பெரியாரே கருப்பு சட்டையுடன் வந்தாலும்
அப்பெண் என் சந்தேகத்தை தீர்த்தார்.கருப்பு கலர் சால்வை போர்த்தி இருப்பதைதான்அவர் அப்படியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.அது அவர் குற்றமல்ல.
புதியமாதவி பக்கங்கள்
அப்பெண் என் சந்தேகத்தை தீர்த்தார்.கருப்பு கலர் சால்வை போர்த்தி இருப்பதைதான்அவர் அப்படியாக அடையாளப்படுத்திக் கொண்டார்.அது அவர் குற்றமல்ல.
தேவதைகளும் அரக்கர்களும்
Is lord shiva a illumanaty?!
டான் ப்ரெளவுன் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எல்லாம் 'டாவின்சி கோட் ' மட்டும் தான். அவர் எழுதிய இன்னொரு முக்கியமான புத்தகம் 'angels and demons'. தேவதைகளும் அரக்கர்களும்.
புனைவுகள் என்ற பெயரில் அவர் நடத்தி இருக்கும் அறிவியல் சாகசங்களை இப்புத்தகத்தில் காணலாம்
கலிலீயோ ஒரு இலுமனாட்டி என்று ஆரம்பிக்கிறார் டான் ப்ரெளவுன். சமயமும் அறிவியலும் ஒரெ உண்மையைப் பேசும் இருவேறு மொழிகள் என்று சொலவதோடு நிற்கவில்லை கலிலீயோ! தன் தொலைநோக்கு ஆடியில் பிரபஞ்சத்தின் கோள்கள் சுழல்வதைக் கண்டதுடன் அதற்கு நடுவில் இறைவனின் இசை ஒலி கேட்பதாக சொன்னார். (பக் 50, 51). ஆனால் இலுமனாட்டிகளின் அறிவுலகம் தங்களுக்கு ஆபத்து என்பதால் மதபீடம் அதையும் ஏற்கவில்லை.
கலிலீயோவும் paradise lost எழுதிய ஜான் மில்டனும் சமகாலத்தவர்கள். அவர்கள் சந்தித்து இருக்கிறார்கள்.அக் காட்சிகள்
ஓவியங்களாக இருக்கின்றன என்கிறார் டான் பிரவுன்.
அறிவியலும் சமயமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. அறிவியலாளர்களை கொலை செய்தும் புதைத்தும் மத பீடங்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டன அச்சுழலில் அறிவியலின் ஒரு சாரார் அறிவியலும் சமயமும் ஒரே உண்மையை வெவ்வேறு பார்வையில் பேசுகின்றன. இயங்கியல் சக்தி தான் படைப்பின் பிதா.
Physics gods nature law என்றார்கள்.
நம் பேச்சு வழக்கில் அறிந்தோ அறியாமலோ "இவ/ இவன் பெரிய இலுமினாட்டி " என்று சொல்லுவதுண்டு. தனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டிக் கொள்பவர்களை இலுமினாட்டி என்ற வசை சொல்லால்
நக்கலாக பேசுகிறோம். இலுமினாட்டி என்ற சொல் புத்திஜீவி , ஞானம் பெற்றவன், enlightment என்பதுடன் தொடர்புடையது . நம் உலகின் அனைத்து கண்டுபிடிப்புகளின் பிதாமகன்கள் இலுமினாட்டிகள்.
இவர்கள் பிரபஞ்சத்தின் இயங்கு விசையை மாபெரும் சக்தி என்றார்கள்.
ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம் என்ற சங்க இலக்கியத்தின் ஆதித்தமிழன் கண்ட அறிவியல் உலகம் இங்கே நமக்கு நினைவுக்கு வரும்.
எல்லாமும் கடவுள்தான் உருவாக்கினார் என்ற மதபீடங்களில் நம்பிக்கையை தங்கள் கண்டுபிடிப்புகளின் மூலம் தகர்த்தவர்கள் இலுமனாட்டிகள்.
குறியீடூ மொழிகளில் இவர்களின் ரகசியங்கள் புதைந்திருக்கின்றன.
எகிப்தின் பிரமிடுகள் முதல் மயன் வழிபாடுகள் வரை குறியீடுகள் மூலம் தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் குறியீடு ஒற்றைக்கண் என்பதை அரக்கனுக்கு ஒற்றைக்கண் என்று இலுமனாட்டிகளை அரக்னாக்கியது அதிகார பீடம். இப்படித்தான் ஞானக்கண் , சாத்தானின் கண்ணாக கீழிறக்கம் செய்யப்பட்டது. இந்திய தத்துவத்தில் ஞானக்கண் நெற்றிக்கண்ணாக வளர்த்தெடுக்கப்பட்டது.
