Friday, July 15, 2011

பெண்பால் ஒவ்வாமை



பசுவுக்குப் பூஜை
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்
தொல்காப்பியன் அறியாத
பால்வேற்றுமை



என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை என்ற அதிர்ச்சிதரும் செய்தியும் அச்செய்தி குறித்து வந்துக் கொண்டிருக்கும் எதிர்வினைகளும் மறுவினைகளும் மருத்துவ துறை மீது நமக்கிருக்கும் ஒரு சில நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்துகிறது. இந்தச் செய்தி தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் தரும் செய்திகள் ஒரு மாஃபிய கும்பலின் அதிகார வளையத்திற்குள் மருத்துவமும் சிக்கிக்கொண்டு விட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சொத்துடமை சமுதாயம் ஒவ்வொரு ஆணுக்கும் தன் உதிரத்தில் உதித்த வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துடமையாக வேண்டும் என்ற எண்ணத்தில் திருமண உறவு, பெண்ணுக்கு கற்பொழுக்கம் என்று சில சமூகக்கட்டுப்பாடுகளை ஏற்படுத்திய போதும் கூட பெண்பால் ஒவ்வாமை வளர்த்தெடுக்கப்படவில்லை. போரில் ஆண்களை இழப்பதும் சிசு மரணங்களும் மிகவும் அதிகமாக இருந்தக் காலத்தில் ஒரு பெண் ஆண்குழந்தையைப் பெற்றெடுப்பது அவளுக்கான கட்டாயமாக மட்டுமல்ல சமூகத்தின் தேவையாகவும் இருந்திருக்க முடியும். அதிலும் குறிப்பாக அதிகார வர்க்கத்தில், அரச குடும்பங்களில் ஆண்வாரிசைப் பெற்றெடுக்கும் கட்டாயம் அரசிக்கு இருந்திருக்கும். இதுவே கூட அரசனின் மனைவியரின் அந்தஸ்த்தை நிர்ணயித்திருக்கும்.

பால் அழித்தல் என்பதும் பால் மாற்று அறுவைச்சிகிச்சையும் இக்கருத்துகளின் பின்புலத்தில் நடந்தேறி இருக்கின்றன. குறிப்பாக சீனத்தில் இப்பழக்கம் குறித்த வரலாற்று பதிவு கி.மு. 8ஆம் நூற்றாண்டுவரைப் பின்னோக்கிப் போகிறது. அதற்கும் முன்னரே இப்பழக்கம் வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்றே அப்பதிவு காட்டுகிறது. இவர்கள் நபுஞ்சகர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆண்பால் அழித்தல்/ அறுவைச்சிகிக்கை மூலம் ஆண்பால் உறுப்புகளை அகற்றப்பட்டவர்கள் தான் நபுஞ்சகர்கள்.

தாய்மையடையக்கூடிய பெண்கள் இருக்கும் அரசனின் அரண்மனையில் வேறு எந்த ஆணுடைய விந்தும் விழுந்து எந்தப் பெண்ணின் கருமுட்டையிலும் கலந்து துளிர்த்துவிடக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே நபுஞ்சகர்கள் உருவாக்கப்பட்டார்கள். அதையும் மீறி சிநேகங்கள் உருவான கதைகள் பல உண்டு. ஆனாலும் கரு உருவாக முடியாது என்பதால் அரசனின் வாரிசு தூய்மை பேணப்பட்டது எனலாம்.

மிங்க் முடியாட்சியில் மட்டும் 70,000 ஆண் குழந்தைகளுக்கு பால் அழிப்பை அறுவைச்சிகிச்சை மூலம் செய்திருக்கிறார்கள்! இந்த அறுவை நிபுணர்கள் அறுவைச்சிகிச்சையை பரம்பரை பரம்பரையாக குடும்பத்தொழிலாகவே செய்துவந்திருக்கிறார்கள். நரம்புகளை மரக்க வைக்கும் மூலிகைக் கஷாயங்கள் கொடுத்து உறுப்புகளை மிளகுக்கலந்த சுடுநீரால் கழுவுவார்களாம். ஆணுறுப்பை முழுக்க அறுத்தெறிவது ஒரு வகை, பீஜக்கொட்டை மட்டும் அகற்றப்படுவது இன்னொரு வகை என்று இரண்டு வகையான அறுவைச்சிகிச்சை முறைகள் நடைமுறையில் இருந்திருக்கின்றன. இந்த அறுவையின் போது நிறையபேர் இறந்தும் போயிருக்கிறார்கள். இதெல்லாமே ஆண் தன் சொத்துடமைக்கு வாரிசாக தன் உதிர வழி வாரிசு மட்டுமே இருந்தாக வேண்டும் என்ற எண்ணத்தின் உச்சக்கட்டம்! அரண்மனையில் மற்ற வேலைகள் செய்ய ஆண்களும் வேண்டும் அதே நேரத்தில் எங்காவது அந்த இருட்டில் ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் விளைவு தான் ஆண்பால் அழித்த நபுஞ்சர்களின் வரலாறு. 19 ஆம் நூற்றாண்டில் சீனத்தில் போய் வசித்த ஆங்கிலேயர் மூலம் தான் வெளியுலகுக்கு சீனாவின் இந்த வழக்கம் தெரியவந்தது.

