Wednesday, April 29, 2009

சென்னைத்தமிழ்




குப்பத்து மொழியும் சில குழப்பங்களும்






அன்பின் Pudiyamadavi





தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில் கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா நெடுநாளாக என்னுள் உள்ளது).





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை. இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை அல்லவா?)



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து பாஷையிலிருந்து மருவியதா?



4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின் இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .



5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?



பாண்டித்துரை

சிங்கப்பூர்


http://pandiidurai.wordpress.com

சிலர்தான் மாற விரும்புகிறார்கள்
மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்



அன்பினிய பாண்டித்துரை அவர்களுக்கு,
வணக்கம்.




தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் வருகிற பலரின் கேலிக்கு உள்ளாவது சென்னை மொழி (குப்பத்து மொழி) இதனை ஒரு பெரிய நகைச்சுவையாக பாவித்து பேசுவதுடன் கொஞ்சமும்

யோசிக்காமல் அதற்கு எழும் கைத்தட்டல்களும் அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் தான் தமிழ் வாழ்கிறது இங்குதான் தூயதமிழை நான் கண்டேன் தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் காதில்

கேட்பது தமிங்கிலீஸ் என்ற மேதமைப் பேச்சுகளால் பல நேரத்தில் கடுப்பானதுண்டு. (இது போன்று பேசுபவர்களை ஒரு ஞாயிறு முழுமைக்கும் சிங்கப்பூர் நூலக வாயிலில் நிறுத்தி அங்கு

சேமிக்கப்பட்டுள்ள தமிழ் புத்தகங்களை எத்துனை பேர் (சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்கள்) வாசித்து இன்புறுகின்றனர் என்பதை கணக்கெடுக்கச் செய்யவேண்டும் என்ற ஆவா

நெடுநாளாக என்னுள் உள்ளது).

>> சிங்கப்பூர் வருகிற என்பதை மாற்றி மும்பை வருகிற என்றும்
சிங்கப்பூர் நூலக வாயிலில் என்பதை மும்பைத் தமிழ்ச்சங்க நூலக வாயிலில் என்றும் மாற்றிக்கொண்டால் ...
மும்பையிலும் இதே நிலைமைதான்!





சமீபத்தில் புவிநாள் விழாவினை கொண்டாட தென் தமிழகத்தில் இருந்து வந்திருந்த குருமகான் மகாமகரிஷி பரஞ்ஜோதியார் கூட சென்னை பாஷை(மொழி)-யை விட்டுவைக்கவில்லை.

இஸ்திகுனு வா இதுக்கு எந்த அகராதியை வைத்து நாம் பொருள் அறிந்துகொள்வது என்று நகைத்து அதற்கு எழுந்த கையொலியில் இன்புற்று இங்குதான் (சிங்கப்பூர்) தமிழ் தமிழாக

இருக்கிறது என்ற பேச்சால் அதற்கு பின்பு அவர் ஆற்றிய சொற்பொழிவை கேட்கவிரும்பாதவனாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டேன்(அதற்கு பின்புதான் அவரது

சொற்பொழிவே ஆரம்பமானது).



சென்னை மொழிபற்றிய உங்களின் பார்வையை தெரிந்துகொள்வதன் வழியே இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து உற்றுநோக்க ஏதுவாக அமையும்.



1. குப்பத்து பாஷை (மொழி) உருவானதற்கு ஏதேனும் பின்னணி உண்டா? (அதாவது எப்படி தோன்றியிருக்ககூடும்-ஆக தமிழில் சமீபத்தில் தோன்றிய வட்டார பாஷை

அல்லவா?)

* குப்பத்து பாஷை என்ற உங்கள் சொல்வழக்கு புரிந்து கொள்ள எளிதாக இருந்தாலும் அது சரியல்ல என்பது என் கருத்து.
சென்னை வட்டார வழக்கு என்றோ சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சுமொழி என்றோ இருந்திருந்தால் சரியாக இருக்கும்.
முதலில் குப்பத்தில் வாழும் மக்கள் யார்?என்ற அறிந்து கொண்டால் சில முடிச்சுகள் அவிழும்.
அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். உடல் உழைப்பு இழிவானதாக கருதப்படும் சமுதாயம் உழைப்பவர்களைத் ஊர்க்கோடியில்
ஒதுக்கி வைத்துள்ளது. தீண்டத்தாகதவர்கள் என்று ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
சற்றொப்ப 2000 ஆண்டுகள் கல்வி இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களிடம்தான் தமிழ் தன் உயிர்ப்பை
இழந்துவிடாமல், புராண இதிகாச கற்பனைக்குக்குள் தன்னை இழந்துவிடாமல் தன் சுயமிழக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழை 2000- ஆண்டுகள் தொடர்ந்து வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இந்த குப்பத்து வாழ் தமிழர்கள் தான்.

