Monday, December 13, 2010

செம்பருத்தி




செம்பரிதி குளத்தில் நீராடிய வதனம்
பார்த்தாலே போதையூட்டும் கவர்ச்சி
சிவந்த இதழ்களைத் தொடும்போதெல்லாம்
வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு.
ஐந்துவிரல்களாய் இணைந்த
ஐம்பூதங்கள்
இப்படி எத்தனையோ இருந்தாலும்
நாங்கள் சூடுவதில்லை
செம்பருத்தி பூக்களை.
அச்சமாக இருக்கிறது
ஐவருடன் வாழ்ந்த
அவளறியாதக் காமத்துடன்
சூல்முடியும் சூலகமும் விரித்து
சூரியக்குஞ்சுகளைப்
பிரசவிக்கத் துடிக்கும்
அவளைப் பார்த்து.

----------------------------

Friday, December 10, 2010

மீன் தொட்டி

அழகான வளவளப்பான கரைகளுடன்
எனக்காக நீ எழுப்பிய
புதிய சமுத்திரம்.
அலைகளோ வலைகளோ
என்னை
விலைப் பேசிவிட முடியாத
புதிய சாம்ராஜ்யம்.

எப்போதும் இதமான வெளிச்சம்
சுகமான காற்றுக் குமிழிகள்
தேடி அலைய வேண்டியதில்லை
எனக்கான என் உணவை.
வேண்டும் போதெல்லாம்
விதம் விதமான
சுவைகளுடன்
விருந்துகளின் ஆரவாரம்.
பாடுகின்றேன்
கனவுகளுடன் ஆடுகின்றேன்
கண்ணாடிக் குடுவையின்
திரவங்களைப் பருகிய
போதையில்
தள்ளாடுகிறது
என் பருவ மேனி.








காமம் உடைத்தப்
புதுவெள்ளமாய்
அலைகளில் கலக்கும் நதிகளை
நான் மறந்துவிடுவது
உன் சமுத்திரத்தை மட்டுமல்ல
உன்னையும் காக்கும் அறம் என நம்புகிறாய்
அதனாலேயே
உன் சமுத்திரத்தில்
அடிக்கடி
தண்ணீரை மாற்றுவதை மட்டும்
நீ மறப்பதே இல்லை...

கொஞ்சம் கொஞ்சமாய்
பழையக் கடல் ,நதி,
பவளப்பாறை
சுறாவின் வேட்டை ,சுனாமி
எல்லாமே
உன் புதுவெள்ளத்தில் கரைந்து
காணாமல் போய்விடுகின்றன..
ஆனால்
மழைத்துளிகள்
செதில்களை நனைத்து
முத்தமிட்ட இரவுகள் மட்டும்
இன்னும் ஈரமாய்....

Sunday, November 14, 2010

ஓபாம நமஹ!

ஒபாமா போற்றி போற்றி

உலகளந்தாய் போற்றி போற்றி

உன்னையே போற்றி போற்றி

உன் டாலரைப் போற்றி போற்றி

ஐ டியைப் போற்றி போற்றி

உன் ஐடியாவைப் போற்றி போற்றி

வாழ்க ஒபாமா..

வாழ்க அமெரிக்கா

ஓம் சக்தி ஒபாமாவே சக்தி

போற்றி போற்றி

ஓபாமா போற்றி..





ஒரு வழியாக எங்கள் ஒபாமா நமஹ! மந்திரங்களை எல்லாம் முடிந்து மும்பை மட்டுமல்ல இந்தியாவே நார்மல் நிலைமைக்கு வந்திருக்கிறது.


ஒபாமாவின் வருகையை ஒட்டி என்னவெல்லாம் நடந்தது என்பதை ஒளிவு மறைவின்றி நம்ம ஊரு பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் காட்டி கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வதற்குள் எதிர்பார்த்த மராத்திய மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற ஆருடங்களும் பலப்பரீட்சைகளும் ஆரம்பித்துவிட்டன.


இருக்கட்டும்.. ஓபாமா வருகையை ஒட்டி நடந்த மிக முக்கியமான செய்தி.. வழியில் இருந்த தென்னைமரங்களில் காய்த்து தொங்கிக் கொண்டிருந்த தேங்காய்களை எல்லாம் பறித்துவிட்டார்களாம்.


மற்றபடி எதுவும் முக்கியமானதாக தெரியவில்லை. ஒரு கம்பேனியின் விற்பனை அதிகாரி தன் கம்பேனி பொருட்களை அதிகம் விற்கவும் அதற்கான சந்தை வாய்ப்புள்ள ஊரில் எப்படி எல்லாம் இனிமையாக நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கிறார். இந்தியா ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஒத்துழைக்கும் என்று ஓபாமா சொல்லி வாய்மூடுவதற்குள் பாகிஸ்தானின் குரல் ஒலித்தது..

அதுவும் எப்படி..?


"உங்களால் அவ்வளவு எளிதில் ஐ.நா.வில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க விட்டுவிடுவோமா..என்ன? '


என்று மிரட்டும் தொனியில். கூடவே எல்லா சாட்சியங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் சீனாவைக் காட்டி.. சீனாவின் வீட்டோ அதிகார சீட்டை இறக்கி உங்களை ஆட்டமிழக்கச் செய்வோம் என்கிறார்கள்..!


அமெரிக்காவால் அவர்களை என்ன செய்து விட முடியும்?

ஒபாமா இந்தியா வருவதற்கு முன் தான் பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலரைத் தந்தி மணியார்டர் அனுப்பியிருக்கிறார்கள்.


அளவுக்கதிகமாகச் செல்லம் கொடுத்தும் பணம் கொடுத்தும் நம்ம பசங்க கெட்டு குட்டிச்சுவராக்கப்படுவது மாதிரிதான் இதுவும்.

அமெரிக்க அனுப்புகிற பணத்துக்கு என்றைக்காவது கணக்கு கொடுத்திருக்கிறார்களா நம்ம பக்கத்து வீட்டு பாகிஸ்தான் பசங்க. இந்தக் காசை வச்சிக்கிட்டு கஷ்டப்படுகிற வீட்டு ஜனங்களுக்கு ஏதாச்சும் செய்து இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோமா? இந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அவர்கள் என்னைப் பாரு, என் துப்பாக்கியைப் பாரு, சுட்டுப்பிடுவேன் சுட்டுனு திருடன் போலீஸ் விளையாட்டுக் காட்டிக்கொண்டு அலைகிறார்கள்.


புதியக் கண்டுப்பிடிப்பு :


அவுட்சோர்ஸிங் மூலம் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்புண்டு என்ற புதிய பொருளாதரக் கண்டுபிடிப்புக்கு சிங் ஓபாமா பொருளாதர திட்டம் என்ற பெயரிடலாம்.


க்ளைமாக்ஸ்:


இந்தியா யாருடைய வேலை வாய்ப்புகளையும் திருடிக் கொள்வதில்லை என்று நேருக்கு நேராகவே ஒபாமா சாட்சியாக மன்மோகன்சிங் சொன்ன காட்சி


ஸ்டார் அந்தஸ்து:


ஒபாமாவுடனும் அவர் மனைவியுடனும் கலந்துரையாடிய மும்பை மாணவர்கள். அதிலும் குறிப்பாக கை குலுக்கிய மாணவர்களுக்கு மாணவர்கள் வட்டத்தில் ஸ்டார் அந்தஸ்த்து... மேலும் அதிக விவரங்களுக்கு பார்க்க டுவிட்டர், ஃபேஸ்புக் ஆர்க்கூட் ...


எச்சரிக்கை


குடிய்ரசுத்தலைவர் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் தமிழகத்தின் அதிகாரமிக்க எம்.பி. கனிமொழியும் கலந்து கொண்டிருக்கிறார். இன்றைய தினத்தந்தியில் போட்டோவுடன் வந்திருக்கும் செய்தி..

கனிமொழி எம்.பி.யுடன் ஓபாமா கலந்துரையாடினார்!


ஓபாமாவின் சின்ன ஆசை


ஓபாமா ,


நீங்கள் வி.டி. ரயில்வே நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்த விரும்பியதாகவும் எங்கள் ஊர் முதலமைச்சர் அசோக்சவான் (இரண்டு நாளுக்குள் அப்போதைய முதல்வர் என்று எழுத வேண்டியதாகிவிட்டது!) அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிட்டதாகவும் அறிந்தேன். உங்கள் வருகையை ஒட்டி இரண்டு நாட்கள் மும்பை ஜனங்களுக்கு விடுமுறை அறிவித்து எல்லா ரயில்களையும் நிறுத்தி வைத்திருந்திருக்கலாம். பாசஞ்சர் டிரெயின்களை வீராரிலும் கல்யாணிலும் நிறுத்தி இருக்கலாம். எங்களைப் போன்றவர்களிடம் ஐடியா கேட்காமல் அசோக்சவான் உங்களுக்கு ந்நோ சொன்னது தப்பு தான்.


சரி விட்டுத் தள்ளுங்கள். அவருக்கு அவருடைய பிரச்சனை. நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்... எங்கள் இளவரசர் ராகுல்காந்தியிடம் சொல்லியிருந்தீர்கள் என்றால் அவருடன் சேர்ந்து நீங்கள் எங்கள் மும்பை டிரெயினில் ஓசியில் பயணம் செய்திருக்கலாம்.!


உங்களால் கற்பனைச் செய்ய முடியாத ஒரு உச்சக்கட்ட விளம்பரம் கிடைத்திருக்கும். அம்ச்சி மும்பை மானுஷ் குஷியாகி உங்கள் கம்பேனி பொருட்களை வாங்கி உங்கள் பொருளாதரச் சரிவைக் கூட நிமிர்த்தி இருக்கலாம்.


இந்த மாதிரியான உங்கள் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இம்மாதிரியான நிறைய ஐடியாக்கள் எங்கள் மும்பை வாசிகளிடம் நிறைய உண்டு.


எப்படியோ ஓபாமா உங்கள் எளிமையும் உங்கள் மனைவியின் அழகும் எங்கள் மீடியா பிரபலங்களுக்கு மட்டுமல்ல எங்க பொதுசனங்களுக்கும் சில பிம்பங்களை உடைத்திருக்கிறது. அதற்காக உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் வருகைக்கும் நன்றி ஓபாமா..


:

Tuesday, November 9, 2010

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?




இந்திய இறையாண்மைக்கு எதிராக அருந்ததிராய் காஷ்மீர் பிரச்சனையில்
பேசிவிட்டாராம்! எழுதிவிட்டாராம்! அவர் மீது குற்றம் சுமத்த தன் இபிகோ
கரங்களை எந்திரன் ரேஞ்சில் சுழற்ற தயாராக இருக்கிறது இந்திய அரசு.
அப்படி அவர் என்ன தான் சொல்லிவிட்டார்?
காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா சொல்வது சரியா? பாகிஸ்தான் சொல்வது
சரியா? என்றுதானே இன்றுவரை பட்டிமன்றங்கள் மாறி மாறி நடந்துக் கொண்டு
இருக்கின்றன.
யார் சொல்வது சரி என்பது அல்ல முக்கியம்.
எது சரி என்பது தான் முக்கியம்.
யார் சொல்வது உண்மைக்கு மிகவும் நெருக்கமானது?
யாருடைய பார்வை அந்த மண்ணின் மக்களின் பார்வையை முன்வைக்கிறது?
யார் சரித்திரத்தை தன் கையில் கையில் எடுத்துக் கொண்டு
திரிபு வாதம் செய்வது? இக்கேள்விகளுக்கான பதிலில் காஷ்மீரின்
இன்றைய நிலமைக்கான காரணங்களைக் கண்டடைய முடியும்.

காஷ்மீர் அழகானப் பனிமலைப் பிரதேசம். காஷ்மீரி மக்கள் அதிலும் குறிப்பாக
பெண்கள் ரொமபவும் அழகானவர்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக
இந்திய அரசு தன் படைவீரர்களை இரவும் பகலும் இடைவிடாது நிறுத்தி
காவல் காக்கிறது. நம் இராணுவவீரர்களை காஷ்மீரின் தீவிரவாதிகள்-
அதிலும் குறிப்பாக பாகிஸ்தானில் இராணுவப் பயிற்சிப் பெற்ற தீவிரவாதிகள்
சுட்டுக் கொல்கிறார்கள். காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும்
செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி க்ருத்துகளை நம் ஊடகங்களும்
மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய்
இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி ஒலித்தவுடன் அச்சப்படுகிறார்கள்.
அருந்ததிராயை விட அதிகமாகவும் ஆணித்தரமாகவும் இதே கருத்துகளை இன்றும்
பேசியும் எழுதியும் வரும் எழுத்தாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் மாநில எல்லைகளைத் தாண்டவில்லை.
அவரவர் மொழியில் எழுதுவதும் ஒரு காரணம். அவர்கள் கருத்துகளை
வெகுஜன ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை.

தெகல்கா பத்திரிகையின் நேர்காணலில் ( நவ 6,2010)தான் சொல்லியதைக் குறித்து
மீண்டும் ஆணித்தரமாக அருந்ததிராய் வலியுறுத்துகிறார்.

"காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி அல்ல என்பதுதான் வரலாற்று உண்மை" என்று நீங்கள் கூறியதுதான் உங்கள் பேச்சில் விவாதத்திற்குள்ளானது.
உங்கள் கருத்தை விரிவாக சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு
அருந்ததிராயின் பதில்:
"இந்த வரலாறு எல்லோரும் அறிந்ததே. நான் ஒன்றும் மக்களுக்கு ஆரம்பக்கல்வி
நிலையில் சரித்திரப் பாடம் புகட்டவில்லை ஆனால் சிக்கலான காஷ்மீர் வரலாறு
இன்றைய காஷ்மீர் சிக்கலுக்கும் காரணமில்லையா?
இல்லை என்றால் இந்திய அரசு 7 இலட்சம் இராணுவ வீரர்களை காஷ்மீரில்
ஏன் நிறுத்தி வைத்திருக்கிறது? பேச்சுவார்த்தைக்கு வருபவர்கள் ஏன் ஆஷாத்
காஷ்மீர் எல்லைக்கோட்டை தீர்மானிக்கும் படி சொல்லுகிறார்கள்?
அல்லது ஏன் அந்தப் பகுதியை பிரச்சனைக்குள்ள நிலமாக (disputed territory)
சொல்லுகிறார்கள்?
காஷ்மீர் தெருக்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நிஜங்களைக் கண்டு
கொள்ளாமல் எப்போது நாம் ஏன் நம் கண்களை மூடிக் கொள்கிறோம்?"
என்று கேட்டுள்ளார்.

அருந்ததிராய் பிரபலமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் எழுதுவதாலும் அவருடைய
நாவல் 40 மொழிகளில் மொழியாக்கம் பெற்றதன் மூலம் அவருடைய கருத்துகள்
உலக நாடுகளின் பார்வைக்குள்ளாவதாலும் இந்திய அரசு அவர் சொல்வதைக்
கண்டு அச்சப்படுகிறது. ஆனால் பிரபலமானவர்கள் சொல்வதலாயே
அவர்கள் கூறும் கருத்துகளும் பிரபலமடையும் என்பதெல்லாம் சுடச்சுட
செய்திகளுக்கு அலையும் ஊடகங்களுக்கு வேண்டுமானாலும் தேவைப்படலாம்.
ஆனால் கருத்துகளைச் சீர்த்தூக்கிப் பார்த்து அலசி ஆராய்பவர்களுக்கு
பிரபலங்களின் முத்திரை என்பது இரண்டாம் நிலைதான்.
அருந்ததிராயின் கருத்துகள் உண்மைக்கு மிகவும் நெருக்கமானவை,
வரலாற்று பார்வையில் வெகுஜனங்கள் மறந்துவிட்ட காட்சிகளை
மீண்டும் நினைவூட்டுபவை. இன்னும் சொல்லப்போனால் இந்திய அரசின்
கருத்துகளுக்கு மட்டுமல்ல பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் கூட
எதிரானவைதான்.

எரிமலையான பனிமலை
------------------------

காஷ்மீர் ஏன் பற்றி எரிகிறது? அதற்கு நம் இந்திய அரசு சொல்வது போல
பாகிஸ்தான் மட்டும்தான் காரணமா? என்றால் பாகிஸ்தானுக்கு எந்த வகையிலும்
குறையாமல் நம் அரசும் காரணம்தான்.

இந்தியாவுடம் இணைந்த பிற சுயராஜ்ய இணைப்புகளுக்கும் காஷ்மீர் சுயராஜ்ய
இணைப்புக்கும் உள்ள வேற்பாடுகள் முதல் காரணம்.
வரலாற்று நிகழ்வுகளைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கிறது
அருந்ததிராயின் பேச்சு.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் முன் மவுண்ட்பேட்டன் 03/6/1947 ல்
காஷ்மீர் சென்றார்..
"எக்காரணம் கொண்டும் காஷ்மீரைத் தனிநாடாக அறிவித்து விடுதலை வழங்கும்
எண்ணம் ஆங்கிலேய அரசுக்கு இல்லை" என்பதைத் தெளிவு படுத்தினார்.
தங்கள் விருப்பம் போல் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் ராஜ்யத்தை
இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால் காஷ்மீர்
எந்த முடிவும் எடுக்காமல் ஒரு ஒத்திவைப்பு ஒப்பந்தத்தை (standstill agreement)
இரு நாடுகளுடனும் செய்து கொண்டது. வழக்கம்போல அப்போதே பாகிஸ்தான்
அரசு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டாலும் காஷ்மீருக்கு வழங்கி வந்த
அத்தியாவசிய பொருட்களை நிறுத்திக் கொண்டது. காஷ்மீருக்கு தங்களுடன்
இணைய வேண்டும் என்று பயமுறுத்த ஆரம்பித்தது. 22 அக்டோபர் 1947ல்
பாகிஸ்தான் அதிகாரிகள் சில காஷ்மீர் மக்கள் குழுவுடனும் முஸ்ஃபராபாத்தின் இசுலாமிய அமைப்புகளுடனும் சேர்ந்து காஷ்மீருக்குள் அத்துமீறி
நுழைந்தனர். மகுரா மின்நிலையத்தைக் கைப்பற்றினார்கள். ஸ்ரீநகர் இருட்டில் மூழ்கியது.
இந்தச் சூழலில் தான் காஷ்மீர் ராஜ்யம் இந்திய அரசின் இராணுவ உதவியை நாடியது.
காஷ்மீரின் அரசர் பத்திரமாக ஜம்முவுக்கு அனுப்பப்பட்டார்.