ஆண்பால் அழிப்பு அன்று நடந்ததற்கு எப்படி சொத்துடமை வாரிசுடமை காரணமாக இருந்ததோ அதன் இன்னொரு பக்கம் தான் பெண் சிசுக்கொலை, பெண்கருவை அழித்தல், அண்மையில் கழிவோடையில் கண்டெடுக்கப்பட்ட பெண்கரு அழிப்புக்குவியல்கள், இப்போது ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆண்குழந்தைகளாக மாற்றும் அசிங்கம், அருவெறுப்பு…

மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இதற்கெனவே புகழ்ப்பெற்ற 7 அறுவைச்சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள் . ஓராண்டுக்கு இதுவரை 200 முதல் 300 வரை இம்மாதிரி அறுவைச்சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக மும்பை, டில்லி போன்ற பெருநகரங்களிலிருந்து இதற்காக செல்லும் பெற்றோர்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு. இதற்காகும் செலவு 1.5 இலட்சம். ஒரு பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணத்திற்கு சீர்வரிசையாகக் கொட்டிக்கொடுக்கும் செலவுடன் ஒப்பிட்டால் இந்த அறுவைச்சிகிச்சைக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு என்றும் அந்தச் செய்தி பதிவு செய்துள்ளது.

இச்செய்தி வெளிவந்தவுடன் குழந்தைகள் நலன் காக்கும் பிரதமரின் அலுவலகம், இந்திய மருத்துவக் கழகம், மத்திய பிரதேசம் அனைத்தும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. பெண் குழந்தைகளை அறுவை மூலம் ஆணாக மாற்றும் போது அப்படி மாற்றப்பட்ட ஆண், ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்றும் சொல்லப்படுகிறது. இக்கருத்து இன்னொரு சந்தேகத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் ஆண்வாரிசை விரும்புவதன் அடிப்படை நோக்கம் தன் வம்சாவளி விருத்தியும் அது தொடர வேண்டும் என்ற ஆசையிலும்தான்.

செயற்கை குழாய்வழி குழந்தை ஜனிக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் பெண் வழி வாரிசுகளை தங்கள் வாரிசுகளாக ஏற்றுக்கொள்ள அறிவார்ந்த சமூகமும் முன்வரவில்லை . எனவே பெண் குழந்தையை ஆண் குழந்தையாக்கி தங்கள் வாரிசுரிமையை நிலைநாட்டத்துடிக்கும் பெற்றோர்கள் அப்படி மாற்றப்பட்ட ஆண் வாரிசால் தன் வம்சம் தளைக்கும் வாய்ப்பில்லை என்றால் அவர்கள் இந்தப் பால் மாற்று அறுவைச்சிகிச்சையை செய்வார்களா? அவர்களின் நோக்கம் நிறைவேறாத போது இந்த அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இந்தச் செய்திக்கு எதிர்வினையாக வைக்கப்பட்டிருக்கும் இக்கேள்வி மிகவும் கனமானது. மிகவும் யோசிக்க வைப்பதும் கூட.

மற்றபடி, பிறப்பிலேயே சில பெண் குழந்தைகளின் உடல் உறுப்பில் ஆண் குழந்தைகளின் அடையாளம் காணப்படுவதுண்டு.
(a child with abnormal or ambiguous genitals. A girl may be born with a noticeably large clitoris giving impression of a penis or lacking a vaginal opening. A boy may be born with a notably small penis or with a scrotum that is divided so that it looks like labia, a part of female sexual organ)
எனவே வளர்ந்தப் பின் அக்குழந்தைக்கு ஏற்படும் பால் வேற்றுமை குழப்பம் தீர்க்கவே பால் மாற்று அறுவைச்சிகிச்சைகள் (genitoplasty)நடக்கின்றன என்கிறார்கள்

பால்மாற்று அறுவைச்சிகிச்சையில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் டாக்டர். எஸ்.வி. கோட்வால் “ஒரு குழந்தைக்கு இம்மாதிரியான பால்மாற்று அறுவைச்சிகிச்சை செய்வது சாத்தியமே இல்லை” என்று உறுதியாகச் சொல்கிறார்.