சிவன் ஒரு இலுமினாட்டி. இலுமினாட்டிகள் தங்கள் ரகசியங்களை பனி மலைகளில் புதைத்திருக்கிறார்கள் என்று நம்பிக்கை. அதனால் தானோ என்னவோ சிவனையும் பனிமூடிய இமயத்தில் கொண்டு உட்கார வைத்திருக்கிறோம்.
இந்த நெற்றிக்கண்ணும் காமமும்
ஒன்றே ஒன்று எதிர்த்தும் ஈர்த்தும் இயங்கும் உயிரிகள் என விளக்க பல்வேறு கதைகளைக் கொண்டு புனைந்து இலுமினாட்டியை புனைவுக்குள் புதைத்துவிட்டோம் நாம்!!
இப்புனைவுகளின் உச்சம், அவன் காதலியின் மூன்றாவது முலையோடு நெற்றிக்கண்ணை கொண்டு பொருத்தி இருக்கும் ஆண்மைய அதிகாரப் புனைவு.!!
இலுமினாட்டிகள் எப்போதும் தங்கள் அறிவின் திறவுகோல் கொண்டு மூடநம்பிக்கைகள் , அதிகார பீடங்களுக்கு எதிராக உலகம் எங்கும் கருத்தியல் பரப்புரை நடத்தியவர்கள்.அப்போதும் இப்போதும்
அதிகாரபீடத்திற்கு இலுமினாட்டிகள் என்றால் அச்சம்தான்.
இலுமனாட்டிகளை இப்போது அவர்கள் கொலை செய்வதில்லை! கொலை ஆயுதங்கள் மாறிவிட்டன. அவ்வளவுதான்.
நம்மிடம் டான் பரெளவுன் எழுத்துகள் இல்லை. காரணம் இங்கே எழுத்துலகம் தன்னை ஆண்டபரம்பரையின் எச்சிலாக இருப்பதில் பெருமை கொள்கிறது! இங்கே நடப்பதெல்லாம் அதிகார பீடம் கட்டி அணைத்து வெளிப்படுத்தும் திருதராஷ்டிர ஆலிங்கனம்.
#புதியமாதவி_2023புத்தகவாசிப்பு1
#puthiyamaadhavi_2023bookreview1
இன்று மனம் திறக்கிறேன். இது ஒரு தலைமுறையின் மௌனம் வெடித்துச் சிதறும் தருணம். எனக்கு வேண்டிய அன்பு உள்ளங்களையும் இது காயப்படுத்தலாம். ஆனால் என் வலியும் காயங்களும் சீழ் வடியும் போது எதைக் கொண்டும் மூடி மறைத்து விட முடியவில்லை.
இந்திய மண்ணில் மும்பையின் புலம் பெயர் வாழ்க்கை தனித்துவமானது . இந்த வரலாறு பிறந்த ஊரில் நீங்கள் வாயில் திணித்த ' பீ' தின்ன முடியாமல் ஓடி வந்த தமிழ்ச்சாதியின் வரலாறு. எனவே எங்கள் வாசம் உங்களுக்கு குமட்டலாம். இலக்கிய பீடங்களின் தீண்டாமைக்கு இதுவும் காரணமா என்றால் அதற்கு
நாங்கள் பொறுப்பல்ல!
மன்னித்து விடுங்கள்.
நாங்கள் கூலிகள்தான். சுயமரியாதையை ஆடையைப் போல அடிக்கடி நிறமாற்றிக் கொள்ளும் அறிவு ஜீவிகள் அல்ல நாங்கள்.
அது எங்களுக்கு
எங்கள் அடித்தோலின்
உள்ளடடுக்காக இருப்பது
உங்கள் நாகரிக மரியாதையை கேள்விக்குறியாக்கியதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
மன்னித்து விடுங்கள்.
எங்களுக்கு அரசியல் உண்டு. அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் அவலம்
எங்கள் அரசியல் உலகில் இல்லை.
எங்களிடமும் கட்சிகள் உண்டு. ஆனால் எங்கள் எழுத்தும் வாழ்க்கையும் எந்த ஒரு சிபாரிசு கடிதம் கேட்டும் உங்கள் எவரின் கதவுகளையும் தட்டியது இல்லை.
எங்கள் தலைமுறை இட ஒதுக்கீடுகள் அறியாது. நாங்கள் சுயம்புவாக எழுந்தோம். எங்கள் வாழ்வும் எங்கள எழுத்தும் சுயம்புவானது.
இதைப் புரிந்து கொள்ள உங்கள் இலக்கிய அரசியல் பக்குவப்படவில்லை.!
உங்கள் கருப்பு , சிவப்பு,
கருப்பு சிவப்பு ,
நீலம்,
பச்சை....நிறங்கள்..
எங்கள் வெள்ளாவி அடுப்பில்
வெளுத்துப் போகின்றன!
