Tuesday, November 29, 2016

BOOKSWAP

Image result for bookswap

BOOKSWAP
ஊடகங்கள் ஊடகங்கள் ஊடகங்கள்...
கையிலிருக்கும் ரிமோட்டில் எந்தப் பக்கம் பிடித்தாலும்
சில முகங்கள் அடிக்கடி எல்லா நிகழ்ச்சிகளிலும் வருவதும் போவதுமாய்
வருவதும் போவதுமாய்... இப்படி வந்துப்போவதாலேயெ பிரபலமாகிவிடலாம்
என்றும் பிரபலமாகிவிட்டால் அவர்களுக்கு தினமும் தீபாவளிதான்..
நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இது பெரிய குற்றமில்லை.
விளம்பரத்தில் தொலைந்து போனவர்களை விட நம் நாட்டில்
விளம்பரமில்லாமல் தொலைந்துப் போனவர்கள் நிறையபேர் உண்டு.
இம்மாதிரியான ஒரு சின்ன மனக்கலக்கத்தில் ... டாடா இலக்கியத் திருவிழா
கூடலில் மதிய உணவுக்குப் பின்
 புத்தகப்பரிமாற்றம் என்ற  BOOKSWAP  பகுதிக்குள் நுழைந்தேன்.
அங்கே... சேட்டன் பகத், ஷோபா டி இத்தியாதி பல பிரபலங்கள் எழுதிய
புத்தகங்கள் கொட்டிக்கிடந்தன. ஒரு ராமச்சந்திர குகாவோ அருந்ததிராயோ
எழுதிய எந்தப் புத்தகமும் இல்லை ...இல்லை .. இல்லை.
அப்பாடா... வாசிப்பவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்...
கடற்கரை காற்று சுகமாக இருந்தது.

Monday, November 21, 2016

PAST SO PRESNT IN PRESENT


இறந்தகாலத்தில் முகம்பார்க்கும் நிகழ்காலம்
அதுவும் அரசியலில் இறந்த காலத்தைத் தூக்கி சுமந்துக்கொண்டிருக்கும் நிகழ்கால அரசியல்வாதிகள்..
ghosts who walk
why is the past so present in indian politics?
எவ்வளவு ஆழமான  விவாதப்பொருள்..
இத்தலைப்பை வாசித்தவுடனேயே என்னையும் உற்சாகம்
தொற்றிக்கொண்டது. என்னவெல்லாம் பேசுவார்கள்?
NCPA - Littile theatre sunday 20/11/16 - 5 to 6 pm
வழக்கம்போல கூட்டம் ஒரு இருக்கை கூட காலியாக
இருக்கவில்லை. வெங்கட் துலிப்லா வும் ஷரிர் மஷானியும்
உரையாடல். தலைமை திலீப் பட்கோன்கர். (venkat dhulipala
and zareer masani . chair: Dileep padgaonkar)
ஷரீர் மஷானி மிகவும் சிறப்பாக ஆரம்பித்தார்.
ராமஜென்மபூமி முதல் பாரதப் பிரதமர் ப்ளாஸ்டிக் சர்ஜரி
இந்தியாவில் இருந்ததாக அறிவியல் கருத்தரங்கில் பேசியது
முதல் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டே வந்தார். மராட்டிய
மண்ணில் எங்கே பார்த்தாலும் சத்ரபதி சிவாஜியின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். மும்பையில்
விக்டோரியா டெர்மினஸ் சத்ரபதி சிவாஜி ரயில்நிலையமானது.
விமானத்தளத்தின் பெயரும் சத்ரபதி சிவாஜி விமான நிலையம்தான்.
இப்படியாக எங்கே பார்த்தாலும் வீரசிவாஜி ... கர்நாடகத்தில்
திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடப்படுவதைச் சுட்டிக்காட்டி
அரசர்கள் அவரவர் அதிகாரத்தை நிலைநிறுத்தவே போராடினார்களே
தவிர நாட்டு விடுதலைக்கும் அவர்கள் போராட்டங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்பதையும் சிரித்துக் கொண்டே
விவரமாக சொன்னார்.  அவர்கள் வாழ்ந்தக் காலங்களில் அவர்கள்
வீரர்களாக தலைவர்களாக இருந்திருக்கலாம் ஆனால் அவர்களை
அப்படியே நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து ஒரு அவதார புருஷனாக
காட்டுவதும் இளைய தலைமுறைக்கு கடந்த கால முகங்களை
நிகழ்காலத்திற்கான அடையாளமாகக் காட்டுவதும் ஆபத்தானது
என்றார் மஷானி. அதன் பின் விடுதலைப் போராட்டம் , காந்தி, நேரு
என்று ஆரம்பித்த உரையாடல் அப்படியே தலைமையின் கேள்விகளின்
ஊடாக கொஞ்சம் கொஞ்சமாக தலைப்பிலிருந்து விலகி விலகி விலகி.. ரொம்பவே விலகிப்போய்... என்னவோ இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையைப் பற்றிய உரையாடலாக மாறியது. இதற்கு முழுக்காரணமும் நிகழ்ச்சியை நடத்திய திலீப் படுகோன்கர் தான்.
சிக்னலை தவறான பாதையில் காட்டினால் வண்டி ட்ராக் மாறித்தானே
பயணிக்கும்... எப்படியே அதுவும் ரொம்ப ரொம்ப சூடான விவாதமாக இருந்தாலும் இப்படி அநியாயமாக ட்ராக் மாறி
வண்டி ஒடியதில் என்னைப் போல பலருக்கு ஏமாற்றம் தான்.
மாயாவதி உத்திரபிரதேசத்தில்  நிறுவி இருக்கும் ஏகப்பட்ட ஆனை
சிலைகளும் பாபாசாகிப் அம்பேத்கர் சிலைகளும் ஒரு எதிர்வினை
செயல் தான் என்று ஒரு போடு போட்டார் பாருங்கள் வெங்கட்..
இந்த நாட்டில் மகாத்மா காந்தி ரோடு, இந்திராகாந்தி ரோடு,
ராஜிவ்காந்தி ரோடு.. என்று எல்லா பாதைகளையும் ஒரே
குடும்பத்து காந்திகள் வரிசையாக அடைத்ததின் எதிர்வினைதான்
மாயாவதி செய்தது என்றார்.
பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து அம்பேத்கர் எழுதி இருப்பது
குறித்து விவாதம் இன்னொரு RIGHT TURN . அவர் சொன்ன கருத்துகளை அப்படியே கேட்டுக்கொண்டேன். இன்னொரு முறை அம்பேத்கரின் குறிப்பிட்ட
இக்கருத்து குறித்து மீள்வாசிப்பு செய்தாக வேண்டும்.
இப்படியாக டிராக் மாறி ஓடினாலும் வண்டி ஏகப்பட்ட
பயணிகளுடன் (எண்ணச்சிதறல்களுடன் )  நிகழ்ச்சி முடிந்து
24 மணி நேரம் கடந்தும் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.

