Tuesday, October 25, 2022

காஃபி வித் நாஞ்சில் நாடன்.


 என் முதல் கவிதை நூல் சூரியப்பயணம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது. மிக மோசமான வடிவமைப்பு!!!

கவியரங்க கவிதைகளை வேறு இணைத்திருப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது.

முதல் புத்தகம் என்பதால் வெளியீடு விழா என பிரமாதப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. தன் வாழ்த்துரையில் நாஞ்சில் "எல்லாமே கடக்க முடிகிற தூரங்கள் தான், நடக்கத் தயாராக இருந்தால்" என்று முடித்திருப்பார்.

தூரங்களை கடந்திருக்கிறேனா ?!! தெரியாது.

நேற்று நாஞ்சில் நாடன் அவருடைய அண்மையில் வெளிவந்த 4 புத்தகங்களை " புதியமாதவிக்கு வாழ்த்துகளுடன்" என்றெழுதி கையெப்பமிட்டு அனுப்பி இருக்கிறார். காலையில் எழுந்தவுடன்' காஃபி வித் நாஞ்சில்'

பல நினைவுகளையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துவிட்டது.

என் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும்  வாழ்த்துரையுடன் அவர் எழுதி இருந்தக் கடிதம்.. அது என்னளவில் மிகவும் முக்கியமானது. அக்கடிதத்தில்

" கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல் ஏந்நதலினிது"

என்ற திருக்குறளோடு முடித்திருப்பார். என்  ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவருடைய அக்கடிதத்தை எடுத்து வாசிப்பது இன்றுவரை தொடர்கிறது.

தொல்குடி சிறுகதை தொகுப்பில்‌ தன்னுரையாக "கைம்மண் அளவு" என்று எழுதியவர் இதே திருக்குறளுடன் முடித்திருக்கிறார்..

இன்னும் பக்கங்களைப் புரட்டவில்லை!

முதல் பக்கத்தின் நினைவலைகள் இழுத்துச் செல்கின்றன.

அரசியல் கருத்து முரண்பாடுகள் உண்டு. இருவரும் அறிவோம். அதையும் தாண்டி அவர் எழுத்துகளை வாசிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும் எவ்வித நெருடலும் இல்லாமல் தொடர்கிறோம். தொடர்கிறேன்.

இலக்கியம் அதை எழுதுபவருக்கும்

வாசிப்பவருக்கும்

இதைக்கூட செய்யவில்லை என்றால்!

பேரன்பும் நன்றியும் நாஞ்சில் சார்.

Saturday, October 22, 2022

Ammu..அம்மூ...

 



Ammu….அம்மு

திரைப்படம் பாருங்கள்

எச்சரிக்கை..

 உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்! 


“அடிக்கிற கைதான் அணைக்கும்”

ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக 

ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.

என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.

அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்

பயன்படுத்திக் கொள்வானாம்.!

இதைக் காரணமாக சொல்லும் எந்த ஓர் அறிவுஜீவி புண்ணாக்கும் பொம்பளக்கி கோபம் வந்தா என்ன செய்வாடேனு யோசிச்சதில்ல.

அது அப்படித்தான்.

காலம் காலமாக பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.

இன்னிக்கு கணினி யுகத்தில் என்னவோ

இந்தப் பொம்பள பிள்ளங்க நாலு காசு சம்பாதிக்காறாங்களே

இதெல்லாம் வந்தப்பிறகு மாறிடுச்சு அப்படின்னு

சொல்லத்தான் ஆசை.

ஆனா.. இந்த மீசைக்காரப்பசங்க

சொல்லவிடுவதில்ல.

புதுசுபுதுசா எப்படி எல்லாம் தன் கோபத்தை

தன் மனைவி/ காதலி மீது காட்டுவது 

என்பதில் பல புதுப்புது வித்தைகளை அறிந்தவர்களாக

இருக்கிறார்கள்.


மிருகம் பாதி, மனிதன் பாதி..