வெட்கப்படுகிறேன்.
முற்போக்கு பிற்போக்கு வகையறா
இயல் நாடக விளக்கு வகையறா
மதுரை கோவை நெல்லை இலக்கிய தொகை வகையறா
தலைநகர் சென்னை இலக்கிய சங்கம வகை தொகை வகையறா
வலது, இடது, சாரி, பைஜாமா..
இத்துடன்
உள்ளூர் வெளியூர் வெளிநாடு
கார்ப்ரேட் வகையறா..
இத்தியாதி சகல வகையறாவும்
எங்களை விலக்கிவைப்பதில்
தங்கள் ஒளிவட்டத்தை
தலையில் சுமந்தலைகிறார்கள்.
தமிழக அரசு என் வீட்டுப்பத்திரம் கேட்கிறது.
இல்லாத வீட்டுக்கு யார் தருவார்
முகவரி.! ?
உதவித்தொகையோ விருதோ எதாக இருந்தாலும் நானும் என் எழுத்தும்
அகதியாக வெளியில் தள்ளப்படுகிறோம்!
இலக்கிய பீடத்தின்
மீசையில் வளரும் மயிரு
சிரைத்தாலும் வளரும் திமிரா?
அட போடா..
நீங்களும் உங்கள் ஆட்டமும்!
நிராகரிப்புக்கு வரையறை உண்டு.
விதிகள் உண்டு.காரணம் உண்டு.
உதாசீனப்படுத்தலுக்கு!!!!
இதோ,.இதுவரை நடந்ததும்
இனி நடக்க இருப்பதும் கூட
என்னை வாசித்துவிட்டு
நீங்கள் எழுதிய
மதிப்புரை அல்ல.
வாசிக்காமலேயே
நீங்கள் விலக்கிய
இலக்கியசாதி பிரஷ்டம்
டமில் வால்க.
வழற்க.
இதோ... இதை எழுதி முடித்த
இத்தருணம்...
அனைத்திலிருந்தும்
விட்டு விடுதலையாகி நிற்கிறேன்.
.....
புதியமாதவி
மும்பையிலிருந்து.
20230102
இரவு 23.15
#புதியமாதவி_இலக்கியஅரசியல்
#tamilliterature_politics
ஆண் பெண் உறவில் பெண்ணை இழிவுப்படுத்தி அதைக்கொண்டுபோயி பெய்யற மழையோட தொடர்புபடுத்தி எழுதப்பட்ட உரைகள்தான் தமிழ் இலக்கிய உலகில் புனைவுகளின் பித்தலாட்டம்."
ஆண் பெண் உறவு.. அது ஓர் அரசியல்..
எங்காவது
உறவின் அர்த்தங்கள்
பூத்திருக்கலாம்.
அப்பூவின் பெயர்
தெரியாமல் இருக்கலாம்.
ஆனாலும்...
கூடவே இருக்கிறது
நம்பிக்கையில் கிழிபடும்
நாட்காட்டி நாட்கள்.
நாடு கடத்திய தேசங்கள் உண்டு.
வீடு கடத்திய உறவுகள்???!!
அலைந்து கொண்டிருக்கிறது
காலத்தின் சாபம்.
யாரை யார் விரட்டுவது?!
பிறந்த வீடும்
வளர்ந்த முற்றமும்
கதவடைத்துவிட்ட வாசலும்
திறந்து வைத்திருக்கின்றன
கல்லறைகளை மட்டுமே.
ஆடுமாடுகள் இளைப்பாறும்
நிழலில்
நினைவுகளை அசைபோடும்
நிழலோடு நானும்.
என்மீது கவிந்திருக்கும்
உன் வாசனையை எரிக்கிறேன்.
மல்லிகைப்பூ ஊதுவத்தி
மணக்கும்..
பறக்கும் சாம்பல் துளியிலும்
காற்றோடு கலந்து
நம் கதைகளைப் பேசும்.
..
உன் தேசம்
எனக்கானதாக இல்லை.
வலி முறித்த மின்னல்
மழைத்துளியின் ஈரத்துடன்
கசிகிறது..
++அப்பாவின் நினைவுநாள்.
13 நவம்பர் 1986
கவிஞர் விழி.பா.இதயவேந்தன் என்ற பா.அண்ணாதுரய் அவர்கள் தலித் சிறுகதை எழுத்தாளர் என்றே பொதுவாக அறியப்படுகின்றார். 1984 முதல் எழுத ஆரம்பித்த இவரின் இலக்கியப் பயணம் இன்று கிட்டத்தட்ட 14 புத்தகங்களாக இந்த விளிம்புகளுக்கு வெளிச்சம் தந்துக்கொண்டிருக்கின்றது.