Thursday, November 17, 2016

அவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்




( SUE ROBERT AND GILLIAN JOHNSON )

அவள் எழுதுகிறாள்... அவன் எழுதுகிறான்
ஆம் அவள் எழுதுகிறாள் அவன் எழுதுகிறான்
என்ற தலைப்பே என்னைப் போன்றவர்களை  NCPA - Experimental theatre க்கு
அழைத்தது எனலாம். அரங்கம் நிரம்பிய கூட்டம். சித்தார்த் சங்கவி தலைமையில் (17 நவம். 2016 மாலை 6.30 - 7.30)
இரு இணையர் பேசிக்கொண்டிருந்தார்கள். -
GILLIAN JOHNSON & NICHOLAS SHAKESPEARE
மற்றும் SIMON ARMITAGE & SUE ROBERTS.
தங்கள் சந்திப்பு, இருவரும் எழுதிக்கொண்டிருக்கும் ப்ஸியான நேரங்கள்,
" காஃபி ப்ளீஸ், வாக்கிங் போகலாமா " என்று மட்டுமே உரையாடல்
நடந்த தருணங்கள், மனைவி பேசிக்கொண்டே இருக்க கணவன்
ஒரு அமைதியாக இருந்ததும் மனைவி வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில்
கணவன் பேச ஆரம்பித்ததும் ... தங்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை
மிகவும் இயல்பாக பரிமாறிக் கொண்டார்கள். ஓர் ஆணும் பெண்ணும்
கணவன் மனைவியாக இணையும் குடும்ப வாழ்க்கையில் அவர்கள்
தங்கள் எழுத்துப்பணிக்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம்
என்று (அதாவது  child free couple  என்ற அடையாளத்தையே நான்
குறிக்கிறேன்) முடிவு செய்திருந்தால் என்னதான் அந்த முடிவு அவர்களின்
தனிப்பட்ட  முடிவாக இருந்தாலும் அந்த முடிவு குடும்பம் என்ற நிறுவனத்தின்
ஒரு விதிவிலக்கான முடிவாகவே இன்றுவரை பார்க்கப்படுகிறது.
இதையும் கருத்தில் கொண்டு அவர்கள் அம்மாதிரியான விதிவிலக்கானவர்களாக
இருக்கலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் போதே.. அவர்கள்
தங்களின் குழந்தைகள் குறித்தும் பேச ஆரம்பித்தார்கள்!
பெண்களின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை எழுத்தாக்கும் நான் ,
ஒரு தாயாக குழந்தையைப் பிரசவிப்பதிலிருந்து
ஒரு குழந்தைக்கு பேம்பர்ஸ் மாற்றுவதும் "ஆய்" போனால் துடைப்பதுமான
அனுபவத்தையும்  அடைந்தேன்.. என்று பேசப்பேச ... எனக்குள் என் கடந்தக் காலம் விரிந்தது..
அவர்களுடைய கணவன்மார்கள் ஒரு குழந்தை வீட்டில் தரும் மகிழ்ச்சியை
அளவாக பேசி தங்கள் நிலைப்பாட்டைக் காட்டினார்கள்.
இருவரும் எழுதுகிறார்கள். இருவருக்கும் ப்ஸியான வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு வேறு, உரையாடல்களுக்கான நேரம் குறைகிறது .. எப்படி வாழ்க்கை?
என்ற பார்வையாளர் கேள்விக்கு நிக்கோலஸ் சொன்ன பதில் இதுதான்
"படுக்கையிலிருந்து காலையில் நாங்கள் இருவரும் சேர்ந்து எழுகிறோம்"
என்றார். ( waking up together) இதில் எத்தனையோ அர்த்தங்கள் இருக்கின்றன.
ஒன்றாக துயில் எழுந்து ஒன்றாக இணைந்து எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டு அவரவருக்கான சுயமிழக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து
இருவரும் அவரவருக்கான இடத்தைக் கொடுத்து வாழும் வாழ்க்கை..!
இப்படி எத்தனையோ அர்த்தங்கள் அவர் சொன்ன சொல்லில் இருந்தது.
ஆனால் மனைவி என்றால் "பின் தூங்கி முன் எழ வேண்டும்" என்று நல்ல
மனைவிக்குரிய தகுதிகளை வரையறுத்திருக்கும் நம் சமூகத்தில்?
ஊடகத்தில் காட்சிகளைப் பார்த்தால்... "கணவன் படுக்கையில் தூங்கிக்
கொண்டிருப்பான்.. மனைவி எழுந்து குளித்து பூஜை செய்து கையில்
காஃபியுடன் வருவாள்.. இப்படி காட்சி வராத ஒரு தொலைக்காட்சி தொடர்,
ஒரு சினிமா இன்றுவரை வந்திருக்கிறதா..?? இக்காட்சியை தன்னை மறந்து
ரசிக்கும் ஆண்களும் பெண்களுமாக இருக்கும் நம் சமூகத்தில்
சேர்ந்து எழுவது நடக்கவில்லையா..? என்று கேட்டால் காலப்போக்கில்
இந்த மாற்றம் நடக்கிறது ... நடக்கிறது.. எப்படி..?