என்பதில் மிருகம் எப்போதும் அவனிடம் தூங்குவதில்லை.

அது பாய்வதற்கு தயாராகவே இருக்கிறது.

அந்த மிருகத்திற்கு வடிகாலாகவே பலருக்கு

திருமண உறவு கை கொடுப்பது அவலம்தாம்!

(எல்லோரையும் சொல்லவில்லை. )

கை நீட்டி நான் என் பொண்டாட்டியை அடிப்பதில்லை 

என்று சொல்லும் ஆணிடமும் இருக்கிறது

அந்த மிருகம்.

அது மவுனத்தைக் கூட ஒரு பாய்ச்சலாக காட்டி

பெண்ணுடலையும் உள்ளத்தையும் பிறாண்டி

ரத்தம் கசிய வைத்து அதில் ஒரு சுகம் காணும்!

எத்தனை விதம் விதமான டார்ச்சர்கள்! ச்சே..

 “பொறுத்துப் போயிடும்மா” என்று சொல்வது தவறில்லைதான்.

ஆனால் “பொறுத்துப் போயிடுப்பா”னு அவனிடமும் சொல்லவேண்டும்.

என் அம்மாவுக்கு இல்லாத இப்பிரச்சனை 

என் தலைமுறைக்கு ஏற்பட்டதாக எப்போதும்

நினைப்பதுண்டு நான். காரணம் அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை ஒரு கோவில். அவள் அதில் கேள்விகளின்றி சரணடைந்துவிட்ட பிறவி.

இங்கே உணர்வுப் பொங்க எழுதப்படும்

“நின்னை சரணடைந்தேன” என்பதும் 

காலம் காலமாய் ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல்.

அவள் சரணடைய தயாராக இருக்கிறாள்.

நீ அதற்கு தகுதியானவனாக 

இருக்கிறாயா?!!! 


இதை எல்லாம் எனோதானோனு எழுதவில்லை.

வேலையை விட்டவுடன் மும்பை Sophia College For Women

ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேர்ந்தேன். Women counseling , Domestic violence – law and police help  படிப்பும் பயிற்சியும். அப்பயிற்சியும் படிப்பும் முடித்து அதை

செயல்படுத்தும் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாக அமைந்தது. நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அவலங்கள் தெரிய வந்தது.  

‘யாரும்மா உன் புருஷன்?”

அவர்கள் சொன்னவுடன் ஏற்படும் அதிர்ச்சி…

அடப்பாவிகளா உனக்கு இப்படியும் ஒரு முகமா…!

அந்த நபர் எனக்கும் தெரிந்தவராகவும் சிலர் பிரபலங்களாகவும்கூட இருந்தார்கள். அது என்னை ரொம்பவும் மன உளைச்சலுக்குள் தள்ளியது.

மீண்டும் அந்த ஆண்களை சந்திக்கும்போது

பொய்யாக புன்னகைக்க முடியவில்லை.

இப்படியாக நானும் பாதிக்கப்பட்டேன்.

அதன்பின் தான் 

அவனுக்குள் இருக்கும் அந்த வேட்டை மிருகம்

எப்போதும் விழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

அவன் அப்படித்தான் இருப்பான்.

நீ பொறுத்துப்போம்மா..என்பதன் அர்த்தம் இன்னும் ஆழமாக எனக்குள் வடுவானது.

பிறகென்ன…

நான் அதிலிருந்து வெளியில் வரவே சிரமப்பட்டேன்.


பெண்ணைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். அது பொய். அப்படி எழுதியதெல்லாம் ஆண்கள்.

ஆனால்… இப்போது சொல்கிறேன்…

ஆண் மனதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.

அவனுக்குள் இருக்கும் அந்த மிருகம்

எப்போது பாயும்?

ஏன் பாய்கிறது?

அவன் தேவை என்ன?

அவன் காலம் காலமாய்

பெண்ணின் சரணாகதி நிலையிலும்

புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருக்கிறான்.

