Wednesday, September 30, 2015

வட்டிவிகித குறைப்பு.. யாருக்கு லாபம்?




My name is Raghuram Rajan, and I do what I do
There has been pleading demands and threats
(for a  rate cut).. Everybody and his uncle has a theory
on how to run the economy.. There are savants and
idiot savants available to give you advice...

இப்படியான பஞ்ச் டயலாக் வசனங்களுடன் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு
இன்றைய தினசரி (ஆங்கிலம்) பத்திரிகைகளில் ஹீரோவாக
வலம் வருகிறார் இந்திய ரிசர்வவங்கி கவர்னர் ரகுராம் ராஜன்.
பொதுவாக 25 பைசா வட்டி விகிதக்குறைப்பு இருக்கும். ஆனால்
ரகுராம் 50 பைசா வட்டிவிகிதத்தைக் குறைத்துவிட்டதாக
அறிவித்தவுடன் நம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்களும்
அவசரம் அவசரமாக இந்த வட்டிவிகிதத்தின் பயன்பாடு வங்கி
வாடிக்கையாளருக்கு/பொதுமக்களுக்கு  உடனடியாக போய்ச்சேர
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
பொதுஜனங்களுக்கு இதனால் என்ன பயன்? என்ற கேள்விக்கு
எவருமே நேரடியாக பதில் சொல்வதில்லை. அப்படியே சொன்னாலும்
புரிந்து கொள்ளும்படி சொல்வதே இல்லை!
அதாவது இனிமேல் வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டிவிகிதம்
50 பைசா குறைகிறது. அதாவது நீங்கள் வீட்டு லோன் வட்டிவிகிதம்
9.50% என்றால் இனி வங்கிகள் 50 பைசா குறைத்து 9% வட்டியை
உங்களிடம் வசூலிக்கலாம். அதனால் உங்கள் கடனுக்கான மாத தவணையும்
குறைகிறது. இப்படியாக housing loan, car loan. domestic purpose loan, house repairing loan, study loan என்று நாம் வங்கியில் வாங்கும்
கடனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வட்டிவிகிதக் குறைப்பு..
அதாவது எல்லோரும் கடன் வாங்குங்கள், நீங்கள் கடன் வாங்கிக்கொண்டே
இருந்தால் தான் நுகர்வோக் மார்க்கெட்டில் வெளிநாட்டினர் தங்கள் பணத்தைக் கொண்டுவருவார்கள். ரியல் எஸ்டேட் என்ற பெருமுதலாளிகள்
தங்கள் கறுப்பு பணத்தைக் கொட்டி பெருநகரங்கள் எங்கும் அடுக்குமாடிக்
கட்டிட குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். 30 லட்சத்திற்கும்
குறைவான முதலீடு செய்து கட்டப்படும் அடுக்குமாடி ஒரு வீட்டின் விலையை அவர்கள்  1.25 கோடி விலை நிர்ணயித்திருக்கிறார்கள். அப்படி
அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் வீடுகள் வாங்குவதற்கு ஆளில்லாமல்
அப்படியே இருக்கின்றன. அதை எல்லாம் இனி இந்த வட்டிவிகித
குறைப்பு ஆசை யில் அந்த விளம்பரங்களில் பொதுமக்கள் வாங்க வேண்டும்.