அவனும் அவளும் ஒரே நேரத்தில் முழிக்கிறார்கள்...
அவள் வேகம் வேகமாக பல்துலக்கிவிட்டு அவனுக்கு காஃபி போடுகிறாள்.
அவன் வாக்கிங் சூ  மாட்டிக்கொண்டு நடைப்பயிற்சிக்காக கிளம்புகிறான்.
அவள் அவன் போன பின், கிட்சனில் எட்டுக்கைகள் உடைய தேவியாக
அவதாரம் எடுக்கிறாள். மிக்ஸி ஒடுகிறது.. தோசைக்கல்லில் தோசை..
இன்னொரு அடுப்பில் குக்கர் சத்தம் போடுகிறது. கைகள் காய்கறிகளை
வெட்டுகின்றன. சட்னி தயாராகிவிடுகிறது.. நடு நடுவே கிட்சனுக்கும்
பெட்ரூமுக்குமாக ஒரு ஜெட் போல பறந்துக்கொண்டிருக்கிறாள்..
குழந்தைகளை எழுப்புகிறாள்.. சாம்பாரோ கறியோ தயாராகிக் கொண்டிருக்கிறது.
சப்பாத்தி உருட்ட ஆரம்பிக்கிறாள். எப்படியோ குழந்தைகளை ஒரு வழியாக
எழுப்பி... அவர்களுடன் ஒரு மந்திரவாதியைப் போல நடந்துக்கொள்கிறாள்.
வாக்கிங் போன கணவன் வீடு திரும்புகிறான். ரொம்பவும் வியர்வையுடன்.
வந்தவுடன் அவன் அன்றைய தினசரியை வாசிக்க ஆரம்பித்துவிடுகிறான்.
என்னங்க... கொஞ்சம்.. சின்னவனைப் பாருங்களேன்.. பாத்ரூமில் என்ன
செய்திட்டிருக்கானு.., என்னங்க... குக்கர் சத்தம்ம் போடறது காதில விழலையா.. என்று கேட்டுக்கொண்டே வேகமாக கிட்சனுக்குள் நுழைந்து அதை நிறுத்துகிறாள்.
அவன்... " இந்த வீட்டில நிம்மதியா காலையில எந்திருச்சி ஒரு பேப்பர் படிக்க
முடியுதா.. ? " கோபத்துடன் பேப்பரை எடுத்து வீசுகிறான்.
பிள்ளைகளுக்கு சீருடைகளை மாற்றி சாப்பாடு டப்பா, தண்ணீர் பாட்டில்
வைத்து ஸ்கூல் பஸ் வருவதற்குள் ஓடி ஓடி எப்படியோ அவர்களை
அனுப்பி விட்டு வரும் போது அவன் குளிக்கப் போய்விடுகிறான்.
சிதறிக்கிடக்கும் பேப்பரை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு
அவள்  நிமிரும் போது இடுப்பு வலிக்கிறது. கொஞ்சம் உட்கார்ந்தால்
நல்லா இருக்குமே என்று நினைக்கும் போது அவன் பாத்ரூமிலிருந்து
கத்துகிறான்.. எதற்கோ..!
அவள் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால்..அவளும்
குளித்து உடைமாற்றி பஸ் பிடித்து மும்பை மாதிரி இடத்தில் ரயில்
கூட்டத்தில் இடிபட்டு தொங்கிக்கொண்டு போய்ச்சேரும் போது
அவள் எப்படி  இருக்கிறாள்...? அய்யோ..யோ யோ..!
இப்படியாக சில மாற்றங்களுடன் தொடர்கிறது குடும்பத்தில்
ஆண் பெண் வாழ்க்கை.
இதில் எழுத்தாளர் தம்பதியரின் வாழ்க்கை?
அவள் எழுதினாள்.. அவன் எழுதினான்.
அவள் எழுதினாள்... அவன் எழுதிக்கொண்டிருக்கிறான்.
அவள் ஒரு காலத்தில் எழுதினாள்.
அவன் எழுதிக்கொண்டு இருக்கிறான்... என்றும் எழுதிக்கொண்டிருப்பான்.