……

அம்மு … திரைப்படம்

இதன் ஒரு துளி.

பெண்கள் கட்டாயம் பாருங்கள்.

ஆனால் அவனுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டாம்.

தனியாக உட்கார்ந்து பாருங்கள்.


"take care Ammu

உன்னை உன் சுயத்தை இழந்து

வாழ்ந்துவிட முடியாது.

சரணடைதல் கூட அர்த்தமிழந்துவிடும்

take care மை டியர் அம்மு..

Thursday, October 20, 2022

கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது!?

 “கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது” 

-அறிஞர் அண்ணா.

(அண்ணா , திராவிட நாடு இதழ் , 06/1/1946)

இந்த வரிகளை அறிவார்கள். ஆனால் எத்தனை பேருக்கு

இதன் வரலாறு தெரியும்???

யாருமே பேசியதில்லை. ஏன்?!!!

ராஜாஜியை விவாதத்திற்கு அப்பாற்பட்ட   ஞானியாகவும் உத்தமராகவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டி எழுப்பியதில் வெற்றி பெற்றிருக்கின்றன. 

ராஜாஜி?!!!

1942ல் அலகாபாத்தில் கூடிய அகில இந்திய காங்கிரசில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் சகல பொறுப்புகளிலிருந்தும் உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொண்டார். 


வெள்ளையனே வெளியேறு காங்கிரசின் ஆகஸ்டு புரட்சி பற்றி எரியும்போது தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். ராஜாஜி கல்கத்தாவின் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ‘ஆகஸ்டு புரட்சியைக்’ கேலி செய்து பேசினார். 


இந்திய சுதந்திரம் நெருங்கியது என்றவுடன் ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கு காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோடு பகுதியிலிருந்து ‘ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது” 

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. அது எப்படி தனக்குத் தெரியாமல் 

திருச்செங்கோடு தேர்தல் நடந்தது என்று திகைத்தார். 

1945 அக்டோபர் 31ல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ் நாடு காங்கிரசுகமிட்டி ‘ராஜாஜியை தமிழ் நாடு காங்கிரசுக்குள் சேர்க்க கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் திருச்செங்கோடு கபட செயலுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரசு ராஜாஜி ஆகஸ்டிலேயே காங்கிரசில் சேர்ந்துவிட்டாரே என்று மெளலானா ஆசாத்தை விட்டு அறிக்கை வெளியிட வைத்தது. காமராஜர் ஏமாற்றப்பட்டார். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “ கோடு உயர்ந்தது, குன்ற,ம் தாழ்ந்தது “ என்றார்.

(கோடு – திருச்செங்கோடு, குன்றம் – திருப்பரங்குன்றம்)


 இதுமட்டுமல்ல, காந்திக்கும் காமராசருக்கும் நடுவில் கூட மனஸ்தாபங்களுக்கு காரணமாக ராஜாஜியே இருந்திருக்கிறார். காந்தியார் தமிழ் நாடு வந்திருந்தப்போது ராஜாஜி கூடவே இருந்ததும் தமிழ் நாடு காங்கிரசு தலைவராக இருந்த காமராஜர் காந்தியிடம் எதையும் உரையாட முடியாத சூழலும் ஏற்பட்டிக்கிறது . காந்தியும் காமராசரைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்: அரசியல் நட த்துகிறார்கள் என்று காமராஜரை மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்து காமராஜர் காங்கிரசிலிருந்து பதவி விலக தயாராகும் அளவுக்குப் போனார் என்பதுதான் உண்மை. ஆனால் காந்தி ஒரு மழுப்பலான அறிக்கையை தன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டு காமராஜரை சமாதானப்படுத்தினார். 


 1937ல் இந்தி திணிப்பு.. காங்கிரசு கட்சியின் விருப்பத்திற்கு மாறாகவே தன் விருப்பத்தின் படி இதைச் செய்த அதே ராஜாஜி அவர்கள்தான் 1957ல்

‘ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்று எழுதினார்.