சென்னை குடிசை வாழ் மக்களின் வழக்குத்தமிழ் இன்றொ நேற்றோ உருவானதல்ல.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாநகரம் உருவான காலகட்டத்தில் உடல் உழைப்புக்கான தேவையும்
வாய்ப்பும் சென்னையிலும் சென்னையைச் சுற்றி இருந்த இடங்களிலும் உருவான காலக்கட்டத்தில்
நம் கிராமப்புறங்களிலிருந்து வயிற்றுப்பிழைப்புக்காக இடம் பெயர்ந்து வந்தவர்கள் தான் பெரும்பாலான
சென்னை குடிசை வாழ் தமிழர்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை - மெட்ராஸ் மாகாணமாக இருந்தப்போது
தெலுங்கர்களும் கன்னடர்களும் அதிகமாக சென்னையில் வசித்தார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால்
சென்னை தமிழ் உருவான வரலாறு ஒரளவு புரியவரும்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் என்பதாலும் பல்வேறு மாவட்ட தமிழ் வழக்கு மொழிகளும்
கலந்து ஓர் அவியல் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

சென்னை மொழி மற்ற வட்டார வழக்குகளிலிருந்தும் மிகவும் வித்தியாசமானதாகவும் எதற்குள்ளும் அடைக்கமுடியாமல்
திமிறி நிற்கும் மாநகரக்குரலாகவும் இருப்பது இதனால்தான்.



2. குப்பத்து பாஷை (மொழி) வட்டார வழக்கில் வருமா எடுத்துக்கொள்ளலாமா?

* வட்டார வழக்கில்வரும்.



3. சென்னை பாஷை (மொழி) என்றாலே பொதுவாக குப்பத்து பாஷை (மொழி) தானா அல்லது இதில் இருந்து வேறுபட்டதா? தற்போதைய பொதுவான சென்னை மொழி குப்பத்து

பாஷையிலிருந்து மருவியதா?

வழக்கம்போல மொழியும் பேசப்படும் மனிதர்களின் வர்க்க சாதி இட வேற்பாடுகளைச் சுமந்து கொண்டுதான் வருகிறது.
சென்னையில் பொதுவாக மேல்தட்டு மக்கள் பேசும் மொழி சமஸ்கிருதம் கலந்த/ஆங்கிலம் கலந்த தமிழாக இருக்க
குடிசைவாழ் மக்களின் பேச்சுதமிழ் முன்னதிலிருந்து மாறுபட்டதாக இருக்கிறது. மாறுபட்டது என்பதாலேயே கலப்படமில்லாத
தூயதமிழ் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. ஆனால் குடிசை வாழ் மக்களின் மொழிக்கலப்பு இயல்பானதாக அமைந்துள்ளது.
அவர்களுக்கே பிறமொழிச் சொல் என்பதெல்லாம் தெரியாது.






4. குப்பத்தில் பிறக்கும் உணர்வுள்ள இசை பாடல்களை சில மேதமைகள் மிக இழிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் குப்பத்து மொழியை இழிவாக காணச்செய்வதுபோல் அவர்களின்

இசை வாழ்வாதரங்கள் என் இன்னபிறவற்றையும் சேர்த்து சிலர் இழிவுபடுத்துகின்றனர். ஆக இதையெல்லாம் எவ்வையில் எடுத்துக்கொள்வது .

* சாதிப்படிநிலை சமூகத்தில் உடல் உழைப்பு > ஏழ்மை > தீண்டாமை எல்லாம் நேர்க்கோட்டில் அமைந்திருப்பதை உன்னிப்பாக கவனித்தால்
குடிசைவாழ் பேச்சுமொழியை யார் எதற்காக இழிவாக சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புர்நிதுகொள்ள முடியும்.
பஞ்சமர் நாவல் எழுதிய ஈழத்து தமிழ் எழுத்தாளர் கே.டானியல் அவர்கள்