SHE  WROTE HE WROTE
SHE WROTE HE WRITES
HE WRITES  HE ONLY  WRITES...
SHE?
இப்பயணத்தில் தமிழ்ச்சூழலில் சில இணையர் நினைவுக்கு வரக்கூடும்.
she wrote he wrote... she wrote he writes இணையராக. வேண்டாம் எனக்கு
வம்பு. அவர்களை விட்டுவிடுவோம்.

she writes he writes இணையராக சிலர் நினைவுக்கு வருகிறார்கள்.

அ. வெண்ணிலா  - முருகேஷ்
(நினைவில் வாழும் ) சுகந்தி   சுப்பிரமணியன்- சுப்ரபாரதி மணியன்
அம்பை - விஷ்ணுமாத்தூர்
மாலதி மைத்ரி -  பிரேம்
(யாராவது விட்டுப்போயிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே)
இப்படி சில இணையர்  நினைவுக்கு வருகிறார்கள். வாழ்த்துகிறேன் அவர்களை.
TATA LIT FESTIVAL  போன்ற பன்னாட்டு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
பங்கேற்கும் நிகழ்வுகளில்  வெளிநாட்டவர்  சொல்லும் சில கருத்துகள்
இந்தியச் சூழலில் ரொம்பவும் அந்நியமாய் இருப்பதை உணர்கிறேன்.
இந்திய எழுத்தாளர்களில் , இந்திய நடிகர்களில் அவள் -  அவன்
ஓர் இணையராக  பேசும் நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே
நம்மை அதில் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற
எண்ணம் வருகிறது.




Monday, November 14, 2016

நேரு - காந்தி - சுபாஷ்

சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரு... இருவருக்குமான ஒற்றுமை,
காந்தி என்ற ஆளுமையுடன் இருவருக்குமே ஏற்படும் கருத்துவேறுபாடுகள்
Image result for nehru bose parallel lives

காந்தி என்ற  வட்டத்திலிருந்து வெளியில் வரும் சுபாஷ்,
அந்த வட்டத்திற்குள் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நேரு..
1933 ல் நேரு எழுதுகிறார் த ன் டைரியில்...
"நான் மகாத்மாவை விட்டு ரொம்ப விலகிவந்துவிட்டேன்.
உணர்வுப்பூர்வமாக நான் அவருடன் நெருக்கமாக இருந்தாலும்
அவர் அரசியலை அறிவுப்பூர்வமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இனி, அரசியல் ரீதியாக அவருடன் சேர்ந்து செயலாற்றமுடியும் என்று
தோன்றவில்லை. நாங்கள் எங்களுக்கான  அவரவர் பாதையில்
பயணிக்க வேண்டும்.."  ஆனாலும் கடைசிவரை காந்தியுடன் இருக்கிறார்
நேரு. இதைப் பற்றி சொல்ல வரும் பிர்லா
Birla said, " He ( Jawaharlalji ) could have caused a split by
resigning but he did not.... Jawaharlalji seems to be  like a typical
English democrat who takes defeat in a sporting spirit. He seems to be
out for giving expression to his idealogy, but he realizes that action
is impossible and so does not press for it"  என்று விமர்சிக்கிறார்.
நிறைய தரவுகளுடன் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம்.
NEHRU AND BOST - Parallel lives
author : Rudrangshu Mukherjee.