ராஜாஜி தன் மொழிக்கொள்கையில் பல்டி அடித்தார் என்று எந்த ஊடகமும் எந்தப் பத்திரிகையாளரும் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை.

இதுதான் ராஜாஜி அவர்களின் பத்திரிகை ஊடக பலம்.

அன்று மட்டுமல்ல இன்றும் 

“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது “ இதனால்தான்.

Wednesday, October 19, 2022

கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை

 கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை




நேற்றுதான் அக்கவிதையின் தரிசனம்

என்ன ஒரு வாழ்க்கை இது!

பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில்தான்.

வாழ்க்கையில் எத்தனையோ முறை

அந்தக் கடலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே

பயணித்திருக்கிறேன்.

போகவேண்டும்..

எப்படியும் அந்தக் கவிதை அருகில்

அந்தக் கடலின் மொழியை

கரும்பாறைகளுடன் சேர்ந்து நானும்

வாசிக்க வேண்டும்..

அப்பாவிடம் கேட்கவே பயம்!

அப்பா அழைத்துச் செல்லவில்லை.

சங்கரிடம் கேட்கும்போதெல்லாம்

“IAM NOT INTERESTED”

நேற்றும் சங்கர் சொன்னது அதே வரிகள்தான்.

மும்பையை சுற்றிப்பார்க்க வரும்

உறவுகளும் தோழர்களும்

மகாலட்சுமிக்குப் போகும்போது கூட

சாலையோரத்தில் அழைக்கும் 

அக்கடலின் அழகைக் கண்டு கொள்வதில்லை.

தனியாக போயிருக்கலாமே..!

ஆம் போயிருக்கலாம்.

வெளி நாடுகளுக்குத் தனியாக பறக்கிறேன். 

ஆனால் உள்ளூரில் அது வாய்ப்பதில்லை.

ஏன்?

எனக்கும் தெரியவில்லையே…!


இத்தனை ஆண்டுகள் ஆசையும்

அந்த சூஃபிக்கவிதையை வாசிக்கவே முடியாதா

என்ற ஏக்கமும் தீர்ந்தது.

 நேற்றுதான் முதல்முறையாக

மும்பை ஹாஜி அலி தர்க்காவுக்கு போனேன்.


அந்தக் கடலின் மொழி.. 

இப்போதும் மாறவில்லை.

ஆனால் அது காயப்பட்டிருக்கிறது.

அதன் கம்பீரமும் நளினமும்

எந்திரமயமான வளர்ச்சி திட்டங்களால்

சிதைக்கப்படுகின்றன.

கவிதையின் மெளனமான அழுகையை

கேட்டிருக்கின்றீர்களா..?

நேற்று நான் கேட்டேன்.

எனக்கும் அழுகைதான் வந்த து.

ஆனால் அழுகின்றவருடன் சேர்ந்து அழுவதைவிட

அவர் கைகளைப்பிடித்துக் கொண்டு

மெளனத்தில் கரைவது உசிதம். 


சூஃபியின் மொழியுடன் நானும்.

எங்கள் இருவருக்கும் சாட்சியாக

எம் கடலும் கரும்பாறைகளும்.

கிளம்பி வரும்போது திரும்பிப் பார்க்கவில்லை



மக்ஃபியும் மெளலான ரூபியும்

வாழும் சூஃபிகளின் உலகத்தைக்

கடந்து வரும்போது

கால்களும் வலிக்கின்றன.

மெதுவாக  நடக்கிறேன்.

அலைகளும் பாறைகளும்

அங்கேயே இருக்கின்றன.

நான் மட்டும்?


“ உலகம் ஒரு கல்லறை. 

மரணம் 

அக்கல்லறையின் கதவுகளைத் திறக்கிறது.

சிறகுகள் இருப்பவர்கள் 

அதிலிருந்து பறந்து எழுகிறார்கள் .”

எப்போதோ எங்கேயொ வாசித்த சூஃபி கவிதையுடன்

நான் 

மீண்டும் ஜனக்கடலுக்குள் .