நந்தனார் தெரு, வதைபடும் வாழ்வு, தாய்மண், சிதேகிதன், உயிரிழை, அம்மாவின் நிழல், இருள் தீ, சகடை என்ற சிறுகதைகளின் தொகுப்புகள், ஏஞ்சலின் மூன்று நண்பர்கள் என்ற குறுநாவல்கள், தலித் அழகியல், தலித் கலை, இலக்கியம் என்ற கட்டுரைகளின் தொகுப்பு... இந்த எழுத்து வரிசையில் ஒற்றையாக நின்று கனவுகளை விரிக்கின்றது அவருடைய கவிதைகள்.
கவிதைகளின் தொகுப்பு : கனவுகள் விரியும்.
"அடிப்படையில் நான் ஒரு கவிஞனா என்றால் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. கலைஞன்.. கலையின் பிரமாண்டமான உலகத்தில் ஒரு சின்ன உளியோடு கரடுமுரடான கற்களிலிருந்து கலைகளாக வடிக்கத் துவங்கியிருக்கிற ஒரு எளிய சிற்பி" என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் கலைஞர் இந்தக் கவிஞர்.
தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும்போது, அதுவும் அவர்களின் ஒருவரே எழுதும்போது வைதீக சமய சமூக அமைப்பின் நம்பிக்கைகள் தூக்கி எறியப்படுகின்றன. புரட்டிப் போடப்படுகின்றன. அகமும் புறமும் சார்ந்து இயங்கும் இவரின் எல்லா இயக்கங்களிலும் ஒடுக்கப்பட்டவனின் வலியும்
வேதனையும் பதிவுச் செய்யப்படுகின்றன. எது அழகு? என்று கவிஞனைக் கேட்டால் காலம் காலமாய்
ரோசாப்பூ அழகு
கள்ளிச் செடி அழகு
வானம் அழகு
நடசத்திரம் அழகு
நிலவு அழகு
சூரியனின் சூடு அழகு
நதி அழகு
காதலி அழகு
அவள் கண் அழகு
கருங்கூந்தல் அழகு
பெண் அழகு
பெண் விரும்பும் ஆணின் வீரம் அழகு
விவேகம் அழகு... இப்படி விரிக்கலாம்..
இப்படித்தான் அழகியல் விரிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் சொல்லப்போனால் இந்த அழகியல் சிந்தனை உலகம் தழுவிய அழகியல் சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தப் புள்ளியிலிருந்து விலகி விரிகின்றது இவரின் அழகு என்ற கவிதை
"அம்மாவின் யாசிப்பில்
எப்போதாவது கிடைக்கும்
எனக்குத் துணி
சேற்றிலும் துர்நாற்றத்திலும் ஊறிப்போன
அம்மா நெட்டி முறித்து
அழகு பார்ப்பாள் என்னை
திரும்ப திரும்ப.."
(பக் 27)
தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை. தலித்தின் தோள்களைத் தழுவும் தோழமைக்கூட தோழமைக்கான அர்த்தத்தை காயப்படுத்தி விடுகின்றது. தலித்தின் வேதனையை அனுபவத்தை ஒரு தலித் உணர்வதற்கும் தலித் வட்டத்திலிருந்து வெளியில் நின்று உணர்வதற்கும் நிறைய வேறுபாகுகள் இருக்கத்தான் செய்கின்றது.
" நீ
எனக்கானவன் என்பதில்
எனக்கு இருக்கிறது
இன்னமும் சந்தேகம்.
எவற்றிலாவது உனது பதிவை
என்னுள் வைத்துப் பார்க்கத்
தொடர்பேயில்லாமல்
உன்னால் எப்படி முடியும்?"
( க : அர்த்தம்/ பக் 30)
"தமிழகத்தில் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பே நால் வருணப்பிரிவுகள்
இருந்தன என்பதை நம் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. அவர்கள் தலித்துகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அன்றுமுதல் இன்றுவரை தலித்துகளுக்கு மேலுள்ள பெரிய சாதிகள் முதல் சின்னச் சாதிகள்வரை ரொம்ப வன்மத்தோடு கண்காணித்து வந்துள்ளன. மீறினால் வன்முறைக்குத் தயாராக இருக்கின்றன " என்கிறார் தலித்தியச் சிந்தனையாளர் ரா.கவுதமன். அதை வரிக்கு வரிச் சொல்லும் கவிதைதான் இரத்தசாட்சி.
" நீ
உயிரோடு இருந்ததற்கான
தடயங்களை ஒவ்வொன்றாய்
ஓர் ஆய்வாளனைப் போல்
பரிசீலித்துப் பார்த்தேன்..
மூச்சு முட்டமுட்ட
உன் குரல்கள் நெறிக்கப்பட்டிருந்தன.