Saturday, November 12, 2016

அப்பாவின் நினைவுகள்



அப்பாவின் அரசியல் எனக்குப் பாடம் மட்டும் தான்"
மும்பையிலிருந்து செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்.
அவள் தனியாக மூன்றாம் ஏசியில். அவளுடன் ஆண்கள்
பயணிக்கிறார்கள். எதிரில் ஒரு வயதானவர். அவள் தான்
கொண்டு வந்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். .
கூடப்பயணிப்பவர்களுடன் உரையாடல் நடத்துவதை அவள் தவிர்க்கிறாள்.
எதிரில் இருந்தவர் போனில் உரையாடும் போது தமிழில் பேசுவதும் அவளுக்குத் தெரிந்த உறவுக்காரரின் பெயரைச் சொல்லி அவர் உடல்நலம் விசாரிப்பதும் அவள் காதுகளில் விழுகிறது. அவளால் அதற்குமேலும் 
அமைதியாக இருக்க முடியவில்லை. மெளனம் கலைகிறது. உரையாடல் வழி அவளைப் பற்றி அவர் விசாரிக்க விசாரிக்க அவள் விவரங்களைச் சொல்ல சொல்ல அவள் இன்னாரின் மகள் என்ற விவரத்தை அவர் அறிந்தவுடன் அவர் அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
எப்படிப்பட்ட மாமனிதரம்மா உன் அப்பா... என்று அவர் சொல்லும் போது அந்த மனிதரின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது. மும்பைக்கு பிழைக்க வந்தவர்களில் பலருக்கு வேலை வாங்கிக்கொடுத்தவர், பிள்ளைகளுக்கு
படிப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று அவர் வீட்டு வாசலைத் தட்டியவர் எவரும் வெறும் கையுடன் வந்ததில்லை ... அப்படி ஒரு
மனுஷனை அதன் பிறகு என் வாழ்நாளில் நான் சந்திக்கவே இல்லைமா"
அவர் சொல்ல சொல்ல அவள் மனம் கனக்கிறது.
(உடன் பயணித்தவர் மும்பையில் புகழ்ப்பெற்ற டாக்டர் மச்சிவேல் அவர்களின் அண்ணன், அவள் இதோ அந்த நினைவுகளை மீட்டிக்கொண்டு)
2 வயது வித்தியாசத்தில் 7 பிள்ளைகள்.. வரிசையாக. அதிலும் 6 பெண்கள்..
அவர் பெரிய வீடு வாங்கவோ ஏன் தான் ஆசைப்பட்ட படி ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கவில்லை! வாழ்க்கையை இப்படியும் வாழமுடியும் என்று வாழ்ந்துக் காட்டியவர்.... இன்று அவரின் நினைவு நாள்..(. 12 & 13 நவம் 1986)
"அப்பா... ஒரு இதிகாசத்தைப் போல வாழ்ந்திருக்கிறீர்கள்.
என் எழுத்துகளில் உங்களைப் பற்றி எழுத வரும்போதெல்லாம் அடுத்தப் புள்ளிக்கு நகர முடியாத அளவுக்கு கனமாகிவிடுகிறது.
என்னை இன்றும் அலைக்கழிக்கிறது உங்களின் அரசியலும் கடைசி நாட்களும். 
அப்பா... உங்கள் அரசியல் ... எனக்குப் பாடம் மட்டும்தாம்..
ஓடி ஓடி ... ரொம்பவும் சோர்ந்துப் போயிருக்கிறேன் அப்பா. 
நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு துளியை ...
எனக்குத் தருவீர்களா..?
(புகைப்படம்... அப்பாவின் மறைவுக்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து எங்கள் சொந்தவூர் பத்தமடையில் அப்பாவின் பெயரால் - பி.எஸ். வள்ளிநாயகம் - திமுக கொடிக்கம்பம் எழுப்பப்பட்டது ... திமுக திரு. ஸ்டாலின் அவர்கள் கொடி ஏற்றுகிறார்.. நன்றி அனைவருக்கும்.)

Tuesday, November 8, 2016

அன்று மொரார்ஜி இன்று மோடிஜி

Image result for indian 10000 rupee note image

நேற்றிரவின் பரபரப்பு..
இன்னும் முடியவில்லை.
மோடிஜி அறிவிச்சாலும் அறிவித்தார் ...
போன் அழைப்புகள் பயமுறுத்திவிட்டன.
என்னவோ லட்சக்கணக்கில் பணம் வீட்டில் இருக்கிறமாதிரிதான்
என் கணவர் ஒரு பில்-டப் கொடுத்தார் பாருங்கள்...
அடுக்கி வைத்த கபோர்ட் வார்ட் ரோப் எல்லாம் புரட்டிப்போட்டு எனக்கு ஏகப்பட்ட வேலையை வைத்திருக்கிறார். (அதற்கு ஒரு நாள் இருக்கு... அவர் வாங்கிக்கட்டிப்பாரு)
அதைவிடுங்கள்... இப்படியாக அவர் தேடி எடுத்ததில்
சேர்ந்த மொத்த தொகை 3,017...!!!! அவர் தொகையை கையில் வைத்துக்கொண்டு இன்னும் அதிகம் டென்ஷனாகிவிட்டார்!!!
காரணம் வெறும்17 ரூபாயை வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?
இந்த 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கும் 3000 இன்னும் 2 நாட்களுக்கு அவரை ரொம்பவும் பயமுறுத்தும்.
இந்தப் பயமுறுத்தலை இன்னும் அதிகப்படுத்திவிட்டான்
என் புத்திரபாக்கியம். இரவு ரிக்‌ஷாவில் வந்திருக்கிறான். ரிக்‌ஷாக்காரர் 500 ரூ நோட்டை வாங்க மறுத்துவிட்டார். மோதிஜி அதிரடி செய்தியை அறியாமல் வாய்ச்சண்டை... கீழிருந்து இண்டர்காமில் அழைத்து சங்கர் ஒடி
நான் இரவில் விழித்து என் கிட்சன் லாக்கரில் தேடி எடுத்து எப்படியோ 220 ரூபாயைக் கொடுத்துவிட்டோம்.
விளைவு..?!!
வறுமைக்கோட்டுக்கும் கீழே இந்த இரு நாட்கள் நம் தேச
நலனுக்காக வாழ்ந்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டோம்.
****
மோடிஜி இதற்கான தயாரிப்புகளை 6 மாதமாக செய்திருக்கிறார்.எண்ணிக்கையில் கால்வாசியாக இருக்கும் 500 & 1000 ரூபாய் நோட்டுகளின்
மதிப்பு மொத்த பணமதிப்பில் 86%. இத்தனையும் மொத்தமாக வங்கி, போஸ்ட் ஆபிஸ் மூலமாக ரிசர்வ் வங்கி கைக்குப் போக வேண்டும்.
இதற்கிடையில் இந்த 6 மாதத்தில் 86% பண மதிப்புக்கு ஈடான ரூ 50, ரூ 100, ரூ 2000 மதிப்பு நோட்டுகள் அச்சிடும் பணி ரகசியமாக நடந்திருக்கிறது. இந்த ரகசியம் அறிந்தவர்கள் பிரதமர் மோதிஜி, நிதிமந்திரி அருண் ஜெட்லி மற்றும் ரிசர்வ் வங்கி இரு மேலதிகாரிகள்
மட்டுமே என்று சொல்லப்படுகிறது. 
**
Image result for morarji desai and modi

