Saturday, October 22, 2022

Ammu..அம்மூ...

 



Ammu….அம்மு

திரைப்படம் பாருங்கள்

எச்சரிக்கை..

 உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! 


“அடிக்கிற கைதான் அணைக்கும்”

ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக 

ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.

என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.

அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்

பயன்படுத்திக் கொள்வானாம்.!

இதைக் காரணமாக சொல்லும் எந்த ஓர் அறிவுஜீவி புண்ணாக்கும் பொம்பளக்கி கோபம் வந்தா என்ன செய்வாடேனு யோசிச்சதில்ல.

அது அப்படித்தான்.

காலம் காலமாக பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

இன்னிக்கு கணினி யுகத்தில் என்னவோ

இந்தப் பொம்பள பிள்ளங்க நாலு காசு சம்பாதிக்காறாங்களே

இதெல்லாம் வந்தப்பிறகு மாறிடுச்சு அப்படின்னு

சொல்லத்தான் ஆசை.

ஆனா.. இந்த மீசைக்காரப்பசங்க

சொல்லவிடுவதில்ல.

புதுசுபுதுசா எப்படி எல்லாம் தன் கோபத்தை

தன் மனைவி/ காதலி மீது காட்டுவது 

என்பதில் பல புதுப்புது வித்தைகளை அறிந்தவர்களாக

இருக்கிறார்கள்.


மிருகம் பாதி, மனிதன் பாதி..

என்பதில் மிருகம் எப்போதும் அவனிடம் தூங்குவதில்லை.

அது பாய்வதற்கு தயாராகவே இருக்கிறது.

அந்த மிருகத்திற்கு வடிகாலாகவே பலருக்கு

திருமண உறவு கை கொடுப்பது அவலம்தாம்!

(எல்லோரையும் சொல்லவில்லை. )

கை நீட்டி நான் என் பொண்டாட்டியை அடிப்பதில்லை 

என்று சொல்லும் ஆணிடமும் இருக்கிறது

அந்த மிருகம்.

அது மவுனத்தைக் கூட ஒரு பாய்ச்சலாக காட்டி

பெண்ணுடலையும் உள்ளத்தையும் பிறாண்டி

ரத்தம் கசிய வைத்து அதில் ஒரு சுகம் காணும்!

எத்தனை விதம் விதமான டார்ச்சர்கள்! ச்சே..

 “பொறுத்துப் போயிடும்மா” என்று சொல்வது தவறில்லைதான்.

ஆனால் “பொறுத்துப் போயிடுப்பா”னு அவனிடமும் சொல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இல்லாத இப்பிரச்சனை 

என் தலைமுறைக்கு ஏற்பட்டதாக எப்போதும்

நினைப்பதுண்டு நான். காரணம் அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை ஒரு கோவில். அவள் அதில் கேள்விகளின்றி சரணடைந்துவிட்ட பிறவி.

இங்கே உணர்வுப் பொங்க எழுதப்படும்

“நின்னை சரணடைந்தேன” என்பதும் 

காலம் காலமாய் ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல்.

அவள் சரணடைய தயாராக இருக்கிறாள்.

நீ அதற்கு தகுதியானவனாக 

இருக்கிறாயா?!!! 


இதை எல்லாம் எனோதானோனு எழுதவில்லை.

வேலையை விட்டவுடன் மும்பை Sophia College For Women

ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேர்ந்தேன். Women counseling , Domestic violence – law and police help  படிப்பும் பயிற்சியும். அப்பயிற்சியும் படிப்பும் முடித்து அதை

செயல்படுத்தும் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாக அமைந்தது. நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அவலங்கள் தெரிய வந்தது.  

‘யாரும்மா உன் புருஷன்?”

அவர்கள் சொன்னவுடன் ஏற்படும் அதிர்ச்சி…

அடப்பாவிகளா உனக்கு இப்படியும் ஒரு முகமா…!

அந்த நபர் எனக்கும் தெரிந்தவராகவும் சிலர் பிரபலங்களாகவும்கூட இருந்தார்கள். அது என்னை ரொம்பவும் மன உளைச்சலுக்குள் தள்ளியது.

மீண்டும் அந்த ஆண்களை சந்திக்கும்போது

பொய்யாக புன்னகைக்க முடியவில்லை.

இப்படியாக நானும் பாதிக்கப்பட்டேன்.

அதன்பின் தான் 

அவனுக்குள் இருக்கும் அந்த வேட்டை மிருகம்

எப்போதும் விழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்படித்தான் இருப்பான்.

நீ பொறுத்துப்போம்மா..என்பதன் அர்த்தம் இன்னும் ஆழமாக எனக்குள் வடுவானது.

பிறகென்ன…

நான் அதிலிருந்து வெளியில் வரவே சிரமப்பட்டேன்.


பெண்ணைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். அது பொய். அப்படி எழுதியதெல்லாம் ஆண்கள்.

ஆனால்… இப்போது சொல்கிறேன்…

ஆண் மனதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

அவனுக்குள் இருக்கும் அந்த மிருகம்

எப்போது பாயும்?

ஏன் பாய்கிறது?

அவன் தேவை என்ன?

அவன் காலம் காலமாய்

பெண்ணின் சரணாகதி நிலையிலும்

புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருக்கிறான்.

……

அம்மு … திரைப்படம்

இதன் ஒரு துளி.

பெண்கள் கட்டாயம் பாருங்கள்.

ஆனால் அவனுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டாம்.

தனியாக உட்கார்ந்து பாருங்கள்.


"take care Ammu

உன்னை உன் சுயத்தை இழந்து

வாழ்ந்துவிட முடியாது.

சரணடைதல் கூட அர்த்தமிழந்துவிடும்

take care மை டியர் அம்மு..

No comments:

Post a Comment