Tuesday, October 25, 2022

காஃபி வித் நாஞ்சில் நாடன்.


 என் முதல் கவிதை நூல் சூரியப்பயணம் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் வாழ்த்துரையுடன் வெளிவந்துள்ளது. மிக மோசமான வடிவமைப்பு!!!

கவியரங்க கவிதைகளை வேறு இணைத்திருப்பேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது.

முதல் புத்தகம் என்பதால் வெளியீடு விழா என பிரமாதப்படுத்திக் கொண்டதும் நினைவுக்கு வருகிறது. தன் வாழ்த்துரையில் நாஞ்சில் "எல்லாமே கடக்க முடிகிற தூரங்கள் தான், நடக்கத் தயாராக இருந்தால்" என்று முடித்திருப்பார்.

தூரங்களை கடந்திருக்கிறேனா ?!! தெரியாது.

நேற்று நாஞ்சில் நாடன் அவருடைய அண்மையில் வெளிவந்த 4 புத்தகங்களை " புதியமாதவிக்கு வாழ்த்துகளுடன்" என்றெழுதி கையெப்பமிட்டு அனுப்பி இருக்கிறார். காலையில் எழுந்தவுடன்' காஃபி வித் நாஞ்சில்'

பல நினைவுகளையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்துவிட்டது.

என் முதல் புத்தகத்தில் வெளிவந்திருக்கும்  வாழ்த்துரையுடன் அவர் எழுதி இருந்தக் கடிதம்.. அது என்னளவில் மிகவும் முக்கியமானது. அக்கடிதத்தில்

" கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல் ஏந்நதலினிது"

என்ற திருக்குறளோடு முடித்திருப்பார். என்  ஒவ்வொரு புத்தகம் வெளிவரும்போதும் அவருடைய அக்கடிதத்தை எடுத்து வாசிப்பது இன்றுவரை தொடர்கிறது.

தொல்குடி சிறுகதை தொகுப்பில்‌ தன்னுரையாக "கைம்மண் அளவு" என்று எழுதியவர் இதே திருக்குறளுடன் முடித்திருக்கிறார்..

இன்னும் பக்கங்களைப் புரட்டவில்லை!

முதல் பக்கத்தின் நினைவலைகள் இழுத்துச் செல்கின்றன.

அரசியல் கருத்து முரண்பாடுகள் உண்டு. இருவரும் அறிவோம். அதையும் தாண்டி அவர் எழுத்துகளை வாசிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும் எவ்வித நெருடலும் இல்லாமல் தொடர்கிறோம். தொடர்கிறேன்.

இலக்கியம் அதை எழுதுபவருக்கும்

வாசிப்பவருக்கும்

இதைக்கூட செய்யவில்லை என்றால்!

பேரன்பும் நன்றியும் நாஞ்சில் சார்.

No comments:

Post a Comment