" ஈழத்துத் தமிழறிஞர் சிலரால் நையாண்டி செய்யப்படும் 'இழிசனர் வழக்கு'
மொழியிலேயே இந்த நாவலைச் செய்திருக்கிறேன். தமிழ்ச் சான்றோர் அன்னிய நாகரிகத்தில் மோகம் கொண்டு தமிழைச் சீரழித்தபோதும்,
ஏகாதிபத்திய அடிவருடிகள் தமிழை மறந்து மறுத்து நையாண்டி செய்த போதும் பண்டித வித்துவ பரம்பரையினர் தமிழன்னையை மூடி முக்காடிட்டு
இருள் சிறைக்குள் வைத்த போதும் தமிழ் அன்னையை சிறைமீட்டு தேறுதல் கூறிப் பாதுகாத்தவர்கள் இந்த பஞ்சமர் கூட்ட மக்களேயாகும்.
இவர்களே தமிழுக்கு எஜமானர்களுமாவர்கள். அதனால் அந்த எஜமானர்கள் பேசிய வழக்கையே தமிழென ஏற்று இதன் பாத்திரங்களுக்கு
பூரண சுதந்திரம் கொடுத்து இவர்களைப் பேச வைத்திருக்கிறேன்" என்றும்
"மக்களின் எதிரிகள் எதைப் பிழை என்கிறார்களோ அந்த அதுவே மிகவும் சரியானதாகும்" என்றும் சொல்லியிருப்பதையும் நினைவு படுத்த
விரும்புகிறேன்.

மும்பை தமிழ்ச்சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து நெல்லை கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். தொலைக்காட்சிகளில்
பட்டிமன்றங்கள், கம்பர் விழாக்களில் அவருடைய பேச்சை சில நேரங்களில் ரசித்தது உண்டு! ஏனவே அவருடைய பேச்சைக் கேட்க
போயிருந்தேன். அப்போது இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரின் இசையையும் அவர்கள் சார்ந்த சாதி, மதம் கலந்து
அவர் நகைச்சுவை என்று பேசிய அபத்தம் என போன்றவர்களுக்கு எரிச்சல் மூட்டியது. அதுவரை அவர் மீதிருந்த மரியாதை
மறைந்து சில பிம்பம் உடைந்து போனது.


5. குப்பத்து பாஷை (மொழி)யால் தமிழ் சிதைவுறுகிறதா?

எந்த வட்டார வழக்குகளாலும் தமிழ் சிதைவுறுவதில்லை!


சில குறிப்புகள் :

> என் வாழ்விடம் மும்பை, என் சொந்தவூர் தமிழ்நாட்டின் தாமிரபரணி என்பதால் எனக்கும் சென்னைக்குமான தொடர்பு
மும்பைக்கும் சிங்கைக்குமான தொடர்புளவுதான். எனவே சென்னை குடிசைவாழ் மக்களின் மொழியுடனோ வாழ்க்கையுடனோ
எனக்கு அதிகத் தொடர்பில்லை. தெரியாது என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

> சென்னை வழக்கு மொழி குறித்த மேற்சொன்ன என் கருத்துகள் என் சிற்றறிவுக்கு எட்டிய அளவு மொழி சமூகம் சார்ந்த
பார்வையின் ஊடாக கண்ட ஒரு பருந்து பார்வை தான்.

> வட்டார வழக்கு மொழியின் தாக்கம் படிப்படியாக புலம் பெயர்ந்த தமிழர்களிடம் இல்லாமல் போய்விடுவதற்கான சாத்தியக்கூறுகள்
இருக்கின்றன. இன்றைய தொலைக்காட்சி ஊடகம் அறிந்தோ அறியாமலோ அதைத்தான் செய்கிறது .

> பேச்சுதமிழில் கதைகள் எழுதும்போது என் போன்றவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு.
எல்லோரும் வட்டார மொழி வழக்கில் எழுதுவது போல என்னால் எழுத முடியுமா?
எங்கள் மும்பை டமிளரின் (தமிழரின்) பேச்சு மொழியில் சரளமாகக் கலந்துவிட்ட இந்தி, மராத்தி.குஜராத்தி
மொழிச்சொற்களைக் கலக்காமல் எப்படி எழுதுவது?
அதனால் தான் குறைந்தப்பட்சம் "அச்சா, நஹி, சலோ, க்யா, பானி, இத்தியாதி மினிகலப்புகளுடன்
என் கதைமாந்தர்களின் பேச்சுதமிழை எடிட்டிங் செய்கிறேன்.!

சென்னை குடிசைவாழ் மக்களின் பேச்சு தமிழ், வட்டார வழக்குகள் குறித்து கொஞ்சம் யோசிப்பதற்கான
வாய்ப்பை உங்கள் மடல் கொடுத்துள்ளது. மிக்க நன்றி.

வாழ்த்துகளுடன்,

புதியமாதவி,
மும்பை.