அப்படி வாங்கும் போது சிமெண்ட் முதல் எலெக்ட்ரிக் பல்ப் வரை வியாபாரம் கொடி கட்டிப் பறக்கும். மார்க்கெட் தேக்கநிலையிலிருந்து
மீளும். நினைவிருக்கிறதா... ஜப்பானில் சுனாமி தாக்கியதில் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மனநிலையில் அவர்கள் பொருட்கள் வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டார்களாம். உடனே ஜப்பானிய அரசாங்கம்
தன் மக்களிடம் கேட்டுக்கொண்டது.. எப்போதும் போல பணத்தைச் செலவு
செய்யுங்கள்.. அப்போதுதான் நாட்டின் பொருளாதரம் சீராக இருக்கும் என்று.
ஓர் அரசாங்கம் தன் மக்களை அதிகமாகக் கடன் வாங்கச் சொல்வதும்
செலவு செய்யச் சொல்வதும்  நம் நாட்டில் கார்ப்பரேட்டுகள் தவிர
அனைத்து மக்களுக்கும் நுகர் கலாச்சாரத்தின் எதிர்விளைவுகளை மட்டுமே
கொடுக்கும். அதன்பின், நம் நிதியமைச்சர்கள் இந்தியப் பொருளாதரம்
அமெரிக்க பொருளாதரம் போன்றதல்ல, எம்மக்கள் சேமிக்கும் மனப்பான்மைக் கொண்டவர்கள். என்றெல்லாம் ஆபத்து வரும்போது
பேசுகின்ற பெருமைகள் காலாவதியாகிவிடும்.
இந்த வட்டிவிகிதக்குறைப்பில் பொதுஜனங்களுக்கு கிடைக்கும்
ஆதாயம் என்பது கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒன்றுமில்லை.
ஏனேனில் அவர்களின் கடன் தொகைக்களுக்கான வட்டிவிகிதம்தான்
குறைந்திருக்கிறதே தவிர அவர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டிவிகிதம்
கூடவில்லை. மாறாக அதுவும் குறைகிறது.
அதாவது ஒருவர் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் வாங்கும் கடனுக்கு வட்டி குறைவதால்
அவர் வங்கிக்கு கொடுக்கும் வட்டித்தொகையும் குறையும். அதே நேரத்தில்
அவர் தன்னுடைய சிறுசேமிப்புகளுக்கு
(PPF, Fixed deposit, recurring deposit, post  office savings accout,
NSC, )
இதுவரை வங்கி./ போஸ்டாபீஸ்களிலிருந்து வாங்கிக்கொண்டிருந்த வட்டித்தொகையும் குறைக்கப்படுகிறது!!!!
இதனால் பெரும்பாதிப்புக்குள்ளாவது மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண
பொதுமக்கள் தான்.
பொதுஜனம் வாங்கும் கடன் அதிகபட்சமாக 1 அல்லது இரண்டு கோடிகள்
இருக்கும். ஆனால் கார்ப்பரேட்டுகள் வாங்கும் கடன் குறைந்த தொகையே
100 கோடி இருக்கும். எனவே இந்த வட்டிவிகிதக் குறைப்பு
யாருக்கு அதிக பயன்பாட்டைத் தரப்போகிறது?
உங்களுக்கும் எனக்குமா ..? அல்லது ரிலையன்ஸ், லோதா,
ஹீரநந்தானி , டாடா, டோஸ்தி இத்தியாதி ரியல் எஸ்டேட்
பெருமுதலைகளுக்கா?
அவர்கள் சந்தையில் கொண்டு நிரப்பும் கார், வீடு, வீட்டு
பொருட்கள் எல்லாம் வாங்க பொதுஜனத்திற்கு கடன் கொடுக்கப்படுவதால்
மார்க்கெட் ஓஹோ என்று ஜொலிக்கும்.