1978ல் ஜனதா கட்சியின் ஆட்சி . மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது 1000, 5000, 10,000 ரூபாய் நோட்டுகள் இப்படித்தான் கறுப்புபணத்தை
ஒழிக்கும் செயலாக அதிரடி நடவடிக்கை எடுத்தார்கள். கறுப்பு பணம் ஒழியவில்லை. இப்போது மீண்டும் அதே நடவடிக்கை. ஆனால் இம்முறை அறிமுகப்படுத்தப்படும் ரூ 2000 மதிப்புள்ள நோட்டில் "சிப்" பொருத்தப்பட்டிருக்கும்
என்றும் அதனால் சாட்டிலைட் மூலமாக அந்த ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கவனிக்கப்படும் என்றும் எவரும் அரசாங்கத்திற்குத் தெரியாமல் பதுக்கி வைக்க
முடியாது என்றும் சொல்லப்படுகிறது. புழக்கத்திற்கு வந்தப் பின் தான் இதைப் பற்றிய
முழுமையான விவரங்களை அறியமுடியும்.
**
7ஆம் தேதி சுபமூகூர்தநாள். அன்று நடந்த திருமணத்தில் வந்த மொய்ப்பணம் 500, 1000 ரூ நோட்டுகளாகவே இருக்க
அந்த திருமண வீட்டார் அலறி அடித்து என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள். ! அவர்கள் கொஞ்சம் டென்ஷனாகத்தான் இருக்கிறார்கள்!
நேற்றிரவே தங்கம் விலை கிராமுக்கு ரூ 3800 ஆகி இருக்கிறது ! (unofficial report) (38000 for 10 gms).
ரியல் எஸ்டேட் விலையில் சரிவு ஏற்படும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலின் இருவேறு காட்சிகள்


தண்டி யாத்திரையில் காந்தியை கைப்பிடி பிடித்து உற்சாகத்துடன்
முன்னால் செல்லும் சிறுவன் கன்னுபாய் காந்தி. காந்தியின் பேரன்.
ராமதாஸ் காந்தியின் மகன். நேற்று மாலை (7/11/16) தன் 87 வது வயதில்
காலமாகிவிட்டார்.  அவர் அமெரிக்காவில் நாசாவில் வேலைப்பார்த்தவர்.
2014ல் இந்தியா திரும்பியபின் கஸ்தூரிபா ஆசிரமத்தில் தன் மனைவியுடன்
தங்கியிருந்தார். !



ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன்
, மகள் இந்திராகாந்தியின் மகன்  ராஜீவ்காந்தியின் புதல்வன், ராகுல்காந்தியை தலைமை ஏற்க
அழைக்கிறது அகில இந்திய காங்கிரசு.....
ஆன்மிக அரசியலும் அதிகார அரசியலும் இப்படியாக தங்களை
அடையாளம் காட்டிக்கொள்கின்றன .


Thursday, November 3, 2016

நடக்கலாம் நம் சந்திப்பு.



மீண்டும் சந்திப்பேன். மீண்டும் சந்திப்பேன்.
நாளையோ நாளை மறுநாளோ
உன் வானத்தில் விடிவெள்ளி முளைக்கும் பொழுதில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
கருக்கலில் பிச்சிப்பூ வாசனையில்
தோட்டத்தில் சரசரவென கடந்து செல்லும்
பாம்புகள் அறியாமல்
நடக்கலாம் நம் சந்திப்பு.
புகைவண்டி நிலையத்தில் எதிர் எதிர் திசையில்
அவரவர் பயணத்திற்காக காத்திருக்கும் பொழுதில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
சுவாசமே சுமையாக மூன்றாவது காலோடு
காத்திருக்கும் தருணத்தில்
நடக்கலாம் நம் சந்திப்பு.
எப்போது வேண்டுமானாலும்
நடக்கலாம் நம் சந்திப்பு.
விழித்திரை கிழிந்து பிம்பங்கள் சிதைந்து
எதுவும் வரையமுடியாத தூரிகையுடன் நீ
காற்றாக நுழைவேன்
திரைச்சீலைகள் விலக்கி முத்தமிடுவேன்
முதலும் கடைசியுமாக....
இப்படியும் நடக்கலாம் நம் சந்திப்பு
எப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.
எப்படியும் நடக்கும் நம் சந்திப்பு.