இக்கருத்துகளை எல்லாம் முன்வைத்து பார்க்கும் போது எனக்குச் சில ஐயப்பாடுகள் எழுகின்றன. குழந்தைகளுக்குச் செய்ய முடியுமா ? செய்ய முடியாதா? என்ற கேள்விகளை மருத்துவர்கள் பேசித்தீர்த்துக் கொள்ளட்டும்.

*இம்மாதிரி அறுவைச்சிகிச்சைக்கு தங்கள் பெண் குழந்தைகளை எடுத்துச் செல்லும் பெற்றோர்களின் குழந்தைகள் வரலாறு. ஒருவேளை அவர்களுக்கு வாரிசை வளர்த்தெடுக்க ஏற்கனவே ஆண்குழந்தை இருந்தால், நமக்கெதற்கு இந்தப் பெண் குழந்தையை வளர்க்க வேண்டிய சிக்கல்? என்று எண்ணி ஒன்றரை இலட்சத்தில் தங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முன்வருகின்றார்களா? என்பதைக் கவனிக்க வேண்டும்.

* இந்த அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைகளுக்கெல்லாம் உடல் ரீதியான பால் உறுப்பு சம்பந்தமான குறைபாடுகள் இருந்தது என்பதற்கான சான்றுகள் இந்தூர் மருத்துவமனைகளில் இருக்கின்றனவா?

* ஓராண்டில் சற்றொப்ப 200 முதல் 300 அறுவைச் சிகிச்சை நடக்கிறது இந்தூரில் என்றும் புதுடில்லியில் இருக்கும் சர்.கங்காராம் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு 2 முதல் 5 வரை இம்மாதிரியான குறைபாடுகளுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்படுகிறது என்றும் செய்திகள் சொல்கின்றன. இந்தப் புள்ளிவிவரங்களின் வரலாறு என்ன? இக்குறைபாடு அண்மையில் அதிகரித்திருக்கிறதா? எந்தப் பகுதியில் வாழ்ந்த/பிறந்தக் குழந்தைகளுக்கு இக்குறைபாடு பொதுவாக அதிகமாக இருப்பதாக தெரிகிறது? இக்குறைபாட்டின் காரணம் என்ன? மூலம் என்ன? பரம்பரை வியாதியா?

சமூகத்தின் மீது அக்கறைக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இம்மாதிரியான ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. கத்தரிகாயிலிருந்து பூச்சி மருந்து வரை உலகக் கண்டு பிடிப்புகளின் சோதனைக்கூடாமாகி விட்டது இந்தியச்சந்தை. இப்போதெல்லாம் நம் மனித வளம் வெள்ளை எலிகளுக்கு மாற்றாக மாற்றப்பட்டிருக்கிறதோ என்று அச்சமாக இருக்கிறது .

ஆண் பெண் எண்ணிக்கை விகிதம் மும்பையில் 1000 : 874 டில்லியில் 1000 : 866. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தற்போது இந்தியாவில் பெண்குழந்தைகளை விட ஆண்குழந்தைகளின் எண்ணிக்கை 7 மில்லியன் அதிகம்! என்ற புள்ளிவிவரமும் இந்த நேரத்தில் என் நினைவுக்கு வந்து என்னை அலைக்கழிக்கிறது.

எங்கேயோ ஏதோ ஒரு மூலையில் என்னவொ நடக்கிறது ….
நடந்ததும் நல்லதாக இல்லை
நடப்பதும் நல்லதாக இல்லை
நாளை.. ?

——–

துணை நின்ற பதிவுகள்:

Hindustan Times , 26/6/11

Asian Tribune , 27/6/11 by R Vasudevan

பால் அழித்தல் – சிங்கை ஜெயந்தி சங்கரின் கட்டுரை,
இருவாட்சி பொங்கல் மலர் 2, 2010

(NanRi : thinnai.com)

Saturday, July 9, 2011

தமிழக அரசு தீர்மானமும் சாத்தியக்கூறுகளும்.