மாடு வாங்க லோன் கேட்டால்
மாட்டேன் என்றவர்கள்
காரு வாங்க லோன் கொடுக்க
காத்துக்கிடப்பார்கள்..

ரகுபதி ராகவ ரகுராமா..
மோதி ராஜா ரகுராமா..

Tuesday, September 15, 2015

முமபை குண்டுவெடிப்பு தீர்ப்புநாள்..

மும்பை குண்டுவெடிப்பு - தீர்ப்புநாள்
-------------------------------------
குண்டுவெடிப்பில் மகனை இழந்த என் உறவினர்
மனம் திறக்கிறார்கள்..நானும் தான்..

2006 ஜூலையில் மும்பையில் மின்சாரவண்டிகளில்
தொடர்குண்டுவெடிப்பு .. அச்சம்பவத்தில் குற்றவாளிகளாக
அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 12 பேருக்கு
இன்று தீர்ப்புநாள்.
அவர்கள் குற்றவாளிகளா இல்லையா
உண்மையான குற்றவாளி யார் ..?
எய்தவன் இருக்க அம்புகளை உடைத்து என்ன பயன்?
இம்மதக்கலவரங்களுக்கு வித்திட்டது யார்?
எண்ணிலடங்கா கேள்விகளுக்கு நடுவில்
அக்குண்டுவெடிப்புல் தன் ஒரே மகனைப் பறிகொடுத்த
எங்கள் குடும்பத்தின் (கணவர் சங்கரின் அண்ணன் ம்கள் வழி பேரன் - பிரபு)
திரு இராமசந்திரன் - சுசிலா இணையர் இன்றைய தினத்தந்தி நாளிதழில்
(மும்பை பதிப்பு)
"கொலைக்கு கொலை தீர்வாகாது.
தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை வேண்டாம்.
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுத்தாலும்
எங்கள் மகன் எங்களுக்குத் திரும்ப கிடைக்கப்போவதில்லை"
என்று முதல் முறையாக மனம் திறந்து தங்கள் கருத்தைப்
பதிவு செய்திருக்கிறார்கள்.

அன்று பேரன் பிரபுவின் கடைசிக்காரியங்கள் அனைத்தும்
முடிந்தப் பின் போரிவலியிலிருந்து டிரெயினில் பயணித்த
என் அனுபவம்.. இன்றும் அந்தக் கண்கள் ..
என்னைப் பின் தொடர்கின்றன..


அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள்
என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை.
போரிவலியில் கொட்டும் மழையில் டிரெயினுக்காககாத்திருந்தோம்.
போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை.
ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன்.
தலையில் வெள்ளை நிற தொப்பி,இளம்தாடி,
நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள்,இளைஞன் அவன்..

அவனருகில் , அன்று நானிருந்த மனநிலையில்
பக்கத்தில்  உட்கார முடியவில்லை. ,
மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து 
வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். 
அவன் விழிகள் அன்றுஎன்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி.
என்னையும்
என் அறிதல், புரிதல், எழுத்து
எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை.
கிழிந்து போனது நானும்என் எழுத்துகளும்
என் மனித நேயமும்.
அத்தருணத்தில்
என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு
இந்தப் பிறவியில் ஆறாது.

இத்தீர்ப்பு நாளில் தீர்ப்பு எப்படி வரப்போகிறது..
எனக்குத் தெரியாது.
ஆனாலும் இதோ இத்தருணத்தில்
முகவரி அறியாத அந்த இளைஞனிடம்
நான் மன்னிப்பு கேட்கிறேன்..
உன் அருகாமையை விலக்கி எழுந்த அத்தருணத்தில்
என்னை நீ பார்த்தப் பார்வை.. 

கண்ணீரில் கறையாத இரத்தக் கறைகளுடன்
,தண்டவாளத்திலும் தண்டவாளத்திற்கு வெளியிலும்.
இழப்புகளுக்காக அழும்போதெல்லாம்
அந்த இளைஞனின் அந்தக் கண்கள்
என்னருகில் வருகின்றன..
எதையோ சொல்ல வருகிறது..
அந்த மெளனத்தை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
(இதைப் பற்றிய விரிவான பதிவு செய்திகளின் அதிர்வலைகள் என்ற
என் புத்தகத்தில் ..)

Thursday, September 10, 2015

எழுத்து அறக்கட்டளை அழைப்பிதழ்



நூ ல்  வெளியீட்டுக்கு வாருங்கள் நண்பர்களே 

Sunday, September 6, 2015

எழுத்தாளர் இமயமும் நீலிமாவும்




அரசியல் சமூகப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்படும் படைப்புகள் அப்பிரதேசத்தின் மக்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருக்கும்.
அவ்வகையில் அண்மையில் வாசித்த இரு புதினங்கள் மிகவும்
முக்கியமானவை. ஏனேனில் இக்கதைகளின் கருப்பொருள் கற்பனையோ பொழுதுப்போக்கோ அல்ல. சமகால் சமூக அரசியல் பின்புலமும் கருப்பொருளும் கொண்டு எழுதப்பட்டவை. 
கோட்டா நீலிமா ஆங்கிலத்தில் எழுதிய shoes of the dead
பெருகிவரும் விவசாயிகளின் தற்கொலையைப் பற்றி பேசுகிறது.
 இன்னொரு புத்தகம் எழுத்தாளர் இமயம் தமிழில் எழுதிய சாவுச்சோறு.
தலித்திய கதைக்களத்தில் இன்றைய சாதி சமூகத்தை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 

