், சொர்க்கம் , ஆன்மவிடுதலை என்று எதாவது ஒரு காரணத்தை
முன்னிட்டுதான் புனித யாத்திரை செல்கிறார்கள்.
இத்தியாதி எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் தொடர்ந்து 50ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டம் கூட்டமாக
மும்பை தாதர் கடற்கரையிலிருக்கும் சைதன்யபூமிக்கு வருகிறார்கள் இவர்கள்.
பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்த நாளான டிசம்பர் 06ல் சைதன்யபூமிக்கு வந்து ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இலட்சம் இலட்சமாக டிசம்பர் 5, 6 நாட்களில் மும்பையை நோக்கி வரும் இவர்களுக்காக
மும்பையின் காவல்துறை என்னவெல்லாமோ முன்னேற்பாடுகள் செய்கிறது.
குறைந்தது 1500 தொண்டர்கள் தாதர் ரோடுகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குச்செய்வதில்
காவல்துறைக்கு உதவுகிறார்கள். ஆங்காங்கே தலித் அமைப்புகள், எஸ்.சி, எஸ்.டி யூனியன்கள்
வருகின்றவர்களுக்கு தண்ணீர் வழங்குவது முதல் உணவு வழங்குவதை வரை தங்களால் இயன்றதை
செய்து வருகிறார்கள்.

அன்றும் இன்றும்
-----------------

தொடர்ந்து இந்நிகழ்வை நான் பார்த்து வருகிறேன். பொதுவாக 5ஆம் தேதி மாலை சிவாஜி பார்க்
போனால் பல்வேறு மனிதர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியே இரவு 12 மணிவரை
கடைசி டிரெயினைப் பிடித்து வீட்டுக்கு வருகிற மாதிரி இருந்துவிட்டு வருவது வழக்கம்.
இந்த ஆண்டு 6ஆம் தேதி பகல் 2 மணிக்கு புறப்பட்டால் தாதரில் இறங்கியவுடனேயே
கூட்டத்துடன் கூட்டமாக நாமும் நடந்தாக வேண்டும் என்பதை விட அந்தக் கூட்டம் நம்மை
நகர்த்திச் செல்லும் என்பதுதான் சரியாக இருக்கும்.
15 அல்லது 20 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தைக் கடக்க 2 மணிநேரமானது.
'தாயி.. இவளைப் ப்டித்துக் கொள்' என்று சொல்கிறார் ஒருவர்.
அவள் அம்மா வரவில்லை. பக்கத்துவீட்டு குழந்தை என்னை நம்பி அனுப்பியிருகிறாள்'
என்று சொன்னவருக்கு நடுத்தர வயதிருக்கும். அவர் குழந்தை என்று சொன்ன குழந்தைக்கு
10லிருந்து 12க்குள் இருக்கும். என் மும்பை மூளை தப்பு தப்பாக கற்பனைச் செய்து கொண்டு
கவலைப்பட்டது!

அன்று பார்த்தவர்களுக்கும் இன்று பார்ப்பவர்களுக்கும் இடையில் ஓர் அப்பட்டமான
வேறுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. படித்த ஆணும் பெண்ணுமாய், தூய்மையான
உடையில், கம்பீரமாக நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருப்பதாய்ப் பட்டது.
எண்ணிக்கையில் ஆண்களுக்கு குறையாத அளவு பெண்களும். வெள்ளை நிற
புடவை/சுடிதாரில். இந்த ஆண்டு வந்தவர்கள் எண்ணிக்கை 15 இலட்சத்தையும் தாண்டியிருக்கும்
என்கிறார்கள் காவல்துறையினர்.
இவர்கள் வந்ததால் மும்பை நகரமே குப்பைமேடாகிவிட்டது என்று சில வருடங்களுக்கு முன்
டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதி தன் எரிச்சலைக் காட்டிக்கொண்டது.
இன்று A sea of people throngs chaityabhoomni in dadar என்று எழுதுகிறது.
அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது மேடைகளும் மேடையை அலங்கரிக்கும் கோஷங்களூம்.