கதறக் கதற
நீ கற்பழிக்கப்பட்டிருக்கிறாய்
அடையாளம் தெரியாதவாறு
உன் எலும்புகள்
நொறுக்கப்பட்டிருக்கிறது.
செல்லும் இடங்களிலெல்லாம்
உன்னைப் பற்றிய
செய்திகள்கூட எரிக்கப்பட்டிருக்கிறது."
(பக்: 32)
தலித்தின் வரலாற்றில் அவர்களின் அவலங்களுக்கு சாட்சியாய் நிற்பது மட்டுமின்றி அவர்களின் நம்பிக்கைக்கும் இரத்தசாட்சியாய் நிற்பது மட்டுமே தலித்தின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை உணர்ந்து கவிதையை நம்பிக்கை கனவுகளுடன் முடித்திருப்பது இரத்தசாட்சியை ஈரமுள்ளக் கவிதையாக்குகின்றது.
இப்படிப்பட்ட தலித்திய எழுத்துக்களால், சிந்தனைகளால் தீடிரென்று தலித்திய வாழ்வியல் மாறிவிடுமா?.. என்றால் அப்படிப் பட்ட பூம்பா புரட்சிகளில் யதார்த்தத்தைப் படைக்கும் இவருக்கு நம்பிக்கை இல்லை. எதிலும் யதார்த்த நிலையை விட்டு விலகாமல் இவர் கனவுகள் விரிவது மட்டுமெ இவர் கனவுகளுக்கும் கவிதைகளுக்குமானத் தனிச்சிறப்பு என்றே சொல்லவேண்டும்.
"காலங்காலமாய்
நின்றிருந்ததில்
திடீரென்று பாய்ந்தோட
நம்மால் முடியாது.
ஓடமுடியாவிட்டால் என்ன
நிற்காதே.
ஓரடி முன்னால் வைத்தபடி
நட..
களத்தில் ஓடுவது
நாலை நடக்கும்வரை
இப்போதைக்குத்
தைரியமாய் நட!"
(பக்: 36 & 37)
தலித்தியப் படைப்பாளி தலித்திய பிரச்சனைகளை மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் மானுடம் தழுவிய ஒட்டு மொத்த வேதனையை, வறுமையை, வலியை, ஏமாற்றத்தை, இயலாமையை மற்றவர்களைவிட ஒரு தலித்தியப் படைப்பாளிக்கு உணர்வதும் உள்வாங்குவது படைப்பதும் எளிதான அனுபவமாகிவிடுகின்றது. ஆழ்கடலில் முத்துக்குளிப்பவனுக்கு கரையோரத்து கிளிஞ்சல்களைப் பொறுக்குவதில் சிரமம் இருப்பதில்லை. இதைத்தான் இவரின் நிறம், வியாபாரம், எங்கள் தெரு, குருவிக்கூடு, அலுவலக்சிறை போன்ற கவிதைகளில் காண்கின்றோம். இல்லற உறவில் ஏற்படும் பிரச்சனைகள் பெண்ணுக்கு மட்டுமே உரியதல்ல. தன் பெண்டு, தன் வீடு , தன்பிள்ளை, தன் உறவு என்று வாழாமல் இயக்கம் சார்ந்து வாழும் ஆண்களுக்கும் இருக்கும் பிரச்சனையை மிகவும் நுட்பமான அந்த முரண்பாடை யாரையும் குற்றம் சொல்லாமல் இவர் எழுதியிருக்கும் கவிதைதான்
"எனக்கும் அவளுக்கும்".
எனக்குப் பிடித்தது
அவளுக்குப் பிடிக்கவில்லை
அவளுக்குப் பிடித்தது
எனக்குப் பிடித்த மாதிரி இல்லை.
எங்கோ ஓர்
வேர் முடிச்சு..
சுழன்று சழன்று
சுருண்டு அடங்கி
எனக்குள் அல்லது
அவளுக்குள்
விலக மறுக்கிறது..
(பக் 97)
அகம் சார்ந்து எழுதப்பட்டிருக்கும் சிலக் கவிதைகள் அதன் கருப்பொருட்கள் உரைநடை உத்திகள் பாத்திரப்படைப்புகள்.. இவருடைய சிலச் சிறுகதைகளின் மறுவாசிப்பாக இருப்பதை இவரின் கதைகளை வாசித்தவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக இவருடைய சிறுகதைகளின் தொகுப்பு அம்மாவின் நிழலில் உள்ள சிறுகதைகள் அலுவலகச்சிறை, ஒரேயொரு பார்வையில்.. கதைகளைச் சொல்லலாம்.
சூடான அக்னிக்குழம்பாக கொதிக்கின்ற தலித்திய யாதார்த்த வாழ்வியலைப் படம்பிடிக்கும் இவரின் எழுத்துக்கள் எரிமலையாக வெடிக்காமல் வல்லினம் தவிர்த்து மென்மையாக ஒரு அதிர்ச்சியை மின்னலெனத் தாக்கிச் செல்கின்றன.