Tuesday, April 28, 2009

காமெடி டைம்

கலைஞர் டி.வி.யில் அதிரடி காமெடி டைம்
--------------------------------------------





ஜெயா டி.வி.யில் அடிவருடி கலக்கல் காமெடி
---------------------------------------------


Thursday, April 23, 2009

விற்பனைக்காக விந்துவும் கருமுட்டையும்

Life is beautiful.. pass it on என்ற வாசகத்துடன் வளவளப்பான காகித அட்டையில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கையை வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா - CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு விந்து - கருமுட்டை வங்கி. டென்மார்க் தலைநகராகக் கொண்ட உலகின் மிகப்பெரிய விந்துவங்கி. அமெரிக்க ஐரோப்பிய மருத்துவ சட்டத்திட்டங்கள், சுகாதார வழிமுறகளைப் பின்பற்றி இந்தியாவில் நுழைந்திருக்கும் வங்கி. குழந்தைகள் இல்லாத குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத தம்பதியர் வாழ்க்கையில் வசந்தத்தை வழங்கும் தேவதைகள் / தேவதூதர்கள் நீங்கள்! எங்கோ யாருக்கோ தேவைப்படலாம் உங்கள் விந்துவும் கருமுட்டையும். இம்மாதிரியான சமூக அக்கறை தொனிக்கும் வாசகங்கள்..நம்மை யோசிக்க வைக்கிறது. கவர்ச்சிகரமான வரிகளைத் தாண்டி யோசிக்கும் போது அமெரிக்க ஐரோப்பிய தாராளமயம் எதை எல்லாம் தாராளமயமாக்கி விற்பனைக்கான கடைச்சரக்காக நம் சந்தைக்குள் நுழைந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. போர்க்களத்தில் பணிபுரியும் வீரர்கள், இராசயணம், பூச்சிக்கொல்லி, கதிர்வீச்சு ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் அதில் வேலைச் செய்பவர்களுக்கும் தங்கள் வாரிசுகளை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளும் உரிமையை இந்த வங்கிகளில் அவர்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் விந்துகளை சேமித்து வைப்பதன் மூலம் பெறமுடியும் என்பது மகிழ்ச்சிக்குரியதுதான். அறிவியல் உலகத்தின் மிகச்சிறந்த பயன்பாடு என்றும் கொண்டாடலாம்தான். ஆனால் நடைமுறையில் இந்த வங்கிகளில் என்ன நடக்கிறது? விந்து தானம் கொடுப்பவருக்கு 10 சாம்பிளுக்கு குறைந்தது ரூ.5000 முதல் 10,000 வரை! கருமுட்டைக்கு விலை அதிகம். குறைந்தது ரூ 40,000 முதல் ரூ 60,000 வரை. வாடகைத்தாய்க்கோ ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுக்க குறைந்தது 2 இலட்சத்திலிருந்து 3 இலட்சம் வரை . தகுதிகள்: *விந்து தானம் வழங்கும் ஆண் 18 வயதுக்கு மேல் 42 வயதுக்குட்பட்டவராய் இருக்க வேண்டும். * ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை. * இரண்டு தலைமுறையின் மருத்துவக்குறிப்புகள் தேவை. *தொடர்ந்து 6 முதல் 9 மாதங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது விந்து வங்கிக்கு வருகைத் தந்து விந்துதானம் செய்ய தயாராய் இருக்க வேண்டும். *விந்துதானம் செய்வதற்கு முன் பாலியல் நோய்கள் (HIV & Hepatitis) மற்றும் பிற தொற்றுநோய்கள் இருக்கிறதா என்றறியும் சோதனைக்கு உடன்பட வேண்டும். * விந்துதானம் செய்வதற்கான மேற்குரிய தகுதிகளுடன் இன்னும் சில விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும். விந்துதானம் வழங்கும் ஆணைப்போலவே கருமுட்டை தானம் வழங்கும் பெண்ணுக்கும் *வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். *ஏற்கனவே தாய்மை அடைந்தப் பெண்ணாக இருப்பது சிறப்புத்தகுதி! *கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசி மருந்துகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும். *தொடர்ந்து இரு முறையாவது கருமுட்டை தானத்திற்கு உடன்பட வேண்டும். *கருமுட்டை தானத்திற்கான மருத்துவ முறைக்கு- மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மயக்க மருந்து கொடுத்தல், கருமுட்டையை எடுக்கும் மருத்துவமுறை - உடன்பட வேண்டும். *பாலியல் நோய்கள்/தொற்றுநோய்கள் அறியும் மருத்துவ சோதனைக்கு உடன்பட வேண்டும். வாடகைத்தாய்க்கும் மேற்கண்ட தகுதிகள் அனைத்தும் அவசியம். வயது வரம்பு 21 முதல் 35க்குள். இவைதவிர சம்பந்தப்பட்ட ஆண்/பெண் வாழ்க்கைத்துணையின் ஒப்புதலும் தேவை. எது விற்பனைக்கு? --------------------- பாக்கெட் மணி, ஆடம்பர இரவு விடுதி கேளிக்கைகள் இத்தியாதிகளில் மயங்கித்திரியும் இளைஞர்களுக்கும் இளம்பெண்களுக்கும் இம்மாதிரியான வங்கிகள் மின்மினிப்பூச்சிகளை கவர்ந்திழுக்கும் விளக்குத்திரியாக இருக்கின்றன. பாக்கெட் மணிக்காக தன் நண்பன், பாட்டி தாத்தா தம்பி தங்கை உறவுகளின் உயிருடனும் விளையாட துணியும் இன்றைய இளசுகள் விந்துவங்கியில் கிடைக்கும் பணத்திற்காக அதிகமாக போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தவிசயத்திலும் ஆண்களைவிட அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். மாதம் ஒரு முறைதான் கருமுட்டைகள் உற்பத்தி என்ற இயற்கையின் விதி. எனவேதான் கருமுட்டைகளுக்கான விலையும் விந்துகளின் விலையை விட பன்மடங்கு அதிகம். ஒவ்வொரு முறையும் கருமுட்டை தானம் செய்யும் போது மருத்துவக்கண்காணிப்பு தேவைப்படுகிறது. அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ஓவேரியன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்பிரியா. தீடிரென சரியத் தொடங்கியிருக்கும் பொருளாதரம், கணினி ப்பிபிஓ துறைகளின் ஆள்குறைப்பு வேலை இழப்பு ஆகிய சூழல்கல் நிறைய இளம் பெண்களை கருமுட்டை தானம் செய்யும் நிலைக்கு தள்ளி இருக்கிறது என்பதும் உண்மை. வாடகைத்தாயாக இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய தமிழ்ச்சினிமா காட்சிகளும் பெண்ணுக்கு ஏற்படும் குற்ற உணர்வும் இன்றைய எந்த வாடகைத்தாய்மார்களுக்கும் இல்லை. இதை மனநிலை மாற்றம் என்பதா? பொருளாதரம் தின்று செரித்துவிட்ட உணர்வுகள் என்பதா? இரத்ததானம் செய்வது போலவே விந்துதானமும் கருமுட்டைதானமும் என்று சிலர் வாதிடுகிறார்கள். அறிவியல் பூர்வமாக அவர்கள் வாதத்தை உடைப்பது எளிதல்ல எனினும் தன்னுடைய கண், தன்னுடைய உதடு தன்னுடைய புன்னகை தன்னுடைய நடை தன்னுடைய நிறம் தன்னைப் போலவே அச்சு அசலாக இன்னொரு உயிர்.. தன்னை தன் பரம்பரை விதையை தன்னுள் சுமந்து கொண்டு தன் பரம்பரை சங்கிலியாய் இந்தப் பிரபஞ்சத்தின் உயிரணுவில் கலந்து.. நிற்கும்போது அந்த உயிருக்கும் அந்த உயிரின் விதைக்கும் உள்ள தொடர்பு.. வெறும் இரத்ததானம் அல்ல. அதற்கும் மேலான ஒன்று. பலகோடிக் கணக்கில் செலவு செய்து மக்கள்தொகை அதிகமுள்ள இந்திய சந்தையில் திறக்கப்பட்டிருக்கும் இந்த விந்து வங்கிகள் விந்துதானம், கருமுட்டைதானம், வாடகைத்தாயின் தியாகம் என்ற அறச்சிந்தனைகளைப் புறந்தள்ளி எல்லாம் உலகச் சந்தையில் விற்பனைக்கே என்ற விற்பனைச் சந்தையைக் கடைவிரித்திருக்கின்றன. குழந்தை இல்லாத தம்பதிகள் அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற விழுமியங்கள் எல்லாம் கடந்த காலமாகிவிடும். இங்கே இனி எல்லாமே விற்பனைக்குத்தான்