மக்கள் கூடும் இடம் என்பதால் சம்பந்த மில்லாத அரசியல் தலைவர்கள் எல்லோரும் அம்பேத்காருடன்
போஸ்டரில் போஸ் கொடுப்பார்கள், நம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு போஸ்டர்கள் மயமாக காட்சியளிக்கும்..
சிவாஜி பார்க்கில் பெண்களும் ஆண்களூமாய் கைகளை மடக்கி தலைக்கு வைத்துக் கொண்டு தூங்குவார்கள்.
ஈவ்டிசிங், ஆண்கள் பெண்களிடம் காட்டும் சில்மிஷம், கூட்டம் அதிகமாக இருப்பதால் நடக்கும் திருட்டு,
கூட்டங்களில் குடித்துவிட்டு நடக்கும் ரகளைகள்.. இப்படியான எந்தக் குற்றங்களும் இங்கே நடப்பதில்லை.
குடிப்பதும் திருடுவதும் தலித் ஆண்களின் குணாதிசயமாக காட்டப்படும் ஊடகக் காட்சிகளை இங்கே நாம்
பார்க்கவோ படம் பிடிக்கவோ முடியாது.

அறிஞர் அண்ணாவின் இறுதியாத்திரையில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை கின்னிஸ் ரிகார்ட் என்று
சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப்பின் இன்று அந்த தம்பிமார்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்றுதான்
தெரியவில்லை! பாபாசாகிப் அம்பேத்கர் மறைந்து 53 வருடங்கள் கழித்து ஒரு தலைமுறை மாறி இன்னொரு தலைமுறை
தன் அடுத்த தலைமுறையை அழைத்துக்கொண்டு சைத்திய பூமிக்கு வருவது உலக அரங்கில் வேறு
எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.




இந்த மனித சக்தியை ஒன்று திரட்டி அரசியல் சக்தியாக ஏன் மாற்ற முடியவில்லை?

அம்பேத்கருக்குப் பின் வந்த எவருமே அம்பேத்கரின் இடத்தைப் பிடிக்க முடியாதுதான் எனினும்
தலித்துகளின் நம்பிக்கைக்குரிய ஓரு தலைமை ஏன் உருவாகவில்லை.

ஆண்டுதோறும் சைத்திய பூமிக்கு வருகின்ற வழக்கம் இந்த 50 வருடங்களில் ஒரு சடங்காக
சம்பிரதாயமாக மாறிவிட்டதா?

வந்திருக்கும் எத்தனைப் பேர் அம்பேதரின் சிந்தனைகளை கோட்பாடுகளை உள்வாங்கிக்கொண்டு
வாழ்வியலாக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?

ஒவ்வொரு வருடமும் பெருகிவரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள் உளவியலைப்
புரிந்து கொள்ளூம் முயற்சியில் அவர்களை வாசித்துக் கொண்டும் நேசித்துக் கொண்டும்
இருக்கிறோம் நானும் என் அரபிக்கடல் அலைகளும்.

Monday, December 7, 2009

சைத்தியபூமியில்..





சட்டப் புத்தகத்தின் பக்கங்களில்
எழுதப்பட்டிருக்கும் உரிமைகளை நம்பி
உறங்கிக்கொண்டிருக்கிறான் இவன்
அரைநூற்றாண்டுகளாக ....

Tuesday, December 1, 2009

பாட்டுலகின் பாட்டனார்கள்

பாட்டுலகின் பாட்டனார்கள் - பாவேந்தன் பாரதிதாசன்
-------------------------------------------------



புரட்சிக் காற்றே
நினைவிருக்கிறதா என்னை?
சக்தியைப் பாடி
பாரதி பக்தியைக் காட்ட நினைத்த பாட்டனே
எங்கள் பாரதிதாசனே

செந்தமிழ் நாடென்றும் - நம்
தந்தையர் நாடென்றும்
தேமதுரப் பாட்டெழுதிய
உன் பாரதி
பாரத எல்லைக்குள் நம்மைப்
பத்திரமாகப் பூட்டிவைத்தான்-அதையும்
பட்டா போட்டு நம்ப வைத்தான்.

சிங்களத்தை தீவு என்று
பிரித்துப் பார்த்தது அவன் பூகோளம்
நான் தான்
பகல்வேஷமிட்ட
இந்திய இருட்டை
உனக்கு அடையாளப்படுத்தினேன்.
கஞ்சா மயக்கத்திலிருந்த
காரிருளை மீட்டெடுத்தேன்
அதையும்
உன் கவிதையாலேயே
செய்துமுடித்தேன்.

தமிழனின் ஆரியமாயை காமாலைக்கு
சஞ்சீவிப் பர்வதத்தின்
பச்சிலைச் சாறெடுத்து
பத்தியமில்லாமல்
வைத்தியம் பார்த்த
புரட்சிக் காற்றே!