காஷ்மீர் அரசு பிரதிநிதி மகாஜன் 25/10/1947ல் டில்லி வந்தார். இந்திய பிரதமரைச்
சந்தித்து "இன்று மாலைப் பொழுதுக்குள் ஸ்ரீநகரருக்கு இந்திய இராணுவம் அனுப்பப்
பட்டாக வேண்டும். ஸ்ரீநகரைக் காப்பாற்ற எதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.
நீங்கள் விரும்பும் அரசியல் அதிகாரத்தை செய்து கொள்ளலாம். நீங்கள் மறுத்தால்
நாங்கள் ஜின்னாவிடம் போக வேண்டிவரும்" என்று சொன்னவுடன், ஜின்னாவின்
பெயரைக் கேட்டவுடனேயே எரிச்லடைந்தார் பிரதமர் நேரு. கோபத்தில் மகாஜனை
வெளியேற்ற முனைந்தார். அப்போது இவர்கள் இருவரின் உரையாடலைக் கேட்ட
மூன்றாம் நபர் காஷ்மீரின் ஷேக் அப்துல்லா நேருவுக்கு அனுப்பிய துண்டுச்சீட்டு
காஷ்மீரின் தலைவிதியை மாற்றியது. நேரு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான
ஷேக் அப்துல்லா காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றுவரை லண்டனில் வாழ்ந்து கொண்டு ஷேக் அப்துல்லாவின் குடும்பமே காஷ்மீரின் அரசியல் அதிகாரத்தைக் குத்தகைக்கு
எடுத்துக் கொண்டிருக்கிறது.

1951இல் அங்கு நடைபெற்ற தேர்தலில் ஷேக் அப்துல்லா முன்னணியில் நின்றார். தேர்தலில் போட்டியிட 75 வேட்பாளர்கள் விண்ணப்பித்தனர். அவற்றுள் 73 விண்ணப் பங்களை ஷேக் அப்துல்லா செல்லுபடியற்றவை என அறிவித்து விட்டு, காஷ்மீரில் வெற்றிபெற்று, ஆட்சியை அமைத்தார். அந்த மக்கள்நாயகப் படுகொலையை நேரு ஆதரித்தார். இதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை இராணுவ பலத்துடன்
ஓட்டுப்பெட்டிகள் காஷ்மீரின் ஜனநாயகத்தைத் தீர்மானிக்கின்ற அவலம் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது.

காஷ்மீருக்கு தனி அரசியல் சட்டம்
--------------------------------------

இந்தியாவுக்கு என்று அரசியல் சட்டமிருக்க காஷ்மீருக்கு என்று தனி அரசியல்
சட்டம் இருக்கிறது.
அது என்ன சொல்கிறது.. "We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947.... IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.,'
அதாவது
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்'' எனக் கூறுகிறது.

ஆனால் இந்திய அரசியல் சட்டம் “இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்'' என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் “இந்திய மக்கள்''. ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.

1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, "குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.

ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி தேசியக் கொடி உண்டு.

இந்தியாவுடன் ஆன இணைப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்யப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்பில், அப்பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு நாடாக - இந்தியாவின் கூட்டுக்குள் விளங்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட எல்லாத் தனி உரிமைகளையும் 1959க்கும் 1965க்கும் இடையில் அடியோடு பறித்துக்கொண்ட 1965க்குப் பிறகு ஜம்மு - காஷ்மீர் மக்கள் பேரில் படையையும், எல்லையோரக் காவல் படையையும், காவல் துறையினரையும் ஏவி பயங்கரவாதிகளை ஒடுக்குவது என்கிற பேரால், காஷ்மீரின் தன்னுரிமைக்குப் போராடியவர்களைக் கொன்று குவித்தது இந்திய அரசு.

இந்திய ஆளுகையிலுள்ள காஷ்மீரைக் கைப்பற்றவேண்டும் என்று பாக்கிஸ்தான் அரசும், பாக்கிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள ஆசாத் காஷ்மீரை (விடுதலை பெற்ற காஷ்மீரை)க் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய தேசியவாதிகளும், . இந்திய மக்களின் வரிப்பணத்தில் இராணுவத்துக்கென்று ஒதுக்கப்படுவதில் பெரிய அளவு தொகையை, ஜம்மு - காஷ்மீர் கிளர்ச்சிகளை அடக்கி ஒடுக்குவதற்கென்றே செலவழித்து நாசப்படுத்திவிட்டனர்.

சட்டமேதை அம்பேத்கரும் காஷ்மீரும்
--------------------------------------

காஷ்மீர் பிரச்சனையை ஜக்கிய நாடுகளின் சபைக்கு எடுத்துச் செல்ல
மவுண்ட்பேட்டன் நேருவை வலியுத்தினார். அதில் வெற்ரி பெற்றார்.
ஆனால் மவுண்ட்பேட்டன் அறிவுரையை நிராகரிக்க வேண்டும் என்றும்
எக்காலத்திலும் ஜக்கிய நாடுகளின் மன்றத்தால் காஷ்மீர் பிரச்சனைக்குத்
தீர்வு காண முடியாது என்பதையும் சொன்னவர் அம்பேத்கர்.
ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியாவின் காஷ்மீர் குறித்த கருத்தை
வழிமொழிவதற்கு கூட உலக நாடுகள் முன்வராது என்றும் தீர்க்கதரிசனமாக
அம்பேத்கர் சொன்னதும் நினைவு கூரத்தக்கது.

காஷ்மீருக்கு இராணுவ உதவியை அனுப்பியதில் முன்னுரிமைக் கொடுத்த
அம்பேத்கர் காஷ்மீருக்கும் இந்திய அரசு வழங்கிய தனி அந்தஸ்த்தை (article 370) வெகுக் கடுமையாகச் சாடினார். அம்பேத்கரின் விருப்பத்தை மீறியே இச்சட்டம்
நிறைவேறியது. காஷ்மீர் குறித்த இச்சட்டத்தின் விவாதங்களுக்கு
அம்பேத்கர் பதில் சொல்லவில்லை என்பதும் கிருஷ்ணசுவாமி அய்யங்கார் தான்
விவாதத்தில் பங்குக் கொண்டார் என்பதும் பதிவாகியுள்ளது.

Balraj Madhok reportedly said, Dr. Ambedkar had clearly told Sk. Abdullah: "You wish India should protect your borders, she should build roads in your area, she should supply you food grains, and Kashmir should get equal status as India. But Government of India should have only limited powers and Indian people should have no rights in Kashmir. To give consent to this proposal, would be a treacherous thing against the interests of India and I, as the Law Minister of India, will never do it." என்பதுதான்.
நேருவுக்கோ அம்பேத்கரின் எதிர்ப்புக்குப் பின் இது தன்மானப் பிரச்சனையாகிவிட்டது
என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த தன்மானத்தின் தொடர்ச்சியைத் தான்
1980ல் காஷ்மீரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆயிரக் கணக்காண மக்கள்
சாகடிக்கப்பட்ட நிலையில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற இந்தியப் பிரதமர்
இந்திராகாந்தி " நான் ஒரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனப் பெண் என்பதில்
பெருமை அடைவதாக சொல்ல வைத்தது.

இந்துக்கள் வாழும் ஜம்முவும் பவுத்தர்கள் வாழும் லடக் பகுதியும் இந்தியாவுடன்
இணைய வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் வாழும் மக்கள்
சுதந்திரமாக அவர்களுககான அரசியல் தீர்வைக் காண அவர்களுக்குரிமை உண்டு
என்கிறார் அம்பேத்கர்.

இந்தியாவின் குறிப்பாக நேருவின் வெளிநாட்டுக் கொள்கையை மிகவும்
கவலையுடன் அம்பேத்கர் விமர்சனம் செய்தார் என்பதும் அவருடைய
கரிசனமும் கவலையும் எவ்வளவு நியாயமானவை என்பதையும்
அவருக்குப் பின் வந்த இந்தியா அனுபவத்தில் உணர்ந்து கொண்டது எனலாம்.

உள்நாட்டு அரசியல்
----------------------
பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா வகையாறாக்கள் காஷ்மீர் இந்தியாவின்
ஒரு பகுதி அல்ல என்கிறார்கள். ஆனால் அதே கருத்தை உதிர்த்தவர்கள்
இந்திய இறையாண்மையை ஏற்றுக்கொண்டு இந்திய நடுவண் அரசில்
அமைச்சர்களாக உறுதிமொழியும் ஏற்கிறார்கள். இந்திய நடுவண் அரசில்
டில்லியில் இருக்கும்போதெல்லாம் காஷ்மீர் குறித்து அவர்கள் என்ன செய்து
கொண்டிருந்தார்கள் என்பதை அடிக்கடி மாறி மாறி வரும் அவர்கள் அறிக்கைகள்
காஷ்மீர் பிரச்சனையை கேலிக்கூத்தாக்கியது தான் மிச்சம்.


காஷ்மீர் ராஜா கரண்சிங்
-------------------------
(ஓம்சக்தி நவ 2010 தீபாவளி மலரில் காஷ்மீர் அரசரின் வாரிசான காங்கிரஸ் அரசியல்வாதி டாக்டர் கரண்சிங் அவர்களின் நேர்காணலில்)
காஷ்மீர் என்று ஒரு மாநிலம் கிடையாது என்கிறார்.
"உங்கள் வாழ்நாளுக்குள் காஷ்மீர்ப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று
நம்புகிறீர்களா?" என்ற கேள்விக்குப் பதிலாக..

காஷ்மீர் மாநிலம் ஐந்துப் பகுதிகளைக் கொண்டது .
காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பிரதேசம், லடாக், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு
காஷ்மீர் , சீனாவின் பிடியில் உள்ள சிறுபகுதி என்று 5 பகுதிகள்.
காஷ்மீருக்குத் தனியாக, ஜம்முவுக்குத் தனியாக என ஒவ்வொரு பகுதிக்கும்
ஒரு அபிலாஷை உள்ளது. இந்த அபிலாஷைகள் மிகவும் சிக்கலானவை.
எளிமைப்படுத்த முடியாதவை.
எனவே இந்தப் பிரச்சனையைப் பல கட்டங்களில் தீர்க்க வேண்டியிருக்கிறது.
பாகிஸ்தானுடன் பேசித்தான் ஆக வேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் என்று ஒரு கோணம்,
இரண்டாவது கோணம் ஸ்ரீநகருக்கும் இந்திய நடுவன் அரசுக்குமான உறவு
என்ன என்பதைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.
மூன்றாவதாக பிரதேசம் சார்ந்த கோணம். ஜம்மு., லடாக், காஷ்மீர் பகுதிகளுக்கு
இடையில் உள்ள உறவு என்ன என்பதைப் பற்றியும் பார்க்க வேண்டும்.
இந்தப் பிரச்சனையில் அத்தனை லகுவான உடனடித் தீர்வு என்பது கிடையாது.
இந்தப் பிரச்சனையை அதன் முழுப்பரிமாணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்று கோணங்களில் இப்பிரச்சனையை அணுகும்போது ஒருவேளை
இதற்கான தீர்வு கிட்டலாம்" என்கிறார்.





காஷ்மீர் மக்களின் கலகக்குரலுக்கு செவிசாய்த்தால் இந்தியாவின் பிற மொழிவழி
மாநிலங்களின் பிரிவுக்கும் அதுவே காரணமாகிவிடும் என்று மேம்போக்கான
பூச்சாண்டி காட்டும் வித்தைகளை கைவிட்டு இந்திய அரசு இந்திய மக்களின்
வரிப்பணத்தில் பெரும்பகுதியை இப்பிரச்சனைக் குறித்து 60 ஆண்டுகளுக்கும்
மேலாக செலவு செய்தாகிவிட்டது. இனியாவது மக்கள் பிரச்சனைகளை
அரசியல் தலைவர்கள் தம் தம் தனிப்பட்ட அரசியல் அதிகாரத்திற்கும்
தனிப்பட்ட ஈகோவுக்கும் இடம் கொடுக்காமல் தீர்வு செய்ய முன்வர வேண்டும்.

-------------

அருத்தி ராயின் அறிக்கை :


நான் இதை காஷ்மீரில் இருக்கும் ஸ்ரீநகரிலிருந்து எழுதுகிறேன். காஷ்மீரைப் பற்றி அண்மையில் நடத்தப்பட்ட கூட்டங்களில் நான் பேசியவற்றுக்காக நான் கைதுசெய்யப்படலாம் என இன்றைய செய்தித் தாள்கள் கூறுகின்றன. இங்கிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் சொல்வதைத்தான் நான் சொன்னேன். பல்வேறு அரசியல் நோக்கர்களும் பல ஆண்டுகளாகச் சொல்லியும் எழுதியும் வருவதைத்தான் கூறினேன். நான் பேசியவற்றின் எழுத்து வடிவத்தைப் படிப்பவர்கள் அவை அடிப்படையில் நீதிக்கான அழைப்புகள் என்பதை உணர்வார்கள். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின்கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; தங்களது தாய்மண்ணிலிருந்து விரட்டப்பட்ட துயரத்தோடு காஷ்மீருக்கு வெளியே வாழ்ந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் ; தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் குப்பைகளுக்குக் கீழே மறைந்துகிடக்கும் புதைகுழிகளைப் பார்த்தேனே காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரர்கள், அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும்; இந்த ஆக்கிரமிப்புக்கான விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் , இப்போது போலீஸ் ராச்சியமாக மாறிவிட்ட நாட்டில் பயங்கரங்களுக்கிடையே வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்திய நாட்டின் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் நான் பேசினேன்.
நேற்று தெற்கு காஷ்மீரில் இருக்கும் ஆப்பிள் நகரமான ஷோபியானுக்கு நான் போயிருந்தேன். அங்குதான் ஆசியா , நிலோஃபர் என்ற இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் அவர்களின் வீடுகளுக்கு அருகில் ஒரு ஓடையில் கண்டெடுக்கப்பட்டன . குரூரமாக அவர்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டில் நாற்பத்தேழு நாட்கள் அந்த நகரம் மூடப்பட்டுக் கிடந்தது. அவர்களைக் கொன்றவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. நிலோஃபரின் கணவரும் ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன்.இந்தியாவிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துபோன, சுதந்திரம் ஒன்றுதான் ஒரே நம்பிக்கை என்று கருதுகிற மக்கள் துக்கத்தோடும் கோபத்தோடும் நாங்கள் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். கல்வீசியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டு கண்களுக்கிடையே தோட்டாவால் துளைக்கப்பட்ட இளைஞர்களை சந்தித்தேன். என்னோடு பயணம் செய்த இளைஞர் ஒருவர் அனந்த்நாக் மாவட்டத்தில் இருக்கும் தனது நண்பர்களான ' டீன் ஏஜ்' இளைஞர்கள் மூன்றுபேரை எப்படி விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள் கல் வீசியதற்காக அவர்களது விரல் நகங்கள் எப்படி பிடுங்கப்பட்டன என்பதை விவரித்தார்.
‘ வெறுப்பைக் கக்கும் பேச்சை நான் பேசியதாக நாளேடுகளில் சிலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இந்தியா சிதைவதை நான் விருபுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கு மாறாக எனது பேச்சு அன்பிலிருந்தும் பெருமிதத்திலிருந்தும் வருகிறது. நாங்கள் எல்லோரும் இந்தியர்கள்தான் என அவர்களைப் பலவந்தப்படுத்திச் சொல்லவைக்கவேண்டும் என்பதற்காக அவர்களது விரல் நகங்களைப் பிடுங்கவேண்டாம்; கற்பழிக்கவேண்டாம் , படுகொலை செய்யவேண்டாம் என்ற உணர்விலிருந்து வருகிறது. நீதி விளங்கும் ஒரு சமூகத்தில் வாழவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து வருகிறது. தமது எண்ணங்களைப் பேசுகிற காரணத்தால் எழுத்தாளர்களை மௌனிகளாக்கி வைக்க இந்த தேசம் விரும்புகிறது என்பது பரிதாபகரமானது. நீதி கோருபவர்களை சிறையில் அடைக்க இந்த நாடு முயற்சிக்கிறது, ஆனால் மதவெறிக் கொலைகாரர்கள் ; இனப்படுகொலைகளைச் செய்தவர்கள் ; கொள்ளைக்காரர்கள்; கற்பழிப்பவர்கள் , ஊழல் செய்பவர்கள், ஏழைகளிலும் ஏழையான மக்களைச் சுரண்டுபவர்கள் போன்றவர்களெல்லாம் இங்கே சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அக்டோபர் 26, 2010

--------------------------------------------------

கட்டுரைக்கு துணைநின்ற குறிப்புகள்
-------------------------------------

> Tehelka Nov 6, 2010.