நீலிமா விவசாயிகளின் தற்கொலை பிரச்சனையை
விவசாயிகளின் வாழ்வியலிலிருந்து விலகி ஒரு பார்வையாளராக ஓர் ஆய்வாளராக பார்க்கிறார். அப்பார்வை ஒரு மூன்றாம் மனுஷியின் பார்வை. அதனால் தான் விவசாயி கதை மாந்தரின் உணர்வுகளுக்குள் வாழ்வதும் அதை அனுபவிப்பதும் அவருக்கு சாத்தியப்படவில்லை.
ஆனால் பெண் கதை மாந்தர்களைக் கொண்டே  சாவுசோறு கதையை எழுதி இருக்கும் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு
அப்பெண்கள் அனுபவிக்கும் சாதிக்கொடுமையும், அவர்கள் பிரச்சனையும் அழுகையும் பெருமூச்சும் அவருக்குள் இருந்து எழுதிச் செல்கின்றன.
படைப்பு ஓர் உன்னதமாகிவிடுகிறது இதனால் தான்.
ஆனாலும் நீலிமாவின் நாவல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதால் எட்டி இருக்கும் பரந்துப்பட்ட வாசக தளத்தை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் மிகச்சிறந்த இக்கதை,
தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஒரே காரணத்தினால்
தமிழ்நாட்டுக்குள் மட்டுமே ..
பூங்கோதைகள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவர்கள் அல்லர்.
அவர்களின் பிரச்சனைகளும் தான்.
 (இரு கதைகளையும் ஒப்பிட்டு எழுதிய கட்டுரை புதியகோடங்கிக்கு அனுப்பி இருக்கிறேன்.)

Saturday, September 5, 2015

ஏன்..? ஏன் இந்தப் பதட்டம்!!