கட்டைவிரலை காணிக்கையாக்கிய
ஏகலைவனின் எழுத்தாணியை
கடனாகப் பெற்றாயோ
காணிக்கையாய் பெற்றாயோ
நீ தான் - உன்
குருவைத் தாண்டி வந்தாய்- தமிழர்
குலம் வாழ - அவர்
குருகுலம் தாண்டி நின்றாய்.
-------

தென் திசையைப் பார்க்கச் சொன்னாய்
அன்றந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
என் தமிழர் மூதாதை
என் தமிழர் பெருமான்
இராவணன் காண்- என்று
நம் தமிழர் வரலாற்றை
இந்திய எல்லைக்கு அப்பாலும்
விரித்தாய் - அதனாலேயே
எங்கள் இதயத்தில்
இடம் பிடித்தாய்.

-------------


திங்களைப் போல் செங்கதிர்ப்போல்
தென்றலை போல் செந்தமிழ்ப்போல்
வாழ்க வாழ்கவே எங்கள்
வளமார் திராவிட நாடு
வாழ்க வாழ்கவென
சிறுத்தைகளைப் பாடவைத்த
சிம்புட் பறவையே
சிறகை விரி..
தேடு.
இந்திய முகங்களுக்குள்
தன் சுயமிழந்துப் போன
என்னையும் உன் மண்ணையும்.

---

எங்கள் போர்முரசே
தெந்திசையைப் பார்த்து
தோள்களெல்லாம் பூரித்ததாய்
ஆனந்தப் பட்டாயே
உன்னைப் போலவே
புறநானூறு பாடிய எம்
அகநானூற்று அவ்வைகளின்
கல்லறைகளிருந்து
வெடிக்கிறது
உன் கவிதைகள் காணாத
கண்ணிவெடிகள்
எம் தாயின் கண்ணீர்வெடிகள்
ரத்தம் தோய்ந்த
புத்தனின் கரங்கள்
எழுதுகிறது
தமிழன் என்றால் அகதி என்று.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று
முழக்கமிட்ட போர்முரசே!
உன் கவிதைகளை கனவுகளை
அக்னிக்குஞ்சாய் நான்
அடைகாத்தேன்
உன்னைப் பிரசவிக்காமலேயே
தமிழ் அமுதூட்டிய
உன் ஆதித்தாயின்
வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே
அகதியானேன்.

உலக அரங்கில்
அமைதிப் புறாக்கள் பறக்கும்
ஆகாயத்தின் கீழ்
கதற கதற
ரத்தம் சொட்ட சொட்ட
நிர்வாணமாய்க் கிடக்கிறது
எங்கள் வாழ்வும்
தமிழன் வளமும்.

----

உன் வீட்டில்
உன் கவிதைகளை
உரக்க வாசித்தே
ஊராளும் கூட்டம்
தப்பி வந்த என் தவப்புதல்வர்களுக்கு
இலவசமாக பல்பொடி
வழங்கலாம்
போட்டிக்கு அம்மாக்கள் பால்பொடி வழங்கலாம்
மருத்துவர்கள் மாறி மாறி
கூட்டணி அமைத்து
கூட்டணி உடைத்து
தமிழனைப் பைத்தியம் ஆக்கலாம்
காலை 10 மணிமுதல்
பகல் 1 மணிவரை
உண்ணா நோம்பிருக்கும்
அதிசயங்கள் நடக்கலாம்
பார்வையாளர் வரிசையில்
பதுங்கி இருக்கிறது
உறைக்குள் வாளாக
உறங்கும் போர்ப்படை.

---


தமிழ்த் தேசியத்தை
தாங்கிப் பிடித்தவனே
உன் கனவுகளைச் சுமந்த
என் கருவறைகள் மீது
காந்தி தேசத்தின் ராமபாணம்.
வெடித்துச் சிதறிய - எம்
பனிக்குடத்தின் சாட்சியாக-
முலை வீசி எறிந்த -எம்
கொற்றவை சாட்சியாக-
உங்கள் ஸ்ரீஸ்ரீராமனுக்கு
உயிர்ப்பிச்சை அளித்த
எங்கள் முப்பாட்டன்
இராவணன் சாட்சியாக
கடல் கடந்து ஒலிக்கிறது
'கொலை வாளினை எடடா
கொடியோர் செயலறவே..
புதியதோர் உலகம் செய்வோம்'

தமிழச்சியின் கத்தி
ரத்தம் கீறி எழுதுகிறது
என் போர்வாளே..
பாவேந்தன் கனவல்ல- அவன்
பாடல்களும் கனவல்ல.

-----

(28/11/2009 மும்பை , சயான், குருநானக் அரங்கில்
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் நடத்திய கவியரங்கத்தில்
"பாட்டுலகின் பாட்டனார்கள் " வரிசையில்..
"பாவேந்தன் பாரதிதாசன்" தலைப்பில் என் உரைவீச்சு.)