> அக்டோபர் 2008 சிந்தனையாளன் வே. ஆனைமுத்து கட்டுரை.

> indian exp mar 14,2009,
What if Ambedkar had shaped India’s foreign policy?

> Kashmir Problem From Ambedkarite Perspective
BY Dr. K. Jamanadas,

Thursday, October 7, 2010

வெட்சி

(சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை
கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து...)

வெட்சி... தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
வெட்சி - தமிழகத் தலித் ஆக்கங்கள் - என்ற தன்விவரம் என்னை
ரொம்பவே சிந்திக்க வைத்தது.
வெட்சி... என்றால் என்ன?

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல்
கரந்தையாம்.. (வெட்சி குறித்த பழமையான பாடல் வரி)

வெட்சிதானே குறிஞ்சியது புறனே -
தொல்காப்பியர் எழுதி வைத்திருப்பது.

தொல்காப்பியர் நிரை கவர்தலையும் மீட்டலான கரந்தை இரண்டையும்
சேர்த்துதான் வெட்சி என்று சொல்லி வைத்திருக்கிறார்..
இம்மாதிரி நிறைய வெட்சி குறித்து எப்போதோ.. 30 வருடங்களுக்கு முன்
கல்லூரியில் படித்த வரிகள் (மனப்பாடம் செய்த வரிகள்தான்!) நினைவுக்கு வந்தன.
எப்படி எந்த வகையில் வெட்சி திணையையும் தலித் ஆக்கங்களையும்
இணைக்கிறார்கள் என்று இந்தப் புத்தகம் என் கைக்கு வந்த ஒரு மாதமாக
யோசித்து யோசித்து என்னால் எதுவுமே ஊகிக்க முடியாமல் போனதற்காக
வருத்தப்பட்டு கழிவிரக்கம் கொண்டது தான் மிச்சம். தலைப்பும் கட்டுரைகள்
முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் பல்கலைக் கழக கருத்தரங்கில் வாசித்தவை
என்ற அறிவிப்பும் கொஞ்சம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டியவை இக்கட்டுரைகள்
என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
இத்தியாதியான சகல முன்னேற்பாடுகளுடன் ஒரு வழியாக அயோத்தி அலகாபாத்
தீர்ப்பு வந்தப்பின் மும்பை சகஜ நிலைக்கு வந்தவிட்டது என்ற பதற்றம் நீங்கி
வாசிக்க உட்கார்ந்தேன்.
புத்தகத்தின் கடைசிப் பக்கம் வரை வாசித்தப் பின்னும் எதற்காக வெட்சி?
என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் என்பது மட்டும் என் அறிவுக்கு
எட்டவில்லை!

ஓரளவு நான் முழுமையாக வாசித்திருக்கும் சில தலித் எழுத்தாளர்களைப் பற்றிய
கட்டுரைகள் குறித்த கருத்தரங்க வாசிப்புகளை இங்கே குறிப்பிடுவது சரியாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.


அபிமானி, அழகிய பெரியவன், அயோத்திதாசர், இமையம், குணசேகரன், சந்ரு, சாணக்யா,
சிவகாமி, யாழன் ஆதி, ரவிக்குமார், ராஜ்கவுதமன் ஆக்கங்கள் குறித்தக் கட்டுரைகள்
மிகவும் தெளிவான மதிப்பீடுகளை முன்வைக்கின்றன.

* ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஆனபிறகு தலித்துகள் அவலநிலை, பிரச்சனைகள்
ஆகியவற்றைப் பற்றி தீவிரமாக எழுதுவதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

*ஜே.பி.சாணக்யாவின் மொழியாளுமை குறிப்பிடத்தக்கது. சூழல்களை நுட்பமாக
விவரித்தலின் மூலம் நிகழ்வுகளைப் படிமங்களாகச் செறிவான கவித்துவமான
சொற்களில் உருவாக்கி காட்டுகிறார்.

*இமையத்தின் எழுத்துகளில் இருக்கும் தலித் உள்முரண்பாடுகளைக் கட்டுரையாளர்
அலசி வெவ்வேறு விதமான இமையத்தின் புனைவுகள் தலித் இலக்கியத்திற்கு
வளம் சேர்ப்பவை என்ற மதிப்பீடு.

*சிவகாமியின் படைப்புகள் அனைத்தும் குடும்பக்கட்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும்
தலித் பெண்கள் மீதான வன்முறைப் பற்றியதாகவும் குடும்பவெளியைக் கடந்து
செல்ல நினைக்கும் பெண்களின் சிந்தனைக் களமாகவும் இருக்கின்றன
இக்கட்டுரையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

* அன்பாதவன் குறித்த கருத்தரங்க கட்டுரையில் அந்திமழையில் அவர்
அவ்வப்போது எழுதிவரும் கவிதைகளை எடுத்துக் கொண்டு கட்டுரையாளர்
ஆய்வு செய்கிறார். அன்பாதவன் என்ற தலித் எழுத்தாளரை அறிமுகம் செய்த
"நெருப்பில் காய்ச்சிய பறை" கவிதைகள் குறித்து கட்டுரை கள்ள மவுனம் சாதிக்கிறது.
இருக்கட்டும்.

தலித் எழுத்தாளர்கள் என்றால் தலித்தியம் மட்டும் தான் எழுத வேண்டுமா?
என்றால் இல்லை. எந்த ஒரு தலித் எழுத்தாளரும் தலித்தியம் என்று இதுவரை
சொல்லப்பட்டிருக்கும் எந்த ஒரு வரையறை எல்லைகளுக்குள் நிற்பதில்லை.
தலித்தியத்தின் அடிநாதமான சமத்துவமும் உரிமையும்
சாதியத்தை கட்டமைத்திருக்கும் மரபுகள், தொன்மக்கதைகள்,
புராண இதிகாசங்கள் , மதங்கள் , நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக
தன்னையும் தன் எழுத்துகளையும் நிறுத்தும் கலகக்குரலாக இருந்தாலும்
அந்த உணர்வுகளின் பின்னணியில் பெண்ணியமும் பெருநகர மனிதப் பெருமூச்சின்
வேதனையும் எப்படி பார்க்கப்படுகின்றன என்பதற்கு அன்பாதவனின் தலித்தியம்
அல்லாத பிற படைப்புகளை அணுகி இருக்கலாம்.
ஹைபுன் மாயவரமும் தனிமைக் கவிந்த அறையும் மட்டுமே கட்டுரையாளரின்
கட்டுரை தொட்டுச் சென்றிருக்க தலித்திய ஆக்கத்தில் அன்பாதவனின் பங்கு
கட்டுரையில் வெற்றிடமாக்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

* ஆதவன் தீட்சண்யாவின் சில சிறுகதைகளில் கட்டுரைப்பாங்கான நடை
இருக்கும்.. அதற்காகவே இப்படியா..? அவருடைய கட்டுரை ஒன்றைக் கருத்தரங்க
கட்டுரையாளர் சிறுகதை என்று சொல்வது!
'இட ஒதுக்கீடு யாசகமல்ல, உரிமை" என்ற தலைப்பில் நானறிந்து ஆதவன் தீட்சண்பா
கதை எதுவும் எழுதவில்லை! ஆதவன் தீட்சண்யாவும் அப்படித்தான் சொல்லுகிறார்!
ஆனால் இக்கருத்தரங்கம் அவர் கட்டுரையை சிறுகதை என்று எழுதி மேலும் மேலும்
அந்தக் கட்டுரைச் செய்திகளைச் சிறுகதையின் சமூகச் சிந்தனைகளாக வெகுவாக
சிலாகித்து எழுதி இருக்கிறது.
கட்டுரையாளருக்கு இன்னொரு உபதகவல்:
ஆதவண் தீட்சண்யாவின் கவிதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன.

* இந்திரனின் பன்முகத்தன்மைப் பாராட்டுதலுக்குரியதுதான்.
ஆனால் தலித் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கில் இந்திரனின் பன்முகத்தன்மையைவிட
பேசப்பட்டிருக்க வேண்டியது அவருடைய மொழியாக்கங்கள்

- அதிலும் குறிப்பாக
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள்,
பிணத்தை எரித்தே வெளிச்சம், பசித்த தலைமுறை ஆகிய தொகுப்புகள்
தமிழ் தலித்திய இலக்கியத்தில் எற்படுத்திய தாக்கம் மிகவும் வீரியமானது.
இந்திரன் தலித் இலக்கியத்திற்கு செய்த மிகப்பெரிய பங்களிப்பு.
ஓர் ஆய்வு நூல் வெளியிடும் அளவுக்கு இந்திரனின் மொழியாக்க தாக்கங்களை
எடுத்துரைக்க வேண்டிய காலமிது. ஆனால் கட்டுரையாளர் இந்திரன் சார்ந்த
பிற செய்திகளை முன்னிலைப் படுத்தி சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல்
அலட்சிய போக்கை காட்டியிருப்பது வேதனை அளிக்கிறது.

* விழி.பா.இதயவேந்தன் அவர்களின் தலித் அழகியல் நூல் குறித்த கட்டுரையாளரின்
நியாயமான கோபத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தலித் அழகியல் என்ற நூலினை விழி. பா.இதயவேந்தனின் கட்டுரைகள் அல்லது
'விழி.பா. இதயவேந்தன் பார்வையில் பிற தலித் படைப்பாளிகள்' என்று கூட வந்திருக்கலாம்
என்று கட்டுரையாளர் சொல்வது சரிதான். அந்நூலை வாசித்தவுடன் இதே கருத்தை
விழி.பா.இதயவேந்தனிடமும் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

ஆனால் கட்டுரையாளர்
இந்த விமர்சனங்களின் அடுத்தக் கட்டமாக சில வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.
அவை:
'தலித் அழகியல் எனும் இந்நூலினைப் பொருத்தமட்டில் அழகியல் குறித்தான
பதிவே தொனிக்காமல், தலித் என்கிற சொல்லாடலைக் குறித்தே இது முதன்மைப்படுத்தப்பட்டதும்
தலித் என்கிற சொல்லிற்கு நல்ல விலையை நிர்ணயிக்க முடியும் என்கிற வியாபார யுத்தியுமே
வெளிப்பட்டதனைக் காணமுடிகிறது " என்றும்
'தலித் என்பதனை எப்படி எல்லாம் காசாக்க/அரசியலாக்க முடியுமென்று
தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் இவ்வம்பானிகள்"
என்றும் சொல்லியிருப்பது கட்டுரையாளரின் நோக்கம் என்ன என்பதை
வெளிப்படையாக காட்டிவிட்டது!
என்னவோ தலித் என்று தலைப்பில் போட்டுவிட்டால் புத்தகம் ஆகா ஓகோ
என்று விற்பனை ஆவது போலவும் அப்படிப் புத்தகம் போட்டு தலித் எழுத்தாளர்களும்
புத்தகம் போட்ட பதிப்பாளர்களும் செல்வந்தர்கள் ஆகிவிட்டது போலவும்
தலித் அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது, அதனால் தலித் என்ற சொல்லுக்கு
நல்ல விலை இருக்கிறது என்றும் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
ஆய்வு கட்டுரைகளில் கருத்துகளை எழுதுவதற்கு முன் அதற்கான ஆதாரங்களையும்
கட்டாயம் முன்வைக்க வேண்டும்.
இம்மாதிரியான பொறுப்பில்லாத கருத்துகளை உதிர்ப்பதை இனியாவது
ஆய்வு செய்யும் அறிவுஜீவிகள் தவிர்ப்பது அவசியம்.


வெட்சி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டிருக்கும் தமிழகத் தலித் ஆக்கங்கள்
என்ற ஆய்வுக்கட்டுரைகள் எந்த அளவுக்கு தலித் ஆக்கங்கள் குறித்து
ஆய்வு செய்திருக்கின்றன?
ஏன் இந்த அலட்சியப் போக்கு?
ஆய்வுகள் என்பது வெறும் மேற்கோள்கள் காட்டுவது மட்டும் தானா?
சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...


-

Monday, September 20, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர்







அண்மையில் கொங்குமண் கோவையில் நடந்து முடிந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டு மலரை முழுமையாக வாசித்துவிட்டு அது பற்றிய என் கருத்துகளை
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆட்சிக்குழுத் தலைவர் பேராசிரியர் அண்ணன் சமீராமீரான்
பரிமாறிக்கொண்டதுண்டு. அதனாலேயோ என்னவோ இந்த மாநாட்டு மலர் குறித்த ஆய்வுரையை
நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.


மலர் ஆய்வுக்கு முன் மலர் வெளியீடுகளைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மலர் என்ற சொல் தமிழில் எந்தப் பொருளைக் குறிக்க பயன்படுத்தி வந்தோமோ அந்தப் ச்பொருளில்
இந்த மலர்கள் அடங்காது. ஆங்கிலத்தில் சொவேனியர் என்று சொல்வதை நாம் மலர் என்று சொல்கிறொம்.
சொவேனியர் என்ற சொல் பிரஞ்சிலிருந்து வந்தது. பிரஞ்சிலும் ஆங்கிலத்திலும் இதன் பொருள்
நினைவூட்டல், நினைவுச்சின்னம், டு ரிமம்பர், மொமெண்டோ என்று சொல்வார்கள்.
ஒரு நிகழ்வை நினைவூட்டும் வகையில் தமிழில் மலர் வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன.
அந்த வகையில் தமிழக அரசு நடத்திய கோவை செம்மொழி மாநாட்டு நிகழ்வின் ஒரு நினைவூட்டலாக
இந்த மலரை அணுக வேண்டும்.

மலர் 16 த்லைப்புகளில் பரந்து விரிந்து மிகவும் நேர்த்தியாகாவும் கட்டுக்கோப்பாகவும்
இருப்பதுடம் இயன்றவரை தமிழ் தமிழர் சார்ந்த அனைத்து தளங்களின் ஊடாகவும் பயணிக்க
முயற்சி செய்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

எந்த தலைப்புக்குள்ளும் அடங்காமல் எல்லா தலைப்புகளுக்கு முன்னோடியாக
நுழைவாயிலாக் பேரறிஞர் அண்ணா வாழ்த்துகிறார் என்ற தலைப்பில்
1968ல் சென்னையில் அண்ணா முதல்வராக இருந்தப்போது நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்
ஆற்றிய பேருரையிலிருந்து சிலப் பகுதிகளை நம் வாசிப்புக்குக் கொடுத்து வாசிப்பவர்
நெஞ்சைத் தொடுவது ஒரு தலைமுறைக்கு பசுமை நினைவுகளைப் புரட்டிப் பார்க்க வைத்திருக்கிறது.

செம்மொழி மாநாட்டில் பெரும்பங்காற்றியவரும் சிந்துவெளி எழுத்துகளை தமிழ் எழுத்துகளாக
அடையாளம் கண்டவருமான ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை சில முக்கியமான
கருத்துகளை முன்வைக்கிறது. செம்மொழித் தகுதிக்கு அகச்சான்றுகள் மட்டுமல்ல, புறச்சான்றுகள்
ஆன கல்வெட்டுகள், நாணயங்கள், இலச்சினைகள், சில்லுகள் ஆகியவற்றிலிருந்து
ஆதாரங்களைத் திரட்டித் தந்திருக்கிறது.

கரூரில் கிமு 1ஆன் அச் சார்ந்த வெள்ளி இலச்சினையில் குறவன் என்ற எழுத்துப்
பொறிக்கப்பட்டுள்ளது.குறவன் என்ற குறிஞ்சி நில மைந்தன் அன்று வெள்ளி இலச்சினைகளில்
வாழ்ந்து கொண்டிருந்தான் என்றசெய்தி இன்று நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

தமிழகம் எங்கும் சில்லுகள் கிடைக்கின்றன. சில்லுகள் என்றால் உடைந்த மண் பானைச்சட்டிகளின்
துண்டுகள் தான். அப்படிக் கிடைத்திருக்கும் சில்லுகளில் கொடுமணலில் கிடைத்திருக்கும் சில்லு
கிமு 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதில் ஒரு துண்டில் கண்ணன் ஆதன் என்ற பெயர்
பொறிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆதிச்சநல்லூரில் கிடைத்திருக்கும் சில்லுகள் பற்றிய செய்திகளும் எனக்கு
இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தச் சில்லுகள் நமக்கு இன்னொரு செய்தியையும்
ஆழமாக உணர்த்துகின்றன. அதாவது தமிழகம் எங்கும் மக்கள் எழுதப்படிக்கத் தெரிந்த
சமுதாயமாக இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது.

எகிப்து நாட்டின் பெரோனிக துறைமுகத்தில் கொற்றபூமான் என்ற பெயர் பொறித்த சில்லு
கிடைத்திருக்கிறது. கிபி 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.