திமுக வட்டத்தில் ஏன் இந்தப் பதட்டம்?
இன்னும் தேர்தல் வரவில்லை. கூட்டணிக்கான காலம் கனியவில்லை.
கருத்து கணிப்பு எப்பொதும் போல நடப்பது தானே.
அதற்கு ஒரு பதில் சொல்லிவிட்டு அமைதியாக 
அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்திருக்க வேண்டியதுதானே.
 ஏன் இவ்வளவு பதட்டம்?
யார் இம்மாதிரி ஒரு பதட்ட நிலையை உருவாக்குகிறார்கள்.?
மீடியாக்காரர்களை குறை சொல்லாதீர்கள்.
 அவர்கள் எங்கே தேன்வழியும்,புறங்கையால் நக்கலாம் என்று அலைவதாகவே வைத்துக் கொள்வோம்.
ஏன் உங்க கட்சி, உங்க வீட்டு பிரச்சனையை நீங்களே 
ஆள் ஆளுக்கு ஊதி ஊதி உடைக்கறீங்க!
இந்தியா முழுவதும் இருக்கும் சகல அரசியல் கட்சிகளிலும், சிறியது, பெரியது என்ற வேறுபாடின்றி வாரிசு அரசியல் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் திமுக வைப் போல வாரிசு அரசியலுக்குள் போட்டி அரசியல் 
வேறு எந்த அரசியல் கட்சியிலும் இல்லை.
சொல்லக்கூடும் எல்லோருமே மதுரைக்கார பெரிய அண்ணன் தான் காரணம் என்று.
மதுரைக்காரர் இப்படித்தான் சொல்வார் என்று வரிப்பிசகாமல் அன்றாடம் செய்தி கேட்கும்/வாசிக்கும் பொதுஜனம் அறிந்ததுதானே. மேலும் அவர் தற்போது திமுக
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவர் சொல்வதற்கு இவர்கள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
திமுக தலைவரின் மகன் என்பதாலா?
திமுக என்ற பல இலட்சம் தொண்டர்களைக் கொண்ட அரசியல் கட்சி ,கலைஞர் குடும்பத்தின் அசையா சொத்தா.?.
வாரிசுகளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க!
இந்தப் பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துதான் இவர்கள் பேசுகிறார்களா ?
என்ற பதட்டத்தில் தற்போது திமுக அனுதாபிகள்!!
. அவர்களைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது..
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருக்கும் டி கே எஸ் இளங்கோவன் அவர்களின் பேட்டியைப் பற்றி கருத்து சொன்ன திமுக தலைவர் அவர்கள்
"டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.
என்ன சொல்ல வருகிறார் திமுக தலைவர் ? டி கே எஸ் இளங்கோவன் கூறாதாதையும் டைம்ஸ் ஆஃப் இந்தியா அவர் சொன்னதாக சொல்கிறதா? டி கே எஸ் இளங்கோவன் கூறியதுடன் கூறாததும் அப்பேட்டியில் இருக்கிறது என்று சொல்ல வருகிறாரா..! 
இது எவ்வளவு ஆபத்தானது..
இதற்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா தான் பதில் சொல்லி ஆக வேண்டும்!
மேலூம் திமுக தலைவரும் செயலாளரும் சேர்ந்து ஏன் கருத்து கணிப்பில் திமுக வில் மட்டும் இரண்டு பேரின் பெயர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன என்று கேட்கிறார்கள். இன்னும்  ஒரு படி மேலே போய் அதிமுக வில் இருமுறை பதிலி முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களின் பெயரையும் அதிமுக முதல்வர் வேட்பாளர் கருத்துகணிப்பில் ஏன் சேர்க்கவில்லை
என்று கேட்கிறார்கள். இருவருமே இப்படி சொல்வதைக் கேட்கும் போது 'அசத்தப்போவது யாரு' மாதிரி இருக்கு..
பாவம் பன்னீர்செல்வம்.. இம்மாதிரி எல்லாம் அதிமுக வில் ஒரு கனவு கூட வந்திருக்காது.
அதெல்லாம் விடுங்கள்.. முகநூலில் கூட THALAPATHY FOR CM என்று தளபதியின் ஆதரவாளர்கள் ஒரு கணக்கு ஆரம்பித்து இயங்கிக் கொண்டிருப்பது தளபதிக்கு தெரியாதா என்ன?
ஏற்கனவே திமுக தலைவர் கலைஞர் தான் திமுக வின் முதல்வர் வேட்பாளார் என்றால் அதை அடிக்கடி தன் வார்த்தைகளால் தளபதி அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் 
என்றால்.. எதற்காக தளபதி முதல்வர் என்ற கருத்து பரப்புரை நடந்துக் கொண்டிருக்கிறது.?
எனக்கு இதெல்லாம் தெரியாது என்றும் பதட்டத்தில் சொல்லிவிடாதீர்கள்.
உங்கள் தொண்டர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அதன் அடுத்தவரி வாசிக்கப்படும் என்பதையும் நீங்கள் சொல்வதற்கு முன்பே நினைவுப்படுத்திவிடுகிறேன்.
ப்ளீஸ்.. பதட்டப்படாதீர்கள்.. வேறு எங்களால் என்ன சொல்லமுடியும்?

Friday, September 4, 2015

மீண்டும் மீண்டும் மகாபாரதம்

மீண்டும் மகாபாரதம்
------------------------------



விஜய் டிவியில் மீண்டும் மகாபாரதம் ஓடிக்கொண்டிருக்கிறது.
அது என்ன மீண்டும் மகாபாரதம்..?
இது அதே மகாபாரதமா அல்லது வேற மகாபாரதமா?
சரி, மீண்டும் மகாபாரதம் தொடர் முடிந்தவுடன்
மீண்டும் மகாபாரதம் ஒலிபரப்பினால் ..
"மீண்டும் மீண்டும் மகாபாரதம் " என்று சொல்வார்களோ..

