Monday, June 17, 2024

இராசேந்திர சோழன் கதைகளில் காமப் பெண்ணுடலகள்


இராசேந்திரன் சோழன் சிறுகதைகள் பெண்ணின் காமத்தைப் பேசுவதில்

போட்டிப் போடுகின்றன. அதில் இடம் பெறும் பெண்கள் அனைவருக்கும் காமம் தீர்க்க முடியாத  பசியாக அவர்கள் உடலை அலைக்கழிக்கிறது.

அவர்கள் எப்படியும் பசி தீர்க்கும் வேட்கை கொண்ட இரவு மிருகங்களாகிவிடுகிறார்கள். அவர்களின் உடல் எப்போதும் பசித்திருக்கிறது. அவர்களுக்கு சதா தன் பசி தீர்க்கும் வெறி மட்டுமே வாழ்க்கையில் பிராதானமாக இருப்பதாக தெரிகிறது. பசித்தால் என்ன கிடைத்தாலும் சாப்பிட்டுவிடும் உடல்களாக அவர்களின் உடல்கள் சித்தரிக்கப்படுகின்றன.

  புதுமைப்பித்தனின் பொன்னகரம் போலத்தான் இராசேந்திர சோழனும் எழுத ஆரம்பிக்கிறார். அந்த ஆரம்பம் “காணிக்கை” கதையில் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்தும் விடுகிறது. புதுமைப்பித்தனின் அம்மாளுவும் சந்துக்கு பக்கத்தில் ஆணோடு இருளில் மறைந்து  முக்கால் ரூபாய் சம்பாதித்துவிட்டாள், ஆம் புருஷனுக்கு பால்கஞ்சி வார்க்கத்தான் என்பார் புதுமைப்பித்தன். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதான் ஐயா பொன்னகரம்” என்று கதையில் புதுமைப்பித்தனே வந்து நிற்பார். புதுமைப்பித்தனுக்குள் இருந்த அறச்சீற்றம் கதையில் வெளிப்படையாக தெரியவரும். இராசேந்திர சோழனின் ‘காணிக்கை’ கதையிலும் இதே பிரச்சனையின் இன்னொரு வடிவம். அங்கே கணவன், இங்கே மகன்,  ஜூர வேகத்தில் குளிரில் நடுங்கும் மகன் உடல். ராசாத்தி தன் மகனை மெத்தையில் கிடத்தி கதகதப்பான துணியால் போர்த்திவிட்டு அந்த டெய்லருடன் “வெறும்தரையில் மல்லாக்க கிடந்தாள் மரக்கட்ட மாதிரி” என்று கதையை முடித்து  இருப்பார் இராசேந்திர சோழன்.

இக்கதையில் அப்பெண்ணின் செயலுக்கான ஓரு காரணம் சொல்லப்பட்டிருக்கும். சமூகவியல் நோக்கில் இக்கதை நகர்ந்திருக்கிறது. பெண்ணின் பொருளாதர இயலாமை பொன்னகரம் கதைக்குள்ள அதே பின்னணியைக் கொண்டிருக்கும். ராசாத்தி உடல் ‘மரக்கட்ட மாதிரி கிடந்தாள்’ என்று முடிக்கும்போது அவள் உடலும் உடலோடு பொருந்தாத அவள் மனமும் இரண்டும் வேறு வேறாக துண்டாகிக் கிடக்கும். இக்கதை அப்பட்டமான பொன்னகரத்தின் இன்னொரு பிரதியாகவே இருக்கிறது.  ஒருவகையில் இக்கதை வழக்கமான இராசேந்திரசோழனின் பெண் கதையாக இல்லை. அவருடைய பிற பெண்கதைகளிலிருந்து இக்கதை மாறுபட்டுள்ளது.

இராசேந்திர சோழனின் கதைகளில் இடம்பெறும் பெண்கள் உழைக்கும் சம்சாரி குடும்பத்தின் பெண்களாக இருக்கிறார்கள். அக்குடும்பத்தின் ஆண்கள் உழைப்பே கதி என்று இருப்பதால் அப்பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பதாக சூசகமாக கதையின் ஆண்கதைப் பாத்திரங்களின் சித்தரிப்பு வழியாக முன்வைக்கிறார். 

வன்மம் கதையில் இடம்பெறும் வீராசாமியின் மனைவி செல்லக்கண்ணு, நாய்வேஷம் கதையில் இடம்பெறும் இருசப்பன் மனைவி, புற்றிலுரையும் பாம்புகள் கதையில் வரும் அவள் கணவன், இசைவு கதையில் இடம்பெறும் நடேசனின் மாமியார்.. இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே தலையாய  பிரச்சனை அவர்களின் உடலிச்சையைத் தீர்க்கமுடியாத அவர்களின் கணவன்மார்கள். எனவே இப்பெண்கள் அனைவரும் தங்கள் காமப்பசிக்காக  அலைகிறார்கள். எது கிடைக்கிறதோ அதை நக்கிப் பிழைக்கும் தெரு நாய்களாக அலைகிறது அவர்களின் காமம். 

காமப்பேய்ப் பிடித்த பெண்ணுடல் என்பதே அவர் கதைகளின் பெண்கள் அனுபவிக்கும் அவஷ்தையாக மட்டுமல்ல அதை எதிர்கொள்ள முடியாமல் வன்முறையில் தள்ளப்படும் ஆண் சமூகத்தின் அவலத்தையும் அவர் கதைகள் சித்தரிக்கின்றன. ‘வன்மம் ‘ சிறுகதையில் அவர் படைத்திருக்கும் வீராசாமியின் வன்மத்திற்கு காரணமே அவர் மனைவி செல்லக்கண்ணுதான்.

செல்லக்கண்ணுவை அறிமுகப்படுத்தும்போது அவள்தான் அந்த ஊரில் “ப்ராய்சரி போட்டுக்கொண்டு வந்த முதல்பெண் “ என்பார். அவளுடைய அந்த உள்ளாடை (பிரா BRA) அவள் தன்னுடலை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அவள் அடையாளமாக பார்ப்பது அந்த ஊர் ஆண்கள் மட்டுமல்ல, கதையை எழுதுகிற ஆண்மனமும்தான். இக்கதையில் செல்லக்கண்ணுவின் கணவன் வீராசாமி  எப்போதும் தான் வேலையில் முழுமனதாக ஈடுபட்டிருப்பவன். மனைவியோடு உரையாடல் நடத்துவதோ அவள் பேச்சுக்கு “உம்’ சொல்வதற்கு அப்பால் மேற்கொண்டு நீட்டித்து செல்லவோ அறியாதவனாக காட்டுகிறார் ஆசிரியர். இதனால்தான் செல்லக்கண்ணு சிரித்து சிரித்து பேசும் ஆண்களுடன் பழகுகிறாள். கணவன் சந்தேகப்படும்போது “ நீ என்னய்யா,  நீ.. ஊருல இருக்கிற கழுதங்க ஒண்ணொன்னு பேசிக்கிதுன்னா… அதுக்காக பயந்துக்னு கெடக்கச் சொல்றீயா. நம்ம மனசு சுத்தமாயிருந்தா சரிதான்” என்று கணவனுக்கு நம்பிக்கை ஊட்டினாள் செல்லக்கண்ணு. 

மீண்டும் ஊர்ப்பஞ்சாயத்து கூடி வழக்குப்பேசும்போதும், “ எனக்கு ஏன் இந்த தண்டனை எல்லாம், அவரைப் பிரிஞ்சி என்னாலே தனிச்சு வாழ முடியுமா? குடும்ப பெண்ணுக்கு இதெல்லாம் அடுக்குமா? “ என்று பேசத்தெரிந்தவள்.

செல்லக்கண்ணு என்ற பெண். குடும்பம் .அதில் கணவன் மனைவி இருவரின் பங்களிப்பு இடம் எல்லாமும் அறிந்தவளாகவே பேசுகிறாள். இவ்வளவும் பேசிய செல்லக்கண்ணுதான் கதை முடிவில் தன் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லாதது போல நடந்துக் கொள்கிறாள். அவள் ஊர்ப்பஞ்சாயத்தில் கண்ணீருடன் கதறியதையும் அவள் சொன்னதையும் நம்புகிற வீராசாமி தன் கண்ணால் மனைவி செல்லக்கண்ணு சோப்பு கம்பேனி ஏஜண்டுடன் உடலுறவு கொண்ட நிலையில் பார்க்கும்போது வீராசாமியின் நிலையை கதையாசிரியர் விவரித்து இருப்பார். 

“ அவன் இதுவரை எதை நம்பாமல் அசட்டை செய்து வந்தானோ அதையே  நேரில் பார்த்துவிட்ட பிறகு.. இரத்தம் கொதித்தது, அவமானம் பிடுங்கி தின்றது, ஆண்மை மேலெழுந்து நின்றது…” அவன் மூர்க்கத்தனத்திற்கான காரணம் இக்கதையில் அப்பெண் தன் கணவனை ஏமாற்றியதுதான் என்று கதையை நகர்த்துகிறார் இ.சோ. 

அவள் உடல்தான் பிராதான எதிரியாக அவன் முன் நிற்கிறது. 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து அவளுடலை வன்மத்துடன் அவன் அணுகும்போது அந்த உடல் செல்லக்கண்ணுவின் அந்த உடலாக இல்லை,

அவன் பழி தீர்க்க  நினைத்த உடல், , “கட்டான உடல், குதிரைக்குட்டி நடை, அந்த மதமதப்பு, பிரெய்சர் கவர்ச்சி..” இப்போது அவன் பார்க்கும் உடல்

அந்த உடலாக இல்லை என்பார் இ.சோ. “முகமெல்லாம் அம்மைத் தழும்புகள், ஒட்டி வற்றிப்போன சுருக்கம் விழுந்த கன்னங்கள் .. நரைத்துப் பறந்து கலைந்து கிடந்த தலைமுடிகள். நெற்றியில் ஒரு திரு நீற்றுப்பட்டை அதில் ஒரு குங்குமப் பொட்டு, காச நோய் பிடித்தமாதிரி நொடிசலான இரத்த ஓட்டமேயில்லாத நீற்றுப்போன கைகால்கள்…” இந்த உடலை அவன் பழி தீர்க்கவிரும்பவில்லை. வெளியேறிவிடுகிறான். அவன் கொண்ட வன்மம் என்பது செல்லக்கண்ணு என்ற பெண் மீதா ? செல்லக்கண்ணு என்ற பெண்ணுடல் மீதா ? யாருடன் வீராசாமிகளுக்கு வன்மம்? !