தலித்திய வாழ்வியலின் காட்சி, அதில் பிறக்கும் சமுதாயக் கேள்வி, முடிவில் நம்பிக்கைத் தரும் வரிகளில் முடிக்கும் வடிவமைப்பை கட்டமைத்துக் கொண்டு இவர் கவிதைக் கனவுகள் இலக்கிய வானில் விரிந்திருக்கின்றன.
கனவுகள் விரியும்
வெளியீடு: அநுராகம்
19, கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை 600 017
விலை: ரூபாய் 30/ மட்டும்
பக்கங்கள் : 112
(மீள்பதிவு: நன்றி: வார்ப்புகள்.காம்)
கவியரங்க கவிதைகளை வேறு இணைத்திருப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது.
முதல் புத்தகம் என்பதால் வெளியீடு விழா என பிரமாதப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. தன் வாழ்த்துரையில் நாஞ்சில் "எல்லாமே கடக்க முடிகிற தூரங்கள் தான், நடக்கத் தயாராக இருந்தால்" என்று முடித்திருப்பார்.
தூரங்களை கடந்திருக்கிறேனா ?!! தெரியாது.
நேற்று நாஞ்சில் நாடன் அவருடைய அண்மையில் வெளிவந்த 4 புத்தகங்களை " புதியமாதவிக்கு வாழ்த்துகளுடன்" என்றெழுதி கையெப்பமிட்டு அனுப்பி இருக்கிறார். காலையில் எழுந்தவுடன்' காஃபி வித் நாஞ்சில்'
பல நினைவுகளையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துவிட்டது.
என் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும் வாழ்த்துரையுடன் அவர் எழுதி இருந்தக் கடிதம்.. அது என்னளவில் மிகவும் முக்கியமானது. அக்கடிதத்தில்
" கான முயல் எய்த அம்பினில்
யானை பிழைத்த வேல் ஏந்நதலினிது"
என்ற திருக்குறளோடு முடித்திருப்பார். என் ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவருடைய அக்கடிதத்தை எடுத்து வாசிப்பது இன்றுவரை தொடர்கிறது.
தொல்குடி சிறுகதை தொகுப்பில் தன்னுரையாக "கைம்மண் அளவு" என்று எழுதியவர் இதே திருக்குறளுடன் முடித்திருக்கிறார்..
இன்னும் பக்கங்களைப் புரட்டவில்லை!
முதல் பக்கத்தின் நினைவலைகள் இழுத்துச் செல்கின்றன.
அரசியல் கருத்து முரண்பாடுகள் உண்டு. இருவரும் அறிவோம். அதையும் தாண்டி அவர் எழுத்துகளை வாசிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும் எவ்வித நெருடலும் இல்லாமல் தொடர்கிறோம். தொடர்கிறேன்.
இலக்கியம் அதை எழுதுபவருக்கும்
வாசிப்பவருக்கும்
இதைக்கூட செய்யவில்லை என்றால்!
பேரன்பும் நன்றியும் நாஞ்சில் சார்.
Ammu….அம்மு
திரைப்படம் பாருங்கள்
எச்சரிக்கை..
உங்கள் ஆணுடன் உட்கார்ந்து பார்க்க வேண்டாம்!
“அடிக்கிற கைதான் அணைக்கும்”
ஆண் பெண் உறவில் பெண்ணை இதைவிட மோசமாக
ஏமாற்றும் ஒரு பொன்மொழி ?!!! இருக்கவே முடியாது.
என்னவோ அவனுக்கு மட்டும் கோபம் வருமாம்.
அதை வெளிக்காட்ட அவன் பெண்ணுடலைப்
பயன்படுத்திக் கொள்வானாம்.!
இதைக் காரணமாக சொல்லும் எந்த ஓர் அறிவுஜீவி புண்ணாக்கும் பொம்பளக்கி கோபம் வந்தா என்ன செய்வாடேனு யோசிச்சதில்ல.
அது அப்படித்தான்.
காலம் காலமாக பெண்கள் அப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.
இன்னிக்கு கணினி யுகத்தில் என்னவோ
இந்தப் பொம்பள பிள்ளங்க நாலு காசு சம்பாதிக்காறாங்களே
இதெல்லாம் வந்தப்பிறகு மாறிடுச்சு அப்படின்னு
சொல்லத்தான் ஆசை.
ஆனா.. இந்த மீசைக்காரப்பசங்க
சொல்லவிடுவதில்ல.
புதுசுபுதுசா எப்படி எல்லாம் தன் கோபத்தை
தன் மனைவி/ காதலி மீது காட்டுவது
என்பதில் பல புதுப்புது வித்தைகளை அறிந்தவர்களாக
இருக்கிறார்கள்.