தமிழ்நாட்டு சட்டசபையை துவக்கிவைத்து ஆளுநர்ஆற்றும் உரைக்கு நன்றி தெரிவிக்கும்
உரைகளை இடைநிறுத்திவிட்டு ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாட்டு முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாழ்க!
என்று ஒவ்வொருவரும் வாழ்த்தி பூங்கொத்து கொடுத்து ஓய்வாக
இருக்கும் போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அவரை வாழ்த்துவதில் எனக்கொன்றும் கருத்து வேறுபாடுகள் இல்லை. ஆனால்
"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று சொன்னதும் இவர்தான்
என்பதை மறக்க முடியவில்லை.

இலங்கை மீது பொருளாதர தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை
தீர்மானத்தில் சொல்லப்படுகிறது. தடைவிதிக்க நடுவண் அரசு சம்மதிக்குமா?
ஏனேனில் போர் முடிந்தவுடன் சுவிட்சர்லாந்தில் 24 நாடுகள் கூடி போர்க்குற்ற
தீர்மானம் இலங்கை மீது கொண்டுவந்தப் போது அத்தீர்மானம் தோல்வியுற
காரணமாக இருந்ததே நம் இந்திய அரசுதானே!

ஜோதிபாசு மேற்கு வங்க சட்டமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானமும்
மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் போலீஸ் படையைக் கொண்டு
போரிடப்போவதாக முழங்கியதும் அடிக்கடி இப்போது நினைவுப்படுத்தப்படுகிறது.
பூகோள ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியா அரசால் தெற்கெல்லையில்
இருக்கும் இலங்கை மீது அதே நடவடிக்கைகளை எடுக்கும் சூழல்
இருக்கிறதா?

இதை எல்லாம் கடந்து தமிழக முதல்வர் போர்க்கோலம் பூண்டால்
இந்திய அரசு வழக்கம் போல அவர் மீது இருக்கும் சொத்துக்குவிப்பு
வழக்குகளைக் கொண்டு தன் வளையத்துக்குள் இறுக்கிப்பிடிக்காது
என்பது என்ன நிச்சயம்?

இந்தத் தீர்மானமே நடுவண் அரசை மிரட்டுவதற்கும்
அரசியல் சுயலாபங்களுக்கும் கையில் எடுத்திருக்கும்
சாட்டையாக மட்டுமே இருக்குமானால் ....

கடந்தக் கால தமிழர் குறித்த வரலாற்று நிகழ்வுகள் இப்படியான
கசப்பான உணர்வுகளையும் அச்சத்தையும் தருகின்றன.

வடக்கு மாநிலங்களில் தன் இராணுவத்தை வைத்தே மனித
உரிமைகளைச் சிதைத்தாலும் இந்திய அரசு , சர்வதேச அளவில்
மனித உரிமைகளை மதிக்கும் இந்திய தேசம் என்ற பிம்பம்
சுக்கு நூறாக உடைவதை நம் தேசத்தலைவர் வகையறாக்கள்
அப்படி ஒன்றும் விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள்.
ஏதாவது செய்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்போது
வசமாக இலங்கை அரசை மட்டும் மாட்டிவிட்டு தப்பித்துக்
கொள்வார்கள். அதில் நம்மவர்கள் கில்லாடிகள்.
அந்தக் கில்லாடித்தனம் மட்டுமே இப்போதைக்கான
நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை.

Friday, July 8, 2011

UNO report on srilanka war : SOME IMPORTANT POINTS


REPORT OF THE SECRETARY-GENERAL'S PANEL OF EXPERTS ON
ACCOUNTABILITY IN SRI LANKA - 31 MARCH 2011


56) srilanka in its diplimatic efforts, the govt drew on the favourable global environment for
support from the number of states, in the context of the "war on terror" and in the region.'
gained increased collaborations from the indian govt due to the LTTE's assassination
of rajiv gandhi. in one significant example, the indian navy directly assisted sri lankan
forces in intercepting the floating warehouses used by the LTTE to maintain its
supplies by sea.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று உலகமெங்கும் ஓங்கி ஒலித்த சூழலை
இலங்கை அரசு தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. புலிகள் ராஜீவ் காந்தியைக்
கொலை செய்ததைக் காரணம் காட்டி இந்திய அரசுடன் உறவைப் பலப்படுத்திக் கொண்டது.
இதன் முக்கியமான ஓரு விளைவுதான் புலிகள் கடல்வழி தங்களுக்குத் தேவையான
பொருட்களைக் கொண்டு செல்வதை இந்திய கப்பற்படையின் நேரடி கண்காணிப்பில்
தடுக்கப்பட்டது.

63)
white van operation:

உண்மை நிலையை எழுதத்துணிந்த பத்திரிகையாளர்கள், ஊடகங்களை
புலிகள் என்று சொல்லி வெள்ளை வேனில் அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திக்
கொலை செய்த சம்பவங்கள். 2006 முதல் போரின் கடைசிகட்டம் வரை
66 பேர் இப்படி காணாமல் போய் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
a potent symbol of this operations was the WHITE VAN. white vans were used
to abduct and often disappear critics of the govt or those suspected of links with
the LTTE and more generally to instil fear in the population. An elite unit within the special task
force of the plice is implicated in running these white van opearations. those abducted were
removed to secret locations, interrogated and tortured in a variety of ways including through
beatings , forced nudity, suffocation with plastic bags, partial drowning, extraction of fingers or toe nails,
pr administering electric shocks. many were killed and their bodies disposed of secretly.
human right workers, journalistsm newspaper editors, humanitarina workers accused of being
"tiger sympathizers" were also caught in the net.

e-g. two prominnent journalists, associated newspapers of ceylon ltd.
Poddala Jayantha, picked up in white van severely beaten in june 2009 . 8 jan 2009, prominenet
newspaper editor, Lasantha Wickrematunge was killed.
ref: srilanka journalist rish death by BBC News, 3rd feb 2009.

75)
ஐ.நா தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள தீர்மானித்தது.
அலுவலகம் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு மாற்றப்படுகிறது. பிற உலக நாடுகளின்
அமைப்புகளும் தங்கள் பணியாளர்களை திரும்ப அழைத்துக்கொள்கின்றன.
கிளிநொச்சியிலிருந்து ஐ.நா. பணியாளர்கள் கிளம்ப தயாராக இருக்கும்போது'ஏவுகணைத்
தாக்குதல்கள் ஐ.நா அலுவலகத்தை நோக்கி..
15 செப் 2009ல் பொதுமக்கள் கூடி 'தயவுசெய்து இங்கிருந்து போகாதீர்கள்" என்று
கெஞ்சுகிறார்கள். (பக் 21)


128) ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும்
என்றும் மீறீனால் தண்டனை என்றும் இலங்கையில் ஹெல்த் மினிஸ்டர்
எச்சரிக்கை செய்திருந்தார். டாக்டர் சத்தமூர்த்தியும் வரதராஜாவும் வன்னியில் இருந்த
நிலையை 05 மார்ச் 2009ல் "situation report health sector vanni" =
இலங்கை அரசுக்கு 16 மார்ச் அனுப்பிய ரிபோர்ட்டில்
போதுமான தேவையான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் காயப்பட்ட பலரை
மருத்துவமனையில் காப்பாற்றி இருக்க முடியும். அடிப்படை மருத்துவ வசதிகள்
கூட இல்லாத நிலை நிலவியது.

" most of the hospital deaths could have been prevented if basic infrastucture facilities
and essential medicines were made available... we have been supplied with No antibiotics,
no anaethestics and not even a single bottle of IV fluid, leaving
us in a desperate situation of not being able to provide even life saving emergency
surgery" (pg 38)

146) வன்னியிலிருந்து அரசாங்கத்தின் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்தப்போது
ஸ்கிரீன் செக்கிங் நடந்தது. அப்போது, ஆண்களும் பெண்களும் தனித்தனியாக நடந்தாலும்
அவர்கள் ஆடைகளை முழுவதும் நீக்கி நிர்வாணமாக்கி செக்கிங் செய்திருக்கிறார்கள்.
மக்களிடன் பேச அனைத்து உலக நாடுகளின் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. (பக் 43)

161) ஆண்களை போரில் இழந்த குடும்பத்தின் பெ ண்களும் குழந்தைகளும் அவர்களுக்கு
முன்பின் தெரியாத ஆண்களுடன் ஒரே கேம்பில் அடைக்கப்பட்டனர். பெண்கள் குளிக்கும்போதும்
உடை மாற்றும் போதும் சிங்கள இராணுவத்தினர் பார்த்தது மட்டுமல்ல, வயிற்றுப் பசிக்காகவும்
தங்குமிடத்திற்காகவும் கேம்ப்களில் பெண்கள் தங்கள் உடலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
(பக் 45)