பிறகென்ன..
கருத்து கணிப்பு மீண்டும்  மீண்டும் வரும்போதெல்லாம்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் நடக்கத்தானே செய்கிறது..!
நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

இத்துடன் இந்த மகாபாரதத்தை முடித்துக்கொள்கிறேன்.
யாரு துரியோதனன், யாரு தருமர் , யாரு கிருஷ்ணர்,
யாரு பீஷ்மர், யாரு விதுரன், யாரு அர்ச்சுணன்..
இப்படி எல்லாம் நீங்க கேட்க ஆரம்பிச்சிட்டா..
நான் என்ன பண்றது..?!!!
மீண்டும் மகாபாரதம்.. திங்கள் முதல் வெள்ளிவரை..
கதையும் வசனமும் ஏற்கனவே தெரிந்ததுதான் என்பதால்
மீண்டும் மீண்டும் மகாபாரதம் அரங்கேறும்போது
எந்த் டென்ஷனும் இல்லாம..
மீண்டும் மீண்டும் மகாபாரதம் பார்க்கலாம்.

Tuesday, September 1, 2015

MANJIHd , THE MOUNTAIN MAN





இத்திரைக்கதை ஓர் உண்மைக்கதை.
மான்ஞ்சி நாம் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்தவன்.
ஒரு மலையை ஒரு தனிமனிதன் தன் மனைவியின் அகால
மரணத்திற்குப் பின் தனியாக உடைத்து எடுக்கிறான்..
ஏற்கனவே இதைப்பற்றி நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்.
தசரத் மன்ஞ்சியாக நடித்த நவஷுதின் சித்திக் மிகச் சிறப்பாக
நடித்திருக்கிறார். குறிப்பாக மன்ஞ்சி மக்களின் பேச்சுமொழி,
உடல்மொழி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இருப்பது
பாராட்டுதலுக்குரியது. அவன் மனைவியாக பகுனியா பாத்திரத்தில்
நடித்திருக்கும் ரத்திகா அப்தே அம்மண்ணின் பெண்முகத்தைப்
ப்ரதிபலிக்காமல் ஒரு பாலிவுட் கதாநாயகி முகத்தையே
காட்டி , முதல் குளறுபடியைச் செய்திருக்கிறார் இயக்குநர்.

கதைத் துண்டு துண்டாக , ஒரு காட்சியிலிருந்து இன்னொரு
காட்சிக்கு தாவி இருக்கிறது. ஒப்பனை, காட்சி அமைப்பு என்று
கவனம் செலுத்த வேண்டிய பகுதியிலும் கவனம் செலுத்தவில்லை
இயக்குநர் கேத்தன் மேக்தா.

சினிமா பார்த்தப்பிறகு சில காட்சிக்ள் எதற்காக, எந்த
நோக்கத்திற்காக கதை ஓட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது
என்ற கேள்வி பார்வையாளருக்கு ஏற்படுகிறது

காலில் செருப்பு கூட அணிவதற்கு தடை செய்யப்பட்ட
சாதிய அமைப்பு கொண்ட கிராமத்தில், மிகவும் ஒடுக்கப்பட்ட
சாதிப் படிநிலையில் வாழ்கிறான் கதையின் நாயகன் மான்ஞ்சி.
அவன் மனைவியை ஊர் சந்தையில் வைத்து பண்ணையாரின்
மகன் கேலி செய்து நெருங்கும் நேரத்தில் மான்ஞ்சி திரைப்பட
கதாநாயகர்களுக்கு உரிய அதே அந்தஸ்த்துடன் ஓடிவந்து
மனைவியின் கையைப் பிடித்து இழுத்துவனை அடித்து உதைக்கிறான்.
அதற்கு பலிவாங்க, அவன் அன்றிரவு அடியாட்களை அழைத்துக்கொண்டு
இவர்கள் குடியிருப்புக்கு வந்து தசரத மான்ஞ்சி யைத் தேடுகிறான்.
அவன் அண்ணனை இழுத்துப்போட்டு அடிக்கிறான். மான்ஞ்சி அப்போது
மனைவியுடன் ஊடல் கொண்டு இருவரும் குடியிருப்புக்கு பின்னால்
இருக்கும் மலையடியில் ஓடிப்போய் ஊடல் தீர்க்கிறார்கள்..
ஆனால், வீட்டில் மான்ஞ்சி இல்லை என்று சொன்ன இன்னொருவனின்
மனைவியை அவர்கள் இழுத்துப் போகிறார்கள், அன்றிரவு பெண்டாள.
மறுநாள் விடியும் போது அவள் குளத்தில் பிணமாக மிதக்கிறாள்.
மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு வீட்டுககு வரும் மான்ஞ்சியின்
நண்பன்,, இறந்துப்போனவளின் உடலை வீட்டுக்குள் வைத்துவிட்டு
வெளியில் வந்து அந்த குடிசை வீட்டுக்கு தீ வைக்கிறான்.
அவனும் தீ போல கிளம்பி செல்கிறான்.
கதை விறுவிறுப்பாக இருக்கிறது. சாதிக்கொடுமை, அதனால் பாதிக்கப்படும்
பெண்கள் என்று இந்தியாவின் சாதிய முகத்தை, கிராமங்களில் இன்றும்
நிலவும் சாதிப்படிநிலையை, ஆண்ட சாதிகளின் ஆணவத்தை
இக்காட்சி மனதில் பதிய வைக்கிறது.
ஆனால் இக்காட்சியின் தொடர்ச்சியாக கதையின் பிற்பகுதியில்
வரும் வசனம் நெருடலாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாஞ்சியின்
நண்பன் தான் அந்த ஊருக்குள் ஊடுருவும் நக்சலைட்டாக
இருக்கிறான். தன்னையும் தன் மக்களையும் கொடுமைப்படுத்திய
பண்ணையாரை இழுத்து வந்து துப்பாக்கி முனையில் ஊர் மக்கள்
நடுவில் தூக்கிலிடுகிறான். அப்போது கதையின் நாயகன் மூலமாக
நக்சலைட்டுகளை நோக்கி ஒரு வசனம்..
"உன் துப்பாக்கியால் என்ன செய்யமுடியும்?
மலையைப் பிளந்து ரோடு போட முடியுமா ? " என்று கேட்கிறது.
(யாரைத் திருப்திப்படுத்த இந்த வசனமோ?)

பாதிக்கப்பட்டவர்கள் தான் தீவிரவாதத்தை முன்னெடுக்கும் நக்சலைட்டுகளாக  மாறி இருக்கிறார்கள்
என்ற அடிப்படை கருத்தை விளக்க வந்த ஒரு கதாபாத்திரத்தை
நோக்கி கதையின் நாயகன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பதன்
மூலம் சமூக மாற்றங்களுக்கு எடுக்கப்படும் தீர்வுகளும்
வழிமுறைகளும் கேலிக்குரியதாகிறது. காந்தியின் அஹிம்சை,
சாத்வீக முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது
என்ற கருத்தை வலியுறுத்த இப்படி சொல்வதாக வைத்துக்
கொண்டாலும் கதையில் அதற்கான தேவை இல்லை.

மாஞ்சியின் காதலை ஒரு சமுக மாற்றத்திற்கான அடையாளமாக,
ஒரு தனிமனிதன் ஒரு மலையையே பிளந்து சாலை அமைக்க
முடியும் என்றால் மனிதர்கள் சேர்ந்து சாதி என்ற பெருமலையை
உடைப்பதும் தகர்ப்பதும் பிளந்து அதனூடாக பாதை அமைத்து
பயணிப்பதும் சாத்தியம் தான் என்று குறியீடாகி இருக்க
வேண்டிய காட்சிகளை எப்போதுமே திரைப்படங்கள்
காட்டுவதற்கு தயங்குகின்றன.
ஒடுக்கபப்ட்ட மான்ஞ்சியின் தன் வரலாற்று கதை கூட
ஒரு காதலின் அடையாளமாக குறுகிப்போயிவிடுகிறது.

தசரத்மாஞ்சி மலைப் பிளந்தது காதலுக்காக மடடும்தான்,
அதை வர்க்கப் போராட்டமாகவோ சாதியத்திற்கு எதிரான்
போராட்டமாகவோ பார்த்துவிடக் கூடாது என்பதில்
இன்றைக்கும் எல்லோரும் கவனமாகத்தான் இருக்கிறார்கள்.