Sunday, October 16, 2022

காணாமல் போன கண்ணதாசனின் "சேரமான் காதலி"

 


கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’
காணாமல் போனது ஏன்?
கண்ணதாசனுக்கு சாகித்திய அகதெமி விருது
சேரமான் காதலி நாவலுக்காக.!
(இப்படியான சாகித்திய அகதெமி செய்த சேட்டைகள் நிறைய உண்டு)
அவ்வளவுதான்.
அதைப் பற்றி யாருமே பேசமாட்டார்கள்.
பிறகென்ன…?
 
யாருக்குத்தான் பிடிக்கும்!
 
 
உண்மையில் சேரனே அப்படி செய்திருந்தாலும்
அதைப் போயி கண்ணதாசன் எழுதி இருக்கலாமா!???
அதுதானே…
 
கதைப்படி மூன்றாம் சேரமான் பெருமாள் 
முடிசூட்டிக் கொள்ளும்போது
கண்ணதாசன் ஒரு கற்பனை காதலியை உருவாக்கினார்.
அவள் யூதப்பெண் யூஜியானா.
பதவியேற்கும்போது அவள் கர்ப்பவதி.
அரசன் பதவிக்கு அது ஆபத்து என்று நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
எனவே அவளை இஸ்ரேலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.
ஆனால் அதன் பின் சேரமானுக்கு இன்னொரு காதல் வருகிறது.
(வரக்கூடாதா என்ன?)
அரபுக்கப்பலில் வந்து இறங்கும் சலீமாவுடன் காதல்.
இப்போ சலீமா கதைப்பாத்திரம் உண்மையான வரலாறு.
சலீமாவை மணக்க அரசன் இசுலாமியராக வேண்டும்.
சலீமாவை அரசன் திருமணம் செய்து கொண்டால்??
இது யூதக்காதலியை விட ஆபத்தானது என்று
நம்பூதிரிகள் நினைக்கிறார்கள்.
உள் நாட்டு கலகம் வருகிறது.
பாண்டியர்கள் எதிர்க்கிறார்கள்.
அரசனைக் சலீமாவிடமிருந்து விடுவிக்க
யூதக்காதலியை மீண்டும் வரவழைக்கிறார்கள்.
கதையில் திருப்புமுனை…
யூதக்காதலி அரபுக்காதலியை விரட்டிவிடவில்லை.
அரசனின் இரு காதலியரும் தோழியர் ஆகிவிடுகிறார்கள்.
 
கதையின் முடிவில் 
சேரமான் தன் அரசை தன் உடன் பிறந்த சகோதரிகள், தம்பி மற்றும் உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு 
 சலீமாவுடன் கப்பல் ஏறி அரபு நாட்டுக்கு போவதாக முடியும்.
 
அதாவது சேரமானின் காதலி சலீமா..
சலீமாவுக்காக தன் அரியணையை விட்டுவிட்டார் சேரமான்.
கதையில் குலசேகர ஆழ்வாரின் கதை உண்டு.
வைணவம் உண்டு.
கதையில் கண்ணதாசனின் மெய்யியல் 
அதீத புனைவுகள் உண்டு.
 
சேரமான் காதலியில் சேரனின் காதல் வெற்றி பெறுகிறது.
ஆனால்.. என்ன இருந்து என்ன…!
கண்ணதாசனைக் கொண்டாடுபவர்களுக்கும்
கதையின் முடிவு உவப்பானதாக இல்லையோ.
ஆகையினால்,
கண்ணதாசனின் சேரமான் காதலி
காணாமல் போய்விட்டாள். 
 
17 அக்டோபர் , கண்ணதாசன் நினைவு நாள்.
காணாமல் போன
அவருடைய “சேரமான் காதலி”யையும் வாழ்த்துவோம்.
காதல் வாழ்க
சேரமானின் காதல் வாழ்க.
சேரனின் காதலியர் வாழ்க.