கதைப்போக்கில் அப்பிரதி விட்டுச்செல்வது ஆணுடல் தன்னால் அடக்கமுடியாத பெண்ணுடல் மீது வன்மம் தீர்த்துக்கொள்ள அலைவதுதான். அதற்கு “ஆண்மை “ என்று இன்னொரு பெயரும் கொடுக்கிறார். கதையில் கதாசிரியர் அப்படித்தான் அதைக் குறிப்பிடுகிறார். 

நாய்வேஷம் கதையிலும் எழுத தெரியாத இருசப்பன் தன் பல்பத்தை எழுதத்தெரிந்த சக்தியிடம் கொடுப்பதில் ஆரம்பித்து அது அவன் மனைவியைக் கொடுப்பதுவரை நகர்கிறது. 

‘பகை’ சிறுகதை ப்ஃராய்டின் (Oedipus complex) ஓடிபஸ் காம்ளக்ஸ் கதையாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஆண் குழந்தைக்கு தன் தந்தை மீதிருக்கும் வெறுப்பு, தன் அம்மாவின் உடலும் அவள் தீண்டலும் தரும் சுகம், அது கிடைக்காதபோது மகன்- தாய் உறவு என்பது தம்பி –அக்கா என்றும் குடும்பத்தில் தன் தாயைப் போல அவன் முன் வரும் அத்தை சித்தியாகவும் இருக்கும், இருக்கிறது என்பதை அப்படியே கதையாக்கி இருக்கிறார். கதை முடிவில் கணவன் இறந்தப்பின் தன் 10 வயது மகனை மடியில் வைத்துக்கொண்டு இன்பம் காணும் தாயாக .. தாயின் தீண்டலில் சுகம் காணும் மகனாக கதை முடிகிறது. 

“இசைவு ‘ சிறுகதையில் மாமியார் மருமகன் பாலியல் உறவுதான் கதையாக . இந்த உறவுக்கும் பெரிதாக காரணம் எதையும் கற்பிக்க முயற்சிக்கவில்லை இ.சோ. அவரைப் பொறுத்தவரை பெண்ணுடல் என்பது ஆணுடலால் அடக்கி ஆளப்பட வேண்டும். அதாவது நுகர்ப்பொருள் கலாச்சாரப்படி அந்த  நுகர்ப்பொருள் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படி பயன்படுத்தப்படவில்லை என்றால் அந்த உடல் தன்னை அடக்கி ஆளும் இன்னொரு உடலைத் தேடிக்கொள்ளும். இவ்வளவுதான் அவர் பெண்ணுடல் மீது திணித்திருக்கும் காமம். இசைவு கதையிலும் மாமனார் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் போய்விடுகிறார். மாமியாரோ இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தப்பிறகும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறாள். 

 மாமியாரைக் காணும் மருமகன் அவளை இப்படித்தான் பார்க்கிறான். அதுவும் தன் மனைவி கொஞ்சம் பருமன், மாமி சற்றெ ஒல்லி, அனுபவ முதிர்ச்சியை ஒதுக்கிப் பார்த்தால் மாமியை தங்கை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவு கச்சிதமான தோற்றம்” மருமகன் பார்வையில் மாமியாரின் உடல் வர்ணனை. 

மாமியாருடன் மருமகன் உடலுறவு கொண்டபின் மருமகன் நினைக்கிறான், “ இந்த வயதிலும் எப்படித் துடிப்புடனும் குறுகுறுப்புடனும் இருக்கிறாள்? பாவம், மாமனார், கொடுத்து வைக்காதவர். அவருக்கு ஆளத்தெரியவில்லை” என்று நினைக்கிறான். 

ஓர் ஆண் மனம் பெண்ணுடலை ஆள்வதுதான் முக்கியம், பெண்ணுடல் சரியாக ஆளப்படாவிட்டால் அது தன்னுடலை அடக்கி ஆட்கொள்ளும் இன்னொரு ஆணுடலைத் தேடும் என்பதாகவே பெண்ணுடலின் காமத்தை கட்டமைத்திருத்கிறார்.

இந்து புராண இதிகாசக்கதைகள் “பெண்கள் இயற்கையிலேயே மிகையான பாலியல் நாட்டம் கொண்டவர்களாதலால், பல ஆண்களுடன் பாலுறவு கொள்ளக்கூடியவர்களாக உள்ளனர் “ மேற்கத்திய கிரேக்க ரோம மரபில் ஆணின் பாலியல் செயலூக்கமானது. (active) . பெண்ணுடையது அடக்கமானது (passive) . சுயக்கட்டுப்பாடு  ( moderation) ஆணுடலுக்கானதாக இருப்பதால் பெண்ணுடல் கட்டுப்பாடற்றதாகவும் இச்சைகளின் தாக்கத்தை பெண்ணுடலால் தாங்கிக்கொள்ள இயலாததாகவும் இருக்கிறது.  . பெண்ணின் நிலை பலவீனமானது. உள்ளடங்கிப் போவது. அவளால் தன்னை ஆளமுடியாது. தன்னை ஆளுகின்ற இயல்புடைய ஆண்தான் பெண்ணையும் ஆளுகிறான் என்று காட்டப்பட்டிருக்கிறது  என்பார் மிஷெல் ஃபுக்கோ.  (Michel Foucault) 

யூத மரபிலும் பெண்களுக்கு மையமான ஆர்வம் பாலியல் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு உலகெங்கிலும் உள்ள தந்தைவழி பண்பாட்டு மரபில் பெண் பாலியல் பாங்கில் கட்டுப்பாடற்ற இயல்வு கொண்டவளாகவே ஆண் பார்வையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பாலியல் உந்துதல்களால் சமூக ஒழுங்கு கெடும், உலகம் அழியும் என்றே அனைத்து தந்தைவழி பண்பாட்டு மரபுகளிலும் பெண்ணுடல் காமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.   நாம் கவனிக்க வேண்டியது, காம ம் தீர்க்கும் இரண்டு உடலகளில் பெண்ணுடலுக்கு மட்டுமே இத்தனையும் சேர்ந்து பயணிக்கின்றன. ஆணுடலுக்கு இல்லை.  தந்தைவழி பண்பாட்டு மரபின் எழுத்தாகவே இ.சோ சிறுகதைகளும் அவர் கதைகளில் இடம்பெறும் பெண்களும் அப்பெண்ணுடல்களின் பாலியல் மீறல்களும் கதையாகி இருக்கின்றன.

இரேந்திர சோழனின் இந்த ஆண்மைய சிந்தனையின் உச்சத்தை அவருடைய குறு நாவல் “மகாலட்சுமி”யில் வெளிப்படையாக காணலாம்.

உடலின்பத்தை அடக்கி பேரின்பம் தேடும் பயணத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுடல் தன் உடலின் காமத்தை வெற்றி கொள்ள இயலாமல் போய்விடுவதாக கதை. திருமண உறவிலும் ஆணுடலை விலக்கி பாலியல் இச்சையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பயணிக்கும் மகாலட்சுமி

தன் டிரைவரும் தன் வீட்டில் வேலை செய்யும் முனியம்மாவும் கொண்ட பாலியல் உறவால் தொந்தரவு செய்யப்படுகிறாள். காம நோய் அவள் உடலைத் தாக்கி படுக்கையில் தள்ளியதும் அதைத் தீர்க்க மருத்துவம் பார்க்க வந்த டாக்டர் அவளை தன் உடலால் கவனித்து அவள் காமத்தை தீர்த்தப் பிறகுதான் அப்பெண்ணுடல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்வதாக எழுதி இருக்கிறார். அதாவது பெண்ணுடலுக்கு துறவறம் என்பதே சாத்தியமில்லை என்பதுதான்  இ.சோ. பெண்ணுடலைக் காணும் மன நிலை. பெண்ணுடலின் காமத்தை ஆணுடல் தீர்க்காதவரை பெண்ணுடல் என்பது பலகீனமானது. அது எதையும் செய்ய லாயக்கற்றதாகவே இருக்கும். இப்படியாக சிந்திக்கிறது இ.சோ. ஆண் மையம்.

காமம் தீர்க்க அத்தருணத்தில் நடக்கும் மீறல்களாக இராசேந்திர சோழனில் பெண்கள் படைக்கப்படவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள், கணவனை , உறவினர்களை, ஊர்மக்களை , ஏன் பெற்ற மகளைக் கூட ஏமாற்ற துணிகிறார்கள்.  அதையும் தாண்டி பத்தினி வேஷமும் போடுகிறார்கள். மொத்தத்தில் பெண்கள் வேஷதாரிகளாகவே வாழ்கிறார்கள். 


பெண் என்பவள் வெறும் உடல் மட்டும்தானா? ஃப்ராய்டு சொல்லும் உளவியல் கருத்துகளும் ஆண் பெண் உறவு சார்ந்த சிந்தனைகளும் ஃப்ராய்டு என்ற ஆணின் சிந்தனையிலிருந்து வெளீப்படுகின்றன. ஃப்ராய்டின் எண்ணங்களை இயல்புகளை அவர் வாழ்ந்தக் காலமும் அக்கால சமூகத்தின் ஆண் பெண் உறவுகளும்  பாதித்திருக்கின்றன. 

பெண்ணுடலின் காமம் “கத்துவேன் கொல், முட்டுவேன் கொல்?” என்று அலைபாயும். ஆனால் அந்த உடலின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிப்பது அவள் மனம். இக்கதைகளை எழுதும் ஆண்மையம் தங்கள் கதைகளின் பெண்ணுடலுக்கு ஒரு மனம் இருக்கிறதாகவோ அந்த மனதில் அவள் ஓர் ஆடவனை விரும்புவதற்கும் அவனோடு தன் உடலைப் பகிர்ந்து கொள்வதற்கும் அவளுக்கு பிரத்தியோகமான சில காரணங்கள், உணர்வுகள் இருக்கும். அது இருக்கும்போதுதான் அவளுடல் பாலியல் மீறலை நடத்துமே தவிர என்னவோ அவள் உடல் அதற்காகவே படைக்கப்பட்டிருக்கும் பண்டம் என்பதால் அல்ல.  இராசேந்திரசோழன் கதைகளில் வரும் பெண்கள் அனைவருக்கும் உடல் மட்டும்தான் இருக்கிறது.  அவள் தன்னுடலை தன் காமத்தை தீர்க்க அவள் தேடுவதும் ஆண் உடலாக மட்டுமே இருக்கிறது. இக்கதைகளில் உடல்கள் மட்டுமே உலாவுகின்றன. ஆணுடல்களுக்காவது வன்மம், ஏமாற்றம் என்று எதாவது உணர்வுகள் இருப்பதாக காட்டுபவர் பெண்ணுடலுக்கு அப்படி எதையும் காட்டவில்லை. இதுதான் ஆண்மைய சமூகம் பெண்ணின் உடலை காமத்தின் இடமாகவும் காமமே பெண்ணாகவும் பார்க்கும் பார்வை இது.  காமமே பெண்ணாக பெண்ணுடலாக இருப்பதால், ஆண் என்ற ஆண்மை பெண்ணுடலை அடக்கி ஆளாதவரை பெண்ணுடல் பசியுடன் அலைவதாகவே காட்டுகிறார்கள்.  எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் உறவு கொண்டு தன் காமத்தை தீர்த்துக் கொள்வதாக காட்டுவதில் பெண்ணும் அவள் உடலும் பலகீனமானது என்பதையும் அப்பெண்ணுடலை ஆணுடல் ஆண்டு அனுபவித்து அடக்கி ஆள்வதையே பெண்ணுடலும் எதிர்ப்பார்க்கிறதாக தங்கள் கதைகளின் பெண்களைக் கொண்டு ஒரு கருத்தியலைக்  கட்டமைக்கிறார்கள்.  ஆண் பெண் உறவில் காமம் என்பது உடலில் ஆரம்பித்து உடலோடு முடிந்துப்போவதாக நினைக்கிறார்கள். அது மனித உறவில் மனசிலும் இருவரின் எண்ணங்களிலும் மன உணர்வுகளிலும் அரும்பி அங்கிருந்துதான் உடலின் இச்சையாக வெளிப்படுகிறது என்பதை வேண்டுமென்றே புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

ஆண் மையப் புள்ளியில் எழுதிய இராசேந்திரசோழனும் அவர் கதைகளும் பெண்ணையும் பெண்ணுடலையும்  மனம் சிந்தனை எதுவுமற்ற ஹார்மோன்கள் மட்டும் சுரக்கின்ற சுரப்பிகளாக மட்டுமே பார்த்திருக்கின்றன.

அதிர்ச்சி தரும் பாலியல் மீறல்களை கதைக்கருவாக கொண்டிருக்கும் இ.சோழனின் பெண்கதைகளில் இப்பாத்திரப்படைப்புகளை வைத்துக் கொண்டு 

அவர் பெண்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, காமத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்பது வெளிப்படுகிறது. !

அவர் சிறுகதைகளின் அதிலும் குறிப்பாக உழைக்கும் பெண்கள், நடுத்தர வர்க்கத்தின் பெண்கள் , அவர்களின் வாழ்க்கை அப்பெண்களின்  உணர்வுகள் குறித்த போதாமைகளையும் வெளிப்படுத்துகின்றன. 

**********

✍️புதியமாதவி.

நன்றி 🙏 அம்ருதா மாத இதழ் ஜூன் 2024

Sunday, June 2, 2024

கலைஞரின் இந்திய அரசியல்.

 











இந்தியாவின் அடையாளம்

தெற்கிலிருந்து ஆரம்பிக்கிறது!💥

ஞானம் தேடி நடிப்பதற்கு கூட

தெற்கேதான் வந்தாக வேண்டும்!

மாயக்கிழவன்

எம் முப்பாட்டன்

வள்ளுவன் சிரிப்பது

கேட்கிறதா!

💥💥💥

கலைஞருக்கு நன்றி.

ந.மோ.வுக்கும் நன்றி 😊

🙏🙏🙏


இந்திய அரசியலில் கலைஞர் தெற்கின் அரசியலை

வாழ்வியலை மாற்றுக்கலாச்சாரத்தை இந்தியாவின்

அரசியலாகவும் வாழ்வியலாகவும் கலாச்சார

அடையாளமாகவும் கட்டமைக்ககும் முயற்சியைத் 

தொடர்ந்து செய்திருக்கிறார் .

அதன் வெளிப்பாடு தான் குமரிமுனையில் எழுந்து

நிற்கும் அய்யன் திருவள்ளுவரின்  சிலை.

விவேகானந்தர் பாறை

விவேகானந்தர் மண்டபம்

குமரிக்கடல்...

மிகவும் அருமையான இயற்கை சூழல்..

ஆனால் என்ன நடக்கிறது காலப்போக்கில் என்பதை

கலைஞர் கவனிக்கிறார்.

இந்து இந்தி இந்தியா என்ற ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில்

ஒருவராக விவேகானந்தரை மாற்றுகிற அரசியல்..

அந்த விவேகானந்தர் பாறை எதை நோக்கி

நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற அரசியலைக் கவனித்ததன்

வெளிப்பாடு தான் குமரி முனையில் திருவள்ளுவர் சிலை.


அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக்கொடி,

வெண் சங்கின் ஒலி, எங்கும் ஆர்ப்பரிக்கும் இந்தி..

வடக்கத்திய கலாச்சாரமே இந்திய கலாச்சாரமாக நம்மை

அழுத்தும்போது மெல்ல மெல்ல திருவள்ளுவர் சிலை

ஈர்ப்பு விசையாக மாறத்துவங்குகிறது.

இந்தியாவின் இருவேறு அரசியல் பாதையை 

இருவேறு கலாச்சாரத்தை இந்த உலகம் அறியட்டும்

என்ற கலைஞரின் பார்வை.. 

மிக முக்கியமான ஒரு அரசியல் பார்வை.

கலைஞர் இந்திய அரசியலில் முன்வைக்கும்

பார்வையாக விரிகிறது.

அதிலும் குறிப்பாக திருவள்ளுவர் வடக்கே இருக்கும்

இம்யத்தைப் பார்த்து நிமிர்ந்து நிற்கிறார்..

இந்தியாவை இமயத்திலிருந்து பார்க்காதீர்கள்

குமரிமுனையிலிருந்து பாருங்கள் என்று

சொல்லாமல் சொல்லும் அழகு..

பாராட்டுதலுக்குரியது.


#புதியமாதவி_2024ஜுன்03


#கலைஞர்_இந்தியஅரசியல்

#DMK_indiacultural_politics

Thursday, May 16, 2024

The great day will come


 "The great day and time will come" 🙏


Retd Economics  Prof Dr S Dharmaraj view on my writings.

Thanks Annaa.🙏🙏

💥💥💥💥


Amma, vanakam, sending herewith my short views and comments on your  two books and your interview in the Tamil magazine INIYA UDAYAM.


Let me congratulate to you for your new Novel, 'MUGPHY'. I appreciate that the way, the manner, the style of bringing out the charecteristic  features of the two daughters namely, SaiFunniss and Zeenath of the great Mogal Emperor Aurengzeb, particulatrly in helping Sivaji Maharaj to escape from Muhal prison. That also brings out the inner ideas of Feminism of the auther and implicitely indicates the male domination of those days in the history of  India. The entire presentation of Muhal scenario is highly commendable. 


🦋

As regards the interview given to the journal of Inia-Udayam, it was all quite open, direct, without any hesitation or hiding any facts, the entire passage could be added to as one more feather on your cap of Tamil Literary work. The projecting and focussing of the then prevailing socio- economic scenario of Dharavi, Bombay is scholarly done.

🦋🦋

Thirdly, " Saithiya Bhoomi"is a thought provoking out-come of the author.

After going through the entire book, word by word, letter by letter, nay, syllable by syllable with an indispensible emotion and commotion I give hereunder my humble opinion of Saithiya Bhoomi. The first half of the book, brings out  the evolutionary trend of Marathi land and native people, particularly of the Mahar community. It focusses the circumstances that caused for the emergence of the non-Bhramin movement invoving JothiRao Bhule, the remarkable and valuable contribution of Sahu Maharaj, the advent of Educational Institution, the scholarly contribution of the Great Pandithar Ayothi Dass, the fore-runner of Thanthai Periyar and Baba Saheb Dr.B.R Ambedkar, all that really stimulated the minds of first time reader like me very vibrantly and vehemently. While pursuing further, in to the subject matter the controdictionary as well as controversial ideas of how Chatrapathy Sivaji Maharaj and his Hindu Political Thoughts have been comparably analysed with that of Dravidian Political Philosophy, is another debatable issue. The second  half of Saithiya Bhoomi describes as to how Thanthai Periyar and his dutiful disciple Thiru. C.N. Annadurai of south have been conceptually influenced Dr.B.R.Ambedkar of North. At the end, on the 8th chapter, the auther has very brilliantly explained on how Baba Saheb has become northern periyar and how periyar has become southern Ambedkar. It was quite interesting to the reader that how Annadurai has translated the English speech delivered by Ambedkar into Tamil and the tamil speach delivered by periyar into English to the audiance and participants at the historical public meeting held at Dharavi on 7th January, 1940,for which Dr. Ambedkar presided over the meeting where periyar delivered on  socially significant speech on Brahminical aspects and attitude against non-bramins and down-trodden people of India. I surprised that how painfully, you have collected the required informations, materials, facts, figures and data for the compilation of your remarkable, Saithiya Bhoomi for the past several years by your hard work, is highly appriciable and your style of presentation is highly commendable. We both are very proud of you as our great scholar, perspective thinker and writer during our contemporary period of time. Keep it up your writing work on social and economic issues. The great Day and Time will come that you would be suitably awarded and rewarded. God bless you. 💐



Thursday, May 9, 2024

உண்மை கலந்த புனைவு


 அவனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கொஞ்சம் பொய் கலந்த உண்மை!

சங்க இலக்கியமும் விதிவிலக்கல்ல. 

அகநானூறு 160

அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்

குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த     

கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை

பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்

கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:


தோழி சொல்கிறாள், "நிறைச்சூல் ஆமை மறைந்து நின்று புதைத்த முட்டைகளை பகுவாய் கணவன் ஆமை காத்து நின்றதாக"


இது பொய் தானே!😄

அவரு நல்லவரு வல்லவரு

நாலும் தெரிஞ்சவரு.

என்று மணமகனை எப்போதும் புகழ்ந்துப் பேசும் தோழி இவள்!


ஆமைகள் பல நூறு மைல்கள் கடந்து,  தான் பிறந்த அதே கடற்கரையில் வந்து முட்டை இட்டு செல்கின்றன! ஆமைகளின் வலசை இன்றும் ஓர் அதிசயம். ஆனால் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது பெண் ஆமை மட்டும்தான். 

மேலும் முட்டைகள் குஞ்சு பொரிக்க 60 முதல் 70 நாள்கள் வரை ஆகும். எந்த ஆமையும் முட்டையிட்ட பிறகு காத்திருப்பதில்லை. முட்டைக்கும் ஆமைக்கும் உள்ள உறவு முட்டையிட்ட பிறகு முடிந்து விடுகிறது.

முட்டை ஓட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் குஞ்சுகள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு இரவு நேரத்தில் வெளிவந்து கடல் அலையை நோக்கி பயணிக்கின்றன. ஆயிரம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தாலும் அதில் ஒரு ஆமை தான் "ஆமை"யாக வளர்ந்து வாழ்கிறது. அதனால் தான் ஆமைகள் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு புதைத்து வைக்கின்றன. 

ஆமைகளின் வயது 100 முதல் 150 வரை இருக்கும். 

ஆமை உயிரினத்தில் மிக மிகத் தொன்மையானது. 

ஆமையின் இருத்தல் கடலுக்கு மட்டுமல்ல நிலத்திற்கும் தேவையானதாக இருக்கிறது. 

இச்சங்கப் பாடலில் இடம்பெறும் " பகுவாய்க் கணவன் ஆமை"  ஒரு அற்புதமான புனைவு. 

பகுவாய் ஆமை snapping turtles.. உப்பங்கழி காயல்கள் ஏரி குளம் ஆகிய நன்னீரில் வாழும் ஆமைகள். இவை எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு வகையான "ஸ்ஸ்ஷ்'. குரல் எழுப்புகின்றன! 


இப்பாடலை எழுதிய நப்பசலையார் அந்த இயற்கை காட்சியை இப்படியாக ஒரு புனைவில் கொண்டுப் புகுத்தி அவன் ஊரின் பெருமையை கொஞ்சம் அதிகப்படுத்தி காட்டுகிறார்.

...

நாமும் ரசிக்கிறோம்.

"பொய்மையும் வாய்மை இடத்த" என்று புன்னகையுடன் கடந்து செல்கிறோம்.

Sunday, May 5, 2024

தொலைந்துப்போன "நான்"கள்




Life is a journey between the two terminals of birth and death. There is no map or GPS for the route to be taken. The starting time is  known to us well after the journey has commenced and the end time is unknown in spite of being a certainty. Somewhere along the way, we may lose our perspective and, consequently, our own selves. In thus Tamil poem, my friend and poet Puthiyamaadhavi Sankaran tells us what she would like to do in such a situation. The original poem is shared here alongwith my English translation:


THE LOST "I"S

============


One by one,

the "I"s 

peel away. 

Will it be possible 

to strip me off

like a snake sheds its skin 

and see my original "I"?


After me,

it may happen to

you too.

Beginning from 

the beginning

and unable to finish, 

it will not end either. 


Break the grave

where I am buried,

remove the doors

and start the rest

of the journey 

from there. 

Those who got 

lost on the way

would be wandering 

without address.

Leave the address 

of my ruined hut

with them.


One among them

may rebuild 

or put in new rooftiles.

Could change the direction 

of the doorway.

Could erect a canopy

for the dried up

jasmine creeper 

in the courtyard 

and pluck flowers.


In the fragrance 

of that blossom,

my that "I"

may revive.

That "I"

is the Brahmam 

of the universe.

I don't die.


~Sri 10:10 :: 06052024 :: Noida 


Brahmam: Indestructible matter. The word can also be taken as a reference to Brahma, the Hindu Gid if Creation.


💥💥💥💥


தொலைந்து  போன "நான்"கள்

=====================


நான் ஒவ்வொன்றாக உரிகிறது. 

பாம்பு சட்டையை உரிப்பது போல

என்னை உரித்து எரித்து

அந்த என் அசல் நானைத் 

தரிசிக்க முடியுமா?!

எனக்குப் பின்

உனக்கும் அது

நடக்கலாம்.

ஆரம்பத்திலிருந்து

ஆரம்பித்து

முடிக்க முடியாமல்

முடிந்தும் போகாதே.

என்னைப் புதைத்திருக்கும்

கல்லறைக் கதவுகளை

உடைத்து எடுத்து

அதிலிருந்து

மீதிப் பயணத்தை ஆரம்பி.

வழியில்

தொலைந்து போனவர்கள்

முகவரியின்றி

அலைந்து கொண்டிருப்பார்கள்.

அவர்களிடம்

சிதைந்துபோன

என் குடிசையின் முகவரியை விட்டுச் செல். 

அவர்களில் யாரேனும் ஒருவர்

மீட்டுருவாக்கலாம்

அல்லது

புதிய ஓடுகள் அடுக்கலாம்.

வாசலின் திசைகளை மாற்றலாம்.

முற்றத்தில் பட்டுப்போன

முல்லைக்கொடிக்குப்

பந்தல் போட்டுப்

பூப் பறிக்கலாம்.

அந்தப் பூவின் வாசனையில்

என் அந்த "நான்"

உயிர்த்தெழலாம்.

அந்த "நான்"

பிரபஞ்சத்தின் பிரம்மம்.

சாவதில்லை.

#புதியமாதவி_கவிதை

ஆங்கில மொழியாக்கம்

Sri N Srivastava.🙏

💥💥💥💥

Wednesday, May 1, 2024

இசை விடுதலையின் மொழி


 நேற்று இளையராஜா.

இன்று நீனா சிமோன்"

இது தற்செயலானதுதான்🙏🦋

🙏🙏🙏🙏


" நான் நான் நான்"

நான் என்று தனியாக எதுவுமில்லை! 

இருக்கவும் முடியாது 🦋

நீனா சிமோன்..

இசை என்பது வெறும் ரசனைக்கானது மட்டும்தானா?!

இசையின் பின்னால் ஜாதி இன மொழி நிற வேறுபாடுகளின் அரசியல் இருக்கிறது. 

சிலருடைய இசை தான் சமூகவெளியில் மனித உரிமைக்கான குரலாக எத்தருணத்திலும் ஆதிக்கத்தை எதிர்க்கும் வல்லமையுடன் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 


அமெரிக்க வல்லரசை எதிர்த்து தன் இசை வழியாக தன் கருப்பின மக்களின் விடுதலைக் குரலை எல்லா தருணங்களிலும் இசையாக ஒலித்தவர் நீனா சிமோன்.

" என்னுடைய வரிப்பணத்தில் வியட்நாம் மக்களைக் கொன்று குவிக்கிறாயா?" என்று தன் ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆற்றல் அவருடைய இசை வெளிக்கு இருந்தது. 


இசை அவரைப் போன்றவர்களுக்கு ஒரு போராட்ட கருவி. இசை வெறும் ரசனைக்குரியதோ வலி நிவாரணியோ மயக்க மருந்து  மட்டும் அல்ல! 

இசை ஆதிமனிதனின் முதல் மொழி. எழுத்து மொழி எப்போதுமே அதிகார வர்க்கத்தின் மொழி தான். இசை அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் மனிதனின் குரல். 

நீனா சிமோன்களும் 

இசைக்கலைஞர்கள் தான்

என்பதை மறந்துவிடுவது எளிதல்ல.


"எல்லாமும் என் சுயம். நான் அடைந்திருக்கும் அனைத்தும் நான் நான் நான் மட்டுமே! என் வெற்றி சுயம்புவாக நான் அடைந்திருக்கும் என் உழைப்பின் வெற்றி" இப்படியாக யார் நினைத்தாலும் யார் சொன்னாலும் இது எல்லாமே பாதி உண்மை மட்டும் தான். மீதி உண்மையில் முகம் தெரியாத பலருடைய உழைப்பு பலருடைய போராட்டங்கள்  இவை அனைத்தும் உருவாக்கிய சமூகவெளி.  சுயம்பு துளிர்ப்பதற்கு கூட ஒரு சமூகவெளி அதற்கு தயாராக இருக்கிறதா என்பது தான் முக்கியம். 

மற்றதெல்லாம் வெறும்

" நான் நான்," பிதற்றல்கள்.

நான் - 

நான் மட்டும் 

என்று எதுவும் இல்லை.

Tuesday, April 30, 2024

இளையராஜா vs தலித் அரசியல்

 

இளையராஜாவை வைத்துக் கொண்டு இசையின் உன்னதங்களை

இசையில் அவர் தொட்ட உச்சங்களைப் பேசலாம்.

இசைக் கலைஞராக

அவருடைய பங்களிப்பை

எவரும் மறுக்கவில்லை.

ஆனால் 

தமிழ்நாட்டில் அவரே மறந்துவிட்ட

அவருடைய பிறப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு

அவரைத் தங்களுக்கு நெருக்கமானவராக

மானசீகமான

இசைத் தெய்வமாக

தலித் இளைஞர்கள்

வணங்கலாம்.

நாக்கில் அலகு குத்திக்கொண்டு

இளையராஜா

உற்சவங்களில்

தேரிழுக்கலாம்.

இதை எல்லாம்

நாமும் ரசிக்கலாம்.

ஆனால்...

நாம் புரிந்து கொள்ள வேண்டியது: 

தலித் அரசியல்,

ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்கான போராட்டம்

சமத்துவம்...இதிலெல்லாம்

நேரடியாகவும்

மறைமுகமாகவும்

எந்தப் பங்களிப்பும்

செய்யாதவர் இளையராஜா.

இளையராஜாவை வைத்துக் கொண்டு

" தலித் அரசியல், 

தலித் உரையாடல்" 

நிகழ்த்துவது

தலித் அரசியலைத் திரைத் திருப்பும்.

தலித் உரையாடல்களை

பரபரப்பான ப்ரேக் நியூஸ் ஆக்கி இரண்டொரு நாள் சலசலப்பில்

தின்று துப்பிவிடும்.


தன்னை " தலித் சமூகத்தின் அங்கமாக எந்த இடத்திலும் நிறுத்திக் கொள்ள மறுக்கும் தனிமனிதர் இளையராஜா.

இல்லை இளையராஜாவை மையமாக்கி அரசியல் உரையாடல் நிகழ்த்துவோம் என்று சொல்பவர்கள் முதலில் இளையராஜா என்ற தனிப்பட்ட நபரின் அங்கீகாரமும் புகழும் மோதியை அம்பேத்காரோடு

ஒப்பிடுவதற்கு பயன்பட்ட ஓர் ஆயுதமாக இருந்தது இருக்கிறது என்பதை முதலில் பேசுங்கள்.🙏


தென்றல் யாருடைய இசைக்கும் கட்டுப்பட்ட தல்ல!

ராசாவே என்று அவர் இசையில் ஒலிப்பதெல்லாம்

அவராக மட்டுமே

இருந்து விட்டுப் போகட்டும்.

அதில் ஒடுக்கப் பட்டவன் தன்னை இருத்திக் கொள்ள நினைப்பது ரசனையோடு நிற்கட்டும்.

அதைத் தாண்டி

ஒரு ம_ _ அளவும் கூட

அதை வைத்துக் கொண்டு 

எதையும் பிடுங்க முடியாது.


#இளையராஜா_தலித்அரசியல்

#Ilaiyaraja_dalithpolitics


Monday, April 29, 2024

இந்திய அரசியலில் தலித் கட்சிகள்

 



ஃதலித் தலைவன் இந்திய பொதுச் சமூகத்தின் தலைவனாக முடியாது 🙏


ஃ தலித் அரசியல் என்பது நிவாரணங்களுக்கான கோரிக்கையாக மட்டுமே எவ்வளவு காலம் இருக்கும்? 🙏


சமூக அமைப்பு அரசமைப்பின் செயல்பாட்டை மாற்றலாம்; அதைச் செல்லுபடியற்றதாக்கலாம்; கேலிக்குரியதாகவும் ஆக்கலாம். இந்தியாவைப் பொறுத்தவரை, சமூக அமைப்பு சாதி முறையின் மீதே நிர்மாணிக்கப்பட்டுள்ளது.” (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 1, பக்: 167)


ஒரு தலித் தலைவன் பொதுச்சமூகத்தின் தலைவனாக முடியாது. ஆனால் தலித் அல்லாத பிற்படுத்தப்பட்டோர் தலைவன் பொதுச் சமூக தலைவராகிவிடுவது பாத்தியப்பட்டிருக்கிறது.

தலித் தலைவர்களின் கட்சிகள் " தலித் கட்சிகளாக" மட்டுமே இருக்கும். அது எப்போதுமே பொதுஜன அரசியல் கட்சியாக முடியாது.

இதுதான் இந்திய பண்பாட்டு அரசியலும் தேர்தல் அரசியலும்.


எனவே, பண்பாட்டு அரசியலில் நியாய தர்மங்களை கூறுகளை அப்படியே தேர்தல் அரசியலுக்கு எந்தக் கொம்பனாலும் எடுத்துச் செல்ல முடியாது,!

இரண்டும் வேறு வேறாக இருக்கின்றன!


அரசியல் அதிகாரம் என்பதை தேர்தல் அரசியல் அதிகாரப் பங்கீடு வழியாகபெற்றுவிடலாம் என்பது லாஜிக்காக சரியாக இருந்தாலும் ஓட்டு அரசியலில் அதை செயல்படுத்துவதில் 

தலித் பண்பாட்டு அரசியல் மீது மட்டும் நியாய தர்மங்களை சுமத்துவது அர்த்தமற்றது. 

எந்த ஒரு தொகுதியிலும் தலித் ஓட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியம் இல்லை. 

தலித் தேர்தல்  அரசியல் என்பது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இதுவே இருக்கிறது. 

யாரோடு சேர்ந்து நிற்பது? எல்லோரும் தலித்துக்கு எதிராக வன்கொடுமையை நடத்தியவர்கள் தான். 

எந்த ஒரு ஆட்சியும் இதற்கு  விதிவிலக்காக இருந்ததாக சரித்திரம் இல்லை. 


இந்திய தேர்தல் அரசியலில் பண்பாட்டு அரசியலைப் பேசிய தலித் மட்டுமே எப்போதும்..

" பண்பாடு, கொள்கை, நியாய தர்மங்களின் பலிபீடத்தில் நிறுத்தப்படுகிறான்.


இதே பண்பாடு இதே நியாய தர்மங்களை வேறு எவருக்குமானதாக

பார்க்க விடாமல்

எது தடுக்கிறது.??

அதைக் கண்டடையுங்கள்!

அதுவரை..

அரசியல் பூங்காவில் நமக்கான மலர்கள் மலரவில்லை. 

எவ்வளவு காலம் தான் நிவாரணங்களுக்கான அரசியலே

தலித் அரசியலாக இருக்க முடியும்?🙏

#தலித்அரசியல்

#dalithpolitics


ராஜமாதா


அவள் இப்போதெல்லாம் அரண்மனையை விட்டு வெளியில்

வருவதே இல்லை. குருஷேத்திர வெற்றிக்குப்பின் பாண்டவர்களால்

அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.. எதையோ இழந்துவிட்டதைப்போல அவர்களைச் சுற்றி வெறுமை நிறைந்திருந்தது. 

கூடவே  இருந்த கிருஷ்ணனும் அவன் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் 

உள்நாட்டு பிரச்சனையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். ரொம்ப காலம் பாண்டவர்களுக்காகவே அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்ததில் தன் தேசத்து மக்களின் பிரச்சனைகளை அவன் கவனிக்க தவறிவிட்டதாக அமைச்சர் பெருமக்கள் குற்றம் சாட்டினார்கள்.  ‘அவன் பாண்டவர்களுக்காகவா அலைந்தான்? எல்லாம் அந்தப் பாஞ்சாலிக்காகத்தான்’ என்ற அவன் அந்தப்புர அரசிகளின் பொறாமையிலும்  உண்மை இல்லாமலில்லை. 

முன்பெல்லாம் அரசவைக் கூடும்போது பட்டத்து மகாராணி என்ற

நிலையில் அவள் அந்த அரசவைக்கு வந்து கொண்டிருந்தாள். அவள்

வந்து உட்கார்ந்த பிறகுதான் அந்த மண்டபத்திற்கே ஒரு தனி அழகு கூடிவரும். அல்லியை சந்தித்துவிட்டு வந்த பின்,  அவள் அரசவைக்கும் வருவதில்லை.அவள்  தன்னைத்தானே  சிறை வைத்துக் கொண்டு எதற்கோ தண்டனை அனுபவிக்கிற மாதிரி தனித்திருந்தாள். 

தேசத்திற்கே ராஜாவா இருந்தாலும் அவள் அந்தப்புரத்தின் கதவுகள் திறக்கும் சாவி அவனிடம் இல்லை. 

ஒவ்வொரு தேசத்து  இளவரசிகளையும் மயக்குவதில் கைதேர்ந்த  அர்ஜூனன் இவள் விஷயத்தில் மட்டும் மவுனம் சாதித்தான். “என்னவாச்சு.. அர்ஜூனா,  ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு வாயேன்’ என்று சாடைமாடையாக சொல்லிப் பார்த்துவிட்டான். அவன் புரிந்து கொண்டும் எதுவும் செய்யவில்லை. பீமனுக்கு காயங்கள் ஆறவில்லை. அரண்மனை மருத்துவர்கள் பெண் உறவைத் தவிர்க்க சொல்லிவிட்டார்கள். இளைய தம்பிகளிடம் இதுபற்றி வெளிப்படையாகப் பேச எதோ தயக்கம் .. ராஜமாதாவோ விதுரனுடன் சேர்ந்து வனப்பிரஸ்தம் போய்விட்டாள்.

…**

அரண்மனையில் எப்போதும்  அலங்காரங்களுடன் மட்டுமே அரசிகளைச் சந்தித்துப் பழகி இருக்கும் திரெளபதிக்கு அல்லியைச் சந்திக்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அவள் தலைமுடியை உச்சியில் கொண்டையாக முடிந்திருந்தாள். நெய் தடவித் தடவி படிய வாரிய கூந்தலாகத் தெரியவில்லை. காற்றில் பறந்து கொண்டிருந்த சுருட்டை முடிகள். கண்களில் மை எழுதி இருக்கவில்லை,  மாவிலைக் கொழுந்து நிறம். அது அந்த வெயிலில் பட்டு மினுங்கியது. ரொம்பவும் அவளை ஆச்சரியப்படுத்தியது அவளின் ஒற்றை முலை.  .. அவளுக்கு வலது முலை இல்லை. அதனாலோ என்னவோ இடது முலை பருத்து அவள் கச்சைக்குள் அடங்காமல் திமிறி எட்டிப்பார்த்தது.. இவளின் எது அர்ஜுனனை வசப்படுத்தி இருக்கும் என்ற எண்ணத்துடன்

 அல்லியைக் கூர்ந்து கவனித்தாள். அல்லி அவள் பார்வை படும்

இடத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு 

“இவளிடம் எதைப் பார்த்து நம்ம அர்ஜூனன் மயங்கினான்?’ என்று

யோசிக்கின்றீர்களா, அரசி?” அல்லி இப்படி ஒளிவுமறைவில்லாமல்

கேட்டுவிடுவாள் என்று திரெளபதி  எதிர்பார்க்கவில்லை. நாம் நினைத்திருப்பதை விட இப்பெண் புத்திசாலி என்பதை அவள் பேச

ஆரம்பித்தவுடனேயே புரிந்துகொண்டாள்.

ஆயுதப்பயிற்சி செய்துவிட்டுத் திரும்பியவள் இன்னும் நீராடவில்லை.

அவள் உடலெங்கும் வேர்வையின் ஈரம் படிந்திருந்தது. எப்போதும்

யாரையும் அவள் தன் அந்தப்புரத்தில் சந்திப்பதில்லை. ஆனால்

திரெளபதியை  அவள் அந்தப்புரத்தில் காத்திருக்கச் சொன்னது

அரண்மனைக்கே அதிசயமாக இருந்தது. 

 “தேவி மன்னிக்க வேண்டும், வெளியிலிருந்து வருகிறேன். நீராடிவிட்டு

உங்கள் அருகில் வந்து நீங்கள் முடிந்திருக்கும் கூந்தலைத் தொட்டு

வருட வேண்டும்.. என் நீண்ட நாள் ஆசை..” அல்லி சொல்லவும்

திரெளபதி முகத்தில் படர்ந்திருந்த சுருக்கங்கள் வெளிவந்தன. அவள் கூந்தலே பாரமாகச் சுமக்க முடியாத பாவத்தின் மூட்டையாகத் தலையில் அவளே ஏற்றி வைத்துக்கொண்டு அலையும் புத்திரசோகமாக அவளை அலையவிட்டிருக்கிறது என்பதை யாரிடம் சொல்லமுடியும்? அல்லியின் கண்களைப் பார்க்காமல் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்  அவளைத் துரத்திக்கொண்டே வருகின்றன அந்தக் காட்சிகள் . 

தருமராசனோடு அஸ்தினாபுரத்தில் அரசவை கூடிய அந்த முதல் நாளில் அரண்மனை வாசலில் தலைவிரிகோலமாகக்  கூடி இருந்து

ஒப்பாரி வைத்த பெண்களின் அழுகுரல் .. வற்றிய தாய் முலையில் முட்டி மோதி அழும் குழந்தைகளின் அழுபசி அவள் காதுகளில் ஒலிக்க ஆரம்பித்தது. அரச குடும்பத்தின் வாரிசுப்போரில் அதற்குச் சம்பந்தமே இல்லாத பெண்கள் , தங்கள் கணவன்மார்களை இழந்த இளம்பெண்கள், தங்கள் புதல்வர்களை இழந்த பெண்கள் பிச்சியாகி   தலைவிரிகோலமாக வீதிகளில் அலைந்து கொண்டிருப்பதாக ஒற்றர்கள் சொன்னது அவளைப் பயமுறுத்துகிறது.

சூளுரைத்தபோது இருந்த ஆத்திரம் அடங்கிவிட்டது. கூந்தலில்

படிந்த ரத்தவாடை அவள் கொதி நிலைக்கு மருந்தாகி அவள் பசி

ஆற்றிவிட்டது. ஆனாலும் எல்லாமும் முடிந்து அரசாளும் நாளில்

நிம்மதி இல்லாமல் அலைகிறது அவள் மனம். விரிந்த கூந்தலோடு அலைந்த நாட்களில் இல்லாத துக்கமெல்லாம் கூந்தலை முடிந்து முடிசூடிய பிறகு

அவளைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. அவள் ஓடிக் களைத்துவிட்டாள். 

‘தேவி… நீங்களும் வருகின்றீர்களா இன்று நதிக்குளியல் இல்லை.

அரண்மனை குளியல்தான். வாருங்களேன். எங்கள் பாண்டி நாட்டு   நன்னீராடல் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாக இருக்கும்..’

. குளிக்கும் இடத்திற்கு  தன்னையும் அழைக்கும் அவளை

அதிசயமாக பார்த்துக்கொண்டே அவளோடு திரெளபதி நடந்தாள்.

அரண்மனையின்  வடமேற்கு  பகுதியில் அரண்மனையை ஒட்டியும் ஒட்டாமலும் தனித்திருந்தது அச்சிறிய பொய்கை. வைகை நதியை

வளைத்து ஒடித்து அந்தப் பொய்கையில் கொண்டு விட்டிருக்கும்

நீர் தொழில் நுட்பத்தை திரெளபதி பிரமிப்புடன்  கவனித்தாள். அரண்மனையில் நீராடும் குளங்களை மட்டுமே அறிந்தவளுக்கு ஓடும் நீரும் அதில் அவர்கள் அமைத்திருக்கும் வேகத்தடை வசதிகள் அவள் பார்வையில் பட்டு அவள் விழிகள் விரிந்தன. 

பணிப்பெண்கள் தேவியர் இருவரையும்  நீராடத் தயார் செய்தார்கள். ஆபரணங்களை நீக்கியபின் மெல்லிய கச்சையும் இடுப்புத்துணியும் அணிய உதவினார்கள். அரபு நாட்டின் வாசனைத் தைலமும் மலை நாட்டின் மூலிகைத்தைலமும் அடங்கிய எண்ணெயை அப்பணிப்பெண்கள் இருவர் உடலெங்கும் பூசிவிட்டார்கள். . உள்ளங்காலில் பெருவிரல் அருகே அமுக்கி நீவிவிட்டு அப்படியே மெதுவாக அவள் இறுக்கமான தொடைகளை அமுக்கி இலேசாக்கினார்கள். அவள் கருப்பையின்  கட்டிகள் உடைந்து வலி மறைந்தது. கைகால்களை அப்பெண்கள் தடவும் போது திரெளபதியின் உடல் மெல்ல மெல்ல கனம் குறைந்து பஞ்சாகிப் பறக்க ஆரம்பித்தது. ரொம்ப காலத்திற்குப் பிறகு அவள் முகத்தில் பாஞ்சால நாட்டுக் கன்னியின் புன்னகை எட்டிப்பார்த்தது. 

பொய்கையில் இறங்கியவுடன் அந்த நீரின் மணம் அவள் இதுவரை

அறியாத வாசனையில் அவளைக் கிறங்கடித்தது. அல்லி நீரோட்டத்தை எதிர்த்து நீச்சலடித்துக் கொண்டிருந்தாள். கைகளால்  நீரைத் துழாவி நின்ற இடத்திலேயே  நின்று கொண்டிருக்கும் திரெளபதியைப் பாண்டி நாட்டு பணிப்பெண்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு திரெளபதிக்கு நீச்சல் தெரியாது போல என்று பேசிக்கொண்டார்கள்.  புனித நதிகளில் நீராடி காடு மேடுகளில் வனவாசம் செய்தவளுக்கு நதியோ நதியின் வெள்ளமோ பொருட்டல்ல.

அவளை நீச்சலடிக்கவிடாமல் அந்த நதியில் மிதந்த வாசனைப்பூக்கள்

தொந்தரவு செய்தன. ஒவ்வொரு இதழ்களும் அவள் ஆடை களைந்து

அவளைத் தழுவிச் செல்லும் போது அவள் அல்குல் விரிந்து அவளை விடுவித்த உணர்வு ஏற்பட்டது. இரவின் வலி தீர்க்கும் இந்தப் பொய்கை

இருக்கும்வரை மதுரை தேசத்தில்  மீனாட்சியின் அரசாட்சிதான் தொடரும் என்று அவளுக்கு உணர்த்தியது. நன்னீரில் கலந்திருக்கும் மூலிகைச்சாறுகள் அவள் தேகத்தை அடர்வனமாக்கி நிறைத்தன. பச்சையங்கள் வற்றாமல் வனம் செழிக்கும் மந்திரத்தை வைகை ரகசியமாகச் சுமந்து வருகிறாள். நீரின் மொழி ஆதித்தாயின் மொழியல்லவா.. தண்ணீரிலிருந்து திரெளபதிக்கு வெளியில் வரவே விருப்பமில்லை. ஆனால் அல்லி  நீராடல் முடித்து தயாராகிவிட்டதால் திரெளபதி படிக்கட்டுகளில் ஏறி வெளியில் வந்தாள். பணிப்பெண்கள் பருத்தி ஆடையால் அவள் ஈர உடம்பை துடைத்தார்கள். ‘நீராடல் சுகமாக இருந்ததா தேவி’ என்று பணிப்பெண் கேட்கவும் ‘உங்கள் தேசத்தின் நன்னீராடல் நறுமண  நீராடலாக இருக்கிறதே’ என்றாள் திரெளபதி. 

 “ஆம் தேவி, இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நன்னாரி, வெண்கோட்டம், கத்தூரி, வேரி, இலாமிச்சம், , நெல்லி,  ஒத்தகடு, தான்றி, துத்தம், வண்ணக்கச்சோலம், அமரேணுகம், காஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், பூஞ்சரளம், தமாலம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி, கதிர்நகை  ஆகியவற்றின் சாறெடுத்து  நீராடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் , முந்திய படித்துறையில் ,  நீராடல் முடியும்வரை,  கொஞ்சம் கொஞ்சமாக

விழுந்து கொண்டே இருக்கும் .  வாசனைக்கு மட்டுமல்ல

மருத்துவ குணமும் கொண்ட மூலிகைச்சாறுகளும் கலந்திருப்பதால்   உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும் “ சாதாரணமாக அப்பெண் சொல்லிக்கொண்டிருந்தாள். 

இத்தனை மூலிகைகளா.. பெண்ணின் நீராடலுக்கு.. !! அரண்மனையில் அரசனுக்காக வாசனைத்திரவியங்கள் கலந்து நீராடி அவனைப் படுக்கையில் மகிழ்விக்கப் பெண்ணுடலை தயார் செய்யும் அரண்மனை குளியல்களை அறிந்தவளுக்கு களைப்பும் இரவின் வெட்கையும் காயமும் வேதனையும் கடந்துவரப் பெண் தன்னுடலை நீராட்டும் மூலிகை நீராடல் .. புதுமையாக இருந்தது. 


பெண்ணின் உடல் ராஜாங்க முத்திரைப்பதித்த பத்திரமல்ல, அது அவளுக்கே அவளுக்கானது , அவளுடல், அவள் தேசம் .. மெல்ல அவள் தன் உடலைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள்.


பணிப்பெண் அவள் தலையில் சுற்றி இருந்த துணியை எடுத்து

மெதுவாகத் துவட்டினாள். மூங்கில் கட்டிலில் அவளைப் படுக்க வைத்தாள். கட்டிலுக்கடியில் கங்கு நிறைந்த மண்சட்டியிலிருந்து  வந்த  அகில்  புகையின் இதமான சூடு அவள் நீண்ட விரி கூந்தலுக்கிடையில் பரவி ஈரத்தை உறிஞ்சி வாசனையைப் பூசிக்கொண்டிருந்தது. மெல்லிய புகை மண்டலத்தில் அவளுடல் பூப்போல மெல்ல மெல்ல ஆகாசத்தில் றக்கை கட்டிக்கொண்டு மிதக்க ஆரம்பித்தது. அல்லி ராஜ்யத்தின் அரண்மனை வாசம் இதுவரை பூட்டி இருந்த கதவுகளைத் திறந்துவிட்டது. 


