Wednesday, October 19, 2022

கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை

 கடலுக்கு நடுவில் ஒரு சூஃபி கவிதை




நேற்றுதான் அக்கவிதையின் தரிசனம்

என்ன ஒரு வாழ்க்கை இது!

பிறந்ததும் வளர்ந்ததும் இந்த மண்ணில்தான்.

வாழ்க்கையில் எத்தனையோ முறை

அந்தக் கடலை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே

பயணித்திருக்கிறேன்.

போகவேண்டும்..

எப்படியும் அந்தக் கவிதை அருகில்

அந்தக் கடலின் மொழியை

கரும்பாறைகளுடன் சேர்ந்து நானும்

வாசிக்க வேண்டும்..

அப்பாவிடம் கேட்கவே பயம்!

அப்பா அழைத்துச் செல்லவில்லை.

சங்கரிடம் கேட்கும்போதெல்லாம்

“IAM NOT INTERESTED”

நேற்றும் சங்கர் சொன்னது அதே வரிகள்தான்.

மும்பையை சுற்றிப்பார்க்க வரும்

உறவுகளும் தோழர்களும்

மகாலட்சுமிக்குப் போகும்போது கூட

சாலையோரத்தில் அழைக்கும் 

அக்கடலின் அழகைக் கண்டு கொள்வதில்லை.

தனியாக போயிருக்கலாமே..!

ஆம் போயிருக்கலாம்.

வெளி நாடுகளுக்குத் தனியாக பறக்கிறேன். 

ஆனால் உள்ளூரில் அது வாய்ப்பதில்லை.

ஏன்?

எனக்கும் தெரியவில்லையே…!


இத்தனை ஆண்டுகள் ஆசையும்

அந்த சூஃபிக்கவிதையை வாசிக்கவே முடியாதா

என்ற ஏக்கமும் தீர்ந்தது.

 நேற்றுதான் முதல்முறையாக

மும்பை ஹாஜி அலி தர்க்காவுக்கு போனேன்.


அந்தக் கடலின் மொழி.. 

இப்போதும் மாறவில்லை.

ஆனால் அது காயப்பட்டிருக்கிறது.

அதன் கம்பீரமும் நளினமும்

எந்திரமயமான வளர்ச்சி திட்டங்களால்

சிதைக்கப்படுகின்றன.

கவிதையின் மெளனமான அழுகையை

கேட்டிருக்கின்றீர்களா..?

நேற்று நான் கேட்டேன்.

எனக்கும் அழுகைதான் வந்த து.

ஆனால் அழுகின்றவருடன் சேர்ந்து அழுவதைவிட

அவர் கைகளைப்பிடித்துக் கொண்டு

மெளனத்தில் கரைவது உசிதம். 


சூஃபியின் மொழியுடன் நானும்.

எங்கள் இருவருக்கும் சாட்சியாக

எம் கடலும் கரும்பாறைகளும்.

கிளம்பி வரும்போது திரும்பிப் பார்க்கவில்லை



மக்ஃபியும் மெளலான ரூபியும்

வாழும் சூஃபிகளின் உலகத்தைக்

கடந்து வரும்போது

கால்களும் வலிக்கின்றன.

மெதுவாக  நடக்கிறேன்.

அலைகளும் பாறைகளும்

அங்கேயே இருக்கின்றன.

நான் மட்டும்?


“ உலகம் ஒரு கல்லறை. 

மரணம் 

அக்கல்லறையின் கதவுகளைத் திறக்கிறது.

சிறகுகள் இருப்பவர்கள் 

அதிலிருந்து பறந்து எழுகிறார்கள் .”

எப்போதோ எங்கேயொ வாசித்த சூஃபி கவிதையுடன்

நான் 

மீண்டும் ஜனக்கடலுக்குள் .

1 comment: