Friday, March 14, 2014

பயமுறுத்தும் வெற்றிகள்




தோல்விகளைக் கண்டு நான் பயப்படுவதில்லை.
அதிலும் குறிப்பாக அரசியல் தோல்விகளை.
சீனிவாசன் என்ற மாணவனுடன் தேர்தலில் போட்டியிட்ட
பெருந்தலைவர் காமராசர் தோல்வி அடைந்தார்.
அவருடைய தோல்வியை விட சீனிவாசனின் வெற்றி
நம்மைப் பயமுறித்தியது! பெருந்தலைவர் தோற்றதில்
அவருக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பும் இல்லை.
சீனிவாசன் என்ற அன்றைய மாணவர் அந்த வெற்றிக்குப்பின்
என்னவானார்? எனக்குத் தெரியாது. ஆனால் காமராசர் தன் தோல்விக்குப்
பின்னரும் அரசியலில் தனிப்பெரும் ஆளுமையாக நின்றார். இன்றும் நிற்கிறார்.


தமிழ்நாட்டின் அரசியல் கூட்டணி ..யாருக்கு வெற்றி?
தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை இதைப் பற்றிப் பேசிப்பேசி
ஊடகங்கள் தங்கள் ஒலி ஒளிக் கற்றைகளை நிரப்பிக் கொள்ளலாம்.
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் நாடறிந்த ஊழல் பேர்வழியாக இருக்கலாம்.
மதக்கலவரத்தைத் தூண்டிவிட்டவராக இருக்கலாம்.
இந்துக்களை இசுலாமியர்களை குண்டு வைத்து அழித்த
இந்து தீவிரவாதியாகவோ இசுலாமிய தீவிரவாதியாகவோ இருக்கலா.ம்
இப்படி இருக்கலாம்...
இருக்கலாம்..
இருக்கிறார்கள்
ஆமாம்..இருக்கிறார்கள்
அதனாலென்ன?
நாளை அவர்களே வெற்றி பெறலாம்.
அப்போது...?!!!



இப்போதெல்லாம் தோல்விகளை விட
வெற்றிகளைக் கண்டே
எனக்கு அச்சமாக இருக்கிறது!
தோல்விகளை மன்னித்துவிடலாம்.
வெற்றிகள் ரொம்பவும் கொடூரமானவை.
நியாயத்தின் நாடி நரம்புகளை அறுத்து எடுத்து
ரத்தம் குடிக்கும் காட்டேறியாக
வெற்றி ஊளையிடுகிறது.
சங்கீதம் என்று அதையும் கொண்டாட
ஒரு கூட்டம் காத்திருக்கிறது.
இமைகளைப் பிடுங்கிய இரவில்
கனவுகள் தற்கொலை செய்துக் கொண்டதற்காக
அழவும் முடியவில்லை.
தோல்விகளை விட வெற்றிகளே
என் கோப்பையில் விஷமாய்....

Monday, March 10, 2014

ஆஸ்கார் விருதும், இந்தியர்களின் வெள்ளை நிறப் பெண்கள் மீதான மோக வெறிக்கு முற்றுப்புள்ளியும்.

இக்கட்டுரையை ஊடறுவில் இன்று வாசித்தேன்.  கட்டுரையை எழுதி இருக்கும்
இக்பால் செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....

பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நம் ஊரில் உள்ளவர்கள் எதோ ஆஸ்கார் உலக சினிமாவுக்கான விருது என்ற எண்ணத்தை ஆழமாக பதிந்து கொண்டுள்ளனர். ஆனால் அகாதமி அவார்டுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்க சினிமாவுக்கு கொடுக்கப்படும் விருதுகள். ஒரே ஒரு விருது மட்டும் சர்வதேச படத்துக்கு கொடுப்பார்கள். அது அந்தளவுக்கு கௌரவமான ஒன்றாக கருதப்படுவதும் இல்லை. அதை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பல உள்ளன.
ஆலிவுட் படங்களாகட்டும், பிற மொழி படங்களாகட்டும் இரண்டையுமே எனக்கு அறிமுகமானது தூர்தர்சன் தொலைக்காட்சி ஊடாகத் தான். மாநில மொழி திரைப்படங்களையும், சில பழைய ஆங்கில படங்களையும், நிறையவே இந்தி படங்களையும் ஒளிபரப்புவார்கள். அவ்வாறு தான் பிறமொழி படங்களை நான் சிறு வயது முதலே அறிந்துகொண்டேன்.
ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகள் அவ்வவ்போது எழுதும் பாரசீக உட்பட வெளிநாட்டுப் படங்கள் குறித்த கட்டுரைகளே பிற மொழி படங்களை பற்றி எனக்கு அதிகம் தகவல்களை தந்தன. அது போக, கல்லூரிக் காலங்களில் வகுப்புக்களை மட்டம் போட்டு விட்டு படம் பார்க்கப் போகும் போது எல்லாம் கம்மி விலைக்கு Ticket கிடைப்பது என்னவோ பெரும்பாலும் ஆலிவுட் ( டப்பிங் ) படங்கள் ஓடும் தியட்டர்களில் தான். சில நேரம் சத்யம், தேவி தியட்டர்கள் தான் கதி என கிடப்போம்.
ஒருமுறை இதையும் தாண்டி மலையாள, கன்னட படங்களை அறிமுகம் செய்து வைத்தான் எனது நண்பன். அப்போது எல்லாம் பிறமொழி படங்கள் மீது கடுப்பே மிஞ்சும், ஒன்று மொழிப் பிரச்சனை மற்றொன்று நமது வழக்கமான ரசனைகளுக்கு மாறாக அவை இருக்கும். ஆன போதும் ஆனந்த தியேட்டரில் எதாவது ஒரு பிறமொழி படங்களை பார்ப்பதை எனது நண்பன் வழக்கமாகி வைத்திருந்தான். அவ்வாறே நானும் தொடங்கினேன். சில சமயம் அலயன்ஸ் பிராங்கைசில் எதாவது பிரஞ்சு படம் போட்டால் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் எதாவது காட்சித் துண்டுகளுக்காகவாவது போய்விடுவேன். காலப் போக்கில் அதுவே நல்ல பிற மொழி படங்களையும் ரசிக்க வைக்கத் தொடங்கியது.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கிய பின்னர், பெரும்பாலான படங்களை தவமிருந்தாவது பார்த்து விடுவோம். அப்போது எல்லாம் இணையம் அவ்வளவு பிரபலம் இல்லை. நெட் செண்டர்களுக்கு போய் படம் பார்க்கும் அளவுக்கு கணனி ஞானமோ, பணமோ, நேரமோ கிடையாது. அவ்வாறாக பிறரின் திணிப்புக்களில் தொடங்கிய சர்வதேச திரைப்படங்கள் குறித்த பரிச்சயம் இன்று என்னை பல படங்களை பார்க்க வைத்திருக்கின்றது. 

இந்த முறை நான் அதிகம் எதிர்பார்த்தது “12 Years a Slave”, “Dallas Buyers Club”, “Nebraska” ஆகிய திரைப்படங்களைத் தான். இந்த மூன்று படங்களுமே இம்முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தமையால், ஒரு வித ஆர்வம் தொற்றிக் கொண்டது.  இருந்த போதும் அதிகளவு விருதுகளை குவித்தது என்னவோ “Gravity” திரைப்படம் தான். எனக்கு என்னவோ அந்த படத்தில் அவ்வளவாக மனம் ஒட்டவில்லை. ஆன போதும் முதன்முறையாக அல்போன்சோ குவாரன் என்ற ஒரு லத்தீன் அமெரிக்க இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. “Dallas Buyers Club” என்ற குறைந்த பட்ஜட் திரைப்படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. இந்த திரைப்படம் எய்ட்ஸ் மற்றும் தற்பாலினத்தோர் குறித்த மிக அருமையான கதைக்களத்தை தாங்கி வந்திருந்தது.
ஆஸ்கார் அகாதமி விருதுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் வெள்ளை இனத்தவருக்கு போலி புகழை தரவல்ல ஒரு வீண் விளம்பர வைபவம் என்றே நான் எப்போதுமே கருதுவதுண்டு. ஆனால் இம் முறை மக்களின் சினிமா ஒன்று வெற்றி பெற்றிருந்தது மகிழ்வை தந்தது. சிறந்த திரைப்படத்துக்கான விருது “12 Years a Slave” படத்துக்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் இத் திரைப்படம் கிட்டதட்ட $140,000,000 டாலர்களை வசூலித்தது. அது போக சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை, மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான மூன்று ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது.
ஏன் இந்த திரைப்படத்தை பற்றி எழுதுகின்றேன் என்றால் அடிமை முறை அமுலில் இருந்த காலத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களின் வலிகளையும், ரணங்களையும் பிரதிபலிக்கும் ஒரு திரைக்காவியம் என்றே சொல்லலாம். 1853-யில் வெளியான 12 Years a Slave என்ற புத்தகம் அந்தக் காலத்தில் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம். இதனால் ஏற்பட்ட கருத்து மாற்றமே ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கும் அடிமை முறையை ஒழிக்க எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற நாட்டுக்கும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த யுத்தம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் நடந்த இந்த யுத்தத்தின் முடிவில் தான் அமெரிக்கா தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டதோடு, கறுப்பின கொத்தடிமை தொழிலாளர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த புத்தகம் காலப் போக்கில் மறக்கப்பட்டது. இதன் அச்சுப் பிரதிகள் எல்லாம் அழிந்தே போய்விட்ட நிலையில், 1968-யில் லூசியானா மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்ந்த சியு ஏகின் ( Sue Eakin ) என்ற 12 வயது வெள்ளையின சிறுமியினால் விளையாட்டாக பண்ணை வீட்டு பரணில் கண்டு எடுக்கப்பட்டது. அதன் பின் அவரின் தொடர் முயற்சியால் அந்த புத்தகம் குறித்து பல மேலதிக தகவல்களை சேகரித்து மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தின் கதை தான் 12 Years a Slave என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது 
Lupita NyongoTIFF2013 (cropped).jpg
குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த அறிமுகமாகி இருக்கும் லுபிடா நியோங்கோவுக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளது. முக்கியமாக அவர் விருதை வாங்கிய பின் மேடையில் பேசியது அழகைக் கொண்டாடுவதாக போலித்தனங்களை சுமந்து கொண்டு திரியும் நமக்கு எல்லாம் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.
கென்யாவைச் சேர்ந்த லுபிடா நியோங்கோவை பார்க்கும் நமக்கு முதலில் தோன்றுவது அவரின் கறுத்த மேனி தான். ஒருவர் இவ்வளவு கறுப்பாக இருக்க முடியுமா? அதுவும் ஒரு பெண் கறுப்பாக இருந்து விட்டால், இந்த சமூகம் அவளை எவ்வாறு நோக்கும். அதுவும் வெள்ளை நிற மோகம் கொண்ட வெளி உலகுக்குள் புகும் போது, அழகின் இலக்கணம் என்பதையே வெள்ளை நிறம் என்பதை எழுதா விதியாக பாவித்துக் கொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட உலகில் இவ்வளவு கறுப்பு நிற மங்கை அனைவரையும் பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பேரழகியாய் தோன்றி, தனது முதல் படத்திலேயே ஆஸ்காரை தட்டிச் சென்றுள்ளார் இந்த இளஞ்சிட்டு. கறுப்பின் அழகு வெளுப்பின் அழகு என்ற பாடலின் உள்ளர்த்தம் இப்போது தான் புலப்பட்டது. லுபிடா நியோங்கோ எவ்வாறு தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார், எத்தனை வலிகளையும், கேலிப் பேச்சுக்களையும் கடந்து இந்த நிலை எட்டியுள்ளார் என்பதை அவரது சில நிமிடப் பேச்சுக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் பல கறுப்பின பெண்கள் விருதுகளை வாங்கி இருந்த போதும், என்னவோ லுபிடா நியோங்கோவின் பேச்சை உலகம் முழுவதும் அழகின் இலக்கணத்தின் பொருளை விளங்கிக் கொள்ளாமல் வர்த்தகப்படுத்தப்பட்டு வரும் முகப் பூச்சுகளிலும், வெள்ளை நிறங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாகவே அமைய வேண்டும்.
தனது பதின்ம வயதில் தான் கறுப்பாக இருந்ததை நினைத்து அழாத நாளில்லை, கடவுளை தொழாத தருணங்கள் இல்லை என அவர் மேடையில் உருகிப் பேசியது இவரைப் போல உலகில் எத்தனைப் பெண்களை போலி அழகுத்தனங்களை திணித்து நாள் தோறும் தோல்வியடைச் செய்து வருகின்றோம். கொஞ்சம் மாநிறத்தோடு போனால் வெற்றி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, முகப்பூச்சை பூசி வெளுத்துக் கொண்டு போனதும் வெற்றி காலடியில் கொட்டுவது போல நமது தொலைக்காட்சிகள் காட்டும் போது எல்லாம் நமது வீடுகளுக்குள் எத்தனை பெண்களின் தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றியது.
“ஒவ்வொரு நாளும் கறுப்பாக இருந்ததுக்கு வருந்தாத நிமிடங்களே இல்லை ” என அவர் தொடர்ந்து பேசினார். ஆனால் அவரின் சிந்தனையை மாற்றியமைத்தது அலக் வெக் என்ற சூடானைச் சேர்ந்த அழகி தான் எனவும், தனது பிம்பத்தை அவரிடத்தில் கண்டதாக அதுவே இன்று இவரை வெற்றியின் உச்சியில் அமர்த்தியுள்ளது எனவும் கூறினார்.
கல்கி கோச்சலின் என்ற பாலிவுட் நடிகை பிரஞ்சு பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நன்றாக தமிழும், இந்தியும் பேசத் தெரியும். ஒருமுறை இந்துஸ்தான் டைம் பத்திரிக்கையில் எழுதுகின்றார் ” இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் இங்குள்ள இனவெறித்தனம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் சில சமயங்களில் என்னாலே அதனை சகிக்க முடிவதில்லை. சிறிய நகரங்களுக்கு போகும் போது, அங்குள்ள ஆண்கள் அரைகுறை ஆங்கிலத்தில் என்னைப் பார்த்து  “Hey baby”, “Sexy lady.” எனக் கூறுவதைக் கேட்கும் போது கோபம் கோபமாக வரும். சில பத்திரிக்கையாளர்கள் என்னிடம் பேட்டி காணும் போது, நான் ஏன் ஆலிவுட்டில் நடிக்கவில்லை, இந்தியா உங்களுக்கு பிடித்திருக்கின்றதா என எதோ நான் நேற்று தான் இந்த நாட்டுக்கு வந்தது போல கேள்விக் கேட்கின்றனர்”  என தனது மனக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார்.
நிறம் ஒரு குறையல்ல, நிறம் ஒவ்வொருவரின் அடையாளம். அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை. அழகு ஒருவர் தம்மை எவ்வாறு துணிவுடன், பரிசுத்ததுடன், குறைவில்லாமல் வெளிப்படுத்திக் கொள்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை இவர் இன்னொருமுறை நிரூபித்துவிட்டார். இனி இவரின் நிறத்தில் தனது பிம்பத்தைக் காணும் லட்சக்கணக்கான பெண்கள் கறுப்பு நிறத்தால் மனம் புழுங்காமல், தாழ்வுணர்ச்சிக் கொள்ளாமல் புறப்படக் கூடும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த சமூகம், இந்த பொருளாதார வலயம், இந்த ஊடகங்கள் காலில் போட்டு மிதித்து அழிக்கப் பார்க்கின்றன. அதனை உடைத்து கூட்டுக்குள் இருந்து கிளம்பும் வண்ணத்துப்பூச்சிகளை போல புறப்படுதல் மிக மிக அவசியமாகும்.
இந்த முறை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் எனது எண்ணத்தையும் கருத்தையும் நிறைத்து நீங்கா இடம் பிடித்தவள் லுபிடா நியோங்கோ என்ற அந்த இளம் பெண் தான் என்பதில் துளி கூட ஐயமில்லை. ஆஸ்கார் போக உலகம் முழுவதும் அவர் கிட்டத்தட்ட 24 விருதுகளை இந்த வெற்றிப் படத்தில் நடித்தமையால் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறம் ஒரு குறை என்று அவர் அன்றே புழுங்கிப் போய் கிடந்திருந்தால், அவரது குடும்பமும் ஊக்கம் தராது விட்டிருந்தால், இன்று உலகம் இவரை அறிந்திருக்கப் போவதுமில்லை, வரும் தலைமுறையினர் பலருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உதித்திருக்கப் போவதுமில்லை என்பது உண்மை.
இந்திய மக்களின் பொது நிறமான கரும் நிறமும், மாநிறமும் ஒதுக்கப்பட்டதாகவே ஆக்கிவிட்டனர். காலம் காலமாக ஆரியர், கிரேக்கர், இஸ்லாமியர், ஐரோப்பியர் என அயலகத்தில் இருந்து வந்தவர்களின் வருணம் வெள்ளை என்பதால், அதிகாரத்தின் நிறம் வெள்ளை என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்வியும், சமூக மாற்றங்களும் கூட நிற பேதங்களை நீக்கிவிடவில்லை. வெளிர் நிற மோகத்தை பிற்காலத்தில் வந்த சினிமா, பத்திரிக்கைகள் முதல் இன்றைய இணையம் வரை நன்கு வளர்த்துவிட்டன. அந்த ஊடகங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவற்றை மாற்ற ஒருவரும் முயலவில்லை.
பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நன்றி இக்பால் செல்வன் ( கோடங்கி) & ஊடறு. காம்


Saturday, March 8, 2014

குஷ்புவுக்கு - சங்கடப்படாத சாதனைப் பெண்மணி விருது






இன்று பெண்கள் தினம் - மார்ச் 8.
குறுஞ்செய்திகளாலும் வாழ்த்துகளாலும் நிரம்பி வழிகிறது கைபேசி.
எந்த நிகழ்விலும் இந்த ஆண்டு கலந்து கொள்ளவில்லை. ஏன்.. வழக்கமாக
பெண்கள் தினத்தில் சந்திக்கும் தோழியரையும் சந்திக்கவில்லை.
1/365.25  அதாவது முந்நூற்று அற்பத்து ஐந்து புள்ளி 25ல் ஒன்றாக இருக்கும்
நாளை உணர்த்தும் இந்த நாளைக் கொண்டாடுவதில்.. அப்படி என்ன
சாதித்துவிட்டோம்? வாழ்த்துகளும் விழாக்களும் சடங்குகளாகிக் கொண்டிருப்பதில் விலகி இருக்கவே மனம் விரும்புகிறது.

என் மவுனம் கலைக்க எப்போதும் போல  கலகலப்பான சிரிப்புடன் 
என் அறைக்குள் வந்தாள் முனியம்மா. அவள் வந்தது தெரியுமென்றாலும்
தெரியாதது மாதிரி நடிப்பதில் தோற்றுப்போய் பேச ஆரம்பித்தேன்.

என்னமா.. டிவியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு விருது வழங்குகின்றார்களே பார்த்தீர்களா என்று விசாரித்தாள். இதுவும் வருடாவருடம் நடக்கும் எங்க அம்மன் கோவில் கொடைத் திருவிழா மாதிரிதானே என்று நினைத்துக் கொண்டேன். எப்படியோ எங்கள் பேச்சு
2013 ஆம்  ஆண்டின்  சாதனைப்  பெண்மணி யார்? என்று அலச ஆரம்பித்தது.
என் முனியம்மா நாட்டு நடப்புகளை அலசுவதில் கைதேர்ந்தவள்.

நான்: சோனியா காந்திக்கு கொடுக்கலாமா?

முனியம்மா:  அட.. பாவம் அந்தம்மா.. இந்த ஊரு ஆட்களை நம்பி
இறங்கிடுச்சி.. பிள்ளைய கொண்டுவர்றதுக்குள்ள அது படற பாட்டைப் பார்த்தா பாவமா இருக்கு. விடுங்கம்மா அதை.

"அப்புறம் நம்ம தமிழ்நாட்டு சி. எம், அதுதான் உங்க "அம்மா"வை செலக்ட்
செய்யலாமா..?

> பாவம்மா.. எங்கம்மாவும். அதுதான் ஒரு காலத்திலே என்ன பாடுப்பட்டுதுனு நினைக்கீங்க.., அதக் குடியும் குடித்தனமுமா இருக்கவிட்டாடுகளாஎவனாவது?>

அப்போ கவிஞர் கனிமொழிக்கு, அதுதான் கலைஞரோட மக கனிமொழிக்கு
கொடுத்திடலாமா..?

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்துவிட்டு சொன்னாள் முனியம்மா.

<உங்களுக்கு எப்பவும் கனிமொழியை இழுக்காமாப் பொழுதுப் போகாதே!
அதுவும் தான் சிறைக்கெல்லாம் போயி ரொம்ப கஷ்டப்பட்டுப்போயிட்டேம்மா.. அதுவும் பாவம் கெதக் கெதக்குனு பயந்துக்கிட்டுத்தான் இருக்கும், அத்த விட்ருங்க..

பின்னே... யாருக்கு கொடுக்கலாம்னு நினைக்கிறே முனியம்மா?

ஒன்னும் கஷ்டப்படாமா பட்டுனு மேலே வந்தவங்களுக்குத்தாம்மா
அவார்டு கொடுக்கனும். எனக்கென்னவோ குஷ்புக்கு அவார்டு கொடுக்கலாம்னு தோணுதும்மா... கலர் கலரா நல்ல நல்ல டிசைனில்
ப்ளவுஸ் போட்டுட்டு ஜெயா டிவியிலே  ஜெக்பாட் விளையாட வந்தாங்கா,... அப்புறம் பார்த்தா திடீர்னு ஒருநாள் கலைஞர் டிவி வந்தாங்க.
என்ன ஜெக்பாட் அடிச்சுதோ..?
 அப்புறம் செம்மொழி மாநாட்டில் கலைஞர் குடும்பதில் விஜபி மாதிரி ஜொலிச்சாங்கா... இப்போ என்னனா
சென்னையில் தென்சென்னையோ வன்சென்னையோ எதோ ஒரு சென்னை
தொகுதியிலே எம்.பி எலக்ஷனிலே நிக்கப்போறாங்களாம். !
என்று சொல்லிவிட்டு அவள் என்னை ஒரு பார்வை பார்த்தாள் பாருங்கள்...

அந்தப் பார்வையில் முனியம்மா சொன்னதெல்லாம்...
"அட நீயும் ......நீ பேசற பெண்ணியம், கொள்கை ... கத்திரிக்கா..
வெங்காயம், வெங்காயம்.." !!!


 

Wednesday, March 5, 2014

சீதப்பாட்டியும் எம் சி ஆரும் (MGR)



                             ( பத்தமடை எங்கள் வீடு அன்பகம் )

இக்கதை எழுபதுகளில் நடந்த உண்மைக்கதை. இக்கதையின் களம்
என் சொந்த ஊர் பத்தமடை. பத்தமடை இராமசேஷய்யர் உயர்நிலைப் பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தக் காலக்கட்டத்திலும் சாராள் தக்கர்
பெண்கள் கல்லூரியில் இளங்கலை படித்த 70களில் நடந்தக் கதை.
அப்போதெல்லாம் எங்கள் பத்தமடையில் டூரிங் டாக்கீஸில் சினிமா.
சினிமாக் கொட்டகையிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் என் வீடு.
அப்போது பத்தமடையில் பேருந்து நிலையத்தின் அருகில், ரோட்டோரமாக
உதயசூரியன் போட்ட "அன்பகம்" என் வீடு. வீட்டில் அம்மாவழி பாட்டி, சின்னப்பாட்டியின் பாதுகாப்பில் நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்.
சர்வணப்பொய்கையில் நீராடி என்ற பாட்டு போட்டுவிட்டால் அடுத்து
5  நிமிடங்களில் சினிமா ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம்.

என் வீடு உதயசூரியன் போட்ட வீடு என்று சொன்னேன் அல்லவா..
அந்த உதயசூரியன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.
(மேலே உள்ள படத்தில் இருக்கும் பத்தமடை என் வீடு அன்பகம்,
இப்போதும் எம் ஜி ஆருக்காக கட்டிய பால்கனியும் பால்கனிக்கு
மேல் செதுக்கப்பட்டிருக்கும் உதயசூரியனும் அப்படியே அந்த நினைவுகளின்
அடையாளமாக... )
வீடு கட்டியவுடன் கிரகப்பிரவேசத்திற்கு மக்கள் திலகம் எம், ஜி., இராமச்சந்திரன் வருவதாக நாள் கொடுத்துவிட்டார். அவ்வளவுதான்.
வீட்டைக் கட்டிய பொறியியல் படிக்காத அந்தக் காலத்து எங்கள்
மேஸ்திரி, கொத்தனார் மறைந்த திரு. இலட்சுமணத்தேவர் அவர்கள்
உடனே மாடியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றார்.
என் அப்பாவும் சம்மதித்தார். மாடியில் ரோட்டைப் பார்த்து ஒரு ஆள்
அவருடன் இரண்டு பக்கத்திலும் இருவர் நிற்கிற அளவுக்கு ஒரு சின்ன
பால்கனி போட்டார்கள். திறந்தப் பால்கனி. அந்தப் பால்கனிக்கு மேல் உதயசூரியன் சின்னம். இப்போதும் அந்தப் பால்கனியும் உதயசூரியனும் அப்படியே இருக்கிறது. அப்போதெல்லாம் பள்ளி மாணவி நான்.
எம்.ஜி. ஆர் உங்க வீடு திறப்புவிழாவுக்கு வருகிறாராமே என்று உடன்
படித்தவர்களும் வாத்தியார்களும் கேட்கும் போது ரொம்பவும் பெருமையாக
இருக்கும். அப்படியே ஜிவ்வுனு வானத்தில் றக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற மாதிரி இருக்கும். பத்தமடை மாமா ந.பரமசிவம் அவர்கள் மற்ற ஏற்பாடுகளை
எல்லாம் கவனித்துக் கொண்டார். 1967ல் தேர்தல் நேரம். தேர்தல் சுற்றுப்பயணத்தில் எங்கள் வீட்டுத் திறப்புவிழாவும் இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கு முன் தான் எம் ஜி ஆர் சுடப்பட்டார்.
1967 ஜனவரி 12ல் எம் ஜி ஆர் சுடப்பட்டார் என்ற செய்தி காட்டுத்தீப் போல
பரவியது. இப்படியாக எம் ஜி ஆர் எங்கள் வீட்டுக்கு வரவில்லை.
இறுதியில் அன்பகம் திறப்புவிழா ரொம்பவும் எளிய முறையில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொள்ள நடந்ததில் ரொம்பவும் வருத்தப்பட்டது நான் தான்.

என்னைவிட அதிகம் வருத்தப்பட்டது எங்கள் வீட்டுக்கு அடுத்தவீட்டில்
வாழ்ந்த சீதப்பாட்டி. சீதப்பாட்டிக்கு இரண்டு பெண் குழந்தைகள். எங்கள் வீட்டு
காம்பவுண்டு சுவர் தான்  அவர் வீட்டின் காம்பவுண்ட் சுவராக இருந்தது. குடிசைவீடு என்று சொல்வதற்கில்லை. ஒடு வேய்ந்த வீடு. நாங்கள் அவரைப் சீதப்பாட்டி என்றழைத்தாலும் அவருக்கு அதிகம் வயதிருக்காது. அவர் தலைவாரியோ புதிதாக ஒரு புடவையைக் கட்டியோ நான் பார்த்ததே இல்லை. ஒரு மூக்குத்தி மட்டும்தான் அவர் அணிகலன். வெற்றிலைப் போட்டு எப்போதும் சிவந்திருக்கும் வாய். அவர் வீட்டில் சோறு மட்டும் தான் வடிப்பார்கள்
என்று நினைக்கின்றேன். எப்போதும் சாம்பார் அல்லது தொட்டுக்கொள்ள
கூட்டு, ஊறுகாய் என்று ஏதாவது கேட்பார். கொஞ்சம் சோறு போட்டுக் கொண்டு எங்கள் வீட்டு வராந்தாவுக்கு வந்து கேட்கும் போது எங்கள் பாட்டிக்கு
கோபம் வரும் . தினமும் இதே பிழைப்பா போச்சு இவளுக்கு என்று சொல்லிக்கொண்டே கொடுப்பார். எங்கள் அனைவருக்கும் அவரை ரொம்பவும் பிடிக்கும். ஏனேனில் அவர் ஒரு தீவிரமான எம் சி ஆர் ரசிகை. எம். சி ஆர் படங்களை விடாமல் பார்ப்பார். சரவணப்பொய்கை பாட்டு போட்டவுடன்
போட்டுட்டான் போட்டுட்டான் நேரமாகுது என்று அவர் ஓடுவதைப் பார்த்திருக்கிறேன். எத்தனை நாட்கள் எம். சி ஆர் படம் ஓடினாலும்
சீதப்பாட்டி முதல் காட்சியிலோ இரண்டாவது காட்சியிலோ இருப்பார் கட்டாயமாக.. எம். சி. ஆரின் கண்ணசைவையும் வாள் சண்டையையும்
துள்ளும் இளமைப் பாடல்களையும் அவர் சொல்லக் கேட்பதே ஒரு தனி
ஆனந்தம் தான். அவர் தன் மறைந்தக் கணவரைப் பற்றி எதுவுமே பேசி
நாங்கள் கேட்டதில்லை. தினமும் சினிமா பார்க்க (80 பைசா என்று நினைக்கின்றேன்) தரை டிக்கெட்டுக்கு
காசு வைத்திருப்பார். அவர் ஒரு இசுலாமியர் வீட்டில் வேலைப் பார்த்தார்.
விடிவதற்குள் அந்த வீட்டுக்குப் போய் தொழுவத்தில் மாட்டுசாணத்தை
அள்ள வேண்டும். அந்த வீட்டில் ஒரு மந்தை மாடுகள் இருப்பதாகச் சொல்லி
இருக்கிறார். மாடுகள் மந்தைக்குப் போகும் வரை அவருக்கு வேலை இருக்கும்.
அதன் பின் அந்த வீட்டுப் பெண்கள் சொல்லும் - சாதியப் படிமுறை ஏற்றுக்கொள்ளும் சில வேலைகள் - செய்வார். மதியம் அவர்கள் கொடுக்கும்
பழங்கஞ்சி அவருக்கு உணவு. மாலையில் மந்தையிலிருந்து மாடுகள் வந்தவுடன் இவர் வீடு திரும்புவார். வரும் வழியிலேயே எங்க ஊரு வாய்க்காலில் குளித்துவிட்டு புடவையைச் சுற்றிக்கொண்டு இன்னொரு பக்கத்தை காற்றில் காட்டும் வகையில் பிடித்து காய வைத்துக் கொண்டே வீட்டுக்கு வருவதற்கும் புடவைக் காய்வதற்கும் சரியாக இருக்கும்.
வந்தவுடன் பழைய சோறு இல்லை என்றால் உலை கொதிக்கும்.
வீட்டுக்கு வந்தவுடன் அவருடைய எம் சி ஆர் புராணம் ஆரம்பித்துவிடும்.
அவர் சொல்லும் எம் சி ஆர் கதைகளைக் கேட்ட அவர் தூரத்து உறவினர்
அவருடைய அண்ணி ஒரு முறை அவருடன் சேர்ந்து எம். சி ஆரைப் பார்க்க
கொட்டகைக்குப் போனார். வரும் போது கேட்டிருக்கிறார் சீதப்பாட்டி "நம்ம எம் சி ஆர் எப்படி? "னு.
'ஏட்டி எங்கட்டீ எம் சி ஆர் தெரிஞ்ச்சாரு. அந்த ஓட்டையிலிருந்து
வெளிச்சமா வந்திச்சி. சத்தமும் பாட்டும் கேட்டுச்சி. அவரு எங்கட்டி தெரிஞ்சாரு? " என்று சொல்ல பிறகென்ன மைனிக்கும் சம்மந்திக்கும் ஒரே சண்டை. சீதப்பாட்டி தன் அண்ணியைப் பார்த்து கூமுட்டை என்று சொல்ல
"யாருட்டீ கூமுட்டை, நீ கூமுட்டை, உன் மவ கூமுட்டை" என்று பேச
கெட்ட வார்த்தைகளின் அகராதி அங்கே சிதறி எங்கள் வீட்டுவரை வந்தது.

ஒரு வழியாக இருவரையும் சமாதானப் படுத்தி வைத்தோம். சீதப்பாட்டி
அதன் பின் அவருடைய அண்ணியுடன் பேசவதே இல்லை. இந்தக் கதை
அன்றைக்கு எம் சி ஆர் கதையை விட சுவராசியமாக எங்கள் வட்டத்தில்
ஓடிக்கொண்டிருந்தது. இப்படியாக சீதப்பாட்டியின் ரசிகையாக மாறிய நான்
அவர் பொருட்டு எம் சி ஆர் ரசிகையாகவும் இருந்தேன் என்பதை
ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.


திரு இரத்தினவேல் பாண்டியன் சேரன்மகாதேவி சட்டமன்ற  தொகுதியில்
வேட்பாளாராக நின்ற போது அவருக்கு பிரச்சாரம் செய்ய எம் ஜி ஆர்
வந்திருந்தார். பத்தமடை ரோட்டில் எம் ஜி ஆரும் இரத்தினவேல் பாண்டியன் மாமாவும் ஒரே வாகனத்தில் நின்றார்கள். கருக்கல் மாலை நேரம்
என்று நினைக்கின்றேன். எம் ஜி ஆரும் இரத்தினவேல் பாண்டியனும்
அருகருகே நின்ற காட்சி... ! இப்போதும் மனத்திரையில் பதிந்திருக்கிறது.
எம் ஜி ஆர் பிரச்சாரத்திற்கு வந்தும் இரத்தினவேல் பாண்டியன் தோல்வி
அடைந்தார். ஆனால் அது தான் அவருக்கு ஒரு வகையில் திருப்புமுனையாக
இருந்தது என்றார்  இரத்தினவேல் பாண்டியனுக்கு மிக நெருக்கமான நண்பரான என் தந்தையார். அதன் பின் இரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதி மன்ற நீதிபதி ஆனார்.

எம் ஜி ஆர் , பம்பாய் தமிழ்ச் சங்க வளர்ச்சி நிதிக்காக நாடகம் போட்டிருக்கிறார் என்றும் அதன் பொருட்டு பம்பாய் வந்து தங்கி
இருக்கிறார் என்பதும் அப்பாவுடனான அவர் நட்பையும்
மும்பையில் வசிக்கும் பெரியவர் கொ. வள்ளுவன் அய்யா என்னிடம்
சொல்லி இருக்கிறார்.

எம் ஜி ஆர் தமிழகத்தின் முதல்வராக இருந்த நேரம். அப்போது பம்பாய் தாராவி வி. கே. வாடி நெல்லை மஹாலில் எங்கள் வீடு. தமிழக அமைச்சராக
இருந்த சத்தியவாணி முத்து அவர்கள் வி.கே. வாடிக்கு ஒரு நிகழ்வுக்காக
வந்திருந்தார். அப்பாவுக்கு ஆள் மேல் ஆள் தூதுவிட்டார். அதிமுக கட்சியை
மும்பையில் பலப்படுத்த சில இலட்சங்கள் அப்பாவுக்கு பேரம் பேசப்பட்டது.
கடைசி தூதுவர் தான் அப்பாவுக்கு மிக நெருக்கமான சத்தியவாணி முத்து
அவர்கள். சத்தியவாணி முத்து அப்பாவை தன் தம்பியாகவே கடைசிவரை
நினைத்திருந்தார். அரசியலை விட்டு முழுக்கவும் துறவற நிலையில் வாழ்ந்த
என் அப்பா சத்தியவாணி முத்துவைப் பார்க்க மறுத்துவிட்டார்.
ஆனால் சத்தியவாணி முத்து பேசியதை வாராந்தாவில் நின்று கேட்டுக்
கொண்டிருந்தார்!

இப்போதெல்லாம் எம். ஜி ஆர் படங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது சீதப்பாட்டி தன் முகம் காட்டி வெற்றிலைப் பற்கள் வெளியில் தெரிய
சிரிக்கிறாள்.