Wednesday, August 10, 2022

அணையாத அடுப்பு !! அதிலென்ன பெருமை??

 

 
அணையாத அடுப்பு.. அணையாத தருமம் என்றால்
அந்த தர்மத்தில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?!!!
 
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு,
மே மாதம் 23-ம் தேதி வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு
சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக
இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. 
இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் 
பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய
இந்த அணையா அடுப்பு.
 
இந்த தர்மம் தொடர வேண்டுமென்றால் பசியுள்ள
 சாமானியர்களின் வரிசையும் தொடர வேண்டும்! 
பசியுள்ளவன் இந்த அடுப்புகளைத் தேடி
வரவேண்டும்! இல்லை என்றால் எப்படி இந்த அடுப்புகள் 
எரிந்து கொண்டே தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக்கொள்ள 
முடியும்!!!! சொல்லுங்கள்.
 
பிரிட்டிஷ் காலத்தில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தை 
எதிர்கொள்ளவே அவர் இந்த அடுப்பை ஏற்றினார்.
பசி போக்கினார் என்பது ஒரு வரலாறு, 
அது கடந்த கால வரலாறாக இருந்திருக்க வேண்டும்
ஆனால்..
உதவிகள் தர்ம சிந்தனையாக உருமாறும்போது
ஒரு தர்மசாலை உருவாகிறது, ஒரு சிலர் தர்மகர்த்தாக்களாகிறார்கள்.பல்லாயிரம் பேர்
அவர்களின் தர்மசாலை முன் வரிசையில் நிற்கிறார்கள்!
காலமெல்லாம் இப்படி ஒரு கூட்டத்தை பசியுடன் 
அலையவிட்டு தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் 
பெருமைப் பட்டுக்கொள்ள என்னதான்
இருக்கிறது!!!
 
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இப்போதும் 
இலவசங்களை அரசியல் கட்சிகள் தங்கள் சாதனைகளாகப் பட்டியலிடுகின்றன. இதன் சூட்சமத்தில் இருக்கும் 
சமத்துவமற்ற சமூகத்தை நாம் காண்பதில்லை.
 
அரசியல் இலவசங்கள் 
அடுத்தமுறை ஆட்சியைப் பிடிக்க உதவும்.
ஆன்மீகம் பேசும் தர்மங்கள் 
சொர்க்கலோகத்தில் இடம் கொடுக்கும் !
எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான்.
 
“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்’ எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே.”
சரவணா…
நம் முப்பாட்டன் முடமோசியார் இதை எல்லாம்
யோசிச்சிருக்கான்ய்யா..

 

2 comments:

  1. மிகச் சரியான கோணத்தில் பார்த்து இருக்கிறீர்கள்.

    இதில் மக்களை உழைக்காமல் சோம்பேறிகளாக ஆக்கிய பெருமையும் உண்டு.

    ReplyDelete
  2. வேலை வாய்ப்புத் திட்டங்களை போதுமான அளவிற்கு நிறைவேற்றாத வரை இலவசங்களை மக்களால் புறம் தள்ள முடியாது.

    ReplyDelete