193)
தங்கள் தாக்குதலின் மூலம் பொதுமக்கள் கட்டாயம் கொல்லப்படுவார்கள் என்று
அறிந்தும் தாக்குவது என்பது கொலைச் செயலாகும். சேனல் 4 காணோளி
காட்சிகள் இறுதிக்கட்ட போரில் சரணடைந்த/ கொண்டு செல்லப்பட்ட புலிகள்
இயக்கத்தினரை நிராயுதபாணியாக்கி இலங்கை இராணுவவீரர்கள் சுட்டுக்கொல்வதைக்
காட்டுகிறது.

where a civilian population is subject to an attack such as an artillery attack, which results in civilian
deaths such deaths may appropriately be characterized as murder, when the perpertrators had
knowledge of the probability that the attack would cause death" the channel 4 videos indicates that the SLA executed unarmed LTTE cadre who were taken into custordy particularly during the final days of the war.
(pg 56)

207) shelling of hospitals and humanitarian objects:

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் படி, (விதி. 25, 28, 31, 32 ) மருத்துவர்,\
மருத்துவ இடம், மருத்துவ ஊர்தி, மனித உரிமை பாதுகாப்பு நபர்கள், அவர்கள்
சம்பந்தப்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்படவும் மதிக்கப்படவும் வேண்டும்.
ஆனால் இலங்கை இராணுவம் ஐ.நாவின் கொடி பறந்த மருத்துவமனைகளைக்
குண்டு வீசித்தாக்கியது.ஏற்கனவே இலங்கை அரசுக்கு ஐ.நாவின் மருத்துவக்குழு
இடம் தெரிவிக்கப்பட்டிருந்தும் தாக்குதல் நடத்தியது. அதைப்போலவே
ஐ.நாவின் கொடி பறந்துக்கொண்டிருந்த அதன் அலுவலகம் , such as inthe first NFZ-
(no firing zone) குண்டுவீசித் தாக்கப்பட்டது .


113) படைக்கு புதிய ஆட்கள் கட்டாயமாக தேவைப்படும் சூழலில். புலிகள் இளைஞர்களையும்
இளம் சிறார்களையும் இழுத்துச் சென்றார்கள். அதிலும் குறிபாக ஏப்ரல் மாத, திர்கோணமலை
எழிலன் நூற்றுக்கணக்கான இளைஞர்களைப் பலவந்தமாக வலையன்மடம் சர்ச் பகுதியிலிருந்து
முல்லைவாய்க்கல் செல்லும் பேருந்தில் ஏற்றினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை
விட்டுவிடும் படி கெஞ்சி அழுதார்கள். (பக் 34)

&
annexure 3 pg 186

satellite imagery - explanatory note.

யுனிடார் - யுனோசட் ( United nations office of military affairs and the united nationa
institute for training and research) உதவியுடன் செயற்கோள்கள் அனுப்பிய
புகைப்படங்கள். முதல் ஆறு படங்கள் மருத்துவமனைகளின் மீது ஆர்டிலரி குண்டுகள்
வீசப்பட்டதை உறுதி செய்கின்றன. அடுத்த பத்து படங்களில் மூன்று No fire zone
என்று இலங்கை அரசு அறிவித்த இடங்களை குறிவைத்து தாக்குவதைக் காட்டுகிறது.


இந்த அறிக்கைச் சொல்லும் உப்பு சப்பில்லாத சில தீர்வுகள்:
----------------------------------------------------------




* போர்க்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை அரசே விசாரிக்க வேண்டும்.

*கடத்தப்பட்டு பின் மாயமானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிவிக்க வேண்டும்.

* அரசே நிகழ்த்தும் வன்முறைகளை நிறுத்த வேண்டும்.

*இக்குற்றச்சாட்டுகளை எல்லாம் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஆய்வு
செய்யும் நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

* இறுதிக்கட்டப்போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக
அரசு தனது பொறுப்பை ஏற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

Wednesday, July 6, 2011

ஈழம் பிரச்சனை குறித்து அறிஞர் அண்ணா 1954ல்





தகவல் : நன்றி திரு குமணராசன், ஆசிரியர், இலெமுரியா

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் எட்டாம் அமர்வில்

ஈழத்தமிழர் படுகொலை பற்றிய ஐநா அறிக்கை வெளிவந்தப் பின்
அது குறித்த கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள்,
கட்டுரைகள் என்று வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இச்சூழலில்
இவ்வறிக்கை குறித்த ஒரு தெளிவு மும்பை மக்களிடம் இருக்கிறதா
என்ற ஐயம் எங்களுக்கு ஏற்பட்டது. அப்போதுதான் தமிழ் சிந்தனையாளர்
சங்கமத்தின் எட்டாம் அமர்வில் 'இலங்கை தமிழர் படுகொலை பற்றிய
ஐநா அறிக்கை' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்ற
திரு குமணராசன் - தமிழ் இலெமுரியா மாத இதழின் ஆசிரியர் அவர்களைக்
கேட்டுக் கொண்டோம்.







