Friday, September 16, 2022

கிழவனின் கைத்தடி.

கவிதை : தந்தை பெரியாரின் கைத்தடி – உண்மை இதழ்

பெரியாரியம் இலக்கியமாவதில் இருக்கும்
அடிப்படை சிக்கல்களைப் பேசுவதில்லை நாம்.
நம்மையும் அறியாமல் அதை எல்லாம் எழுத்தில்
கொண்டுவருவது இலக்கியமாக முடியாது என்ற
கருத்து நமக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது.
அதனால்தான் இலக்கிய அந்தஸ்த்தை தீர்மானிக்கும்
வானளாவிய அதிகாரம் எப்போதும் வலதுசாரிகள்
கூடாரத்தில் இருக்கிறது..
அதையும் மீறி பெரியாரியத்தின் சமூக அரசியலை
எழுத்தில் கொண்டுவரும்போது மிக எளிதாக
அதையும் “உரக்கப்பேசும்” கவிதைகள் எப்படி
கவிதைகளாக முடியும் ? என்ற விமர்சனங்கள்
வரும், வந்திருக்கின்றன.
மொழியை வசப்படுத்தும் பயிற்சியில் நாம்
அவர்களைத் தாண்டி பயணிக்கும்போது
அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்
“கள்ள மவுனம்”
இது முந்தைய அடியைவிட அபாயமானது,
பெரும் மன உளைச்சலைத் தரக்கூடியதுதான்.
இந்த “கள்ள மவுனம்” அந்தப் பக்கம் மட்டுமல்ல,
இந்தப் பக்கமும் இருக்கும். இருக்கிறது.
காரணம்.. பெரியார் தான்!
ஜால்ரா போடுவதில்லை.
திராவிட அரசியலை விமர்சிக்க தயங்குவதில்லை.
கூட்டத்தோடு ‘கோவிந்தா’ போடுவதில்லை.
இப்படி எல்லாம் இருந்தால்
கள்ளமவுனம்
வாழும்போதே நமக்கான கல்லறையாக
நாமே தோண்டிக்கொண்ட புதைகுழியாக
இருக்கிறது.
என்ன செய்ய முடியும்..?
சரவணா..
இந்த ஒரு நாளில் மட்டும்
தந்தை பெரியாரைக் கொண்டாடுவதை தவிர.!
புதைகுழியில் சிக்குண்ட
எம் போன்றவர்கள் பலருண்டு.
கிழவனின் கைத்தடியைப் பிடித்துக்கொண்டு
புதைகுழியில் மிதக்கிறேன்.
 
#பெரியாரிய_இலக்கியம்
 
#பெரியாரின்கைத்தடி
 
(செப் 17, 2022. )