Thursday, October 20, 2022

கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது!?

 “கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது” 

-அறிஞர் அண்ணா.

(அண்ணா , திராவிட நாடு இதழ் , 06/1/1946)

இந்த வரிகளை அறிவார்கள். ஆனால் எத்தனை பேருக்கு

இதன் வரலாறு தெரியும்???

யாருமே பேசியதில்லை. ஏன்?!!!

ராஜாஜியை விவாதத்திற்கு அப்பாற்பட்ட   ஞானியாகவும் உத்தமராகவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டி எழுப்பியதில் வெற்றி பெற்றிருக்கின்றன. 

ராஜாஜி?!!!

1942ல் அலகாபாத்தில் கூடிய அகில இந்திய காங்கிரசில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் சகல பொறுப்புகளிலிருந்தும் உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொண்டார். 


வெள்ளையனே வெளியேறு காங்கிரசின் ஆகஸ்டு புரட்சி பற்றி எரியும்போது தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். ராஜாஜி கல்கத்தாவின் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ‘ஆகஸ்டு புரட்சியைக்’ கேலி செய்து பேசினார். 


இந்திய சுதந்திரம் நெருங்கியது என்றவுடன் ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கு காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோடு பகுதியிலிருந்து ‘ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது” 

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. அது எப்படி தனக்குத் தெரியாமல் 

திருச்செங்கோடு தேர்தல் நடந்தது என்று திகைத்தார். 

1945 அக்டோபர் 31ல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ் நாடு காங்கிரசுகமிட்டி ‘ராஜாஜியை தமிழ் நாடு காங்கிரசுக்குள் சேர்க்க கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் திருச்செங்கோடு கபட செயலுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரசு ராஜாஜி ஆகஸ்டிலேயே காங்கிரசில் சேர்ந்துவிட்டாரே என்று மெளலானா ஆசாத்தை விட்டு அறிக்கை வெளியிட வைத்தது. காமராஜர் ஏமாற்றப்பட்டார். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “ கோடு உயர்ந்தது, குன்ற,ம் தாழ்ந்தது “ என்றார்.

(கோடு – திருச்செங்கோடு, குன்றம் – திருப்பரங்குன்றம்)


 இதுமட்டுமல்ல, காந்திக்கும் காமராசருக்கும் நடுவில் கூட மனஸ்தாபங்களுக்கு காரணமாக ராஜாஜியே இருந்திருக்கிறார். காந்தியார் தமிழ் நாடு வந்திருந்தப்போது ராஜாஜி கூடவே இருந்ததும் தமிழ் நாடு காங்கிரசு தலைவராக இருந்த காமராஜர் காந்தியிடம் எதையும் உரையாட முடியாத சூழலும் ஏற்பட்டிக்கிறது . காந்தியும் காமராசரைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்: அரசியல் நட த்துகிறார்கள் என்று காமராஜரை மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்து காமராஜர் காங்கிரசிலிருந்து பதவி விலக தயாராகும் அளவுக்குப் போனார் என்பதுதான் உண்மை. ஆனால் காந்தி ஒரு மழுப்பலான அறிக்கையை தன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டு காமராஜரை சமாதானப்படுத்தினார். 


 1937ல் இந்தி திணிப்பு.. காங்கிரசு கட்சியின் விருப்பத்திற்கு மாறாகவே தன் விருப்பத்தின் படி இதைச் செய்த அதே ராஜாஜி அவர்கள்தான் 1957ல்

‘ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்று எழுதினார்.



ராஜாஜி தன் மொழிக்கொள்கையில் பல்டி அடித்தார் என்று எந்த ஊடகமும் எந்தப் பத்திரிகையாளரும் இதுவரை எழுதியதாகத் தெரியவில்லை.

இதுதான் ராஜாஜி அவர்களின் பத்திரிகை ஊடக பலம்.

அன்று மட்டுமல்ல இன்றும் 

“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது “ இதனால்தான்.

No comments:

Post a Comment