திரு குமணராசன் அவர்கள் திராவிட இயக்கப் பின்னணியில் வளர்ந்தவர்.
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தன் வாழ்க்கையில் அனைத்து தளங்களிலும்
கடைப்பிடித்து வரும் ஒரு சிலரில் மிகவும் முக்கியமானவர். சிறந்தச் சிந்தனையாளர்,
பேச்சாளர், மும்பை புறந்கர் திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை
ஈழத்தமிழர் பிரச்சனை குறித்த திமுக வின் நிலைப்பாடு காரணமாகத் துறந்தவர்.
ஈழத்தமிழர் பலருக்கு நன்கு அறிமுகமானவரும் கூட.

நவிமும்பை தமிழ்ச் சங்க அரங்கத்தில், 3/7/11 ஞாயிறு மாலை 7 மணிக்கு கூட்டம்
ஆரம்பமாகியது.
மும்பை மழையில் நனைந்துக் கொண்டு வந்தவர்களை அன்றைக்கு அவர்
பேச்சு சூடாக்கியது. அவர் பேச்சிலிருந்து சில துளிகள்..

>இந்த சூலை மாதம் ஈழத்தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகள்
நடந்த மாதம். இப்படி ஒரு ஜூலை மாதத்தில் தான் குட்டிமணி வன்கொடுமை
செய்யப்பட்டார். பண்டாரநாயகாவுடன் இந்திய அரசு ஓர் ஒப்பந்தம் செய்ததே
அதுவும் இந்த ஜூலை மாதத்தில்தான், ஏன்.. ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே
ஒப்பந்தமும் ஜூலை 27 1987ல் தான்.
இன்றைக்கு அதே ஜூலை மாதத்தில் தான் அந்த நினைவுகளை எல்லாம் சுமந்துக்
கொண்டு உங்கள் முன் நான் நிற்கிறேன். தமிழனுக்கு எட்டாத உரிமைகளை
உங்கள் எட்டாவது அமர்வில் பேச என்னை அழைத்திருக்கின்றீர்கள்.

> தாயை இழந்த சேயிடம் பொம்மையைக் காட்டி ஏமாற்றுவது போல ஐநா
அறிக்கையும்.

> ஈழத்தமிழர் குறித்து எதற்கும் அசையாத தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறது.

> இலங்கையில் தமிழர் வரலாறு வந்தேறிகளின் வரலாறு மட்டுமல்ல, அந்த நிலத்தின்
மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வரலாறும் கூடத்தான் என்பதைப்
பலர் புரிந்து கொள்வதில்லை. எனவே இலங்கை வரலாற்றைத் தொட்டுச்செல்வது
சிலரின் ஐயப்பாடுகளைத் தீர்த்து வைக்கும்.
(சரியாகவே தான் சொன்னார் என்று நினைத்துக் கொண்டேன். ஏனேனில் அங்கே
வேலைத்தேடிப் போனவா தனிநாடு கேட்டா சரியா? சொல்லுங்கோ..? என்று
ஒரு கல்லூரி பேராசிரியரே மும்பையில் பேசியது என் நினைவுக்கு வந்தது.!!)

> ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த , நிர்வாகக்காரணங்களுக்காக இந்தியா என்றும்
இலங்கை என்றும் ஒன்றுபட்ட தேசங்களின் சுதந்திர வரலாற்றுப் போரில்
தமிழனின் குரல் என்றுமே தனித்து ஒலிக்கவில்லையே. அவர்களின் அன்று
பெருந்தன்மையுடன் நடந்துக் கொண்டார்கள். அதனால் தான் ஒன்றுபட்ட
சுதந்திர இந்தியா, ஒன்றுபட்ட சுதந்திர இலங்கை என்று கொடி பறந்தது.

> ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை அடங்கி இருந்த சிங்களவர், சுதந்திரம்
கொடுக்கப்பட்டவுடன் தங்கள் கோரமுகத்தைக் காட்டியது ஏன்?
காரணம் ஈழத்தமிழனின் பொருளாதர, கல்வி ஆளுமை.