 Cryos International - India Pvt. Ltd. Address : 209, Marathon Max, LBS-Link Road Junction, Mulund (West), Mumbai - 400080 INDIA Tel. : +91-22-25683998, +91-9322404849 +91-22- 2292 6264 Fax. : +91-22 2562 1308 E-mail : in@cryosinternational.com Website : www.cryosinternational.com

Monday, April 13, 2009

வலிநிவாரணி


அச்சமாக இருக்கிறது
மின்னஞ்சல்களை வாசிக்க.
அச்சமாக இருக்கிறது
பத்திரிகை பக்கங்களைப் புரட்ட.
அச்சமாக இருக்கிறது
பூக்கள் நடத்தும்
புறநானூறு பாட.
அச்சமாக இருக்கிறது
உண்மையின் கோரமுகம்.

சீழ்வடியும்
காயங்களின் வலியுடன்
காலம்தள்ளுவது
கஷ்டம்தான்.
எப்படியோ
24 மணிநேரமும்
திரைப்படங்களையே
காட்டிக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சிகளின்
அவசியத்தை
இப்போதாவது
நாங்கள் பாராட்டித்தான்
ஆகவேண்டும்.!!

Thursday, April 2, 2009

உண்மைக்கு நெருக்கமாய்






சீக்கியர்கள் VS தமிழர்கள்
--------------------------
"சீக்கியர்களால் செய்ய முடிந்ததை தமிழ்ச்சாதியால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவோம். அந்தத் தேடலில் நாம் இதுவரைப் பார்க்காத
நம் இருண்ட பக்கங்கள் தெரியவரலாம். "

என்று வீரவணக்க வரலாறு குறித்த என் பதிவில் எழுதியிருந்தேன்.
கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்துதான்.
இக்கட்டுரையை பல்வேறு இணையதளங்களும் வலைப்பூக்களும் (Blog)
மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருந்ததை அண்மையில் கண்டேன்.

நண்பர்களுடன் இதுகுறித்து நிறைய பேசி இருக்கிறேன். கட்டுரைக்கான
பின்னூட்டங்கள் சில செய்திகளைத் தொடாமல் இருப்பதையும் அறிய முடிந்தது.
அதனால் என் பதிவுக்கு நானே பின்னூட்டம் எழுத வேண்டியதாகிவிட்டது!
அவற்றில் சில:


*என்னதான் மதம் குறித்த பார்வை என்போன்றவர்களுக்கு தந்தை பெரியார் சாயலில்
இருந்தாலும் மதம் என்ற ஒரு கட்டுமானம் சீக்கியர்களை இணைத்திருக்கிறது.
ஆனால் தமிழர்களின் மதம்?
இந்துமதம்! கேட்கவே வேண்டாம். தமிழ்ச்சாதியைப் பிரித்து வைத்திருப்பதில்
சூத்திரனாய் ஒதுக்கி வைத்திருப்பதில் மிகபெரிய வெற்றியைக் கண்டிருக்கிறது.
பல்நூறு ஆண்டுகள் தன் ஆளுமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
எத்தனை பெரியார்கள் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என்கிற மாதிரி
மொட்டைப் போடுவதிலிருந்து பிச்சை எடுப்பது வரை சகலத்திலும் தன்னை
நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது.
தமிழ்ப்பேசும் இசுலாமியர்கள், கிறித்துவர்கள் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு,
உழவர் திருநாள் என்றெல்லாம் தமிழின அடையாளத்துடன் கொண்டாடப்படும்
-அல்லது கொண்டாட வேண்டும் என்ற தைத் திங்கள் முதல் நாளைக் கொண்டாடுவதில்லை!
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

* பஞ்சாபியர்களின் கடின உழைப்பும் ஒற்றுமையும். அவர்கள் புறநானூறு பாடல்கள் எல்லாம்
எழுதி அதைப் பற்றிப் பேசிப்பேசியே பொழுதுப் போக்குவதில்லை. அவர்கள் தான்
இன்றைய இந்திய மண்ணின் புறநானூறாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஆம், இந்திய இராணுவத்தில் பஞ்சாபியர்களின் பங்களிப்பு இன்றுவரை
அளப்பரியது. இந்திய அரசு அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான்
இருக்கிறது. வரலாற்றில் சில நிகழ்வுகள் ( எழுத்தில் பதிவு செய்வது இயலாது)
இந்திய அரசுக்கு இதை நினைவூட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

*இந்திராகாந்தி கொலையை அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் இந்திராகாந்தியைச்
சுட்டுக்கொன்ற பியாந்த்சிங் அவர்களின் விதவை மனைவி விமலா கவுர் வேட்பாளாராக
நிறுத்தப்பட்டார். இந்தியாவிலேயே மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில்
ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான வாக்குவித்தியாசத்தில்.விமலாகவுர் வெற்றி பெற்றார்.

*பியாந்தசிங்கும் பிந்திரன் வாலேயும் இன்றும் சீக்கியர்களால் 'தியாகி' என்றே
போற்றப்படுகிறார்கள்.

*ப்ஞசாபிலும் காங்கிரசு கட்சி உண்டு, ஆனால் சீக்கியர்களுக்கு எதிராக இந்தியா இறையாண்மை,'அது இதுனு
உளறினால் பஞ்சாப் மண்ணில் காங்கிரசு கட்சி துடைத்து எறியப்படும்.

*விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒரு பக்கம் இந்திய அமைதிப்படையிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கத்தில் “அமைதிப்படை” தனது ஆதரவுக் குழுவான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ என்ற அமைப்புக்கு ஆயுதங்களை வழங்கும் துரோகத்தைச் செய்தது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியது, ஏதோ சாதாரண மனிதர் அல்ல; இந்திய ‘அமைதிப் படை’க்கு தலைமை தாங்கிச் சென்றிருந்த தளபதி ஹர்சிரத்சிங்கே - இந்த உண்மைகளை அம்பலப் படுத்தியிருக்கிறார். அவர் எழுதுகிறார்:
1987 ஆம் ஆண்டு 14/15ஆம் தேதி நள்ளிரவு எனக்கு தீட்சத்திடமிருந்து ஒரு தொலைபேசி வந்தது. பிரபாகரன் சந்திக்க வரும்போது அவரை கைது செய்யுங்கள் அல்லது சுட்டு விடுங்கள்” என்று கூறினார். மீண்டும் நான் தொடர்பு கொள்கிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு, தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்தேன். அதற்கு அவர், “நமது ராணுவம் மரபுகளைக் கொண்டது. வெள்ளைக் கொடியின் கீழ் நம்மிடம் பேச வருவோரை, நாம் முதுகில் சுட முடியாது. இதை தீட்சத்திடம் தெரிவித்து விடுங்கள்” என்று என்னிடம் கூறினார். நான் தீட்சத்திடம் தொடர்பு கொண்டு உங்களது ஆணையை என்னால் நிறை வேற்ற முடியாது என்று கூறி விட்டேன். உடன் பாட்டை அமுல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கவே புலிகள் தலைவரை அழைத்துள்ளோம் என்று கூறினோம். அதற்கு தீட்சத், “எனக்கு ராஜீவ்காந்திதான் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். ராணுவம் தனது கடமையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது; படைத் தளபதி என்ற முறையில் நீங்கள் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்” - என்று ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் பக்.57 இல் குறிப்பிடுகிறார்.

“In September 1987, a political dialogue between the LTTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the IAC was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by .N. Dixit, the Indian High Commissioner, was 16-17 September 1987. On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabharan when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the OFC. lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasising that I would not obey his directive. I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He (Rajiv Gandhi) has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’


*ஹர்சிரத்சிங் தனது “Intervention in Srilanka”(The IPKF Experience Retold) நூலில் குறிப்பிடும் மேற்கண்ட
செய்திகளை இன்று பேசும் தோழர்கள் அன்றே உரத்தக்குரலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஊடகங்களும் பிற மாநிலத்தவரும் அறியும் வகையில் அந்த உண்மைச் செய்திகளைக் கொண்டு செல்லத்தவறிவிட்டோம்.
அந்த உண்மைகள் சரியாக எடுத்துச் சொல்லப்பட்டிருந்தால் தமிழக காங்கிரசுக்காரர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள்.
இந்தியக் காங்கிரசும் தமிழினத்தின் மீது சுமத்தும் வீண்பழியை நிறுத்தியிருக்கும்.

* தமிழர்கள் என்றாலே இந்தி எதிர்ப்பாளர்கள் என்ற எண்ணம் மிகவும் வலுவாக நடுவண் அரசின் காங்கிரசு, பிஜேபி
இரண்டு பக்கமும் இருக்கிறது. இந்திப் பேசத் தெரியாத கல்லூரி இளம்தலைமுறை பஞ்சாபில் உண்டு. இன்றைக்கு
ஊடகங்கள் நடத்து மானாட மயிலாட - ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொள்ளும் பஞ்சாபி இளம்தலைமுறை
மற்ற மாநிலத்தவருக்கும் இந்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் பஞ்சாபிக் காரர்களுக்கு
'இந்தி எதிர்ப்பாளர்' என்ற அடைமொழி கிடையாது.
தமிழ்நாட்டில் தான் தமிழ் எழுதவோ வாசிக்கவோ அறியாமலேயே பட்டப்படிப்பு படித்து வெளியில் வந்துவிட முடியும்
அவலம் அரங்கேறிக்கொண்டிருப்பதை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்,

* 1945, 1956களில் தந்தை பெரியார் முன்வைத்த தனிச் சுதந்திர தமிழ்நாடு கோரிக்கை,
1949 முதல் 1961 வரை திமுக தூக்கிப்பிடித்த பிரிவினைக் கோரிக்கை, மாநிலசுயாட்சி
இத்தியாதி சொற்கள் தமிழ் மண்ணின் தலைவர்களிடம் காணாமல் போய்விட்டது என்பது மட்டுமல்ல..
இதைப் பற்றிய எந்தச் செய்திகளும் இன்றைய இளம்தலைமுறைக்கு எள்ளளவும் தெரியாது.
அந்தளவுக்கு இந்திய இறையாண்மையைப் போற்றிப் புகழும் தமிழ் மண். ஆனால் என்ன கருமமோ
தெரியவில்லை... நடுவண் அரசுக்கு இன்னும் தமிழ் மண்ணில் ஒலித்த பிரிவினை வாதம்
அடிக்கடி கனவில் தோன்றி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.