செம்மொழித் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் ரா..போ.குருசாமி
அவர்களின் கட்டுரை இன்னொரு புதிய பார்வைஈர்கயை முன்வைக்கிறது.
நாம் எல்லோருமே அறிவோம். உயர்திணை அஃறிணை என்று தமிழன் கண்ட திணை வகைத்தான்
அறிவியலுடன் ஒத்துப்போகக்கூடியது.
இனி, உய்ர்திணை என்று சொல்லிவிட்டு அதன் எதிர்ப்பதமாக தாழ்திணை என்றுதானே
சொல்லியிருக்க வேண்டும்? அதைவிடுத்து அஃறிணை. அதாவது அல்+திணை
என்று ஏன் சொன்னார்கள்?
கட்டுரையாளர் குருசாமி சொல்லுகிறார். தமிழ் மொழியின் செவ்வியல் சுட்டும்
பண்பாடு இது என்று. படைக்கப்பட்ட எதையும் தாழ்ந்தது என்று சொல்வதில்
தமிழ் மொழிக்கு உகந்ததல்ல. தமிழன் ஏற்றுக்கொண்டதுமல்ல.
அதனால் தான் திணையை உயர்திணை என்றும் அதுவல்லாத மற்றவை எல்லாம்
அல்திணை அதாவது அஃறினை என்றானாம்.
ஒரு புதிய பார்வையை இக்கட்டுரை முன்வைப்பதன் மூலம்
தாழ்திணை என்று சொல்வதைக் கூட தன் திணைப் பாகுபாடாக ஏற்க மறுத்த தமிழ்ச்சமூகம்
எங்கே எப்போது எப்படி ஏன் ஊர் என்றும் சேரி என்றும் பிரிந்தது.
தாழ்ந்தச் சாதி, தாழ்த்தப்பட்ட சாதி, ஒடுக்கப்பட்ட சாதி , பிற்படுத்தப்பட்ட சாதி
என்றெல்லாம் தமிழ்ச்சாதியை இன்றுவரை ஒன்றாக சேர்க்க முடியாமல் பிரித்து
வைத்திருக்கிறது என்ற இன்னொரு சிந்தனைத் தளத்திற்கு இக்கட்டுரை வாசகனை
இழுத்துச் செல்கிறது.


ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் போதெல்லாம் இந்தியா சீனாவின் முன்னால்
த்லைகுனியத்தான் செய்கிறது. அதற்கான காரணங்களும் அரசியலும் தனியாக பேசப்பட
வேண்டிய விசயம். இந்த ஒலிம்பிக் ஆரம்பித்தது கிரேக் நாட்டில் கிமு 776ல். அப்போது 4
வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும். இப்போதும் அந்த முறையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம்.
கிரேக்கில் ஏற்பட்ட நிலநடுக்க பேரழிவுக்குப்பின் அதாவது கிமு 393ல் ஒலிம்பிக் நடத்துவது
தடைப்பட்டுப் போனது. அதன் பின் இன்றைக்கு நாம் காணும் ஒலிம்பிக் 1896ல் ஆரம்பிக்கப்பட்டது.
கிரேக்க நாகரிகத்துக்கு இணையான நாகரிகம் கொண்ட தமிழ் நாட்டில் அப்போது
விளையாட்டுகள் இருந்ததா? என்ற கேள்வி எழும்.
அதைத்தான் சான்றுகளுடன் எழுதியிருக்கிறார் செங்கைப்பொதுவன் - சங்க இலக்கியத்தில்
விளையாட்டுக்கலை என்ற தலைப்பில்.
சங்க இலக்கியத்தில் விளையாட்டு என்ற சொல் மட்டும் 50 இடங்களில் வருகிறது.
96 விளையாட்டுகளை அன்றைக்கு விளையாண்டிப்பதாக கண்டறிந்திருக்கிறார்கள்.

அதில் சில விளையாட்டுகள் குறித்தச் சுவையான செய்திகளை இக்கட்டுரைப் பதிவு
செய்திருக்கிறது.

குறிப்பாக கோல்ஃ என்று இன்று நாம் விளையாடும் விளையாட்டை அன்று வட்டுநா
என்றார்களாம். வட்டு என்றால் உருளும் குண்டான் பந்து. வட்டுநா என்பது
அந்தப் பந்தை அடிக்கும் நாக்குப்போல வளைந்த மட்டை. கோல்ஃ விளையாட்டைப்
பார்த்தவ்ர்களுக்கு இப்போது வட்டுநா என்பது எவ்வளவு பொருத்தமான காரணப்பெயர்
என்பது புரிந்திருக்கும். என்ன இன்று நம் கனவான்கள் கோல்ஃ விளையாடுவது
பச்சைப்புல்வெளியில். அன்றைக்கு 2000 வருடங்களுக்கு நம் வட்டுநா விளையாட்டை
பாறைமீதிருந்து அடித்து விளையாண்டிருக்கிறார்கள்.

'உருள்கின்ற மணிவட்டைக் குணில்க்கொண்டு துரந்தாற்போல' -
-செங்குட்டுவன் கண்ணகிச் சிலை எடுக்க இமயம் நோக்கிப்
புறப்பட்டான் என்கிற வரியில் வருகிற மணிவட்டு என்பது
பந்துதான். குணில் என்பது அந்தப் பந்தை அடிக்கும் மட்டை.
இந்த விளையாட்டுதான் இன்று நாம் விளையாடும் ஹாக்கி விளையாட்டின்
முன்னோடி எனலாம்.

1933-34களில் சிக்காகோவில் உலகநாடுகளின் கண்காட்சியில் தான் synchronized swimming
என்ற புதிய நீச்சல் நடனத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். அந்த நடனத்தை அன்றைக்கு கரிகாலன்
காவிரிக்கரையில் அட்டனத்தி நீச்சல்நடனத்தில் கண்டு களித்திருக்கிறான் என்கிறார்
கட்டுரையாளர்.
அட்டனத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தியின் காதலன், அட்டனத்தியுடன் நீச்சல் ந்டனமாடிய
காவிரி என்ற பெண் அட்டனத்தியின் நீச்சல் நடனத்தில் மயங்கி அவனைக் கட்டித்தழ்வ வருகிறாள்.
காவிரியின் பெருவெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்படுகிறார்கள். அவள் வெள்ளத்தில் சிக்கி
இறந்துவிடுகிறாள். அட்டனத்தி காவிரிக்கரை ஓரத்தில் அடித்துச்செல்லப்பட்டு கரை ஒதுங்குறான்.
மருதி என்ற பெண் அட்டனத்தியைக் காப்பாற்றி அழைத்து வர இருவரும் சேர்ந்துவாழ்கிறார்கள்.
அப்போது தான் கரிகாலனின் மகள் ஆதிமந்தி காவிரிக் கரையெங்கும் தேடி அலைகிறாள்.
தன் காதலன் இறந்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையுடன்.

அட்டனத்தியைக் கண்டீரோ
கடல் கொண்டன்று, புனல் ஒளித்தன்று...
அவள் கதறலும் கண்ணீரும் மருதியை
மனம் உருகச் செய்கிறது. ஆதிமந்தியையும் அட்டனத்தியையும் அவள் சேர்த்து
வைக்கிறாள். ஆனால் அட்டனத்தியின் பிரிவால் அவள் கடலில் வீழ்ந்து தற்கொலைச்
செய்துகொள்கிறாள். இது தான் கதை. இந்தக் கதையில் வரும் அட்டனத்தி ஆடிய
நீச்சல் நடனம், கால்களையும் இடுப்பையும் தண்ணீருக்கு மேலே தூக்கி ஆடுவது.


இன்னொரு முக்கியமான கட்டுரை உலகம் போற்றும் தமிழரின் வர்மக்கலையும் வர்ம மருத்துவமும்.
-ந. சண்முகம்.

இன்று அக்குபஞ்சர், அக்குபிரஷர் என்று உடம்பின் முடிச்சுகளை அறிந்து அதில் எழுச்சி ஏற்படுத்துவதன்
மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையைப் பற்றி பேசாத நாளிதழ்கள் மருத்துவக்குறிப்புகள் கிடையாது.
ஆனால் இதற்கெல்லாம் தாயாக இருக்கும் நம் சித்தர்களின் வர்மக்கலை நமக்கெல்லாம் ஒரு பொருட்டாகவே
படுவதில்லை. சித்தர்களின் வர்மக்கலை 8000 வர்மப்புள்ளிகளைப் பற்றிப் பேசுகிறது.
அதில் 108 வர்மப்புள்ளிகள் அடிப்படை வர்மப்புள்ளிகளாம். இன்று இந்த வர்மக்கலை தெந்தமிழகத்தில் மட்டுமே
அறியப்பட்ட ஒரு மருத்துவம். அதிலும் குறிப்பாக எங்கள் நெல்லையிலும் குமரியிலும் மட்டுமே
குருகுல முறையில் 12 வருசம் படித்து அறியும் சித்த மருத்துவமாக இருக்கிறது.

இன்று நம் வழக்கில் இருக்கும் நீதிமன்றம் என்ற சொல்லில் இருக்கும் மன்றம் எனறு சொல்லும்போதே
நீதிமன்றம் என்றுதான் பொருள். என்ன செய்வது... சினிமா நடிகர்களுக்கு மன்றங்கள் ஆரம்பித்து
தான் பிறந்த பலனைக் கண்டடையும் இன்றைய தமிழனுக்குப் புரிந்து கொள்வதற்க்கு வசதியாக
இது அந்த மன்றம் இந்த மன்றம் மாதிரி நீ நினைத்துக்கொள்கிற மாதிரி மன்றம் இல்லைப்பா,
இது நீதி வழங்கும் மன்றம் என்று பிரித்துக் காட்டீனார்களொ என்னவோ..!
எப்படியும் இருக்கட்டும்.
எட்டுவகை நுதலிய அவையத்தானும் என்று தொல்காப்பியம் நீதிபதிக்கு இருக்க வேண்டிய
எட்டு இயல்புகளைப் பட்டியலிடுகிறது.
மன்றம், அவை, பொதியில், அம்பளம் இச்சொற்கள் எல்லாம் அன்றைக்கு நீதி வழங்கும்
நீதிமன்றத்தைக்குறிக்கப் பயன்பாட்டிலிருந்தச சொற்கள் என்று சுட்டிக்காட்டி,
எழுதப்பட்ட சட்டங்களும் விதிமுறைகளும் இலலாமலேயே தமிழ் மண்ணில்
நிதீ வழுவாது அறம் காத்த தமிழ்ச்சமூகத்தை நமக்கு காட்டுகிறார் கட்டுரையாளர்.

தமிழர் மெய்யியல் -இன்மை என்ற தலைப்பில் முனைவர் க நெடுஞ்செழியன் அவர்கள்
எழுதியிருக்கும் கட்டுரை என்னைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானக் கட்டுரை.
அதற்கு இரு காரணங்கள். அண்மையில் மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம்
வெளியிட்ட பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மலரில் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.
அறிஞர் அண்ணாவின் மெய்யியல் என்ற தலைப்பில். அக்கட்டுரையில் நான் கையாளும் மெய்யியல்
தத்துவம் முனைவர் க.நெடுஞ்செழியன் இக்கட்டுரையில் முன்வைக்கும் தமிழர் மெய்யியல் - இன்மை
என்ற தத்துவத்திலிருந்து எடுத்துக்கொண்டது தான்.
எனவே இக்கட்டுரையை அதன் சாரத்தை நான் புரிந்து கொண்ட வகையில் உங்கள் முன் சொல்வதற்க்கு
எனக்கு எழுத்தாளர் மன்றம் ஒரு வாய்ப்பைத் தந்தமைக்கு நன்றி.

அது என்ன? மெய்யியல், அதிலும் மெய்யியல் இன்மை?
மெய்யியல் என்றாலே இந்தியாவைப் பொறுத்தவரை இந்துமதம், இந்துமதத்தில் வேதங்களும் உபநிஷத்துகளும்
என்றுதான் எல்லோருமே இன்றுவரை ஒரு கருத்தை வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இந்துமதத்திலிருந்தது
மாறான ஒரு மெய்யியல் இருந்தது என்பதும் அந்த மெய்யியலை வகுத்தவன் தமிழன் என்பதும் இன்றுவரை
மறைக்கப்பட்டிருக்கும் உண்மை. தமிழனின் மெய்யியல் தான் அணுக்கோட்பாடும், இன்மைக்கோட்பாடும்.
உலகம் கடவுளால் படைக்கப்பட்டது ஜீவராசிகளைக் கடவுள் படைத்தார் என்பதுதான் உலகின் அனைத்து
மதங்களும் உருவாக்கியிருக்கும் கோட்பாடு. ஆனால் தமிழன் அப்படிச் சொல்லவில்லை. ஒன்றிலிருந்து
ஒன்று பரிணாமவளர்ச்சி பெற்றதும் ஒன்று பிறிதொன்றாக மாறியதும் அந்த ஒன்று இல்லாமல் போனதும்
தமிழன் கண்ட மெய்யியல்.
எல்லாவற்றுக்கும் இப்படியான பரிணாம வளர்ச்சி இருப்பது போலவே இல்லாமல் போய்விடும் முடிவும் உண்டு.
இந்தப் பூமியும் ஒரு காலத்தில் இல்லாமல் போய்விடும் என்கிறான்.
தமிழன் கண்ட இந்த மெய்யியல் இன்மைக்கு கிரேக்கத்திலும் தனி இடம் உண்டு. கிரேக்க ஞானிகள் மெய்யியல் இன்மை
கோட்பாடை அறிந்து கொள்ள இந்தியா வந்ததை காரல்மார்க்ஸ் தன்னுடைய ஆய்வில் பதிவு செய்திருக்கிறார்.
சங்கப் புறப்பாடலில் பக்குடுக்கை நன்கணியாரின் பாடல் ஒரே ஒரு பாடல் தான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.
"ஓரில் நெய்தல் கறங்க...." என்று ஆரம்பிக்கும்
அந்தப் பாடல் அப்படியே கடவுள் மறுப்புக் கொள்கையின் பிழிவு என்கிறார் கட்டுரையாளர்.

கணினி கலைச்சொல்லாக்க கட்டுரையின் மணவை முஸ்தபா அவர்கள் இன்னொரு வரலாற்று செய்தியை
முன்வைக்கிறார். தமிழில் எல்லாம் உண்டு என்று பகுத்தறிவு கொண்டவன் சொல்ல மாட்டான்.
தமிழ்மொழ்யிலும் சில உச்சரிப்புகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லை. பிறமொழியாக்கத்தின் போதும்
அவர்களுடன் தொடர்பு கொள்ளும் போதும் சில போதாமைகளைத் தமிழன் உணர்ந்தான்.
எனவேதான் ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷி என்ற எழுத்துருக்களைப் பல்லவர் காலத்தில் தமிழறிஞர்கள்
உருவாக்கினார்கள் என்கிறார் மணவை முஸ்தபா.
என்னதான் தனித்தமிழ் பேசினாலும் சில நேரங்களில் நாம் மாட்டிக்கொள்வோம்.
எனக்கு அடிக்கடித் தோன்றும்... துணைமுதலவர் ஸ்டாலின் பெயரை ஸ் என்ற வடமொழி
உச்சரிப்புக்கான எழுத்துருவைப் பயன்படுத்தாமல் எப்படி எழுத முடியும்?


பேராசிரியர் கா சிவத்தம்பி அவர்கள் இன்னொரு கருத்தை முன்வைக்கிறார்.
classical language என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழாக்கம் செய்யும் போது செம்மொழி
என்று சொல்கிறோமே... classical என்ற ஆங்கிலச் சொல்லின் முழு அர்த்தத்தையும் செம்மொழி
என்ற சொல தருகிறாதா ? என்று கேட்கிறார். மேலும் classical language ஒரு classical civilization
society யிலிருந்து தான் வந்திருக்க முடியும் என்பதையும் முன்வைக்கிறார். காளிதாசனின்
சமஸ்கிருத நாடகங்கள் க்ளாசிக்கல் சன்ஸ்கிரிட்டில் எழுதப்பட்டவை. எனினும் சமஸ்கிருத நாடகங்களில்
உயர் சமூகத்தைச் சார்ந்த பாத்திரம் க்ளாசிக்கல் சமஸ்கிருதத்தில் பேச மற்ற பாத்திரங்கள் பிராகிருத மொழியில்
பேசினார்கள் என்ற செய்தியையும் தமிழ் இலக்கியம் வடமொழி என்று சுட்டும் போதெல்லாம் இந்த இருமொழிகளையும்
சேர்த்தே சுட்டியது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
இறுதியாக சிவத்தம்பி அவர்கள் செம்மொழி என்று சொல்வதற்குப் பதிலாக தொல்சீர்மொழி என்றழைக்கப்பட
வேண்டும் என்ற கருத்தை தீர்வாக வைக்கிறார். அவருடைய கருத்தில் நமக்கு உடன்பாடு தான் எனினும்
செம்மொழி வரலாற்றில் வெகுதூரம் வந்தாகிவிட்டது. எனவே இனிமேல் சொல்லை மாற்றுவதை விட
நம் சொல்லகராதிகளில் திருத்தம் செய்வதுதான் ஏற்புடையதாக இருக்கும்.
தமிழன் காலப்போக்கில் இப்படியான மாற்றங்களைச் செய்து கொண்டுதானிருக்கிறான்.
அதிலும் திராவிட இயக்க வரலாறு இந்த மாற்றங்களை ஓசையின்று செய்துவிட்டது.
இராமசாமிகள் ஸ்ரீஇராமனின் பக்தர்களாக அறியப்படாமல் கடவுள் மறுப்பாளர்களின் அடையாளமாக
இன்று அறியப்பட்டிருப்பதை நினைத்துப் பாருங்கள்.
த்மிழக முதல்வர் கலைஞரின் பெயரான கருணாநிதி என்று சொன்னால் அந்தக் கருணையே உருவான
ஈஸ்வரனைக் குறிக்கும். அந்தப் பொருளில் தான் அவருக்கு அவருடைய பெற்றோர்கள் கருணாநிதி
என்று பெயர் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றும் இனிவரும் காலத்திலும் கருணாநிதி என்று
சொன்னால் அச்சொல் ஒரு கடவுள் மறுப்பாளனின் அடையாளப்பெயராக மட்டுமே நிலைத்து நிற்கும்.
இப்படியாக திராவிட இயக்கம் தமிழ்ச்சொல் வரலாற்றில் சொல்லகராதியில் எழுதாமலேயே எழுதிவிட்ட
பொருள்மாற்றங்கள் நம்மை வியப்படைய வைக்கிறது.