> அதன் பின் சிங்களவர்/ தமிழர்களுக்கு நடுவே தரப்படுத்துதல் என்ற கீறல்
விழுகிறது.
> 1954ல் ஆசியஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு ஒப்பந்தம் செய்து
கொள்கிறார். ஈழத்தமிழர்களின் நலனுக்காக அல்ல, தன்னை ஆசியஜோதி
என்று நிலைநிறுத்திக்கொள்ள. தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக.




(அனைத்து தீர்மானங்களையும் குறித்து காலவரிசைப்படி அவர் பட்டியலிட்டார்.)

வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழீழம் அமைய இளைஞர்களே வாருங்கள் என்றழைப்பு
விட்டது.

> ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழர்கள் பல்வேறு தமிழீழ அமைப்புகளின்
மூலம் அமைதியான முறையில் எடுத்த எல்லா முடிவுகளும் தீர்மானங்களும்
சிதைக்கப்ட்டனவே, இதற்கெல்லாம் காரணம் யார்? ஈழத்தமிழர்களா?
இக்காலக்கட்டத்தில் புலிகள் இயக்கம் அப்போது பிறக்கவே இல்லை.
ஈழத்தமிழர் ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் புலிகள் , புலிகள் என்று
சொல்கிறவர்கள் யோசிக்க வேண்டும்.

> 1983, ஆகஸ்டு 04ல் இதே மும்பையில் ஈழத்தமிழர்களை ஆதரித்து 10 இலட்சம்
தமிழர்கள் திரண்டார்கள். தமிழர் பேரவையின் தலைவர் வரதராசனார் தலைமையில்.
அன்றைக்கு தமிழர்கள் பேரணியில் கலந்துக் கொள்ள வசதியாக அம்பர்நாத்திலிருந்து
ஒரு ரயில்வண்டியே முன்பதிவே செய்யப்பட்டது. இன்றைக்கு அந்தத் தமிழர்கள்
எல்லாம் எங்கே போய்விட்டார்கள்?

>கொத்துகொத்தாக ஈழத்தமிழர் செத்து மடியும் போது கள்ள மவுனம் சாதித்த
ஐநாவும் பான்கிமூனும் இன்றைக்கு மனித உரிமைகள் குறித்துப் பேசுகிறார்கள்

> இந்திய எல்லைப் போரில் எல்லாம் துடித்து எழுந்தவன் தெற்கே வாழ்ந்த தமிழன்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று இந்தியாவின் பதாகையைத் தூக்கிப் பிடித்திருக்கும்
கைகள் தமிழனின் கைகள். ஆனால் இந்தியா மட்டும் எப்போதும் தமிழனை
வேற்றுமைப் படுத்தியே பார்க்கிறது.
(ஆமாம்.. இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்கிறது இலங்கை அரசும்
ராஜபக்சேயும். இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்று கூறமுடியுமா
நம் தமிழக மீனவர்கள்? என்று அடுத்தக்கட்டத்திற்கு என் மனம் தாவியது)

> மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய முதல்வர் ஜோதிபாசு சட்டமன்றத்தில்
நிறைவேற்றிய தீர்மானம், நடுவண் அரசு ஏற்காவிட்டால் மாநில அரசின்
கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் போலீஸ்படையைக் கொண்டு போராடத் தயங்க
மாட்டேன் என்று வெகுண்டெழுந்ததும் அதுவே பங்களாதேசம் என்று
இன்றைக்கு ஐநாவில் ஒரு தனிதேசக்கொடிப் பறக்க காரணமானதும்
வடக்கே சாத்தியப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.

> இந்த அறிக்கையில் ஒரு வரியில் கூட இனப்படுகொலை என்ற சொல்
பயன்படுத்தப்படவில்லை.

> No Fire zone என்று அறிவித்துவிட்டு அங்கே தமிழர்களைக் குவித்து
குண்டு போட்டு அழித்ததைப் பதிவு செய்துள்ளது.

> கேம்ப் களில் ஸ்கீரின் சோதனை என்ற பெயரில் நம் தமிழ்ப்பெண்களின்
உடலைத் தொட்டுப் பார்த்ததையும் ஏன் நிர்வாணமாக்கியதையும்
பதிவு செய்துள்ளது.

திரு குமணராசன் அவர்கள் சற்றொப்ப இரண்டு மணிநேரம் பேசினார்.
அதன்பின் இலங்கையின் கொலைக்களம் என்ற சேனல்4 ல் வெளியான
ஆவணப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது.
கனத்த இதயத்துடன் ... நாங்கள்..ஒவ்வொருவரும்.