Wednesday, November 2, 2016

காந்தியின் ஆன்மீக அரசியல்

Image result for காந்தியைக் கடந்த காந்தியம்


காந்தி ஆன்மீகத்தை அரசியல் மயப்படுத்தியும் அரசியலை
ஆன்மீக வழிப்படுத்தியும் இணைப்புநிலை மதிப்பீடு
ஒன்றை உருவாக்கினார் என்றும் காந்தியைப் பொறுத்தவரை
ஆன்மீகமும் அரசியலும் பிரிக்க முடியாத இணைப்புகள்
என்றும்  காந்தியைக் கடந்த காந்தியம் - ஒரு பின் நவீனத்துவப்பார்வை
கட்டுரைகளில் பிரேம் அவர்கள் காந்தியின்  அரசியலை ஆன்மீக
அரசியலாக அடையாளப்படுத்துகிறார்.
காந்தியின் ஆன்மீக அரசியல் காந்தியை மட்டுமே மகாத்மாவாக
அடையாளம் காட்டியதை தவிர வேறு என்ன செய்தது ? . அந்த ஆன்மீக அரசியல் வளர்த்தெடுக்கப் பட்டதாகவோ அல்லது காந்தியின் ஆன்மீக அரசியல் குறித்து அவருக்கு அடுத்த நிலையில் இருந்த வல்லபாய் படேல், ஜவஹர்லால் நேரு போன்றவர்கள் என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதோ ஒரு ஒப்பீட்டளவில் கூட பேசப்படவில்லை.
புனா ஒப்பந்தம் குறித்து பேச வரும்போது பிரேம் அவர்கள்
"காந்தி அப்போது இந்து-சாதி ஆதிக்கத்தின் அரசியல் சதிக்கு
தன்னையறியாமல் துணை புரியும் நிலைப்பாட்டினை எடுத்தார்"
(பக் 213) (கவனிக்க.. தன்னையறியாமல் என்ற சொல்வழி புலப்படும்
காந்தியின் உளவியல் ...)
என்று அடையாளம் காட்டுகிறார்.
இந்த ஒற்றை அடையாளத்தில்
காந்தியின் ஆன்மீக அரசியல்
 சட சடவென சரிந்து விழுகிறது...
நன்றி பிரேம்.

ஒரு கோப்பையின் விளிம்பில்


 " கொஞ்ச நேரத்திற்கு கவித்துவம், இரசனை,
கவிதை, அழகியல், நுண் அழகியல்
என்பதையெல்லாம் பேசி உரை நிகழ்த்துவதை
நிறுத்திவிட்டு மெளன அஞ்சலி செலுத்தவும் " *

தமிழ் இலக்கியப்பரப்பில் எதிர்ப்பிலக்கியம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது.
கலை இலக்கிய வடிவங்கள் பெரும்பாலும் கலகக்குரலின்
வெளிப்பாடுகள் தான்.  அதிகாரத்திற்கு எதிராக தன் ஆயுதங்களுடன்
களத்தில் நிற்பவன் கலைஞன், கவிஞன்.  பொதுஜன அபிப்பிராயங்களுடன்  அவன் ஒத்துப்போவதில்லை. பொதுஜனத்திற்கு விருப்பமானதை மட்டுமே கொடுக்கும் வியாபர உத்திகள் அறியாதவன் அவன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நாட்டார் கலை இலக்கிய வடிவங்கள்
பத்திரிகையோ தொலைக்காட்சியோ கணினியோ இல்லாத
அக்காலத்தில் சமூக தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த
வல்லவையாக இருந்திருக்கின்றன.
சித்தர்களின் பாடல்கள்  எதிர்ப்பிலக்கியம் தான். சித்தர்கள் இறை நம்பிக்கையை முற்றாக மறுக்கவில்லை. நாத்திகம் பேசவில்லை.
ஆன்மிக தளத்தில் சித்தர்களின் கலகக்குரல் ஒரு முக்கியமான
புரட்சியின் அம்சமாகும்.

பெண்ணிய தளத்தில் இந்திய வரலாற்றில் ஆணுக்கும் ஆண் ஏற்படுத்திய அதிகார கட்டமைப்பிற்கும் எதிராகக் குரல் கொடுத்த
புத்த பிக்குனிகள் பாலி மொழியில் எழுதி இருக்கும் "தேரி கதா "
எதிர்ப்பிலக்கியமாகும்.
சிலப்பதிகாரம் பேசும் அறமும் :அறம் பிழைத்தவன் நாட்டை ஆளும்
அரசனாகவே இருந்தாலும் ஒரு சாதாரண பெண்ணால் அவனை
எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற கருத்தை முன்வைக்கும்
எதிர்ப்பிலக்கியம் ஆகும். இப்படியாக எதிர்ப்பிலக்கியத்திற்கு
வரலாறு நெடுகிலும் ஒரு சரித்திரம் உண்டு. ஆனால் எதிர்ப்பிலக்கியத்திற்கு என்று தனிப்பட்ட வடிவமோ மரபோ இல்லை.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர்ப்பிலக்கியம் தனக்கான
வடிவத்தை கண்டடைகிறது, அந்த வடிவத்தின் ஊடாக தன்னைப்
புதுப்பித்துக்கொள்கிறது.

