Wednesday, August 24, 2011

அடா அன்னா..! இவுங்களுமா..?






அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நம்ம ஊரு சூப்பர் ஸ்டார் முதல்
இந்த ஊரு சூப்பர் ஸ்டார் வரை குரல் கொடுத்திருக்கிறார்கள்.
யார் தான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை?
கொஞ்சம் ஒதுங்கி இருந்தவர்கள் கூட "நாமும் ஆதரவு
தெரிவிக்கவிட்டால்... லஞ்சம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுவிடுவோமே!'
என்று பயந்து தூக்க கலக்கம் தெளியாமல் அப்படியே ஓடி வந்து உட்கார்ந்து
இருக்கிறார்கள்.
அவர்களின் திரைப்பட உலகத்தில் புழங்கும் கருப்புபணம் எவ்வளவு?
அவர்கள் வாங்கும் சம்பளத்தில் வெள்ளையும் கருப்பும் எவ்வளவு?
வாங்குகிற வெள்ளைப்பணத்திற்கு ஒழுங்காக வருமான வரி
கட்டி இருப்பவர்கள் எத்தனைப் பேர்?
இதுவரை ஏதோ தெரியாத்தனமா வாங்கிட்டேன்!
அன்னா ஹசாரே மேல் சத்தியமா இனிமே கருப்பு பணம் வாங்கப்போவதே
இல்லை! என்று அவர்களில் எத்தனைப் பேர் சொல்லுவார்கள்?

டாட்டா, மிட்டல், அம்பானி சகோதரர்கள் அனைவரும்
நீரா ராடியாக்கள் புடைசூழ ராமலீலா மைதானத்திற்கு வந்து
அன்னா ஹசாரேவின் உண்ணாநிலை மேடையில் உட்கார்ந்தாலும்
ஆச்சரியப்பட என்ன இருக்கிறது!

சிறையில் இருக்கும் எனதருமை சகோதரி கனிமொழியும், சகோதரர் ராஜாவும் கூட
இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஒரு நாளாவது அடையாள
உண்ணாவிரதம் இருந்தால் நல்லது என்பது கருத்து.
யாராவது இந்தக் கருத்தை அவர்கள் காதில் போடுங்கள்!



Saturday, August 20, 2011

காக்கைகள்






விழித்திருக்கும் போதும்
தூக்கத்திலும்
என்னைத் துரத்துகின்றன
காக்கைகள்.
தனியாகவோ கூட்டமாகவோ.

விழித்திருக்கும் போது
சிறகுகளை விரித்து
என்னைச் சிறைப்பிடிக்க வருகின்றன.
தூக்கத்திலோ என் கபாளத்தைப் பிளந்து
நினைவுகளின்
ஒவ்வொரு ரகசிய அறைக்குள்ளும்
பூட்டுகளை உடைத்துக் கொண்டு
புகுந்துவிடுகின்றன.
அணுஅணுவாய்க் கொத்திக் குதறி
சிடுக்களை மேலும் சிடுக்குகளாக்கி
நரம்பு மண்டலத்தை நாசப்படுத்திவிடுகின்றன.
என் செயல்பாடுகள் என் கட்டுப்பாடுகளை
இழந்துவிடும் அச்சத்தில்
கனவுகளை விலக்கி வைக்க நினைத்து
தோற்றுப் போகிறேன்.
என் தோல்வியைத்
தன் வெற்றிக்கு அடையாளமாக்கி
விழா எடுக்கின்றன காக்கைகள்.

என் முப்பாட்டி காக்கைப்பாடினிக்கு
விருந்தினர் வருகையை
அறிவித்தக் காக்கைகள்
ம்ம் ம்ம்...
மாறியது மனிதர்கள் மட்டுமல்ல
காக்கைகளும்தான்.

Sunday, August 14, 2011

ஆகஸ்டு 15.. மூவண்ணக் கொடியா... ? கறுப்புக்கொடியா..?



நாளை விடிந்தால் இந்தியா சுதந்திர தினக்கொண்டாட்டம்.
குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் துப்பாக்கி ஏந்திய
கருப்பு பூனைகளின் காவலுடன் பத்திரமாக நம் பாரதப் பிரதமர்
சுதந்திரநாள் உரையாற்றுவார். வெளிநாட்டு உள்நாட்டு பிரபலங்கள்
கைத்தட்டுவார்கள்.
எல்லா தொலைக்காட்சிகளிலும் திரைப்பட நட்சத்திரங்கள் வந்துப் போய்க்
கொண்டிருப்பார்கள். அவர்கள் இந்திய சுதந்திர வீரர்கள் குறித்தோ
விடுதலைப் போராட்டம் குறித்தோ எதாவது பேசித்தான் ஆகவேண்டும்
என்பதெல்லாம் இல்லை. சில நல்ல படங்களும் சில ஓடாதப் படங்களும்
டிவி திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும். செய்தி வாசிப்பவர்கள் கொஞ்சம்
தூக்கலாக மேக்-அப் போட்டிருப்பார்கள்.

இந்தியாவில் ஒரிசா என்றொடு மாநிலம் இருக்கிறது. அந்த மாநிலத்தில்
ராயக்கடா மாவட்டத்தில் குச்சைய்படர் கிராமத்தில் ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி
ஏற்றுகிறார்கள். டிசம்பர் 2000ல் ஹிண்டல்கோ கம்பேனியை (Hindalco - Birla grp)
எதிர்த்து (Prakrat Sampad Suraksha Parisad - PSSP) இயற்கை வளங்களைப்
பாதுகாக்கும் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஒரிசாவில்
அதிகமாக இருக்கும் பாக்சைடு தான் ஹிண்டல்கோ , மிட்டல், டாடா, ஜிண்டால்,
எஸ்ஸார், பாஸ்கோ, ரியோ டிண்டோ, வேதாந்தா என்று பல முதலாளித்துவ
முதலைகளின் பசிக்கு ஒரிசாவைத் தீனியாக்க துடித்தது. இந்திய அரசும் வழக்கம்போல
பெருமுதலைகளின் பசி ஆற்றவே முன்வந்தது. 15 டிசம்பர் 2000ல் வெளியூரிலிருந்து
லாரிகளில் ஆட்களைக் கொண்டு வந்து பாக்ஸைடு சுரங்கங்களுக்கு ஆதரவாக
குரல் எழுப்பியது பணமுதலைகள். அங்கிருந்த ஆதிவாசிகள் அவர்களை விரட்டி
அடித்தனர். ஆயுதம் தாங்கிய சிறப்புக் காவல்படை வந்திறங்கியது,.
3 ஆதிவாசிகள் காவல்படையின் துப்பாக்கிச் சூட்டில் பலியானர்கள்.
அவர்களின் நினைவாக இன்றும் குச்சைய்படர் (Kuchaipadar) கிராமத்தில்
ஆகஸ்டு 15, ஜனவரி 26 ல் கறுப்புக்கொடி ஏற்றப்படுகிறது.

தமிழனுக்கு இந்த ஆகஸ்டு 15ல் கறுப்புக்கொடி ஏற்ற எண்ணிலடங்கா
காரணங்கள் , ரத்தம் காயாத மண்ணில் ...
ஈரமாக இருக்கத்தான் செய்கின்றன.