சித்த மருத்துவங்கள் குறித்தும் நாட்டுப்புற பாடல்கள் குறித்தும் தரமானக் கட்டுரைகள் இடம்
பெற்றிருக்கின்றன. துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களே தமிழ் மருத்துவத்தின் தொன்மையும்
தனித்தன்மையும் என்று எழுதியிருக்கும் கட்டுரை இனி வருங்காலத்தில் தமிழ்நாட்டில்
சித்த மருத்துவத்துக்கு வளமையான எதிர்காலம் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.

குறிஞ்சி புறப்பாடலில் 99 மலர்கள் குறிக்கப்படுகின்றன. அந்த 99 மலர்களையும் அப்படியே
புகைப்படமாக்கி வண்ணத்தில் தந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி காலம் காலத்துக்கும் நம்
எதிர்கால சந்ததிகளுக்காக நாம் பாதுகாத்து வைக்க வேண்டிய பொக்கிஷம்.
ஏனேனில் என் கொள்ளுப்பாட்டிக்கு அந்த 99 மல்ர்களும் தெரியும் .
என் பூட்டிக்கு எல்லா மலர்களின் பெயர் தெரியும். 80 மலர்களை மட்டுமே அவள் அறிந்திருக்க கூடும்.
என் பாட்டிக்கு 80 மலர்களின் பெயர்கள் தெரிந்தாலும் அவள் அறிந்திருந்தது 50 மலர்கள் தான்.
என் தாய்க்கு 30 மலர்கள் தான் தெரியும். எனக்கு 20 மலர்களுக்கு மேல் தெரியாது.
என் குழந்தைகளுக்கு பூவரசம் பூ பூத்தாச்சு என்று காட்ட நான் தமிழ்நாட்டில் எங்கள் ஊருக்கு
அழைத்துச் சென்றாலும் பூவரசு மரம் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை.
என் பேரன் பேத்திகளுக்கு எத்தனை மலர்கள் தெரிந்திருக்க கூடும் என்று கற்பனையாக
ஊகிக்கவே அச்சமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்த மலரில் இடம் பெற்றிருக்கும்
மலர்க்கண்காட்சி நமக்குப் பொக்கிஷம்தான்.



என்னடா கட்டுரைகளாக அறிமுகப்படுத்திவிட்டு கவிதைகள் பற்றி எதுவும் பேசாமல் இருக்கிறாரே
என்று உங்களில் சிலர் நினைக்கக்கூடும்! கவிதைகள் என்ற தலைப்பில் அதிகப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதனாலேயே நான் கவிதைகள் குறித்து பேசித்தான் ஆகவேண்டும் என்பதில்லை,
அதிகமாக இருப்பாதாலேயே நாம் காக்கைகளைத் தேசியப்பறவையாக தேர்ந்தெடுக்கவில்லையே!
குறைவாக இருக்கும் மயில்களைத் தானே தேசியப்பறவையாக அறிவித்தோம் என்று அறிஞர் அண்ணா
சொன்னதுதான் நினவுக்கு வருகிறது. கவிதையில் காக்காப்பிடிப்பதும் காக்கா வளர்ப்பதும்
எப்படி என்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு இக்கவிதைகள் வழிகாட்டக்கூடும்.
மற்றபடி கபிலநிலா என்ற தலைப்பில்
பழனிபாரதி எழுதிய கவிதையை மட்டுமே நான் குறிப்பிட விரும்புவது.


ஆங்கிலக்கட்டுரைகள் மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளன. மேற்சொன்ன தமிழனின் தொல் சீரும் சிறப்பும்
குடத்தில் இட்ட விளக்காக இருப்பதற்கு இம்மாதிரியான அலட்சியப்போக்குத்தான் காரணம்.
மெதுவாக நமக்குள்ளெ நம்மொழியில் நம் பழம் பெருமைகளைப் பேசிப் பேசி கூடிக் கலைவது
இனி தமிழின் ஆக்கத்திற்கும் தமிழர்களின் எதிர்காலத்திற்கும் எந்த வகையிலும் உதவிச்செய்யாது
என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

தமிழ் இலக்கியத்தில் இன்று உலகத்தரம் வாய்ந்த புதினங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிறுகதைகள்
குறித்தும், சரித்திர நாவல்கள் குறித்தும் எழுதிவிட்டு காலத்தின் தேவைக்கருதி எழுதப்படும் குறுநாவல்கள்,
நாவல்கள் குறித்து மலர் மவுனம் காட்டுவதைத் தவிர்த்திருக்கலாம்.

திராவிட இயக்க வரலாற்றில் 85 சிற்றிதழ்கள் நடத்தப்பட்டதாக அறிகிறேன். அந்த வரலாற்றைப்
பதிவுச் செய்யும் வாய்ப்பினை இம்மலர் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

திராவிட இயக்கம் இலக்கியத்திற்கு என்ன செய்தது? என்ற கேள்வியை இன்றுவரை இலக்கிய
பிதாமகன்கள் கேட்கிறார்கள், எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். திராவிட இயக்கம் தன் 50 ஆண்டுகால சிற்றிதழ்
மூலமும் நாடகங்கள் சினிமா வசனங்கள் மூலமும் என்ன செய்தது என்பதும்
கருத்தியல் தளத்தில் திராவிட இயக்கத்தின் தண்ணீர்ப் பாய்ந்துதான் எல்லா வயல்களும் விளைந்தது
என்பதையும் இம்மாதிரியான மலர்கள் கட்டாயம் பேசி இருக்க வேண்டும், என்பதையும்
இங்கே பதிவு செய்கிறேன்.
என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி மட்டும் பேசு, என்ன எழுதியிருக்க வேண்டும்
என்பதை நீ எங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று யாராவது நினைத்தால்
அவர்களுக்கும் சரி, என் தமிழ்ச்சமூகத்திற்கும் சரி நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்
இதுதான். நான் தமிழ்ச்சமூகத்தின் ஓர் அங்கம். தமிழக அரசு நாளைய ஆவணமாக வெளியிடும்
பதிவுகளில் என் சமூகத்தைப் பற்றிய விட்டுப்போன நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும்
நினவூட்ட வேண்டியது தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை.
இன்னொரு முக்கியமான கசக்கின்ற உண்மை...
காக்கா பிடிப்பவர்களால் தமிழும் வளராது தமிழனும் வளரமாட்டான். திராவிட இயக்கத்திற்கு
அதுப் பெருமையும் சேர்க்காது, எங்களைப் போன்றவர்களின் குரல் கலகக்குரலாக
தனித்து ஒலித்தாலும் இந்த இயக்கத்தின் மீதும் தமிழ்ச்சமூகத்தின் மீதும் கொண்ட
அக்கறையின் காரணமாகவே எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் எதிர்நீச்சல் போடுகின்றொம்
என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

சிறப்பான சில பகுதிகள் விடுபட்டிருக்கலாம். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள்
முழுமையாக அனைத்தையும் பேசிவிட முடியாது என்பதைத் தவிர
வேறு எந்தக் காரணங்களும் கிடையாது.

இந்த மாநாட்டு மலரை முழுமையாக வாசிக்கவும் உங்களுடன் என் பார்வையப் பகிர்ந்து'
கொள்ளவும் வாய்ப்பளித்த எழுத்தாளர் மன்ற நிர்வாகிகளுக்கும்
இந்த மாலைப்பொழுதில் மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து
இந்நிகழ்வைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும்
என் நன்றியும் வணக்கமும்.


(இடமும் பொழுதும்:
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தில் 19/9/2010 மாலை 7 மணியளவில் நடைபெற்ற
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற ஆய்வரங்க நிகழ்வில்....)















.

Saturday, August 7, 2010

நன்றி சொல்லும் தருணம்


மும்பையின் ஜனநெரிசலில் கரைந்துப் போகாமல்
பிரமாண்டங்களின் வெளிச்சத்தில் சோர்ந்துப் போகாமல்
எப்போதும் என்னுடன் கை கோத்து பயணம் செய்கிறது
என் எழுத்தும் எழுத்து எனக்குத் தந்த நட்பு வட்டமும்.

எப்போதும் உணர்கிறேன்
நன்றி என்ற சொல்லின் போதாமையை ...

மழைப்பொழியும் மாலையில்
சூடானத் தேநீருடன் உங்கள் முகம் பார்த்துப் பேசாமல்..

எப்படி இருக்கிறாய்.. நலமா.. என்பதை மவுனமாய்
உள்ளங்கை அழுந்த ஒரு கைகுலுக்கலில் கேட்காமல்..-

அடடே ஹைக்கூ என்று சொல்லியிருக்கக் கூடாதா?
நான் விடுகதையாக்கும் என்றல்லவா நினைத்தேன்
என்று பொய்முகம் காட்டிச் சிரிக்காமல் -

ஸ்நேகம் வளர்க்கும் புன்னகை மலர்களைப்
பரிமாறிக்கொள்ளாமல்...

தமிழ்மணம் நிர்வாகிகள்,
வாசித்தவர்கள்,
வாசித்துப் பின்னூட்டம் எழுதியவர்கள்/ எழுதப் போகிறவர்கள்
வாசிக்காதவர்கள்/ இனி வாசிக்க இருப்பவர்கள்..
அனைவருக்கும்
அரபிக்கடலோரமிருந்து .
"நன்றி"
என்ற ஒற்றை வார்த்தையில் விடைபெறும் தருணத்தில்
உருதுக்கவிஞர் தருன்நும் ரியாஷின் "பழைய புத்தகம்"
கவிதை வரிகளை மீண்டும் வாசிக்கிறேன்.

புதிய ஒளி,
புரியாதச் சுவை
அறிமுகமில்லாத அறிமுகம்
இன்னும் தெரியவில்லை
நீ யாரென்று!
ஆனாலும்
இனிய நினைவுகள் மட்டும்
பழையப் புத்தகத்தின்
வாசனையைப் போல
என் உள்ளத்தில்.

லேட்டஸ்ட் கணபதி புராணக்கதை


கண்பதி பப்பா மோரியா
மோரியாரே பப்பா மோரியாரே
கண்பதி பப்பா மோரியா..
புடுச்சா வருஷி லவுக்கரியா
கண்பதி பப்பா மோரியா..

எங்கள் ஊரு கணபதி திருவிழாவுக்கும் ரெடி ஆகிக்கொண்டிருக்கிறது.
கணபதி விழா என்பது எங்கள் ஊரு மக்களுக்கு பக்திக்கு அப்பாற்பட்ட
கொண்டாட்டங்களின் உற்சவம்.
கணபதி திருவுருவச்சிலைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
தொன்மங்களின் அடையாளமாய், புராணக்கதைகளின் ஊடாகப்
பயணித்து கணபதியின் வாகனமான எலி கணினியின் மவுசாகி
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நடுவில் எங்கள் கணபதி
இப்போதெல்லாம் காட்சித்தர ஆரம்பித்திருக்கிறார்.
கணபதி சிலைகளை உருவாக்கும் கலைஞர்களின் கைவண்ணமும்
கற்பனையும் ஒவ்வொரு வருடமும் கண்கொள்ளாக் காட்சியாக...
விரிகிறது.

இந்தக் கலைஞர்கள் உருவாக்கிய கணபதி சிலைகள் இறுதியில்
தண்ணீரில் கரைக்கப்படுகின்றன.
அவர்கள் பார்த்து பார்த்து உருவாக்கிய சிலை, கற்பனையை
விரித்து அவர்கள் படைத்த வண்ணங்களின் கலவை...
10 நாட்களுக்குப் பின் ... தண்ணீருடன் கலந்துவிடுகிறது.
இந்தக் காட்சி அவர்களுக்கு என்ன மாதிரியான மனநிலையைக்
கொடுக்கும்?
கணபதி சிலையைக் கரைக்கும் இடத்தில் தான் உருவாக்கிய சிலை
தண்ணீரில் கரைந்து போவதைப் பார்த்துவிட்டு வந்து கண்ணீருடன்
அந்தக் கலைஞன் படுத்திருக்கிறான்
...
வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை!

*
சொர்க்கலோகம் அவன் கனவில் காட்சியாக...
கலைஞர்கள் சோமபானம் அதிகம் பருகி.. உண்மையை
உலறிக்கொண்டிருக்கிறார்கள்..
வருகிறார் நாரதர்..
பேச்சு வார்த்தை வளர்கிறது..
உங்கள் கடவுளுக்கே மண்ணுலகில் வாழ்க்கைக் கொடுத்தது
எங்கள் கைகள்.
இந்தக் கலைஞர்கள் இல்லை என்றால்...
சிலைகள் ஏது? சிற்பங்கள் ஏது? ஓவியங்கள் ஏது?
இதெல்லாம் இல்லாமல் கோவில்கள் ஏது?
என்று கேட்கிறார்கள்.
விடுவாரா... நாரதர்.. அப்படியே பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் போய்
கலைஞர்கள் உலறியதை எல்லாம் தன் பங்குக்கு இன்னும் கொஞ்சம்
அதிகம் கலந்து காதில் போட்டு வைக்கிறார்.

விளைவு: கலைஞர்கள் மீண்டும் மண்ணுலகில் பிறக்கிறார்கள்!
அவர்கள் கைகள் படைக்கும் கலைப்படைப்புகள்
11 நாட்களுக்குள் தண்ணீரில் கரைக்கப்பட்டுவிடும் என்பதுதான் சாபம்!
கடவுள்களின் கூட்டணி சேர்ந்து ,
"உங்கள் கண்முன்னாலேயே உங்கள் படைப்புகள் அழியும், கரைந்துவிடும்.
ஆனால் நாங்கள் அழிவதில்லை.. கரைவதில்லை" என்று பாடம்
புகட்ட விரும்பினார்கள்!
இதில் ஒரு சிக்கல் வந்தது. யாருக்கு சிலை வடிக்கலாம் என்று?
வருடா வருடம் தண்ணீரில் கரைந்துவிட்டால் நம் கதி என்னவாகும்?
என்று மற்ற கடவுளர்கள் எல்லாம் தங்களுக்குச் சிலைகள் வேண்டாம்
என்று ஒதுங்கி விடுகிறார்கள். கண்பதி மட்டும் இந்த ரிஸ்க் எடுக்கிறார்.
அதில் ஜெயித்துவிடுகிறார். கணபதி இந்த ரிஸ்க் எடுக்கும் போது
'உன்னால் முடியும் கண்பதி... ஒவ்வொரு வருடமும் உன்னை
இந்த மண் வழியனுப்பினாலும் அடுத்த வருடமும் நீ வரவேண்டும்
என்று சொல்லித்தான் வழியனுப்புவார்கள் என்று ஊக்கம் கொடுத்த
கண்பதியின் தாயார் பார்வதிதேவிக்கும் தசராவில் இதே போல
தண்ணீரில் கரைக்கும் சடங்கு அதனால் தான் நடக்கிறது.
இதுதான் கண்பதி சிலையைக் கடலில்/நதியில்/ குளத்தில்
கரைக்கும் கதை..
*

கண்விழிக்கிறான் அந்தக் கலைஞன்.
10 நாட்களும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடிய
மக்கள் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு கண்பதி சிலை நல்ல விற்பனை!
வருகிற ஆண்டில் என்ன மாதிரி புது ஐடியாவில் கணபதி சிலையை
உருவாக்கலாம் என்று யோசித்துக் கொண்டே
அவன் கால்கள் வீட்டை நோக்கி நடக்கின்றன.

பி.கு: இந்தக் கதை எந்தப் புராணத்தில் ? என்று கேட்காதீர்கள்.
இனிமேல்தான் எந்தப் புராணத்தில் சேர்க்கலாம் என்பதைப்
பற்றி நான் யோசிக்க வேண்டும்.

நான் நீயானேன்


உண்ணாமல் உறங்காமல்
விரதங்கள் காத்தேன்.
கேட்டது கிடைக்க
உன்னைத் தேடி
உன் பாதங்கள் தேடி
ஓடிவந்தேன்.

கருவறையின் புழுக்கத்தில்
பக்தர்களின் பக்தி வியர்வையில்
என் குரல் அமுங்கிவிட்டது.
'தரிசனம்' முடிந்ததென்று
தள்ளிவிட்டார்கள்!

என் காலடியில்
'தாயே கருணைக்காட்டு"
உன் பிச்சையின் குரல்..
ஆத்மா... பரமாத்மா..
நான் நீயானேன்
நீ -
மீண்டும் சிலையானாய்.

Friday, August 6, 2010

எழுதாதக் கவிதை




அம்மா..
எங்கே போகிறாய்?
எனக்குத் தெரியும்
என்னை உன்னிலிருந்து
எடுத்து வீசப் போகிறாய்..

அம்மா..
எத்தனைக் கவிதைகள் எழுதியிருப்பாய்..?
என்னை மட்டும் ஏனம்மா
எழுத மறுக்கின்றாய்?

நான் உன் எழுத்தல்லவா
எனக்கு மட்டும் ஏன் உன் பக்கங்கள்
மூடிக் கொண்டன.?