கடந்த கால எதிர்ப்பு இலக்கியத்தின் தீட்டிய கூர்முனை எதை நோக்கி
தீட்டப்பட்டிருக்கிறது, யாருக்கு எதிராக/ எதற்கு எதிராக என்ற
அடையாளங்கள் ஓரளவு வெளிப்படையாக தெரிந்தன.
ஆனால் இன்றைய நவீன யுகத்தில் , மக்களாட்சியின் மகத்துவங்கள்
வாழ்ந்து கொ ண்டிருக்கும் காலத்தில் (!) , எதிர்ப்பிலக்கியம்
தனிப்பட்ட நபரையோ தனிப்பட்ட ஆட்சி அதிகாரத்தையோ
எதிர்க்க முடியாத நிலை. அரூபமாக மக்கள் கூட்டத்தில் மக்களில்
ஒருவனாக கலந்து கரைந்து நிற்கும்  அதிகாரப்புள்ளியை அடையாளம்
காண்பதும் அதை எதிர்ப்பதுமாக இரண்டையும் ஒரே நேரத்தில்
எதிர்ப்பிலக்கியம் செய்கிறது. அடையாளம் காண்பதில் அரசியல்,
சாதி மதம் என்று பல பின்னூட்டங்கள் தானாகவே வந்து சேர்ந்து
கொள்கின்றன.
இப்பின்னணியில் மலேசிய மண்ணில் புலம்பெயர்ந்து வாழும்
தமிழரான - மலேசிய தமிழரான கே.பாலமுருகனின்
"தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் " கவிதைத் தொகுப்பு
என் கவனத்திற்கு வந்தது.
தொலைக்காட்சியில் காட்டப்படும் மலேசியத் தமிழர்கள், சுற்றுலா
பயணியாக மலேசியாவில் சந்திக்கும் பளபளப்பான  தோற்றமும்
மிடுக்கும் மலேசியா மண்ணில் வாழ்க்கை சுகமானது என்ற ஒரு
பிம்பத்தை கட்டமைத்திருக்கிறது. மலேசியாவில் பாலாறும் தேனாறும்
பாய்ந்து வளம் கொழிக்கும் வாழ்க்கை வாழ்கிறார்கள் மக்கள் என்ற
கருத்தை மிகவும் கவனமாக ஊடகங்களும் ஆட்சியாளர்களும் தொடர்ந்து காட்சிப் படுத்துவதில் கவனமாக இருக்கிறார்கள்.
இச்சூழலில் இந்த வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும்
பாலமுருகன் தன் குரலை உரக்கவே பதிவு செய்திருக்கிறார்.
வல்லினம் ம.நவீன் சொல்வது போல "அதிகாரத்தோடு ஒத்துப்போவது, அதிகாரத்திடம் சம்மரசம் செய்து கொள்வது, அதிகாரத்தின் முன் மெளனம் சாதிப்பது, அதிகாரம் வீசும்
எச்சில் இலைக்காக வாலாட்டி நிற்பது எனத் தமிழ்ச்சூழலில்
பார்த்துப் பார்த்துப் பழகிவிட்ட பல எழுத்தாளர்களின் வளைந்த
முதுகெலும்புகளுக்கு மத்தியில் படைப்பிலக்கியம் மூலம்
பாலமுருகன் தனது எதிர்க்குரலை மீண்டும் மீண்டும் பதிவு
செய்வதே உவப்பான சூழலை உருவாக்கி இருக்கிறது " எனலாம்.
"அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 
ஒரு கவிதைக்குள் நீங்கள் நுழைந்திருக்கிறீர்கள்" என்று
பாலமுருகனே  தன் கவிதைகள் குறித்து அறிமுகம் செய்து
கொள்கிறார். அவர் வாழும் சமூகத்திற்கு அவசரமாக அறுவை
சிகிச்சை தேவை என்பதால் அவர் கவிதைகள் தன்னை அறுவை
சிகிச்சைக்குட்படுத்திக் கொள்கின்றன.
ஆண்களின் கழிப்பறை கவிதையில்
நடைமுறை காட்சியை எள்ளலுடன் விவரித்து வரும்வரை
அக்கவிதை ஆண்களின் கழிப்பறையாக மட்டுமே இருக்கிறது.
ஆனால்,
"நீங்கள் செலுத்தியது வெறும் 30  சென்
என்பதை மறக்க வேண்டாம்.
அதையும் மீறி கவிதைக்குள் எதையாவது தேடினால்"
என்று எச்சரிகை விடும்போது கழிவறை இலக்கிய பரப்பாக
இலக்கிய மேடையாக இலக்கியத்திற்கு போர்த்தப்பட்டிருக்கும்
பட்டுப்பீதாம்பரமாக விரிகிறது. இந்தத் துர்நாற்றமே நம் தேசத்தின் 
காற்று  மற்றும் ஊனமுற்ற பூச்சிகளின் தற்கொலை * என்ற தலைப்புகளில்  எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில்
கழிவறை தலைவர்களின் முகமாக, ஆட்சி அதிகாரமாக, கட்சி
அரசியலாக தன் வரலாற்றை விரிக்கிறது.

"புத்தாண்டு பரிசாக அனைவருக்கும்
பூட்டுகள் தரப்பட்டன.
எல்லார் உதடுகளிலும்
இரு பெரிய ஓட்டைகள்
இலவசமாய்ப் போடப்பட்டன..
....
.....
பூட்டு மிகவும் தரமானது
எத்தனை தலைமுறைக்கும் தாங்கும்
பூட்டு மறுபயனீடு மிக்கது. 
செத்தப் பிணத்திலிருந்து கழற்றி
அடுத்தச் சந்ததியினருக்கும் பூட்டலாம்
பூட்டு மிகவும் அழகானது
கண்ணாடியில் பார்க்கும் சில தருணங்களில்
அறிவைக் கவரக்கூடும்.
பூட்டு உத்திரவாதம் நிறைந்தது.."

Image result for கே பாலமுருகன்

மலேசிய தமிழ் இலக்கியத்தின் அரசியல் பக்கத்தை எழுதியதில்
பாலமுருகனின்" தூக்கிலிடப்ப்பட்ட நாக்குகள் "
காலம் கடந்தும் என்றும்  பேசப்படும்.