அன்று மாலையில் புலந்திரன் அவளை சந்திக்க வருவதாகச் சேதி அனுப்பி இருந்தான். மகனாக இருந்தாலும் யாரும் அல்லியின் அரண்மனைக்கு வர முன் அனுமதி வேண்டும். திரெளபதிக்கும் புலந்திரனை நேரில் சந்திக்க விருப்பம் இருந்தது.

அவன் அர்ஜூனன்  விழிகளையும் பீமன் தோள்களையும்

சேர்த்துக்கொண்டு பிறந்திருக்கும் மாவீரன் என்று சுபத்திரை

அடிக்கடி சொல்லுவாள். அப்படி ஒரு ஆண்மகன் இருந்தால்

எப்படி இருக்கும்? அவள் கற்பனைக்குள் அடங்கவில்லை அவன்.

சரியாக  சொன்ன நேரத்தில் அவன் அரண்மனைக்குள் நுழைந்தான்.


அரச குடும்பத்துப் பட்டாடைகள் இல்லை. அவன் மார்பில்

தொங்கிக்கொண்டிருந்தது ஒற்றை முத்துமாலை. தேக்குமரம் போல உடலும் கூர்மையான கண்களும் பரந்த நெற்றியும் உடலமைப்பில்

சற்றே நீண்ட கால்களும் அவன் தோற்றத்தை தனித்துக் காட்டியது.

வந்தவன் திரெளபதியின் பாதம் தொட்டு வணங்கினான்.

“தாயே .. உங்கள் தோள் அணைத்து மாண்ட என் சகோதர்களுக்காக கண்ணீர் விட அனுமதி வேண்டும்” என்றான்.


‘அவன் எந்த சகோதரர்களைச் சொல்கிறான்?’

திரெளபதிக்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவள் கைகள் நீண்டு அவனைத் தழுவிக்கொண்டன. 

அவன் மார்பில் எழுந்த விம்மல்.. அவள் தழுவலில் அடங்க 

முடியாமல் அவள் உடலெங்கும் பரவியது. அவள் கண்ணீர்

அவன் மார்பில் அணிந்திருந்த  முத்துமாலையில் சொட்டு

சொட்டாக விழுந்து புரண்டது. 

 

“அன்னையே.. என் சகோதரர்கள் ஐவரையும் இழந்த பிறகும்

என்னை ஏன் அழைக்கவில்லை,  ? என் வீரத்தின் மீது நம்பிக்கை இல்லையா அல்லது இவன் துச்சலையின் மகன் காந்தாரியின்

புருஷன் தானே என்பது மட்டும்தான் நினைவுக்கு வந்ததா?

இவன் அவன் மாமனுக்கு மருமகன் தானே என்றெண்ணி  ஒதுக்கி

வைத்துவிட்டீர்களா?  இவனும் அர்ஜூனன் புத்திரன்தான் என்பதை 

 மறந்துவிட்டதற்காக அழவில்லை தாயே..அல்லி ராஜ்யத்தின் வீரத்தையும்

விவேகத்தையும் இழந்துவிட்டீர்களே என்பதற்காக அழுகிறேன்?”

அவன் குரல் உடைந்து உடைந்து வெளியில் வந்து திரெளபதியை

உடைக்க ஆரம்பித்தது. அவன் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவளிடம்

பதிலில்லை. ஆனாலும் அவன் தோளணைத்து அழுத அக்கணம் அவளுக்கு ஆறுதலாக இருந்தது. இதுவரை யாருமே அவள் தோளணைத்து கண்ணீர் துடைக்கவில்லையே. 

பாண்டவர்கள் என்று நினைத்து அஸ்வத்தாமனால் கொலை செய்யப்பட்ட அவள் புத்திரர்களின் முகம் நினைவுக்கு வந்தது. அத்தருணத்தில் அவள் மட்டுமே அக்கூடாரத்தில் தனித்து நின்றாளே . பாண்டு புத்திரர்கள் யாருக்குமே புத்திரசோகம் வரவும் இல்லை. அவர்கள் கொலையுண்ட தன் புத்திரர்கள் மார்பில் விழுந்து புரண்டழும்

அவளை அணைத்து ஆறுதல் சொல்லவும் அருகில் வரவில்லை. அபிமன்யு

போர்க்களத்தில் இறந்தபோது சுபத்திரயைக் கட்டிப்பிடித்து அழுத அர்ஜூனன்,

கடோத்கஜன் மாண்டபோது தன் புத்திரனின் உடலைச் சுமந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறிய பீமன் இவர்கள் யாருக்குமே அன்றைக்கு புத்திரசோகம் வரவில்லையே !விலகியே  நின்றார்களே!!.. துன்ப காலத்திலெல்லாம் துணையாக நின்ற கிருஷ்ணன் மூன்றாம் மனிதனாக ஏன் முகம் மறைத்துக்கொண்டான்?  இதோ.. ஓர் ஆண்மகன் முதல் முறையாக அவளை அணைத்து ஆறுதல் சொல்கிறான்,

இவன் அர்ஜூன்ன் புத்திரனல்ல, இவன் அல்லியின் மகன்.. 

இருவரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.

பதிலை எதிர்பார்த்து கேள்வி கேட்கவில்லை அவன். அவன் உள்ளத்தில்

அடக்கிவைத்திருந்ததைக் கொட்டி தீர்த்துவிட்டான். 

திரெளபதி புறப்படும் அந்த நாளும் வந்தது. அல்லி அன்றிரவுதான்

திரெளபதியின் படுக்கையறையில் நுழைந்தாள். தூங்காமல் விழித்திருக்கும்

திரெளபதியைப் பார்த்து “வாருங்கள் தேவி, வெளியில் நிலா வெளிச்சம்.

காலாற நடந்துவிட்டு வருவோம்” என்றாள். இந்த இரவிலா, வெளியில்

நடப்பதா” ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்துக்கொண்டே சீனப்பட்டு

சால்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவளுடன் வெளியில் வந்தாள்.

கூட துணைக்கு யாரும் வரவேண்டாம் என்று அல்லி  கை அசைத்தாள்.

அரண்மனையிலிருந்து தேவியர் இருவரும் காலார நடந்தே அரண்மனை கதவுகளைத் தாண்டி நடந்தார்கள்.

அந்த இரவிலும் மதுரை நகரம் தூங்கவில்லை. கோவில் வாசல் கடைவீதிகளில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. வண்டிகளில் வந்து இறங்கிக்கொண்டிருக்கும் முத்துப்பெட்டிகளை வியாபாரிகள் இறக்கிக் கொண்டிருந்தார்கள். இரவு சில்லறை வியாபாரங்களுக்கானதல்ல. மொத்தமாக பொருட்களை வாங்கி விற்கும் பல தேசத்து பெரு வணிகர்கள்

அவர்களின் மொழிகளில் கடை வீதி புதிய தேசமாக காட்சி அளித்தது.   யவனர்களின் நடமாட்டம் அதிகமாக தெரிந்தது. கடைவீதியில் அரிசிமாவுப் புட்டு,  திணைமாவுப் புட்டு, தேங்காய் மணத்துடன் சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கும் பெண்கள்., அதை இலையில் வாங்கி கையில் வைத்துச்  சாப்பிட்டுக்கொண்டே நடக்கும் பாணர்களின் கூட்டம்..

அதில் ஒரு சிலர் அரசியை அடையாளம் கண்டு தலைவணங்கினார்களே தவிர பெரிதாக வேறு எதுவுமில்லை. அவரவர் அவரவர் வேலையில் மும்மரமாக இருப்பது தெரிந்தது.

நதியோரத்தில் மருத மரத்தடியில் மக்கள் உட்காரும் வளைவான

இருக்கைகள் ,.. நிலவொளியில் வைகை அமைதியாக இருந்தாள்.

இரு பெண்களும் இன்னும் எவ்வளவு  நேரம் இப்படியே மெளன விரதமிருப்பது  என்று ஒரே நேரத்தில் யோசித்துக்கொண்டிருக்கும் போது

“தேவி , நீங்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சி. என்னிடம் எதாவது சொல்ல

விரும்பி அதைச் சொல்லாமல் போகின்றீர்களோ என்று தயக்கமாக இருக்கிறது.. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அல்லி ராஜ்யத்திற்கு வரலாம், “ 

“ஆம் எதற்காக வந்தேன்? எதைத் தேடி இவள் ராஜ்யத்திற்கு வந்தேன்?

எதுவும் அவள் கேட்கும்போது சொல்வதற்கில்லை”

“உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

இப்போதுதான் அதற்கு நேரம் வாய்த்தது.. வேறொன்றுமில்லை”

“எனக்கும் உங்களைக் கண்டதில் அளவில்லாத மகிழ்ச்சியும் 

மன நிறைவும் தேவி, மீண்டும் எப்போது வருவீர்கள்?”

“புலந்திரன் முடிசூட்டு விழாவிற்கு அழைப்பாய்தானே, அப்போது

 நாங்கள் அனைவரும் வருவோம்”

அல்லி சிரித்தாள்.

தேவி.. அப்படியானால் நீங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை.

புலந்திரனுக்கு அல்லி ராஜ்யம் முடிசூட்டாது. அவன் வயிற்றில்

பெண்மகவு பிறந்தால் அவளுக்கு ஆயக்கலைகள் அறுபத்து நாலும்

கற்பித்து அவள் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அவளுக்கு முடி சூட்டுவோம்.

அப்படி இல்லை என்றால் அல்லி ராஜ்யத்தை  எம்  அரசி

மீனாட்சி தேவியிடம் திருப்பிக் கொடுத்துவிடுவோம். மீனாட்சியின்

பச்சைக்கிளி பறந்துவந்து எந்தப் பெண்ணின் தோளில் அமர்கிறதோ 

அவளே இந்த அல்லி ராஜ்யத்தை ஆளப்பிறந்தவள், இந்த மண் எங்கள் தாய் மீனாட்சியின் மண். அவள் சார்பாகத்தான் நாங்கள் ஆட்சி செய்கிறோம்”

திரெளபதிக்கு இந்த அரசாட்சி முறையே ஆச்சரியமாக இருந்தது.

அல்லி இதைப்பற்றி விளக்கமாகப் பேச ஆரம்பித்தாள்.

இந்தப் பூமியில் ஆண்தான் அரசாள வேண்டும் என்று அரண்மனை

வாழ் பெண்களையும் நினைக்க வைத்திருக்கிறார்கள். இப்போது அஸ்தினாபுரத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்.  நம் மாமி குந்தி தேவிக்கு பாண்டுவின் அரசியாக இருப்பதுடன் மன நிறைவு வந்துவிடவில்லையே. எப்படியும் அவளே ராஜமாதாவாக இருக்க வேண்டும் என்ற விபரீத ராஜாங்க ஆசை தானே குந்தியைக் காட்டுக்கு விரட்டியது. மாமன் பாண்டு மகாராஜாவுக்கு அரண்மனையில் இல்லாத வைத்தியமா? வனத்தில்    நியோகமுறையில் கருத்தரிக்கும் போது ஆண்வாரிசுள் தான் வேண்டுமென்றாரார் குந்திதேவி.  நியோகத்திலும்  கூடுகின்ற ஆணின் வலது நாசி வழியாக சுவாசம் நடக்க வேண்டும் என்று ஆணை இட்டிருந்தாராமே! தன்னைப் போல ஒரு புதல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏன் தேவி ராஜமாதாக்கள் விரும்புவதில்லை! அவர்களுக்குப் புத்திரர்கள்தான் வேண்டும், அவர்களுக்கு ராஜமாதாவாக வேண்டும், அதற்காக ராஜமாதாக்கள் நடத்துகின்ற அரசியல் இருக்கிறதே.. என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்குவதில்லை அவர்கள் !”

திரெளபதிக்குள் இருந்த ராஜாமாதா .. அப்போது விழித்துக்கொண்டாள்

மதுரை மீனாட்சி ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை ஆரம்பித்துவிட்டது.

அல்லி எழுந்து நின்று கோபுரத்தைப் பார்த்து கும்பிடும்போது

திரெளபதியும் எழுந்து நின்றாள்.

***

தருமன் இமைகொட்டாமல்  பாஞ்சாலியின் அரண்மனையைப் பார்த்துக் கொண்டே இருந்தான்… அவள் அன்றைக்கு கேட்டமாதிரி என்னைக் கேள்வி கேட்டிருக்கலாம். “உன்னை வைத்து இழந்தப் பிறகு என்னைப் பணயம் வைத்தாயா ? என்று. எதுவுமே கேட்காமல் இருக்கிறாள்.. அவள் மனசில் என்ன இருக்கிறது ?  எப்படித் தெரிந்து கொள்வது? 

கணவனாக தெரிந்து கொள்ள எந்த தர்ம சாஸ்திரமும் கற்றுக்கொடுக்கவில்லை.  அரசனாகத் தெரிந்து கொள்ள ஏன் அதிகாரமில்லை! எங்கே தோற்றுப்போனேன்? தலைவிரிகோலத்துடன் அவளைக் கண்டபோது கூட தாங்கிக்கொண்டவனுக்கு இப்போது அவள் கூந்தல் மழித்து பத்திய உணவருந்தி தரையில் படுத்திருக்கும் அரண்மனை தவக்கோலம் புரியவில்லை. அவள் அரண்மனையைப் பார்த்துக்கொண்டே

தன் மடியிலிருந்த தரும சாஸ்திரத்தை மூடிவைத்தான் அஸ்தினாபுரம்

இருள் போர்வையை எடுத்து மூடிக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது.

-----------------------


(இராம. செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சிறுகதைப்போட்டியில்

பரிசுப்பெற்ற சிறுகதை. )


Friday, April 26, 2024

பாரதியும் எங்க ஊரு பாட்டுக்கிறுக்கனும்

 பாரதியும் எங்க ஊரு பாட்டுக்கிறுக்கனும்.




பாரதியை அவர் வாழ்ந்தக் காலத்தில் யாரும் கொண்டாடவில்லை யாரும் கவனிக்கவில்லை, யாரும் மதிக்கவில்லை என்று சொல்லப்படுகின்ற எந்த குற்றச்சாட்டுகளோடும் எனக்கு உடன்பாடு இல்லை. பாரதியை அந்தக் காலத்தில் அவரைச் சுற்றி இருந்த கல்வி சார்ந்த சமூகம் அக்கறையோடு பேணிப் பாதுகாத்திருக்கிறது. புதுச்சேரியில் பாரதி குடியிருந்த அந்த வீட்டுக்கு போயிருந்தப்போது இந்த எண்ணம் எனக்கு மேலும் உறுதியானது. அந்த வீடு இப்போதும் கூட பலருக்கு எட்டாதக் கனவு. நம்ம ஆளு நல்லாத்தான்யா வாழ்க்கையை அனுபவிச்சு இருக்கிறாரு! பிறகு எதுக்கு இவங்க எல்லாரும் பாவம் பாரதி ,பாவம் பாரதி! என்று அடிக்கடி பாவப்பட்டு கொள்கிறார்கள்?!

சரி.. அவர் காலத்தில் அவர் எழுதியதை அவருடைய சமூகம் கவிதை என்று ஏற்றுக்கொண்டது. இதைவிட ஒரு படைப்பாளனுக்கு வேறு என்ன வேண்டும்? 


பாரதியின் காலத்தில் வாழ்ந்த என்னுடைய சின்ன தாத்தா.. அவரை நாங்கள் வாத்தியார் தாத்தா என்றுதான் அழைப்போம். அவர் அந்தக் காலத்து எட்டாம் வகுப்பு. வில்லிசை பாடல் பாடுவதில் வல்லவர். எந்த இசைக்கல்லூரியில் போய் எந்தக் குருவிடமும் அவர் இசையைக்கற்றுக் கொள்ளவில்லை. தானே இட்டுக் கட்டி தனக்குத் தெரிந்த நாட்டுப்புற தெய்வங்களின் கதைகளை பாடிக்கொண்டே இருப்பார்! 

அவருடைய பொருளாதார நிலைக்காக அவரைப் பம்பாய்க்கு அழைத்து வந்து இங்கு இருக்கும் பாடசாலையில் வாத்தியாராக நியமித்தார்கள். ஆனால் அவருக்கு இந்த வேலை செய்வது அதுவும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை வேலை செய்வது இதெல்லாம் ஒத்து வரவில்லை. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் பம்பாயிலிருந்து கிளம்பி போய்விட்டார். ஊர் ஊராக சென்று பாடிக் கொண்டு அலைந்தார். அப்படி தன்னோடு பாடிய தன்னுடைய பாடலை ரசித்த ஒரு பெண் அவரோட கூடவே வந்து விட்டாள். ஏற்கனவே திருமணம் ஆன தாத்தா, இரண்டாவதாக அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டாரா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. இந்த இரண்டாவது பெண்ணுக்கு பிறந்தக் குழந்தைகள் கிடையாது. அவருடைய மூத்த மனைவி குழந்தைகள் ஏன் எங்கள் ஊரே அவரை "கிறுக்கன்"என்று சொல்லி ஒதுக்கி வைத்தது. தன் வயதான காலத்தில் தன்னோடு வந்த அந்தப் பெண்ணோடு சேர்ந்து எப்போதும் கருக்கலிலும்  விடியலிலும் அவர்கள் இருவரும் அவர்களின் குடிசையில் பாடிக் கொண்டே இருப்பார்கள்.!

அவர்கள் இருவரும் பாடிப் பாடியே வாழ்ந்தார்கள். பாடுவதிலேயே தங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டார்கள். தூங்குவதற்கு கூட அவர்களுக்கு பாடல் தான் உதவி இருந்திருக்கும்! ஆனால் கடைசி வரை அவரைச் சுற்றமும் ஊரும் ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. இப்படியாக எங்கள் ஊரில் எங்கள் உறவில் ஒரு மாபெரும் கலைஞன் ஒரு  கவிஞன் அனாதையாக வாழ்ந்து மடிந்தான்.

💥

பல தருணங்களில் பல இடங்களில் நாம்  எங்கு இருக்கிறோம்? என்னைச் சுற்றி யார் இருக்கிறார்கள்,,? சில இடங்களில் ஒட்ட முடியாமல் அந்நியப்பட்டு நிற்கும் என்னை..

எப்போதோ வாழ்ந்து மறைந்த அந்தப் பாட்டுக்கார கிறுக்கனுடன் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். 

எழுத்தோடு வாழ்தல் என்பது ஏன் என்னைப் போன்றவர்களுக்கு இவ்வளவு பெரிய போராட்டக் களமாக இருக்கிறது?!

எனினும் 

வாழ்தல் இனிது. 

எழுத்தோடு எழுத்தாக வாழ்தல்

அதனினும் இனிது.

Sunday, April 21, 2024

நான் கறுப்பி


 நான் கறுப்பி

கறுப்பு என் நிறமட்டுமல்ல

அது என் உரம் திறம்  வலி 

உன் அழகியல் தோற்றுப்போன சுழி.

கறுப்பு என் கம்பீரத்தின் அடையாளம்.

வெள்ளை எலிகளும் வெள்ளைப் பன்றிகளும்

உலாவரும் உன் தேசத்தில்

பச்சையமாய் உயிர்த்திருக்கும்

மழைத்துளியின் கருவறை.

கறுப்பி..

உன் கற்பனைக்கு எட்டாத வானம்

உன் கவிதைகள் தொடாதக் காதலி.

வெண்மை புனிதம்

கருமை இருமையென 

எவன் சொன்னான்?

ஏன் சொன்னான்?

போடா போ..

ஆத்தாவும் அப்பனும்

கறுப்பாக இருப்பதை 

வெளியில் சொல்லாதே.

ஃபேர் அண்ட் லவ்லி தேவதைகளைத்

தேடிக் கண்டுப்பிடி.

பசுவின் பால் மட்டுமே

வெண்மையாக்கும்.

எருமைப்பால்

கறுப்பாக இருக்கும்.

நம்பு.

சொர்க்கலோகத்தில் சிவப்பிகளுடன்

ஆடிப்பாடு.

உன் பிறவிப்பயன் கிட்டும்.

தாகமெடுக்கும் போது

தண்ணீர் குடிக்காதே.

கார்மேக  நீர்த்துளி

கறுப்பின் அடையாளம்.

சிவப்பு வெள்ளையின் மூத்திரம் குடி.

போடா போ.

நான் கறுப்பி.

கறுப்பு என் நிறம் மட்டுமல்ல.


- புதியமாதவி.

நன்றி நங்கை இதழ். இலங்கை.


#புதியமாதவி_20240422

#புதியமாதவி_கவிதை

#puthiyamaadhavi_poems