எத்தனைச் சிந்தனைகளை
உன்னில் உருவாக்கி
மண்ணில் விதைக்கப் போராடுகிறாய்?
உன் உயிரணுவில்
கலந்துவிட்ட என்னை மட்டும்
ஏனம்மா..
கல்லறை இல்லாத கழிவறையில்
தள்ளுகின்றாய்..

அம்மா..
நான் உன் சிந்தனைத் துளி அல்லவா..
புரட்சியின் மனித ஆயுதமாக
என்னை மாற்ற வேண்டிய நீ...
மருத்துவச்சியின் கூராயுதங்களால்
என்னை வெடித்து
ரத்தப் பிண்டமாய்
ஏன் சிதறடிக்கப் போகிறாய்?

அம்மா..
இரண்டுக்கு மேல் வேண்டாம்
என்பதால் மட்டுமே
உன் முகம் காண
தடைச் சட்டமா?
உண்மையைச் சொல்..
இரண்டுக்கு மேல் வேண்டாம் என்றால்
ஏனம்மா நான் உன்
மகனா மகளா என
அறிந்துவிட துடித்தாய்?

என்னை அறியும்
சோதனைச் செய்யாமலேயே
என்னை நீ
கலைத்திருக்கலாம்..
அப்போது-
ரத்தப் பிண்டமாய்
சிதறும் போது மட்டும்தான்
வலித்திருக்கும்.
இப்போது..
அம்மா...
பிறப்பின் பிரபஞ்சமே வலிக்கிறது
உன் முகம் பார்க்கத் துடித்த
என் கவிதை
நீ வாசிக்காமலேயே
கிழிந்துப் போகிறது


தாய்ப் பார்க்காத முகம்
தமிழ்ப் படிக்காத எழுத்து
நீ எழுதாதக் கவிதை..
இதோ...
மரணத்தைக் கூட அனுபவிக்காத
வேதனையில்
மறைந்துவிட்டது..---

பெண்.>அதிகாரவெளி

ஒரு பிரச்சனையின்
இரண்டு முகங்கள்
-----------------------

கடந்தவாரம் தொலைக்காட்சியில் (ராஜ்/பொதிகை என்று நினைக்கிறேன்)
பெண்ணுரிமைக் குறித்தக் கருத்தரங்கம் நடந்துக் கொண்டிருந்தது.
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன், அரங்க மல்லிகா என்று
என் நட்பு வட்டத்தின் முகங்களைப் பார்த்தவுடன் அவர்கள்
கருத்துகளைக் கேட்கும் ஆர்வத்தில் உட்கார்ந்திருந்தேன்,

பெண் விடுதலை என்பது
"பெண் குறைந்தப்பட்சம் அவள் சார்ந்தப் பிரச்சனைகளுக்கு
அவளுக்கு இருக்கும் முடிவு எடுக்கும் அதிகாரவெளி" என்று
அடையாளப்படுத்தப் பட்டது. உண்மைதான்.
இந்தக் கருத்தின் உள்ளும் புறமும் பயணம் செய்யும் போது
' இந்த முடிவு எடுக்கும் அதிகாரம்' என்பதைப் பற்றிய
பல்வேறு முகங்களை நாம் பார்க்க முடியும்.

ஷாஜஹானைத் தன் அழகால் மட்டுமல்ல தன் அறிவுக்கூர்மையாலும்
மும்தாஜ் ஆட்சி செய்துக் கொண்டிருந்தாள் என்கிறார்கள்.
இன்றைக்கும் கூட அரசியல் தலைவர்களின் அதிகாரத்தை
தீர்மானிக்கும் "கிட்சன் கேபினெட்" பற்றி எழுத ஆரம்பித்தால்
மெகா தொடர் எழுதலாம்!
அக்காமார்கள் (தஞ்சை மராத்திய அரசில் தேவதாசிகள்)அரசனுக்கு வட்டிக்கு
கடன் கொடுத்த வரலாறு குறித்த ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி
மஹால் நூலகத்தில் இருப்பதாகவும் அவர்களைப் பற்றி நான்
வாசித்து எழுத வேண்டும் என்றும் அழைக்கிறார் என் நண்பர் ஒருவர்.

பெண்களின் ஒரு பக்கம் இப்படி இருந்தால் இன்றைக்கும்
பெண்ணை மட்டும் மண்ணென்ணெய் ஊற்றி எரித்தச் செய்திகளால்
நிரம்பி வழிகிறது நம் நிகழ்காலம்.
இத்தனை எண்ணங்களும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது
வந்து அலைமோதிக்கொண்டிருந்தன..

அப்போதுதான் அந்த இரண்டு பெண்களின் கருத்தும்
என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது.
ஒருவர் தொழிலதிபராக தன்னை வளர்த்துக் கொண்ட பெண்.
தன் கணவர் இறந்தப் பின் தான் மறுமணம் செய்துக் கொண்டதையும்
அந்த மறுமணத்திற்கு ஆதரவாக இருந்தது மட்டுமல்ல,
மறுமணத்தின் தேவையை எனக்குப் புரிய வைத்தவர்களும் என்
பிள்ளைகள் தான் என பெருமையுடன் சொன்னார்.
அப்போது அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்தக் கம்பீரம்..
மகிழ்ச்சி..., அவர் வார்த்தைகளின் சத்தியத்தை வெளிச்சமிட்டது
என்று தான் சொல்ல வேண்டும்.

உடனே எதிர்முனையில் இருந்த இன்னொரு பெண் பேச ஆரம்பித்தார்.
"எனக்கும் மறுமணம் செய்து கொள்ள விருப்பம் தான். மறுமணத்தின்
தேவையை நான் உணர்ந்திருக்கிறேன்.
என்றாலும் என்னால் மறுமணம் செய்வதென்பது சாத்தியப்படாது" என்றார்.
'விருப்பம் இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்,
தேவையை ஆதரிக்கிறீர்கள்.. ஆனால் செய்து கொள்ள முடியாது ...
என்றால் உங்களுக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லையா?'
என்ற கேள்வியை முதல் பெண்மணி கேட்கிறார்.
இவர் சொன்னார்...விரக்தியான ஒரு புன்னகையைத் தவளவிட்டு..

'உங்களுக்கு இருப்பது ஆண் மக்கள், எனக்கு இருப்பது பெண் மக்கள்..'
இவ்வளவு தான்..
அதற்கு மேல் அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை விட்டு
நான் வெளியில் வந்துவிட்டேன்.
அந்த இரண்டாவது பெண்ணின் முகமும் கண்களும் அவர் சொன்னக்
காரணமும் இன்னும் என்னைத் துரத்துகிறது..


ஜெர்மன் கல்சுருகியில் தோழி தேவா ஹெரால்ட் இல்லத்தில் தங்கி
இருந்தப்போது இதே விசயத்தைப் பற்றிப் பேசிய நினைவு வருகிறது.
ஜெர்மனியில் குடும்பநல வழக்குகளில் தமிழ்-ஜெர்மன்
மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார் தேவா
புலம்பெயர்ந்தப் பெண்கள் சிலரின் மறுமணத்தில் அப்பெண்களின்
மூத்தக் கணவருக்குப் பிறந்தப் பெண்குழந்தைகள் அனுபவிக்கும்
பாலியல் கொடுமைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கணவன், தன் குழந்தைகள் என்று இருவருக்கும் நடுவில் மறுமணம்
செய்து கொண்ட அந்தப் பெண்கள் அனுபவிக்கும் மன உறுத்தல்
வல்லாங்கை விட கொடுமையானது.

முடிவு எடுக்கும் அதிகாரத்தைப் பெறும் வழித்தடத்தை
யார் தீர்மானிக்கிறார்கள்?
பெண் என்பவள் அவள் மட்டும்தானா?

அவளைச் சுற்றி எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்
கோள்களின் விசையே அவள் விசையைத் தீர்மானிக்கிறதா?

Thursday, August 5, 2010

CERI SHORT CLIPS

இந்தியாவில் மக்களாட்சியா..?!!



what is democracy?
the word democracy is two words of Greek - demo + kratein
demo means the people.
kratein means to rule.

Democracy - மக்களாட்சி.
one man one vote இந்தியாவின் மிகச்சிறந்த மனித உரிமையாக மதிக்கப்படுகிறது.
உலக நாடுகளில் மிகச்சிறந்த, மிகப்பெரிய மக்களாட்சி அடையாளத்தை
எப்போதும் பெருமையுடன் கீரிடமாக அணிந்து வலம் வருகிறது இந்தியா.

அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்று நாடாளுமன்றம்
செல்வது சரிதானே என்று மேம்போக்காக வெற்றி/தோல்வி குறித்த
கருத்துகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்தியாவின் மக்களாட்சி
மகத்துவமானதாகத் தெரியும். தெரிகிறது! ஆனால் இந்த வெற்றி/தோல்வியின்
உள்ளீடுகளைப் பார்த்தால் இந்திய மக்களாட்சியின் சாயம் வெளுத்துப் போகும்.

உதாரணமாக ஒரு தொகுதியில் ஒரு இலட்சம் வாக்களர்கள் இருப்பதாக
வைத்துக் கொள்வோம்.ன் அதிகமாக வாக்குப்பதிவு பெற்ற தொகுதியாக
கற்பனைச் செய்து கொண்டு 70% ஓட்டுப் பதிவு என்று கணக்கில் வைத்துக்
கொண்டாலும்

காங்கிரசு + திமுக கூட்டணி - 20,000
பி.ஜே.பி கூட்டணி - 15,000
அதிமுக கூட்டணி - 18,000
தேதிமுக +இதரக்கட்சி - 12,000
சுயேட்சை +
செல்லாத ஓட்டுகள் - 5,000

மொத்தம் பதிவான ஓட்டுகள் - 70,000


ஒரு இலட்சம் வாக்குகள் உள்ள தொகுதியில் ஓட்டுப்போடாத 30,000
தவிர்த்து ஓட்டுப் போட்டவர்களில் வெறும் 20,000 பேர் தேர்ந்தெடுத்த
வேட்பாளர் மீதி 50,000 வாக்காளர்களின் ஒப்புதலின்றி அந்தத் தொகுதியின்
வேட்பாளராக நாடாளுமன்றமோ/சட்டசபையோ செல்லுகிறார்.
இந்த 50000 வாக்காளர்களும் இந்த வெற்றி பெற்றவரை ஏற்றுக்கொள்ளவில்லை
அல்லது அவர் தகுதியானவரல்ல என்று தீர்மானித்தார்கள்.

பெரும்பான்மையால் தகுதியற்றவராக தீர்மானிக்கப்பட்ட ஒருவர்
வெற்றி பெற்று தகுதியானவராக ஆக்கப்படுகிறார் என்றால்
இந்த தேர்தல் முறை எப்படி மக்களாட்சியாக இருக்க முடியும்
?

இவரும் இவரைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களும்தான்
இந்தியாவை ஆளும் மக்களாட்சி.
இந்திய மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆட்சியாளர்கள்.
இது எவ்வளவு கேலிக்கூத்து?
இது மக்களாட்சிதானா?
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! என்றெல்லாம் நாம் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமே..
இதெல்லாம் எவ்வளவு கடைந்தெடுத்தக் காலித்தனமான
ஏமாற்று வித்தை..
மேலே சொல்லியிருக்கும் எடுத்துக்காட்டு ஒரு கற்பனை அல்ல.,
இதோ சில உண்மையான புள்ளிவிவரங்கள்:

*இன்றைக்கு ஆளும் காங்கிரசு பெற்ற மொத்த வாக்குகள் 28.6% .
இது 2004ல் காங்கிரசு பெற்ற வாக்குகளை விட 2% அதிகம்.
அவ்வளவுதான்.

* பீகாரில் நாவ்டா பார்லிமெண்ட் தொகுதியில் வெற்றி பெற்ற
பி.ஜே.பி வேட்பாளார் போலாசிங் பெற்ற வாக்குகள் வெறும் 10% தான்.

*முரளி மனோகர் ஜோஷி, லால்ஜி தாண்டன், குக்கும்தேவ் நாராயண்
சல்மான் குர்ஷித், பரூக் அப்துல்லா ஆகியோர் வெற்றி பெற்றது 1/8 வாக்குகள் மூலம்தான்.

* மீராகுமார் பெற்ற வாக்குகள் 1/8

* 50% வாக்குகள் பெற்று நாடளுமன்றம் வந்திருப்பவர்கள் மொத்தமே 5 பேர்தான்
நாகாலந்து, சிக்கிம், வங்காளம் தாலா ஒருவரும் திரிபுராவிலிருந்து 2 பேரும்.

* 145/573 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20%க்கும் குறைவாக ஓட்டுகள் பெற்று
நாடாளுமன்றம் வந்தவர்கள்.

அப்படியானால் 20 அல்லது 30 விழுக்காடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
மீதி 80 அல்லது 70 விழுக்காடு மக்களையும் சேர்த்தே ஆட்சி செய்கிறார்கள்
மக்களாட்சி என்ற பெயரால்!.

*
அடிக்கடி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் போதெல்லாம் நம் அரசியல்
தலைவர்கள் சில உண்மைகளை உதிர்ப்பார்கள்...
"நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று நினைக்காதீர்கள்.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் நாங்கள் பெற்ற வாக்குகள் அதிகம்
என்ற உண்மை மக்களிடம் எங்களுக்கிருக்கும் செல்வாக்கை உறுதி செய்கிறது"
இத்தியாதி வசனங்கள் எழுதப்படும்.

நம் அரசியல் தலைவர்கள் சொல்வதில் எதில் உண்மையிருக்கிறதோ இல்லையோ
இது மட்டும் உண்மைதான்
!!

- 2001ல் தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகாவும் பெற்ற வாக்குகள் 31%.
ஆனால் திமுக வெற்றி பெற்ற இடங்கள் 31, அதிமுக பெற்ற இடங்கள் 132.
எனவே அதிமுக ஆட்சி.

- 2006ல் திமுக பெற்ற வாக்குகள் 26.5%, - வெற்றி பெற்றது 96 இடங்கள்
ஆனால் அதிமுக பெற்ற வாக்குகள் 32.6% -வெற்றி பெற்றது 61 இடங்கள்.

மக்களாட்சி என்ற பெயரால் -
யாரை நாம் ஏமாற்றுகிறோம்?
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?
நம் தேர்தல் முறையை நாம் உண்மையாகவே மக்களாட்சிக்கு மிகவும்
நெருக்கமான முடிவுகளைத் தரும் தேர்தல் முறையாக மாற்ற வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

(தகவல்கள்: M C RAJ, CERI)


http://www.youtube.com/watch?v=raP1kbQ5uZA

உண்மையின் ஊர்வலங்கள்

உண்மையின் ஊர்வலங்கள்
++++++++++++++++++++++ தொடர்

ஊர்வலம் 2
----------->>



(அருணாவின் புகைப்படம்)

37 வருடங்களுக்கு முன்பு நடந்த அருணாவின் சோகக்கதை.
வழக்கம்போல டைம்ஸ் ஆ·ப் இந்தியா ஞாயிறு மலரைப் புரட்டிக்கொண்டிருந்தபோது அந்தச் செய்தி புகைப்படத்துடன்.(written by Pinki Virani, a columnist.)

இப்போதும் அந்தச் செய்தியின் தாக்கத்தையும் அந்தச் செய்தி தந்த மனவுளைச்சலையும் தாண்டி வரமுடியவில்லை.
எப்போதாவது அருணாவின் நினைப்பு வரும். அப்போதெல்லாம் அவள் இன்னும்
இருக்கிறாளா என்பதை அறிய மனம் விரும்பும். அதே நேரத்தில் அவள் இன்னும்
உயிருடம் இருக்கக்கூடாது என்று உள்மனம் மவுனத்தில் அழும். அப்போதெல்லாம்
உடைந்து போகும் வாழ்வின் நியாயங்களும் தர்மச் சிந்தனைகளும்.

கர்நாடக மாநிலத்தின் ஹல்திபூரிலிருந்து வந்த எத்தனையோ நர்ஸ்களைப்போலவேதான் அவளும் மும்பை மண்ணில் கனவுகளுடன் கால் வைத்தாள். அவள் விரும்பியது போலவே மும்பையின் புகழ்பெற்ற கே.இ.எம்
மருத்துவமனையில் வேலை கிடைத்தது.(King Edward VII memorial hospital). மருத்துவமனையிலிருக்கும் ஆய்வுக்கூடத்தில் அருணாவுக்கு வேலை.
அந்த ஆய்வுக்கூடத்தில் நாய்கள் மருத்துவ ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அந்த நாய்களுக்குரிய உணவு வகைகளையும் பாலையும் திருடிக்கொண்டிருந்தான் அங்கே வார்ட் பா·யாக வேலைப்பார்க்கும்
சோகன்லால் பாரத வால்மீகி. அவனைப் பலமுறை கண்டித்துப் பார்த்தாள்
அருணா. அவனோ அவளை அதனாலேயே பழிவாங்கத் துடித்தான்.