மிருகம் பாதி, மனிதன் பாதி..
என்பதில் மிருகம் எப்போதும் அவனிடம் தூங்குவதில்லை.
அது பாய்வதற்கு தயாராகவே இருக்கிறது.
அந்த மிருகத்திற்கு வடிகாலாகவே பலருக்கு
திருமண உறவு கை கொடுப்பது அவலம்தாம்!
(எல்லோரையும் சொல்லவில்லை. )
கை நீட்டி நான் என் பொண்டாட்டியை அடிப்பதில்லை
என்று சொல்லும் ஆணிடமும் இருக்கிறது
அந்த மிருகம்.
அது மவுனத்தைக் கூட ஒரு பாய்ச்சலாக காட்டி
பெண்ணுடலையும் உள்ளத்தையும் பிறாண்டி
ரத்தம் கசிய வைத்து அதில் ஒரு சுகம் காணும்!
எத்தனை விதம் விதமான டார்ச்சர்கள்! ச்சே..
“பொறுத்துப் போயிடும்மா” என்று சொல்வது தவறில்லைதான்.
ஆனால் “பொறுத்துப் போயிடுப்பா”னு அவனிடமும் சொல்லவேண்டும்.
என் அம்மாவுக்கு இல்லாத இப்பிரச்சனை
என் தலைமுறைக்கு ஏற்பட்டதாக எப்போதும்
நினைப்பதுண்டு நான். காரணம் அம்மாவுக்கு அப்பாவின் ஆளுமை ஒரு கோவில். அவள் அதில் கேள்விகளின்றி சரணடைந்துவிட்ட பிறவி.
இங்கே உணர்வுப் பொங்க எழுதப்படும்
“நின்னை சரணடைந்தேன” என்பதும்
காலம் காலமாய் ஒலிக்கும் பெண்ணின் அழுகுரல்.
அவள் சரணடைய தயாராக இருக்கிறாள்.
நீ அதற்கு தகுதியானவனாக
இருக்கிறாயா?!!!
இதை எல்லாம் எனோதானோனு எழுதவில்லை.
வேலையை விட்டவுடன் மும்பை Sophia College For Women
ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் சேர்ந்தேன். Women counseling , Domestic violence – law and police help படிப்பும் பயிற்சியும். அப்பயிற்சியும் படிப்பும் முடித்து அதை
செயல்படுத்தும் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள் ரொம்பவும் வித்தியாசமானதாக அமைந்தது. நடுத்தர உயர் நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் அவலங்கள் தெரிய வந்தது.
‘யாரும்மா உன் புருஷன்?”
அவர்கள் சொன்னவுடன் ஏற்படும் அதிர்ச்சி…
அடப்பாவிகளா உனக்கு இப்படியும் ஒரு முகமா…!
அந்த நபர் எனக்கும் தெரிந்தவராகவும் சிலர் பிரபலங்களாகவும்கூட இருந்தார்கள். அது என்னை ரொம்பவும் மன உளைச்சலுக்குள் தள்ளியது.
மீண்டும் அந்த ஆண்களை சந்திக்கும்போது
பொய்யாக புன்னகைக்க முடியவில்லை.
இப்படியாக நானும் பாதிக்கப்பட்டேன்.
அதன்பின் தான்
அவனுக்குள் இருக்கும் அந்த வேட்டை மிருகம்
எப்போதும் விழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்.
அவன் அப்படித்தான் இருப்பான்.
நீ பொறுத்துப்போம்மா..என்பதன் அர்த்தம் இன்னும் ஆழமாக எனக்குள் வடுவானது.
பிறகென்ன…
நான் அதிலிருந்து வெளியில் வரவே சிரமப்பட்டேன்.
பெண்ணைப் புரிந்துகொள்ளவே முடியாது என்றெல்லாம் எழுதி இருக்கிறார்கள். அது பொய். அப்படி எழுதியதெல்லாம் ஆண்கள்.
ஆனால்… இப்போது சொல்கிறேன்…
ஆண் மனதைப் புரிந்து கொள்ளவே முடிவதில்லை.
அவனுக்குள் இருக்கும் அந்த மிருகம்
எப்போது பாயும்?
ஏன் பாய்கிறது?
அவன் தேவை என்ன?
அவன் காலம் காலமாய்
பெண்ணின் சரணாகதி நிலையிலும்
புரிந்து கொள்ள முடியாதவனாகவே இருக்கிறான்.
……
அம்மு … திரைப்படம்
இதன் ஒரு துளி.
பெண்கள் கட்டாயம் பாருங்கள்.
ஆனால் அவனுடன் உட்கார்ந்து பார்க்கவேண்டாம்.