* ராஜிவ்காந்தி கொலை நிகழ்ச்சியைக் காரணம் காட்டியே இந்திய அரசு ஈழப்பிரச்சனையை
அணுகுவதாக நினைப்பது தவறு. அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்காவிட்டாலும்
இந்திய அரசு இப்படித்தான் நடந்து கொண்டிருக்கும் என்ற புரிதல் தமிழர்களுக்கு வேண்டும்.



மேலே குறிப்பிடும் செய்திகள் அண்மைய இந்திய வரலாற்றின் உண்மை நிகழ்வுகள்.
நடந்து முடிந்த சம்பவங்களை நான் எழுதியிருப்பதால் மட்டுமே
அதெல்லாம் சரி என்றோ நியாயம் என்றொ வாதிடுவது என் நோக்கமல்ல.

"வரலாற்றிலிருந்து பாடம் கற்காதவர்கள் வரலாறு படைக்க முடியாது "

இந்தியனை நம்பாதே.. இந்திய தமிழனை.. நம்பவே நம்பாதே


1981. ஈழத்து இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுக்கவில்லை.. 1983 ஜூலையில் தான்
ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பம். அய்யா அமிர்தலிங்கம் அவர்கள் இந்திய அரசின் உதவியை நாடி தமிழகத்தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறார்.
சென்னையில் பெரியார் திடலில் அறிஞர் பெருஞ்சித்திரனார்
'உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்' துவக்க மாநாடு ஏற்பாடு செய்கிறார். அதில் கலந்து கொள்ள அ.அமிர்த்தலிங்கம், பேராசிரியர் க..பொ.இரத்தினம் இவர்களுடன் பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரை.
மாநாட்டைத் துவக்கி வைத்து பேசிய அறிஞர். ஆனைமுத்து அவர்கள்>

" அமிர்தலிங்கம் அவர்களே! இலங்கைத் தமிழர்களுக்கு உதவும்படிக் கோரி, தமிழகத் தலைவர்களிடம் கோரிக்கை வைப்பதற்காக ஏன் இங்கே வந்தீர்கள்? தமிழகத் தலைவர்களில் ஒருவர் காலையில் இந்திராகாந்தியின் காலடியில் விழுகிறார். அவர் எழுந்தவுடன் இன்னொரு தலைவர் அதே இந்திராகாந்தியின் காலடியில் மாலையில்
விழுகிறார். இப்படிப்பட்ட அடிமைத் தலைவர்களை நம்பி ஏன் இங்கு வந்தீர்கள்? இலங்கைக்குத் திருப்பிப் போங்கள்.
அங்கே உள்ள ஈழத் தமிழர்களை முதலில் ஒன்று சேருங்கள். இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் நாட்டுத் தமிழர்கள் இலட்சக்கணக்கில் அங்கு உள்ளனர். அவர்கள் பள்ளர், பறையர், தேவர், வன்னியர், நாடார், வண்ணார், மருத்துவர் எனப் பல உள்சாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பார்த்து நீங்களெல்லாம்
கள்ளத்தோணி, சின்னச்சாதி, பனங்கொட்டை என்றெல்லாம் இழிவாகப் பேசிக் கொடுமைப் படுத்தினீர்கள். இப்போது அவர்களையும் சேர்த்துக்கொண்டு இலங்கை அரசை எதிர்த்து அங்கே போய்ப் போராடுங்கள்"
(நன்றி: சிந்தனையாளன் மார்ச் 2009 பக் 2)


இங்கே ஆனைமுத்து அய்யா அவர்கள் இந்திராகாந்தி என்று சொல்லியிருப்பதை கொஞ்சம் மாற்றிக்கொண்டு சோனியாகாந்தி என்று வாசிக்கலாம்!
ஈழப்போராட்டத்தில் இந்திய அரசை ஓர் அண்டைநாடு என்ற அளவில் கூட அருகில் நிறுத்தியிருக்க கூடாது.
முழுவதுமாக விலக்கி வைத்திருக்க வேண்டும். அதிலும் நம் தமிழக தலைவர்களை முழுக்கவும் விலக்கி வைத்திருக்க வேண்டும்,. அப்படி நடந்திருந்தால் நிச்சயமாக "தமிழ் ஈழம் " எப்போதோ உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.