தான் விரும்பிய டாக்டருடன் திருமணம் செய்ய இருக்கும் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்த அருணா எப்போதும் சோகன்லாலைப் பற்றியும் அவன் பலமுறை
அவளை ஏதாவது சிக்கலில் மாட்டிவிட முயற்சி செய்வது பற்றியும் சொன்னாள்.
அப்போதெல்லாம் "அவனை எதுவும் கண்டு கொள்ளாதே!" என்று டாக்டர் அவளுக்குச் சொல்லியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கண்முன்னால் நடக்கிற திருட்டைப் பார்த்துக் கொண்டிருப்பது அந்த திருட்டுக்கு
தானும் உடந்தையாக இருப்பதாகத்தானே அர்த்தம் என்று நினைத்தாள்.
அன்றும் அப்படித்தான்.. சோகன்லால் கையும் களவுமாக அவளிடம் பிடிபட்டுவிட்டான். எப்படியும் அவள் மேலதிகாரிகளிடம் முறையிடுவாள் என்பதை
அவன் அறிவான். வெறி நாயாக அவன் அவள் பின்னால் மோப்பம் பிடித்து
அலைந்து கொண்டிருந்தான்.

அன்று 27 நவம்பர் 1973..மாலை மணி 4.50 இருக்கும் மருத்துவமனையின் பேஸ்மெண்ட் பகுதியில் அவள் தன் நர்ஸ் உடைகளைக் களைந்து லாண்டரியிலிருந்து சலவை செய்து வந்திருக்கும் ராணிபிங்க் கலர் புடவையை மாற்றிக்கொண்டிருந்தாள். உடைந்த மரச்சாமான்களும் கோப்புகளும் அடைந்து கிடக்கும் இருண்ட அறையில் அவளுக்கு முன்பே அவன் நுழைந்து அந்த இருட்டில் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
தன் காக்கி கலர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து நாய்களின் கழுத்தில் மாட்டும் இரும்பு செயினை உருவி எடுத்து அவள் கழுத்தை நெருக்கினான்.
திடகாத்திரமான சோகன்லாலின் உடல் அவள் மெல்லிய உடலைத் தின்று
தன் மிருகப்பசியைத் தீர்த்துக்கொண்டது. அந்தப் போராட்டத்தில் அவன் வலது
கன்னத்தில் மூன்று முறை பலம் கொண்ட மட்டும் கடித்து அந்த நாயை விரட்ட
அருணா போராடிய போராட்டம் நடந்தது. அந்த நாய் அருணாவின் கழுத்திலிருந்த தங்கச்செயினையும் வாட்சையும் அவள் கைப்பையில் இருந்த சில்லறை பணத்தையும் எடுத்துக்கொண்டு..ஏன் அவளுடைய புடவையும் உருவி எடுத்துக்கொண்டு கதவைச் சத்தமில்லாமல் இழுத்துப் பூட்டிவிட்டு நடந்தது.அப்போது மாலை நேரம் 5.40..
அந்தப் போராட்டத்தில் அருணா இறந்து போயிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. இரத்த வெள்ளத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு கிடந்த அருணாவின்
மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டன. அவள் பார்வை இழந்தாள். ஊமையானாள்.
உணர்வுகள் இழந்த உயிர்ப் பிண்டமாய் 37 வருடங்களுக்கு மேலாக மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறாள். இப்போதும் ஆணின் குரல் கேட்டால் மட்டும் அவள் உடல் நடுங்குகிறது.. தங்களுடன் ஒருத்தியாய் பணி புரிந்தவளை
, துடைத்து எடுத்து நித்தமும் உடை மாற்றி நோயுண்னிகள் வராமல் கவனிக்கிறார்கள் மருத்துவமனையில் இருக்கும் மற்ற நர்சுகள்.

அவளை விரும்பிய அவள் காதலன் இப்போது திருமணமாகி குழந்தைகளுடன்.
அருணாவைப் பற்றிய நினைவுகளை மறக்க நினைக்கும் போராட்டத்தில் அவர் யாருடனும் அருணாவைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. மும்பையிலேயே டாக்டராக க்ளினிக் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஏன் அவருடைய மனைவி,
குழந்தைகளுக்கு கூட அருணாவைப் பற்றி எதுவும் தெரியாது என்பது தான் உண்மை!

அருணாவின் தங்கை வொர்லி பகுதியில் இருக்கும் (B.D.D. chawl) பி.டி.டி.
சால் பகுதியில் வசித்து வருகிறார். அருணாவைப் பற்றி அவரும் எதுவும் பேச
விரும்புவதில்லை.
சோகன்லால் அருணாவைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை! ஆம் சோகன்லால் மீது திருட்டு குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டது.
அதற்கான தண்டனையாக ஆறு ஆண்டுகள் சிறைவாசம் மட்டும்தான். இன்று சோகன்லால் டில்லி மருத்துவமனை ஒன்றில் வார்டு ·பாயாக வேலை பார்க்கிறான்..
அவனுடைய அடையாளம் அவன் வலது கையில் அவனுடைய பெயரை அவன் பச்சைக் குத்தி இருப்பான். அவன் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்...

ஆனால் எங்கள் அருணா இப்போது என்னவாக இருக்கிறாள்?
அருணா இப்போது உயிருடன் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டால்
அந்த வேதனை மீண்டும் மீண்டும் இரவுகளைத் தூக்கமின்றி அடிக்கும்.
அவள் உயிருடனிருந்தாலும் அவளை இப்போது நேரில் போய்ப் பார்க்க நெஞ்சில்
உரமுமில்லை.

என்னவளே
பெருநகர மாயப்பிசாசுகள்
நாய்களுக்குப் போட்டியாய்
நடமாடும் நகரமிது.

தர்மங்கள் நிலைநிறுத்த
நீ கொடுத்த விலை
அதிகம் தாயே

உயிர்ப்பிண்டமாய்
கட்டிலில் கிடக்கும்
உன் சதைநார்களில்
இன்னும்
ஒட்டிக்கொண்டிருக்கிறதா
நியாயங்களின் சுவாசம்?

------------------------
பி.கு

அருணாவின் முழுக்கதையும் பிங்கி விரானி புத்தகமாக எழுதியிருக்கிறார்.
(The True Account of a Rape and its Aftermath, written by Pinki Virani, a columnist.)

மும்பையின் டோபி க்காட் (DHOBY GHAT)




இப்போதெல்லாம் நான் இஸ்திரிக்குப் போட்ட காட்டன் புடவை கிழிந்திருந்தால்கோபப்படுவதில்லை. ஏன் ட்ரை க்ளீனிங் போட்ட ஃபேப் இண்டியா காட்டன்சுடிதாரை எங்கள் இஸ்திரி சாச்சா தொலைத்துவிட்டு வந்து நின்றாலும்என் ஃபிரஷர் கூடுவதில்லை! இதற்காக எல்லாம் எந்த தியானமும் நான்செய்யவில்லை. நான் செய்ததெல்லாம் எங்க ஊரு டோபிக்காட் பற்றியஒரு வெளிநாட்டுக்காரர் புத்தகத்தைப் படித்துவிட்டு..'அடடா.. நம்ம மும்பையிலே இருக்கும் இந்த இடத்தைப் பற்றி நாமதெரிந்து கொள்ளாமல் இருக்கிறோமே' என்று நொந்துப்போய் அந்தஇடத்திற்கே நேரில் சென்று பார்த்ததால் வந்த ஞானோதயம் தான்.( உள்ளே நுழைய முடியவில்லை. மேம்பாலத்திலிருந்து பார்த்தது தான்.ஆ.. ஊ.. என்று வரிந்துக் கட்டிக்கொண்டு உழைப்பாளர்கள் குறித்து பேசும்-எழுதும்- என் முகம் டோபிக்கட்டில் வெளுத்துப் போனது இன்னொருஉண்மை!)
துணி துவைப்பது குறித்து வாஷிங் மெஷின் , சலவைக்கட்டிகள், சலவைத்தூள்கள்என்று நம் வீட்டு தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் எல்லாம்துணிதுவைப்பது என்னவொ பூ பறிப்பது மாதிரி காட்டுகின்றன. ஆனால் இவர்களில் யாருமே இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களைப்பற்றி எதுவும் மூச்சு விடுவதில்லை.
உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி துணிச்சலவை இடம் மும்பையின்டோபிக்கட் தான் என்கிறார்கள் வெளிநாட்டு எழுத்தாளர்கள்.பிரிட்டிஷ் ஆட்சியில் படைவீரர்களின் சீருடையை வெளுப்பதற்கு இந்த இடத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். குடிசைப் பகுதியான இந்தகுடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலையேதலைமுறை தலைமுறையாய் செய்து வருகிறார்கள். 700 துணிதுவைக்கும்தொட்டிகளும் துணிகளை அடித்துத் துவைக்கும் கல்மேடைகளும் இருக்கின்றன.ஒரே நேரத்தில் அத்தனைப் பேரும் துணிகளைக் கல்மேடையில் அடித்துத்துவைக்கும் காட்சியும் அந்த ஓசையும் நம்மை என்னவொ செய்யும்!என் அன்புத்தோழி அ.மங்கை இந்த துணிதுவைக்கும் ஓசைகளின்பின்புலத்தில் "வெள்ளாவி" என்ற நாடகத்தை இயக்கி இருக்கிறார்.
மும்பையில் மகாலட்சுமிக்கு அருகில் மேம்பாலத்திலிருந்து பார்த்தால்டோபிக்காட் தெரியும்.பொதுவாக எல்லோருமே அங்கிருந்து தான் பார்த்துவிட்டு வருவார்கள்.மும்பையில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் ஓரிடம். மும்பை டாக்ஸிடிரைவர் எல்லோருக்கும் டோபிக்கட் என்றால் தெரியும். சரியாயப் பயணிகளைக்கொண்டு விட்டுவிடுவார்கள். நம்மவர்கள்தான் மும்பை வந்தால் கேட் வே ஆஃப் இந்தியாவும் தாஜ் ஹோட்டலும் பார்த்தால் போதும் என்று நினைக்கிறார்கள்.
என் வீடு தேடி வந்து துணிகளை வாங்கிச்செல்லும் இஸ்திரி சாச்சாவுக்குப்பின்னால் ஒரு பெரிய குழுவே இருக்கிறது.இஸ்திரி சாச்சா துணி வாங்கிச்செல்வார்.அதன்பின் துணிகளில் சில குறியீடுகள் இடப்படும்.அந்தக் குறியீடுகள் அவர் அனுப்பும் துணிகள் என்பதற்கான "பார்கோட்".டோபிக்காட்டுக்கு துணிகள் அனுப்பப்படும். அங்கே துணிகள் தரத்திற்குஏற்ப பிரிக்கப்பட்டு துவைக்கப்பட்டு, கஞ்சிப் போட்டு காயப்போட்டு இஸ்திரி ஆகியோ/ இஸ்திரி செய்யாமலோ துணிகள் அந்தந்த இடத்திற்குஅனுப்பப்படும். வந்த துணிகளை பில்டிங், வீட்டு எண் அடையாளத்துடன்நம்மிடம் வாங்கிய இஸ்திரி சாச்சா நம் வீட்டில் வந்து கொடுப்பார்.ஒரு நாளைக்கு டோபிக்காட் வெளுக்கும் துணிகள் குறைந்தது5 இலட்சம் இருக்கும்! எம்மாடியோவ்! இந்த 5 இலட்சத்தில் நம் துணி நம்மிடம் வருவது எப்போதாவதுமிஸ் ஆனால் அது ஒன்றும் ஆயுள்தண்டனைக்கான குற்றமில்லையே!துணிதுவைக்கும் இவர்கள் துணிகளில் இடும் அடையாளக்குறிகள்உலகப் புகழ் பெற்றவை. மும்பையின் டோபிக்காட் , டப்பாவாலாஅடையாளக்குறிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் ஆய்வு செய்வதிலும்வெளிநாட்டு மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். வெளிநாட்டுபயணிகளின் பயணக்குறிப்பு புத்தகங்கள்தான் இந்த உலகம் போற்றும்திறமையை வெளிக்கொணர்ந்தன.






தமிழ்நாடு


-------------





தமிழ்நாட்டில் வெள்ளாவி எப்படி இருக்கிறது? சென்னையில் இன்றும் பழையவண்ணாரப்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை என்ற பெயர்கள் சாட்சிகளாகஇருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் வைகை நதிக்கரையில் வாழும்5000 சலவைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தான் இவர்கள் அதிகம்வாழும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் குறித்த ஆய்வுகளும் பதிவுச்செய்யப்பட்டுள்ளன.நதிநீரை நம்பி மட்டுமே தங்கள் தொழிலைத் தொடர முடியாததால் வண்டையூரில்இவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் கிணறு வெட்டி வெள்ளாவி அடுப்பு வைத்துதொழில் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் உடல் உழைப்பு சார்ந்த75% வேலைகளைப் பெண்கள் தான் செய்கிறார்கள்.ஆண்கள் இஸ்திரி போடுவதும்துணிகளை வாங்கிவருவதும் கொடுப்பதுமான வேலைகளையே அதிகம் செய்வதாகதெரிகிறது.வெள்ளாவி என்பது உவர்மண்ணுடன் கலந்து துணிகளை நீராவியில் சூடுபண்ணும் முறை. மார்க்கிங் இங்க் பவுடரை க்காஸ்டிக் சோடாவுடம் கலந்துசூடு பண்ணி குளிர வைத்து காற்றுப்புகமுடியாத பாட்டிலில் அடைத்து வைத்துதங்களுக்கான அடையாளக்குறியீடு மையைத் தயாரித்துக் கொள்கிறார்கள்.ஜவ்வரிசையை பவுடராக்கி ஸ்டார்ச் பவுடரையும் தயாரித்துக் கொள்கிறார்கள்.





வரலாறு/புராண செய்திகள்


-----------------------------


*சிதம்பரத்தில் கிடைத்திருக்கும் செப்புத்தகடு தான் இவர்களைப் பற்றியமிகச்சிறந்த வரலாற்று ஆவணமாக இருக்கிறது. கிருஷ்ணதேவராயர்சிதம்பர நடராஜ பகவான் தரிசனத்திற்காக வந்தப் போது இவர்கள் வாழ்க்கையைக் கண்டு இவர்களுக்கு குடியிருப்பு நிலம் வழங்கஆணையிட்டார். இவர்களுக்கு உதவுவது என்பது கங்கையில் புனிதநீராடிய புண்ணியத்தைக் கொடுக்கும் என்கிறது இன்னொரு செப்பேடு.


*சிவபுராணத்தில் தக்கனின் யாகத்தை அழித்த வீரபத்திரனின் ஆடையில் இரத்தக் கறைகள் இருந்ததாம். அதைச் சலவைச் செய்ய தன் மார்பிலிருந்துஉருவாக்கியர்கள் தான் சலவைத் தொழிலாளர்கள் என்கிறது கதை.64 நாயன்மார்களில் ஒருவரான 'திருக்குறிப்பு தொண்டர்' இச்சமூகத்தைச்சார்ந்தவர்.


* மாரியம்மன் விழாக்களிலோ இன்றும் இவர்களிடமிருந்து அரிசி வாங்கித்தான்பிரசாதம் படைக்கிறார்கள். காப்புக்கட்டுவதும் இச்சமூகத்தைச் சார்ந்தவருக்குத்தான்.இவை அனைத்தும் மாரியம்மனிடம் இவர்களுக்கான உரிமையைக் காட்டுவதாகச்சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.


*மாரியம்மன் கதைப்படி பரசுராமனின் அப்பா கவுசிக முனி தன் மனைவிக்குகொடுத்த தண்டனை இது. பரசுராமனின் தாய் ஆற்றுமணலில் குடம் செய்துமுனிவரின் பூசைக்கு நீரெடுத்து வருவாராம். ஒருநாள் அப்படி நீரெடுக்கும் போதுசூரியனின் அழகில் கொஞ்சம் மயங்கிவிட குடம் உடைகிறது. பெண்ணின் கற்புபுனிதம் சிதைந்துவிடுகிறதாம்!! கவுசிக முனி இதை அறிந்தவுடன் கோபத்தில்மகனுக்கு ஆணையிடுகிறார். தாயின் தலையைச் சீவ. அந்தத் தாய் ஓடுகிறாள்.ஒரு துணிவெளுப்பவரின் இல்லத்தில் ஒளிந்து கொள்கிறாள். அதை அறியாதஅவன் மனைவி பரசுராமனிடம் அவள் தன் வீட்டில் இல்லை என்கிறாள்.கோபத்தில் வாளை எடுத்து மிரட்டுகிறான். ஒளிந்திருக்கும் தாய் ஓடி வருகிறாள்.இருவரின் தலையையும் வாளால் சீவி வீசுகிறான். மகன் தன் ஆணையை நிறைவேற்றியதால் மகிழ்ந்த கவுசிக முனி மகனுக்குஎன்ன வரம் வேண்டும் என்று கேட்ட 'பெற்ற தாய்க்கு உயிர்ப்பிச்சைக் கேட்கிறான்மகன்." கவுசிக முனி வரம் வழங்க ஓடிப் போய் தலையை ஓட்ட வைக்கும் போதுபதற்றத்தில் தலைகளை மாற்றி வைத்துவிட... விளைவு..?பரசுராமனின் மனைவி தலை + துணிவெளுக்கும் பெண்ணின் உடல் =மாரியம்மன்


* ரங்கநாதப்பெருமாளைத் தேடிக்கொடுத்தவர்கள் இவர்கள் என்ற வரலாற்று/புராணமும் உண்டு. திப்புசுல்தான் திருச்சியில் ரங்கநாதப் பெருமாள் சிலையைஎடுத்துச் செல்ல பக்தர்கள் கவலைத் தீர்க்க முன்வந்த சலவைத் தொழிலாளிதிப்புவின் அந்தப்புரத்தில் திப்புவின் மகள் ரெங்கநாதப்பெருமாள் சிலையைபொம்மையாக்கி விளையாண்டுக்கொண்டிருப்பதை அந்தப்புரத்திலிருந்துசலவைக்கு வந்த துணியின் சுகந்த நறுமணத்தின் மூலம் கண்டறிந்துபின் மீட்டார்களாம்!
இந்தக் கதைகள் செய்திகள் ஒரு தகவலுக்குத்தான்.