தனியாக உட்கார்ந்து பாருங்கள்.
"take care Ammu
உன்னை உன் சுயத்தை இழந்து
வாழ்ந்துவிட முடியாது.
சரணடைதல் கூட அர்த்தமிழந்துவிடும்
take care மை டியர் அம்மு..
“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது”
-அறிஞர் அண்ணா.
(அண்ணா , திராவிட நாடு இதழ் , 06/1/1946)
இந்த வரிகளை அறிவார்கள். ஆனால் எத்தனை பேருக்கு
இதன் வரலாறு தெரியும்???
யாருமே பேசியதில்லை. ஏன்?!!!
ராஜாஜியை விவாதத்திற்கு அப்பாற்பட்ட ஞானியாகவும் உத்தமராகவும் ஒரு பிம்பத்தை ஊடகங்கள் கட்டி எழுப்பியதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
ராஜாஜி?!!!
1942ல் அலகாபாத்தில் கூடிய அகில இந்திய காங்கிரசில் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராஜாஜி கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. தீர்மானம் தோற்றதைக் காரணம் காட்டி ராஜாஜி காங்கிரசின் சகல பொறுப்புகளிலிருந்தும் உறுப்பினரிலிருந்தும் விலகிக்கொண்டார்.
வெள்ளையனே வெளியேறு காங்கிரசின் ஆகஸ்டு புரட்சி பற்றி எரியும்போது தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். ராஜாஜி கல்கத்தாவின் வணிகப் பேரவை நடத்திய கூட்டத்தில் ‘ஆகஸ்டு புரட்சியைக்’ கேலி செய்து பேசினார்.
இந்திய சுதந்திரம் நெருங்கியது என்றவுடன் ராஜாஜி காங்கிரசில் சேர முயற்சித்தார். அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கு காலியாக இருந்த 37 இடங்களில் ஒன்றான திருச்செங்கோடு பகுதியிலிருந்து ‘ராஜாஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது”
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி தலைவராக இருந்த பெருந்தலைவர் காமராஜருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி. அது எப்படி தனக்குத் தெரியாமல்
திருச்செங்கோடு தேர்தல் நடந்தது என்று திகைத்தார்.
1945 அக்டோபர் 31ல் திருப்பரங்குன்றத்தில் கூடிய தமிழ் நாடு காங்கிரசுகமிட்டி ‘ராஜாஜியை தமிழ் நாடு காங்கிரசுக்குள் சேர்க்க கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் திருச்செங்கோடு கபட செயலுக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரசு ராஜாஜி ஆகஸ்டிலேயே காங்கிரசில் சேர்ந்துவிட்டாரே என்று மெளலானா ஆசாத்தை விட்டு அறிக்கை வெளியிட வைத்தது. காமராஜர் ஏமாற்றப்பட்டார். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் “ கோடு உயர்ந்தது, குன்ற,ம் தாழ்ந்தது “ என்றார்.
(கோடு – திருச்செங்கோடு, குன்றம் – திருப்பரங்குன்றம்)
இதுமட்டுமல்ல, காந்திக்கும் காமராசருக்கும் நடுவில் கூட மனஸ்தாபங்களுக்கு காரணமாக ராஜாஜியே இருந்திருக்கிறார். காந்தியார் தமிழ் நாடு வந்திருந்தப்போது ராஜாஜி கூடவே இருந்ததும் தமிழ் நாடு காங்கிரசு தலைவராக இருந்த காமராஜர் காந்தியிடம் எதையும் உரையாட முடியாத சூழலும் ஏற்பட்டிக்கிறது . காந்தியும் காமராசரைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் சிலர் ‘க்ளிக்: அரசியல் நட த்துகிறார்கள் என்று காமராஜரை மறைமுகமாக குறிப்பிட்டதைக் கண்டித்து காமராஜர் காங்கிரசிலிருந்து பதவி விலக தயாராகும் அளவுக்குப் போனார் என்பதுதான் உண்மை. ஆனால் காந்தி ஒரு மழுப்பலான அறிக்கையை தன் ஹரிஜன் பத்திரிகையில் வெளியிட்டு காமராஜரை சமாதானப்படுத்தினார்.
1937ல் இந்தி திணிப்பு.. காங்கிரசு கட்சியின் விருப்பத்திற்கு மாறாகவே தன் விருப்பத்தின் படி இதைச் செய்த அதே ராஜாஜி அவர்கள்தான் 1957ல்
‘ஒருபோதும் இந்தி வேண்டாம்’ என்று எழுதினார்.
இதுதான் ராஜாஜி அவர்களின் பத்திரிகை ஊடக பலம்.
அன்று மட்டுமல்ல இன்றும்
“கோடு உயர்ந்தது, குன்றம் தாழ்ந்தது “ இதனால்தான்.