.சலவைத்தொழிலாளர்களிடம் இருக்கும் டீம் ஓர்க், டைம் மேனேஜ்மெண்ட்,கஸ்டமர் சர்வீஸ், சங்கிலித் தொடர்புகள் இவைகளுக்கெல்லாம் ஆதரமாய்அவர்களே உருவாக்கி வழக்கில் இன்றுவரை மிகவும் திறமையுடன்கையாளும் குறியீட்டு முறை! இதைப் பற்றி எல்லாம் என்றைக்காவதுநாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமோ?உடல் சார்ந்த உழைப்பும் அந்த உழைப்பில் புதைந்திருக்கும் அறிவுக்கொடையும்நமக்கு ஏன் தீண்டாமையாக அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது?
இப்போதெல்லாம் எனக்கு எங்கள் இஸ்திரி மீசைக்கார சாச்சாஒரு கணினி ப்ரோகிராமருக்கு ஒப்பானவராக தெரிகிறார்.....உங்களுக்கு?


Wednesday, August 4, 2010

பாலியல் தொழிலாளர்கள்



மின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனுமதிக்கப்படாத நிறைய விளம்பரங்கள் மின்சாரவண்டிகளில் பார்க்கலாம். சேல்ஸ் கேர்ள் வாண்டட் என்ற விளம்பரத்திலிருந்து "எங்கள் மசாஜில் உங்களுக்கு முழுத்திருப்தி
கிடைக்கும், வீட்டுக்கு வந்து மசாஜ் செய்ய தனிக்கட்டணம்.."
இத்தியாதி சில விளம்பரங்களைப் பார்க்கலாம்.
இந்த விளம்பரங்கள் பெரும்பாலானவை
(பெரும்பாலானவை.. விதிவிலக்குகள் உண்டு)
பாலியல் தொழில் சார்ந்த விளம்பரங்கள் என்பதுதான் அதிர்ச்சி தரும்
உண்மை.

பாலியல் தொழில் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ
தயக்கம் காட்டியதில் சில நியாயங்கள் இருந்தன. நம்மில் பலர் -நான்
உள்பட - ஆண்-பெண் உறவு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம்.
இதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை
என்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது
தனிநபர் சார்ந்த விசயமல்ல.
எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,
கர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,
அமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை
இந்தியப் பெண்களுக்கு 'ஆஹோ ஓஹோ '
என்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை..
இப்படியாக ஆண்-பெண் உறவு என்பதும் , பாலியல் தொழில் என்பதும்

அரசு கவலையுடன் கவனிக்க வேண்டியதாகி உலகியல் சந்தையாகி
..என்னவெல்லாமோ ஆகிக்கொண்டிருக்கிறது
.
இந்தச் சூழலில் இவைச் சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும்
சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டிய
தருணம் வந்துவிட்டது.

மின்சாரரயில்கள் விளம்பரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தப் போது
இதைப் பற்றிய கள ஆய்வுகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கும்
மராத்திய எழுத்தாளர், தோழி கவிதா மகாஜன் நிறைய உண்மைகளைப்
பகிர்ந்து கொண்டார்.







*மும்பை காமட்டிபுரம் 1889ல் வெள்ளையருக்காக உருவாக்கப்பட்டது.
1928ல் அரசு லைசன்ஸ் வழங்கப்படது. 1950ல் லைசன்ஸ் ரத்து செய்யப்படது.
100000 பேர் இத்தொழிலில்.


* பாண்டூப் மேற்குப் பகுதியில் சோனாப்பூரில் பாலியல் பெண் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் இருப்பிடத்தின் அமைப்பு:
ஒரு நீளமான வராந்தா. கடப்பா கல்மேடை. அந்த கல்மேடைதான் கட்டில்.
அப்பகுதி தகரத் தடுப்புகளால் அறைகளாக மாற்றப்பட்டிருக்கும். அந்த அறைகளில் இருவர் நிற்க முடியாது. கல்மேடைக்கு கீழே பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் உடந்தைகள். என்ன பெரிதாகா..இரண்டு பைகள் இருக்கும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 10 வாடிக்கையாளர்கள் வருவார்கள்
என்கிறார் அந்தப் பெண்.

*பாலியல் தொழிலை நடத்தும் பெண் முதலாளி அந்தப் பெண்கள் கர்ப்பமாக
அனுமதிப்பதில்லை. ஆனால் அதையும் மீறி குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே அவர்களில் சிலர் விரும்புகிறார்கள். ஏனேனில் அவர்களுக்கு என்று உரிமை எதுவுமில்லை. அவர்கள் உடல் கூட அவர்களுக்கானதாக இல்லை.
தாய்-குழந்தை என்ற ஓர் உறவு அவர்களுக்கான ஓர் உரிமைச் சார்ந்த
உணர்வாக இருக்கிறது.

*கர்ப்பம் தரித்திருப்பதை அவர்கள் குறைந்தது 5 மாதமாவது மறைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டால் கர்ப்பம் கலைக்கப்படும்.

* இப்படிக் குழந்தைக்குத் தாயான பெண் ஒருத்தி தினமும் தன்னிடம் மட்டுமே
வரும் வாடிக்கையாளரை ஒரு நாள் சில நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லி
இருக்கிறார். வெளியில் வந்தவுடன் வாடிக்கையாளரைக் காணவில்லை.
சிறிதுநேரத்தில் தன் குழந்தையையும் காணவில்லை என்பதைக் கண்டு
அதிர்ச்சியில் தேடி இருக்கிறார். குழந்தை கல்மேடைக்கு கீழே
கிடைத்தது.. குழந்தையின் வாயிலிருந்து ரத்தம் வழிய.
தொண்டைக்குழி வரை குழந்தைக் காயத்துடன். மருத்துவ உதவிக்கு
போனபோது குழந்தையின் நிலமையைக் கண்ட மருத்துவர் மயங்கி
விழுந்தார்.. !கொடுமையிலும் கொடுமை. நம் கற்பனைக்கு அடங்காத
மிருகக்கொடூரம்.

*ஆண் பாலியல் தொழிலாளர்கள்
-----------------------------------
*மும்பையில் அதிகம் ரேட் வாங்குபவர்கள் இவர்கள்

*விளம்பரம், சினிமா ஆசை என்று வந்தவர்களின் மறுபக்கம் இது.

*ஒரு நாளைக்கு 5000 முதல் 50000 வரை வாங்குகிறார்கள்.

* விடுமுறை நாட்களில் மொரிசியஸ், பாங்காக் என்று அழைத்துச்
செல்லப்படுகிறார்கள். அதற்குத் தனி சார்ஜ் வாங்குவதாகச் சொல்கிறார்கள்.

* மேல்தட்டு வர்க்க பெண்களுக்கான உடல் தேவையாகவே இவர்கள்
பயன்படுத்தப்படுகிறார்கள்.

இதில் பெண் பாலியல் தொழிலாளர்கள் மட்டுமே 40 வயதுக்குப் பின்
பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அல்லது பிச்சை எடுக்கும் குரூப் லீடரிடம் விற்கப்படுகிறார்கள்.

பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்ட சில பெண்கள் மீண்டும் அத்தொழிலுக்கே
வந்துவிட்டார்கள் என்பதும் இன்னொரு அதிர்ச்சியான உண்மை.

மண், பெண்ணுடல், நிறுவனமயம் என்ற புத்தகத்தில் ம.செந்தமிழன்
அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற திருமண உறவு வருவதற்கு
முன் பல ஆண்களுடன் உறவு கொள்ளும் பெண்களில் ஒரு சாரார்
ஓர் ஆண்+ ஒரு பெண் சமூக கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்தார்கள்
என்றும் அவர்கள் தான் பரத்தையர் என்றும் எழுதி இருக்கிறார்.
இன்று நாம் கொள்ளும் பரத்தையர் - உடலைப் பணத்திற்காக
விற்கும் பாலியல் தொழில் செய்வோர். ஆரம்பத்தில் அப்படி இல்லை
என்கிறார்.

பாலியல் தொழில் இன்று நேற்று உருவானதல்ல. எல்லா நாடுகளிலும்
அனைத்து நாகரிகச் சமுதாயத்திலும் இத்தொழில் தொடர்ந்து வந்திருக்கிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பாலியல் உறவுகள் குறித்தக் கிளுகிளுப்பும்
சிலருக்கு மிருக உணர்வுகளின் மரபணு தொடர்ச்சியும் இருக்கிறது.
வார, மாத, நாளிதழ்களில் எப்போதும் யாருமே எழுதி அனுப்பாத
மருத்துவர் கேள்வி - பதில் பகுதி வெளிவந்துக் கொண்டுதானிருக்கிறது!
கிட்டத்தட்ட 98% வாசகர்கள் என்னவொ அப்படியே மேம்போக்காக
அந்தப் பக்கத்தைப் புரட்டுகிற மாதிரி பாலியல் சார்ந்த கேள்வி பதில்களை
வாசிக்கத்தான் செய்கிறார்கள்.

அண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள்
அதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. குறிப்பாக தந்தை- மகள்
பாலியல் கொடுமை. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும்
புற காரணிகள் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

----------------------

நெல்லிக்கனி



என் நண்பனே,
எங்கே நீ ஒளிந்து கொண்டாய்?
துயரங்கள் சுமையாகும் போது
உன் தோள்களைத் தேடுகின்றேன்.

சுமைகளைத் தூக்க அல்ல
சுமைதாங்கி இளைப்பாற.

பூமி உருண்டையில்
நாம் மீண்டும் சந்திப்போம்- என்றாய்.

பூமி உருண்டை
என்பது உண்மைதான்.
ஆனால் நம் சந்திப்பு மட்டும்
எப்படிப் பொய்யானது?

வேண்டியவர்கள்
வேண்டாதவர்கள்
பெரியவர்கள்
சிறியவர்கள்
எல்லோருடனும்
பேசி- சிரித்து
உண்டு - உறங்கி
ஏறி - இறங்கி
பயணம் செய்து
களைத்துப் போய்
கண்மூடி..
கனவில் என்னுடன்
நீ பயணம் செய்வாய்
என்ற நப்பாசையில்.

ராக்கி கட்டி
நம் நட்பை
சகோதரப் பாசமாக
பரிணாமம் செய்ய நினைத்தேன்.

நம் நட்பு
ராக்கி கயிற்றையும்
மஞ்சள் கயிற்றையும் விட
மேலானது என்று
புன்னகையுடன் சொன்னாய்.

நட்பு மேலானது
என்பதால் தான்
எட்டாத வானத்தில் நீ
உன்னை எட்டிவிடும்
கனவுகளில் நான்.

நாம் மூவேந்தர் வளர்த்த
தமிழ் என்றாய்.
மூவேந்தர்களிடன்
நட்பு வாழ்ந்ததில்லையே
என்றேன்.
நீயோ
-யார் அந்த மூன்றாவது வேந்தன்?-
என்றாய்.

முத்தமிழ் என்றும்
பிரிந்ததில்லை
என்றேன்.
ஆம்.
நான் இயல்
நீ இசை
என்றாய்.
நம் நட்பு நாடகம்
என்று
சொல்லாமல்
விட்டுவிட்டாய்!

நான் அவ்வை
நீ என் அதியமான்
என்றேன்
எங்கே என் நெல்லிக்கனி?
என்றாய்.

தொலைந்துப்போன
நெல்லிக்கனியைத்
தேடி அலைகின்றேன்.

(என் கவிதை நூல் - ஹேராம்- தொகுப்பில்
நெல்லிக்கனி கவிதையில் சில வரிகள்..)

கோவிந்தா !.க்கோவிந்தா!! .. யாருக்கு?




திருப்பதி பாலாஜிக்குச் சொந்தமான நகைகளின் மதிப்பு ரூபாய் 35000 கோடி.
ஆபரணங்களைத் தவிர்த்து பாலாஜிக்குச் சொந்தமான அசையும், அசையா
சொத்துகளை எல்லாம் சேர்த்து கூட்டிக்கழித்தால் இன்றைக்கு ஒரு தனி மாநிலத்தின் வருவாயை விட அதிகம் வருவாய் ஈட்டும் நபர்
திருப்பதி பாலாஜிதான்!
பாவாம் இவ்வளவு வருவாய் வந்தும் அவர் குபேரனிடம் வாங்கிய கடனுக்கு
வட்டியைத் தான் கட்டிக்கொண்டிருக்கிறார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது!

இப்போதெல்லாம் அடிக்கடி பாலாஜியின் சொத்து மதிப்புகள் குறித்து
பத்திரிகைகள் எழுதி எழுதி என்னைப் போன்றவர்களையும் பாலாஜியைப்
பற்றி நினைக்க வைத்துவிட்டார்கள்.
மனவளக்கலை வேதாந்திரி ஷேசாத்திரி அவர்கள் மலையில் சமாதியான மகானின் அருள் சூழ்ந்த தளமாக திருப்பதியைக் காட்டுகிறார்.
கொஞ்சம் அறிவியலும் கொஞ்சம் தத்துவமும் கலந்து கொடுக்கும்
சித்த மருத்துவம் அது
.

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
பிட்சுகளும் பிக்குகளும் திருப்பதி மலையிலிருந்து இறங்கி வருகிறார்கள்.
கூட்டம் இல்லை. மலைச்சூழந்த அந்த தளத்தில் மனம் தியானத்தில்
மிதக்கிறது. மயிலிறகாய் மலைக்காற்று நம்மைத் தொடுகிறது.
பெரிய பெரிய உண்டியல்கள் இல்லை. கருவறை தரிசனத்திற்கு காத்திருப்புகள் இல்லை. அருகில் சென்று சாந்தம் தவளும் புத்தனின் காலடியை மலர்களால் அர்ச்சித்த மனம் இலகுவாகிறது. திருப்பதியில் இருப்பது புத்தர்தான் என்று இன்றும் பவுத்தர்கள் உரக்கத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள்:

> திருப்பதி சிலையை யாரும் அலங்காரமில்லாமல் பார்க்க அனுமதி இல்லை.

> இந்தியாவிலேயே மனைவி/துணைவி இல்லாமல் தொண்டர்கள் வரிசை
இல்லாமல் தனித்திருக்கும் விஷ்ணு ,திருப்பதி பாலாஜி தான். ஏன்?

> மலையை விட்டு கீழே இறங்கியதும் திருச்சானூர் என்ற இடத்தில் தான்
பாலாஜியின் மனைவி பத்மாவதி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.

> விஷ்ணுவின் திருவுருவச்சிலைகளுக்கு நான்கு கைகள், அதில் இரண்டு
கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். ஆனால் திருப்பதி பாலாஜிக்கு
இருப்பது இரண்டு கைகள் மட்டும் தான். அதுவும் சங்கு சக்கரம் கைகளில் இல்லை. அவர் தோள்பட்டையில் தொற்றிக்கொண்டிருக்கிறது.

புவுத்தர்கள் சொல்லும் இக்காரணங்களை 'இந்துமதம் எங்கே போகிறது?'
கட்டுரைகளில் அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியாரும் சொல்லுகிறார்.
ஆனால் அவர் திருப்பதி பாலாஜிக்குள் மறைந்திருப்பது மலைவாழ்
மக்களின் தெய்வம் "காளி அம்மன் " என்கிறார். மனிதர் இன்னும் கொஞ்சம்
ஓவர்டோஷாக திருப்பதி வேங்கடாஜலபதியை அருகில் சென்று ஒரு
யூதயுவதியுடன் பார்த்ததாகவும் திருப்பதி பெருமாளுக்கு அழகான கூந்தல்,
தலையைச் சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள்
என்றும் எழுதி இருக்கிறார்.
யூதப் பெண் இசையரசி எம்.எஸ்.க்கு வேண்டியவராம். தாத்தாச்சாரி சிற்சில
பராக்கிரமங்கள் நிகழ்த்தி யூத மதத்தைச் சார்ந்த பெண்ணைக் கோவில்
கருவறைக்குள் அழைத்துச் சென்று பெருமாளின் கூந்தல் ஆராய்ச்சி
செய்தாராம்!

காளி அம்மனை முதலில் ஆக்கிரமித்தவர்கள் சிவனடியார்கள் தானாம்.
காளி அம்மனை உருவாக்கி வழிபட்டு வாழ்ந்த காளி தெய்வத்தின் மக்கள்தான் இன்றைக்கு கோவிலுக்கு வெளியே தலைமுடி இறக்கும் தளத்தில் வரிசையாக இருக்கும் மக்கள் (அம்பட்டர்கள்)!

காளி அம்மன்-சிவனாகியாகக் கதை
அம்மனின் மக்களை அனாதைகள் ஆக்கியது.

ஸ்ரீராமானுஜர் புண்ணியத்தால் சிவன் விஷ்ணுவாகி..
சங்கு சக்கரத்துடன்...


இன்று திருப்பதி பாலாஜி பணக்கடலில் மிதக்கிறார்..
திருப்பதிக்குப் போனால் திருப்பம் ஏற்படும் என்று பக்தர்கள் கூட்டம்
அலை அலையாக..
இதை எல்லாம் கண்டும் காணாமல்
சித்தனின் சமாதியில் புத்தர் சிரிக்கிறார்
.